வெற்றிக்கு ஒரு யோசனையும் பிடிபடவில்லை. அதே நேரத்தில் பெண் வீட்டில் இருந்தும் யாரும் வந்து அவனைப் பார்க்கவில்லை. அதுவே அவனுக்கு பெரிய சந்தேகத்தைக் கிளப்பியிருந்தது.
‘இதை இப்படியே விட்டா சரிப்பட்டு வராது. நாமளே நேரா களத்துல இறங்கிட வேண்டியது தான்..’ என்று நினைத்தவன்,
“அம்மா..! பொண்ணு வீடு எங்க இருக்கு..?” என்றான் போன்னியிடம்.
பொன்னி பதில் சொல்வதற்கு முன்பு, மேகநாதனின் குரல் பின்னிருந்து கேட்டது.
“ஏன்..? அதைத் தெரிஞ்சுகிட்டு என்ன பண்ண போற..?” என்றார் மேகநாதன்.
“நேரா போய் சொல்லிட்டு வந்துடுவேன். இந்த கல்யாணம் நடக்காது, தேவையில்லாம கற்பனைக் கோட்டை கட்டாதிங்கன்னு..” என்றான் வெற்றி.
“தெரியும்டா, நீ இப்படித்தான் பண்ணுவேன்னு. இனி நீயே நினைச்சாலும் ஒன்னும் பண்ண முடியாது. பத்திரிக்கை அடிச்சு எல்லாருக்கும் கொடுத்தாச்சு. மண்டபம் பார்த்தாச்சு, நீ தாலி கட்ட வேண்டியது மட்டும் தான் பாக்கி..” என்றார் மேகநாதன்.
“வாட்..! பேசி முடிச்சுருக்குன்னு தான சொன்னிங்க..? யாரைக் கேட்டு பத்திரிக்கை அடிச்சிங்க..? நான் என்ன சின்னப் பையனா..? நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு எப்பவாவது உங்ககிட்ட சொல்லியிருக்கேனா..? அப்பறம் எதுக்காக இவ்வளவு அவசரமா எல்லாமே பண்ணியிருக்கிங்க..? உங்களோட இந்த அவசரம் சந்தேகத்தை தான் கூட்டுதே தவிர, சந்தோஷத்தை ஏற்படுத்தலை..” என்றான் வெற்றி.
“இங்க பார் வெற்றி…! ‘பையனுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சு போய்டுச்சு. அதனால, கல்யாணத்தை சீக்கிரம் வச்சுக்கலாம்ன்னு சொல்லிட்டான், ஆக வேண்டியை வேலையை கவனிங்கன்னு’ நான் தான் மருமக வீட்ல சொன்னேன்..” என்றார் அலுங்காமல்.
“மருமகளா..???” என்று அதிர்ந்தான் வெற்றி.
“ஆமா..! சொன்னாலும் சொல்லாட்டியும் அந்த பொண்ணு தான் எனக்கு மருமக. இதுக்குமேல இதைப் பத்தி பேச வேண்டாம். மீறி ஏதாவது தகிடுதத்தம் பண்ணலாம்ன்னு பார்த்தா, பொறுப்பான வேலையில இருக்க உன்னோட மானம் தான் போகும்…” என்றவர், உறுதியாய் சொல்லிவிட, அவரின் மேல் கோபத்தைக் காட்ட முடியாமல் போன்னியிடம் கத்தித் தீர்த்து விட்டான்.
“இங்க பார் வெற்றி..! இது ஒரு பொண்ணோட வாழ்க்கைப் பிரச்சனை. இப்ப நீ மாட்டேன்னு சொன்னா, அந்த பொண்ணைத் தான் நாலுவிதமா பேசுவாங்க. ஒரு பொண்ணு வாழ்க்கையைக் கெடுத்த பாவம் நமக்கெதுக்கு… பேசாம கல்யாணத்தைப் பண்ணிக்கப்பா. அம்மா தான் சொல்றேன்ல, பொண்ணு உனக்கு பொருத்தமா இருப்பா..” என்றார் பொன்னி.
அதற்குள் வெற்றிக்குப் போன் வர….
“வணக்கம் சார்..!” என்றான். அவனின் உயர் அதிகாரி தான் அழைத்திருந்தார்.
“உங்க லிமிட்ல செம்மரங்கள் கடத்துறதா தகவல் வருது. இது வரைக்கும் என்ன ஆக்சன் எடுத்திருக்கிங்க..?” என்று அவர் கேள்வி மேல் கேள்வி கேட்டு வெற்றியைப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தார்.
“உங்களுக்கு பத்து நாள் தான் டைம்..! அதுக்குள்ளே அவங்க யாரு..? பின்னணி என்ன..? இப்படி எல்லா டீட்டையலையும் நீங்க கலெக்ட் பண்ணி எனக்கு சப்மிட் பண்ணியாகனும். முடிஞ்சா அவங்களை அரஸ்ட் பண்ற வழியைப் பாருங்க..” என்று உத்தரவை பிறப்பித்து விட்டு அவர் போனை வைக்க, அந்த டென்ஷனும் அவனுக்கு சேர்ந்து கொண்டது.
“அம்மா, நான் உடனே கிளம்பியாகணும்..” என்றான்.
“கல்யாணத்தை முடிச்சுட்டு போக சொல்லு..” என்றார் மேகநாதன்.
“அதுவரைக்கும் எனக்கு டைம் இல்லை. முக்கியமான வேலை இருக்கு..” என்றான்.
“எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்துறதுன்னு பார்த்த? எந்த வழியும் சிக்கலைன்னு சொன்ன உடனே, இப்போ இப்படி ஒரு பிளானா..?” என்றார் மேகநாதன்.
“அம்மா, வரவர இவர் தான் ஏதேதோ பிளான் பண்ணி, பக்கா கிரிமினல் மாதிரி யோசிச்சுட்டு இருக்கார். எனக்கு எதையுமே நேர்வழியில செஞ்சு தான் பழக்கம்..” என்றான் வெற்றி கோபமாய்.
“உன்னோட வார்த்தையை நம்புறேன். ஆனா, கல்யாணத்துக்கு முதல் நாள் நீ இங்க இருக்கணும்..அப்படி மட்டும் நடக்காம வேற ஏதாவது பிரச்சனை ஆச்சு, உங்கம்மாவை முதல்ல தொங்கவிட்டுட்டு, பின்னாடியே நானும் தொங்கிடுவேன்..” என்றார் மேகநாதன்.
“ரொம்ப சிறப்பு..! தொங்குறது தான் தொங்குறிங்க.. நல்ல ஸ்ட்ராங்கான கயிறா வாங்கிடுங்க. இல்லைன்னா, உங்க வெயிட் தாங்காம இடையிலேயே அருந்து விழுந்துட்டா..” என்ற வெற்றி, அவரைப் பார்த்து நக்கல் சிரிப்பு ஒன்றை சிரிக்க,
“எப்படி பேசுறான்னு பார்த்தியாடி. நம்ம உயிரைப் பத்தியெல்லாம் இவனுக்கு கவலையில்லை. இவனுக்கு இவன் நினைக்கிறது தான் நடக்கணும்..” என்று மேகநாதன் சொல்ல,
“எதை,யார் சொல்றதுன்னு விவஸ்தையே இல்லாமா போய்டுச்சுமா. உங்களுக்காக இல்லைன்னாலும், எங்கம்மாவுக்காக நான் கண்டிப்பா வந்துடுவேன். பொண்ணு எங்கம்மாவுக்கு பிடிச்சிருந்தாலே போதும்…” என்றவன் அடுத்து கிளம்ப வேண்டிய வேலைகளில் ஆயத்தமானான்.
அவன் கிளம்பிய அடுத்த பத்தாவது நிமிடம் ராஜேஷின் கார் உள்ளே நுழைந்தது.
“வாங்க சம்பந்தி..! “ என்று மேகநாதன் வாய் முழுவதும் சிரிப்புடன் அழைக்க, சந்தோஷமாக இறங்கினார் ராஜேஷ்.
“என்னாச்சுங்க சம்பந்தி..? இவ்வளவு தூரம்..?” என்றார் மேகநாதன்.
“கல்யாணத்துக்கு இன்னமும் ஒரு வாரம் தான் இருக்கு. மாப்பிள்ளை வந்திருக்கிறதா சொன்னிங்க. அதான் அவரைப் பார்த்துட்டு அப்படியே வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் என் பொண்ணுக்கும் அறிமுகப் படுத்தலாம்ன்னு வந்தேன்..” என்றார் ராஜேஷ்.
“இன்னைக்கு அவனைக் கூட்டிட்டு நாங்களே அங்க வர்ற மாதிரி தான் இருந்தோம் சம்பந்தி. ஆனா பாருங்க, திடீர்ன்னு போன் வரவும் இப்ப தான் கிளம்பிப் போனான். அவனோட வேலை அப்படி. உங்களுக்குத் தெரியாததா சம்பந்தி..” என்றார் மேகநாதன்.
அதற்கு மேல், கொடுக்காமல் இருக்க முடியாது என்று நினைத்த மேகநாதன், வெற்றியின் நம்பரை அவரிடம் கொடுத்தார். வெற்றி கொடுத்த வாக்கும் ஒரு காரணம். கண்டிப்பாக, அவன் சொன்னால் செய்வான் என்று அவருக்குத் தெரியும். அந்த நம்பிக்கையே, அவரை அடுத்த ஏற்பாட்டிற்கு தயார் படுத்தியது.
கல்யாண வேலைகள் பரபரப்பாய் நடக்க, அதி விமர்சையாக அனைத்தையும் செய்து கொண்டிருந்தார் ராஜேஷ். மேகநாதன், தானே எல்லா செலவையும் செய்வதாக சொல்லியும், ராஜேஷ் விடவேயில்லை. அனைத்தையும் அவரே செய்ய, இது தான் சாக்கென்று மேகநாதனும் அமைதியாய் இருந்து விட்டார்.
“ஏங்க..? நமக்கு இருக்குறது ஒரே பையன். அவன் கல்யாணத்துக்கு செலவு பண்ணாம, வேற யார் கல்யாணத்துக்கு செலவு பண்ண போறோம். அவங்களே எல்லாம் பண்ணினா, நாளைக்கு நமக்கு என்ன மதிப்பு இருக்கும்..?” என்று பொன்னி எவ்வளவோ எடுத்து சொல்லியும், நாதன் காது கொடுத்து கேட்கவில்லை.
“அவரே பொண்ணுக்கு செய்யனும்ன்னு ஆசைப்படுறார். அதை நம்ம வேண்டாம்ன்னு சொன்னா, அவர் மனசு கஷ்ட்டப் படாது..அதான் பேசாம இருக்கேன். நீயும் இதெல்லாம் அவன்கிட்ட சொல்லிட்டு திறியாத…” என்று பொன்னியையும் அடக்கி வைத்துவிட்டார்.
சரியாக கல்யாணத்திற்கு முதல் நாள் வெற்றி வந்து விட்டான். அவன் முகத்திலும், உடலிலும் அப்படி சோர்வு இருந்தது. மரம் கடத்துவதில் ஈடுபட்ட கும்பல் பெரிய புள்ளியின் ஆட்கள் என்று தெரிந்து, அவர்களில் சிலரை கைதும் செய்துவிட்டான். ஓயாத வேலை அவனை ஓய்த்திருந்தது.
“என்ன வெற்றி..? முகமெல்லாம் இப்படி டல்லா இருக்கு. கண்ணெல்லாம் உள்ள போய்..சாப்பிட்டியா சாப்பிடலையா..?” என்று பொன்னி ஆதங்கத்தில் கேட்க,
“செம்ம டயர்ட்ம்மா..! சரியா தூங்கவேயில்லை..” என்று சொன்னவன் அன்று மாலை வரை தூக்கத்தில் தான் இருந்தான்.
“விடிஞ்சா கல்யாணம்..! இன்னும் உன் பையன் தூங்கிட்டு இருக்கான். பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க..! சம்பந்தி இதோட பத்து தடவை என்கிட்ட கேட்டுட்டார்..மண்டபத்துக்கு கிளம்பனும்” என்றார் மேகநாதன்.
இவர் பேசுவது கேட்டாலும், கேட்காதவன் போல், குளித்து கிளம்பி வந்தான் வெற்றி.
“கிளம்பலாமா..?” என்றான் ஒரே வார்த்தையில். அவனுடைய அவசரம் அவனுக்கு. பொண்ணைப் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் மனதிற்குள் இருந்து கொண்டே இருந்தது. பெண் வீட்டிலாவது இவனை போட்டோவில் பார்த்தார்கள். அவன் அப்படி போட்டோவிலும் பார்க்கவில்லையே என்ற ஆதங்கம் அவனுக்கும் மனதிற்குள் இருந்தது.
“உன்னோட பிரண்ட்ஸ் யாரும் வரலையா வெற்றி..?” என்றார் பொன்னி.
“ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு ஊர்ல வேலையில இருக்கானுக. உங்க புருஷன் பண்ற அவசரத்துக்கு ஒருத்தனும் வர முடியாது. எப்படியும் நம்ம சிங்கம் இன்னைக்கு நைட் வந்திடுவான்னு நினைக்கிறேன். பார்ப்போம்…” என்றான் வெற்றி.
அவன் ஒருத்தன் வந்தாலே போதும், மண்டபமே களை கட்டிடும்.. என்ற பொன்னி அடுத்து கிளம்ப வேண்டிய வேலைகளில் இறங்கினார்.
திருமண மண்டபத்தில்…
“அக்கா..என்ன இன்னும் மாப்பிள்ளை சாரை காணோம்..? தாலி கட்டவாவது வருவாரா.. இல்லை..” என்று ஸ்ருதி இழுக்க,
“பேசாம இரு ஸ்ருதி..! அவளே கோபத்துல இருக்கா, நீ இன்னும் அவளை உசுப்பேத்தாத..” என்று வினிதா சொல்ல,
“அவ சொல்றதுல என்னம்மா தப்பு..? எனக்கு எதுவும் சரியாப்படலை..” என்றாள் வர்ணிகா.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே,வெற்றி குடும்பத்தினர் மண்டபத்திற்குள் நுழைந்திருக்க,
“மாப்பிள்ளை வீட்ல இருந்து வந்துட்டாங்க. மாப்பிள்ளையும் வந்துட்டார்..” என்ற வார்த்தைகள் காதில் விழுந்த பிறகுதான் வினிதாவிற்கும் நிம்மதியாக இருந்தது.
“நான் மாப்பிள்ளைத் தம்பியைப் பார்த்துட்டு வந்திடுறேன். நீ அக்காவைப் பார்த்துக்க..” என்று வினிதா சொல்லிவிட்டு நகரப் பார்க்க,
“ஏன்? நாங்கெல்லாம் அவரைப் பார்க்க வேண்டமா..?” என்றாள் ஸ்ருதி.
“போய் பார்த்தமா வந்தமான்னு இருக்கணும். சும்மா வாயாடிகிட்டு இருக்கக் கூடாது..” என்று வினிதா கறாராய் சொல்ல,
“பார்ப்போம் பார்ப்போம்..!” என்றாள் ஸ்ருதி.
“வர்ணி..! உன் ஆள் வந்தாச்சு.. போய் பார்த்துட்டு வருவோமா..?” என்றாள் ஸ்ருதி.
ஒரு நிமிடம் மௌனம் காத்த வர்ணி…
“நீ போய் பார்த்துட்டு வா ஸ்ருதி… “ என்றாள்.
“அதுவும் சரிதான்..!” என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, நேராக அங்கே வந்திருந்தான் வெற்றி.
“அக்கா..! மாப்பிள்ளை சார் இங்கயே வந்துட்டார்…” என்று சங்கோஜத்தில் நெளிந்த படி இளித்து வைத்தாள் ஸ்ருதி.
“ஹாய்..!” என்றான் வெற்றி.
“ஹெலோ..!” என்றாள் வர்ணிகா.
“உங்களுக்கு இந்த கல்யாணத்துல ஓகே தானே..” என்றான்.
“ரொம்ப சீக்கிரம் வந்து கேட்குறிங்க..?” என்று முனங்கினாள் ஸ்ருதி.
“என்ன சொன்ன..?” என்றான்.
“ம்ம்ம்..ஒன்னுமில்லையே..சும்மா..!” என்று ஸ்ருதி சிரிக்க,
“நீங்க சொல்லுங்க..” என்று வர்ணிகாவின் பக்கம் திரும்பினான்.
“எனக்கு சம்மதம் தான். உங்களுக்கு…” என்றாள் வர்ணிகா.
“பிடிக்கலைன்னு சொல்ல, எனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு..” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன்,
“ரொம்ப பிடிச்சுருக்கு. எங்கப்பா வாழ்க்கையிலையே எனக்கு செஞ்ச உருப்படியான விஷயம் இதுவா தான் இருக்கும்…” என்றான் வெற்றி ஆத்மார்த்தமாய்.
“இல்லைன்னு சொல்ல மாட்டேன். நீ இருக்கியேன்னு பார்க்குறேன்..” என்று வெற்றி நமட்டு சிரிப்பு சிரிக்க,
“நான் இல்லைன்னா என்ன பண்ணியிருப்பிங்க..?” என்றாள்.
“அதெல்லாம் சொல்ல முடியாது. செஞ்சு வேணும்ன்னா காட்டாவா..?” என்றான்.
“ஆத்தி..! வர்ணி நான் கூட என்னவோன்னு நினைச்சேன். உன் ஆள் செம்ம பாஸ்ட் தான்..” என்றாள் ஸ்ருதி.
அதற்குள் அங்கு ராஜேஷ் வந்துவிட,
“வாங்க மாப்பிள்ளை..! போட்டோவை விட நேர்ல இன்னும் ஜம்முன்னு இருக்கீங்க..?” என்றவருக்கு, உண்மையாகவே மனம் நிறைந்து போனது.
“நான் தான் சொன்னேன்ல சம்பந்தி..” என்று மேகநாதன் பெருமை பேச ஆரம்பிக்க,
“வெற்றி, நீ ரூமுக்கு போப்பா..” என்று வெற்றியை அங்கிருந்து விடுவித்தார் பொன்னி.
வர்ணிகாவிற்கு, சந்தோஷத்தில் முகம் குப்பென்று சிவந்து போயிருக்க, அந்த சிவப்பு அவளை இன்னமும் அழகியாகக் காட்டியது.
அறைக்கு சென்ற வெற்றிக்கு மனம் முழுவதும் அப்படி ஒரு சந்தோசம். அவனுக்கு வர்ணிகாவை முதல் பார்வையிலேயே பிடித்துவிட்டது. அவனுக்கு அவள் தான் என்று உறுதிப்படுத்தியதால் இயல்பாகவே வந்த எண்ணமாகக் கூட இருக்கலாம்.
சொல்லப் போனால் அன்று தான் முதல் முறையாக கல்யாணக் கனவுகளில் மூழ்கினான் வெற்றிவேல்.
மறுநாள் அழகான விடியலாக விடிய,
சொந்த பந்தங்கள் கூடியிருக்க, உற்றார் உறவினர்களின் முன்னிலையில், குறித்த முகூர்த்தத்தில், தனக்கருகில் தேவதையாக அமர்ந்திருந்தவளின் கழுத்தில் மங்கள நாணைப் பூட்டி, அவளைத் தன்னில் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான் வெற்றிவேல்.
பலபேர் மகிழ்ச்சியில் வாழ்த்த, பலபேர் பொறாமையில் வாழ்த்த, பலபேர் கடமைக்கே என்று வாழ்த்த, பெற்றோர்களின் நெஞ்சம் நிறைந்த சந்தோஷத்துடன் நடந்து முடிந்திருந்தது வெற்றிவேல்-வர்ணிகா திருமணம்.
மேகநாதன் நினைத்ததெல்லாம் ஒவ்வொன்றாய் நடந்து கொண்டிருந்தது. பொன்னிக்கு மனதிற்குள் நெருடல் இருந்தாலும் அதை வெளியே காட்டாமல் நடமாடிக் கொண்டிருந்தார்.
இருவரும், வேறு உடை மாற்ற அவரவர் அறைக்கு செல்ல, பட்டு வேஷ்ட்டியை மாற்றிக் கொண்டிருந்தவனின் காதில் அப்போது பார்த்து தான் அந்த பேச்சுகள் விழ வேண்டுமா என்ன..?
பொன்னிதான் அவருடைய தங்கையிடம் பேசிக் கொண்டிருந்தார்.
“நம்ம வெற்றி வாழ்க்கையை இப்படி பண்ணுவிங்கன்னு நான் நினைச்சு கூட பார்க்கலைக்கா…” என்று கோமதி கோபத்தில் பொரிந்து கொண்டிருந்தார்.
“நான் என்ன பண்ண முடியும் கோமதி..? உங்க மாமா என்னைக்கு என்னோட பேச்சைக் கேட்டிருக்கார்..?” என்றவர்,
“சாப்பிட வர்றவங்களை கவனிக்கணும். நீ இங்க இருந்து பார்த்துக்கோ..” என்று சொல்லிவிட்டு நகரப் பார்க்க,
“கொஞ்சம் நில்லுக்கா..! நான் எப்ப பேச வந்தாலும், இப்படித்தான் சாக்கு சொல்லிட்டு போயிட்டே இருக்க…நம்ம வெற்றிக்கு என்ன குறைச்சல்..?அவனை எதுக்கு வீட்டோட மாப்பிள்ளையா அனுப்பனும்.. பொண்ணு வீட்டுக்காரவங்க எவ்வளவு வசதியா இருந்தா நமக்கென்ன..? இதெல்லாம் வெற்றிக்குத் தெரியுமா..? நீ பெத்து வச்சிருக்கிறது ஒரு பிள்ளை. அவனையும் வீட்டோட மாப்பிள்ளையா அனுப்பிட்டு, நீ ஒதுங்கி இருக்க போறியா..?” என்று ஆதங்கத்தில் கோமதி பேசிக் கொண்டே போக,
“கொஞ்சம் மெதுவா பேசு கோமதி. வெற்றிக்கு இன்னும் இந்த விஷயம் தெரியாது. சொல்லக் கூடாதுன்னு உங்க மாமா சொல்லிட்டார். நானே அவனுக்குத் தெரிஞ்சா என்னாகுமோன்னு பயந்துகிட்டு இருக்கேன். நீ வேற எதையும் சொல்லி வைக்காத…” என்றார் பொன்னி படபடப்புடன்.
“எனக்கு வெற்றியைப் பத்தி நல்லா தெரியும். ஒரு நாளும் இதுக்கு சம்மதிக்க மாட்டான்..!” என்றார் கோமதி உறுதியாக.
“உங்க மாமா, பொண்ணு வீட்ல வாக்குக் குடுத்துட்டார் கோமதி. நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன், அவர் கேட்குற மாதிரி இல்லை.” என்று பொன்னி கலங்கிய கண்களுடன் சொல்ல,
“இன்னும் என்னென்ன விஷயத்தை அவன்கிட்ட இருந்து மறைச்சிருக்கிங்க..?” என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே,
“இங்க என்ன பண்ணிட்டு இருக்க..? வந்தவங்களை கவனிக்கனும்ன்ற எண்ணம் இருக்கா இல்லையா..?” என்ற மேகநாதனின் உருட்டலில், வேகமாய் சென்று விட்டார் பொன்னி.
“என்ன கோமதி..? வந்தா வந்த வேலையை மட்டும் பார்க்கணும்..” என்றார் கோபத்துடன்.
“வெற்றி எனக்கும் பிள்ளை தான் மாமா. அவனை வீட்டோட மாப்பிள்ளையா அனுப்பிட்டு, எங்கக்கா விட்டத்தைப் பார்த்துட்டு உட்காரனுமா. உங்களுக்கு எங்கக்கா வேணும்ன்னா பயப்படலாம். நான் பயப்பட மாட்டேன். காசு, பணத்தை பார்த்த உடனே இப்படி மாறுவிங்கன்னு நான் நினைக்கவேயில்லை மாமா. நீங்க வெற்றியை மொத்தமா வித்துட்டிங்க…” என்று கோமதி விடாமல் பொரிந்து தள்ளிக் கொண்டிருக்க,
“கேட்குறாங்க தானே..! சொல்லுங்கப்பா.. எனக்கு பணம் தான் முக்கியம், பையனெல்லாம் முக்கியமில்லைன்னு..” என்றான் வெற்றி நக்கலாய்.
“வெற்றி..!!” என்று மேகநாதன் அதட்டல் போட,
“உங்க அதட்டல், உருட்டல் எல்லாம் அம்மாகிட்ட வச்சுக்கங்க. யாரைக் கேட்டு இதுக்கு சம்மதம் சொன்னிங்க. நான் என்ன கையாலாகதவனா, வீட்டோட மாப்பிள்ளையா இருக்க..” என்று கோபத்தில் கத்த, அந்த வழியாக வந்த ராஜேஷின் காதிலும் வெற்றியின் வார்த்தைகள் கேட்க,
“என்னாச்சு மாப்பிள்ளை..?” என்றபடி வந்தார் ராஜேஷ்.
“சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க மாமா. அப்பா உங்க கிட்ட பேசுன எந்த விஷயமும் எனக்குத் தெரியாது. அவர் சொன்ன எந்த விஷயத்தையும் என்னால செய்ய முடியாது. என் பொண்டாட்டியை எப்படி வச்சுக் காப்பாத்தனும்னு எனக்குத் தெரியும்..” என்றான் பட்டென்று.
“என்ன மாப்பிள்ளை..? இப்ப வந்து இப்படி பேசுறிங்க. உங்கப்பா எல்லா விஷயத்துக்கும் சரின்னு சொன்னதால தான் நாங்க உங்களுக்கு பொண்ணுக் குடுக்கவே சம்மதிச்சோம்.. இப்ப வந்து இப்படி பேசுனா எப்படி..?” என்றார் ராஜேஷ்.
“என்னால முடியாது. நீங்க போன்ல பேசும்போது கூட இதைப் பத்தி ஒரு வார்த்தை என்கிட்டே சொல்லவேயில்லையே..?” என்று வெற்றி, ராஜேஷை கேள்வி கேட்க,
“இதுக்கெல்லாம் பதில் உங்கப்பாகிட்ட தான் இருக்கு. எது எப்படியோ, எல்லாத்துக்கும் சம்மதம்ன்னு சொல்லித்தான் இந்த கல்யாணம் முடிஞ்சது. இப்போ நீங்க இப்படி பேசுனா, அப்பறம் என்னோட அணுகுமுறையே வேற மாதிரி இருக்கும்..” என்ற ராஜேஷின் குரல் கொஞ்சம் மிரட்டல் தொனியில் இருக்க,
“என்ன சார், என்ன மிரட்டுறிங்களா..? இந்த வெற்றியைப் பத்தி இன்னும் உங்களுக்கு சரியா தெரியலைன்னு நினைக்கிறேன். எனக்கு தோணாத ஒரு விஷயத்தை யாராலையும் செய்ய வைக்கவே முடியாது. இந்த மிரட்டுற வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காதிங்க…எங்கப்பா மேல தான் தப்பு. அதுக்கு வேணும்ன்னா நான் சாரி கேட்டுக்கிறேன். மத்தபடி உங்க தாளத்துக்கு நான் ஆட முடியாது…” என்றான் வெற்றி உறுதியாக.
அவர்களைச் சுற்றி சில சொந்த பந்தங்கள் கூட, ஒரு வார்த்தயை பத்தாக்கி, ஆளாளுக்கு ஒன்றாய் பேச ஆரம்பித்தனர்.
“என்னாச்சு..? எதுக்கு மாப்பிள்ளை கோபமா இருக்கார்..?” என்று ஒருவர் கேட்க,
“பொண்ணுக்குக் கண்ணுத் தெரியாத விஷயத்தை அவர்கிட்ட சொல்லலையாம். அதான் கோபமா இருக்காராம். ஏமாத்தி நடத்துன கல்யாணமே செல்லாதுன்னு கத்திகிட்டு இருக்கார்…” என்று மற்றொருவர் நான்கு வார்த்தை சேர்த்துப் போட்டு பேச,
என்ன பிரச்சனை என்று பார்க்க வந்த ஸ்ருதியின் காதில் இந்த வார்த்தைகள் தான் விழுந்தது.
அவள் நேராய் சென்று வர்ணிகாவிடம் விஷயத்தை சொல்ல,
“என்ன சொல்ற ஸ்ருதி..?” என்றாள் வர்ணி அதிர்ந்து.
“ஆமாக்கா..! அங்க ஒரே சத்தமா இருக்கு..” என்றாள் ஸ்ருதி.
“அங்கே கூட்டிட்டு போ..!”என்றவள், அவர்களைத் தேடி செல்ல,
“என்னால முடியாதுங்க..!” என்ற வெற்றியின் வார்த்தைகள் தான் அவள் காதில் விழுந்தது.
“அப்பா..!”என்றவளின் குரலில் திரும்பிய ராஜேஷ்,
“ஒன்னுமில்லடா… நீ போ..! நாங்க வந்திடுறோம்..” என்றார்.
“அப்பா…! யார்கிட்டயும் நீங்க கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. வாங்க போகலாம்..” என்றாள் வர்ணி.
“என்னம்மா இது..? இப்பத்தான் கல்யாணமே முடிஞ்சிருக்கு. இப்படி பேசுனா எப்படி..? கல்யாணம் ஒன்னும் விளையாட்டுக் காரியமில்லை” என்று பொன்னி, வர்ணியிடம் கெஞ்ச,
“ஆமாம்மா..! கொஞ்சம் பொறுமையா இரு. அவன் சம்மதிச்சுடுவான்..” என்றார் மேகநாதனும் அவர் பங்கிற்கு.
“அப்படி உங்க பையன் வாழ்க்கைப் பிச்சை போட்டு, அதுலதான் நான் வாழணும்ன்னு எந்த அவசியமும் இல்லை அங்கிள்..” என்றாள் உறுதியாக.
“நம்ம இங்க இருக்கோம்..! இவ ஏன் சைடுல பார்த்து பேசிட்டு இருக்கா..?” என்று வெற்றி யோசித்துக் கொண்டிருக்க,
“கொஞ்சம் பொறுமையா இரு வர்ணி..” என்றார் வினிதா.
“அம்மா..! நான் கிளம்பலான்னு சொன்னேன்..!” என்று உறுதியாக சொன்னவள்,ஸ்ருதியை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.
“இதை நான் சும்மா விட மாட்டேன் மேகநாதன். நீங்க எல்லாத்துக்கும் சரின்னு தான் சொன்னிங்க. இப்ப இப்படி பேசுறது சரியில்லை. இதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லியே ஆகணும்..” என்று கோபத்தில் கத்திவிட்டு பெண்ணின் பின்னால் ஓடினார் ராஜேஷ்.
“இப்ப உனக்கு சந்தோஷமாடா..?” என்று நாதன் வெற்றியைத் திட்ட,
“என்னப்பா நடக்குது இங்க..? வீட்டோட மாப்பிள்ளையா போகலைன்னா அவங்க இப்படித்தான் பேசிட்டு போவாங்களா..? அவர் பொண்ணு அவருக்குமேல திமிரா பேசிட்டு போறா..நான் அவளை வச்சு வாழ மாட்டேன்னு எந்த இடத்துலையும் சொல்லலையே. பேசிட்டு இருக்கும் போதே, இப்படி திமிரா கிளம்பிப் போனா என்ன அர்த்தம்..? என்கூட என்வீட்ல வந்து இருக்குறதா இருந்தா வரட்டும். இல்லையா அவங்க பிரியம். இதுக்கு அவங்களை நான் தப்பு சொல்ல மாட்டேன். தப்பு முழுக்க உங்க பேர்ல தான். அதனால தான் இப்போ பொறுமையா இருக்கேன். அவங்களுக்கும் யோசிக்க கொஞ்சம் டைம் வேணும் தானே..” என்றவன் அதோடு பேச்சை முடித்துக் கொண்டான்.
வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க சம்மதிக்காத காரணத்தினால் தான், அவள் கோபத்தில் சென்றுவிட்டாள் என்று வெற்றி நினைத்திருக்க, தனக்கு கண்ணுத் தெரியாமல் இருக்கும் குறையை காரணம் காட்டித்தான் அவன் இப்படி பேசுகிறான் என்று நினைத்த வர்ணிகா, அவனை முழுமையாக வெறுத்தாள். கடைசி வரை அவளுக்குக் பார்வை இல்லாத விஷயம் அவனுக்குத் தெரியாமலேயே போனது.
முதன் முறையாக பார்த்த போது, அவள் தலையை குனிந்து கொள்ள, அவள் வெட்கத்தில் குனிந்திருக்கிறாள் என்று தவறாக எண்ணிக் கொண்டான். மேடைக்கு அழைத்து வரும் போதும் சரி, தாலி கட்டும் போதும் சரி அவனுக்கு எந்த வித்யாசமும் தெரியவில்லை. அரைகுறையான பேச்சுக்கள், அவசரம், கோபம், இயலாமை, சுற்றி இருப்பவர்களின் இட்டுக் கட்டிய பேச்சுக்கள் இப்படி அனைத்துமாக சேர்ந்து இருவருக்கும் ஒரு புரிதல் இல்லாத நிலையை உருவாக்கியிருந்தது.