Skip to content
Post Views: 11,045
அவனின் சிரிப்பு சப்தம் கேட்டு உள்ளிருந்து வந்த சங்கீதா, “ஓஹ் வினய் சார்!! வாங்க வாங்க!! சதீஷ் இப்போதான் சொன்னாங்க நீங்க வருவீங்கன்னு” என அவனை உள்ளே அழைத்துச் சென்றிருந்தாள்.
அவர்கள் சென்ற பின்பும் அதிர்ச்சியில் வாசலில் இருந்து அசையாமல் நின்றிருந்த வந்தனாவின் தோள்களைத் தொட்டு உலுக்கிய சங்கீதா, “ஏண்டி மந்திருச்சு விட்ட மாதிரி இருக்க? முதல்ல உள்ள வா” என அவளையும் இழுத்து வந்தவள், வினயை நோக்கி, “என்ன சாப்பிடுறீங்க?? ஜூஸ் ஓர் காஃபி??” என அவர்களை உபசரிக்க,
Advertisement
“நோ தேங்க்ஸ்” என புன்னகையுடன் மறுத்தவன், “ஷால் வீ ஸ்டார்ட்??” என்று கேட்க,
சங்கீதா பதிலளிக்கும் முன் அவளை தன் பக்கம் இழுத்த வந்தனா, “அடியே சங்கி மங்கி உனக்கு மேக்கப் போட இவ்ளோ பெரிய ஊர்ல ஒரு பொம்பளை கூடவா கிடைக்கலை.. சொல்லிருந்தா நம்ம வீட்டுக்கு எதிர்த்தவீடு சரளா அக்காவைக் கூட நான் கூட்டிட்டு வந்திருப்பேன்ல.. ஏண்டி போயும் போயும் ஒரு ஆம்பிளையை கூப்பிட்டு வச்சிருக்க” என அவள் காதைக் கடித்தாள்.
Advertisement
Advertisement
இவள் பேசியது எங்கே அவர்களுக்கு கேட்டு விடுமோ என பயந்த சங்கீதாவோ, ‘கொஞ்சம் வாயை மூடிட்டு இருடி’ என தன் தங்கையை மிரட்டிவிட்டு அவர்களிடம் ஆரம்பிக்கலாம் என்று சொல்லி நகர்ந்தாள்.
உண்மையில் வந்தனா பேசியது வினயின் செவிகளை சென்றடைந்திருந்தாலும், இத்துறையை அவன் தேர்ந்தெடுத்த போதே இதை விட மோசமான பேச்சுக்களையெல்லாம் கேட்ட அனுபவம் இருந்ததினால், இதையும் ஒரு புன்னகையுடனே கடந்துவிட்டான்.
Advertisement
“நீங்க ஏதாவது ஐடியா வச்சிருக்கீங்களா மேம்??” என சங்கீதாவின் விருப்பத்தை அறிந்து கொள்ள வினய் கேட்க,
“ஐ ஹாவ் நோ ஐடியா சார்.. கம்ப்ளீட்லி ப்ளாங்க்.. எது நல்லா இருக்குமோ நீங்களே பண்ணுங்க” என அவனுக்கு முழு சுதந்திரம் அளித்தவள் கண்களை மூடி தன் இருக்கையில் அமர்ந்து விட,
அடுத்த நொடி வேறொரு ஆளாய் மாறிப்போனான் வினய்.
இவ்வளவு நேரம் கண்களில் இருந்த குறும்பு மறைந்து போக, அந்த தீட்சண்யமான கண்களில் இப்போது தீவிரம் குடி கொண்டது.
சங்கீதா அன்று அணியப்போகும் புடவையின் நிறத்தையும் அவளின் சரும வகையையும் பொறுத்து எப்படி அவளுக்கு ஒப்பனை செய்வது என நொடியில் தீர்மாணித்து விட்டவன், அடுத்த கணமே தன் வேலையில் இறங்கினான்.
இயற்கையிலே சங்கீதாவின் முடி பட்டு போல் மென்மையாக இருந்ததால், அதை நேராக்கவேண்டிய அவசியம் அவனுக்கு இருக்கவில்லை.. எனவே அவன் நேராக முக ஒப்பனைக்கு தாவிவிட்டான்.
மாசு மருவில்லாத சருமத்தை உடைய சங்கீதாவிற்கு, “க்ளாஸி லுக்” என்று கூறப்படும் பளபளப்பான தோற்றத்தை கொடுக்க முடிவு செய்தவன் அதற்கு ஏற்றாற் போல அவள் முகத்தை தயார் செய்தான்.
முதலில் சருமத்தை சுத்தம் செய்வதில் தொடங்கி, மாய்ஸ்சரைசர் க்ரீம் பூசிவிட்டு, அடுத்ததாய் பிரைமர், அதைத்தொடர்ந்து ஃபவுண்டேஷன், பின் கருவளையம், சின்னச் சின்ன கரும்புள்ளிகளை மறைக்க கன்சீலர், அதைத் தொடர்ந்து ஃபவுண்டேஷன் பவுடர், பின்பு அதனை ப்ளென்ட் செய்துவிட்டு அவள் முகத்திற்கு ஏற்றது போல் அளவாய் ஆங்காங்கே பிளஷ் செய்தவன் பின் அவளின் கண்களுக்கு ஏற்றவாறு ஐ ஷேட் கொடுத்து லேசாய் மஸ்காரா போட்டவன் அவளின் கண்களுக்கு செய்ற்கை ஐ லேஷ்களை(Eye lash) பொறுத்தி விட்டு அதை நேர்த்தியாக மேல் நோக்கியவாறு பிரஷ் செய்து விட்டான்.
பின் அவள் உதட்டை பளபளபாக்குவது போல் லிப் க்ளாஸ் போட்டவன், பின் போட்டோ எடுக்கும் போது தூக்கிக் காட்டுவதைப் போல் குறிப்பாய் சில இடங்களை மட்டும் ஹைலைட் செய்து இறுதியாய் முகத்தை மேலும் பளபளப்பாக்க ஃபேஸ் க்ளாஸை போட்டு விட்டு இறுதியாய் அவள் முகத்தைப் பார்த்து திருப்தியாய் புன்னகைத்தான்.
அவன் செய்கை ஒவ்வொன்றையும் ஆவென வாயைப் பிழந்து பார்த்துக் கொண்டிருந்தாள் வந்தனா.
ஆனால் அது எல்லாம் வினயின் கவனத்தில் படவில்லை.
வேலை என்று வந்துவிட்டால் வேறு எதிலும் அவன் கவனம் செல்லாது.
அவன் அடுத்ததாக அவளின் சிகை அலங்காரத்திற்குத் தாவினான்.
பத்தே நிமிடத்தில் அழகாய் அவள் முகத்திற்கு ஏற்றவாறு முத்துக்கள் பதித்து ‘ஃபிஷ்டெயில் ப்ரைட்’ போட்டு விட்டவன், சங்கீதாவைக் கண்டு , “பெர்ஃபெக்ட்” என்று கூற,
தன் தோற்றத்தை கண்ணாடியில் பார்த்த சங்கீதாவிற்கும் பரம திருப்தி.
‘ஒரு ஆம்பளை என்னத்தை பண்ணிற போறான்?’ என்ற நினைப்பில் இருந்த வந்தனாவிற்கு சங்கீதாவின் இந்த தோற்றம் வாயடைக்க வைத்தது.
சங்கீதா முன்னமே அழகு தான் என்றாலும், இப்போது அவன் கைகள் செய்த மாயாஜாலத்தில் அப்சரஸ் போல் மினுமினுத்தாள்.
“வாவ்!!” என வந்தனாவின் அதரங்கள் தானாக முனுமுனுக்க, அதைக் கண்டு புன்னகைத்துக் கொண்டவன் சங்கீதாவிடம், “நெக்ஸ்ட் சேரி” என்று தொடங்க,
அதுவரை அவன் செய்த ஒப்பனையில் லயித்து இருந்த வந்தவனா சட்டென, “ஹலோ!! சேரி எல்லாம் நாங்க கட்டிக்கிறோம்.. நீங்க முதல்ல கிளம்புங்க.. ஆளைப் பாரு சேரி கட்டிவிடப்போறாராம்ல” என இவள் படபடக்க,
“அட ஏன் மேம் இப்படி பேச விடாம நீங்களே முடிவெடுக்குறீங்க?? சேரி நான் தான் கட்டி விடப் போறேன்.. சார் சேரி கட்டி முடிச்சுட்டு கூப்பிடுங்க வெளியே இருக்கேன்னு சொல்ல வந்தாரு” என ஸ்டெல்லா கடுப்புடன் அவளுக்கு பதிலளித்தாள்.
வந்தனாவிற்கு அவமானமாய் போய்விட்டது.
‘ச்சே இப்படி சொதப்பிட்டே இருக்கியே டி வந்து!!’ என நொந்து கொண்டவள்,
“சாரி!!” என தரையைப் பார்த்துக் கூற,
“சில்லி கேர்ள்!!” என நினைத்துக்கொண்ட வினய் வேறேதும் பேசாமல் அங்கிருந்து வெளியேறி இருந்தான்.
அதன் பின் ஸ்டெல்லா அவளுக்கு அழகாய் சேலை கட்டி விட்டு தயாராக்கி இருக்க, இறுதியாய் சங்கீதாவைக் கண்டு திருப்தியாக புன்னகைத்துக் கொண்ட வினய்,
“ஓகே மேம்.. ஹோப் யூ லைக் மை வொர்க்.. ஸ்டெல்லா உங்க ஃபங்க்ஷன் முடியுற வரைக்கும் கூட இருந்து உங்களுக்கு டச்சப் எல்லாம் பண்ணுவாங்க.. எனக்கு இன்னொரு முக்கியமான வேலை இருக்கு சோ நான் கிளம்புறேன்.. அண்ட் கங்க்ராட்ஸ் ஃபார் யுவர் நியூ ஜர்னி” என்று அவளை வாழ்த்தி விடைபெற,
“தேங்க்யூ சோ மச் வினய் சார்… உண்மையாகவே எனக்கே என்னை பார்க்க ரொம்ப அழகா இருக்கு.. அன்ட் ஒரு சின்ன ஹெல்ப்.. அப்படியே என் சிஸ்டருக்கும் கொஞ்சம் லைட் மேக்கப் பண்ணி விட முடியுமா?? லேட் ஆனா வேண்டாம்..” என சங்கீதா கோரிக்கை முன்வைக்க,
அவனோ உதட்டோரம் வெளிவரத் துடித்த கேலிப் புன்னகையுடன், ‘என்ன பண்ணிடலாமா??’ என கண்களாலயே வந்தனாவிடம் கேள்வியெழுப்ப,
அதில் அரண்டு போன வந்தனா, “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்” என வேகமாய் மறுத்துவிட்டாள்.
அதில் இப்போது நன்றாகவே பல்வரிசை தெரிய சிரித்த வினய், “பயப்படாதீங்க மேடம்.. நீங்க இப்போ ஓகே சொன்னாலும் எனக்கு டைம் இல்லை.. ஐ ஹாவ் டூ லீவ் நவ்.. சாரி மிஸ்.சங்கீதா.. ஸ்டெல்லாவும் நல்லாவே மேக்கப் பண்ணுவாங்க.. ஷீ வில் டூ.. நான் கிளம்புறேன் பை” என்று கூறி விடைபெற்றவன்,
“ஸ்டெல்லா! பார்த்துக்கோ” என்றுவிட்டு வெளியேறியிருந்தான்.
போகும் முன் வந்தனாவை பார்த்து சிரித்து வைக்கவும் மறக்கவில்லை அந்த மாயக்கண்ணன்.
அதன் பின்னான நேரங்கள் றெக்கை கட்டிக் கொண்டு பறந்ததென்று சொன்னால் மிகையாகாது.
மிகவும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அழைக்கப்பெற்று அழகாய் அளவாய் நிகழ்ந்து முடிந்த அந்த நிச்சயதார்த்தம் அனைவருக்கும் ஒரு நிறைவைத் தந்தது.
அரசியல்வாதி குடும்பம் என ஒரு பிடித்தமின்மையோட அங்கு வந்திருந்த நாட்டரசன் கூட, மணமகன் வீட்டாரின் அணுகுமுறையில் கொஞ்சமே கொஞ்சமாய் மலையிறங்கியிருந்தார்.
சதிஷ் – சங்கீதாவின் காதல் பார்வைகளையும் சின்னச்சின்ன கேலிகளையும் பார்த்த வந்தனாவிற்கு உண்மையில் அவ்வளவு நிறைவாய் இருந்தது.
‘நம்ம கல்யாணமும் இப்படித்தான் இருக்குமோ??’ என யோசித்தவள், நாட்டரசன் நிச்சயம் அவரைப்போல் ஒருவனைத்தான் தனக்கு மணமகனாய் தேர்ந்தெடுப்பார் என்பது அவளுக்கு திண்ணம்.
அப்படியிருக்க, காதலையும் சந்தோஷ கேலிகளையும் தன் வாழ்வில் நினைத்தே பார்க்கக் கூடாது என முடிவெடுத்தவள் அந்த நொடியே அந்நினைவை மனதில் இருந்து அழித்திருந்தாள்.
ஆனால் வந்தவர்கள் அனைவரும் சங்கீதாவின் ஒப்பனையைக் கண்டு வெகுவாய் பாராட்ட, அவள் அறியாமலே வினயின் அந்த சிரித்த முகம் வந்தனாவின் மனதில் மின்னி மறைய,
‘ச்சே இது என்ன நினைப்பு!! ‘ என தன்னைத்தானே திட்டிக் கொண்டவள், பின் வேறெந்த சிந்தனைக்கும் இடம் வகுக்காமல் தன் தமக்கையின் நிச்சயதார்த்த நிகழ்வில் ஒன்றிப் போனாள்.
அங்கிருந்து கிளம்பிய வினயோ, இரண்டு வாரத்தில் மும்பையில் நடக்கவிருந்த ‘லேக்மே ஃபேஷன் வீக்’ விழாவிற்கு, சென்னையில் இருந்து கலந்து கொள்ளவிருந்த அந்த மாடல் லேகாவிற்கு மேக்கப் டெஸ்ட் செய்து பார்த்து முடித்தவன், பின் போயஸ் கார்டனில் அமைந்திருந்த தன்னுடைய இல்லத்திற்கு வந்து சேர நள்ளிரவாகியிருந்தது.
அவன் மிகவும் சோர்வுடன் வந்ததால் வேறேதும் பேசாமல் பால் மட்டும் அவனுக்கு பருகக் கொடுத்துவிட்டு அகிலா சென்று விட, வினயும் அவனுக்கிருந்த அலுப்பில் தன் மெத்தையில் விழுந்த அடுத்த நொடி உறங்கிப் போக, ‘வந்தனா’ என்றொரு பெண்ணை சந்தித்ததைக் கூட மறந்திருந்தான்.
இப்படி இருவரும் தத்தம் இணையை உணராமல் இருக்க, அதை அவர்கள் உணரும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று நினைத்த விதி புன்னகையுடன் அப்போது விடைபெற்று சென்றது.
error: Content is protected !!