Skip to content
Post Views: 8,000
மறுநாளே எல்லோரும் கிளம்பி திண்டிவனம் சென்றிருந்தனர். தேவநாதன் மட்டும் அவளோடே தங்கிவிட்டான்.
அந்த வார விடுமுறைக்காக காத்திருந்த தேவநாதன், வெள்ளியன்று இரவே அவளை அழைத்துகொண்டு திண்டிவனத்திற்கு சென்றான்.
இவளுக்காகவே காத்திருந்ததுபோல வீட்டில் அடுத்த பூகம்பம் வெடித்தது.
மீனா அஞ்சனா வேலைக்கு செல்லகூடாது என மறுப்பு தெரிவித்தார்.
Advertisement
முதல் நாள் வந்ததும் சாப்பிட்டு படுத்துவிட்டனர். அடுத்த நாள் காலை எழுந்ததுமே மீனா ஆரம்பித்திருந்தார், அஞ்சனா வேலைக்கு செல்ல வேண்டாம் என்று தேவநாதனிடம் கூறிக்கொண்டிருந்தார்.
அஞ்சனாவும் அங்கேதான் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் அவரது பேச்சுக்கு எந்த பதில் பேச்சும் பேசவில்லை. எல்லோரும் இருந்ததால் அமைதியாக இருந்தாள்.
செல்வதுரைக்கும் இந்த எண்ணம் சில நாட்களாக இருந்தது. அவருக்கும் தேவநாதன் சென்னைக்கும் திண்டிவனத்திற்கும் அலைவதில் விருப்பமில்லை.
Advertisement
நடந்து முடிந்த விபத்தில் இருந்து அவன் பிழைத்து வந்ததே அரிதானதாக இருந்தது. இதில் மறுபடியும் காரில் சென்னைக்கும் திண்டிவனத்திற்கும் அலைவதில் அவருக்கும் உடன்பாடு இல்லை. எங்காவது ஒரே இடமாக இருந்தால் தேவலை என்றுதான் அவரது எண்ணம் இருந்தது.
Advertisement
அவர் ஏற்கனவே தேவநாதனிடம் சொல்லியும் பார்த்துவிட்டார். நீ சென்னையிலேயே தங்கிக்கோயேன் தேவா. ஏன் இங்கயும் அங்கயுமா அலையிறே என கூறிப்பார்த்தார்.
தேவாதான், என்னோட பிஸ்னஸ் எல்லாம் இங்கயிருக்குப்பா. இதைவிட்டுட்டு நான் எப்படி அங்க தங்குவேன் என மறுத்துவிட்டான்.
இப்பொழுது மனைவியும் அதே காரணத்தை முன்வைத்து அஞ்சனாவை வேலைக்கு போகக்கூடாது என பேசவும் மௌனமாக இருந்தார்.
Advertisement
தேவா, Kம்மா…… அவள் வேலைக்கு போறதுல என்ன பிரச்சினை…? போகட்டுமே….K
Kஏன்டா சொல்லமாட்ட……? நீ வாராவாரம் இங்கைக்கும் அங்கைக்குமா அலையிறத பார்த்து நானில்ல பயந்துபோயிருக்கேன். உனக்கு விளையாட்டா இருக்கா…… திரும்ப ஏதாவது ஒன்னுன்னா….. என்னால தாங்கமுடியாது…..” என கண்ணை கசக்கினார்.
“ஒன்னு நீ உன் பொண்டாட்டிகூட போய் தங்கிக்க. இல்லையா….. அவளை வேலைய விட்டுட்டு இங்க வர சொல்லு”.
அவர் கூறுவதின் பொருள் புரிந்து அஞ்சனா அமைதியாக இருந்தாள். அவளால் ஏதும் பேசமுடியவில்லை.
தேவநாதன் அஞ்சனா இருவரும் ஏதும் பேசாமல் சாப்பிட்டு முடித்து எழுந்து சென்றதைப் பார்த்த மீனா…. எரிச்சலடைந்தார்.
மீனா, “புருஷன் பொண்டாட்டி இரண்டும் அழுத்தம். யார்கிட்டயோ பேசற மாதிரி இரண்டும் வாய மூடிட்டு அழுத்தமா போறத பாரு……” என முணு முணுத்தார்.
“அம்மா… எல்லாமே உடனே நடந்துடுமா…? இப்பதான சொல்லியிருக்கே. அவங்க யோசிச்சு முடிவெடுப்பாங்க. இது அவங்க லைப் ம்மா….. ஒரு அளவுக்கு மேல யாரும் தலையிட முடியாது. அமைதியாயிரு…” என கார்த்திக் மீனாவை சமாதானப்படுத்தி, அமைதிப்படுத்தினான்.
அஞ்சனா மீனா பேசியதில் மனம் கலங்கி உட்கார்ந்திருந்தாள். அவளைத் தொடர்ந்து அறைக்குள் வந்த தேவநாதன், அஞ்சனா கலக்கமாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அவளருகில் வந்து, என்னாச்சு மா….?’’ அம்மா பேசுனதுக்கு வருத்தப்படறியா….? விடு பார்த்துக்கலாம்” என சமாதானம் பேசினான்.
“அத்தை சொல்றதும் நியாயம்தான. நான் உங்களை கஷ்டப்படுத்தறேனா…?” என்றாள் நேரெதிர் நின்றிருந்தவன் கைகளைப் பற்றி அவனை நிமிர்ந்து பார்த்து.
“இல்லடா… நீ அதெல்லாம் நினைச்சு மனசை குழப்பிக்காத”.
உட்கார்ந்தவாக்கிலேயே அவனது வயிற்றில் தனது முகத்தை வைத்து அழுத்திக்கொண்டவள், தனது கைகளால் அவனை சுற்றி கட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள். மனம் முழுதும் மீனாவின் வார்த்தைகளே திரும்ப திரும்ப ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.
மனைவியின் சஞ்சலத்தை உணர்ந்தவன், அவளது தலையை மிருதுவாக வருடிவிட்டான். சில நிமிடங்கள் அப்படியே இருந்தவள், “உங்களுக்கு வேலைக்கு லேட்டாகுதில்ல…, நீங்க கிளம்புங்க” என்றாள் அவனை நிமிர்ந்து பார்த்து.
எல்லாம் ஓரளவு சரியாகி வந்திருக்கிறது என நினைக்கும் நேரத்தில் மறுபடியும் ஒரு சிக்கல் என சோர்வாக இருந்தது அஞ்சனாவுக்கு.
அவளையே கண் எடுக்காது பார்த்திருந்தவன், “ரெஸ்ட் எடுடா…. வந்திடுறேன்…” என கிளம்பிவிட்டான்.
அறையில் அடைந்துகிடக்க பிடிக்காமல், வெளியே வந்து பிள்ளைகளுடன் பேசி விளையாடிக் கொண்டிருந்தாள் அஞ்சனா.
மீனா காஞ்சனா கீர்த்தி எல்லாரும் டைனிங் டேபிளில் உட்கார்ந்து தோட்டத்தில் இருந்து அறுத்து வந்த வாழைப்பூவை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அஞ்சனா அவர்களது அறைக்கு சென்று கையில் சில பைகளை கொண்டு வந்தாள். தயக்கமாக இருந்தாலும் அவர்கள் அருகில் சென்று அந்த பைகளை எல்லாம் டேபிள் மேலே வைத்தாள்.
மூவரும் அந்த பையைப் பார்த்துவிட்டு அவளை நிமிர்ந்து பார்த்தனர்.
“அ..து… எனக்காக ஷாப்பிங் போனேன். அப்படியே உங்களுக்கும் வாங்கிட்டு வந்தேன். இது உங்களுக்கு பிடிக்குமான்னு தெரியல. மறுக்காம வா..ங்கிக்கனும்” என தயக்கமாக கூறிக்கொண்டே மீனாவிடம் ஒரு பையை எடுத்து கொடுத்தாள்.
திருமணத்திற்கு பின்பு முதல்முறையாக அஞ்சனா மீனாவிடம் நேரடியாக அவர் முன்பு நின்று பேசுகிறாள். அதுவும் அவருக்காக ஏதோ வாங்கிவந்து அவரிடம் கொடுத்துகொண்டே.
காலையில் நடந்த சச்சரவிற்குப் பிறகு மருமகளே தன்னிடம் வந்து நின்று நேரடியாக பேசியது அவரின் வேகத்தை சற்று தணித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
அவள் நீட்டியதை சட்டென்று வாங்காமல் சில நொடிகள் புருவத்தை சுருக்கி கேள்வியாக அதனை ஆராய்ந்தவர், அவளை நிமிர்ந்து பார்த்தார். அஞ்சனா அதுவரை அவரையேதான் பார்த்திருந்தாள் கெஞ்சலாக எடுத்துகொள்ளவேண்டுமே என.
மருமகளின் பார்வையில் தெரிந்த வேண்டுதலில், மனமிறங்கி அதனை வாங்கி பிரித்து பார்த்தார். அடுத்து காஞ்சனாவுக்கும் கீர்த்திக்கும் என ஆளுக்கு ஒரு பையை எடுத்து கொடுத்தாள். அவர்களும் வாங்கிக்கொண்டனர்.
பிள்ளைகளும் வந்து “எனக்கு…. எனக்கு…” என அவளை சூழ்ந்துகொண்டனர்.
உங்களுக்கும் இருக்குடா செல்லம் என அவர்களை அழைத்து சென்று அவர்களுக்காக வாங்கி வந்திருந்தவற்றை அவர்களிடம் எடுத்துக் கொடுத்தாள்.
அதில் அவர்களுக்கான உடை விளையாட்டு சாமான்கள் என்று எல்லாம் அவர்களுக்கு பிடித்தமாதிரி இருந்ததால் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர்.
அதிலும் காஞ்சனாவின் மகன் யஷ்வந்த் வந்து அவளைக் கட்டிக்கொண்டான். “சித்தி எனக்கு ரொம்ப நாளா இந்த டாய் வாங்கனும்னு ஆசை. தேங்க்ஸ் சித்தி…” என அவளது கால்களை கட்டிக் கொண்டான். அவனைப் பார்த்து மற்ற பிள்ளைகளும் வந்து நின்று “தேங்க்ஸ் சித்தி” என்றனர் சிரித்துகொண்டே.
“செல்லங்களா…. சித்திக்கு தேங்க்ஸ்லாம் வேணாம். உங்களுக்கு பிடிச்சிருக்கா சொல்லுங்க…”
“ஹ்ம்ம்….. ரொம்ப…” என்றாள், இரண்டு வயது தீபிகா. பார்க்கவே ரசனையாக இருந்தது. எல்லோரும் அவள் கையை விரித்து காட்டி சொல்லிய பாவனையில் பக்கென்று சிரித்துவிட்டனர்.
காஞ்சனாவுக்கு அவளிடம் இருந்து வாங்குவதற்கு மனமில்லை என்றாலும் மாமியாரே வாங்கிவிட்ட பிறகு தான் மறுத்தால் ஏதாவது சொல்வாரோ என பயந்து வாங்கிக் கொண்டாள்.
கீர்த்தி பையை வாங்கிய அடுத்த கணமே அதனை பிரித்து பார்த்தாள். லேட்டஸ்ட் மாடலில் டிசைனர் புடவை இருந்தது.
“ஹேய் நல்லாயிருக்கு அஞ்சு. காஸ்ட்லியா இருக்கும் போலயே…?” என்றாள் பிரித்து பார்த்துகொண்டே.
“பர்ஸ்ட் டைம் உங்களுக்கு எடுத்து தரேன். நல்லதாயிருக்கனுமில்ல. பிடிச்சிருக்கா…..?” என்றாள் பக்கத்தில் வந்து நின்று ஆசையாக.
“ஹ்ம்ம் நல்லாயிருக்கு…” என சந்தோஷமாக கூறியவள், உடனே அந்த சேலையை அவளது ஷோல்டரில் போட்டுகாட்டி காஞ்சனாவிடம் “நல்லாயிருக்கு இல்லக்கா….” என்றாள்.
காஞ்சனாவும் புன்னகைத்துகொண்டே, ஆமாம் என தலையசைத்தாள்.
மீனாவுக்கும் அவர் கட்டுவது போலவே கொஞ்சம் விலை அதிகமான சேலைதான் எடுத்து வந்திருந்தாள். பிரித்து பார்த்துவர் ஏதும் சொல்லாமல் திரும்ப பைக்குள்ளேயே வைத்துவிட்டார்.
“உங்களுக்கு பிடிச்சிருக்கா அத்தை. இல்லன்னா மாத்திக்கலாம். பில்லிருக்கு…” என அவரைப் பார்த்து கேட்டாள்.
அவருக்கும் அந்த சேலை பிடித்திருந்தது. அவர் இதுவரை கட்டிய சேலைகளை எல்லாம் பார்த்திருந்த அஞ்சனாவுக்கு அவருடைய தேர்வு என்னவாக இருக்கும் என யோசித்துதான் எடுத்து வந்திருந்தாள். அதுவும் அவரிடம் இல்லாத கலராக சூஸ் செய்து எடுத்திருந்தாள். அவருக்கு சேலை தேர்வு செய்யதான் நீண்ட நேரம் பிடித்திருந்தது.
அவர் ஏதாவது சொல்வாரோ என பயந்தே எடுத்திருந்தாள். ஆகையால் அவரது விருப்பத்தை தெரிந்து கொள்ளதான் அவரிடம் நேரடியாகவே கேட்டாள்.
சேலை பிடித்திருந்தாலும் அதை மனம்திறந்து ஒத்துக்கொள்ள அவரது வீம்பு இடம் தரவில்லை.
அவரையே சில நொடிகள் பார்த்து நின்றவள்…. அவரது முகத்திலிருந்து எந்த பிரதிபலிப்பும் தெரிந்து கொள்ள முடியாத தால், “பிடிக்கலையா… த்தை, வேண்ணா… மாத்தி தரவா…” என்றாள்.
அவளை நிமிர்ந்து பார்த்தவர், “மொத… மொத… எடுத்தத ஏன் மாத்துவானேன். இருக்கட்டும்…” என அதனை எடுத்துகொண்டு அறைக்குள் சென்றுவிட்டார்.
அஞ்சனாவுக்கு முகத்தில் இதுவரை இருந்த உற்சாகம் பட்டென்று குறைந்துவிட்டது. அங்கேயே ஒரு சேரை இழுத்து போட்டு அமைதியாக உட்கார்ந்துவிட்டாள்.
அவளைப் பார்த்து சிரித்த கீர்த்தி, “என்ன…..?”
“அத்தைக்கு பிடிக்கலபோல…”
“நீ வேற… அதெல்லாம் அவங்களுக்கு பிடிச்சிடுச்சு. அவங்களுக்கு பிடிச்சதாலதான் எதுவும் சொல்லாம எடுத்துட்டு போயிட்டாங்க. இல்லக்கா….” என்றாள் காஞ்சனாவைப் பார்த்து.
அவளும் சிரித்துகொண்டே, ஆமாம் என தலையாட்டினாள்.
அஞ்சனா, “என்ன சமையல் ……க்கா இன்னைக்கு”.
கீர்த்தி திரும்பி காஞ்சனாவைப் பார்த்தாள். “இன்னும் எதுவும் முடிவுபண்ணல, இன்னைக்கு சனிக்கிழமையில்ல. சைவம்தான்…” என்றாள் காஞ்சனா.
மூவரும் பேசிக்கொண்டே ஒன்றாக நின்று சமையல் வேலையைப் பார்க்க துவங்கினர்.
மறுநாள், தேவநாதன் மனைவியை அழைத்துகொண்டு அவளது வீட்டிற்கு வந்திருந்தான். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென புறப்பட்டு வந்திருந்தனர்.
இவர்களைப் பார்த்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போயிருந்தனர் அவளது வீட்டினர். பொண்ணும் மாப்பிள்ளையும் முதன்முதலாக வருவதால் அவர்களை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றார் ரோகிணி.
வேல்முருகனுக்கு முகமெல்லாம் பூரிப்பு. அவரே வெளியே வந்து வாங்க. வாங்க மாப்பிள்ள என மருமகனை கைப்பிடித்து முகமலர்ச்சியுடன் வரவேற்றவர் அவனின் கைப்பிடித்து உள்ளே அழைத்து சென்றார் சிறுகுழந்தைபோல சிரித்துகொண்டே.
அஞ்சனா அவர்களோடு சேர்ந்து வராமல் தந்தையை முறைத்துகொண்டு அங்கேயே நின்று கொண்டிருந்தாள். மகளைக் காணாமல் திரும்பி பார்த்த வேல்முருகன் “என்னடா… ஏன் இங்கயே நின்னுட்டமா…” என அஞ்சனாவிடம் வந்து நின்றார்.
“மருமகனைப் பார்த்ததும் பொண்ணை மறந்துட்டீங்க. அவரைமட்டும் கைப்பிடிச்சு உள்ள அழைச்சுட்டு போறீங்க” என செல்லமாக அப்பாவை முறைத்து நின்றாள்.
“ஹா… ஹா… இதுக்குதான் முறைப்பா…” என அஞ்சனாவைக் கைப்பிடித்து உள்ளே அழைத்து சென்றார்.
லஷ்மி பேரனின் கையைப் பிடித்துகொண்டு அவன் பக்கத்திலேயே உட்கார்ந்து, அவர்களது நலன் விசாரித்து பேச தொடங்கிவிட்டார்.
அன்று வேல்முருகன் ரோகிணிக்கு திருமணநாள். அதற்காகதான் அஞ்சனா தேவநாதனை வற்புறுத்தி பிடிவாதம் செய்து அழைத்து வந்திருந்தாள்.
போன வருடம் இதே தினத்தில் அஞ்சனா தங்களுடன் இருந்ததை நினைத்துப் பார்த்து கொண்டிருந்தனர் காலையிலிருந்து வேல்முருகனும் ரோகிணியும்.
பெற்றோரை கோவிலுக்கு அழைத்து சென்று, ரோகிணியை சமைக்க விடாமல் அஞ்சனாவே சமைத்துகொடுத்து, அவர்களுக்கு விருந்து வைத்ததை எல்லாம் நினைவுபடுத்தி பேசிக் கொண்டிருந்தார்கள், மாற்றி மாற்றி குடும்பத்தினர், மறக்க முடியாமல்.
வேல்முருகன் கையில் இன்னும் மகள் வாங்கி பரிசளித்திருந்த வைர மோதிரம் மின்னிக் கொண்டிருந்தது. அதையே திரும்ப திரும்ப காலையில் இருந்து பத்து தடவையாவது பார்த்திருப்பார், மகளின் நினைவில்.
போன வருடம் மகள் செய்த ஆர்ப்பாட்டம் எல்லாம் கண்ணுக்குள் காட்சிகளாக உலா வந்த கொண்டிருந்தது ஏக்கமாக.
அன்று மாலை “கேக்கெல்லாம் வேண்டாம் மா….. இது எல்லாம் எங்களுக்கு பழக்கம் இல்லடா….” என கூச்சப்பட்டு கொண்டு மறுப்பு தெரிவித்தும், விடாமல் பிடிவாதமாக இருவரையும் நிற்க வைத்து கேக் கட் பண்ண வைத்திருந்தாள் பெற்றோரை.
அதுவும் அந்த கேக்கை இன்னும் அவரால் மறக்க முடியாது. இதய வடிவிலிருந்த கேக்கின் மேலே ஒரு ஆணும் பெண்ணும் கைகோர்த்து நிற்பது போல இருந்ததைப் பார்த்து வெட்கமாக இருந்தது அவருக்கு. அதை நினைத்து பார்த்தவருக்கு இன்றும் வெட்கத்தில் புன்னகைதான்.
பழக்கமில்லை என்றாலும் மகளின் ஆசைக்காக அவள் விருப்பபடியே கேக் கட் செய்து போட்டோ வீடியோ எடுத்து, என அத்தனை உற்சாகமாக சென்றிருந்தது அன்றைய நிகழ்வுகள் எல்லாம்.
இன்று நினைத்தாலும் மகளின் அன்பும், அவளது குறும்பும் தந்தையை உருக செய்தது. இன்று மகள் ஒரு போனாவது பண்ணுவாளா என காலையிலிருந்து காத்திருந்தவர் நேரம் ஆக ஆக… அஞ்சனாவிடமிருந்து கால் எதுவும் வரவில்லை எனவும் சோர்ந்து போனார்.
லஷ்மி இருவரையும் கோவிலுக்காவது சென்று வாருங்கள் என சொல்லிப் பார்த்தார். இருவரும் மறுத்துவிட்டனர். இப்பொழுது திடீரென மகளையும் மருமகனையும் பார்த்ததும் சந்தோஷம் பீறிட்டெழுந்தது இருவருக்கும்.
ரோகிணி மகளுடன் பேசிக்கொண்டே தடபுடலாக ஒரு விருந்தையே தயார் செய்திருந்தார். வேல்முருகனுக்கு மருமகனிடம் சரளமாக பேசவரவில்லை என்றாலும், அவனுடன் பேச ஆரம்பித்திருந்தார்.
அவனது தொழிலைப்பற்றி எல்லாம் கேட்டு பேசிக் கொண்டிருந்தார். அவனும் அவரிடம் தயக்கமில்லாமல் பேசிக்கொண்டிருந்தான். இவர்களுக்காக ஜூஸ் கொண்டு வந்து கொடுத்த ரோகிணிக்கு இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்து இன்னும் சந்தோஷமானது.
மாலைவரை அங்கே இருந்தவர்கள், வேல்முருகன், ரோகிணி, லஷ்மி எல்லோரையும் அழைத்துகொண்டு மயிலம் கோவிலுக்கு புறப்பட்டனர். முதலில் கோவிலுக்கு வர மறுத்த வேல்முருகன், தேவநாதன் “வாங்க மாமா…., போயிட்டு வரலாம்” என அழைத்ததும் மறுபேச்சு பேசாமல் கிளம்பிவிட்டார்
“பார்ரா….. மருமகன் கூப்பிட்டதும் கிம்பிட்டீங்க. அப்ப என்னைவிட உங்களுக்கு மருமகன்தான் ஒசத்தியா……” என பொய் கோவம் கொண்டாள் தந்தையிடம் அஞ்சனா.
“அப்படி இல்லடாமா. மாப்பிள்ளை முதல் முறையா கூப்பிடறார். அதான்… மறுக்கவேணாமேன்னு… கிளம்பினேன்”, என முழிபிதுங்கினார் வேல்முருகன் மகளின் அடாவடியில். அவருக்கு மகள் உண்மையிலேயே கோபமாகி விட்டாளோ… என பதட்டம் வந்திருந்தது.
“ஹா… ஹா….. அப்பா… நான் சும்மா விளையாட்டுக்குதான் சொன்னேன். நீங்க உடனே பயப்படாதீங்க…..” என அவரது கையைப் பிடித்துகொண்டாள். அப்போதுதான் வேல்முருகனுக்கும் முகம் தெளிந்தது.
தேவநாதனுக்கு முன் அவள்தான் அவரை கோவிலுக்கு அழைத்தாள். . “இருக்கட்டும் டா…., அடுத்த முறை போகலாம்’’ என மறுத்திருந்தார். ஆனால் தேவநாதன் கூப்பிட்டதும் எந்த மறுப்பும் சொல்லாமல் கிளம்பியிருந்தார். அதை வைத்துதான் அஞ்சனா அவரிடம் கலாட்டா செய்தது.
அவளின் குறும்பில் தேவநாதன் அவளை நெருங்கி அவள் தலையில் குட்டு ஒன்று வைத்தான். ‘’ஹேய் வாலு…. உன் விளையாட்டை உண்மைன்னு நம்பி மாமா பயந்துட்டார்’’
எல்லோரும் மயிலத்தில் இருந்த முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்துவிட்டு, அங்கிருந்து பாண்டிச்சேரிக்கு வந்திருந்தனர்.
வேல்முருகனுக்கு பாண்டிச்சேரியை நோக்கி கார் திரும்புவது தெரிந்தாலும் எதையும் கேட்டுகொள்ளவில்லை. முதன்முதலாக மருமகனுடன் வெளியே வருகிறோம். எதையும் மறுத்து கூறவேண்டாம் என அமைதியாக அமர்ந்திருந்தார்.
கார் தேவநாதன் கையில் லாவகமாக சென்று கொண்டிருந்தது. அவனின் பக்கத்தில் வேல்முருகன் அமர்ந்திருந்தார். மற்ற மூவரும் காரின் பின்பக்கம் அமர்ந்திருந்தனர்.
கார் சற்று நேரத்திற்கெல்லாம் ஸீவியூவ் பார்க்கும்படி இருந்த ஒரு புகழ்பெற்ற ஸ்டார் ஹோட்டல் முன்னால் நின்றது. காரை பார்க் செய்துவி்ட்டு, இவர்களை அழைத்து கொண்டு உள்ளே சென்றான் தேவநாதன்.
அங்கே இவர்களுக்கு முன்னால் செல்வதுரையின் குடும்பம் வந்து இவர்களுக்காக காத்திருந்தது. அதைப் பார்த்ததும் ரோகிணிக்கு இன்ப அதிர்ச்சி என்றால், வேல்முருகனுக்கோ வாயைத் திறந்து ஒன்றும் சொல்ல முடியாத நிலை.
மருமகன் முதன்முதலாக அவர்களை அழைத்து வருகிறான். அதுவும் அவர்களது கல்யாண நாளுக்காக வெளியே சாப்பிடலாம் என இங்கு அழைத்து வந்திருந்தான். அவரால் மறுத்து எதையும் வெளிப்படையாக சொல்லமுடியாத தர்மசங்கடமான நிலை.
அஞ்சனாவுக்கே இதுபற்றி தேவநாதன் சொல்லயிருக்கவில்லை. மயிலம் கோவிலுக்கு கிளம்புவதற்குமுன் தேவநாதன் தங்கள் வீட்டினருடன் போனில் பேசி, அவர்களை எல்லாம் கிளப்பியிருந்தான்.
மகன், மருமகள்கள், பேரன் பேத்தி என ஒட்டு மொத்த குடும்பமும் வந்திருந்தனர். முன்பே இவர்களுக்கான டேபிள் புக் செய்திருந்ததால் அங்கே இவர்களை எல்லாம் அழைத்து சென்றான்.
உட்கார்ந்த இடத்தில் இருந்தே பீச்சை நன்றாக காண முடிந்தது. செல்வதுரை எப்போதும் போல வேல்முருகனிடம் வந்து அவராகவே பேசினார்.
கார்த்திக், விவேக், காஞ்சனா கீர்த்தி என எல்லோரும் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகளை தெரிவித்து, அவர்களுடன் இன்முகமாகவே பேசினர். வேல்முருகனும் எந்த முகத் திருப்பலும் இல்லாமல் சுமூகமாகவே பேசிக்கொண்டிருந்தார் அவர்களுடன்.
மீனா வந்தவர்களை வாங்க என்று அழைத்ததோடு சரி. மற்ற எதுவும் பேசவில்லை. லஷ்மியும் அவர்களுடன்தான் இருந்தார். அஞ்சனா அப்பத்தாவை விடாமல் தன்னுடனே அமர்த்திக் கொண்டாள்.
இப்படியாக மனதில் ஊடல்கள் இருந்தாலும் அன்றைய தினம் மகிழ்ச்சியாகவே சென்றது.
error: Content is protected !!