“அழாத டா, இங்க பாரு யுக்தா. நீ பத்திரமா தான் இருக்க. உனக்கு ஒண்ணும் இல்லை. ஒண்ணும் இல்லை மா. அதான் நான் வந்துட்டேனே?”, என்று யுவன் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க யுக்தா கண்ணீர் நின்ற பாடில்லை. அவள் பயமும் தெளியவில்லை.
அவளை எப்படித் தேற்றுவது என்று தெரியாமல் அவளை ஆதரவாக அணைத்த படி இருந்தான் யுவன்.
அதே நேரம் “எல்லாரும் கிளம்பலாமா?”, என்று கேட்டுக் கொண்டிருந்தார் அவர்களின் ஆசிரியர் மங்கை.
“யுவன் வரலை மேம்”, என்று அவன் நண்பர்கள் சொல்ல “யுக்தாவும் வரலை மேம்”, என்று போட்டுக் கொடுத்தாள் ரேவதி.
“அப்படியா? பசங்களா, நீங்க யுவன் அவனோட ரூம்ல இருக்கானான்னு பாருங்க. நான் யுக்தாவை பாத்துட்டு வரேன், நீ வா ரேவதி”, என்று சொல்லி யுக்தாவின் அறைக்கு சென்றாள் மங்கை.
ரேவதி மற்ற பெண்களைப் பார்த்து நீங்களும் வாங்க என்னும் விதமாய் சைகை காட்டி விட்டு மங்கை பின் சென்றனர். அனைவரும் அங்கே சென்று பார்த்த போது அவர்கள் இருவரும் கட்டிப் பிடித்த படி நிற்க திகைத்துப் போனார்கள்.
இருவரும் ஒரே அறையில் தான் இருப்பார்கள். அதனால் அவர்களை மாட்டி விடலாம் என்று எண்ணிய ரேவதிக்கு அவர்கள் இருவரும் கட்டிப் பிடித்த படி நிற்பது அதிக சந்தோஷத்தை தந்தது.
“என்னையா போலீஷ்ல சொல்லிருவேன்னு சொன்ன? இப்ப நீ தான் அசிங்க படப் போற யுவன்”, என்று எண்ணிக் கொண்டு “பாத்தீங்களா மேம், என் கிட்ட உடம்பு சரியில்லைன்னு சொல்லிட்டு இவனை இங்க வர வச்சிருக்கா”, என்று சமயம் பார்த்து பற்ற வைத்தாள் ரேவதி.,
அவள் குரலில் திரும்பிப் பார்த்த யுவன் அங்கு நின்ற மங்கையையும் மற்ற பெண்களையும் எதிர் பார்க்கவே இல்லை.
தன்னிடம் இருந்து யுக்தாவை விலக்க நினைத்தான். யுக்தாவோ யுவனுடைய நெஞ்சை விட்டு நிமிரவே இல்லை. அவன் ஒன்றே துணை என்பது போல அவனை இறுக பிடித்திருந்தாள்.
தாங்கள் வந்த பிறகும் அவர்கள் அப்படி நிற்பதைக் கண்ட மங்கை “என்ன யுவன் இது|? உன் கிட்ட இருந்து இப்படி ஒரு செய்கையை நான் எதிர் பாக்கலை”, என்றாள்.
“மேம் அவசரப் பட்டு வார்த்தையை விடாதீங்க. இங்க நடந்ததே வேற”
“என்ன நடந்திருந்தாலும் நீ இப்ப பண்ணுறது தப்பு. முதல்ல நீ அவளை விடு”
“மேம், அவ ரொம்ப பயந்து போயிருக்கா. அவளை ரூம்குள்ள வச்சி பூட்டிட்டு போயிருக்காங்க. நான் வந்தப்ப அவ அழுதுட்டு இருந்தா. அவளைப் பத்தி தான் உங்களுக்குத் தெரியுமே, இன்னும் அவளுக்கு அந்த பயம் போகலை”
“ரூம்ல வச்சு பூட்டினாங்களா? இது என்ன கதை?”
“உண்மைய தான் மேம் சொல்றேன்”
“அப்படின்னா நீ என் கிட்ட அதைச் சொல்லிருக்க வேண்டியது தானே? ஒரு பொண்ணு ரூமுக்கு வரது உனக்கு தப்பா தெரியலையா? உன்னை எவ்வளவு நல்ல பையன்னு நினைச்சேன்? ஐ.ஐ.டீல உன்னோட புராஜெக்ட் அப்ரூவ் ஆகிருக்காம். அதை பாரின்ல இருக்குற ரிசெர்ச் டீமுக்கு அனுப்பிருக்காங்க. அங்க அது செலக்ட் ஆச்சுன்னா உனக்கு பெரிய பியூச்சர் இருக்குன்னு நாங்க எல்லாம் பேசிட்டு இருக்கோம். ஆனா நீ இப்படி பண்ணுற?”
“மேம், நான் சொல்றது தான் நிஜம். அவ இப்ப ரொம்ப பயந்து போய் இருக்கா. கொஞ்ச நேரத்துல அவளே சரியாகிருவா. அதுக்கப்புறம் யுக்தா கிட்டயே என்ன நடந்துச்சுன்னு கேளுங்க”
“இதை என்னை நம்பச் சொல்றியா? அவளும் உன்னை மாதிரியே தான் பேசுவா”, என்று அவனிடம் சொன்ன மங்கை யுக்தாவைப் பார்த்து “யுக்தா நீ என்ன பண்ணுற? முதல்ல அவன் கிட்ட இருந்து விலகு”, என்று அரட்டுப் போட்டாள். அவள் சத்தம் கேட்டும் கூட யுக்தா அசையவே இல்லை.
“நீங்க நம்ப வேண்டாம் மேம். நம்பவே வேண்டாம். அதோ உங்க பக்கத்துல நிக்குறாளே, ரேவதி. அவ தான் யுக்தாவை ரூமுக்குள்ள பூட்டி வச்சிருந்தா. நான் அவ கிட்ட தான் சாவி வாங்கிட்டு வந்தேன். வேணும்னா டைனிங் ஹால்ல இருக்குற கேமராவை செக் பண்ணுங்க. நான் அவ கிட்ட சாவி வாங்கினது இருக்கும். அவளை மாட்டி விடக் கூடாதுன்னு தான் யாரோ பூட்டினாங்கன்னு சொன்னேன். ஆனா எங்களை மாட்ட வைக்க நினைச்ச அவளை மாட்டி விடுறதுல தப்பே இல்லை. அவ தான் மேம் யுக்தாவை உள்ள வச்சு பூட்டினா”, என்று மங்கையிடம் சொன்னவன் யுக்தா புறம் திரும்பினான்.
“இங்க பாரு யுக்தா, நான், மங்கை மேம் எல்லாரும் இங்க தான் இருக்கோம். ஒண்ணும் பயம் இல்லை டா. உன்னோட ரூம் லாக் கொஞ்சம் துருப்பிடிச்சதுனால தான் திறக்க முடியலை. இங்க பாரு மா, நான் சொன்னா கேப்ப தானே?”, என்று சொல்லிக் கொண்டே அவளை விலக்கி நிறுத்தினான்.
அவனை விட்டு விலகி நின்ற யுக்தா அங்கிருந்த அனைவரையும் கலக்கமாக பார்த்தாள். “பயப்படாத யுக்தா. இப்ப போய் குளிச்சிட்டு வா, நாம வெளிய கிளம்பலாம்”, என ஒரு சிறு குழந்தைக்குச் சொல்வது போல சொல்லி அவளை சகஜ நிலைக்கு மாற்றினான் யுவன். அதற்கு பின்னர் தான் கொஞ்சம் தெளிந்தாள்.
“யுக்தா உன் உடம்புக்கு என்ன ஆச்சு? நீ ஏன் மத்தவங்களோட கிளம்பலை?”, என்று கேட்டாள் மங்கை.
“நைட் வயிறு வலிச்சதுன்னு ரேவதி கிட்ட மாத்திரை வாங்கி சாப்பிட்டேன் மேம். காலைல இவங்க எல்லாரும் கிளம்பினது எனக்கு தெரியாது. நான் தூங்கிட்டு இருந்தேன். எந்திச்சு பாத்தா யாரும் இல்லை. கதவையும் திறக்க முடியலை. பயமா இருந்துச்சு”, என்று இன்னும் மிச்சமிருந்த பயத்துடன் சொன்னாள்.
“அப்படியா? சரி நீ போய் குளிச்சிட்டு வா மா”, என்று சொன்னதும் மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள் யுக்தா. மற்ற அனைவரும் அந்த அறையை விட்டு வெளியே வந்தார்கள்.
“மேம் நிஜமாவே நான் சொல்றது உண்மை தான். இந்த ரேவதி தான் இப்படி எல்லாம் பிளான் பண்ணிருக்கா. நேத்து அவளுக்கு என்ன மாத்திரை கொடுத்தான்னு கூட தெரியலை”, என்று யுவன் சொன்னதும் அனைவரும் ரேவதியை பார்க்க “மேம் இவங்க ரெண்டு பேரும் பொய் சொல்றாங்க. நான் எதுவும் செய்யலை. வேணும்னா கேமரா பாருங்க”, என்று தெனாவெட்டாக சொன்னாள் ரேவதி. இவ்வளவு பெரிய ஹோட்டலில் கேமரா எல்லா பார்க்க மாட்டார்கள் என்று நம்பினாள் அவள்.
“மேம் எங்களுக்கு என்னமோ யுவன் சொல்றது தான் உண்மைன்னு தோணுது. ஏன்னா நாங்க கிளம்பும் போது யுக்தா நல்லா தூங்கிட்டு இருந்தா. ரேவதி தான் நான் அவளைக் கூட்டிட்டு வறேன்னு சொன்னா”, என்று கோகிலா சொல்ல ரேவதியை முறைத்துப் பார்த்தாள் மங்கை. இன்னொரு பெண்ணும் “ஆமா மேம் நாம சாப்பிட்டுட்டு இருக்கும் போது யுவன் வந்து என் கிட்ட தான் யுக்தா எங்கன்னு கேட்டான். நான் ரேவதி கிட்ட கேளுன்னு சொன்னேன்”, என்று இன்னொரு பெண்ணும் சொன்னதும் ரேவதி புறம் தான் தவறு என்று அனைவருக்கும் புரிந்தது.
பயத்துடன் தலை குனிந்தாள் ரேவதி. “நீ இப்படி பண்ணுவேன்னு நான் எதிர் பாக்கலை ரேவதி, யுக்தா ஒரு இன்னொசண்ட். இத்தனைக்கும் உன்னோட ஃபிரண்ட் வேற? அவளைப் போய் எதுக்கு இப்படி பண்ணின? நான் நாளைக்கு காலேஜ்க்கு போய் டீன் கிட்ட சொல்றேன். அவரே உனக்கு என்ன தண்டனை கொடுக்கணுமோ கொடுக்கட்டும்”, என்றாள் மங்கை.
“மேம், பிளீஸ். இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சிருங்க. ஏதோ ஒரு கோபத்துல அப்படி பண்ணிட்டேன்”, என்றாள் ரேவதி.
“மேம், இந்த தடவை இதை இப்படியே விட்டுருங்க. இனி இதைப் பத்தி பேச வேண்டாம். காலேஜ்ல என்குயரி அது இதுன்னு ஆரம்பிச்சா யுக்தாவையும் அங்க இழுப்பாங்க. அவளுக்கு அதெல்லாம் வேண்டாம். இதை இதோட விட்டுருங்க, இன்னைக்கு ஈவினிங் நாம ஊருக்கு கிளம்பிருவோம். இனி ரேவதி யுக்தா விஷயத்தில் தலையிடக் கூடாதுன்னு மட்டும் கண்டிச்சு வைங்க. இவ்வளவு நாள் இவளையும் நான் என் பிரண்டா தான் நினைச்சேன். ஆனா இவ விசமா இருந்துருக்கா. நீங்க யுக்தாவை கூட்டிட்டு வாங்க. நான் பசங்களை பஸ்ல ஏறச் சொல்றேன்”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றான் யுவன்.
“கேர்ள்ஸ், நீங்களும் பஸ்ல ஏறுங்க. ரேவதி நீ மட்டும் நில்லு”, என்று சொன்ன மங்கை யுக்தா கிளம்பி வரும் வரை ரேவதியை வறுத்து எடுத்து விட்டாள். கூடவே ரேவதியின் தந்தை எண்ணையும் வாங்கி நடந்த விஷயத்தை அவருக்கு சொல்லி விட்டாள்.
ரேவதியின் குடும்பத்துக்கே யுக்தாவை பிடிக்கும் என்பதால் அவளது தந்தையும் மகளை நன்கு திட்டி விட்டு மங்கையிடம் மகளுக்காக மன்னிப்பு கேட்டு போனை வைத்தார். மீண்டும் மங்கையிடம் மன்னிப்பு கேட்டு விட்டு பஸ்ஸுக்கு வந்தாள் ரேவதி. ஆனால் ஏற்கனவே விஷயம் தெரிந்ததால் பஸ்ஸில் இருந்த அனைவரும் அவளை ஒரு மாதிரி பார்ப்பது போல இருந்தது. அவமானமாக உணர்ந்தவள் மௌனமாக ஒரு சீட்டில் சென்று அமர்ந்து கொண்டாள்.
யுக்தா கிளம்பி வந்ததும் அவளை அழைத்துக் கொண்டு வந்தாள் மங்கை. பஸ்ஸில் ஏறியதும் எப்போதும் போல் யுக்தா ரேவதி அருகில் அமரப் போனாள். அடுத்த நொடி அவள் கையைப் பற்றி இழுத்து தன்னருகே அமர வைத்துக் கொண்டான் யுவன்.
யுக்தா குழப்பமாக அவனைப் பார்க்க “வரும் போது அவ கிட்ட தானே உக்காந்துருந்த. இப்ப என் பக்கத்துல உக்காரு”, என்றான்.
அவன் பக்கத்தில் அமர்வது அவளுக்கு சந்தோஷமாக இருந்தாலும் “மேம் ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?”, என்று கேட்டாள்.
“ஒண்ணும் சொல்ல மாட்டாங்க”, என்று சொன்னதும் அவளும் சகஜமானாள்.
“ரேவதி ஏன் ஒரு மாதிரி இருக்கா?”
நடந்த எதுவும் அவள் மனதில் பதிய வில்லை என்று புரிந்து கொண்ட யுவன் ரேவதி செய்த அனைத்தையும் சொன்னான். கூடவே இனி அவளிடம் பேசக் கூடாது என்றும் யுக்தாவிடம் சொல்லி விட்டான்.
அனைத்தையும் கேட்ட யுக்தா அதிர்ந்து தான் போனாள். ரேவதி இப்படி எல்லாம் செய்வாள் என்று அவள் யோசிக்கவே இல்லை.
“அவ ஏன் அப்படி செஞ்சா? நான் அவ கூட நல்லா தானே பேசுறேன்?”, என்று யுக்தா கேட்க அவளுக்கு ரேவதியின் குணத்தை புரிய வைப்பதற்குள் யுவன் தான் நொந்து விட்டான்.
அதன் பின் யுக்தா அவளிடம் சென்று பேச வில்லை. ரேவதியும் அவளிடம் பேச வில்லை. மற்ற பிள்ளைகள் கூட யுக்தாவிடம் பேசினார்கள். ஆனால் ரேவதியிடம் யாருமே பேச வில்லை. ரேவதியை அந்த கிளாசில் இருந்த அனைவருமே ஒதுக்கி வைத்தது போல தான் இருந்தது.
வீட்டுக்கு வந்ததும் அன்னையிடம் அனைத்தையும் சொன்னாள் யுக்தா. மகள் சொன்னது பாதி புரிய மீதி குழப்பத்தை யுவனுக்கு அழைத்து தெளிவு படுத்திக் கொண்டாள் தாமரை.
கூடவே மகள் மனதில் யுவன் இருக்கிறானோ என்ற குழப்பம் வந்தது அந்த தாய்க்கு.
“என்ன மா யோசிச்சிட்டே இருக்க? ரேவதி ஏன் மா அப்படி பண்ணினா? யுவன் கிட்ட கேட்டா பொறாமைன்னு சொன்னான்”, என்று அன்னையிடம் விளக்கம் கேட்டாள் யுக்தா.
“அவளுக்கு யுவனை பிடிச்சிருந்ததுனால நீ அவன் கூட பேசுறது அவளுக்கு கோபத்தை உண்டாக்கிருக்கு. அதனால அவ அப்படி பண்ணிட்டா. யுவன் வேற யார் கூடவும் பேசினா உனக்கு கோபம் வருதா பாப்பா?”
“இல்லையே மா, யுவன் எல்லார் கூடவும் நல்லா பேசுவான். எனக்கு கோபமே வராதே. ஆனா எல்லாரையும் விட என் கூட தான் அதிகம் பேசுவான்”, என்று குழப்பத்துடன் யுக்தா சொல்ல மகளுக்கு எப்போது மற்ற பெண்களைப் போல உணர்வுகள் வரும் என்று கவலையில் ஆழ்ந்தாள் தாமரை.
இப்படியே அனைவருக்கும் வாழ்க்கை நகர்ந்தது. யுவன் மற்றும் யுக்தாவின் கல்லூரி வாழ்க்கையும் நல்ல படியாக நகர்ந்தது. இடையில் யுவனின் அண்ணன் சரவணன் மற்றும் வெண்மதிக்கு திருமணம் முடிவானது. திருமணத்துக்கு யுக்தா தாமரையுடன் வந்திருந்தாள். செல்வம் தாமரையை போக கூடாது என்று சொல்லியும் அதைக் கேட்காமல் வந்திருந்தாள்.
ரோஜா வண்ண சுடிதார் அணிந்து அங்கிருந்த கூட்டத்திலே அழகு தேவதையாக அமர்ந்திருந்த யுக்தா மேல் அனைவரின் கவனமும் விழுந்தது. ஆனால் அவளோ தாமரை அருகிலே அமர்ந்திருந்தாள்.
“உன் கிளாஸ் பிள்ளைங்க கூட போய் உக்காரு பாப்பா”, என்று தாமரை சொன்னதற்கும் அவள் மறுத்து விட்டாள்.
அப்போது அங்கே வந்த யுவன் தாமரையிடம் கண்ணைக் காட்டி விட்டு அவளை அழைத்துச் சென்று தன்னுடைய குடும்பத்தில் இருந்த அனைவரிடமும் அவளை அறிமுகப் படுத்தினான். யுவன் அறிமுகப் படுத்துவதால் அனைவரும் அவளிடம் பேச அவளுக்கு தான் பட்டென்று அனைவரிடமும் பேச முடியவில்லை.
“என்ன டா உன் பிரண்டுன்னு சொல்ற? இவ என்னடான்னா சிரிக்க காசு கேப்பா போல?”, என்று சொல்லி விட்டு நகர்ந்து விட்டாள் யுவனின் அக்கா மீனாட்சி.
பின் தன்னுடைய தங்கை சுஜி, மணபெண்ணான வெண்மதிக்கு அலங்காரம் செய்ய வேண்டிய இடத்தில் இருந்ததால் அவளை அங்கே அழைத்துச் சென்றவன் “இவளை பாத்துக்கோ சுஜி. நான் மத்த பிரண்ட்ஸ் பாத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றான்.
ஆனால் சிறிது நேரம் கழித்து அந்த அறையில் இருந்து கண்ணீருடன் வெளியே வந்தாள் யுக்தா. அவள் கண்ணீரைக் கண்டு தாமரை பதறிப் போனாள். கூடவே அனைவரின் பார்வையும் யுக்தா மேல் விழுவது ஒரு மாதிரி இருக்க தாமரைக்கே என்னவோ போல இருந்தது. அவளை அங்கிருந்து அழைத்துச் செல்ல நினைக்கும் போது “ஆண்ட்டி என்ன ஆச்சு? யுக்தா ஏன் அழுறா?”, என்று கேட்டான் யுவன்.
“எனக்கே தெரியலைப்பா. சரி நாங்க கிளம்புறோம். இவ்வளவு கூட்டத்துல இவளை சமாதானப் படுத்த முடியாது”, என்று சொன்ன தாமரை உணவை கூட உண்ணாமல் அவளை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.
வந்தவர்களை சாப்பிட கூட விடாமல் திருப்பி அனுப்பி விட்டோமே என்று அவனுக்கு குற்ற உணர்வாக இருந்தது. நேராக சுஜியைத் தேடிச் சென்றான்.
சுஜி சுந்தரியிடம் கதை அளந்து கொண்டிருக்க “சுஜி அந்த ரூம்ல என்ன நடந்துச்சு? யுக்தா எதுக்கு அழுதா?”, என்று கேட்டான்.
“என்ன ஆச்சு யுவன்?”, என்று கேட்டாள் சுந்தரி.
“இவ கிட்ட யுக்தாவை பாத்துக்கோன்னு சொல்லிட்டு போனேன் மா. ஆனா யுக்தா அங்க இருந்து அழுதுட்டே வாரா. என்ன நடந்துச்சுன்னு சொல்லச் சொல்லுங்க”
“என்ன ஆச்சு சுஜி?”, என்று கேட்டாள் சுந்தரி.
“அது வந்து மா… அது… யுக்தா அக்கா மேக்கப் செட்ல இருந்த நெயில் பாலிஷை எடுத்து பாத்துட்டு இருந்தாங்க. அது கை தவறி கீழே விழுந்துருச்சு. ஒரு குட்டி டிராப் வெண்மதி அண்ணி சேரில பட்டுருச்சு. அதுக்கு அண்ணியும் அவங்க பிரண்ட்சும் சேர்ந்து யுக்தாவை லூசு அது இதுன்னு திட்டிட்டாங்க. அதான் யுக்தா அக்கா அழுதுட்டே போயிட்டாங்க”, என்று சுஜி சொல்ல யுவன் கோபம் எல்லை கடந்தது.