Skip to content
Post Views: 71
Advertisement
அடுத்த மூன்று வருடத்தில் இவனுக்கு சம்பளமும் சொல்லி கொள்ளும் அளவில் உயர்ந்திட, வீட்டு லோனையும் மோகனின் உதவியோடு அடைத்துவிட்டான் கிரி.
அதில் வசந்தாவிற்கு கோபம். கிரி தன்னை நம்பவில்லை, தன்னை நம்பி பணம் கொடுக்க மறுக்கிறான், என்ற மகன் மீதான கோபம் “அப்படியா பணத்தை நான் தின்ன போறேன்” மோகன் மீது திரும்பியது
இதற்கிடையில் ராஜிக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் என கிளம்பி வசந்தா செய்த அலம்பல்கள் எல்லாம் சொல்லி மாளாது.
Advertisement
ஆனால் அதற்கு ஆப்படிப்பது போல காதல் என வந்தாள். வசந்தாவோ, கிரியோ செல்வதை அவள் காது கொடுத்து கேட்க தயாராயில்லை.
Advertisement
செந்திலும் டவுரி எதுவும் வேணாம் என அப்போதைய மயக்கத்தில் கூறிட, ‘அப்போ உனக்கு நான் ஊர் கூட்டி கல்யாணம் செய்து வைக்க மாட்டேன்’ என காந்தி்மதி மறுத்துவிட்டார்.
‘சரி செய்ய வேண்டாம், எங்க கல்யாணத்துக்கு வாங்க போதும், எம் பொண்டாட்டி கொண்டு வந்து தான் நான் வாழனும்னு அவசியமில்லை’ என மார்தட்டி நின்ற செந்தில் முழு ஹீரோவாக தான் தெரிந்தான் ராஜியின் கண்களுக்கு.
இறுதியில் கோவிலில் எளிதாய் திருமணம் முடித்து கொண்டனர்.
Advertisement
முதலில் அமைதியாய் சென்ற காந்திமதி, கிரி வீடு எடுக்க துவங்கியதும். “உனக்கு செய்யாமல் அப்படி என்ன வீடு வேண்டி கிடக்கு, முதலில் நகை சீர் எல்லாத்தையும் செய்ய சொல்லு” என நச்சரிக்க துவங்கினார்.
அதை செந்திலிடம் இவள் சொல்லிவிட, இவன் காந்திமதியுடன் சண்டை பிடித்தான். அடுத்தடுத்து அது பெரிய பிரச்சனையாக உருவாக துவங்கியது.
காந்திமதி அடிக்கடி சொல்லி சொல்லி, அது தான் உண்மையென நம்ப துவங்கிவிட்டாள் ராஜி. “கிரி எனக்கு செய்யாமல் ஏன் வீடு எடுக்கனும்” இதுவே வேரூன்றிது அவள் மனதில்.
கொஞ்சமும் பிசகாமல், தனக்குள் காந்தி மதி விதைத்ததை, ராஜி வசந்தாவிற்குள் விதைத்து மூளை சலவை செய்ய, “டைம் குடுங்க சம்மந்தி சீக்கிரமா ராஜிக்கு சேரவேண்டிதை செஞ்சிடறோம்” என உறுதியளித்த பின் அமைதியாகிவிட்டது போல் நடித்தார் காந்திமதி.
அதன் பின் கையில் ஒன்றும் இடுப்பில் ஒன்றும் என நான்கு வருடத்தில் இரு குழந்தைகளுடன் சுகபோகமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
முதல் குழந்தை பிறந்த போது இரண்டு பவுன், இரண்டாம் குழந்தை பிறந்த போதும் இரண்டு பவுன் தங்கம், கொடி, கொலுசு என செய்தாலும், ‘ஒன்னுமில்லாமல் வந்தவ’ என எல்லா சீர்களோடும் வந்த சின்ன மருமகள் முன்பே அசிங்க படுத்துவார் காந்திமதி.
அதன் பின் செந்திலும் துவங்கிட, எப்படியாவது சீர் வாங்கிட வேண்டும் என எக்கு தப்பாக பிளான் போட்டு இன்று பிடிக்காத திருமணம் வரை கிரியை இழுத்து வந்து விட்டாள். கமலியை ஏமாற்றிகொண்டிருக்கிறாள். தமையனை மறந்து தன்னை பற்றி மட்டுமே யோசிக்கும் தந்திரவாதியானாள் ராஜி.
தனக்காக எதுவும் பார்க்காமல் குடும்பத்திற்காக, ஓடும் ஒரு ஆண், தனக்கென மட்டுமே வரும் பெண் மீது ஆயிரமாசை, கனவுகள், எதிர்பார்ப்புகள் வைத்திருப்பான் என தெரியாமலேயே போனாள்.
டிப்ளமோ படிக்கையில் “பொண்ணுங்கனாலே அலறி ஓடுற உன்னை தான் தேடுறாளுக, எங்களை சீண்ட கூட மாட்றாளுக” என கிரியை சீண்டிக்கொண்டே வருவார்கள் அவன் நண்பர்கள்.
இவனும் சிரிப்புடன் கடந்து சென்றிடுவான். காரணம் தகுதிக்கு மீறி ஆசைபட்டு, கை கூடாமல் போய்ட்டா? ஏற்பட்ட இழப்புகளே போதும்! என்ற பெரும் பயத்தோடு சின்ன சிரிப்பில் கடந்து செல்பவனின் எண்ணம் புரிவதில்லை அவனின் நண்பர்களுக்கு.
இப்படியிருக்கையில் அவனின் தாயும், தமக்கையும் கூட அவன் எண்ணம் புரியாது தான் போயினர்.
எப்போதும் ஒத்து ஊதும் வசந்தா, ராஜிக்கு பெரும் வசதி செய்து கொடுக்க, தெரிந்து தானே செய்கிறோம் என கமலியை வைத்து கிரிக்கு துரோகம் இழைத்துவிட்டாள்.
ஆனால் இத்துரோகம் தெரியாத கிரியோ “இப்போவே இருபத்து ஏழு, வயசு ஏறுது கிரி.. பொண்ணு பார்க்கட்டுமாயா” என கேட்ட பொழுது, எங்கே அந்த சந்தோஷத்தை, மகிழ்ச்சியை தாய் தெரிந்து கொண்டு விடுவாரோ, தன் குரல் காட்டி கொடுத்திடுமோ என அப்படியே அடக்கினான்.
“தகுதிக்கு மீறி எதுவும் பார்க்க வேண்டாம்மா.. டவுரி எதுவும் கொடுக்கலைன்னாலும் பரவாயில்லை, எனக்கு பொருத்தமான பொண்ணா பாரு” இதை சொல்வதற்குள்ளேயே அத்தனை தடுமாறி போனான்.
ராஜியின் காதல் கதை தெரிவதற்கு முன்பு அத்தனை வரண்களை அவளுக்காக ஓடி ஓடி பார்த்தவர், தனக்கும் சல்லடை போட்டு தேடிவிடுவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் அசால்ட்டாய் இருந்து விட்டான்.
தனக்கென ஒருத்தி வர போகிறாளா? கேட்ட கனத்தில் இருந்து இனம் புரியாத பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டு தான் இருந்தது.
குறைந்தது நான்கைந்து வரண்களை எதிர்பார்த்தான், ஆனால் வந்ததோ கமலியின் ஏஐ போட்டோ மட்டுமே.
பிங்கும் உதவும் கலந்த காட்டன் புடவை, ஒரே ஒரு செயின், கழுத்தின் இடது புறம் வழிந்த மல்லிப்பூ.. அளவெடுத்தார்ப்போல் முகம், அதில் உறைந்த புன்னகை நெற்றியில் பூசப்பட திருநீரு என களையான முகமும், அதற்கேற்ற ஒல்லியான உடல் வாகு, கோதுமை நிற மாநிற தேகம் என இருந்தவள் இயற்கை அழகோடு பொருந்தி போயிருக்க, இவனால் அது பொய் என சந்தேகம் கூட கொள்ள முடியவில்லை.
குறைந்தது நான்கு வரண்களையாவது எதிர்பார்த்தான் தான். ஆனால் அவன் எதிர்பார்ப்புகளை எல்லாவற்றையும் பூர்த்தி செய்யும் இந்த ஏஐ கமலி, வேறு வரண்களை தேடாத அளவிற்கு அவனிதயத்தில் நச்சென நங்கூரமிட்டு அமர்ந்துவிட்டாள்.
போனில் வேறு பேச துவங்கியபிறகு அவளுடனே ஆயிரமாயிரம் கனவுகள், ஆசைகள் என நீண்டு கொண்டே சென்றது. இரண்டு மூன்று முறை வீடியோ காலில் அழைக்கையில் அவளுக்கு தோது படவில்லை,
‘நைட்டி போட்ருக்கேன், அழுக்கா இருக்கேன், முதல் முறை பார்க்கும் போது நீட்டா இருக்க வேணாமா?’ என சுண்டிப்போன குரலி்ல் பேசினாள்,
“சரி புல் மேக்அப் பண்ணிட்டு நாளைக்கு கால் பண்ணு. யார்னு தெரியாத அளவுக்கு மேக்கப் ஓட வந்திடாத” என இவனும் சிரித்தபடி நீண்ட நேரம்பேசி.. பிறகு வைத்து விடுவான்.
மறு நாள் இவளது போனுக்காக வேலை முடித்து சீக்கிரமே வந்தான் அறைக்கு. ஆனால் புடவை, மேக்கப் என இவள் போன் செய்ய வெகுவாய் தாமதித்தாள்., பொறுமை போய் விட்டது இவனுக்கு.
பின் இவள் போன் செய்யும் நேரம், அறைதோழர்கள் வந்து விட “பக்கத்துல பசங்க இருக்காங்க. தனி ரூம்லாம் இங்க இல்லை” என்றான் இவன்
“வெளியே வாங்க” என இவள் கூற
“இல்லை வேணாம்” என்றான் ஓரேயடியாக
“என்ன கோபாமா?” இவள் கெஞ்சினாள்.
“ஆமாம்” ஒப்பு கொண்டவன் “நேரிலேயே உன்னை வந்து பார்த்துகிறேன்” என்றிட
நிஜமாகவே கோபமோ என அதிர்ந்து “நாளைக்கு கண்டிப்பா டையத்துக்கு கூப்பிடறேன்” என மீண்டும் இவள் கெஞ்சினாள்.
“ப்ச்” என சலித்து கொண்டவன் “போட்டோவை பார்க்கும் போதே கண்ட மாதிரி போகுது நெனப்பெல்லாம். வீடியோ காலில் பார்த்து!” பெரு மூச்செறிந்தவன் ஏதாவது ஏடாகூடாம கேட்டாலும் கேப்பேன், பரவாயில்லையா?” என்றிட
‘அப்போ இதுவரை அவன் கோபத்தில பேசலையா?’ இப்போது தான் அதை உணர்ந்த கமலி ‘ஐய்யோ’ என்றபடி அமைதியாகிவிட்டாள்.
இவள் அமைதியை கண்டே நமட்டு சிரிப்பு சிரித்தவன் “நான் கோபமா இல்லைனு கண்டுபிடிச்சிட்டியா என்ன?” எனவும் , குப்பென வியர்த்து போனது கமலிக்கு.
அவள் அமைதியாகவே இருக்க, ஹஸ்கி குரலில் பேச துவங்கினான் “டயமுக்கு கால் பண்ணிருந்தன்னா, எனக்கு ஒன்னும் பீல் ஆகி இருந்திருக்காது. லேட் பண்ண லேட் பண்ண தான், எனக்கே அந்த வித்யாசம் தெரிஞ்சது. ஏதோ பார்க்கனும், ஏதோ தெரிஞ்சுகனும்னு தோண ஆரம்பிச்சதும் பயந்திட்டேன். இப்போதைக்கு வீடியோ கால் வேணாம். வீடியோவில் பார்த்திட்டு, ஏதாவது கஷ்டம் ஆச்சுன்னா.. தூக்கம் போய்டும், காலையில் வேலைக்கு போனப்புல தான்” என்ற அவனின் மோகம் நிறைந்த குரலை இப்போதும் தூக்கத்தில் கூட மறப்பதில்லை அவள்.
அன்று தான் மிக நெருக்கமாக பேசி கொண்ட தருணங்களும் கூட. இருவருக்குமே அது கஷ்டம் என அதன் பின் அவனே அது போல் பேச்செடுக்க மாட்டான். வீடியோ காலை வற்பறுத்தவும் இல்லை.
அன்றிலிருந்து அந்த போட்டோவோடு மிக அதிகமாய் பேசினான், கெஞ்சினான், கொஞ்சினான், போனில் அவள் போட்டோவை பாராமல் விடியலும் இல்லை, அஸ்தமனமும் இல்லை என்றானது. அப்படி பதிந்து போனாள் கமலி, கிரியோடு.
ஒருவேளை அதீத அழகோடு, சுண்டி இழுக்கும் கலரோடு, நிறைய ஆபரணங்களோடு, நிறைய செயற்கை பூச்சுகளோடு அந்த போட்டோ இருந்திருந்தால் கண்டு பிடித்திருப்பானோ என்னவோ.. இயற்கையோடு பொருந்தி போன இந்த ஏஐ கமலி இவன் நெஞ்சோடு இயற்கையாகவே வாழ துவங்கிவிட்டாள்.
error: Content is protected !!