“என்னோட அம்மாவை பத்தி எனக்கு நல்லாத் தெரியும், நான் நல்லா இருக்கணும் அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக தான் சொல்வாங்க, இப்போ உன்னால என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியுமா முடியாதா?” என்றாள் நேத்ரா கண்டிப்புடன்.
நேத்ரா அவள் கன்னத்தில் அறைந்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளாத வனிதா “நேத்ரா நான் சொல்றதை கொஞ்சம் கேளு, நீ சொல்ற மாதிரி உங்க அம்மா உன்னை மட்டும் தான் பாப்பாங்க, உனக்கு மட்டும் தான் நல்லது நினைப்பாங்க. உன்னோட புருஷனை பத்தி அவங்க யோசிக்க மாட்டாங்க, இது உங்களோட குழந்தை டி” என்ற வனிதாவை
கைநீட்டி தடுத்தவள் “முடியுமா முடியாதா?” என்றுவிட்டு வனிதாவின் பைக்கின் அருகே சென்று நின்றாள்.
“ச்ச என்னமோ பண்ணித்தொலை, உன்னோட வாழ்க்கையை நீயே கெடுத்துக்கப் போற…” என்றவளின் பேச்சை கேட்க நேத்ரா அங்கே இருக்கவில்லை. முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு நேத்ராவை அவள் பிறந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் வனிதா.
நேத்ரா வீட்டிற்குள் நுழைந்தவுடன் ரேணுகாவிற்கு அளவுகடந்த சந்தோசம். “அம்மா…” என்ற நேத்ரா ஓடிச்சென்று ரேணுகாவை அணைத்துக்கொள்ள,
“என்ன தங்கம் எதுவும் பிரச்சனையா, ஏன் முகமெல்லாம் வாடி போயிருக்கு” என்றார் ரேணுகா. மதிய நேரமாக இருக்க வீட்டில் ஈஸ்வரமூர்த்தி, நந்தன் யாரும் இருக்கவில்லை.
“ஒண்ணுமில்லம்மா அது….” என்றுவிட்டு வனிதாவைப் பார்க்கவும், வனிதாவோ அவளைத் தீயாக முறைத்தாள்.
பின் நேத்ரா இன்று ஆபீஸில் சுப்ரியா சொன்ன அனைத்தையும் சொல்லவும், பொறுமையாகக் கேட்டவர் “சரி இப்போ என்ன டா அதுக்கு” என்றார்.
“அம்மா எனக்கு நாள் தள்ளி போயிருக்கு, கன்போர்மா தெரியலை, அதான் உன்கிட்ட வந்தேன்” என்றாள்.
“இந்த விஷயம் மாப்பிளைக்கு தெரியுமா?” என்ற ரேணுகாவிற்கு,
“அதைத்தான் ஆண்ட்டி நானும் அப்போ இருந்து சொல்றேன், அண்ணாவுக்கு சொல்ல சொல்லி….” என்ற வனிதாவைத் தடுத்தவர்.
நேத்ராவிடம் “இப்போதைக்கு சொல்ல வேண்டாம், நாம போயி மொதல்ல டாக்டரை பாத்து செக் பண்ணிக்கலாம்” என்றார்.
பின் வனிதாவிடம் “இந்த விஷயத்தை நீ யார் கிட்டயும் சொல்ல வேண்டாம் வனிதா, நீ வீட்டுக்கு கிளம்பு” என்றவர் வனிதாவை அவள் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
நேத்ராவை முறைத்துக் கொண்டே வேறு வழியின்றி நேத்ராவின் வீட்டை விட்டு வெளியேறினாள் வனிதா.
“சரி வா டா நாம இப்போவே போயி, டாக்டரை பாத்துட்டு வந்துருவோம்” என்றவர் நேத்ராவை அழைத்துக் கொண்டு ஒரு பெண் மருத்துவரைச் சந்தித்தார்.
அந்த மருத்துவரோ நேத்ராவை பரிசோதித்து விட்டு நேத்ரா நாற்பது நாள் கர்பம் தரித்துள்ளதாக ரேணுகாவிடமும் நேத்ராவிடமும் கூறவும், மேலும் உறுதிப்படுத்த ரத்தப் பரிசோதனை மற்றும் ஸ்கேனுக்கு பரிந்துரைத்தார்.
நேத்ராவின் முகத்தில் குழப்ப ரேகைகளைக் கண்ட ரேணுகா, “நீ கொஞ்சம் வெளிய இரு டா தங்கம், அம்மா டாக்டர் கிட்ட பேசீட்டு வந்திடுறேன்” என்றவர் நேத்ராவை வெளியே அனுப்பினார்.
டாக்டரிடம் “மேடம் எங்களுக்கு இந்த குழந்தை இப்போதைக்கு வேண்டாம், அதுனால…” என்றவரிடம்,
“நான்சென்ஸ், என்ன சொல்றீங்க? மொதல்ல அவங்க ஹஸ்பண்ட் எங்க, நீங்க வேணுன்னா வச்சுக்கிறதுக்கும், வேண்டாம்னா தூக்கி ஏறியிரதுக்கும் இதென்ன பொம்மையா? குழந்தைங்க” என்று கத்தினார்.
“மேடம், அவளோட வீட்டுக்காரர் பாரின் ல இருக்காரு, இவ இங்க ஐடி ல வேலை பாக்குறா, அதுனால தனியா குழந்தை பெத்துக்க முடியாது, நீங்க தான் கொஞ்சம் ஹெல்ப் பண்ணனும்” என்றார் ரேணுகா.
“நீங்க அவங்க அம்மா தானே நீங்க ஹெல்ப் பண்ண மாட்டீங்களா?” எனவும் “மேடம் இப்போதைக்கு அவ வேலை செய்யுற கம்பெனில லீவு தர மாட்டாங்க, கொஞ்சம் மனசு வைய்யுங்க மேடம்” என்று ஏதேதோ பேசி டாக்டரின் மனதைக் கலைத்த ரேணுகாவிடம்,
“என்னங்க உங்களோட தொல்லையாப் போச்சு, அவங்க அவங்க குழந்தை இல்லாம எவ்வளவு கஷ்டப்படுறாங்க தெரியுமா? நீங்க குழந்தையை விட வேலை தான் முக்கியம்னு சொல்றீங்க” ச்ச என்று தலையில் அடித்துக் கொண்டவர்,
“நான் சொன்ன செக் அப் எல்லாம் எடுத்திட்டு இன்னைக்கு வீட்டுக்கு போங்க, நாளைக்கு கூட்டீட்டு வாங்க பண்ணீடலாம்” என்றார் வெறுப்புடன் ரேணுகாவின் முகத்தைக் கூடப் பார்க்காமல்.
ரேணுகா வெளியில் வந்தவுடன் அவரிடம் வந்த நேத்ரா “அம்மா வா மா வீட்டுக்குப் போகலாம், நான் மொதல்ல அவரு கிட்ட சொல்லீடுறேன், அவருக்கு தெரியாம நான் இங்க செக் அப் வந்தது தெரிஞ்சாலே அவருக்கு கோபம் வரும். நான் அப்படியே வீட்டுக்கு கிளம்புறேன், மத்த செக் அப் எல்லாம் நான் அவரு கூட வந்து எடுத்துக்குறேன் “என்ற நேத்ராவிடம்,
“சரி சொல்லலாம், மொதல்ல இப்போவே டாக்டர் சொன்ன செக் அப்பெல்லாம் முடிச்சிடலாம், அப்புறமா மாப்பிள்ளை கிட்ட பேசு” என்ற ரேணுகாவிடம், என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தவள், தாயின் பேச்சைத் தட்ட முடியாமல் அவருடன் செக் அப்பிற்கு சென்றாள்.
செக்கப் முடித்து கையில் கோப்புகளுடன் நேத்ராவை வெளியில் அமர வைத்துவிட்டு உள்ளெ சென்ற ரேணுகா டாக்டரிடம் கோப்புகளைக் காண்பித்துவிட்டு, குழந்தை நன்றாக இருப்பதாக டாக்டர் கூறவும், “சரிங்க மேடம் நாங்க நாளைக்கு வரோம்” என்று விட்டு நேத்ராவுடன் அவளது அப்பார்ட்மெண்ட்டிற்குச் சென்றார்.