தன் கணவனிற்கு முன்னால்காதல் என ஒன்றும் இல்லை என்ற சந்தோசத்தோடு.. உயிர்த்தோழி ப்ரியாவின் நினைவில்தான் கண்ணீர் விட்டிருக்கிறான் என்பது மேலும் நெகிழ்வை கொடுக்க.. அதிரூபன் அணைப்பிலிருந்து விலகாமல் லயித்திருந்தாள் ஆதிரை.
பத்து நிமிடங்களுக்கு மேலாகியிருக்க.. தன்னோடு இன்னும் இறுக்கியவன்.. ‘பட்டு…” என்றான் கிசுகிசுப்பாக.
ஆதிரை புரியாமல் பார்க்க.. ‘நான் ஊர்ல இல்லாத நேரம் பட்டு என்னை தேடாம இருக்க கதவுக்கு முன்னாடி ஸ்க்ரீன் போட்ருவாங்க.. ஸ்க்ரீன் போட்டிருந்தா நான் ஊர்ல இல்லன்னு அர்த்தம். பட்டுவை சமாளிக்க அம்மா அப்படி பழக்கி வச்சிருக்காங்க.
அதோட அதிகமா மிட்நைட் இல்ல விடியகாலை இப்படித்தான் வீட்டுக்கு வருவேன்.. நான் ரெஸ்ட் எடுக்கனும்.. பட்டு எழுந்தா என்னை தூங்க விடமாட்டாங்கிறதுக்காகவும் ஸ்க்ரீன் போட்ருவாங்க.. இப்போ நமக்காக போட்டிருப்பாங்க.. அதான் இவ்வளோ நேரம் பட்டு என்னை தேடல..” என நெருங்கினான் மனைவியை.
அரவிந்தனை அடித்ததில் வீரத்தையும்.. மாதவியை மிரட்டியதில் ஆளுமையையும் குழந்தையிருந்த போதும் தன்னை அவனில் இழுத்த வல்லமையும் முன்பே ஆதிரை அறிந்ததுதான்.. ஆனால் ப்ரியாவின் விசயத்யையும் பட்டுவின் விசயத்தையும் நினைக்க.. இந்த வல்லவன் எத்தனை நல்லவனாகவும் இருக்கிறான். அனைத்து குணங்களும் ஒரு சேர அமைந்தவன் தன்னவன் என்ற பெருமையில் இமைக்க மறந்தவளாய் பார்த்திருந்தாள் அதிரூபனை.
‘ஹேய்.. என்ன இப்படி பார்க்கிற.?” என்றான் அவளின் கண்களை தன் கையால் இன்னும் விரித்தபடி.
‘ம்.. பார்ப்பேன்..” என்றாள் உரிமையாக.
‘பார்டா..” என வியந்தவன்.. ‘எப்படியிருக்கேன் நானு.?” என காதலோடு கேட்டபடி அவளின் இதழை நெருங்க..
ரூபன் எண்ணம் புரியாமல்.. ‘ம்.. செம்மையா இருக்கிங்க..” என பாராட்டியவளின் முகம் சட்டென வாட ரூபனை விலக்கி எழுந்தமர்ந்தாள்.
‘ஆதி.. என்னாச்சி.?” என ஏக்கத்தோடு தன்னை நோக்கி இழுக்க.. முகம் திருப்பினாள் கலங்கிய கண்ணோடு.
அதிரூபன் தன்னை நிறைய காதலிக்கிறான் என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆனால் பட்டு விசயத்தில் தன்மேல் நம்பிக்கையில்லாமல் போகவும்தானே திருமணத்திற்கு முன் தன்னிடம் உண்மையை சொல்லவில்லை.. தற்போதும் தன் வேதனை தாளமுடியாமல்தான் ப்ரியா விசயத்தை சொன்னானே தவிர.. தன்னை சரிபாதியாய் நினைத்து இவனின் வேதனை எதுவும் தன்னோடு உரிமையாய் பகிரவில்லையே என நினைக்க கண்ணீர் வந்தது.
ரூபனின் கேள்வியெல்லாம் ஆதிரை காதில் விழவில்லை.. மாறாக.. மாமா தன்னை பெண்கேட்ட போது அம்மா எத்தனை சந்தோசமாய் சம்மதித்தார்.? சித்தப்பா கர்ணா மாமா என எல்லோரிடமும் சொல்லி தன்னையும் சம்மதிக்க வைத்தார்தானே.? பிறகு இவனிற்கு குழந்தை இருக்கிறது என தெரியப்போய்தானே எல்லாம் தடைபட்டது..
ஆசையாய் பெண்கொடுக்க நினைத்த அன்னையும், திருமணத்திற்கு முன்னே குழந்தை பெற்றவன் என தானும் எத்தனை அசிங்கமாய் நினைத்தோம்.? எதற்கு இத்தனை அவமானம்.?
தன்னைதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தீர்க்கமாய் நினைத்திருந்த போதும் இவனின் வேதனையை ஏன் தன்னோடு பகிரவில்லை என கேட்கும் கோபம் வந்தபோதும் வார்த்தைகள் வெளிவரவில்லை.
தான் வேணாம் என திண்ணமாய் சொன்ன போதும் எத்தனை திட்டம் போட்டு தன்னை திருமணம் செய்தான்.? இவனின் காதல் உண்மைதான்.. ஆனால் இன்னாருக்கு இதுதான் என அனைவருக்கும் எல்லை வகுத்திருப்பான் போல.. அதனால்தான் அவனின் அத்தை குடும்பத்தையும் கூட ஒரு எல்லைக்குள் நிறுத்துகிறான். அவர்களைப்போல் உரிமையில்லாத எல்லைக்குள் நுழைய மனம் வரவில்லை ஆதிரைக்கு. எனவே மனதில் உள்ளதை கேட்கவும் பிடிக்கவில்லை.
‘ஒ.. ஒன்னுமில்ல.. அந்த டாக்டரை சும்மாவா விட்டிங்க.?” என்றாள் கண்ணீரோடு.
ப்ரியாவின் இழப்பு ஆதிரையை பாதித்திருக்கிறது என்பது அதிரூபனிற்கு நிறைவை கொடுத்தாலும்.. ‘இந்த கேள்வி உன் மனசை குடையுதுன்றது உண்மைதான்னாலும்.. இன்னும் வேற எதோ இருக்கு போல..” என சந்தேகமாய் பார்த்தான் ஆதிரையை.
அச்சோ எப்பவும் போல மனசுல உள்ளதை கண்டு பிடிச்சிட்டானா.? என அதிர்ந்தவள்.. ‘இல்லயில்ல.. அப்படிலாம் ஒன்னுமில்ல.. என்னை தொல்லை செய்த அரவிந்தனையே அடிச்சி துவச்ச ஆளு.. அந்த டாக்டரை சும்மா விட்ருக்க மாட்டிங்கனு தெரியும்.. ஆனாலும் என்ன செய்திங்கனு சொல்லையே.. அதான்..” என சமாளித்தாள்.
‘இப்பவே தெரிஞ்சாகனுமா..?” என்றான் சலிப்பாக.
ஆதிரை ஆமாம் என்பதாய் தலையசைக்க.. ‘ப்ரியா பேச்சு இப்போ வேணாம்.. இன்னொரு நாளைக்கு சொல்றேன்..” என ஆதிரையை இழுத்து தனதருகே அமர்த்திக்கொள்ள.. தலைகுனிந்து அமர்ந்துகொண்டாள்.
கொஞ்சம் முன்ன கூட செமையா இருக்கேன்னு ரசனையா சொன்னாளே.? தன் வேதனை அறிந்து தன்னை அணைப்பில் இணைந்து நின்று தன்னை ஆறுதல் செய்தாளே என்ற யோசனையோடு ஊன்றிப்பார்க்க.. ஆதிரையின் பொலிவிழந்த முகம் இன்னும் எதையோ போட்டு மனதில் உழட்டிக் கொண்டிருக்கிறாள் என்பதை உறுதி படுத்த.. ‘என்ன பிரச்சனை உனக்கு.?” என்றான் பொறுமையாக.
‘ப்ரியாவை அப்படி செய்தவனை என்ன செய்திங்க.?” என்றாள்.
இன்றே இப்பேச்சினை முடித்து விடலாம் என.. ‘அவனை எதுவும் கேக்க வேணாம்.. அவனுக்கு நான் எத்தனாவது ஆளோ.. என் ஏமாளித்தனத்தை நினைச்சி மனசால ரொம்ப அசிங்கமா உணருறேன்.. அவன் துரோகின்னாலும் அவனுக்குனு பொண்டாட்டி குழந்தைகள் இருக்குறாங்க.. அவங்களுக்கு துரோகம் பண்ண நான் விரும்பல.
கெஞ்சி கேட்டோ.. இல்ல மிரட்டியோ அவனோட சேர்ந்து வாழனும்னு என்னால யோசிக்க கூட முடியல.. அதனாலதான் நான் கர்பமா இருக்கிறதையும் கூட அவன்கிட்ட சொல்லல.. இப்படி ஒரு அப்பா என் குழந்தைக்கு தெரியவே வேணாம்.. என் குழந்தையை மட்டும் பார்த்துக்கோ மாமான்னு அழுதா.
அந்த நிலையில ப்ரியாவும் குழந்தையும்தான் எனக்கும் முக்கிய பட்டாங்க.. இந்த விசயத்தை கொஞ்ச நாள் ஆறப்போடுவோம்.. முதல்ல ப்ரியா உடம்பு சரியாகட்டும்னு நினைச்சிருந்தேன். ஆனா பட்டு பிறந்து பதினோறாம் நாளே போய் சேர்ந்துட்டா.
ப்ரியா போனதுக்கப்புறம் அவனை நினைக்க நினைக்க எனக்கு மனசே ஆறல.. அதுலயும் அவனுக்கு நான் எத்தனாவது ஆளோன்னு ப்ரியா சொன்னதை நினைக்கும்போதெல்லாம் மண்டைக்குள்ள மின்னல் வெட்டுற வலிவரும்.
இதுக்கு முன்ன எத்தனை பேரோட வாழ்க்கைல விளையாடிருந்தாலும்.. இனி எந்த பொண்ணையும் அவன் மனசால கூட நினைக்க கூடாதுனும்.. அவனால பாதிக்கப்பட்டதுல என் ப்ரியாதான் கடைசியா இருக்கனும்னு முடிவெடுத்து அவன் வேலை செய்யிற ஹாஸ்பிட்டலுக்கு போனேன்.. டியூட்டி டைம் முடிஞ்சி வீட்டுக்கு போய்டான்னு சொன்னாங்க.. அட்ரஸ் கண்டு பிடிச்சி வீட்டுக்கு போனேன்.
கூலா பொண்டாட்டி பிள்ளைகளோட உக்கார்ந்து சாப்டுட்டிருந்தான். எனக்கு வந்த ஆத்திரத்துக்கு எவ்வளோ நேரம் அடிச்சன்னே தெரியாது.. அவன் குழந்தைகள் அழ ஆரம்பிச்சிட்டாங்க.. அப்பவும் என் ஆத்திரம் அடங்கல, அவன் பொண்டாட்டி என் கால்ல விழுந்து கதறுனதுக்கப்புறம்தான் அடிக்கிறதையே நிறுத்தினேன்.
ஜாயின் ஃபேமலி போல.. கல்யாண வயசுல ஒரு பொண்ணும் வீட்ல இருந்தா. யாரு நீங்கன்னு என்னை விசாரிச்சாங்க.
வீடு புகுந்து இந்த அடி அடிச்சிருக்கேன்.. நான் யாருன்னு தெரியும் முன்ன போலீஸ்க்கு கால் பண்ணுங்கன்னேன்.. அவன் பயந்துட்டான்.
எங்கப்பாவை எதுக்கு அடிச்சிங்கன்னு அவன் பொண்ணு கேட்டுச்சி.. அந்த பாப்பாக்கு ஏழு இல்ல எட்டு வயசுதான் இருக்கும்.. அந்த நேரம் பாவம் புண்ணியம்லாம் என்னால பார்க்க முடியல.
உனக்கு குட் டச், பேட் டச் தெரியுமா பாப்பான்னு கேட்டேன்.. தெரியும்னு தலையாட்டுனா.. உங்கப்பா நிறைய பொண்ணுங்களை பேட் டச் செய்திருக்கார். அதனால ஒரு பொண்ணு செத்தே போய்டுச்சி.. இனி உங்கப்பாவை நம்பி அவர் பக்கத்துல போகாத.. உன்கிட்டயும் பேட் டச் பண்ணுவான்னு அந்த பச்ச மண்ணுகிட்ட மனசாட்சியே இல்லாம பேசினேன்.
அவன் பொண்டாட்டி தலைல அடிச்சிட்டு கதறுனாங்க.. ‘எங்கண்ணன் அப்படி இல்ல.. போலீஸ்க்கு கால் செய்து உன்னை என்ன செய்யிறேன் பாருன்னு அவன் தங்கை சபதம் போட்டா.
இல்ல.. இல்ல.. நான் அப்படி ஆள் கிடையாது.. ப்ரியாவோட மட்டும்தான் பழகுனேன்னு அலறுனான். அவனே ஒத்துக்கவும் அவன் தங்கை.. பொண்டாட்டி உள்பட வீட்ல இருக்கிற எல்லாருமே அதிர்வாவும்.. அசிங்கமாவும் பார்த்தாங்க.
இப்போ ஏழெட்டு மாசமா அவளோட பழகுறதை நிறுத்திட்டேன்னு நல்லவன் வேசம் போட்டான். திரும்பவும் ஆத்திரம் தீரும் வரை அடிச்சிட்டு.. இனி ப்ரியான்ற பேர் உன் வாயிலயிருந்து வந்தது.. உடம்புல உசிர் தங்காதுன்னு மிரட்டிட்டு..
அவன் பொண்டாட்டிகிட்ட, ப்ரியாகிட்ட பழகும்போது கல்யாணம் ஆகலன்னு சொல்லியிருக்கான். இவன் சொன்னதை நம்பி பொண்டாட்டியா வாழ்ந்திருக்கா அந்த ஏமாளி.
ஏமார்ந்ததை உணர்ந்ததும்.. நம்மளால ஒரு குடும்பம் கலையக் கூடாதுனு ரோசக்காரி உசிரையே விட்டுட்டான்னு ப்ரியாவை நினைச்சிட்டே திரும்பவும் அவனை அடிச்சேன். அவங்க வீட்ல யாரும் தடுக்கல. செத்துகித்து போய்ட போறான்னு அடிக்கிறதை நிறுத்திட்டு..
இப்படி புருசனோட வாழ்க்கை வேணுமான்னு யோசிச்சிக்கோங்க.. அப்படியும் புருசன் வேணும்னா பொண்ணு பிள்ளையை பெத்துருக்கிங்க.. அவன்கிட்டயிருந்து ஜாக்கிரதையா பார்த்துக்கோங்கன்னு திரும்பவும் சொன்னேன். எல்லார் தலையும் அவமானத்துல தொங்கிடுச்சி. செத்த பாம்மை இன்னும் எதுக்கு அடிச்சிட்டுன்னு கிளம்பி வந்துட்டேன்..” என முடித்தவனின் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது.
‘விடுங்க.. விடுங்க..” என ஆறுதல் சொல்லி தண்ணீர் கொடுத்தாள் ஆதிரை.
தண்ணீர் குடித்ததும் ரூபனின் மொபைல் அழைக்கவே எடுத்து கொடுத்தாள். அழைப்பை ஏற்றவன்.. ‘நைட் ஏழு மணிக்குங்களா.? சரிங்க சார் வந்துடறேன்.. மதியம் ஒரு மணிபோல கிளம்பிடறேன்..” என்றான்.
‘ஹாஹா.. பரவால்லைங்க சார்.. நீங்களே டைம் மாத்துறிங்கனா காரணமில்லாம இருக்காது.. நான் வந்துடறேன் சார்…” என இயல்பாய் சொல்லி இணைப்பை துண்டித்தவன் நேரம் பார்க்க பத்து மணி என்றது.
‘உனக்கு பசியெடுத்திருக்கும்..” என கதவை திறந்தவன்.. ‘வா சாப்பிடலாம்..” என்றான்.
‘நீங்க சாப்பிடுங்க.. நான் அப்புறம் சாப்டுக்கிறேன்..” என்றாள் வாடிய முகத்தோடு.
‘ப்ச்.. இன்னும் என்ன.?” என மீண்டும் உள்ளே வந்தான்.
‘பாவம் ப்ரியா..” என்றாள்.
‘பாவம்தான்.. நடந்து முடிஞ்சி ஒரு வருசமே ஆகப்போகுது விடு..” என்றான் தேறுதலாக.
குரலில் தேற்றம் என்றாலும் ரூபனின் முகம் வேதனையை காண்பித்தது. கதவு திறந்திருக்கவும்.. ‘ரூபா ஆதியை கூட்டிட்டு சாப்பிட வா..” என்றார் கனகா.
அன்னையின் குரலில் இயல்புக்கு வந்தவன்.. ‘இன்னும் பத்து நாள்ல ப்ரியாவோட நினைவுநாள் வருது.. எல்லாரும் அவ நினைப்புல ரொம்ப வேதனையோட இருக்காங்க.. நீயும் இப்படியிருக்காத.. நடந்தது இல்லன்னு ஆகிடாது.. ப்ரியா விசயம் உனக்கு தெரிந்ததா யாருக்கும் காட்டிக்காத..” என சிறு கண்டிப்போடு சொல்லி.. ‘வா..” என கைப்பிடித்து அழைத்து வந்தான்.
சாப்பிட அமர்ந்தவன்.. ‘பட்டு இன்னும் தூங்கறாளாமா.?”
ரூபன் குரல் கேட்டதும்.. ‘ப்பா.. பட்டூ..” என உள்ளிருந்து பதில் குரல் கொடுத்தாள்.. ‘வாடா பட்டு..” என தானும் குழந்தையை போலவே குரல் கொடுக்க.. ரூமிலிருந்து ஓடி வந்தாள் குழந்தை.
கணேசனும் பின்னோடு வர.. ‘பட்டு தூங்கலயாப்பா..?” என குழந்தையை தூக்கி மடியில் அமர்த்தினான்.
‘நீ ஹாஸ்பிட்டல் போன அடுத்த செகன்ட்டே முழிச்சிட்டா ரூபா..” என்றார் கணேசன்.
‘ப்பா.. ஊசி..” என கண்களை அகல விரித்தாள் பயந்த பாவனையில்.
‘அப்பாக்கு வலிக்கலடா.. பாரு..” என தன் ஆர்ம்சை காட்டினான் அதிரூபன். தங்களின் தனிமைக்காக குழந்தையிடம் இப்படி சொல்லியிருக்கிறார்கள் எனப்புரிந்த ஆதிரைக்கு தலை தன்போல் கவிழ்ந்தது.
மருமகள் சமாதனமாகவில்லை என்பதை முகவாட்டம் சொல்ல.. இவனும்தான் ஆதியிடமாவது உண்மையை சொன்னால் என்ன.? நம்மையும் சத்தியத்தால் கட்டிப்போட்டுட்டான் என வருந்திக் கொண்டிருக்க.. ‘ம்மா.. பசிக்குது டிபன் வை..” என்றான்.
கனகா.. ‘உன் பட்டுக்கு சாப்பாடு ஊட்டியே நான் களைச்சிப்போய்ட்டேன்.. உன் பொண்டாட்டியை வைக்க சொல்லு..”
சிரித்தவன்.. ‘நீங்க எல்லாரும் சாப்பிடிங்களாமா..?” என கேட்டவாறு தானே இட்லி வைத்துக்கொள்ள.. ஆதிரை சட்னி சாம்பார் வைத்தாள்.