பொன்னி வீட்டிற்குள் நுழையும் போதே அவரை கவனித்து விட்டிருந்தார் மேகநாதன். கண்டிப்பாக பொன்னி எங்கே போய் விட்டு வருகிறார் என்று மேகநாதனுக்கு தெரிந்தே இருந்தது. இருந்தாலும் தெரியாதவரைப் போல் கேட்டு வைத்தார்.
“இந்த நேரத்துக்கு எங்க போயிட்டு வர்ற பொன்னி..?” என்றார்.
“எதுக்குத் தெரியாத மாதிரி கேட்குறிங்க..? நீங்க தெரிஞ்சே தான் கேட்குறிங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும். நான் மருமக வீட்டுக்குப் போய் அவங்கம்மாவைப் பார்த்து பேசிட்டு வரேன்..போதுமா..?” என்றார் பொன்னி.
“வரவர வாய் கூடுது. யாரைக் கேட்டு நீ அங்க போன..?” என்றார் மேகநாதன்.
“யாரைக் கேட்கணும்..? இனியும் உங்க பேச்சைக் கேட்டுகிட்டு வீட்டோட இருந்தா, என் பையன் வாழ்க்கை போய்டும். ஏதோ கோபமா இருக்காங்க. கொஞ்ச நாள்ல சரியாகிடுவான்னு நினைச்சு தான் இத்தனை நாள் அமைதியா இருந்தேன். விஷயம் இந்த அளவுக்கு வந்த பிறகு இனியும் பொறுமையா இருக்குறதுல பிரையோஜனம் இல்லைன்னு தெரிஞ்சு போய்டுச்சு. அதான், என்னால என்ன முடியுமோ அதைப் பண்ணிட்டு வந்திருக்கேன்..” என்றார் பொன்னி.
“அவங்ககிட்ட போய் கெஞ்சிட்டு வந்தியா..?” என்றார் கோபமாக.
“பையன் வாழ்க்கை நல்லா இருக்கணும்ன்னா கெஞ்சுறதுல ஒன்னும் தப்பில்லை..” என்றார் பொன்னி.
“அப்போ எனக்கு வெற்றி வாழ்க்கையில அக்கறையில்லைன்னு நினைக்கிறியா பொன்னி..?” என்றார் மேகநாதன்.
“கண்டிப்பா..! அக்கறை இருந்திருந்தா ஒரு பையன் கல்யாணத்தை இப்படி நடத்தியிருக்க மாட்டிங்க. வெற்றிகிட்ட விஷயத்தை மறைச்சதுல இருந்து தப்புமேல தப்பு பண்ணியிருக்க மாட்டிங்க. கல்யாணத்துக்கு அப்பறம் இவ்வளவு பிரச்சனை நடந்துகிட்டு இருக்கும் போது, அதை இப்படி வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க மாட்டிங்க..உங்களுக்கு பணம் இருந்தா போதும். யார் எக்கேடு கெட்டு போனா என்ன..? நீங்க சொல்றதுக்கெல்லாம் தலையை ஆட்டி ஆட்டி, இதுவரைக்கும் நடந்ததெல்லாம் போதும்..எங்களை ஆளைவிடுங்க..” என்றார் பொன்னி கோபமாய். இத்தனை வருடத்தில் பொன்னி ஒரு முறை கூட இவ்வளவு கோபப்பட்டு பேசியதில்லை.
“நான் பணத்துக்கு ஆசைப் பட்டேனா..?” என்ற மேகநாதனின் முகத்தில் அப்படி ஒரு அதிர்ச்சி.
“இல்லையா பின்னே..! அப்பறம் எதுக்காக வெற்றியை வீட்டோட மாப்பிள்ளையா அனுப்ப சம்மதம் சொன்னிங்க.பத்துப் பைசா செலவில்லாம எதுக்காக அவசர அவசரமா கல்யாணத்தை பண்ணி வச்சிங்க..? எல்லா இடத்துலயும் என் வாயை எதுக்கு அடைச்சிங்க..? இதெல்லாம் பணத்துக்காகத் தான..?” என்றார் பொன்னி.
“இத்தனை வருஷம் என் கூட குடும்பம் நடத்தி, என்னை நீ புரிஞ்சுகிட்டது இவ்வளவு தான். நான் பணத்தை கட்டிக் காக்குறவன் தான். ஆனா, அது நான் சம்பாரிச்ச பணத்தை தான். அடுத்தவங்க பணத்துக்கு நான் என்னைக்கு ஆசைப் பட்டிருக்கேன்..?” என்றார் மேகநாதன் ஓய்ந்து போய்.
“அதையெல்லாம் உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீ பேசின பேச்சுக்கே மனசு நிறைஞ்சு போய் கிடக்கு..” என்றார்.
“பிரச்னைக்கு காரணமே நீங்க தான.. அப்ப நீங்களே பிரச்சனையை முடிச்சு வச்சிடுங்க..” என்ற பொன்னி அதற்கு மேல் நிற்கவில்லை.
மேகநாதன் அப்படியே அமர்ந்துவிட்டார். அவர்,மனதில் ஒன்றை நினைத்து செய்ய போக, அது இப்படி தனக்கே திரும்பும் என்று நினைக்கவில்லை. இந்த கல்யாணத்தை நடத்திய காரணங்களுக்கு சென்றது அவரின் மனம். என்ன நினைத்து என்ன செய்ய…?
அவர் ஓய்ந்து போய் அமர்ந்திருக்க, அடுத்த ஒரு மணி நேரத்தில் புயலென உள்ளே நுழைந்தார் ராஜேஷ். அவரைப் பார்த்த மேகநாதனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“வாங்க..!” என்றார் மனமேயில்லாமல்.
“உங்க பையன் தான் எங்களோட எந்த கண்டிஷனுக்கும் சரிப்பட்டு வரலையே. டிவேர்ஸ் நோட்டிஸ்ல கையெழுத்துப் போட்டுட்டு போக வேண்டியது தான. போன்ல பெரிய இவன் மாதிரி பேசுறான். கையெழுத்து போட முடியாது, உங்களால முடிஞ்சதைப் பாருங்கன்னு ரொம்ப திமிரா பேசுறான். என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க..?” என்று எடுத்த எடுப்பில் பேச ஆரம்பிக்க, அவரின் சத்தம் கேட்டு பொன்னியும் வெளியே வந்தார்.
“அவன் தான பேசுனான்.. நீங்க அவன்கிட்ட பேசியிருக்க வேண்டியது தான..?” என்றார் மேகநாதன்.
“கண்டிஷனுக்கு தலையை ஆட்டினது நீங்கதான்னு எனக்கு நியாபகம்..” என்றார் ராஜேஷ் எரிச்சலாய்.
“என் பையன் சொன்னா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும். அவனுக்கு இந்த விவாகரத்து வேண்டாம்ன்னா வேண்டாம்ன்னு அர்த்தம்..சரியா தான சொல்லியிருக்கான். நீங்க அதையும் மீறி கோர்ட்க்கு போனா, கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகியிருக்கணும்..” என்றார் மேகநாதன்.
“குடும்பமே சேர்ந்து பிளான் பண்ணி தான் இதையெல்லாம் பண்றிங்க.. அப்படித்தான..?டிரக்கிங் போன என் பொண்ணை எதுக்கு அவன்கூட கூப்பிட்டு வச்சிருக்கான்… கேட்டா, அனுப்ப முடியாதுன்னு சட்டம் பேசுறான்..” என்றார் ராஜேஷ்.
“அப்படியா சொன்னான்..! மருமகப் பொண்ணு அவன் கூடவா இருக்கு..? எனக்கு இது தெரியாம போச்சே. இது தெரியாம நான் வேற இவ்வளவு நேரம் கவலைப் பட்டுகிட்டு இருந்தேன்.. என் பையன் சரியா தான் சொல்லியிருக்கான். அவன் பொண்டாட்டியை அவன் அனுப்பனும்கிற அவசியம் இல்லையே..?” என்றார் மேகநாதன்.
அவர் பேசுவதைக் கேட்ட பொன்னிக்கு மயக்கம் வராத குறை தான். தன்னையே ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டார்.
“வேண்டாம் மேகநாதன்..! இதெல்லாம் சரியில்லை. தேவையில்லாம என்னோட வழியில குறுக்க வராதிங்க..!” என்று ராஜேஷ் மீண்டும் எச்சரிக்கை செய்ய,
“நாங்க யாரோட வழியிலையும் குறுக்க வரலை. இதுல முடிவு எடுக்க வேண்டியது நீங்க இல்லை, என்னோட மருமகள் தான். அந்த பொண்ணு பார்த்து, என் பையன் வேண்டாம்ன்னு சொல்லட்டும்.. அவன் ஒதுங்கிடுவான்…இப்ப நீங்க போயிட்டு வாங்க..!” என்றார் மேகநாதன்.
“இப்ப என்னத்துக்கு அப்படி பார்த்துகிட்டு இருக்க..?” என்றார் பொன்னியிடம்.
“இல்லை நிஜமாவே நீங்கதானா..? இல்லை, உங்களுக்குள்ள எதுவும் ஆவி, கீவி புகுந்திடுச்சான்னு பார்த்துகிட்டு இருக்கேன்..” என்றார் பொன்னி.
“அவர் சொல்லிட்டுப் போனது உண்மையா..? மருமகப் பொண்ணு, அவன் கூடவா இருக்கு..?” என்றார்.
“அது..” என்று யோசித்தவர், வெற்றி சொன்னதை சொல்ல,
“ஹோ..! இதை சொல்ல எதுக்கு இப்படி யோசிக்கிறவ..?” என்றார்.
“நீங்க எப்ப எப்படி பேசுவிங்கன்னு எனக்கென்ன தெரியும்…?” என்றார் பொன்னி.
இரண்டு நிமிடம் அமைதியாக இருந்த மேகநாதன்,
“வெற்றிக்கு போனைப் போடு..! நான் அவன்கூட கொஞ்சம் பேசணும்..” என்றார்.
“நீங்க ஏதாவது ஏடாகூடமா பேசி வச்சா, அதுக்கும் அவன் என்கிட்டே தான் கோபத்தை காட்டுவான்..” என்று பொன்னி சொல்ல,
“நான் உன்னைய போன் போடத் தான் சொன்னேன்..!” என்றார் கோபத்துடன்.
பொன்னி வேறுவழியில்லாமல் வெற்றிக்கு அழைக்க,
“சொல்லுங்கம்மா..!” என்றான். அவன் குரலில் ராஜேஷிடம் பேசிய கோபம் மிச்சமிருந்ததைப் போல் இருந்தது.
“நான் மேகநாதன் பேசுறேன்..!” என்றார்.
‘ஏன்? அப்பா பேசுறேன்னு சொன்னா என்னவாம்..?’ என்ற பொன்னி மனதிற்குள் நொடித்துக் கொண்டார்.
“நீங்க மேகநாதனா பேசுற வரைக்கும் என் கூட பேசத் தேவையில்லை. கொஞ்சமாவது பெத்த தகப்பன் மாதிரி பேசுறதா இருந்தா பேசுங்க..” என்றான் எரிச்சலுடன்.
“மருமகப் பொண்ணு உன்கூட தான் இருக்குதாமே..” என்றார்.
“ஆமா, கல்யாணம் முடிஞ்சு ரெண்டு பேரும் ஹனிமூனுக்கு வந்திருக்கோம். இங்க தான் இருக்கா…” என்று நக்கலுடன் சொன்னவன்,
“கேட்குறாரு…பெரிய கேள்வி..” என்றான் அதே குரலில்.
“கேள்வி கேட்டா ஒழுங்கா பதில் சொல்லணும்..” என்றார்.
“ஆமா, என்கூடத்தான் இருக்கா. இப்ப அதுக்கென்ன..? அவளை அனுப்பி வைக்கணுமா..? ரெண்டு நாள் போகட்டும் அனுப்பி வைக்கிறேன்..” என்றான் வெற்றி.
“எதுக்கு அனுப்பி வைக்கிற..? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ வரும் போது தான் அந்த பொண்ணும் வரணும். அது வரைக்கும் உன் பொண்டாட்டி உன் கூடத் தான் இருக்கணும். அந்த பொண்ணு இங்க வந்தா மறுபடியும் மனசை மாத்திடுவாங்க..” என்றார் மேகநாதன்.
வெற்றி ஒரு முறை போனை காதில் இருந்து எடுத்துவிட்டு, தன்னைத் தானே கிள்ளிக் கொண்டான். அதற்குள் அவர் நான்கைந்து ஹலோ சொல்லியிருந்தார்.
“உண்மையைத் தான் சொல்றேன் வெற்றி. நீ என்ன செய்வியோ எனக்குத் தெரியாது. எனக்கு மருமகள்னா அது அந்த பொண்ணு தான். அது எக்காரணம் கொண்டும் மாறக் கூடாது. அதை நீ மறக்கவும் கூடாது..” என்றார் உறுதியாக.
“என்ன திடீர்ன்னு…?” என்றான்.
“திடீர்ன்னு எல்லாம் இல்லை. அந்த பொண்ணை உனக்குக் கல்யாணம் பண்ணி வச்சதே காரணத்தோட தான். ..” என்றவர் அடுத்துப் பேசிய விஷயங்களைக் கேட்ட வெற்றிக்கு அவர் சொன்ன எதையும் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
“என்னப்பா சொல்றிங்க..?” என்றான்.
“உண்மைதான் வெற்றி. அந்த பொண்ணு இங்க வந்தா கண்டிப்பா டிவேர்ஸ் வாங்குவாங்க. அடுத்து நடக்க வேண்டிய எல்லாமே நடக்கும். இனி எல்லாமே உன் கைல தான் இருக்கு…” என்றார் மேகநாதன்.
“ம்ம்ம்!” என்று போனை வைத்த வெற்றிக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான யோசனை இல்லை.
அங்கே ராஜேஷ் அவரின் அறையில் கோபத்தில் குறுக்கும் நெடுக்குமாய் நடை போட்டுக் கொண்டிருந்தார். அவர் என்ன செய்தாலும் எல்லா விஷயமும் அது அவருக்கு பாதகமாகவே முடிந்தது. வர்ணிகாவிற்கு தான் சாதகமாக முடிந்தது.
ராஜேஷ் அவளின் பெற்ற தகப்பன் கிடையாது. வினிதாவின் அண்ணன் மகள் தான் வர்ணிகா. அவளின் சிறுவயதிலேயே தாயையும், தந்தையையும் இழந்து விட, அண்ணன் மகளுக்கு தானே தாயாகிப் போனார் வினிதா. அவளையும் தன்னுடைய மகளாய் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் தான் வினிதாவின் தந்தை, ராஜேஷை வீட்டோடு மாப்பிள்ளையாக கொண்டு வந்தார்.
எல்லாம் சரியாய் போய் கொண்டிருந்த சமயத்தில் மகன் வழி வாரிசான வர்ணிகாவின் பேரில் அனைத்து சொத்துக்களும் இருக்க, அதீத சொத்துக்களும், பணமும் ராஜேஷை திசை திருப்பியது. அதுவரை வர்ணிகாவின் மேல் உண்மையான பாசத்தைக் காட்டிக் கொண்டிருந்த ராஜேஷ், தன்னுடைய நடிப்புப் பாசத்தைத் தொடங்கினார். மாமனார் உயிருடன் இருக்கும் வரை எதையும் செய்ய முடியாது என்று எண்ணிய ராஜேஷ் அவரின் உயிருக்கு நாள் குறிக்க, அந்த விபத்தில் தாத்தாவுடன் சேர்ந்து வர்ணிகாவும் சிக்கிக் கொண்டாள். அதில் தான் அவள் கண் பார்வை போனது.
மாமனாரின் இறுதிக் காரியங்களை முடித்த ராஜேஷ், சில சொத்துக்களை விற்க முயற்சி செய்யும் போது தான், வர்ணிகாவிற்கு திருமணம் ஆகி, அவளுடைய கணவனும் கையெழுத்திட வேண்டும் என்ற கொக்கியை உயிலில் போட்டு வைத்திருந்தார் அவளின் தாத்தா. தான் சொல்வதையெல்லாம் கேட்க வேண்டும் என்று தான் வீட்டோடு மாப்பிள்ளையாக பார்த்தார் ராஜேஷ்.
வர்ணிகாவிற்கு கண் பார்வை திரும்பிவிட்டால், தான் பார்க்கும் மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொள்ள மாட்டாளோ என்ற பயம் அவருக்கு இருந்தது. அதனால் தானே என்னவோ வேக வேகமாக அவளின் கல்யாணத்தை முடித்தார். இதையெல்லாம் அவர் உண்மையான பாசத்தில் செய்கிறார் என்றே நினைத்தனர். மேகநாதனைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டதால் தான் ராஜேஷ் கொஞ்சம் நம்பிக்கையாக இருந்தார்.
கடைசியில் வெற்றி மண்டபத்தில் அப்படி செய்வான் என்று அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை. வினிதாவிற்கு எந்த சந்தேகமும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே நல்ல வேலையில் இருக்கும் வரனாக பார்த்தார். மேகநாதனை வைத்து நிறைவேற்ற நினைத்த காரியங்கள் எல்லாமே வெற்றியால் தடைபட்டுப் போனது. அதற்கு காரணமும் மேக நாதன் தான்.
‘என் பையன் நீங்க என்ன சொல்றிங்களோ அதைக் கேட்டு நடப்பான்..! பணம்ன்னா அவன் என்ன வேணும்ன்னாலும் செய்வான்..” அப்படி இப்படியென்று அள்ளி விட்டிருந்தார். அதை நம்பித்தான் ராஜேஷ் வெற்றியை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்தது.
இன்று அவருடைய எல்லா பிளானும் சொதப்பி விட, வெற்றி திமிராய் பேசியது வேறு அவருக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.
“சொத்து முழுசா வர்ணிகா பேர்ல இருக்குறது தெரியாதப்பவே இவ்வளவு திமிரா பேசுறான். இதெல்லாம் தெரிஞ்சா எப்படி பேச மாட்டான்.. அதுக்குள்ளே ஏதாவது செய்யணும் ராஜேஷ். வர்றவனுக்கு தூக்கிக் குடுக்குறதுக்கா இத்தனை நாள் கஷ்ட்டப் பட்டேன்..” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டார் ராஜேஷ்.
இவர் யோசித்துக் கொண்டிருந்த அதே நேரம் அங்கே மேகநாதனும் வெற்றியிடம் பேசியதைப் பற்றிதான் நினைத்துக் கொண்டிருந்தார்.
வர்ணிகாவின் இறந்து போன தந்தையும், மேகநாதனும் பால்யகால நண்பர்கள். அந்தஸ்து வளர வளர அவர்களின் நட்பிற்குள் இருந்த விரிசலும் அதிகமானது. வர்ணிகாவின் அப்பாவிற்கு திருமணம் ஆனது, அவள் குழந்தையாய் இருக்கும் போது அவர் இறந்தது இப்படி எல்லாமே செய்தியாய் கேட்டுத் தெரிந்து கொள்ளும் அளவில் தான் இருந்தது.
இடையில் ஒருநாள் வர்ணிகாவின் தாத்தாவை எதேச்சையாக பார்க்க நேர்ந்த போது தான் அவரின் மனதில் இருந்த கவலைகளையெல்லாம் நாதனைக் கண்டவுடன் கொட்டித் தீர்த்துவிட்டார். ராஜேஷ் தான் செய்த வேலைகள் எல்லாம் அவருக்குத் தெரியாது என்று நினைத்திருக்க, அந்த முதியவரோ ராஜேஷை விட தெளிவாக இருந்தார்.
அவர் சொல்வதையெல்லாம் கேட்ட மேகநாதனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. பல வருடங்கள் கழித்துப் பார்த்த நண்பனின் அப்பாவைப் பார்த்து மகிழ்ச்சி கொள்வதா..? இல்லை அவர் சொன்னதையெல்லாம் கேட்டு வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. அப்போது ராஜேஷின் தீவிரமான முகம் அவருக்குத் தெரியவில்லை.அவரை சந்தித்த ஒரே மாதத்தில் அவர் இறந்து விட்டதாக செய்தித் தாள்களில் வந்த செய்தியை வைத்து தான் ராஜேஷின் வேகத்தையும், தீவிரத்தையும் உணர்ந்து கொண்டார் மேகநாதன்.
உணர்ந்து என்ன பயன்..? எல்லாம் முடிந்திருந்தது. ராஜேஷப் பற்றி தெரிந்தாலும், அதை பற்றி அவர்கள் வீட்டில் சொல்லவோ, இல்லை அவரை கண்டிக்கும் அளவிற்கோ அவர்களுக்குள் பிணைப்பான உறவு இல்லை. அந்தஸ்தும் சரிசமமாய் இல்லை. ஆனால் ராஜேஷின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்துக் கொண்டிருந்தார். அப்படித்தான், வர்ணிகாவிற்கு மாப்பிள்ளை பார்ப்பது தெரிந்து சாமர்த்தியமாய் காய் நகர்த்தியது. எல்லாம் அவர் நினைத்த படியே நடந்தது.
இப்போது ராஜேஷ் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்.