அந்த ஆறு மாதங்களுக்கு முன்னே இருந்த கூடலில் கூட ஒருவர் மேல் மற்றொருவர் கொண்ட ஆசை தெரிந்ததே… அதுவும் கலவிக்கான தேடல் மட்டும் தானா? உண்மையிலேயே வீட்டினர், ஊரார் கூறியது போல் வெறும் ஈர்ப்பு தானா?
ஆனால் பல மாதங்கள் பிறகு இப்பொழுது அவன் தொட்டது ஏன் எனக்கு சொல்லாத மாற்றங்களை தருகிறது? ஏன் பழைய நினைவுகளை அவிழ்த்து விட்டு வேடிக்கை பார்க்கிறது விதி? ஆசை பிறப்பெடுக்கவில்லை, ஆனால் கடந்த காலம் வந்து நிற்கிறதே. தனக்கு மட்டும் தான் இந்த நினைவா?
அவனுக்கு சிறு சலனம் கூட தோன்றவில்லையா…??!!
கையிலிருந்த அந்த அழகு பூனைக்குட்டி அவள் அசையாதிருப்பதை பார்த்து பொறுமையிழந்து அவள் கையிலிருந்து குதித்து அவளை நிகழ் காலத்திற்கு அழைத்து வந்திருக்க அவனை பற்றியே நினைக்காதே என வீட்டிற்குள் நுழைந்தாள் திவ்யா.
சமயலறையில் மெல்லிய விசிலின் சத்தம் கேட்க அவனது உல்லாச மனநிலை அறிந்து வரவேற்பறையில் அமர்ந்துவிட்டவளிடம் இரவு உணவை நீட்டினான் ரகு. வாங்க தயங்கினாள். பணம் கொடுக்காமல் அவனிடம் வந்து நிற்பது.
“சாப்பாடு தான் வாங்கி தர முடியும். என்ன ஊட்டியும் விடணுமா?” அவன் கேலியாக முறைக்க உடனே வாங்கி உண்டாள்.
“பூனைக்கு பால்?” அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு கண்களை தன்னுடைய தட்டிற்கு மாற்றினான்,
“நைட் உனக்கு பால் இல்ல, இனி அது உன் பூனைக்கு” என முடித்துக்கொண்டான்.
ஆனால் செய்ததோ வேறு. அவளுக்கும், பூனைக்கும் சேர்த்தே பாலை கொடுத்துவிட்டு நிமிர, இதழ் கடித்து வார்த்தையை விழுங்கினாள்.
பாலை அருந்திவிட்டு காத்திருக்க இரண்டு போர்வையை அவளிடம் வைத்து தன்னையே பார்த்தவளிடம், “பெட்ல படுக்கணும்னா ஆயிரம் எக்ஸ்ட்ரா குடுக்கணும்… எப்படி வசதி?” என்று கேட்டவனை முறைத்து போர்வையை தரையில் விரித்து, “பில்லோ?” என்றாள்.
“மாசம் அம்பது எக்ஸ்ட்ரா…”
“ஏன் அம்பதாயிரம் தர்றேனே” அவளது எள்ளலை கவனித்தவன், “இது கூட ரொம்ப நல்லா இருக்கே” என்றான் அவளருகில் இருந்த ஒரு நாற்காலியை எடுத்து போட்டு அமர்ந்து.
அவன் வந்து தன்னை பார்த்து அமர்ந்த பொழுதே தெரிந்தது அவன் தன்னிடம் பேச விளைகிறான் என. உடனே படுத்து போர்வையை தலை வரை போர்த்திக்கொண்டாள் அவனிடமிருந்து தப்பிக்க.
“என்ன பிரச்சனை உனக்கு” மூடியிருந்த போர்வைக்குள்ளிருந்து முணுமுணு என சத்தம் வந்ததே தவிர அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பேசுகிறாளா என்ற சந்தேகம் தான் வந்தது.
“என்னடி பேசுற பெட்சீட் எடுத்துட்டு பேசு” முடியாது என்பதும் முணுமுணுப்பாக தான் வந்தது.
இது வேலைக்காகாது என தெரிந்து அவளது போர்வையை மொத்தமாய் விலக்கி கையில் வைத்துக்கொண்டான்.
அவளுக்கோ முகம் சிவக்கும் அளவு கோவம், “என்டா என்ன கொடுமை பண்ற? உன் வீட்டுல இருந்தா தூங்க கூட விட மாட்டியா?”
“என்ன பிரச்சனைன்னு கேட்டேன்” என்றான் மீண்டும் அழுத்தமாக.
“நீ பெட்சீட் தரவே வேணாம்” உடலை குறுக்கி மீண்டும் படுத்தவள் காலை பிடித்து அவனை இழுக்க மிகவும் இலகுவாக கீழே விரித்திருந்த போர்வையோடு சேர்ந்து வந்தாள் அவனிடம்.
அவள் ஒற்றை காலோ அவனிடம் அந்தரத்திலிருக்க அவளால் எழுந்து கூட அமர முடியவில்லை, “டேய் கருவாயா விடுடா என்ன” அடித்து பார்த்து பயனில்லாமல் தான் போனது.
“பதில் சொல்லுடி” என்றான் பிடிவாதமாக.
“உனக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது”
பிடித்திருந்த பாதத்தை அப்படியே அவன் திருப்ப சுத்தமாக வலிக்கவில்லை என்றாலும் கத்தினாள், “ஆ.. ஆஆ அம்மா” என.
“வலிக்கிது விடு சொல்றேன்” மெல்ல அவன் கையை விட சுவற்றோடு ஒட்டி அமர்ந்துக்கொண்டாள் தலை தாழ்த்தி.
தொண்டை அடைத்தது பேச, எச்சிலை கூட்டி விழுங்கியவள், “சாப்பாட்டுக்கு கூட வழியில்லை வேலை இல்லாததால. அந்த பி.ஜி வார்டன் கழுத்த புடிச்சு வெளிய தள்ளி விட்டுடுச்சு. போதுமா… இதை தான நீ கேக்கணும்னு ஆசைப்பட்ட?” எங்கோ இருந்த கோவத்தை அவன் மேல் இறக்கிவைத்தாள் குரலை உயர்த்தி.
அவளது இயலாமை புரிந்தவனும் அமைதியாக அவளை வேடிக்கை மட்டுமே பார்த்தான்.
“உன்ன நம்பி வந்த எனக்கு இதெல்லாம் தேவை தான். எதுக்குடா என் வீட்டை விட்டு வந்தோம்னு இருக்கு. பிச்சைகாரிய பாக்குற மாதிரி பாக்குறா அந்த வார்டன். சத்தரம் வச்சு நடத்துறேனா பிச்சை காரிகளுக்கு இடம் குடுக்கனு கேக்குறா. பைத்தியம் மாதிரி மழைல ரோட்டுல நின்னேன் எங்க போறதுன்னு தெரியாம” தலையை கையில் ஏந்தி வெளிறிய முகத்தோடு அவள் பேச பேச ரகுவுக்கு இதயம் கனத்தது.
“உன் வீட்டுக்கு நீ போயிருப்பனு நினைச்சேன்” என்றான் அமைதியாக.
“எந்த முகத்தை வச்சுட்டு அவங்க முன்னாடி போய் நிக்க சொல்ற?”
“தப்பு பண்ணாதவங்க யாருமே இருக்க மாட்டாங்க திவ்யா”
“தப்பு பண்ணலாம், ஆனா பாவம் பண்ணா இதான் ரகு நடக்கும். என் அப்பா அம்மாக்கு நான் துரோகம் பண்ணிருக்கேன், பாவம் பண்ணிருக்கேன். அதுக்கு தான் பாரு இப்டி நாயா ஒவ்வொரு இடத்துலயும் மிதி வாங்கிட்டு இருக்கேன்” விழுக்கென ஒரு கண்ணீர் துளி வெளியேற தலை கோதி தன்னை சமன் செய்துகொண்டான் ரகுநந்தன்.
“சும்மா நடந்ததை பத்தியே யோசிச்சிட்டு இருக்காத திவ்யா. நடக்க போறத பத்தி மட்டும் பேசு. எத்தனை நாளைக்கு தான் இப்டி சுத்திட்டே இருப்ப நிரந்தரமா உனக்குன்னு ஒன்னு வேணாமா?”
“என்ன உன் வீட்டுல நான் இருக்க கூடாதுன்னு மறைமுகமா சொல்றியா ரகு?”
“வெளிய அனுப்பணும்னு எண்ணம் இருந்தா உன்ன உள்ளையே விட்ருக்க மாட்டேன். உன்ன பத்தி பேசுனா எதுக்குடி என்கிட்ட வர்ற?” முகத்தை திருப்பி அமர்ந்தாள் திவ்யா.
“சரி என்ன பண்றதா ஐடியா?”
“என்ன பண்றதுனா வேலை தான் தேடணும்”
“இத்தனை நாளா தேடிட்டு தானே இருந்த ஒரு வேலையும் கிடைக்கலையா?” இல்லை என தலையை ஆட்டினாள்.
“படி படினு சொன்ன நேரம் எல்லாம் கேட்டியா? ஊர் சுத்துன… கிடைக்கிற நேரமெல்லாம் எவ கூடையாவது மால், படம்னு சுத்திட்டே இருந்தியே அந்த நேரத்துல படிச்சிருந்தா இன்னைக்கு உறுப்புட்டுருக்கலாம்” சாதாரணமாக சொன்னவனை கேவலமாக பார்த்தாள், அந்த பார்வையே அவனை அசிங்கப்படுத்த அதற்கு மேல் அதற்குள் செல்ல விரும்பவில்லை ரகு.
“நீ கை விட மாட்டியேனு நம்பி வந்தேன். தலைகீழா எல்லாம் மாறிடுச்சு”
“குத்தி காட்டுற வேலை எல்லாம் வேணாம். நீ என்ன கை காட்டுற அளவு என்னாலயும் உன்ன கை காட்ட முடியும். அந்த அளவுக்கு ரெண்டு பக்கமும் தப்பிருக்கு. விசயத்துக்கு வா திவ்யா. எல்லாத்தையும் பேசி புரியவச்சு உன் வீட்டுக்கு போகுற வழிய பாரு”
தீர்க்கமாக இரு பக்கமும் தலையை ஆட்டினாள், “வாழ்ந்து காட்டுவேன்னு திமிரா சொல்லிட்டு வந்தேன். இப்ப அதெல்லாம் இல்ல ஏதோ ஒரு ஆசைல போய் தப்பு பண்ணிட்டேன்னு சொல்ல சொல்றியா?”
“உன் அப்பன் கிட்ட போய் என்ன விட்டுட்டு வந்துட்டனு மட்டும் சொல்லு. உன்ன தலைல தூக்கி வச்சு கொண்டாடுவான், உன் குடும்பம் உனக்கு பெரிய பூஜையே பண்ணும்”
“அப்பாவை பத்தி தப்பா பேசாத ரகு, எந்த அப்பாவுக்கு தான் தன்னோட பொண்ண காதலிக்கிறவன் மேல நல்ல எண்ணம் வரும்? தன்னோட பொண்ணு மேல தான் தப்பே இருந்தாலும் அந்த பையன தான் சொல்லுவாங்க. ஏன் உன் வீட்டுல என்ன பத்தி சொல்லலையா என்ன?”
“என் வீட்டுல நீயும் வேணாம் உன் சங்காத்தமே வேணாம்னு தான் போனாங்க. அதுக்காக உன்ன எல்லை மீறி பேசல, பேசவும் நான் விடல” என்றான் விடாமல்.
“அப்போ என் வீட்டுல இருக்கவங்கள பேச விட்டு நான் வேடிக்கை பாத்தேன்னு சொல்ல வரியா ரகு?”
“இனி யார் என்ன பத்தி பேசுனாலும் உங்கிட்ட வந்து உரிமையா கேக்க மாட்டேன்” என்றான் அமைதியாக.
விலகி விலகி சென்ற காலம் விரும்பியணைத்து கொண்டவன், இன்று அருகில் இருந்தும் விலகி நிற்கிறான். கசந்தது திவ்யாவுக்கு.
தலை கோதி பொறுமை காத்தவன் பிறகு அவளை பார்த்து, “இங்க பாரு திவ்யா, தீர்க்கமான ஒரு முடிவெடுக்காம ஒரு தடவை தப்பு பண்ணிட்டு இங்க நிக்கிறோம். அதே தப்ப மறுபடியும் பண்ண நான் விரும்பல. அது நம்ம ரெண்டு பேருக்கும் பொருந்தும். எத்தனை நாள் யாரோட துணையும் அரவணைப்பும் இல்லாம திண்டாட போற?”
“என் ஒடம்புல தெம்பு இருக்குற வர”
“அறைஞ்சேன்னு வை…” கிட்டத்தட்ட கையை ஓங்கியிருந்தான், “மனசுல தெம்பு இருந்தா தான் ஒடம்பு அதுக்கு ஒத்துழைக்கும். ஒரு சின்ன விசியத்துக்கே இப்டி கண்ண கசக்கிட்டு இருக்கவ ஆறுதலுக்கு கூட ஒரு ஆள் இல்லாம இருப்பியா?”
அவனை இமை சிமிட்டாமல் பார்த்தவள், “கேக்குறேன்னு தப்பா நினைக்காத ரகு, நாம ஒருத்தர ஒருத்தர் வேணாம்னு தான் பிரிஞ்சோம்.
அதுக்காக வார்த்தைக்கு வார்த்தை உனக்கான ஒரு புது வாழ்க்கையை நீ தேட ஆரமிக்க போற-னு சொல்லிட்டே இருக்கணுமா? உறுத்தலையா இவளை கழட்டி விட்டு மூணு மாசம் கூட ஆகல அதுக்குள்ள அடுத்த வேலைய பாக்க ஆரமிக்கிறோம்னு”
கோவம் வந்தது, ஆனாலும் அவளிடம் காட்ட கூடாதென சிரித்தான், “உனக்கு ஒன்னு தெரியுமா?” வெட்கப்பட்டான் ரகு. போலியாக…
“நானே சொல்லணும்னு நினைச்சேன் திவ்யாமா. அப்பா அம்மா என்கிட்ட ரெண்டு மாசமா பேசுறாங்க. வீட்டுக்கு நம்மள வர சொல்லலாம்னு நினைச்சு தான் கூப்ட்ருக்காங்க. கடைசில விசியம் கேள்விப்பட்டு, ‘சரி டா தம்பி. எல்லாமே நல்லதுக்கு தான்னு நினைச்சுப்போம்.
ஆறு மாசம் போகட்டும் நல்ல பொண்ணா பாக்குறோம்’னு சொன்னாங்க. வீட்டுக்கு கூட வர சொல்லிட்டாங்க. கெளம்பலாம்னு யோசிச்சிட்டு, இந்த மாசம் வீட்டை காலி பண்ணலாம்னு நினைச்சேன் நீ வந்துட்ட” ஏமாற்றத்தை முகத்தில் வைத்து தலை ஆட்டினான்.
திவ்யா நெஞ்சில் மின்னல் தாக்கியது போல் வலி. உதட்டை கடித்து வார்த்தைகளையும் உணர்ச்சிகளையும் விழுங்கினாள் முகத்தை திருப்பி வைத்து.
வாடிய மலராய் மாறியவள் முகத்தை பார்த்து மேலும் பேசினான், “அதுக்கு தான் சொல்றேன். உன் வீட்டுலையும் உனக்கான ஒரு வாழ்க்கையை பாக்க ஆரம்பிப்பாங்க. தனியா இருக்கோம்னு ஒரு பயம் இல்லாம எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்கிற தைரியம் வரும்ல?
சரி வேலைக்கே போகணும்னு ஆசை இருந்தாலும் அவங்க சப்போர்ட்டோட போகலாம். இப்டி அடுத்தவங்களை நம்பி அசிங்கப்பட்டு நிக்காம மரியாதையா இருக்கலாம். எல்லாம் யோசிச்சு தான் சொல்றேன் திவ்யா. நாளைக்கு காலைல கெளம்பி இரு உன் வீட்டுக்கு போகலாம்”
அவன் சென்றதும் படுத்து இருளை வெறித்துக்கொண்டே உறங்காமல் இருளுக்கு காவலாகிப்போனாள்.
அடுத்த நாள் காலை உணவை உண்ண வைத்து அவளது உடமைகளை அள்ளிக்கொண்டு அவளையும் வாகனத்தினுள் திணித்து அவளது வீட்டிற்கு அழைத்து சென்றான்.
காஞ்சிபுரத்தில் இருந்த அவளது பெற்றோர் வசதி வாய்ப்புடையவர்கள்.
செல்வ செழிப்போடு இருக்கும் அவர்களது நிலைக்கு முக்கிய காரணம் பல வருடங்களாக செய்யும் ஜவுளி வியாபாரமும், ஹோட்டல் வியாபாரமும் தான்.
திவ்யாவின் சகோதரர்கள் இருவரும் படித்து முடித்த கையேடு ஆளுக்கு ஒருவாரம் மாறி மாறி இரண்டு கடைகளையும் பார்த்துக்கொள்ள, அவள் தந்தை இருவருக்கும் பெரியவராய் நின்று வழிகாட்டுவார்.
அனைத்திலும் சரியாக இருக்கும் அவருக்கு, தன்னுடைய மகளை காதலிக்கும் ரகுவை முதல் பார்வையிலே பிடிக்கவில்லை.
அது மகளை காதலிப்பவன் என்ற எண்ணமா இல்லை, திருந்த வெட்டாத தாடியும், எவருக்கும் அசையாத திமிரான பார்வையுமா என்பது அவர் மட்டுமே அறிவார்.
அவள் வீடு அமைத்திருந்த வீதியின் அருகில் வாகனத்தை நிறுத்தி, “உள்ள போய் பேசிட்டு விவரம் சொல்லு அதுக்கு அப்றம் நான் கிளம்புறேன். பேக் இங்கையே இருக்கட்டும்” ஏற்கனவே அவன் மீது அதீத கோவத்தில் இருந்தவள் இறங்கி கதவை அறைந்து சாத்தினாள்.
“மெதுவாடி, ஒடைஞ்சா உங்கப்பனா காசு குடுப்பான்?” அவன் கேட்டதில் இன்னும் ஆத்திரம் வர டயரில் ஓங்கி எத்தி அவனை முறைத்தே சென்றாள்.
வீட்டினை அடைந்ததும் பயம் அதிகமாகி பெண்ணின் கை கால்களை நடுங்க செய்தது. வாயிற்கதவை திறப்பதற்கு தயங்கி தயங்கி அவள் நிற்க வெளியே செல்ல வந்த வேலையாள் ஒருவர் இவளை பார்த்து ஆசிரியப்பட்டுப்போனார்.
“பாப்பா… வந்துட்டீங்களா பாப்பா. வாங்க வாங்க. அய்யா இப்ப தான் வெளிய போனார்” பூ மழை தூவாத குறையாக அவளை உள்ளே அழைத்து அவளது குடும்பத்தினர் முன்பு நிறுத்திவிட்டார்.
இரண்டு வருடங்கள் பிறகு வந்தவளை மலர்ந்த முகத்தோடு ஒரு முகமும் வரவேற்கவில்லை, பெற்ற அன்னையும் கூட அவளை ஒரு வார்த்தை கேட்கவில்லை.
“என்ன இது வராத விருந்தாளி எல்லாம் வந்துருக்காங்க” எள்ளலாக அவளது பெரிய அண்ணன் வெளியே வந்து கேட்டான். விருந்து உபச்சாரம் எதிர்பாராமல் வந்த திவ்யாவுக்கு அவர்களது வார்த்தைகள் பெரிதாக தாக்கம் ஏற்படுத்தவில்லை.
“உள்ள வர வச்சு பேசுங்கங்க” திவ்யாவின் மூத்த அண்ணி கணவனை பார்த்து கூறினாள். அதற்குள் அங்கு நின்ற திவ்யாவின் இளைய அண்ணன்,
“உள்ள வர வச்சாலும் எப்டியும் பின் வாசல் வழியா ஓடி தானே அண்ணி போவாங்க, அதுக்கு எதுக்கு உள்ள வச்சு பேசணும்”
“என்ன சூர்யா பேசிட்டு இருக்க? வீட்டையே சந்தி சிரிக்க வச்சிட்டு ஓடுனவ தான வெளிய அனுப்புங்க” பேசுவது அன்னையா என நம்ப முடியாமல் அவரை பார்த்தது திவ்யாவின் விழிகள்.
“அத்தை என்ன ஏதுன்னு கேட்டுட்டு அடுத்து பேசிக்கலாம் அத்தை”
“காவ்யா உனக்கு ஒன்னும் தெரியாது. வீட்டுல இருந்த நம்மள விட வெளிய போய்ட்டு வந்த ஆம்பளைங்களுக்கு தான் இவ பண்ண வேலையோட தாக்கம் அதிகம் இருந்துச்சு.
ஊருக்குள்ள எவ்ளோ பெரிய பேர் உள்ள குடும்பம், அதுக்கு இப்டி ஒரு அசிங்கத்தை பண்ணவ யோசிச்சாளா இப்ப நாம அவளை பத்தி யோசிக்க” திவ்யாவின் அன்னை மருமகளை கோவமா கடிந்து மகளை பார்த்தவர்,
“என்னடி இன்னும் இங்கையே நிக்கிற? யாருக்காக எங்களை எல்லாம் விட்டு போனியோ அவன் கூடையே போ. நாங்க வேணாம்னு சொன்னவ எங்களுக்கும் வேணாம்” திவ்யாவின் கையை பற்றியவர் வாயிலை நோக்கி ஆவேசமாக தள்ளிவிட்டார்.
“ம்மா செலவுக்கு காசு எதுவும் இருந்துருக்காது, ஏதாவது குடுத்து அனுப்புங்க. அதுக்கு தான் வந்துருப்பா. என்ன பாப்பா சரி தான?”
கேலியாக இளைய சகோதரன் சிரிக்க மூத்த சகோதரன் அன்னை கையில் சில பண தாள்களை ஒப்படைத்தான்.
அனைவரையும் விசித்திரமாக பார்த்த திவ்யாவின் கைகளில் அவள் அன்னை அந்த பணத்தை திணிக்க தீ சுட்டார் போல் இரண்டடி பின்னால் போனது அவள் கால்கள்.
ஐநூறு ரூபாய் தாள்கள் தரையில் சிதறி கிடக்க அதை பார்த்தே உறைந்து நின்ற திவ்யா எவர் முகத்தையும் திரும்பியும் பார்க்காமல் விறுவிறுவென வெளியேறியிருந்தாள்.
வீட்டை தாண்டி அவன் வாகனம் வரும் வரை இறுகி போயிருந்த அவள் உடல் கார் கதவை திறக்க, “ஹே சக்ஸஸா… என்ன சொன்னாங்க? ரொம்ப சந்தோசப்பட்டாங்களா? உன் அம்மா ஒரு குட்டி எமோஷனல் ட்ராமாவே போட்ருப்பாங்களே… உங்கப்பன் என்ன சொன்னாரு?”
ரகு கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக தன்னுடைய பையை எடுத்து போக பார்த்தவள் முயற்சியை தடுத்தான் அந்த பையை பிடித்து, “ஒக்காரு வாசல் வர வந்து விடுறேன்”
“அசிங்கமா பேசிட போறேன் ரகு, பைய விடு” பற்களை கடித்து அவள் எச்சரித்ததில் அவன் பிடி இன்னும் அந்த பையில் இறுகியது.
இப்பொழுது தான் அவள் முகத்தையே கவனித்தான். இறுகிப்போயிருந்தது உணர்வுகளை களைத்து. பையையும் விட்டு வாகனத்தை தாண்டி அவள் நடக்க, பின்னாலே வந்து பிடித்து நிறுத்தினான்,
“எங்க போற” என்ற கேள்வியோடு.
“எங்கையோ போறேன். ஏதாவது ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், இந்த ஊர்ல மடம் இருக்கும் அங்க போறேன். ஆனா உனக்கோ இல்ல இவங்களுக்கோ பாரமா இருக்க மாட்டேன். போதுமா? சந்தோசமா பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணிக்கோ”
கண்ணீர் உருண்டோடியது அவளது கன்னத்தில், அதுவே பதில் கூற, “என்ன ரொம்ப பேசிட்டாங்களா?” கேட்டான் குனிந்து வருத்தமாக.
பதில் பேசாதவளின் வேதனை உணர்ந்து, “சரி என் கூட வா” கை பிடித்து ரகு வாகனத்திற்கு அழைத்து செல்ல முயல அவன் கையை உதறினாள் ஆவேசமாக.
“உன்ன நம்பி வர்ற ஒவ்வொரு தடவையும் என்ன நீ பாதில மட்டும் தான் ரகு விட்டுட்டு போற… போதும் எல்லாரையும் நம்பி நம்பி நான் ஏமாந்து போறது. செத்தாலும் அனாதையா எங்கையாவது போய் சாகுறேன்” உணர்ச்சிகளின் பிடியில் சிக்கி தவித்தவள் வார்த்தைகளும் திணறியது.
முத்தாய் உருவாகி நின்ற கண்ணீர் துளிகளை பார்த்து அவன் உடலும் இறுக, “கோவிந்தம்மா…” என்ற அவனது ஒற்றை உயிர் கரையும் அழைப்பில் வெடித்து வந்த அழுகையை சமாளிக்கும் வழி தெரியாது அவனிடமே ஆறுதல் தேடி ரகுவை இறுக அணைத்துக்கொண்டாள்.