வர்ணிகா வாயைத் திறந்து பேசுவாள் என்று வெற்றியும் காத்திருக்க, அவளானால் வெளியே சொட்டிக் கொண்டிருந்த அந்த மழை நீரை வெறித்துக் கொண்டிருந்தாள்.
“பேசனும்ன்னு சொல்லிட்டு இப்படி அமைதியா இருந்தா எப்படி நிகா..?” என்றான் அவளின் மௌனத்தை கலைக்கும் பொருட்டு.
திரும்பி அவனை ஆழ்ந்து பார்த்தவள்,
“எங்கப்பாவைப் பத்தி என்னை நினைக்கிறிங்க..?” என்றாள் எடுத்த எடுப்பில்.
‘கொன்னு புதைக்கணும் போல இருக்கு..’ என்று மனதில் நினைத்தவன்,
“அவரைப் பத்தி நினைக்க என்ன இருக்கு..?” என்றான் மேம்போக்காய்.
“அவர் என்னோட சொந்த அப்பா கிடையாது. இன்னமும் சொல்லப் போனா, அவர் என் அத்தையோட கணவர்…” என்றாள்.
‘உண்மை என்னன்னு எனக்குத் தெரிஞ்சு பல மணி நேரம் ஆகுது வர்ணி’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவன்,
“நீ என்ன சொல்ற நிகா..?” என்று போலியான அதிர்ச்சியுடன் கேட்டான். அப்போது தான் தெரிந்ததைப் போல் காட்டிக் கொண்டான்.
“ஆமா, என்னைப் பெத்தவங்க நான் சின்ன பிள்ளையா இருக்கும் போதே இறந்துட்டாங்க. வினிதா அம்மாவும் தாத்தாவும் தான் என்னை வளர்த்தாங்க…” என்றாள்.
“ஹோ..!” என்றான்.
“எனக்கு வினிதா அம்மான்னா உயிரு. அவங்களுக்காக நான் எதையும் செய்வேன்..” என்றாள்.
“சரி தான்…” என்றான்.
“அதே மாதிரி தான் ஸ்ருதியும். அவளுக்கு நான் அவளோட கூடப் பிறந்தா அக்கா இல்லைன்ற விஷயம் கூட அவளுக்குத் தெரியாது. அந்த அளவுக்கு அவளுக்கு என் மேல பாசம். எனக்கும் தான்..” என்றாள்.
“இதெல்லாம் இப்ப எதுக்கு சொல்ற..?” என்றான்.
“ஒருத்தவங்க நம்மகிட்ட அப்பா பாசத்தை உண்மையா காட்றாங்களா..? இல்லை நடிக்கிறாங்களான்னு தெரியாத அளவுக்கு நான் முட்டாளா இருப்பேன்னு நீங்க நம்புறிங்களா..?” என்றாள் உள்ளிருந்து வந்த குரலில்.
“வர்ணி..!” என்று அதிர்ந்து போனான் வெற்றி. அவளுக்கு எதுவும் தெரியாது என்று அவன் நினைத்திருக்க, அவள் பேசுவதைக் கேட்டவனுக்கு அதிர்ச்சி தான்.
“ஆமா, டாடி என் மேல பொய்யான பாசத்தை தான் காட்டுறார்ன்னு எனக்கு நல்லாவே தெரியும். அது தெரியாத மாதிரியே நான் இருக்குறதுக்கு காரணம் வினிதாம்மா தான். எனக்கு நடந்த விபத்துக்குக் கூட டாடி தான் காரணம்ன்னு எனக்குத் தெரியும். சொத்து முழுசா என் பேர்ல இருக்குறதும், அதுல இருந்து ஏதாவது செய்யனும்ன்னா, எனக்கு புருஷனா வரப்போறவனோட தயவு அவருக்குத் தேவைப்படுறதும் எனக்குத் தெரியும்..” என்றாள் வர்ணிகா.
அவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருப்பது தெரியாமல் பேசிக் கொண்டே சென்றாள்.
பல காரணங்களை சொல்லி, எனக்கு அவசர அவசரமா கல்யாண ஏற்பாடு பண்ணினார். வினிதாம்மாவை வச்சே என்னை காம்பரமைஸ் பண்ணினார். அதுக்கும் நான் சம்மதிக்கலைன்னு தெரிஞ்சு, ஒரு கட்டத்துல நேரடியாவே என்கிட்டே அவர் முகத்தை காட்ட ஆரம்பிச்சார். வினிதா அம்மாவையும், ஸ்ருதியையும் அவர் பகடைக் காயா பயன்படுத்திகிட்டார். அம்மாவுக்கு அவர் மேல் கொள்ளைப் பிரியம். ஸ்ருதிக்கு அவர் தான் ரோல் மாடல். அவங்களோட நம்பிக்கை என்னால சிதைஞ்சு போறதை நான் விரும்பலை. எனக்கு தான் அப்பா இல்லை. ஸ்ருதி, அப்பா இருந்தும் இல்லாம வளர்ந்திட கூடாதுன்னு நினைச்சேன். அதான் அவர் பார்த்த உங்களை நான் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்.
நடந்த எல்லா விஷயத்திலும் எனக்கிருந்த ஒரே ஆறுதல் நீங்க தான். உங்களை நான் பார்த்ததில்லை. முன்ன பின்ன பேசினதில்லை. டாடி அதுக்கு அனுமதிக்கவும் இல்லை. அவர் உங்களை வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சொன்னதோ, இல்லை உங்ககிட்ட போட்ட கண்டிஷனோ இது எதுவுமே தெரியாம, கீ குடுத்தா நடக்குற பொம்மை மாதிரி தான் இருந்தது என்னோட நிலைமை.
முதல்ல உங்க மேல பெருசா அபிப்ராயம் எதுவும் இல்லை. அவர் பார்த்த மாப்பிள்ளை அவரை மாதிரியே தான் பார்த்திருப்பார்ன்னு நினைச்சேன். ஆனா, அன்னைக்கு வந்த உடனே, நீங்க என்னைத் தான் பார்க்க வந்திருக்கிங்கன்னு ஸ்ருதி சொன்ன உடனே, எனக்கு உள்ளுக்குள்ள இனம் புரியாத ஒரு சந்தோசம். நீங்க என்கிட்டே வந்து பேசவும் அந்த சந்தோசம் இன்னும் கூடித் தான் போனது. எவ்வளவு பணம் இருந்தாலும், எதையும் செய்ய முடியாம, நமக்கு நெருக்கமா யாரும் இல்லாம இருக்குற அந்த வேதனை வேற யாருக்கும் தெரியாது. அப்படி இருந்த என்னோட வாழ்க்கையில வந்த முதல் ஆண் நீங்க தான்.
டாடி, அவர் ஆதாயத்திற்கு தான் இந்த கல்யாணத்தை நடத்துறார்ன்னு தெரிஞ்சாலும், உங்க குரலைக் கேட்ட அந்த நிமிஷத்தில் இருந்து எனக்குள்ள ஒரு புது தைரியம். அந்த குரலும் அப்படியே மனசுல பதிஞ்சு போய்டுச்சு. உங்களைப் பார்க்க முடியலைன்ற ஏக்கம் என்னோட மனசுல பெரிய தவிப்பாவே மாறிப் போய்டுச்சு. ஆனா, ஸ்ருதி உங்களைப் பத்தி சொன்னதையெல்லாம் வச்சு, எனக்குள்ள நானே ஒரு கற்பனையான உருவத்தை எற்படுத்திகிட்டேன்.. அந்த சந்தோசம் எல்லாமே கொஞ்ச நேரம் வரைக்கும் தான் எனக்கு நிலைச்சது. எப்போ நீங்க டாடி கண்டிஷனுக்கு மாட்டேன்னு சொல்லி சண்டை போட்டிங்களோ… அப்பவே என்னோட சந்தோசம் இருந்த இடம் தெரியாம போய்டுச்சு.
பார்வையில்லாத காரணத்துக்காகத் தான் என்னை வேண்டாம்ன்னு சொல்றிங்கன்னு, நான் தப்பா புரிஞ்சுகிட்டேன்..” என்றாள்.
“எனக்கு அப்போ அந்த விஷயமே தெரியாது நிகா..” என்றான் தன்னிலை விளக்கத்துடன்.
“அதுவும் எனக்கு இப்போ தெரிஞ்சிடுச்சு..! உங்களுக்கு ஒன்னு தெரியுமா..? உங்கமேல இருந்த கோபமெல்லாம் கொஞ்ச நாள் தான் இருந்தது. உங்களைப் பார்க்கணும் அப்படின்ற ஒரு காரணத்துக்காகவே, நான் அந்த ஆப்ரேஷனை சீக்கிரம் பண்ணிகிட்டேன். என்னதான் வெறுப்பா ஒரு முக மூடி போட்டிருந்தாலும், கல்யாண ஆல்பத்தை ஒரு நாள் கூட பார்க்காம நான் தூங்கினதும் கிடையாது. விடியல்ல எந்திரிச்சதும் கிடையாது..” என்றாள்.
“நிகா..” என்றவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவன் ஒன்று நினைத்திருக்க, அங்கே ஒருத்தி அவன் நினைவிலேயே குடும்பம் நடத்திக் கொண்டிருந்தது சொல்ல முடியாத தவிப்பு என்றால், அதை அவள் வாயால் கேட்பது அத்தனை பரவசமாய் இருந்தது.
“டைவேர்ஸ் நோட்டிஸ்..” என்றான் கேள்வியாய்.
“உங்களை விவாகரத்து பண்ணனும்ன்றது டாடியோட ஆர்டர். எனக்கு மனசு இல்லைன்னாலும், உங்கமேல வெறுப்பா இருக்கேன்னு என்னை நானே நம்பிகிட்டு சைன் பண்ணேன்..ஆனா, அதுக்கப்பறம் எனக்கு உயிர் போன மாதிரி ஒரு வலி. ஏதோ அப்பவே மூச்சை அடைக்கிற மாதிரி. வாழ்க்கையில இனி எதுவுமே இல்லைன்னு தோணுச்சு. முதல் தடவையா டாடிகிட்ட சண்டை கூட போட்டேன். அதுக்கு அவர் சொன்ன பதில் தான் என்னை அப்படியே வாயடைக்க வச்சது..” என்று நிறுத்தினாள்.
“அப்படி என்ன சொன்னார்..?” என்றான் வெற்றி.
“உங்க தாத்தாவை அனுப்பின இடத்துக்கு, என் பொண்டாட்டியையும், மகளையும் அனுப்ப ஒரு நிமிஷம் போதும்ன்னு சொன்னார்..” என்றாள்.
“எனக்கு வேற வழியில்லை. எனக்கு வழி சொல்லவோ, இல்லை தைரியம் சொல்லவோ யாரும் என்கூட இல்லை. கட்டின புருஷன் முதற்கொண்டு..” என்றாள் அவனைப் பார்த்து. அவளின் குற்றம் சாட்டும் பார்வை அவனைக் குத்திக் கிழித்தது.
“சாரி நிகா..! இவ்வளவு விஷயம் எல்லாம் எனக்குத் தெரியாது. அப்போதைக்கு இருந்த என்னோட நிலைமை வேற..” என்றான்.
“என்னதான் டைவேர்ஸ் நோட்டிஸ்ல சைன் பண்ணாலும், எனக்கு உங்களை ஒரு தடவையாவது நேர்ல பார்க்கணும் போல இருந்தது. உங்க குரலைக் கேட்கணும் போல இருந்தது. உங்களைக் கட்டி அழனும் போல இருந்தது. பிரியறதுக்கு முன்னாடி உங்களை ஒரு தடவை உங்களைப் பார்த்திடனும்ன்னு தான், நான் இந்த ட்ரிப்ப பிளான் பண்ணி இங்க வந்தேன். எனக்கு நீங்க இங்க தான் இருக்கிங்கன்னு தெரிஞ்சு தான் வந்தேன். தெரிஞ்சு தான் சண்டை போட்டேன். இப்படி எல்லா விஷயமும் தெரிஞ்சு தான் பண்ணேன்.
என் பிரண்ட் லோகா உங்களை ஒவ்வொரு தடவையும் பார்க்கறப்போ, எனக்கு உள்ள பத்திகிட்டு வந்தது. அதை எப்படி காட்டுறதுன்னு தெரியாம சண்டை போட்டேன். தேவையில்லாம ரியாக்ட் பண்ணேன். இப்படி நிறைய சொல்லலாம். எல்லாமே என்னோட சுயநலத்துக்காகத் தான் பண்ணேன்..” என்று சொன்னவளின் கண்ணீர் மட்டும் நிற்காமல் வந்து கொண்டிருக்க, முதன் முறையாக அவளை இப்படி தவிக்க விட்டதற்காக தன்னைத் தானே வெறுத்தான் வெற்றி.
“நிகா..!” என்று அவளை அவன் லேசாகத் தொட்டது தான் மாயம், அவனை அப்படியே இறுகக் கட்டிக் கொண்டு கதறித் தீர்த்துவிட்டாள் வர்ணிகா. அவளின் உடல், பொருள், ஆவி அனைத்தும் அவனுக்காக ஏங்கியதை அந்த ஒன்றை அணைப்பு அவனுக்கு உணர்த்தியது.
“என்னோட குறையைக் காரணம் காட்டி தான் என்னை வேண்டாம்ன்னு சொன்னிங்கன்ற ஒரு கோபத்தை தவிர வேற எந்த கோபமும் உங்க மேல எனக்கில்லை. எனக்கு எதுவுமே வேண்டாம் வெற்றி. எனக்கு நீங்க மட்டும் போதும்…”என்று அழுது கொண்டே அவள் சொல்லிக் கொண்டிருக்க, வெற்றியின் நிலை தான் சொல்லும் படியாக இல்லை.
அவள் அவனை அணைத்திருந்த விதத்திலும், அவள் கதறிய கதறலிளும் தெரிந்தது, அவள் மன உளைச்சலும்,அவன் மீதான அவளுடைய நேசமும். ஒரு முறை கூட பார்க்காமல், தன்னுடைய குரலை மட்டும் வைத்து ஒருத்தியால் இவ்வளவு நம்பிக்கையாக இவ்வளவு தூரம் வர முடியுமா..? இல்லை இப்படி நேசிக்கத்தான் முடியுமா..?கைக்குள் இருக்கும் பொக்கிஷத்தை இனியும் விட்டுவிட வெற்றி என்ன முட்டாளா..? அவளை இனி எக்காரணம் கொண்டும் விடுவதில்லை என்பதைப் போல் அவனும் இறுக அணைத்துக் கொண்டான்.
“இப்ப தான் நான் மட்டும் போதும்ன்னு சொன்ன, இப்ப இப்படி பேசுற..?” என்றான் வெற்றி கோபமாக.
“நான் வேற என்ன தான் பண்றது..?” என்றவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
அவளை மீண்டும் இழுத்து அணைத்துக் கொண்டவன்,
“கல்யாணம் முடிஞ்ச கையோட உன்னை அப்படி விட்டுட்டு வந்தது என்னோட தப்புத்தான். ஒருவேளை நான் அங்கயே இருந்திருந்தா, நீ இந்த அளவுக்கு கஷ்ட்டப் பட்டிருக்க மாட்ட. நானும் அதுக்கு விட்டிருக்க மாட்டேன். ஆனா, எல்லாம் தெரிஞ்ச பிறகும் உன்னை விடுறதுக்கு நான் என்ன முட்டாளா..? எப்போ உன்னை முதன் முதல்ல பார்த்தனோ, அப்பவே என் நெஞ்சுக்குள்ள வந்துட்டடி. கோபத்துல வந்துட்டாலும், உன்னைப் பார்க்க முடியாம, பேச முடியாம, வீட்டுக்கும் வராம நான் தவிச்ச தவிப்பு, என்னோட கோபம், வெறுப்பு இப்படி எல்லாமே எனக்கும் இந்த காட்டுக்கு மட்டும் தான் தெரியும். உன்னை எப்ப இங்க காட்ல பார்த்தேனோ அப்பவே என் உயிரே திரும்பி வந்த மாதிரி இருந்ததுடி. நீ என்னடான்னா திரும்பவும் பிரியறதைப் பத்தி பேசுற..” என்றவன் அவளை விடவேயில்லை.
“டாடி..” என்றாள்.
“அந்த ஆளை விடவே மாட்டியா நீ. அவரை நான் டீல் பண்ணிக்கிறேன்..” என்றான்.
“நீ இவ்வளவு நல்லவளா, அப்பாவியா, கோழைத்தனமா இருக்கக் கூடாது. அதான் அந்த ஆள் நினைச்சதை எல்லாம் நடத்திக் காட்டியிருக்கான். எப்பவுமே குரைக்கிற நாய் கடிக்காது. அந்த ஆள் முதல் தடவை உன்னை மிரட்டும் போதே, நீ எதிர்த்து கேள்வி கேட்டிருந்தா, விஷயம் இந்த அளவுக்கு வந்திருக்காது..” என்றான் வெற்றி.
“அத்தை,மாமாவுக்கும் என் மேல கோபம் இருக்குமில்லைங்க..” என்றாள்.
“அவங்களுக்கெல்லாம் ஒரு கோபமுமில்லை. நீ இங்க என் கூடத்தான் இருக்கன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும். அவளை உன் பொண்டாட்டியா வச்சுக்கிறது இனி உன்னோட சாமர்த்தியம் அப்படின்னு சொல்லிட்டாங்க..” என்றான் வெற்றி சன்னமான சிரிப்புடன்.
“மாமாவும் இப்படி பண்ணுவார்ன்னு நான் நினைக்கலைங்க..” என்றாள்.
“நானும் அவரைப் பத்தி தப்பாதான் நினைச்சுட்டு இருந்தே வர்ணி. ஆனா, அவர் எதுக்காக இப்படி பண்ணார்ன்னு இன்னைக்குத் தான் தெரிஞ்சது..” என்றவன், அவர் கூறிய அனைத்தையும் அவளிடம் பகிர்ந்து கொண்டான். அவன் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வர்ணிகாவிற்கு, மேகநாதன் அந்த நிமிடம் கடவுளாகவே தோன்றினார்.
“என்னால நம்பவே முடியலை வெற்றி..! அந்த கடவுளுக்கும் கூட என்மேல கொஞ்சம் கருணை இருந்திருக்கும் போல..” என்றாள் விரக்தியுடன்.
“அதெல்லாமில்லை. அந்த கடவுள் எனக்குக் கருணை காட்டி தான், உன்னை என்கிட்டே சேர்த்திருக்கார்..” என்றான் வெற்றி.
“கருணை தானே, காட்டிட்டா போச்சு..” என்று மீண்டும் நிகாவை அவன் கட்டிப் பிடிக்கப் போக,
“ஆணியே பிடுங்க வேண்டாம்..” என்று விலகிக் கொண்டாள் நிகா.
“நாங்க ஒன்னும் சொல்ல மாட்டோம்.. உன் புருஷனை நீ கட்டிப் பிடிக்கிற..? இதுல நாங்க என்ன சொல்றது..?” என்றாள் ஜெர்சி.
“இந்த பிஞ்சு நெஞ்சை இப்படி உடைச்சுட்டிங்களே ஆபீசர் சார்..” என்று லோகா சொல்லிய விதத்தில் சிரித்து வைத்தான் வெற்றி. அவனைப் பார்த்து முறைத்து வைத்தாள் வர்ணிகா.