மருமக சட்னி போட்டதுக்கே பெருமையை பார்டா.. என மனதில் நினைத்தவன்.. ‘நீயும் உக்காரு..” என இன்னொரு ப்ளேட்டை வைத்து அதில் இட்லியை வைக்கவும் கணேசன் சிரித்தார்.
‘எதுக்குப்பா சிரிக்கிறிங்க.? நீங்க உங்க பொண்டாட்டிக்கு ஊட்டிவிடும்போது என் பொண்டாட்டிக்கு நான் பரிமாறக் கூட கூடாதா.?” என்றான்.
‘அடேய்..” எனப் பதறியவர்.. ‘உங்கம்மாக்கு உக்கார்ந்துக்கவே முடியாதப்ப ஒரு ரெண்டு நாள் ஊட்டிவிட்டேன்.. அதை சொல்லுவியா.?” என்றார் சின்ன முறைப்போடு.
ஆதிரை இருப்பதால் வெக்கப்படுகிறார் எனப்புரிந்தவன்.. ‘ஹாஹா.. அம்மாக்கு முடியலன்னு நீங்க ஊட்டின மாதிரி.. என் பொண்டாட்டிக்கு இங்க புதுசுன்னு நான் பரிமாறுறேன்.. அவ்ளோதான்..” என சிரிப்போடே சாப்பிட ஆரம்பித்தான்.
‘பெரிய பட்டூ.. ஆ வச்சி..” என குழந்தை சொல்ல.. ‘அவளுக்கு நான் யாருன்னு சொல்லிக் கொடுங்க.. அப்புறம் சாப்பிடறேன்..” என்றாள் சன்னக்குரலில்.
‘பார்டா..” என ஆதிரையின் முகத்தை சந்தோசத்தோடு குனிந்து பார்க்கவும்.. அனைவரும் அருகிலிருக்க ஆதிரை சங்கடத்தோடு இன்னும் தலைகுனிய.. ‘உனக்கு எப்படி பிடிக்குமோ அப்படி நீயே சொல்லிக்கொடு..” என்றான்.
‘இதுல பிடிக்கிறதுக்கு என்ன இருக்கு.? குழந்தைங்க அம்மாவை எப்படி கூப்பிடுவாங்களோ அப்படி கூப்பிட்டாத்தான எல்லா அம்மாங்களுக்கும் சந்தோசம்..?” என்றாள்.
‘பார்டா.. பார்டா..” என இன்னும் குனிந்து பார்த்தான் ஆதியின் முகத்தை.
குழந்தை முகம் சுருக்கி அதிரூபனைப் பார்க்கவும்.. ‘பட்டுதான் அம்மாக்கு சட்னி வைக்கனுமாம்.. அம்மா அப்போதான் சாப்பிடுவாங்களாம்..” என குழந்தையின் கையை தனதோடு இணைத்து ஆதிரையின் தட்டில் சட்னி வைத்து.. ‘அம்மாவை சாப்பிட சொல்லு..” என்றான்.
‘ப்பா.. பெரிய பட்டு..” என்றாள் குழந்தை.
நேற்று போல் அழாமல் குழந்தை ரூபனிற்கு எடுத்துரைப்பதை அதிசயித்து பார்த்தவள்.. ‘நீ பட்டு.. நான் அம்மா..” என்றாள் குழந்தையின் பாவனையில்.
குழந்தை ரூபனை பார்க்க.. ‘நீ பட்டு.. இவங்க என்னோட அம்மா..” என கனகாவை காண்பித்து, “அவங்க என் பட்டோட அம்மா..” என ஆதிரையை காண்பித்தான்.
‘பட்டம்மா.. “ என குழந்தை சொல்ல.. ‘ம்.. இது நல்லாயிருக்கே.. பட்டம்மா சொல்லு..” என கொஞ்சினான் குழந்தையை.
‘பட்டம்மா.. அப்பா.. தாத்தா.. பாட்டி.. பெரிய தாத்தா..” என அனைவரையும் விரல் நீட்டி தனக்குதானே அறிமுகம் செய்து சாதித்தவளாய் கலகலவென சிரித்தாள் குழந்தை.
குழந்தைக்கு முத்தமிட்டு.. ‘ஆமாடா என் செல்ல பட்டூ.. பட்டம்மாவை சாப்பிட மிரட்டு..” என்றான்.
‘பட்டம்மா.. சாப்பிட்டு..” என்க ஆதிரைக்குள் தாய்மை சுரந்ததை அவளின் கண்கள் சொன்னது.
குழந்தையின் தூக்க கலக்கம் அறிந்து வேகமாய் சாப்பிட்டு ஹாலிலுள்ள சோபாவில் படுத்து தன்மேல் படுக்க வைத்தவன்.. ‘பட்டுவ தூங்க வச்சிட்டு அப்பா வேலைக்கு போய்டுவேனாம்.. அப்பாவை கேட்டு பாட்டியை படுத்த கூடாதாம்.. அப்பா வர வரைக்கும் பட்டம்மாவை நீதான் பார்த்துக்கனுமாம்..” என கால் மணிநேரம் வரை ராகமாய் பேசிக்கொண்டேயிருக்க.. ம்.. சொன்னவாறு குழந்தை உறங்கியிருந்தாள்.
குழந்தையோடு எழுந்து அன்னையறைக்கு சென்று படுக்க வைத்து வந்தவன்.. ‘அம்மா.. ஈவ்னிங்தான் போற மாதிரியிருந்தது.. டைரக்டர் கால் பண்ணி மதியமே வர சொல்லிட்டார். ஒரு மணிக்கு கிளம்பனும்..” என்றான்.
ப்ரியா விசயம் தெரிந்த ஆதிரையிடம் பேசவேண்டியிருக்க.. ‘கொஞ்சம் பேக் பண்ணனும்.. உதவி கிடைக்குமா.?” என்றான்.
அனைவரும் இருக்க எப்படி அறைக்குள் நுழைவது என ஆதிரை சங்கடப்பட.. அதை உணர்ந்தாலும் ‘வா..” என்று உள்ளே போனான்.
எப்படியாவது மருமகளை சமாதனம் செய்தபின்னே மகன் கிளம்பினால் பரவாயில்லையே என மனம் ஏங்க.. ‘எதோ பேசதான் கூப்பிடறான் போ ஆதி..” என்றார் கனகா.
மாரியப்பனும்.. ‘கோவிக்கப் போறான் போ ஆதிம்மா..”
இதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் உள்ளே வந்தாள். கதவை தாழிட்டவன் ஆதிரையின் முகமெங்கும் முத்தமிட்டு பொக்கிஷமாய் அணைத்துக்கொண்டான்.
பட்டுவை அம்மா என சொல்ல வைத்த சந்தோசத்தில் அதிரூபன் அணைத்துக்கொள்ள.. திருமணத்திற்கு முன்பு தன்னிடம் உண்மை சொல்லாத கோபத்திலும்.. ப்ரியா விசயம் தனக்கு தெரிந்ததாய் வீட்டினரிடம் கூட காட்டிக்கொள்ள வேண்டாம் என இப்பொழுதும் பேசுவதற்கு கூட எல்லை வகுக்கிறான் என்ற வருத்தத்திலும் அணைப்பிலிருந்து விலக முற்பட்டாள் ஆதிரை.
‘இப்போ என்ன செய்துட்டேன்னு விலகப் பார்க்கிற.?” என்றான் கோபமாக.
ஆழ்ந்து பார்த்த அதிரூபனிற்கு ஆதிரையின் எண்ணம் இம்முறை விளங்காமல் போகவே.. ‘என் மனசுல உள்ளதெல்லாம் நான் சொல்லிட்டேன்.. உனக்கு என்கிட்ட அப்படி நெருக்கம் வரலனா விட்ரு.. வரும்போது சொல்லிக்கலாம்..
ஒரு மணிக்கு நான் கிளம்பியாகனும் இப்போவே மணி பதினோரு மணியாகிடுச்சி..” என ஆதிரையின் முகத்தை நிமிர்த்தியவன்.. ‘நான் காதல் சொல்லும்போது படபடத்த உன் மனசு.. குழந்தையைப் பத்தி சொன்னதும் அப்படியே அடங்கிடுச்சிடு. ரொம்ப வேதனையாதான் இருந்தது.
ஆனாலும் என்னை பிடிக்கலன்னு சொல்லமாட்டன்னு எதோ ஒரு திடமான நம்பிக்கை, அதான் பிடிக்கலன்னு சொல்லு விட்டுடறேன்னு சொன்னேன்.. வேணாம்னு சொன்னியே தவிர.. என்னை பிடிக்கலன்னு சொல்றதுக்கு உனக்கு வார்த்தையே வரல.. அப்பவே என்னை விரும்ப ஆரம்பிச்சிட்டனு எனக்கு தெரிஞ்ச உண்மை உனக்கு தெரியல..
குழந்தையை மீறி உனக்கு என்னை பிடிச்சிருக்குனு இராமசாமி தாத்தா இறப்புல உனக்கும் தெரிஞ்சிருந்தும் என்னை கல்யாணம் செய்துக்க பிடிக்கல.. வேறவனை கல்யாணம் செய்துக்கவும் பிடிக்கல.. கர்ணாண்ணாவை கட்டிகிட்ட அவர் பொண்ணு போல நம்மை பார்த்துக்குவார்னு கர்ணாண்ணாவோட கல்யாணம் வரைக்கும் போய்ட்ட..
எல்லாம் எனக்கு தெரிஞ்சிருந்தும் நான் ஏன் பட்டுவ பத்தின உண்மையை கல்யாணத்துக்கு முன்ன உன்கிட்ட சொல்லலை தெரியுமா.?” என்றான்.
மனதில் உழன்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் ஆவலோடு ஆதிரை பார்க்க.. ‘குழந்தை பத்தின விசயத்தை உன்கிட்ட சொன்னா நிச்சயம் நீ அத்தைகிட்ட சொல்லுவ.. அத்தை உங்க சொந்த பந்தங்கள்ட்ட சொல்வாங்க..
நான் எதோ பெருசா தியாகம் செய்துட்ட மாதிரி எல்லாரும் என்னை கொண்டாடுவாங்க.. நம்ம கல்யாணமும் சுலபமா முடிஞ்சிருக்கும்.
கூடவே பட்டுக்கு நான் அப்பா இல்லன்ற உண்மையும் தெரிய வரும். தத்தெடுத்த குழந்தைனாலும் பெத்த குழந்தையாட்டம் பார்த்துக்கிறாங்கனு நம்மளை பெருமையா பேசுறவாங்க.. ஆனா அது குழந்தைக்கு நம்ம அப்பா இவர் இல்லன்றதை மனசுல ஆழமா பதிச்சிடும்.
எல்லாரும் இல்லன்னாலும் ஒருசிலராவது எடுத்து வளர்த்துற குழந்தைதானேனு பட்டுவை இரண்டாம்பட்சமா பார்ப்பாங்க.
நாளைக்கு நமக்கு குழந்தை பிறந்ததுக்கப்புறம்.. இவர் உங்கப்பா மட்டும்தான்.. பட்டுவோட அப்பா இல்லன்னு சொல்லிகொடுப்பாங்க.. நமக்கு பிறக்க போற குழந்தைங்க மனசுல அது பதிஞ்சிட்டா அவங்களுக்கு மட்டும்தான் நம்ம அப்பான்ற உரிமை வந்திடும்..
சின்ன சின்ன விசயங்களுக்கு குழந்தைங்களுக்கு நடுவில சண்டை வரும்.. அந்த நேரம் இது உன் அப்பா இல்ல.. எங்கப்பான்னு நம்ம குழந்தை பட்டுகிட்ட சொன்னா பட்டு மனசு என்ன பாடுபடும்..?
ஆரம்பத்துல எங்கப்பாவும்தான்னு சண்டை போடுவா.. அப்புறம் ஒதுங்க ஆரம்பிப்பா.. எனக்கு வேணும்னு உரிமையா கேக்குற குழந்தைக்கு போகப்போக எனக்கும் கிடைக்குமான்ற எண்ணம் வந்திடும்.. சாதாரண விசயத்தை கூட நம்மகிட்ட உரிமையா கேக்க மாட்டா..
இப்படி நிலைமை வரக்கூடாதுனுதான் குழந்தை விசயத்தை யார்கிட்டயும் சொல்லல. ப்ரியா குடும்பத்துக்கும் நம்ம குடும்பத்துக்கும் மட்டும்தான் பட்டு பத்தின விபரம் தெரியும். மத்தபடி யாருக்கும் தெரியாது.
இப்போவும் குழந்தை பெருசானதும் நிச்சயம் நீ அவ அம்மா இல்லன்னு தெரிய வரும்தான்.. பட்டுக்கு அம்மா யாரா இருந்தாலும்.. அப்பா நான்ங்கிறதே மத்தவங்க வாயை முடிந்தவரை அடைக்கும்.
நிச்சயம் நீ அவளுக்கு நல்ல அம்மாவாதான் இருப்ப.. ஆனாலும் இது உங்கம்மா இல்லைன்னு யாராவது உன்னைப் பத்தி தவறா பட்டுக்கு சொல்லி கொடுத்தாலும் நான் அவளுக்கு புரிய வைப்பேன்.. உன் வயித்தல பட்டு பிறக்கலன்னாலும் அப்பா இருக்கேன்ற தைரியம் அவளை என்கிட்டயிருந்து பிரிக்காது. ஆனா அதுக்கு நான்தான் அவ அப்பான்ற உரிமை அவளுக்குள்ள இருக்கனும்.. அதுக்கு பட்டு விசயம் ரகசியமாத்தான் இருந்தாகனும்.
இதெல்லாம் போக பட்டு என் குழந்தையில்லன்ற வார்த்தையை கூட என்னால நினைச்சி பார்க்க முடியாது. அப்படியொரு நிலை வராம நீதான் பார்த்துக்கனும்.” என மனைவியை நம்பிக்கையோடு பார்த்தான்.
அதிரூபனின் உயர்ந்த எண்ணம் புரிந்த ஆதிரை பூரிப்பிலிருக்க.. ‘என்ன.? எதாவது புரிஞ்சதா.?” என ஆதிரையின் முகம் நிமிர்த்தினான்.
தன் சஞ்சலமெல்லாம் மொத்தமாய் மறைந்திருக்க.. ‘என் உயிர் இருக்கும்வரை யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.. எங்கம்மாகிட்ட கூட..” என்றாள் உணர்வுப்பூர்வமாக.
‘ம்..” என பெருமையாய் சொன்னவன் தனது உடைமைகளை பேக் செய்ய ஆயத்தமாக.. ‘இங்க நம்ம வீட்ல எல்லாருக்கும் தெரியும்தானே.. அப்போ ஏன் அவங்ககிட்டயும் பேச வேணாம் சொன்னிங்க.?” என்றாள் யோசனையாக.
‘உனக்கு தெரிஞ்சதுனு அவங்களுக்கு தெரிஞ்சிட்டா ப்ரியா விசயம்தான் இங்க அதிகமா ஓடும்.. நானும் ப்ரியாவும் எந்தளவுக்கு இருந்தோம்னு உனக்கு சொன்னேன்தான.? அதையெல்லாம் திரும்ப உன்கிட்ட பேசுவாங்க.. அம்மா மட்டும் இல்ல.. அவங்களோட சேர்த்து தாத்தா அப்பா அத்தை மாமா எல்லாரும் சேர்ந்துக்குவாங்க.
பேச்சு போக்குல ஒருநாள் இல்ல ஒருநாள் பட்டுவ பெத்துட்டு ப்ரியா செத்துட்டான்னு குழந்தை முன்ன அம்மா கண்டிப்பா உளறிடுவாங்க.. இதெல்லாம் வரக்கூடாதுனா அவங்களைப் பொருத்தவரை உனக்கு எதுவும் தெரியாதுன்றதுதான் சரியாயிருக்கும்.. அதுதான் பட்டுக்கும் நல்லது.
ப்ரியா நினைப்பு வரும்போதெல்லாம் மனசு கணத்து போகும், மாமா மாமான்னு அவ குரல் என் நினைப்புக்கு வராத நாளில்ல, ஆனாலும் வெளிப்படையா யாரோடவும் பகிர்ந்துக்கமாட்டேன். இத்தனையும் மீறி எதாவது பிரச்சனை வந்தா அதை எப்படி பேஸ் பண்ணனுமோ அப்போ பார்த்துக்கலாம்.” என்று தயார் படுத்திய பேகை டேபிள் மீது வைத்து.. அடுத்ததாக தன் தாடியின் அமைப்பை மாற்றும் பணியிலிறங்கினான்.
தான் பார்ப்பதை அறிவான் என தெரிந்தும் சரியான ஸ்டைல் மன்னன் போல என அவனையே பார்த்திருந்தாள் ஆதிரை. தன் வேலை முடியும் வரை அமைதியாய் இருந்தவன்.. ‘உனக்கு அத்தையை பார்க்கனும்னா சொல்லு.. உன்னை அங்கவிட்டுட்டு கிளம்பறேன்..” என்றான்.
தான் பார்ப்பதை கவனிக்கவில்லை என ஏமாற்றமாய் உணர்ந்தவள்.. ‘எங்கம்மாவை எப்படி பார்க்கனும்னு எனக்கு தெரியும்..” என்றாள் கடுப்பாக.
‘உங்கம்மாவை எப்படியோ பார்த்துக்க.. ஆனா என்னை எதுக்கு வச்ச கண்ணு வாங்காம பார்க்கிற.?” என கடிந்தவன்.. ‘கட்டிபுடிச்சா விலகுவா.. முத்தம் கொடுத்தா திமிறுவா.. ஆனா நல்லா பார்க்க மட்டும் செய்வாளாம்..” என கடுப்போடு புலம்பி.. ‘நான் கிளம்பறேன்..” என வெளியே வந்தான்.
‘ஒரு மணிக்குதான கிளம்பறன்னிங்க..? மணி பனிரண்டு கூட ஆகல..” என பின்னோடு வர.. அவளின் கேள்விக்கு முறைப்பை பதிலாய் கொடுத்து அனைவரிடமும் சொல்லி கிளம்பினான்.