“அவன்கிட்ட பேசும் போது கேட்டுகிட்டு தான இருந்த..? மறுபடியும் என்ன கேள்வி வேண்டி கிடக்கு..?” என்றார் மேகநாதன்.
“இது தான் விஷயம்ன்னா நீங்க வெற்றிகிட்ட சொல்லிட்டே செஞ்சிருக்கலாம். தேவையில்லாத மன உளைச்சல் ஆகியிருக்காது. அவனும் உங்கமேல கோபப்பட்டிருக்க மாட்டான்..” என்றார் பொன்னி.
“கோபப்பட்டிருக்க மாட்டான்..! காரியத்தை மொத்தமா கெடுத்திருப்பான். இதையெல்லாம் முன்னாடியே அவன்கிட்ட சொல்லியிருந்தா, அந்தாளுக்கு பயந்து எதுக்காக நாம இப்படி பண்ணனும்..?அப்படி இப்படின்னு பேசி, நீதி, நேர்மை பேசி இந்நேரம் அந்த ராஜேஷ் கூட நேரா மோதியிருப்பான். அந்த ஆளும் ஏதாவது டிராமா பண்ணி அந்த பொண்ணை அவன் நினைக்கிற மாதிரி மாப்பிள்ளைக்குக் குடுத்திருப்பான். சொன்னா நீ நம்ப மாட்ட, வெற்றிக்கு சில கெட்ட பழக்கவழக்கங்கள் இருக்குன்னு நான் பொய் சொன்னதுக்கு அப்பறம் தான், அவன் பொண்ணுக் குடுக்கவே சம்மதிச்சான்…” என்றார் மேகநாதன்.
“இந்த உலகத்துல ஆதாயம் இல்லாம எதுவுமே நடக்குறது கிடையாது. பணம் ஒரு மனுஷனை எப்படி வேணும்ன்னாலும் ஆட்டி வைக்கும். ராஜேஷும் அதுக்கு விதி விலக்கு இல்லை. பணத்துக்கு பின்னாடி போக ஆரம்பிச்சுட்டா, போற வழியைப் பத்தியெல்லாம் கவலையில்லை…” என்றார் மேகநாதன்.
“இதெல்லாம் வினிதாவுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும்..? அவங்க அப்படியே மனசு உடைஞ்சு போய்ட மாட்டாங்க..” என்று பொன்னி ஆதங்கமான குரலில் சொல்ல,
“இனி எல்லாத்தையும் உன் பையன் பார்த்துப்பான். கல்யாணத்துக்கு முன்னாடி அவங்களைப் பார்த்து இவன் பேசினா மொத்த காரியமும் கெட்டுப் போய்டும். லேட் பண்ணினா, உன் மகன் ரொம்ப நல்லவன்னு அவங்களுக்குத் தெரிஞ்சிடவும் வாய்ப்பு இருக்கு. அதான் எல்லாத்தையும் அவசர கோலத்துல பண்ற மாதிரி ஆகிடுச்சு. ஆனா, கல்யாண முடிஞ்ச நிமிஷம் அதையும் கெடுத்துட்டான் உன் மகன். ஆனா, நானும் அதைத் தான் எதிர்பார்த்தேன்..” என்றார் மேகநாதன்.
“நீங்க சொல்றதெல்லாம் சரிதாங்க..! இந்த அளவுக்கு போன அந்த ஆளுனால வெற்றிக்கு ஏதாவது ஆபத்து வந்துட்டா..?” என்று கேட்கும் போதே, பொன்னியின் குரலில் அப்பட்டமான பயம் தெரிந்தது.
“அப்படி அவன் போக மாட்டான். வெற்றி வீட்டோட மாப்பிள்ளையா போனா, அவங்களுக்குப் பாதுகாப்பா இருக்கும்ன்னு தான் நினைச்சேன். அது நடக்கலை. சரி இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை, மருமக பொண்ணு அவன்கூடத் தான இருக்கு. எல்லாத்தையும் அவன் சரி கட்டிடுவான்..!” என்றார் மேகநாதன்.
இங்கே இவர்கள் பேசிக் கொண்டிருக்க, அங்கே வெற்றிக்கு என்ன செய்வதென்று எதுவும் பிடிபடவில்லை. தந்தையின் அவசரத்திற்குப் பின்னால் இப்படி ஒரு காரணத்தை அவன் எதிர்பார்க்கவில்லை.
“இப்ப என்ன செய்ய போற வெற்றி..?” என்றது அவன் மனம்.
“எனக்கு மத்ததைப் பத்தியெல்லாம் கவலை இல்லை. வர்ணிகா இனி டிவேர்ஸ் பத்தி பேசக் கூடாது. என்கூடவே இருக்கணும். அதுக்கு என்ன பண்ணனும்ன்னு தான் யோசிச்சுகிட்டே இருக்கேன்..” என்றான் மனதிடம்.
“பேசாம அவளை ரேப் பண்ணிடு..” என்றது மனம்.
“நான் காரித் துப்புறதுக்குள்ள போய்டு. கட்டுன பொண்டாட்டியை ரேப் பண்ண சொல்லி ஐடியா குடுக்குற நீ..! இதை நான் வேற வழியில டீல் பண்ணிக்கிறேன்..” என்றான்.
“கிழிச்ச…! நீ ரெண்டு நாளா என்ன பண்றன்னு நானும் பார்த்துட்டு தான இருக்கேன். அந்த பொண்ணை ஒன்னு ஓரக்கண்ணுல பார்க்குற. இல்லை பார்க்காத மாதிரி பார்க்குற. இதைத் தவிர நீ வேற எதையும் கிழிக்கலை..” என்று அவனின் மனசாட்சி, மனமே இல்லாமல் அவன் மானத்தை வாங்க,
“சரி..சரி..இதெல்லாமா வெளிய சொல்லுவாங்க..!” என்றவன் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.
“ஆபீசர் சார் சிரிக்கிறப்போ ரொம்ப அழகா இருக்கார்ல..” என்றாள் லோகா.
“நீ எப்போ பார்த்த..?” என்றாள் ஜெர்சி.
“அங்க பாருடி..! என்ன ஒரு மேனரிசம்.. என்ன ஒரு ஸ்டைல்… என்ன ஒரு அழகான சிரிப்பு..” என்று அவள் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்க,
“உனக்குப் பைத்தியம் முத்திடுச்சு..” என்று கிண்டலாய் சிரித்த வர்ணி, எதேச்சையாய் வெற்றியைப் பார்த்து வைக்க, வெளியே மழையை ரசித்துக் கொண்டிருந்தவனின் உருவம் அப்படியே அவள் மனதில் பதிந்து போனதோ என்னவோ..? மற்ற பிரச்சனைகள் மறந்து, தன்னை மறந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா..” என்று கேட்ட அவனின் குரல் தான் எத்தனை நாள் வர்ணிகாவை தூங்க விடாமல் செய்திருக்கிறது. ஒரு பெண்ணைக் கவர உண்மையான காதல் வழிந்தோடும் வார்த்தைகள் போதும் என்று நிரூபித்தவன் ஆயிற்றே.
மீண்டும் பார்வை வந்த பிறகு கூட, திருமண ஆல்பத்தில் கூட அவனைப் பார்த்து விடக் கூடாது என்று வைராக்கியமாய் இருந்தவளை, அவனின் அந்த குரல் தானே பார்க்கச் சொல்லி தூண்டியது.
“என்னை வேண்டாம்ன்னு சொன்னவனோட முகம் எனக்குத் தெரிய வேண்டாம்..” என்று வெறுப்பின் சாயலை பூசிக் கொண்டு ஒவ்வொரு போட்டோவையும் ஒருமணி நேரம் பார்த்த கதை அவளுக்குத் தானே தெரியும்.
வீட்டில் பார்த்த, அதுவும் முன் பின் பேசிடாத பெண்ணின் மீது அப்படி ஒரு காதலைக் காட்ட முடியுமா என்றால், முடியும் என்று செய்து காட்டியிருந்தான் வெற்றி. ஒவ்வொரு புகைப்படத்திலும் அவளை காதலுடன் நோக்கும் வெற்றி தான் அவளுக்குத் தெரிந்தான்.
முதல் பார்வையிலேயே அவனின் மனதிற்குள் சென்றதைப் பற்றி அறியாமல் பல இரவுகளை தூங்காமல் கழித்தவள் ஆயிற்றே.
இப்போது ஒவ்வொன்றாய் கண் முன் வர, சிந்தனையில் இருந்தவளின் கண்கள் மட்டும் வெற்றியை தான் பார்த்துக் கொண்டிருந்தது.
“ஹலோ..!!” என்று அவன் சொடக்கிடும் வரை வேறு உலகத்தில் இருந்தவள், வெற்றியின் அழைப்பில் சுயத்திற்கு திரும்பினாள். உடனே கோபத்தை பூசிக் கொண்டாள்.
“என்ன..?” என்றாள்.
“என்ன? வச்ச கண்ணு வாங்காம புருஷனைப் பார்த்துட்டு இருக்க..? கல்யாணத்துல கூட இப்படி பார்க்கலை..” என்றான் வெற்றி குறும்பு புன்னகையுடன்.
“அப்ப பார்த்திருந்தா, இப்போ இந்த பிரச்சனையே இல்லை..” என்று அவள் கோபத்துடன் முனங்க,
“ஏன்..? என்னைய பார்க்கக் கூடாதுன்னு உன்னைய யாரும் கட்டி வச்சிருந்தாங்களா..? வாட்ட சாட்டமா உன் பக்கத்துல தான் உட்கார்ந்திருந்தேன். அப்பல்லாம் வெட்கப்பட்டு பார்க்காம இருந்துட்டு, இப்ப இப்படி பார்க்குற..? கேட்டா, என்மேல கோபம்ன்னு சொல்லுவா..? ஆனா, உன் கண்ணு வேற செய்தி சொல்லுதே..?” என்றான்.
அவன் பேசுவது அவளுக்கு சுத்தமாகப் புரியவில்லை. எனக்குப் பார்வையில்லாம இருந்ததைத் தான் சொல்லிக் காட்டி நக்கலா பேசிட்டு இருக்கானா..? இல்லை விஷயம் வேற எதுவுமா..?” என்றவளுக்கு எதுவும் புரியவில்லை.
“உன்னை எனக்குப் பிடிக்கலைன்றது தான் உண்மை..!” என்றாள் பட்டென்று.
“அன்னைக்கு கல்யாண மண்டபத்துல நான் கேட்டது நியாபகம் இருக்கா..?” என்றான்.
“அதை எப்படிடா மறக்க முடியும். மறக்கக் கூடிய குரலா அது…?” என்று நினைத்தவள்,
“எனக்கு எதுவும் நியாபகம் இல்லை..” என்றாள் எரிச்சலுடன்.
“ஆனா, எனக்கு நல்லா நியாபகம் இருக்கு. என்னைய பிடிச்சிருக்கான்னு நான் கேட்ட கேள்விக்கு, உன்னோட முகம் ஜிவ்வுன்னு சிவந்தது முதற்கொண்டு, நீ என்னைப் நிமிர்ந்து பார்க்காமயே, பிடிச்சிருக்குன்னு சொன்ன அந்த நிமிஷம் இப்ப வரைக்கும் எனக்கு நியாபகம் இருக்கு..” என்றான் ஒரு மாதிரியான குரலில்.
அவளுக்கு இதயம் படபடவென்று அடித்துக் கொள்ள, எதுவும் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“சொல்லப் போனா, இத்தனை நாள் நான் காத்திருக்கிறதுக்கு ஒரே காரணம் நீ அன்னைக்கு சொன்ன, பிடிச்சிருக்கு தான். அது என்னைக்கா இருந்தாலும் உன்னை என்கிட்டே கொண்டு வந்து சேர்க்கும்ன்னு நான் ஸ்ட்ராங்கா நம்புனேன். அது தான் இப்போ நடந்திருக்கு..” என்றான்.
“நான் சைன் பண்ண மாட்டேன்னு சொன்னதா எனக்கு ஞாபகம்..” என்றான் அவனும் அதே குரலில்.
“எனக்கு உன் கூட சேர்ந்து வாழ விருப்பமில்லை..! சூடு, சொரணை இருக்குற எந்த மனுஷனா இருந்தாலும், சைன் பண்ணிட்டு போயிட்டே இருப்பான்..” என்றாள் கோபமாக.
“நீ சொன்ன சூடு,சொரணை, மான ரோஷம் எல்லாம் இருந்ததால தான், வீட்டோட மாப்பிள்ளையா இருக்க முடியாதுன்னு சொல்லிட்டு வந்தவன் நான். ஆனா, இன்னைக்கு அந்த சூடு, சொரணை தான் உன் கூட சேர்ந்து வாழ தடைன்னா, அது எனக்கு இல்லைன்னே வச்சுக்க. பொண்டாட்டிகிட்ட மான,ரோஷம் பார்த்தா ஆகுமா..?பொண்டாட்டிகிட்ட தோற்கறவன் தான், வாழ்க்கையில ஜெயிக்க முடியும்ன்னு படிச்சதா ஞாபகம்..”என்றவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் சென்று விட்டான்.
“உங்க ரொமான்ஸ் சீன் எல்லாம் முடிஞ்சதா சார்..” என்றபடி ஜெர்சியும், லோகாவும் உள்ளே வந்தனர்.
அவன் பேசிவிட்டு சென்ற பிறகும் கூட வர்ணிகாவிற்கு அதிர்ச்சி போகவில்லை. அவன் சொன்ன வீட்டோடு மாப்பிள்ளை விஷயம் அவளுக்கும் அதிர்ச்சி தான். சில நிமிடங்கள் அவள் மூளைக்கு எதுவும் பிடிபடவில்லை. அன்று நடந்த ஒவ்வொன்றையும் யோசித்துப் பார்த்தவளுக்கு எங்கோ தப்பு நடந்திருப்பதைப் போல் தோன்ற, வேகமாய் போனை எடுத்து அவள் அம்மா வினிதாவிற்கு அழைத்தாள். அவள் நேரம் சுத்தமாக டவர் இல்லை.
“அவன் இன்னேர வரைக்கும் பேசுனான். ஏன் நம்ம செல்லுக்கு மட்டும் டவர் கிடைக்கலை…?” என்று நொந்து போனாள்.
“இப்ப எதுக்குடி இவ்வளவு டென்ஷன் ஆகுற..?” என்றாள் ஜெர்சி.
“நெட்வொர்க் இல்லை. கடுப்பாகுது..” என்றாள்.
“இதுக்கேன் டென்ஷன் ஆகுற. இந்த என்னோட மொபைல்ல இருந்து பேசு..” என்றாள் ஜெர்சி.
“ஆமால்ல..” என்று தலையில் அடித்தவள் ஜெர்சியின் போனை வாங்கி வினிதாவிற்கு முயற்சி செய்தாள். அவளுடைய போனில் இருந்தும் போகவில்லை. அங்கிருந்த யாரின் செல்லிலும் நெட்வொர்க் இல்லை.
“அதெப்படி..? ஆபீசர் சார் மட்டும் பேசுனார். நமக்கு லைன் கிடைக்கல..?” என்றனர் அனைவரும் ஒன்று போல்.
“இங்க BSNL மட்டும் தான் எடுக்கும். அதுவே பல சமயம் மக்கர் பண்ணும்..இந்தாங்க இதுல பேசுங்க..” என்றான் பிகாரி.
“தேங்க்ஸ்..” என்றவள், வினிதாவிற்கு அழைத்து பேச ஆரம்பித்தாள். பேசிக்கொண்டிருந்தவளின் முகம் மாறிக் கொண்டிருக்க, அருகில் இருந்த ஜெர்சிக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று தள்ளி நின்று அவள் பேசியது பாதி காதில் விழுந்தது. பாதி கேட்கவில்லை. பேசிவிட்டு அமைதியான முகத்துடன் வந்தவள், பிகாரியிடம் போனை நீட்டிவிட்டு, யோசனையுடன் சென்றாள்.
நேரம் மதியத்தை தொட்டிருந்தது..
மழை கொஞ்சம் குறைந்திருந்தது. அந்த பகல் வேளையிலும் அந்த காடு லேசான இருள் சூழ்ந்து தான் இருந்தது. கரிய மேகங்கள் அன்று சூரியனை எழ விடவேயில்லை.
“பிகாரி சார்..! எங்க வெற்றி சாரை காணோம்..?” என்றாள் ஜெர்சி.
“அது உங்களையெல்லாம் பக்கத்துல இருக்குற வில்லேஜ்க்கு கொண்டு போய் விடனும்ன்னு சொல்லிட்டு இருந்தார். அதுக்கு ஏற்பாடு பண்ணத் தான் போயிருப்பார்..” என்றான் பிகாரி.
“சாரோட ஜீப்பே இருக்கே..?” என்றனர்.
“இதுல எப்படி இத்தனை பேர் போவிங்க..? இங்க ரெகுலரா ஜீப் ஓட்றவங்க இருக்காங்க. அவங்ககிட்ட சொன்னா, அவங்களே உங்களை அங்க பத்திரமா விட்ருவாங்க. இடையில ஒரு மரம் விழுந்திருந்தது. அதை அப்புறப்படுத்தியாச்சு..” என்றான் பிகாரி.
“சார், இங்கவே தான இருந்தார். ஆனா, எப்படி எல்லா வேலையும் நடந்திருக்கு..?” என்றாள் ஜெர்சி.
“சார் தான் இங்க பெரிய ஆபீசர். அவர் ஆர்டர் போட்டா வேலை செய்ய அத்தனை பேர் இருக்காங்க. அவரை நீங்க என்ன நினைச்சிங்க..?” என்றான் பிகாரி.
“ஆங்..! அதெல்லாம் ஒண்ணுமில்லை..” என்ற அனைவருக்கும் அங்கிருந்து செல்ல வேண்டும் என்பதே கொஞ்சம் கவலையாக இருந்தது.
இவ்வளவு தூரம் வந்துட்டு எதையுமே பார்த்து ரசிக்காம கிளம்புறதை நினைச்சா தான் மனசுக்கு வருத்தமா இருக்கு. இரண்டு நாள் கழிச்சு தான் போக முடியும்ன்னு சார் சொன்னார். இப்ப என்னடான்னா திடீர்ன்னு இப்படி சொல்றிங்க..?” என்றாள் ஜெர்சி.
அதற்கான காரணம் வர்ணிகாவிற்கு தெரிந்திருந்தது. அவ்வளவு சிக்கலான சூழ்நிலையிலும் அவர்களை அனுப்ப அவன் ஏற்பாடு செய்வது எதற்கென்று அவளுக்குத் தெரியாமலா இருக்கும்..?
“நீங்க எப்படியும் நாளைக்கு காலையில கிளம்புற மாதிரி தான் இருக்கும்…” என்று பிகாரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பாதி நனைந்து போய் வந்தான் வெற்றி.
அவனைப் பார்த்த வர்ணிகாவின் மனதிற்குள் புயல் வீசத் தொடங்கியது.
“உங்க கூட வந்த பாய்ஸ் யாரையும் காணோமே..? எங்க..?” என்றான் வெற்றி.
“இப்போதைக்கு வேற எதுவும் செய்ய முடியாது. நீங்களும் போய் தூங்குறதுன்னா தூங்குங்க..” என்றான்.
“இந்த பகல் நேரத்துலையா..?” என்றனர்.
“இதைப் பார்த்தா பகல் நேரம் மாதிரியா இருக்கு..?” என்றான்.
“அது என்னவோ உண்மை தான் சார். ஆனா, பசியோட தூக்கம் வராதே..” என்றாள் ஜெர்சி.
“சமைச்சு சாப்பிட எல்லாமே கொண்டு வந்திருப்பிங்களே.. இங்க தான் சின்ன கிட்சன் இருக்கே. நீங்க தாராளமா சமைச்சிருக்கலாம்..” என்றான் வெற்றி.
“அதுக்கு சமைக்கத் தெரிஞ்சிருக்கணும் வெற்றி சார். நாங்க எல்லாரும் லிட்டில் பிரின்சஸ். எங்க கூட வந்தாங்களே பாய்ஸ், அவங்க தான் சமைச்சுத் தருவாங்க..” என்றாள் லோகா.
“சுத்தம், விளங்கிடும்..!” என்ற வெற்றி,
“கமான் பிகாரி..!” என்று அவனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றவன், கடகடவென்று சமைக்கத் தொடங்கினான்.
பேண்ட்-டீ-ஷேர்ட் சகிதம் அவன் நின்று சமைப்பதை பார்ப்பதற்கே பாந்தமாய் இருந்தது.
“வர்ணி..! சும்மா சொல்லக் கூடாது, உன் ஆள் செம்ம மேன்லி. கொஞ்சம் கூட அலட்டல் இல்லை. ஆனா, கோபம் வந்தா எரிமலை எப்படி பொறுக்கும் பேஸ்கட் தான்..” என்றாள் ஜெர்சி.
“ஹலோ.. மேடம்..! இப்ப சார் இவ்வளவு அக்கறையா சமைக்கிறது எங்களுக்காகவா..? நெவர்..! அவர் பொண்டாட்டி பசியோட இருக்கக் கூடாதுன்ற ஒரே காரணத்துக்காகத் தான். அதான் சும்மா டெஸ்ட் பண்ணி பார்த்தோம். சும்மா சொல்லக் கூடாது. தலைவர் உடனே களத்துல இறங்கிட்டார்..” என்றாள் லோகா.
வர்ணிகாவிற்கும் அது தெரிந்து தான் இருந்தது. இது மட்டுமல்ல, ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் மேல் அக்கறை எடுத்துக் கொண்டது தன்னுடன் வந்ததால் தான் என்று அவளுக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது.
அவளின் மனதில் இருந்த, அவளின் கோபத்திற்கு காரணமான காரணமும் இப்போது ஆட்டம் கண்டிருந்தது. அவனிடம் பேசலாமா, வேண்டாமா..? எப்படி பேச்சை ஆரம்பிப்பது.. இப்படி பல தயக்கங்கள் அவளுக்குள் இருந்தது. ஒருவர் மேல் கொண்ட கோபத்தை, வெறுப்பை விலக்கிவிட்டு பார்த்தால், அவர்களின் மேல் உள்ள நேசம், அவர்களின் நல்ல குணங்கள் தெரியும் என்பர். இப்போது வர்ணிகாவும் அந்த நிலைமையில் தான் இருந்தாள். அவளுக்கு சில விஷயங்களைப் பேசி தெளிவாக்கிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருந்தது. அதே சமயம் கொஞ்சம் பிடிவாதமும் இருந்தது.
சமைத்துக் கொண்டே இவளைத் திரும்பிப் பார்த்தவனுக்கும், அவள் யோசனையில் இருப்பது நன்றாகத் தெரிந்தது.
“இவ வர வர என்னை ரொம்ப ஆட்டி வைக்கிறா..?எங்க இருந்தாலும் நம்ம கண்ணு இவ இருக்குற பக்கம் தான் போகுது. நல்ல மப்பும், மந்தாரமுமா இருந்துகிட்டு என் உசுர வாங்குறா..?” என்று மனதிற்குள் கடிந்து கொண்டவன், தன்னை நினைத்து தானே சிரித்துக் கொண்டான்.
அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த ஜெர்சிக்கும், லோகாவிற்கும் அவர்களின் நாடகம் புரிந்தது.
“குக்கிங் இஸ் ஓவர். விசில் அடங்குனதுமே நீங்க சாப்பிடலாம்..” என்றான் வெற்றி.
“ஆமா சார்.. நாங்க எல்லாரும் அங்க போய் சாப்பிட்டுக்கிறோம்..” என்றான்.
“ஓகே..” என்றவன் குளிக்க சென்று விட்டான்.
“வர்ணி..சார் குளிக்க போய்ட்டார் போல. அவர் வந்ததும் நீ வரியா..?” என்றவர்கள், அவளின் பதிலை எதிர்பார்க்காமல் சென்று விட்டனர்.
அவர்கள் எதற்காக இப்படி செய்கிறார்கள் என்று புரியாத அளவிற்கு வர்ணி ஒன்றும் முட்டாள் இல்லையே.
அவளுக்கும் அவனிடம் பேச வேண்டிய விஷயம் பல இருந்தது. என்ன பேச வேண்டும் என்பதை ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, குளித்துவிட்டு வந்தவனைப் பார்த்ததும் அப்படியே எல்லாமே மறந்து, மூச்சடைத்துப் போனது.
அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தும், எதுவுமே தெரியாதவன் போல் நடந்து கொண்டிருந்தான் வெற்றி. அதில் ஒரு அல்ப சந்தோசம் அவனுக்கு.
“ரொம்ப ஓவரா போகாதடா வெற்றி..” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன்,
“நீ சாப்பிடலையா..?” என்றான் கன அக்கறையாய்.
“எனக்குப் பசியில்லை..” என்றாள்.
“முகத்தைப் பார்த்தா அப்படி தெரியலையே. வெளிய நல்ல மழைக்காத்து. சூடா சாப்பாடு. அப்படியே அள்ளுமே..” என்றான் ரசனையுடன்.
“சாப்பாட்டைப் பத்தி பேசுற மாதிரி தெரியலையே..?” என்றாள் முறைத்துக் கொண்டு.
“உனக்கு அந்த அளவுக்காவுது பல்ப் எறிஞ்சா சரிதான்..” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் வெற்றி.
“என்னது..?
“நான் ஒன்னும் சொல்லலையே..?” என்றான்.
“எனக்கு கொஞ்சம் பேசணும்..” என்றாள்.
“பேசலாமே..!” என்றவன் தட்டில் சுட சுட சாதத்தை போட்டுக் கொண்டு வர, அவளுக்கு பேச்செல்லாம் மறந்து போனது.
“ஒருவேளை நான் ஊட்டிவிடனும்ன்னு எதிர்பார்க்கிறியா என்ன..?” என்றான் சிரிப்புடன்.
“நினைப்புத்தான்..” என்றாள் பட்டென்று.
“நினைப்புத்தான். எல்லாம் நினைப்போட போகாம இருந்தா சரி..” என்றவன், தட்டை அவள் கையில் திணித்து விட்டு சென்றான். அவன் சொன்னது போல, அந்த சூடான சாதம் அப்போதைக்கு சொர்க்கமாக இருந்தது அவளுக்கு.
என்னதான் கோபங்கள், குழப்பங்கள் இருந்தாலும் அதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் வர்ணிகா. கைகளை கட்டிக் கொண்டு சுவரில் சாய்ந்தபடி அவன் அவளையே ரசித்து பார்த்துக் கொண்டிருக்க, அதை அவள் கவனித்ததாகவே தெரியவில்லை.