“அவ மேல கோப படாதீங்க மாப்பிள்ளை. அவளை கை விட்டுறாதீங்க”, என்றாள் தாமரை.
“இவ என்னோட உயிர் அத்தை. இவளை எப்படி நான் விட முடியும்? ஆனா என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கணுமா வேண்டாமா?”, என்று அவன் கேட்டதும் தாமரை அவன் பக்க நியாயம் புரிந்து எதுவும் பேச வில்லை.
சிறிது நேரம் கழித்து யுக்தா கண் விழித்ததும் அவளை முறைத்த படி அமர்ந்திருந்தான் யுவன். இருக்கும் சூழ்நிலை உணர்ந்தே அவனுக்கு விஷயம் தெரிந்து விட்டது என்று யுக்தாவுக்கு புரிந்தது.
பரிதவிப்பாக அவனை நோக்கினாள். அவளுடைய பார்வையைக் கண்டு அவளை இறுக்கி அணைத்துக் கொள்ள ஆர்வம் வந்தாலும் அதை அடக்கியவன் “ஆக உன் வாழ்க்கைக்கு நான் வேண்டாம்னு முடிவு பண்ணிட்ட அப்படித் தானே?”, என்று கோபமாக கேட்டான்.
“இவனை வேண்டாம்னு சொல்வதா?”, என்று எண்ணி அதிர்வாக அவனைப் பார்த்தாள்.
“என்னை வேண்டாம்னு நினைச்சு தான் குழந்தை விஷயத்தை என் கிட்ட மறைச்சிருக்க? அப்புறம் எதுக்கு சொத்தை என் பேர்ல எழுதி வச்ச? நான் உன் கிட்ட எனக்கு பிச்சை போடுன்னு கேட்டேனா? எனக்கு எதுவும் தேவையில்லை. உன் சொத்தும் வேண்டாம். நீயும் வேண்டாம்”, என்று அவன் சொன்னதும் அவள் கண்கள் கலங்கி விட்டது.
அதைக் கண்டு கூட மனம் இறங்காமல் “அத்தை உங்க மகளை கூட்டிட்டு வாங்க. நான் காரை எடுக்குறேன். உங்களை வீட்ல விட்டுட்டு போறேன். இனிமே நான் இவ முகத்துல முழிக்கவே மாட்டேன்”, என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டான்.
“அம்மா பாரும்மா எப்படி சொல்லிட்டுப் போறான்னு….”, என்று அன்னையிடம் புகார் வாசித்தாள் யுக்தா.
“மாப்பிளை சொன்னதுல என்ன தப்பிருக்கு? எல்லாம் உனக்கு தேவை தான். வா”, என்று சொல்லி அவளை அழைத்துச் சென்ற தாமரை அவளை முன் சீட்டில் அமர வைக்க போக “உங்க மகளை உங்க கூட பின்னாடியே உக்கார வைங்க அத்தை”, என்று சொல்லி விட்டான் யுவன்.
யுக்தா அதிர்ந்து போய் அவனைப் பார்க்க “இங்க வச்சு எதுவும் பேச வேண்டாம். வா பாப்பா”, என்று சொல்லி அவளை பின் சீட்டில் அமர வைத்து தானும் அமர்ந்து கொண்டாள் தாமரை. காரில் போகும் போது மௌனமே நிலவியது. வீட்டுக்குச் சென்றதும் அவர்களை இறக்கி விட்ட யுவன் அழைத்த தாமரையிடம் கண்ணைக் காட்டி விட்டு அவளிடம் சொல்லக் கூட செய்யாமல் கிளம்பி விட்டான்.
“என்ன மா கோபமா போறான்?”
“நீ பண்ணினதுக்கு வேற என்ன பண்ணச் சொல்ற? எதையும் யோசிக்காம ரெஸ்ட் எடு. மளிகை சாமான் எல்லாம் இப்ப வந்திரும். பாத்திரமும் கொஞ்சம் மாப்பிள்ளை வாங்கிப் போட்டுருக்கார். மாளிகை சாமான் வந்ததும் எதையாவது சமைச்சு தரேன். கொஞ்ச நேரம் தூங்கு”, என்று அவளை அறைக்கு அனுப்பி வைத்தாள் தாமரை.
அதே நேரம் யுவனின் வீட்டில் அவனது தந்தை ஈஸ்வரன் டிவி பார்க்க அமர்ந்திருந்தார். கூடவே சுந்தரியும் காய் வெட்டிக் கொண்டே அங்கு அமர்ந்திருந்தாள்.
“இந்த காலத்தில் கூட கணவனை விட்டுக் கொடுக்காத ஒரு நடிகையின் அசைக்க முடியாத காதல். விபசார விடுதிக்கு சென்று வந்த கணவனை பிரிந்து வாழப் போகிறார் என்று நாமெல்லாம் எண்ணியிருக்க அதை பொய்த் தகவல் என்றும், அப்படி பொய்த் தகவல் சொன்ன ஆளை பற்றி போலீசில் புகார் கொடுக்கப் போகிறேன் என்றும் சொல்லியிருக்கிறார் கியூட்டான நடிகை. கடந்த ஆறு வருடங்களாக பல ஆண்களின் மனதில் கனவு நாயகியாக உலா வந்து கொடிருக்கும் நடிகை யுக்தா இன்று பத்திரிக்கையாளர்களிடம் அளித்த பேட்டி இதோ உங்கள் பார்வைக்கு”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள் ஒரு பெண்.
“பாருங்க பாருங்க, நம்ம வீட்டு விஷயம் தான். பெரிய சைண்டிஸ்ட்ன்னு பேர் வாங்க வேண்டிய என் மகன் இவளால இப்ப எந்த பேர் வாங்கிருக்கான்னு”, என்று புலம்பினாள் சுந்தரி.
“கொஞ்சம் பொறு சுந்தரி. மருமக பொண்ணு என்ன தான் சொல்லுதுன்னு பாப்போம்”, என்று சோளி அவள் வாயை அடைத்தார் ஈஸ்வரன்.
“பெரிய மருமக, ஊர் உலகத்துல இல்லாத மருமக. அவன் ஒருத்தன் தான் அவளுக்கு வால் பிடிச்சிட்டு அலையுறான்னா நீங்களும் அவளைத் தலைல தூக்கி வச்சிட்டு ஆடுங்க”, என்று முறுக்கிக் கொண்டே அமர்ந்திருந்தாள் சுந்தரி.
“வார்த்தையை அளந்து பேசுங்க சார். என் கணவர் நெருப்பு மாதிரி. அவர் என்னைத் தவிர எந்த பொண்ணையும் நெருங்க மாட்டார். பொண்ணுங்களுக்கு மட்டும் கற்பு இல்லை. ஆண்களுக்கும் கற்பு உண்டுன்னு நினைக்கிறவர் தான் என் கணவர். அப்படித் தான் என் மாமியார் அவரை வளத்துருக்காங்க”, என்று டிவியில் யுக்தா சொல்லிக் கொண்டிருக்கே அவள் சொன்னதைக் கேட்டு சுந்தரிக்கே திகைப்பு தான்.
ஆவென வாயைத் திறந்த படி அமர்ந்திருந்த சுந்தரியைப் பார்த்த ஈஸ்வரனுக்கு சிரிப்பை அடக்க முடியலை.
“இப்ப தெரியுதா? என் மருமகளை நான் ஏன் தலைல தூக்கி வச்சிட்டு ஆடுறேன்னு? அவ ஒரு தேவதை டி. ரெண்டு நாளா நீயும் உன் மத்த பிள்ளைகளும் யுவனுக்கு கெட்ட பேர் வந்துருச்சுன்னு என் மருமகளை கரிச்சு கொட்டுனீங்களே? இப்ப பாத்தியா, அஞ்சு நிமிசத்துல உனக்கும் உன் பையனுக்கும் பெருமை வாங்கி தந்துட்டா. அவன் மேல பட்ட களங்கத்தையும் துடைச்சிட்டா. அவ பொண்ணு. நீயும் இருக்கியே?”
“வாய் இருக்குனு ரொம்ப பேச வேண்டாம். அந்த கலங்கமே இவளைக் கட்டினதுனால தானே அவனுக்கு வந்துச்சு? என் மகன் மட்டும் நான் பாத்துருந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிருந்தா இந்த அசிங்கமே தேவையில்லை தானே?”
“நீ திருந்தவே மாட்டியா டி? எதுக்கு அந்த பொண்ணைக் கரிச்சு கொட்டிக்கிட்டே இருக்குற? அவ நம்ம மருமக. ஆனா நீ அவளை புரிஞ்சிக்கவே மாட்டிக்கிற?”
“எனக்கு யாரையும் புரிஞ்சிக்க வேண்டாம். சனியன் ஒழிஞ்சிருச்சுன்னு நினைச்சா இவ மறுபடியும் இங்க வந்து ஒட்டிக்க நினைச்சு தான் இப்படி பேட்டிக் கொடுத்துருக்கா. ஆனா நான் விட மாட்டேன். இனி அவ இங்க வரக் கூடாது”
“இங்க வரக் கூடாதா? இல்லை நம்ம மகன் வாழ்க்கைல வரக் கூடாதா?”
“என் மகன் வாழ்க்கைல தான் வரக் கூடாதுன்னு சொல்றேன்”
“அப்ப யுவன் நல்லா வாழக் கூடாது அப்படித் தானே? ஏண்டி உனக்கு உன் மத்த பிள்ளைங்க தான் முக்கியமா? யுவன் முக்கியம் இல்லையா?”
“எனக்கு எல்லா பிள்ளைகளும் ஒண்ணு தான்”
“நம்ப முடியலை. நீ அவன் வாழ்க்கையை கெடுக்க தான் பாக்குற?”
“ஆமா கெடுக்க பாக்குறேன் தான். அந்த யுக்தா அவனுக்கு வேண்டாம்”
“அதை முடிவு பண்ணுற உரிமை உனக்கோ எனக்கோ கிடையாது சுந்தரி”
“நான் அவன் அம்மாங்க. நான் தான் முடிவு பண்ணுவேன். அவனுக்கு தகுந்த மாதிரி ஒரு பொண்ணைக் கட்டி வைப்பேன்”
“முன்னாடி எல்லாம் நீ யுக்தா மேல அன்பா தானே இருந்த? நீ இப்படி மாறுவேன்னு நான் நினைக்கலை சுந்தரி”
“அப்ப அவ யுவனுக்கு வெறும் தோழி மட்டும் தான்னு நினைச்சேன். ஆனா அவ நண்பன் நன்பண்ணு சொல்லி என் மகனை வளைச்சு போட்டுட்டா”
“சீ தப்பா பேசாத. ஒவ்வொருத்தர் மனநிலையையும் அவங்க தான் சொல்ல முடியும். அதுல மற்றவங்க கருத்து சொல்லக் கூடாது. அந்த பிள்ளையை தப்பா பேசுறேன்னு சொல்லி நம்ம மகனை அசிங்கப் படுத்தாத சுந்தரி”
“நீங்க என்ன தான் என்னைக் கண்வின்ஸ் பண்ணினாலும் நான் மனசு மாற மாட்டேன். யுக்தா இனி இங்க வரக் கூடாது. அவ்வளவு தான்”
“நீ அவளை வேண்டாம்னு சொன்னா இனி உன் மகனும் உனக்கு இல்லை தெரிஞ்சிக்கோ”, என்று அவர் சொன்னதும் அதிர்ச்சியாக அவரைப் பார்த்தாள் சுந்தரி.
“என்ன பாக்குற? நான் உண்மையைத் தான் சொல்றேன். நீ யுக்தாவை வேண்டாம்னு சொன்னா யுவன் இனி இங்க இருக்க மாட்டான். அவ கூடவே போயிருவான்”
“எப்படி போவான்? அவ தான் அவனை வேண்டாம்னு சொல்லிட்டு அவ அப்பன் வீட்ல போய் உக்காந்துட்டால்ல? அப்புறம் எப்படி இவன் மனம் கெட்டு போய் அங்க போவான்?”
“உண்மையான அன்பு இருக்குற கணவன் மனைவிக்கு இடையே மானம் அவமானம் அப்படிங்குற பேச்சுக்கு இடமே இல்லை சுந்தரி. அது மட்டும் இல்லை. யுக்தா அவனை சந்தேகப் படலை. அவன் மேல உள்ள கோபத்துல தான் போயிருக்கா. அது நியாயமான ஒரு பொண்டாட்டிக்கு வர வேண்டிய கோபம் தான். ஏன் உன் கிட்ட நாங்க எங்கயாவது சொல்லாம போனா நீ என்னைக் கோச்சிக்கிறது இல்லையா? அதை அவ உணர்ந்துட்டா. அதனால அவங்க ரெண்டு பேரும் ராசியாகிடுவாங்க. இந்நேரம் ராசியாகிருப்பாங்க”