நேற்று இரவில் வெளுத்து வாங்கிய மழையின் தாக்கம் அடுத்த நாள் விடியற்காலையிலும் அப்படியே இருந்தது. குளிர் காற்று வீச, இன்றும் மழை பொழியும் அறிகுறி மென் காலை பொழுதில் தெரிய, கண்ணாடியை அடைத்து காரினுள் படுத்திருந்த தினேஷுக்கு தலை, கழுத்தெலாம் வியர்த்து தூக்கம் கலைந்தது.
ஒரு காலை சீட்டிலும் மற்றொரு காலை கண்ணாடியில் வைத்திருந்தவன் கால்கள் நீண்ட நேரமாக ஒரே சீராக வைத்திருந்த காரணத்தால் வேதனை கொடுத்தது. தலை தூக்கி கழுத்தை பிடித்து எழுந்து அமர்ந்தவன் முதல் வேலையாக கதவை திறந்து கீழே இறங்கினான்.
சில்லென்ற காற்று முகத்தில் மோதி நிற்கவும் தான் ஆசுவாசமாக சுற்றி பார்த்தான். அருகில் இருந்த கடையில் ஒரு பேஸ்ட், தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து பல் துலக்கி வாகனத்தின் மறு பக்கம் சென்று முன் இருக்கையை சாய்த்து படுத்திருந்த ரகுவை எழுப்பினான்.
ஒரே அழைப்பில் எழுந்தவன் தானும் பல் துலக்கி முகம் கழுவி சற்று தொலைவில் தெரிந்த அந்த வீட்டினை பெருமூச்சோடு பார்த்தான்.
“நல்லா யோசிச்சுக்கோ மாப்பிள்ளை” தினேஷின் எச்சரிக்கையை உள் வாங்கி கண்களை அழுத்தமாக மூடி திறந்தவன், “வா போகலாம்” என அவ்வீட்டை நோக்கி நடந்தான்.
தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுதே பிரமாண்டமாக தெரிந்தது அந்த இல்லம். குறிப்பாக கூற வேண்டும் என்றால் திவ்யாவின் தந்தை இல்லம் அது.
நேற்று திவ்யாவை விட்டு வெளி வந்தவன் குற்ற உணர்ச்சியில் அதிகம் தத்தளித்தான்.
கோவத்தை தனக்கு சாதகமாக மாற்றி செய்த காரியத்தை எண்ணி கூனி குறுகி வேதனைப்பட்டிருந்த நேரம், “கேக்க ஆள் இல்லனு நீ ரொம்ப ஆடுற ரகு. அவளோட அப்பா இருந்த இந்நேரம் உனக்கு நடக்குறதே வேற” கோவம் கொப்பளிக்க நண்பன் பேசியது ரகுவின் நெஞ்சத்தில் தீபத்தை ஒளிர செய்தது.
சிறிதும் தாமதிக்காமல் நேரம் காலத்தை கவனிக்காது வாகனத்தை எடுக்க, அவன் இருக்கும் மனநிலையில் நண்பனை தனியே விட முடியாமல் தானும் வாகனத்தினுள் ஏறிக்கொண்டான் தினேஷ்.
இரண்டரை மணி நேர பயணத்திற்கு பிறகு இருவரும் காஞ்சிபுரத்தில் வந்து நிற்க விஷயம் புரிந்து நண்பனை திட்டி தீர்த்துவிட்டான்.
அனைத்தையும் பொறுமையாக கேட்டுவிட்டு, “நான் பேசணும். அவ்ளோ தான். கூட வர்றதா இருந்தா வா இல்லையா பஸ் ஏத்தி விடுறேன்”
தீர்க்கமாக சொன்னவன் உறுதி தினேஷுக்கு புரிய அவனை பிரிய மனம் வராமல் உடன் இருந்தான்.
அதே சமயம் இரவு நெடுநேரம் ஆகியிருக்க இந்நேரம் சென்று பேசுவது நல்லதல்ல என நண்பனுக்கு புரியவைத்து சற்று தேக்கி வைத்தான். இப்பொழுது விடிந்தும் விடியாத காலை பொழுதிலே செல்ல தயாராகிவிட்டான்.
வீட்டினுள் நுழைய திவ்யாவின் கணவன் என்னும் பதவி போதுமானதாக இருக்க காவலாளி யோசிக்காமல் விட்டு அவனுக்கு முன்னே ஓடி சென்று வீட்டினரிடம் செய்தியை கூறியிருந்தான்.
தடதடவென சத்தத்தோடு மொத்த ஆண்களும் வாயிலை நோக்கி வந்து நிற்க, நிதான நடையோடு வந்த ரகுவை தீயாய் முறைத்தனர்.
“யார்ரா இவனை உள்ள விட சொன்னது, கண்ட கண்ட நாயெல்லாம் உள்ள விடுவியா நீ?” திவ்யாவின் இளைய சகோதரன் வாட்ச்மேன் முகம் பார்த்து இழிவாக கேட்டான்.
“இப்ப யார் நாய் மாதிரி குறைக்கிறது?” அதீத கோவத்தில் வந்தவன் திவ்யாவின் குடும்பம் என்றெல்லாம் பார்க்காமல் சரமாரியாக வார்த்தையை விட்டான்.
“யார் வீட்டுல வந்து யாரை பேசுற..”
“நீ அடங்கு பிரபு. உங்கிட்ட பேச நான் வரல” என்றவன் திவ்யாவின் தந்தையை பார்த்து,
“நீ எல்லாம் பெரிய மனுஷன் தான அப்றம் எதுக்கு இவ்ளோ கேவலமா நடந்துக்குற?”
ஒவ்வாமையை முகத்தில் வைத்து அவரை பார்த்து ரகு கேட்ட கேள்வியில் இரு சகோதரர்களுக்கும் திகுதிகுவென ஆத்திரம் வர ஒரே மூச்சில் ரகுவின் சட்டையை பிடித்து தாக்க எத்தனிக்க அவர்களுக்கு இடையில் வந்த தினேஷ் அந்த இருவரையும் ஒரே முயற்சியில் சில அடி தூரம் வீசியிருந்தான்.
“பேசிட்டு இருக்கப்பயே கை ஓங்குறீங்க… மவனே அன்னைக்கு ஆள் இல்லாதபோ வீடு புகுந்து அடிச்சிட்டீங்க, இன்னைக்கு அவன் மேல கை வைங்கடா பாக்கலாம். அவன் வேணா அவன் பொண்டாட்டி குடும்பம்னு யோசிச்சு சும்மா இருக்கலாம். ஆனா எனக்கு அப்டி இல்ல… மவனே அத்தனை பேரையும் கூறுபோட்டுடுவேன்”
“எங்க போடுடா பாக்கலாம்” என தங்கள் பங்கிற்கு அவர்கள் எகிறிக்கொண்டு வர, தினேஷை பிடித்து நிறுத்தி,
“சண்டை போடுற ஆசைல நான் வரல. நாலு கேள்வி கேட்டு போய்கிட்டே இருப்பேன்” நிதானமாக பேசினான் ரகு.
“இவிங்ககிட்ட எதுக்கு இவ்ளோ பொறுமையா பேசுற? கருமம், வீடு தேடி கலங்கி வந்த பிள்ளை கைல காச குடுத்து அசிங்கப்படுத்தி அனுப்புனவிங்க… ச்சை அன்னைக்கு அவகிட்ட நிதானமா பேசிருந்தா இந்த மனுஷ ஜென்மங்களை நாம வந்து பாக்கணும்னு தலையெழுத்து இருந்திருக்காது” புலம்பி அருகில் இருந்த பூ ஜாடியை எட்டி உதைத்தான் தினேஷ்.
“என் பிள்ளை என்ன தேடி வந்துச்சா?” ஓரமாக நின்ற திவ்யா தந்தை தவிப்போடு மற்ற குடும்பத்தினரை பார்த்தார்.
“சும்மா நடிக்காத ய்யா. ஆறுதல் எதிர்பார்த்து வந்தவகிட்ட பணத்தை குடுத்து வேலைக்காரி மாதிரி அனுப்பி வச்சிட்டு இன்னைக்கு ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசாத. ஒவ்வொருத்தனையும் கொன்னு பொதைக்கணும்னு வெறி வருது” என்றவன் சில நொடிகள் இடைவிட்டு,
“பெத்த புள்ள லவ் பண்ணி அத ஏத்துக்க மனசு வரலைனா, ‘வீட்டுக்குள்ள சேத்துக்க முடியாதுனு’ சொல்லி அனுப்பிடுங்க. அத விட்டு நல்லாவே இருக்க மாட்ட, நாசமா போவ, வெளங்காம போவ-னு சாபம் குடுக்காதிங்க சரியா?”
“என் பிள்ளைக்கு ஒன்னும் அகலல…” பதட்டத்தோடு கேட்ட அவள் அன்னையை வெறியோடு நெருங்கியவன் தன்னையே சமன்படுத்தி,
“நீங்க பேசாதீங்க. இப்டி எல்லாம் ஒரு அம்மா இருப்பாளானு தோன வச்ச ஒரு அருவருப்பான ஜீவன் நீங்க”
“டேய் என் பிள்ளைக்கு என்னடா?” தளர்ந்த நடையோடு அவனை கரம் பற்றி திருப்பினார் அவள் தந்தை.
“உன் மகளுக்கு உடம்புக்கு ஒன்னுமில்லயா. ஆனா மனசு செத்து கெடக்குது. என்ன மாதிரி புருஷனையும், உங்கள மாதிரி பெத்தவங்களையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நேசிக்கிறாளே. அதுக்கான தண்டனையை அவ அனுபவிக்கிறா இப்போ”
“என்னடா நாடகம் நடத்திட்டு இருக்க. அவன்கிட்ட இன்னும் என்ன ப்பா பேச்சு? அடிச்சு அனுப்புங்க அவனை”
அவனை கண்டுகொள்ளாமல் கோவத்தோடு அவள் பெற்றோரை பார்த்து, “எந்த நேரத்துல வயிறு எறிஞ்சு சாபம் விட்டிங்களோ ஆளுக்கு ஒரு பக்கம் சிதற போறோம். சந்தோசமா இருங்க. எந்த வாழ்க்கைல உங்க மக அவ விருப்பபடி இருக்கக் கூடாதுன்னு மொத்த குடும்பமும் தினம் தினம் விரும்புனீங்களோ அது கூடிய சீக்கரம் நடக்க போகுது. டிவோர்ஸ் வாங்க போறோம் ய்யா” அவரை நெருங்கி கத்தினான்.
“காது குளிர சந்தோசமா கேட்டுக்கோங்க. இன்னும் கொஞ்ச நாள் தான் அவ என்னோட மனைவி, அதுக்கு அப்றம் உங்க பொண்ணு தான். உங்க விருப்பபடி குழந்தையும் இல்ல, சந்தோஷமும் எங்களுக்குள்ள இல்ல. போதுமா?
இத தான ஆசைபட்டிங்க. என்ன மாதிரி ஒருத்தன் கூட இருந்து சந்தோசத்தை எல்லாம் விட்டு தவிச்சது போதும். மனசு ஒடஞ்சு அவளோட சந்தோஷத்துக்காக மட்டும் தான் இந்த டிவோர்ஸ் குடுக்குறேன்” ஏகத்திற்கும் குரல் உடைந்தது ரகுவுக்கு.
உயிருக்கு உயிராக நேசித்தவளை எதற்காக பிரிய ஒத்துக்கொண்டோம் என ஒரு வார காலத்தில் அவன் வருந்தாதே நாளே இல்லை. இப்பொழுது அதை வாய் விட்டு சத்தமாக கூறும் பொழுது இதயத்தில் உண்டான வலியின் அளவு சொல்லிலடங்காதது.
அவனை விட்டு சற்று தள்ளி முதுகை காட்டி நின்ற தினேஷுக்கு கூட நண்பனின் நிலை விவரிக்க முடியாத வருத்தத்தில் தவித்தது.
“அத சொல்லி உங்ககிட்ட ஆறுதல் தேட தான் வந்தா. அவளை போய் என்ன என்னமோ பேசி அழுக வச்சு அனுப்பி விட்ருக்கீங்களேடா… உங்கள தேடி பொண்ணு வந்தா காசு சொத்துக்காக தான் இருக்குமா, ஏன் பாசம் ஏக்கத்துல வந்துருக்கவே கூடாதா?”
இரு சகோதரர்களை பார்த்து வருத்தம் மேலிட அவன் கேட்க, அவன் கூறிய செய்தியிலிருந்தே இன்னும் அவர்கள் அனைவரும் மீளாமல் இருந்தனர்.
பேசியது சபித்தது எல்லாம் அவள் வாழ்க்கையில் நடந்துவிட்டது என நிம்மதியாக இருக்க முடியவில்லை. துடித்தனர் அனைவரும். தங்கள் வார்த்தை மனதிலிருந்து வரவில்லையே,
அடம் பிடித்து ஆசையோடு சென்றவள் வாழ்க்கை இப்படி பாதியிலே காணாமல் போக வேண்டும் என எந்நாளும் அவர்கள் நினைத்தது இல்லை.
அதே சமயம் இத்தனை அக்கறையாய், பரிதவிப்போடு மனைவியை பற்றி பேசுபவன் எதற்காக அவளை விவாகரத்து செய்ய நினைக்கிறான் என்ற எண்ணமும் உடன் பிறந்தது.
கண்களில் நிலையில்லாமல் தவிப்போடு பேசுபவன் இதற்கு மறுப்பு தெரிவிக்கலாமே என நினைத்த திவ்யாவின் தந்தை அவனிடம் கேள்வி கேட்கும் தைரியத்தை இழந்திருந்தார்.
முகத்தை இறுக்கமாக கைகளால் தேய்த்தவன் தன்னை நிதானப்படுத்தி, இருகைகளையும் கூப்பி அவரை கெஞ்சல் பார்வை பார்த்தான்.
“உங்கள கை எடுத்து கும்புட்டு கேட்டுக்குறேன் அவளுக்கு காசு பணம் குடுத்து பினான்ஷியலா சப்போர்ட் பண்ண வேணாம், மெண்டல் சப்போர்ட் பண்ணுங்க போதும். என்ன தானே பிடிக்காது, நான் போறேன்.
இனிமேல் அவ வாழ்க்கைல வரவே மாட்டேன். அவ பண்ணத மன்னிச்சு ஏத்துக்குட்டு அவளை சந்தோசமா மட்டும் பாத்துக்கோங்க ப்ளீஸ்…”
உண்மையான மனதோடு வேண்டியவன் தாங்கள் இப்பொழுது இருக்கும் ரிசார்ட் மற்றும் தன்னுடைய வீட்டின் முகவரியையும் அங்கே வைத்துவிட்டு தான் ஆஸ்திரேலியா செல்லும் தகவலையும் கூறி அவர்கள் மனம் மாறிய பின்பு வருமாறு கேட்டுக்கொண்டு வெளியேறியிருந்தான்.
ரகு சென்ற பிறகு செய்வதறியாமல் திவ்யாவின் தந்தை வாசலிலே அமர, அவளது அண்ணன் இருவரும் என்ன செய்வதென தெரியாமல் தவிப்பில் இருந்தனர்.
கெளரவம், தகுதி என பார்த்து மகள் எந்நிலையிலும் இருந்து கஷ்டப்படட்டும் என விடுவதா இல்லை அனைத்தையும் மறந்து மகளை அரவணைப்பதா, முடிவு தெரியாமல் மாறி மாறி ஒருவர் முகத்தை பார்த்து நின்றனர்.
வீட்டினை விட்டு செல்லும் பொழுது வேண்டும் என்றே அங்கிருந்த பூ தொட்டியை எடுத்து உடைத்து சென்றிருந்தான் தினேஷ்.
நண்பனை திரும்பி முறைத்த ரகு, “லூசாடா நீ?” என்றான்.
“யார் நான் லூசா? நீ தான்டா லூசு. இந்த மாதிரி ஒரு கிறுக்கனுங்ககிட்ட திவ்யாவை மாட்டி விட பாக்குற பாரேன். அவளா தனியா இருந்தா கூட நிம்மதியா இருப்பா”
இன்னும் கோவம் அடங்காது ஓரத்தில் கிடந்த ஒரு கல்லை எடுத்து வீட்டை குறி பார்த்து எறிந்த பிறகே நிம்மதியடைந்தான். இழுத்து பிடித்து நண்பனை அவ்விடம் விட்டு அகற்றி வந்திருந்தான் ரகு.
“இத்தனை வருஷம் இங்க தான இருந்தா? ஒரு நாள் அவ அப்பா கூட அவளை திட்ட மாட்டாரு. அண்ணனுங்க அவளை கண்ணுக்குள்ள வச்சு தாங்குவானுங்க.
ஏதோ அவ மேல கோவத்துல ரெண்டு வார்த்தை பேசிட்டானுங்க. அதுக்காக அவங்க தப்பானவங்கனு சொல்ல முடியாது தினேஷ். அவளுக்கும் அவங்க நினைப்பு ரொம்பவே அதிகமா இருக்கு, எங்களுக்குள்ள நடந்த பெரிய சண்டைல அது சமந்தமாவும் நிறையா இருக்கு” சாவியை நண்பன் கையில் தூக்கி போட்டான்.
இருவரும் அமைதியாக வாகனத்தில் ஏறி அமர்ந்தனர், “பாசம்னு இருந்தா எப்பவும் மாறாது. இப்டி அடிக்கடி மாறுனா அது பேர் நடிப்பு”
தினேஷை தீர்க்கமாக பார்த்தவன், “அப்போ நான் நடிக்கிறேன்னு சொல்றியா?”
“யாருக்கு தெரியும்” ஆர்வமில்லாமல் பதில் வந்தது.
ரகு நம்ப முடியாமல் தினேஷை பார்த்தான், எத்தனை துன்பம், கல்லூரி சண்டை வந்தாலும் யோசிக்காமல் தன்னோடு நிற்பவன் இன்று தன்னையே நம்பாமல் மனைவிக்கு துணை நிற்பது மகிழ்ச்சி கோவம் என இரண்டையும் சேர்த்து தந்தது.
தினேஷ் என்னமோ மாறாத இருந்தது. திருமணம் செய்தவனும் சிந்தனை சரியில்லாமல் எந்த பக்கம் தாவுவது என குழப்பத்தில் எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.
பெற்றவர்கள் அதை விட மோசம். இவர்களுக்கு இடையில் சிக்கி தவிக்கும் அவள் மேல் தான் இரக்கம் அதிகம் ஊறியது தினேஷுக்கு.
“சரி தான்டா” என்றான் ரகு வரவழைத்த சிரிப்போடு.
“சும்மா இப்டி நடிக்காத சரியா. எரிச்சலா வருது. போய் பேசி தான் பாரேன்டா அவகூட. என்ன மனசுல நினைக்கிறானு தெரிஞ்சா நீயும் நிம்மதியா இருக்கலாம்ல”
நேற்று உணர்வுகள் கொப்பளித்து திவ்யாவிடம் நடந்தவற்றை நினைத்து பார்த்தவன் மனம் கூனி குறுகியது. கோளை போல் அல்லவா அவளை அப்படியே விட்டு வந்தேன்… என்ன நினைத்திருப்பாள் என்னை பற்றி.
நண்பன் கேட்ட கேள்வியை மறந்து போனவன் எண்ணங்களின் ஒவ்வொரு மூளை முடுக்கிலும் திவ்யா ஆக்ரமித்துக்கொண்டாள்.
கண் மூடி இருக்கையில் சாய்ந்தவன் சிந்தனை தங்கள் இனிமையான நினைவுகள், கசப்பான நினைவுகள் என அனைத்தையும் அசைபோட்டு சோர்ந்து போனது. நினைவுகளில் பயணித்தவன் எண்ணங்களை தட்டி எழுப்பி மஹாபலிபுரம் வந்ததாக கூறியிருந்தான் தினேஷ்.