அங்கு ரத்தினத்தை எதிர்பார்க்காத இளவரசனோ தப்பிக்கும் முயற்சியில் இருக்க அவனிடம் வேலை பார்க்கும் ஆண்களோ ரத்தினத்தை பார்த்து அரண்டு தான் போனார்கள்.
அவன் ஒரு உதை அடித்தால் கூட ரத்தம் வழியும், அவனின் முகத்தை பாத்து அங்கிருந்தவர்கள் எச்சிலை விழுங்கி கொண்டு ஓட, அவனின் பார்வையோ இலக்கியா எங்கே இருக்கிறாள் என்று தான் சுற்றி தேடியது.
இளவரசனோ அவனின் குடிசையில் இருக்கும் மஞ்சத்தின் அடியில் இலக்கியாவை அடைத்து வைத்திருக்க, அவளோ முனங்கி கொண்டு காலால் மஞ்சத்தின் கால்களை எட்டி உதைக்க, அவளின் கொலுசொலி சத்தம் கேட்டு குடிசையை நோக்கி நடந்தான் ரத்தினம்.
அவன் இலக்கியாவை கண்டு கொண்டான் என்பதை உணர்ந்த இளவரசன் ” இந்தா பாரு டா, ரத்தினம் தேவையில்லாம எங்க வழிக்கு வராத, உனக்கு எவ்வளவு வேணுமோ கொடுக்கறேன் அதை வாங்கிட்டு கம்முனு போயிடு டா, என்னே டே நான் சொல்லிட்டு இருக்கேன் நீ உன் இஷ்டத்துக்கு கிட்ட வர, “என்ற இளவரசனை நோக்கி வந்த ரத்தினம் அவனின் வாயில் ஓங்கி ஒரு குத்து குத்த அங்கிருந்தவர்கள் அனைவரும் தப்பித்து ஓடிவிட்டார்கள்.
அவன் குத்திய குத்தலில் இளவரசனின் வாயில் குருதி வழிய, அதையும் தாங்கிக்கொண்டு கீழே இருந்த மண்ணை அள்ளி ரத்தினத்தின் விழியில் போட்டு விட்டு ஓடினான் குடிசையை நோக்கி.
அங்கு இலக்கியாவோ அவனை பார்த்ததும் அச்சத்தில் அமைதியாக இருந்தாள்.
வெளியே ரத்தினம் அழைத்து வந்த நாய் தனது எஜமான் கண்ணை பார்த்துவிட்டு ஏதோ புரிந்தது போல், இளவரசனை நோக்கி வந்து அவன் அணிந்து இருந்த லுங்கியை அதன் வாயால் பிடித்து இழுக்க, அவனோ நாயை கையால் அடித்துக்கொண்டிருக்கும் சமயம் பார்த்து இலக்கியா அவனை காலால் எட்டி உதைக்க அவனோ நிலைதடுமாறி கீழே விழுந்தான்.
கண்ணில் இருந்த மண்ணை அங்கிருந்த ஒரு பானையில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்து கொண்டு நன்றாக கண்ணில் இருந்த மண்ணை தூசி போல் தட்டி விட்டவன் நேராய் நுழைந்தான் குடிசையில்.
உள்ளே வந்தவன் இலக்கியாவிடம் சென்று அவளின் கை கட்டையும், வாயில் அடைத்து வைத்திருந்த துணியையும் எடுத்து விட்டு அவளை போக சொல்லி கூடவே நாயை துணைக்கு அனுப்பிவிட்டவனின் பார்வை இளவரசனை நோக்கியது.
அவனோ அவனை கோபத்தோடு பார்த்து ” ரத்தினம் வேணாம் டா, என் மேல கையை வச்ச நாளைக்கு உன் ஐயா இருக்கமாட்டாரு டா, அந்த புள்ள தான் ஓடிப்போச்சுல அப்புறம் என்ன வந்த வழியாவே ஓடிப்போயிடு அவ பக்கத்துலே “என்றவனை அங்கிருந்த பானை கொண்டு அவனின் மண்டையை உடைத்தவன், அவனின் கைகால்களை கயிற்றால் கட்டி, அந்த காட்டு பாதையில் தர தரவென இழுத்து சென்றான்.
அங்கிருந்து தப்பித்தவர்கள் நேராக சென்று நின்றது என்னவோ கோமளத்திடம் தான்.
“அம்மா அந்த ரத்தினத்து கிட்ட, நம்ம தம்பி இளவரசன் மாட்டிகிட்டான் மா , “என்றவனை நோக்கி வந்த கோமளம் அவனின் சட்டையை பிடித்து “என்னடே சொல்லுறவன் நீயி , என் புள்ள மேல யாரும் கையை வச்சா என்ன நடக்கும் ன்னு தெரியும்ல, அந்த ரத்தின மட்டும் என்புள்ள மேல கையை வச்சிட்டான், அவன் கையை துண்டு துண்டா வெட்டி போட்ருவேன் “என்று நரி போல உறுமினார் கோமளம்.
அங்கே இளவரசனை தரதரவென இழுத்து கொண்டு ஊரில் எல்லையில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் அவனை போட்டு விட்டு அந்த ஆலயத்தின் மணியை அடித்தான் ரத்தினம்.
ஊரில் ஏதாவது பிரச்சனை என்றால் பஞ்சாயத்துக்கு அழைக்க வேண்டுமானால் அந்த ஆலயத்தின் மணியை தான் அடிப்பார்கள் அந்த ஊர் மக்கள்.
அவன் அடித்த மணியின் சத்தம் கேட்டு ஊரில் உள்ள அனைத்து பெரியவர்களும் அங்கு கூட்டம் கூட, அங்கிருந்த ஒருவனோ அடிவாங்கி ரத்தம் கசிவோடு மல்லாந்து படுத்துக்கொண்டிருந்த இளவரசனை பார்த்துவிட்டு ஓடினான் கோமளத்திடம்.
” அம்மா நம்ம இளவரசன் தம்பி அங்க, அங்க பஞ்சாயத்துல இருக்கு மா “என்று மட்டும் கூறி விட்டு அவன் சென்றுவிட, கோமளமோ வீட்டில் உள்ளே இருந்த அவர் கணவரை பார்த்தார்.
அவர் கணவரோ தனக்கும் அதுக்கும் எந்த சம்மதம் இல்லை என்று போல், சாப்பிட்டு கொண்டிருக்க, அவரின் மகள் இளவரசியோ தாயை முறைத்து பார்த்துவிட்டு முகத்தை திரும்பி கொண்டு சென்று விட்டாள்.
“பெத்த புள்ள பஞ்சாயத்துல இருக்குறான், இங்க சோறு கொட்டிக்கிட்டு இருக்கறாரு மனுஷன் நீ எல்லாம்,, இருய்யா வந்து வச்சிக்குறேன் உனக்கு “என்று கூறி தலை முடியை தூக்கி கொண்டை போட்டுகொண்டு கிளம்பினார் திரௌபதி அம்மன் ஆலயத்தை நோக்கி.
இங்கே பஞ்சாயத்து தலைவர் துரைசிங்கம் முன்னால் அவ்வூர் பெரியவர்கள் அனைவரும் கூடினார்கள்.கூடவே இலக்கியாவின் தாய் ராஜியும், ராதா, சிவகாமியும் அங்கு நின்று நடக்க போகும் வாதத்தை எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள்.
“என்னப்பா ரத்தினம், இப்படி மாட்டை அடிக்கறாப்ல அடிச்சி துவைச்சு இழுத்துட்டு வந்துக்குற, இவன் ஆத்தாகாரி வந்தா என்ன பதில் சொல்லுறது,..”என்றார் அங்கிருந்த ஒரு பெரியவர்.
” ஐயா இவன் ஊருக்குள்ள ரொம்ப ரவுடி வேலை பார்க்குறான், இவன் நமக்கு தெரியாம சாராயம் வேற காய்ச்ச ஆரம்பிச்சுட்டான், இவனை இப்படியே விட்டா ,நம்ம ஊரே சாராய குடிச்சிட்டு சீரழிச்சி போயிடும் “என்றான் இளவரசன்.
அப்போது அங்கு வந்த கோமளம் ரத்தினம் பேசிய பேச்சை கேட்டு “என்ன டே சொன்னா என் புள்ள சாராய விக்குறவனா, டேய் ஆதாரத்தோடு பேசு, ஆத்தி ஆத்தா எனக்கு இருக்கற ஒரே புள்ளைய இப்படி அடிச்சிபுட்டானே, நான் என்ன பண்ணுவேன், ” என்றவர் மகனின் அருகில் செல்ல, அவர் பெத்த மகனோ வலியில் துடித்து கொண்டிருந்தான்.
இதை பார்த்த ரத்தினமோ அவன் மீது இரக்கம் பட்டு அவனை தனது தோளில் சுமந்து கொண்டு ஓடினான் வைத்தியசாலையை நோக்கி.
கோமளமும் அவன் பின்னால் ஓட முயற்சிக்க, அங்கிருந்த பெரியவர்கள் அவரை தடுத்து, இந்தா மா கோமளம், பஞ்சாயத்து இன்னும் முடில, நீ எங்கே ஓடுற, இங்கே நில்லு, சாராயம் காய்ச்சி விற்கிறது ஆதாரம் இருக்கா ன்னு கேட்டியே, அதுக்கு எல்லாம் பக்கவா இருக்கு, இதோ இந்த புள்ள இலக்கியா தான் அதற்கு ஆதாரமே ” என்றார் அப்பெரியவர்.
“இதோ பாருங்கய்யா சும்மா ஊருல இருக்குற பொண்ணை கையை காட்டி, இது தா ஆதாரம் ன்னு சொல்லாதீங்கய்யா, என் புள்ளைய பத்தி எனக்கு தெரியும், “என்றவரை பார்த்த ராதாவுக்கு சுள்ளென்று கோவம் தான் வந்தது.
உடனே கூட்டத்தில் இருக்கும் பெரியவர்களை நோக்கி “இல்லை தாத்தா இவங்க பொய் புளுகுறாங்க, நானும் சீதாவும் தோப்பு க்கு போய்ட்டு புளியங்காய் பொருக்கிக்கிட்டு வரும் போது இந்த இலக்கியா அக்கா கத்துற சத்தம் கேட்டுது, நானும் சீதாவும் ஓரமா மறைஞ்சி நின்னுட்டு பார்த்துட்டு இருந்த அப்ப சீதா காலுல ஒரு கட்டைஎறும்பு கடிச்சிது, அப்போ சீதா போட்ட சவுண்ட்ல, அங்க சாராயம் குடிச்சிட்டு இருந்த இளவரசன் பார்த்து எங்களை துரத்தி புடிக்க ஓடிவந்தான், நாங்களும் ஸ்பீடா ரன்னிங் ரேஸ் ல வூட்டுக்கு ஓடியாந்துடோம் “என்று ஒன்னும் விடாமல் நேரில் பார்த்ததை அப்படியே கூறிய ராதாவை பார்த்து அனல் போல் முறைத்து வைத்தார் கோமளம்.
“இந்தா பாப்பா நீ சின்ன பொண்ணு, சும்மா உனக்கு வாயில வந்ததை எல்லாம் பொயி சொல்லாத, என் புள்ளைய பத்தி எனக்கு தெரியும், வந்துட்டா சாட்சி சொல்ல, அது என்ன என் பையன அவன் இவன் ன்னு சொல்லுற, வாயை புடிச்சி தச்சிபுடுவேன் தச்சி, அந்த இலக்கியா பொண்ணே கம்முனு நிக்கிது உனக்கு என்ன கேடு, மூடிக்கிட்டு உன் வேலையை பார்த்துட்டு போ “என்ற கோமளத்தை நக்கலோடு பார்த்த இலக்கியா அங்கு அமர்ந்து இருந்த துரைசிங்கத்திடம் “ஐயா சாட்சி நான் சொல்றேன், இந்த புள்ள ராதா சொல்றது உண்மை தான். நான் வழக்கம்போல காட்டு வேலையை முடிச்சிட்டு, முகத்தை கழுவிட்டு போகலாம் ன்னு அந்த அருவியில் கிட்ட போனேன். முகத்துல தண்ணீர் கூட தெளிக்கல ஐயா, இந்த அம்மா பெத்தவன் என்னைய என் வாயை பொத்தி தூக்கிட்டு போயிட்டான் ஐயா, நானும் அவன் முதுவுல கடிச்சி பார்த்துட்டேன், கருமம் என்ன நாத்தம் நாறுது, எப்படியோ கடவுள் மாதிரி வந்து இந்த புள்ள ராதா பார்த்துட்டு போனதுக்கு அப்புறம் தான், எனக்கு நம்பிக்கையே வந்துச்சி, என்னைய நீங்க காப்பாத்திடுவீங்கன்னு , ராதா மட்டும் என்னைய பாக்கலன்னா நான் இன்னேரம் அந்த குடிகாரனுக்கு இறையா போயிருப்பேன்.”என்று விழியின் ஓரத்தில் வழியும் கண்ணீரோடு கூறினாள் இலக்கியா.
மகள் கூறுவதை கேட்ட ராஜிக்கோ ஒரு நொடி உடல் அதிர்ந்து தான் போனது. ஓடிச்சென்று ராதாவை பார்த்து திருஷ்டி கழித்து “என் ராசாத்தி நீயும் உன் குடும்பமும் நூறு ஆயுசோடு நன்னா இருக்கனும் ஆத்தா “என்று கூற ராதாவோ வாயெல்லாம் பல்லாக “ஈஈஈ சரிங்க அத்தை “என்று கூற சிவகாமியோ மகளை நினைத்து பெருமை பொங்க பார்த்தார் வர போகும் ஆபத்தை அறியாமல்..
இவையெல்லாம் காளி அவதாரத்துக்கு மேல் கோபத்தில் சிவந்து நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கோமளாவின் வேற தவறான நோக்கத்தில் சிந்திக்க ஆரம்பித்தது.
பஞ்சாயத்தில் சாட்சியோடு நின்றிந்த இலக்கியாவையும் ராதாவையும் கோபத்தோடு பார்த்து கொண்டிருந்த கோமளத்தின் உள்ளமோ வேற தவறான கோணத்தில் சிந்திக்க ஆரம்பித்து விட்டது.
உடனே பஞ்சாயத்து தலைவர் துரைசிங்கம் அங்கு கூடி இருந்த ஊர் மக்களை நோக்கி ” ஏன்மா ஊர் ல இருக்கற முக்கால் வாசி ஜனம் இந்த தானே கூட்டமா கூடிஇருக்கு, பாதிக்க பட்ட அந்த புள்ள இலக்கியாவுக்கு என்ன தீர்ப்பு சொல்லலாம் ” என்று கூறியதும் கோமளத்துக்கு வயிற்றெரிச்சல் தான் வந்தது.
“இந்தாங்க ஊர் தலைவரே, உங்களுக்கே இது நியாயமா இருக்கா, பாதிக்க பட்டது இந்த சிறுக்கின்னா, என் மவன் மட்டும் என்ன குற்றவாளியா! அவனை தான் உன் புத்திரன் ரத்தினம் போட்டு நல்லா அடிச்சிபுட்டானே, அப்போ என் புள்ள பாதிக்க பட்டவன் இல்லையா, என்ன பஞ்சாயத்து இது,”என்றார் கோமளம்.
அவரின் இந்த பதிலை கேட்ட அங்கிருந்த ஊர் ஜனங்களுக்கு கோமளத்தின் மீது வெறுப்புதான் வந்தது.
” ஆமா நீ பொழைக்குறதே ஒரு நாறப்பொழைப்பு, இதுல நியாயம் வேணுமாம் நியாயம், “என்று கூட்டத்தில் ஒருவர் முணுமுணுக்க அது கோமளத்தின் செவியில் நன்றாக கேட்கத்தான் செய்தது.
இனி இங்கு நின்றால் அவமானம் தான் பரிசாக கிடைக்கும், என கருதி “இப்ப இன்னாசொல்லவரிங்க அதை சொல்லுங்க, நான் கேட்குறேன் “என்றதும் “இந்த புள்ள இலக்கியா கிட்ட மன்னிப்பு கேட்கன்னும் “என்றதும் தான் தாமதம்,
“ஆரு, ஆருகிட்ட மன்னிப்பு கேட்கணும், இந்த சிறுக்கி என்னைய விட சிறியவ, நான் அவகிட்ட மன்னிப்பு கேட்கணுமாம் மன்னிப்பு, ஏலேய் அதல்லாம் கேட்க முடியாது, பேசாம நான் கிளம்புறேன், அய்யோ என்ன புள்ளைக்கு என்ன அச்சோ, எது அச்சோ, அந்த பாழாப்போன ரத்தின நல்லாவே இருக்க மாட்டான் “என்றவரின் கன்னத்தின் ஓங்கி ஒரு அறை விட்டார் துரைசிங்கம்.
“ஏய் என்ன விட்டா உன்னிஷ்டத்துக்கு பேசுவியா, என் பையன் உன் பையனை காயத்தோடு விட்டான்னு நினைச்சி சந்தோஷப்படு , அதை விட்டுபுட்டு சும்மா என் பையன குறை சொல்லாத, நீ உன் பையன வளர்த்த விதம் எனக்கு தெரியும், ஆனா என் பையன் சுத்த இரத்தின, போ போயி முடிஞ்சா உன் பையன காப்பாத்திக்க, இனி ஒருதரம் இந்த மாதிரி ஊருக்குள்ள இருக்கற பொண்ணுங்க மேல உன் பையன் நகக்கீறல் ஏதாவது பட்டுச்சு, குடும்பமே நிம்மதியா இங்க வாழமுடியாது, ஆமா சொல்லிட்டேன், “என்றவர் கோவத்தில் கையை நீட்டி எச்சரித்து விட்டு, இலக்கியாவிடம் திரும்பி “இனி காட்டு வேலைக்கு போவாத புள்ள, வூட்டுலே உன் ஆத்தா பேச்சை கேட்டு இருந்தா இன்னேரம் இந்த பிரச்சனை வந்திருக்குமா, சரி வுடு நடக்கும்னு விதி “என்று கூறிவிட்டு யாரிடமும் எதையும் கூறாமல் தோளில் இருந்த துண்டை எடுத்து கொண்டு நடந்தார் அவரின் இல்லத்தை நோக்கி.
அவர் சென்ற பிறகு கூட்டம் கலைந்து சென்றது. அங்கு ராதா அவள் தாயிடம், சீதாவின் இல்லத்திற்கு செல்வதற்காக கூறிவிட்டு கோமளம் செல்லும் பாதையில் நடக்க ஆரம்பித்தாள்.
கோமளத்தை பார்த்ததும் பார்க்காத மாதிரி தலையை நிமிந்து நடந்து சென்றிருந்தவளின் கரத்தை பிடித்து “அடியேய் பொசகெட்டவளே உன்னைய எவன் டி சாட்சி சொல்ல சொன்னான், உனக்கு கைகால் தான் சும்மா இருக்காதுன்னு நினைச்சேன், அதுக்கு மேல வாயி நல்லா நீட்டா இருக்கு, ஏன் டி உனக்கு என்னைய பத்தி தெரியுமா தெரியாதா, உனக்குலாம் என்னைய பார்த்தா பயமே இல்லையா, வளந்து நிக்கிறா பாரு நல்லா குண்டுபூசணி கணக்கா, என்ன டி முறைப்பு, முழிய நோண்டி எடுத்துப்புடுவேன், பார்த்துக்க போ போயி ஊரு மெய்ச்சிட்டு வா “என்றவரின் கையை பிடித்து கடித்து விட, அவரோ ஆஆஆஆ வென கத்தும் போது கீழே கிடந்த கூழாங்கல்லை எடுத்து கோமளத்தின் திருவாய்க்குள் போட்டு விட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள் ராதா.
“த்து துஉஉஉஉஉஉஉஉ என்ன இந்த சிறுக்கி கல்லை எடுத்து வாய்க்குள்ள போட்டுட்டு போற, சரியான ராங்கி, திமிரு பிடிச்சவ, இரு டி உனக்கும் அந்த இலக்கியாக்கும் சேர்த்து வச்சிக்குறேன் “என்றவர் அவரின் இல்லத்தை நோக்கி நடையை கட்டினார்.
அங்கே வைத்தியசாலையில் இருந்து இளவரசனை அவனின் வீட்டுக்கு கொண்டுவந்து வெளியே இருந்த கயிறு கட்டிலில் கிடத்தியவன், அவனின் முகத்துக்கு நேராக விரலை நீட்டி “ஏலேய் இதோ பாரு, உன் வாலை இத்தோடு சுருட்டி ஓரமா வச்சிட்டு நேர்மையா திருத்தி வாழற வழியை பாரு, மறுபடியும் ஏதாவது ஏடாகூடமா தப்பு செய்ஞ்ச ன்னு தெரிஞ்சிது, இதோ இன்னக்கி அடிச்ச அடி போல கையாலே அடிக்க மாட்டேன், கோடாரி எடுத்து ஒரே போடு தான் போடுவேன், நேரா பரலோகம் தான் போவ நீயி “என்றவன் எதேற்சையாக அங்கிருந்த தோட்டத்தை சுற்றி பார்வையை செலுத்தும் போது, அவனின் விழியில் கண்டாள் அவனின் மனதை கொள்ளை அடித்த பாவையவள்.. ஆம் அவள் தான் இளவரசனின் அக்காள் இளவரசி.
அவளோ தனது அண்ணனின் பொறுக்கி தணத்தை எண்ணி மிகவும் கவலையோடு தோட்டத்தில் இருக்கும் அரளி பூச்செடி அருகில் இருக்கும் கிணற்றின் கீழ சாய்ந்து சோகமாக அமர்ந்து கொண்டிருந்தாள்.
அவளின் அருகில் சென்று அவளின் சோகமான முகத்தை கண்டவனுக்கு புரிந்தது.
சற்று தொண்டையை செருமி “க்கும் “என்று எச்சிலை முழுங்க, அந்த சத்தத்தில் யாரென்று வந்தவனை நிமிந்து பார்த்தாள் இளவரசி.
“அய்யோ சின்னய்யா, நீங்க எப்போ இங்க வந்தீங்க, பஞ்சாயத்து முடிஞ்சிதா, என் அண்ணன் ஏன் தான் இப்படி பொம்பள பிள்ள பின்னாடி சுத்துறானே தெரில. அவனே சும்மா இருந்தாலும் என் ஆத்தா தான் அவனை சீண்டி பார்க்கும், என்ன சின்னய்யா நான் பேசிட்டு இருக்கேன், நீங்க என் முகத்தை நல்லா உறுத்து பாக்கறீங்க, ஏதாவது கரிகிரி இருக்கா என்ன? என்று ஓயாமல் பேசும் பெண்ணவளே பார்த்து சிரித்தான் ரத்தினம்.
“ஹான் அதுவந்து ஒன்னும் இல்லை, உனக்கு என்ன வயசு அரசி, “எனவும் அவனின் அரசி என்று பெயரை புதியதாக கேட்டவள் “அது யாரு அரசி, இங்க நான் மட்டும் தானே இருக்கேன், “என்றவனை நோக்கி கேட்டாள் இளவரசி.
“அடியேய் உன்னைய தான் டி கேட்குறேன் “
என்றவனின் டி என்ற அழைப்பில் முகம் சுளித்தவள், “சின்னய்யா எனக்கு வயசு பதினெட்டு தான் ஆகுது. ஏன் இதெல்லாம் கேட்கறீங்க நீங்க, ஆமா நீங்க இப்போ என்னைய டி போட்டு தானே கூப்பிட்டீங்க, யாராவது பார்த்துட்டா என்ன நினைப்பாங்க முதல்ல இங்க இருந்து போங்க, நான் போறேன் ” என்று அவள் செல்ல முயற்சிக்கும் போது அவளின் கரத்தை பற்றினான் ரத்தினம்.
அவனின் இந்த செயலில் அதிர்ந்தவள் “கையை விடுங்க யாராவது பார்த்துட்டாங்கன்னா நாளைக்கு உங்க குடும்பம் பஞ்சாயத்துல நிக்கும், ஒழுங்கா கிளம்புங்க “என்று பேசிக்கொண்டு இருக்கும் பாவையவளின் இடையை இறுக்கி பிடித்து அவளின் முகத்தை நேருக்கு நேராய் பார்த்தவன் என்ன கண்டனோ அவளின் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தத்தை வைத்துவிட்டு கடைசியில் அவளின் உதட்டை நோக்கினான், அவளும் அவனின் இந்த செய்கையை கண்டு திகைத்து நிற்க , அவனோ அவளின் இதழை கவ்விக்கொண்டான்.
அவனின் திடீரென்று இப்படி நடக்கும் என்று எதிர்பாக்காத பெண்ணவளின் கண்களின் இருந்து தாரை தாரையாக முத்து போல் கண்ணீர் கொட்டியது.
அவளின் கண்ணீல் வழிந்த கண்ணீரை கண்டவனுக்கு தான் செய்தது தவறு என்று உணர்ந்தவன், அவளிடம் “அரசி என்னைய பாரு, ப்ச் என்னைய பாருன்னு சொல்றேன்ல, நான் உன்னைய படிக்கும் போதே லவ் பண்றேன், என்னோட ஆசை நான் ராணுவத்துக்கு போகணும் அதுக்கு தான் காதலை என் மனசுக்குள்ளே பூட்டு போட்டு மூடி வச்சிக்கிட்டு இருந்தேன் இத்தனை நாளாய், ஆனா இன்னக்கி உன்னைய பார்த்ததுக்கு அப்புறம் எனக்கே என்னைய கண்ட்ரோல் பண்ண முடில, இன்னும் ஒன்றை வருஷம் பொறுத்துக்கோ, தாம்பூலம் தட்டோட பெரியவர்களை கூட்டுகிட்டு உன்னைய பொண்ணு கேட்க வரேன் “எனவும் அவனிடம் அவள் ஏதோ கூற வாயெடுக்கும் முன் “ஏதும் சொல்லவேணாம் நீ உங்க அம்மா அப்பா அண்ணனுக்கு தானே பயப்படுற, அதையெல்லாம் நான் பார்த்துக்குறேன், நீ தைரியமா இரு, அப்புறம் என்னைய நம்பலாம், நான் ஏமாத்திட்டு போயிட்ட மாட்டேன் இது உன்மேல சத்தியம் “என்று அவளின் உச்சி தலையின் மீது கை வைத்து சத்தியம் செய்து விட்டு சென்று விட்டான் ரத்தினம்…
அவன் சென்ற பிறகு இன்னும் சிலையாய் தான் நின்று கொண்டிருந்தாள் பெண்ணவள். திடீரென நடந்த இந்த காதலின் முத்தத்தில் அதிர்வோடு சுயநினைவில்லாமல் பொத்தென்று நின்ற இடத்திலே அமர்ந்தாள் இளவரசி.
அதான் பிறகு வந்த நாட்களின் இருவரும் சந்திக்கவோ, நேருக்கு நேராய் பார்க்கவோ இல்லை.
இளவரசனின் உடல்நலம் முழுமையாக தேற்றியது.
ஆனால் மனதில் இருந்த வஞ்சம் மட்டும் மாறவே இல்லை. அவனின் தாய் அவனை மேலும் சீண்டி விட, அவனும் அய்யனாரின் மறுஅவதாரமாக அவனை பஞ்சாயத்தில் நிற்க வைத்தது, ரத்தினத்திடம் அடிவாங்க வைத்தது இவையெல்லாம் காரணம் ராதாவே என்று நினைத்து ராதாவை பழிவாங்கும் எண்ணத்தோடு காத்திருந்தான்.
அதற்கு நாளும் பொழுதும் வரும் நாளை எதிர்பார்த்து கொண்டிருந்தான் இளவரசன்.
அன்று ஞாயிறுக்கிழமை,வானத்து இளஞ்சூரியன் புவியின் மறுபாதிக்கு கிளம்ப ஆயுத்தமாகிய காலை நேரம்.
ஊர்மக்கள் அனைவரும் தங்களது பிழைப்பை பார்க்க கிளம்பிய வேளை, அன்று இலக்கியாவின் ஜனனத்திருநாள்.
வழக்கம் போல் புத்தம் புது தாவணி பாவாடையை அணிந்து கொண்டு ஊரில் கடைசியில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு கிளம்ப ஆயுத்தமானவளை தடுத்து நிறுத்தினார் அவளின் தாய் ராஜி.
“இந்தா டி இன்னக்கி சங்கஹர சதுர்த்தி அதனால சாயங்காலம் கோவிலுக்கு போயிவா, இப்போ போயி அடுப்புண்ட இருக்குற வெங்காயத்தை எடுத்து உறிச்சி அறிஞ்சி வை இன்னக்கி பிரியாணி செய்வோம் “என்றவுடன் ” பிரியாணி சூப்பர் ம்மா, என்ன பிரியாணி அம்மா “என்ற கெட்ட மகளை பார்த்த ராஜி “” உன் அப்பன் கறி எடுத்தார போனவரு இன்னும் காணோம், அவர் எடுத்துட்டு வந்தா கறி பிரியாணி செய்வோம், இல்லைனா காய்போட்டு பிரியாணி செய்ஞ்சி கொடுக்குறேன் “என்றதும் மகளின் முகத்தை பார்த்தார்,
அவரின் மகளோ முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு இருக்க, அதில் மனது தாங்காது, “சரி இரு உன் அப்பன் வரட்டும், கறியோட வந்தா பார்ப்போம் இல்லைன்னா கறியோடு தான் வீட்டுக்கு வரணும் சொல்லி அனுப்புவோம் “என்ற தாயை கட்டியணைத்து முத்தம் பொழிந்தாள் இலக்கியா…
இளவரசனின் தோட்டம்.
“டேய் கோபு, இன்னக்கி அந்த ராதாவை பழி வாங்கியே தீரணும் டா, அவ இருக்கற வரைக்கும் என்னால நிம்மதியா இருக்க முடியாது, எத்தனை பொட்டச்சிங்க இருக்குதுங்க இந்த ஊருல எல்லாருமே என்னைய பார்த்து பயந்து ஓடுங்க, ஆனா அந்த ராதா என் ஆசைக்கு குறுக்கால வந்து ஊரு எல்லாரு முன்னாடியும் என்னைய அசிங்கமா பார்க்க வச்சவ, அவ மட்டும் அன்னைக்கு வரல, இன்னேரம் அந்த இலக்கியா எனக்கு இரையா இருந்து இருப்பா, எல்லாமே அவளால தான், இன்னக்கி அவளை எப்படியாவது ஒரு வழி பண்ணனும், வெள்ளையா இருக்கவே தான் அவ இந்த பேச்சி பேசுறா, என் ஆத்தா கையை புடிச்சி கடிச்சதும் இல்லாம, என் ஆத்தா கத்தும் போது வாயில கல்லை எடுத்து போட்டுட்டு போயிட்டா டா கோபு, அவளுக்கு என்ன உலக அழகின்னு நினைப்பா, இன்னக்கி பாரு அவ முகத்துல எப்படி கோணலா வெந்து போயி சாகப்போறதை, ஹாஹாஹா “என்று கையில் இருந்த சாராயத்தை குடித்தவனுக்கு தெரியவில்லை, அவன் பேசியதை அவனின் தமக்கை இளவரசி கேட்டுவிட்டாளென்று.