யுவனைப் பார்த்த படி யுக்தா அவன் கைக்குள் அசையாமல் நிற்க “இப்படியே நின்னா நாளைக்கு எல்லா பேப்பர்லயும் இந்த போஸ் தான் வரும் அம்மு”, என்று சொல்லி அவளைப் பார்த்து புன்னகைத்தான்.
அதில் நடப்புக்கு வந்தவள் கோபத்துடன் அவன் கைக்குள் இருந்து விலகி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அதைக் கண்ட யுவனுக்கு குழந்தை எப்படி அன்னையிடம் கோபித்துக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொள்ளுமோ அதைப் போல தான் தோன்றி வைத்தது.
“என்ன டி?”, என்று உல்லாசமாக கேட்டான்.
“நீ என் கிட்ட பேசாத”, என்று முறுக்கிக் கொண்டாள் யுக்தா.
“எதுக்கு?”
“உனக்கு தெரியாதோ?”
“அதை என் கூட இருந்தே சண்டை போடு டி. நம்ம வீட்டுக்கு போகலாமா?”
“நான் உன் கூட வர மாட்டேன். நான் புது வீட்டுக்கு போறேன்”
“நானும் உன் கூட வரேன் அம்மு. எனக்கு உன் வீட்ல இடம் தர மாட்டியா?”, என்று அவன் பாவம் போல கேட்க “தர மாட்டேன். யு ஆர் சீட்டர்”, என்று கத்திய படி முறைத்தாள்.
“அப்படின்னா என்னை அம்போன்னு விட்டுருவியா டி? எனக்கு உன்னை விட்டா யார் இருக்கா?”
“ஐயோ டா, உலக நடிப்பு டா சாமி. உனக்கு யாரும் இல்லையோ? நீ என்னை எப்படி மயக்க நினைச்சாலும் நான் மயங்க மாட்டேன். நான் வேற யுக்தா. நான் உன்னை என் கூட சேத்துக்க மாட்டேன். அவ்வளவு தான். போ இங்க இருந்து”
“பத்திரிக்கை காரங்க கிட்ட பேசும் போதே வேற யுக்தான்னு தான் நினைச்சேன். ஆனா பாத்தா தான் அப்படித் தெரியலை”, என்று சொன்னவனின் கண்கள் வெட்கமே இல்லாமல் அவளுடைய நெளிவு சுளிவுகளை அளவிட்டது.
அவன் பார்வையில் முகம் சிவந்தவள் “பொறுக்கி”, என்று முணுமுணுத்தாள்.
அது அவன் காதில் விழுந்து அவன் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. சிரித்த படியே “அப்ப அவ்வளவு தானா அம்மு?”, என்று கேட்டான்.
அவன் குரலில் மயங்கத் துவங்கும் மனதை அடக்கியவள் “அவ்வளவு தான்”, என்றாள்.
“எனக்கு உன்னை தினமும் பாக்கணுமே?”
“அங்க நடந்ததைப் பாத்த தானே? நாளைல இருந்து நீ ஆபீஸ் வரணும். அங்க வச்சுப் மத்தது பேசிக்கலாம். இப்ப போ”
“அதைக் கேட்டுட்டு தான் இருந்தேன். இருக்குற பிரச்சனைல இது தேவையா? ஏற்கனவே உன் அப்பா உன்னோட சொத்துக்காக தான் உன்னைக் கல்யாணம் பண்ணிருக்கேன்னு சொல்லிட்டு இருக்கார்? இதுல நீ அவ்வளவையும் என் பேர்ல எழுதி வச்சிருக்க?”, என்று சீரியசாக கேட்டான்.
“எனக்கு தோணுச்சு, செஞ்சேன்”
“என் கிட்ட ஒரு வார்த்தை கேக்க வேண்டாமா?”
“நான் எதுக்கு உன் கிட்ட கேக்கணும்? என்னைக் கேட்டா நீ விபசார விடுதிக்கு போன? போடா”, என்று சொல்லி விட்டு காரில் ஏறி அமர்ந்து காரை எடுக்கப் போனாள். அவளுக்கு மறுபக்கம் வந்து அமர்ந்தவன் “என்னை ஒரு இடத்துல டிராப் பண்ணுங்க யுக்தா மேடம்”, என்று நக்கலாக சொன்னான்.
“உன் கார் எங்க?”
“என் கார் பஞ்சர். அதோ அங்க இருக்கு பாரு”
“காரு பஞ்சரா? நம்புற மாதிரி இல்லையே?’
“சரி விடுங்க மேடம். டிராப் தானே செய்யச் சொல்றேன். செஞ்சா தான் என்னவாம்?”, என்று அவன் பாவம் போல சொன்னதும் அவனை முறைத்த படியே காரை எடுத்தாள்.
இருவரும் அவர்கள் புதிதாக கட்டிய வீட்டுக்குச் சென்றார்கள். அதிக ஆடம்பரம் இல்லாவிட்டாலும் அழகாக இருந்தது அந்த வீடு. வீட்டுக்குள் சென்று காரை நிறுத்திய யுக்தா “இதுக்கு மேல உங்களை கொண்டு போய் டிராப் பண்ண முடியாது. ஒழுங்கா இங்க இருந்து இறங்கி நடந்து போங்க”, என்று சொல்லி விட்டு காரில் இருந்து இறங்கினாள்.
“இவ எப்ப இருந்து இவ்வளவு கோபப் பட ஆரம்பிச்சா?”, என்று எண்ணிய படியே அவனும் கீழே இறங்கினான்.
யுக்தா வீட்டுக்குள் செல்ல காலடி எடுத்து வைக்கும் முன் “அங்கயே இரு டி”, என்று சொன்ன தாமரை கையில் ஆரத்தி தட்டுடன் வந்தாள்.
அன்னையின் குரல் கேட்டு அவள் தேங்கி நிற்க “மாப்பிள்ளை யுக்தா பக்கத்துல வந்து நில்லுங்க”, என்று அழைத்தாள் தாமரை.
புன்னகையுடன் யுக்தாவை இடித்த படி வந்து நின்றான் யுவன். அவள் அவனை முறைக்க இருவருக்கும் ஆரற்றி சுற்றி உள்ளே அழைத்தாள் தாமரை.
இருவரும் உள்ளே செல்ல தாமரை ஆரத்தியைக் வெளியே கொட்டி விட்டு உள்ளே சென்றாள். பின் மகளின் அருகே வந்தவள் அவள் நெற்றியில் முத்தமிட்டு “ரொம்ப சந்தோஷம் டா. இப்ப தான் எனக்கு உன்னை நினைச்சு நிம்மதியா இருக்கு. மாப்பிள்ளை கிட்ட சொல்லு. நான் உள்ள இருக்கேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றாள்.
தன்னுடைய பெயரில் சொத்தை மாற்றி எழுதியதற்கு தான் தாமரை அப்படிச் சொல்கிறாள் என்று எண்ணிக் கொண்டான் யுவன். ஆனால் தாமரை பேசியதோ குழந்தையைப் பற்றி.
“யுக்தா, நானும் இங்கயே இருந்துக்கட்டுமா?”, என்று கேட்டான் யுவன்.
“ஒண்ணும் தேவையில்லை. நீ போகலாம்”
“சரி, நீ ரெஸ்ட் எடு. நான் கிளம்புறேன். எதுன்னாலும் எனக்கு கால் பண்ணு. அப்புறம் வீட்டுக்கு தேவையான பொருள் எல்லாம் தெரிஞ்ச கடைல ஆர்டர் பண்ணிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல கொண்டு வந்துருவாங்க. நான் பணம் கொடுத்துட்டேன். பர்னிச்சர் எல்லாம் நீயே உனக்கு பிடிச்ச மாதிரி வாங்கிக்கோ. அப்புறம் சொத்தை மாத்தி எழுதினதைப் பத்தி யோசி. எனக்கு எப்பவுமே உன் சொத்து முக்கியம் இல்லை அம்மு”, என்று சொல்லி விட்டுக் கிளம்பினான்.
போகும் அவனையே பார்த்துக் கொண்டு தளர்ந்து போய் அமர்ந்தாள். அப்போது அங்கே வந்த தாமரை “குழந்தை உண்டானதை மாப்பிள்ளை கிட்ட சொன்னியா?”, என்று கேட்டாள்.
“இல்லை மா”
“நீ திருந்தவே மாட்டியா யுக்தா? இது எவ்வளவு பெரிய விஷயம்? இதைச் சொல்ல வேண்டாமா?”
“அம்மா பிளீஸ், எனக்கு அதிக மன அழுத்தமா இருக்கு. நான் போய் ரெஸ்ட் எடுக்குறேன்”, என்று சொல்லி எழுந்தவள் அப்படியே தலை சுற்றி கீழே விழுந்தாள்.
“யுக்தா”, என்று அலறிய படியே மகள் அருகே நெருங்கிய தாமரை அவள் மயங்கி விட்டாள் என்று அறிந்து யுவனுக்கு அழைத்தாள்.
யுக்தா வீட்டருகே ஒரு ஆட்டோவைப் பிடித்த யுவன் தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு தன்னுடைய வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.
தாமரை அழைத்ததும் அதை எடுத்தவன் “சொல்லுங்க அத்தை”, என்றான்.
“யுக்தா மயங்கி விழுந்துட்டா மாப்பிள்ளை. நீங்க பக்கத்துல இருந்தா வறீங்களா? இல்லை நான் ஆட்டோ பிடிக்கவா?”
“நான் அஞ்சு நிமிசத்துல வந்துருவேன் அத்தை”, என்று சொல்லி போனை வைத்த யுவன் கால் மணி நேர பயணத்தை ஐந்தே நிமிடத்தில் கடந்து மனைவியைக் காணச் சென்றான்.
சோபாவில் யுக்தா மயங்கி கிடக்க தாமரை மகளின் தலையை தன்னுடைய மடியில் வைத்து புலம்பிக் கொண்டிருந்தாள். வேகமாக அவர்களை நெருங்கியவன் மனைவியைக் கையில் அள்ளிக் கொண்டு காரை நோக்கிச் சென்றான். அவளை பின் சீட்டில் படுக்க வைத்தவன் தாமரை காரில் ஏறியதும் காரை எடுத்தான்.
யுக்தாவின் குடும்ப டாக்டர் வைத்திருக்கும் மருத்துவமனைக்குச் சென்று அவளை அனுமதித்த பிறகு தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
உள்ளே அவளுக்கு சிகிச்சை ஆரம்பிக்க “என்ன ஆச்சு அத்தை? நான் போகும் போது நல்லா தானே இருந்தா?”, என்று தாமரையிடம் கேட்டான்.
“அது வந்து… மாப்பிள்ளை…. யுக்தா… நீங்க அப்பா ஆகப் போறீங்க?”, என்று தாமரை சொன்னதும் அவன் கண்கள் சந்தோசத்தில் விரிந்தது.
“என்ன அத்தை சொல்றீங்க?”
“இன்னைக்கு காலைல தான் அந்த பேப்பர்ல எழுதி இருந்தா. அதை அவளே உங்க கிட்டச் சொல்லணும்னு தான் நான் சொல்லலை. ஆனா அவ சொல்லலை. அதைத் தான் ஏண்டி சொல்லலைன்னு கேட்டுட்டு இருந்தேன். மயங்கிட்டா. ஒண்ணும் இருக்காது. மசக்கை வாந்தியா தான் இருக்கும்”, என்று அவனுக்கு ஆறுதல் சொன்னாள்.
யுவனுக்கு மிகப் பெரிய சொர்கத்தை எட்டிப் பிடித்தது போல சந்தோஷமாக இருந்தது. கோடிக் கணக்கில் உள்ள சொத்தை அவன் மீது அவள் எழுதி வைத்த போது கூட அவனுக்கு வராத சந்தோஷம் இப்போது அவனுக்கு வந்தது.
தன்னுடைய உயிர் அவள் வயிற்றில் வளர்வதைக் எண்ணி பூரித்துப் போனான். கூடவே இந்த விஷயத்தை தன்னிடம் சொல்ல முடியாத அளவுக்கு தன் மீது கோபமா என்று மனதுக்கு வருத்தமாக இருந்தது.
அப்போது வெளியே வந்த டாக்டர் “யுக்தாவுக்கு ஒண்ணும் இல்லை. நல்லா சாப்பிடாம ரெஸ்ட் இல்லாம இருந்ததுனால தான் மயங்கிருக்கா. அது மட்டுமில்லாம அவ வயித்துல குழந்தை வளருறதுனால வந்த சாதாரண மயக்கம் தான்”, என்று சொல்லி யுவனுக்கு வாழ்த்து சொல்லி விட்டுச் சென்றார்.
தாமரையும் யுவனும் உள்ளே சென்று யுக்தாவைப் பார்த்தார்கள். அவளோ நல்ல உறக்கத்தில் இருந்தாள். அவன் கைகள் மெல்ல அவள் தலையை வருடியது.