Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மைவிழி ஜாடைகள்.

மைவிழி ஜாடைகள் – 15(b)

மைவிழி – 15(b)

தன் முன் நின்றிருந்தவர்களைக் கண்டதும் வாசன் முகம் இறுகி விட, தன்னைப் பற்றியிருந்த அவன் கர அழுத்தத்தில் அதை உணர்ந்த வேதவி,சட்டென கணவன் முகம் பார்த்தாள்.



Advertisement

“வா,போலாம் வேதவி”என இறுக்கமாய் சொன்னவன் அங்கிருந்து நகர முற்பட, புருவம் சுருங்க அந் நடுத்தர வயதுடைய தம்பதியைத் தான் பார்த்தாள் இவள்.

அதில் அந்த ஆண் மனிதர்,

Advertisement

Advertisement

“யார் மா தம்பி,உன் ஹஸ்பண்டா?” நக்கல் இழையோடிய குரலில் இவளிடம் கேட்டாலும் பார்வை என்னவோ வாசனிடம்.

“வேதவி போலான்னு சொன்னேன்!” என்றான் வாசன்.

Advertisement

“ஏம்மா உதவி செஞ்சிருக்க,உன் ஹஸ்பண்டை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறது” இப்போது ஏளனமாக அந்தப் பெண் கேட்க,

அவர்களின் பேச்சையும், முகபாவனையும் கவனித்திருந்தவளாக,

“எஸ்கியூஸ் மீ!”என்றாள் வேதவி கடுமையுடன்.

“நீ உதவி செஞ்சிட்டல்ல!டைம் ஆகுது. அனாவசியப் பேச்சு வேணாம் வேதா! போகலாம்” வாசன் அவர்களை முறைத்துக் கொண்டே சொல்ல,

“ப்ச்,இருங்க போலாம்” என்றவள்,

“ஏங்க,பெரியவங்களாச்சேன்னு பார்க்கறேன். இந்த நக்கல் பார்வை பார்க்கறதெல்லாம் வேணாம்” என கடுமையுடன் கூறினாள், முன்னிருப்பவர்களிடம்.

“நீ சத்யநாதன் பொண்ணுன்னு தானே சொன்னே..?”என அவளிடம் பாவம் போலக் கேட்ட மனிதர்,

“எங்க தான் பணக்கார வீட்டுப் பொண்ணு கிடைப்பான்னு காத்திருப்பீங்களோ மிஸ்டர்.கீர்த்தி வாசன்”என்றார் படுநக்கலாய், வாசனிடம்.

பொங்கி எழும் கோபத்தை அடக்கியபடி அவன் அமைதியாக நிற்க,

“மைண்ட் யுவர் பிளடி டங் மிஸ்டர்” என்றிருந்தாள் வேதவி.

இவர்கள் யாரென்று சரியாகத் தெரியாது இவளுக்கு. ஆனால் சற்று முன் கிடைத்த அறிமுகத்தில் அவர்கள் ஈரோட்டில் விரல்விட்டு எண்ணக் கூடிய செல்வந்தர்களில் ஒருவர் எனத் தெரிய வந்திருந்தது.

இவள் உதவி செய்ததற்கு நன்றி கூறி தங்களைப் பற்றி அறிமுகம் செய்திருந்தவர்கள், வேதவியையும் யார் என விசாரித்திருந்தனர்.

ஆனால் தன் கணவனை பார்த்ததும் அவர்களது முக பாவனை மாறியதும், பேச்சில் வித்தியாசமும் ஏன் எனப் புரியவில்லை.

யாரையோ நினைத்து இவனிடம் பேசுகிறார்கள் என எண்ணியிருக்க, அப்படியில்லை என்று வாசன் பெயரைக் கூறியதிலே விளங்கிற்று.

“என்ன கீர்த்தி உங்க பொண்டாட்டிய பேச விட்டு வேடிக்கை பார்க்கறீங்க போல..?” குரூரமாய் கேட்டவர்,

“முதல்ல என் பொண்ணு சஞ்சனா.. இப்போ லீடிங் லாயர் பொண்ணோ.! ஹா.. பலே கில்லாடி ஆள் தான்யா நீயி..” என்றார் சஞ்சனாவின் தந்தை. 

ஆக இவர்கள் சஞ்சனாவின் பெற்றோர். வேதவிக்கு புரிந்து விட்டது.

“ஷெட் யுவர் டேம் மௌத் மிஸ்டர்.ஈஸ்வர்!”குரலை உயர்த்திய வேதவி,

“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுனீங்க,கோயில்னு கூட பார்க்க மாட்டேன்”என்றாள் விரல் நீட்டி எச்சரித்து.

அவர்களை பொருட்டாகவே மதிக்காத வாசன்,

“ஸ்ஸ்..வேதா!அமைதியா இரு!” அவள் தோளைப் பிடித்தழுத்தியவன்,

“பேச தகுதியில்லாதவங்கக் கிட்ட நின்னு பேசறது முட்டாள் தனம்” என்று அவர்களை பார்த்துக் கூறி விட்டு, மனைவியோடு நகர்ந்தான்.

“ஹா ஹா,கேட்டியா கோதை.!என் கால் தூசிக்குப் பெறாதவன் சொல்றதை பார்க்கும் போது தான் வேடிக்கையா இருக்கு..!” என்றவரின் பக்கம் திரும்ப முயன்ற வேதவியை, அழுத்தமாகப் பற்றியபடி படியேறினான் அவன்.

“ஆமாங்க, இந்த தகுதி இல்லாதவங்க கால்ல தான் ரெண்டு வருசத்துக்கு முன்ன நாயா விழுந்து கிடந்தான்னு மறந்து போயிட்டாரோ? இது அவன் பொண்டாட்டிக்கு தெரியுமா?” சஞ்சனாவின் தாய் எள்ளலாய் கூறியதில்,சட்டென நடையை நிறுத்தினான் வாசன். கண்கள் சிவந்து உடல் இறுகியது.

கணவனை முறைத்து, அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட வேதவி, தடதடவென இரண்டு படிகளையும் இறங்கி அவர்களின் முன் வந்து நின்றவள்,

“ஏய் இந்தா..!அமைதியாப் போனா ஓவராப் பேசுவியோ..?உங்களை மாதிரி மனுஷனை மனிசனாப் பார்க்கத் தெரியாத,பணத்தை வெச்சே மதிக்கக் கூடிய பணத்தாசை பிடிச்ச பிசாசுங்கக் கிட்ட இருக்கிறதுக்கு.. இறந்து போறதே மேல்னு தான் உங்க பொண்ண அந்த மரணமே கூப்பிட்டிடிச்சி”

“உன் பொண்ணைப் படைக்க காரணமா இருந்த கடவுளே அவளுக்கு நோயக் குடுத்து,அந்த உயிரை அவர்கிட்டயே எடுத்துக்கிட்டாரு. அந்த மாதிரி நல்ல பொண்ணு உங்களை மாதிரி சுயநலம் பிடிச்ச பெத்தவங்களுக்கு பிள்ளையாப் பொறந்தது போன ஜென்மத்துல நீங்க செஞ்ச புண்ணியமாவும், அவ செஞ்ச பாவமாவும் இருக்கலாம்!”

“பொண்ணைப் பறிகொடுத்த வருத்தம் இல்ல. அவளை உண்மையா நேசிச்ச மனுஷன எப்படா அவமானப்படுத்தலாம்னு நாய விட மோசமா அலைஞ்சிருக்கீங்க போல..ச்சீ!! என்ன மாதிரி மனுசங்க நீங்க!” என அடக்கப்பட்ட சீற்றம் ஆத்திரம் கொள்ளச் செய்ததில்,ஆவேசமாய்ப் பேசியவள் அட்பமாய் பார்த்தாள், அவர்களை.

கன்றி விட்ட முகத்துடன் கோபமும்,வன்மமுமாய் வேதவியைப் பார்த்திருந்தனர் சஞ்சனாவின் பெற்றோர்.

அவளுக்கோ கோபம் குறையவில்லை. 

“பணம்,பணம் அதை கட்டிட்டு அழுதீங்களே.. எங்க அந்த பணத்தை வெச்சு உங்க பொண்ணை உயிரோட கொண்டு வர முடியுமா உங்களால?இல்ல அவ உயிரோட இருக்கும் போது அந்த பணத்தை வெச்சு அவளை காப்பாத்தத்தான் முடிஞ்சதா?”சரமாரியாகக் கேட்டாள்.

வஞ்சகமாய் அவளை பார்த்து,

“இவ்ளோ சொல்றியே.. நீ இருக்கிற லட்சணத்துக்கு இவன் உன்னை ஆசையோட கட்டிருப்பான்னு நினைச்சிடாதே. எல்லாம் உன் அப்பன் செல்வாக்குக்காக”என கோதை பேசி முடிக்கையில்,

“ஏய்” என்று கையை ஓங்கியிருந்தான் வாசன்.

தன் மனைவியைப் பேசியவர்களை அடித்து நொறுக்கும் ஆவேசம் அவனிடம்.

முயன்று கட்டுக்குள் கொண்டு வந்தவன்,

“மிஸஸ்.ஈஸ்வரன் உங்களுக்கு அவ்ளோ தான் மரியாதை”என ஒரு விரல் நீட்டி எச்சரிக்கை செய்தவனை நோக்கி,

“டேய்”என ஈஸ்வரன் முன்னே வர, அவர் நெஞ்சில் கையை வைத்து தள்ளியிருந்தான் அவன்.

அதற்கிடையில் இங்கெழுந்த சலசலப்பில் அங்கிருந்தவர்கள் கூடி விட்டனர்.

“என்ன ஈஸ்வரன் ஸார், ஏதாச்சும் பிரச்சனையா?” கூடியவர்கள் கேட்கத் தொடங்கி விட,விஷயம் தெரிந்தால் கௌரவம் என்னாகிறது என வாயைத் திறக்கவில்லை மனிதர்.

கோதை தான் பிரச்சினை எதுவுமில்லை என அங்கிருந்தவர்களை போகச் சொன்னார்.

“என்னைப் பத்தி தெரிஞ்சும், எம் மேல் கை வெச்சிட்டல்ல! உன்னை சும்மா விட மாட்டேன் டா”என்றவரை ‘முடிந்தால் செய்’ என்பது போல் அலட்சியமாகப் பார்த்தவன்,

“உன்னை அவமானப்படுத்த எனக்கொரு செகண்ட் ஆகாது ஈஸ்வர். ஆனா உனக்கும், எனக்கும் வித்தியாசம் இருக்காது பாரு.! உன் கட்சிக்கு தெரியாம நீ செய்ற திருகுதாளம் எல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா? என்ன..போட்டுக் கொடுத்துடவா பார்க்கறியா?” என்றான் கேலியாய்.

“என்னடா மிரட்டுறியா?” எகிறினார் ஈஸ்வர்.

அடக்கப்பட்ட ரௌத்திரத்துடன் நக்கலாய் சிரித்த வாசன்,

“ஆவுடையப்பனுக்கு இருக்கிற கருப்பு பணம் பத்தி போலீஸ்கிட்ட சொன்னது அப்ப நீயில்ல, ரைட்?” எனவும்,

“டேய்,டேய்”எனப் பதறியவரைக் கண்டு, அமர்த்தலாய்ப் பார்த்தான் அவன்.

அவனை எதிர்க்க முடியாத தன் கையாலாகாத தனத்தை எண்ணி ஆத்திரமாய் அவனைப் பார்த்தவர், மனம் நிறைய வஞ்சகத்துடனே அங்கிருந்து வெளியேறினர்.

அவர்கள் சென்றதும், அழுத்தமாக பின்னந்தலையைக் கோதிக் கொண்டு, தாடியை நீவி விட்டபடி மனைவியைத் தான் பார்த்தான் இவன்.

கோபத்தில் நடுங்கும் உடலோடு நின்றிருந்தாள் வேதவி. கன்னத்து தசையெல்லாம் இறுகி என்னவோ போல் இருந்தாள்.

அவளின் அந்நிலையைக் கண்டதும் இவனுடலின் இறுக்கம் அதிகரித்தது.

கோயிலில் நுழையும் போதிருந்த மனநிலையை விட,இப்போது இன்னும் மோசமாய் இருந்தது இருவருக்கும்.

இங்கிருக்க விருப்பமின்றி அவள் முகம் பார்க்காமல்,

“வா,வீட்டுக்குப் போலாம்”என அழைத்தான் வாசன்.

ஒன்றும் பேசாது விடுவிடுவென கோயில் உச்சியை நோக்கி ஏறத் தொடங்கினாள்.

“இவள!”என்று பல்லைக் கடித்தவன், அவள் வேகத்திற்கு ஏற்ப ஓட்டமும் நடையுமாக அவளை நெருங்கி,

“என் பேச்சை கேட்க மாட்டேன்னு இருக்கியா வேதவி? வீட்டுக்கு போலான்னு சொன்னேன்”என்றான்.

“முடியாது!”ஒற்றை வார்த்தை தான் அவளிடம்.

இருக்கும் கோபத்தில் 150 படிகளையும் வேகமாய் ஏறி விட்டிருந்தவர்கள், இங்கு வைத்து சண்டை போட வேண்டாமென அமைதியாய் சன்னிதானத்தில் போய் நின்றனர்.

தீரா வினைத் தீர்ப்பவராக அவர்களை வரவேற்றார் முருகன்.

“சிவாண்ணா வீட்டுக்கு போற ரூட்லயா அந்தளோட வீடு இருக்கு?” கடவுளிடம் பார்வையைப் பதித்தபடி சரியாகக் கணித்துக் கேட்டாள் வேதவி.

வெற்றுப் பார்வையுடன் நின்றிருந்தவன்,தன் அமைதியின் மூலம் அதை ஆமோதித்தான்.

இவளுக்கு சுள்ளென வந்தது. ‘அப்படியென்ன அவர்களை எதிர் கொள்ளத் தயக்கம்?’ உள்ளங்கைகளை அழுந்த மூடி கோபத்தை அடக்கிக் கொண்டாள்.

பேச்சற்று ஐந்து நிமிடம் அங்கிருந்தவர்கள், இருவருக்குமிடையில் இருக்கும் இடைவெளியை அதிகரித்தபடி மௌனமாய்க் கீழிறங்கினர்.

அதன் பின்,வீடு வரையிலும் பேச்சு வார்த்தையின்றி இறுக்கமாகவே வந்தனர்.

அதிலும்,வாசனின் இறுகிய உடல், கொஞ்சமும் இளகவில்லை. வீட்டில் அவளை இறக்கி விட்டவன் உள்ளே வராமல் கிளம்பி விட்டான்.

நெஞ்சை அழுத்திய பாரத்துடன் கணவன் சென்ற திசையை சற்று நேரம் வெறித்திருந்து விட்டு வீட்டினுள் நுழைந்தாள் வேதவி.

கூடத்தில் மேகலையும் வாணியும் அமர்ந்திருக்க, அவள் வருவதைக் கண்டு,

“விருந்து எப்படி போச்சும்மா?” என விசாரித்தார் மேகலை.

“நல்லா போச்சுத்த”என ஸ்ருதியே இல்லாது கூறியவளின் பின்னால் பார்த்தவர்,மகன் வராததைக் கவனித்து,

“கீர்த்தி எங்கம்மா?”என வினவ,

“எ.. எங்கயோ வேலையா போறார் அத்த” சோர்வாகச் சொன்னாள் வேதவி.குரல் கரகரத்து வந்தது.

மருமகளின் முகச் சோர்விலும், குரலிலும்,

“என்னாச்சும்மா வேதா? ஒரு மாதிரியாருக்க?”எழுந்தவர் பதட்டமாக அவளிடம் விரைந்தார்.

“லே..லேசா தலைவலி அத்தை!” என சமாளிக்கப் பார்த்தாலும், உண்மையிலே தலை வலிக்க ஆரம்பித்து விட்டது.

“சாப்பிட்டது எதுவும் ஒத்துக்கலையா? நீ முதல்ல உக்காரு!”என அமர வைத்தவர்,

“காலைல தலைக்கு குளிச்சிட்டு பிண்ணிட்டு போனது ஒத்துக்கலயா?”என கேட்டபடி அவள் பின்னலை அவிழ்த்து விட்டார்.

கூந்தல் காய்ந்திருக்கவும்,

“இங்கயே இரும்மா!நான் சூடா காபியும், தலைவலி மாத்திரையும் எடுத்துட்டு வரேன்”என அடுக்களை நுழையப் போக,

அத்தனை நேரமும் இவர்கள் சாம்பாசனையை வேடிக்கை பார்த்திருந்த வாணி,

“நான் கொண்டாரேன் அத்த” கடமைக்கே என எழும்பினாள். அவளைத் தடுத்து விட்டு மேகலையே சமையலறை சென்றார்.

மாமியார் மறைந்ததும்,

“இவளுக்கு சேவை ஒன்னு தான் குறைச்சல்”என்று சத்தமாக முனகியது வேதவி காதில் விழுந்து இருக்கும் எரிச்சலை அதிகரித்து விட, வாணியின் கால் அருகே இருந்த பூச்சாடியைத் தன் காலால் தட்டி விட்டாள் அவள்.

“அம்மா என் காலு!!”வாணி அலறியதை சட்டை செய்யாது இவள் கண்ணை மூடி சாய்ந்து கொள்ள,

“என்னாச்சு..?”என வந்தார் மேகலை.

வலியில் முனகிய வாணி காலைப் பார்க்க வலது கால் பெருவிரல் வீங்கத் தொடங்கியிருந்தது.

உருண்டிருந்த சாடியைக் கவனித்து விட்டு,

“எழுந்திருக்கும் போது இடிச்சிக்கிட்டியா வாணி? பார்த்து எழும்பக் கூடாதா?” என மேகலையே ஒன்றை நினைத்துக் கேட்க, வேதவியை முறைத்தவள், ஆம் என தலையாட்டி வைத்தாள்.

“வரவா,ஹெல்ப் பண்ணட்டா?”

“இல்லத்த, நான் வீட்டுக்கு போறேன்”என கிளம்பி விட்டாள் வாணி.

வேதவிக்கு காபியைக் கொடுத்து மாத்திரையும் விழுங்கச் செய்தவர், அவளை ஓய்வெடுக்கும் படி சொன்னார்.

மாமியாரின் கைகளை ஒரு முறை பற்றி விடுவித்து விட்டு தன் அறை வந்தவளுக்கு மனமே விட்டுப் போயிருந்தது.

போட்டிருந்த உடையைக் களைந்து லேசான குளியலுடன் இலகு உடைக்கு மாறியவள்,உடலை தளர்த்தியது போல் இறுகியிருந்த உள்ளத்தையும் தளர்த்த முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

அதீத அழுத்தத்தில் தொண்டை அடைக்க, செருமிக் கொண்டவள் கட்டிலில் எழுந்தமர்ந்தாள்.

வாசனின் மீது கோபத்தை தாண்டிய ஆதங்கம், ஆற்றாமை,வருத்தம்!

சிவா பேசியதற்கு அந்நேரம் நண்பனைக் கடியாமல் தன்னைக் கண்களால் சமாதானம் செய்தவனின் மீது முதலில் கோபம் இருந்தது தான்!

ஆனால் சஞ்சனாவின் பெற்றோர் அத்தனை பேசியதற்கும் அவன் பதில் கொடுக்காதிருந்தது,அவர்கள் வீட்டு வழியால் கூட செல்லாமல் தவிர்த்தது என எல்லாவற்றையும் நினைக்க, எரிச்சல் தான் மிகுதியானது வேதவிக்கு. 

எதிர்க்கக் கூட மாட்டேன் என்கிறானே.. என்ற ஆற்றாமை! அவர்களெல்லாம் எதிர்க்க தகுதி இல்லாதவர்கள் தான். அதற்காக நாக்கில் நரம்பில்லாமல் பேசுவர்களை பேச விட்டு வேடிக்கை பார்ப்பது முட்டாள் தனம்.

அதிலும் அந்தக் கோதையின் பேச்சு,

‘இந்த தகுதி இல்லாதவங்க கால்ல தான் ரெண்டு வருசத்துக்கு முன்ன நாயா விழுந்து கிடந்தான்னு மறந்து போயிட்டாரோ? இது அவன் பொண்டாட்டிக்கு தெரியுமா?’ என்றாரே!

பெற்ற மகளென்றே பாராது அவள் இறக்கும் தருவாயில் கூட செய்த கொடூரத்தை மறந்து குற்ற உணர்ச்சியே அன்றி எப்படி பேச முடிந்தது அவரால்.?

சைக்! என்ன மனிதர்கள்?!

‘சஞ்சனா இறந்த அன்னைக்கு அவங்க கால்ல விழுந்தேன் வேதா! அவ முகத்தை ஒரு வாட்டி காட்ட சொல்லி அவங்க காலைப் புடிச்சேன். கடைசி வரையும் அவ முகத்தை என்னால பார்க்க முடியாமப் போயிடிச்சு’ உணர்வற்ற குரலில்,கண்ணீரோடு ஜீவனும் வற்றிப் போனவனாய் அன்று அவன் கடந்தகாலக் காதல் காயங்களை சொல்லியது இன்னும் செவியில் கேட்டுக் கொண்டிருப்பது போல் இருந்தது.

அம் மருத்துவமனையில் ஒரு பகுதியில் சிவாவின் அணைப்பிற்குள் இருந்தவாறு மண்டியிட்டபடி கதறிக் கொண்டிருந்தான் வாசன்.

‘மச்சா அவ எங்கிட்ட வந்துடுவால்ல?’

‘சரியாயிடும்னு சொல்லு மச்சா’என அரற்றிக் கொண்டே இருந்தவனை கட்டுக்குள் கொண்டு வரப் போராடிக் கொண்டிருந்தான் சிவா.

‘சரியாயிடும் டா கீர்த்தி!’ என்றவனை திடீரென்று தள்ளி விட்டவன், சஞ்சனா இருந்த அறையை நோக்கி ஓட முயன்றான்.

ஈஸ்வரனும்,அவர் ஆட்களும் அவனைப் பிடித்து உதறி விட, சிவா பிடித்துக் கொண்டான் வாசனை.

‘சஞ்சுவ பார்க்க விடச் சொல்லுடா சிவா!’

‘நாலு நாளாச்சுடா! என்னன் என்னவோ சொல்றாங்க டா! சரியாயிடும் இல்லடா.? சரியாயிடும், சரியாயிடனும்’ பிதற்றிக் கொண்டே இருந்தான்.

வெளியே இருந்து மருத்துவர்கள் உள்ளே செல்வதும், வெளியேறுவதுமாக இருக்க நிலைமையின் தீவிரம் புரிந்தது.

சற்று நேரத்தில் சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளிப்பட்டார் மருத்துவர். இல்லை என்பது போல் மறுத்து தலையாட்டினார். புரிந்து போனது அனைத்தும்.

சஞ்சனா இறந்து விட்டாள்!

வாசனுக்கு உலகம் இருண்டது. வாயை விட்டு அழுகை எல்லாம் வரவில்லை. திக் பிரம்மை பிடித்தது போல் நின்றிருந்தான்.

‘டேய், டேய் கீர்த்தி!’ சிவா நண்பனை உலுக்கினான்.

அவள் இருந்த அறை நோக்கி கையை நீட்டி என்னவோ சொல்ல முயன்றான் வாசன். வார்த்தை தொண்டைக்குழியிலே நின்று போனது.

‘கீர்த்தி’என சிவா தோளைத் தொட்டதும்,மடிந்து கதறத் தொடங்கினான் வாசன்.

சிவா அவனை அமைதிப்படுத்த முயற்சிக்க,

‘பொழச்சு இந்த பிச்சக்காரன கல்யாணம் பண்ணி என் மானத்தை வாங்குறத்துக்கு.. இவ போயி சேர்ந்ததே மேல்!’ என்றார் ஈஸ்வரன்.

சஞ்சனாவின் தாயும் அழுது கொண்டிருந்தவர்,கணவனின் பேச்சில் கண்களை துடைத்துக் கொண்டார். என்னவோ கர்வம் தான் அவர்களது முகத்தில்.

மகளை இழந்தும் பெற்றவர்களின் வலி அவர்களிடத்தில் இல்லையா? இல்லை அதையும் மறைத்து விட்டதா இந்த ஜாதியும்,வீண் பெருமையும்?

சஞ்சனாவின் உடல் வெளியில் கொண்டு வரப்பட்டதும் வாசன் அவளிடம் ஓடினான்.

அங்கிருந்தவர்கள் அவனைத் தள்ளி விட, சிவா பிடிக்க வருகையில் ஓடிச் சென்று ஈஸ்வரனிடம் நின்றான்; அவள் முகத்தை பார்க்க வேண்டுமென்று கேட்டான்; மறுத்தவர்களின் காலைப் பிடித்தான்;கதறினான்.

தூரத்தில் ஒரு மூலையில் இதையெல்லாம் பரிதவிப்பாய் பார்த்தபடி நின்றிருந்தாள் வேதவி. அவன் படும் பாட்டைக் கண்டு,இவள் ஜீவன் நின்று துடிக்க அவனை நோக்கி எட்டு வைத்தாள் பெண்.

அவ்வளவு தான்!சட்டென அக்காட்சிகள் எல்லாம் மறைந்து போனது.

அந் நினைவுகளிலே மூழ்கி விட்டது புரிய,வலித்த மனதைக் கை கொண்டு நீவி விட்டாள்.வலி அடங்கிய பாடில்லை.

எப்படியொரு கொடூரத்தை செய்திருக்கின்றனர். உயிராய் நேசித்தவள் உயிரற்ற உடலாய் இருக்கையில் அவள் முகம் பார்க்கக் கூட மறுக்கப்பட்ட வலி!

இறுதி வரையிலும் அவள் முகம் பார்த்திருக்கவில்லை அவன்.

வாசன் அவர்கள் இனம் இல்லையாம்! அதைவிட பெரும் பிரச்சனை அவர்களது செல்வநிலைக்கு ஒப்பானவன் இல்லையென ஏற்றுக் கொள்ளப்படவில்லை அவர்களது காதல்.

மண்ணோடு மடிந்து போகையில் மயிருக்கே உதவாத அப் பணத்தை வைத்து என்ன செய்து விடத் தான் முடியும்?

ஜாதி, மதம் பேதம் மனிதர்களுக்கே அன்றி காதலிற்கில்லையே?

ஆனால் ஒன்று..

அம் மருத்துவமனையிலே மாண்டது காதலியே அன்றி காதல் அல்ல. அங்கோர் ஓரமாய் நின்று அங்கிருந்தவர்களைப் பார்த்து கை கொட்டிச் சிரித்தது காதல்!

“என்னவோ டிசீஸ் பேர் சொன்னாங்க வேதா! இவளுக்கு சில வருஷமா அதுக்கான சிம்டம்ஸ் இருந்திருக்கு. கவனிக்காம விட்ருக்கா. சாப்பாடு ஒழுங்கா சாப்ட மாட்டா. கேட்டா பசி இல்லைன்னு சொல்லிடுவா. கொஞ்சம் கொஞ்சமா வெயிட் லாஸ் ஆனா. அப்பறம் ரொம்பவே உடம்பு மோசமாயிடிச்சு. ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டா.. ஆ..ஆனாலும்..”

‘ulcerative colitis’-எனும் பெருங்குடல் அழற்சி தான் சஞ்சனாவிற்கு வந்த நோய்.அலட்சியமாய் விட்டதன் விளைவு பாரதுரமாகி இறப்பிற்கு அழைத்துச் சென்று விட்டது.

ஒவ்வொன்றாய் நினைத்து பெரு மூச்சொன்றை விட்டுக் கொண்டாள் வேதவி.

கடந்த காலத்தை மாற்ற முடியா நிதர்சனத்தை உணர்ந்து அலைக்களித்த மனதுடன் கண்களை மூடிக் கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!