வேதா சொன்னதற்கு தப்பாமல் கோமதி அலப்பரையைக் கூட்டினார். பெரிய ஹாஸ்பிடல், பெரிய டாக்டர் யாரென்று கேட்டு, போகவேண்டும் என்றார்.
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல், “அத்தை, உங்களுக்கு முதல் பேரக் குழந்தை. எங்க வீட்ல இது அஞ்சாவது குழந்தை. அதுல மூணு குழந்தைங்க பிறந்தது டாக்டர். கீதா கிட்டதான். எல்லாம் சுக பிரசவம். அண்ணியொட ஸ்கூல் பிரெண்ட். எந்த நேரமும் அவங்களை நேர போன்ல பிடிக்க முடியும். இந்த அளவுக்கு உங்களுக்கு பழக்கமான, இவங்களவிட பெரிய டாக்டர் தெரியும்னா, சொல்லுங்க பார்க்கலாம். முக்கியமா இவங்க தாம்பரத்துலயே இருக்காங்க. மாசா மாசம் போய் பார்த்துட்டு வர சுலபமா இருக்கும். டெலிவெரி உங்களுக்கு இந்த ரெண்டு ஹாஸ்பிடல்ல எதுல வேணும்னாலும் வெச்சிக்கலாம். ரெண்டுக்கும் வருவாங்க.” என்று இரண்டு பெரிய மருத்துவ மனைகளைக் கூறினான்.
அடுத்து, “நாளை நானும் வருவேன்.”, என்று அடம் பிடித்தார் கோமதி. அதற்கும் பத்து நிமிடம் மூச்சை பிடித்து பதில் சொல்லி சமாளித்தான்.
ஒரு வழியாய் கிளம்பி வெளியில் வந்தபின், “ தேனூ, இதுக்கு சும்மா முத்தமெல்லாம் செல்லவே செல்லாது. ஒரு ஃபுல் மசாஜ் வேணும் எனக்கு. எப்பா, உங்கப்பா எப்படிதான் சமாளிக்கறாறோ, பாவம்.”, என்று மாமனாருக்குப் பரிதாபப்பட்டான்.
அவனை செல்லமாகக் கொட்டியவள், “அதான் பல நேரம் எங்கம்மா இஷ்டப்படியே விட்டுட்டு ஒதுங்கிடுவார் அப்பா.”
அவர்கள் வீடு வந்து இறங்கியதும், “இப்படி ஒரு அம்மாக்கும் , மாமியார்க்கும் இடையில என்னை திண்டாடவிட்டுட்டு நீ மட்டும் தப்பிச்சு ஓடப்போற. அது நெனச்சாதான் பயமா இருக்கு வீரு.”, சன்னமான குரலில் வந்தாலும் அவள் கலக்கம் நன்றாகவே தெரிந்தது.
கையை அழுத்தியவன், “நீ அவங்களோட நேர எந்த வாகுவாதமும் வெச்சிக்காத, அம்மாவை சமாளிக்க அண்ணிய யூஸ் பண்ணிக்கோ. உங்கம்மாவை உன் அண்ணனைக்கொண்டு சமாளி. அவங்களை நம்பித்தான் நான் கெளம்பறேண்டா.”
மறு நாள், டாக்டர். கீதா, கர்பத்தை உறுதி செய்தாலும், “நாற்பது நாள்தான் ஆகிருக்கு, இன்னும் கரு கர்பப்பையில் வந்து அமர்ந்து, இதயத் துடிப்பு கேட்கும் வரை எதுவும் உறுதியில்லை.” என்று விளக்கினார். டியு டேட் டிசம்பர் கடைசி என்றது வேதாவிற்கு நிம்மதியைக் கொடுத்தது. டிசம்பர் முதல் வாரத்திற்குள் அவள் செமஸ்டர் பரீட்சை முடிந்துவிடும். அரியர் எழுத வேண்டாம்.
விக்ரம் மே மாதம் அவள் கல்லூரி லீவில், தன்னுடன் வேதா சிங்கப்பூர் வர முடியுமா என்று கேட்டதற்கும் மறுத்துவிட்டார். மூன்று மாதத்திற்கு விமானப் பயணம் வேண்டாம். பிறகு வேண்டுமானால் செல்லலாம் என்றுவிட்டார்.
கை நிறைய விட்டமின் மாத்திரைகளும், காது நிறைய அட்வைசும் வாங்கிக்கொண்டு வந்தனர்.
மருத்துவரின் ஆலோசனைப்படி, அவள் வழக்கமான வேலைகளைத் தொடர்ந்தாள். பரீட்சைக்கு படித்தாள்.
இரண்டு நாட்கள் கழித்து, இரவு மஞ்சரிக்கு மெசேஜ் செய்தான் ராஜேந்திரன். பொதுவான பேச்சுக்கள் மட்டுமே. அன்று பேசியதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. பின் ஒரு வழியாக தைரியத்தை தேற்றி, ‘சனிக்கிழமை ஆபிஸ் முடிஞ்சு, ஃபீனிக்ஸ் மால்ல என்னோட லன்ச் சாப்பிட வருவீங்களா ?’, என்று அனுப்பினான்.
‘ஹொ, ஒரு வழியா கேட்டீங்களா, ஆனா, உடனே சரி சொல்லிட்டா எப்படி ?’, என்று நினைத்தவள், “என்ன விசேஷம் ?”, என்று பதில் அனுப்பினாள்.
ராஜன் காலிங் என்று வந்தது அடுத்த நிமிடம். அவள் அறைக்கதவு சாத்தியிருப்பதை உறுதிப்படுத்தி, அழைப்பை ஏற்றாள்.
“ஹலோ..”
“என்ன விசேஷம்னு தெரியாதா உனக்கு ? எனக்கு சுட்டுப்போட்டாலும் கூகிள் சொல்ற மாதிரி, சினிமால காட்ற மாதிரியெல்லாம் பண்ண வராது.”, கடுப்பாய் வந்தது ராஜேந்திரனின் குரல்.
“ஷ்…உங்களுக்கு விஸ்வாமித்ரன்னு பேர் வெச்சிருக்கணும்… எதுக்கு இவ்ளோ சூடு ?”
“என்ன ஓட்ற நீ..”, மனத்தாங்கலாய் வந்தது அவன் குரல்.
இடம் நேரம் முடிவு செய்து, கொஞ்சம் வெட்டிக் கதை பேசி வைத்தார்கள்.
சனிக்கிழமை மதியம் அவள் வரும்முன் வந்துவிட்டான் ராஜேந்திரன். கொஞ்சம் உள்ளுக்குள் உதறல்தான். நானா இப்படி என்று கொஞ்சம் அவனை நினைத்தே ஆச்சரியம் வேறு. முயன்று அமைதியாய் அவள் வருகையை எதிர்பார்த்து அமர்ந்திருந்தான். சட்டென்று தென்பட்டாள். வான் நீலத்தில் உடலை சற்றே இருக்கிப்பிடித்த சுடிதார் டாப்ஸ், அங்கவஸ்திரம் கணக்காய் கழுத்தை சுற்றிய நீலமும் வெள்ளையும் கலந்த துப்பட்டா, வெள்ளை டைட்ஸ் என்று எளிமையாய் இருந்தாள். முடியை தூக்கி க்ளிப் போட்டிருக்க, அவள் நடைக்கு அதுவும் ஆடியது. தோள் வரைதான் முடி ஆனால், கொஞ்சம் சுருண்டு அடர்த்தியாய் இருந்தது.
அவள் வாயிலுக்கு வந்து, கண்கள் அவனைத் தேடவும், ராஜேந்திரன், எழுந்து கை காண்பித்தான். முகம் மலர புன்னகை சிந்தி, அவன் அருகில் வந்தாள்.
“ரொம்ப நேரமாச்சா வந்து ?”, அவன் எதிரில் அமர்ந்தவாறே கேட்டாள்.
பதில் புன்னகை சிந்தியவன், “இல்லை. இப்பதான்.”
அதற்கு மேலே என்ன பேசுவது என்று தெரியவில்லை அவனுக்கு. அவளுமே சற்று ஆழ்ந்து மூச்செடுப்பது தெரிந்தது.
இருவர் எண்ணங்களும் ஒரே பாதையில்தான் சென்றது. ‘என்ன இப்படி சொதப்பறோம். இந்த கதியில போனா, எப்ப சொல்லி எப்ப ஓகே ஆகறது ?’
ஜுசுடன் அமர்ந்தபின், அவள் கண்களைப் பார்த்தவன், “மஞ்சரி, எனக்கு சினிமால வரமாதிரியெல்லாம் சொல்ல வராது. உங்கிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன். உன்ன விஸ்வா ஆபிஸ்ல பார்த்ததுலர்ந்தே பிடிச்சிருந்தது. ஆனா, கல்யாணத்துக்கு தங்கைய வெச்சிட்டு என்னால உன்ன அப்பப்ப பாக்கத்தான் முடிஞ்சுது. வேற எதுவும் ஸ்டெப் எடுக்க முடியலை. அப்பவும் வேதா கல்யாணம் முடிஞ்சதும், உங்கிட்ட பேசணும்னுதான் நெனச்சேன். ஆனா, இப்படி கல்யாணம் மூலமா நாம உறவுக்காரங்களாவோம்னு நெனக்கலை. அண்ணைக்கு கல்யாணத்துல நீ சொன்னதும் எனக்கு அவ்ளோ சந்தோஷம்.”
இமைக்காமல் அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள். எட்டி அவள் வலது கையை தன் இரு கைகளிலும் பிடித்தவன், “எனக்கு சட்டு சட்டுன்னு கோபம் வரும், ஆனா சீக்கிரம் போயிடும். அது மட்டும் அட்ஜட் பண்ணிகிட்டு, என்ன கல்யாணம் பண்ணிக்கிறயா ?” உறுதியாய் வந்துகொண்டிருந்த குரல் கடைசியில் கொஞ்சம் கமறியதோ ?
‘அவனுக்கும் இத்தனை மாதமும் என்னை பிடித்திருந்ததா ? நான் மட்டும்தான் பார்த்ததுலேர்ந்து பத்திகிச்சுன்னு நெனச்சேனே. அவனும்தானா ? நினைப்பே இனித்தது மஞ்சரிக்கு.’
கண்கள் லேசாக கரித்தது. ‘ஹோ, நேரே கல்யாணம்தானா? காதலிக்க வேண்டாமா?”
பக்கென்று சிரித்தவன், “காதல், கல்யாணம், குழந்தை, பேரக்குழந்தை எல்லாம் வேணும் உன்னோட.”, அவனிடம் சிக்கியிருந்த அவள் கைகளை மெல்ல அழுத்தியவாறே கூறினான்.
எங்கிருந்தோ, வெட்க்கப் பூக்கள் அவள் முகத்தில் அரும்பியது. பார்வை தழைக்க, புன்னகை சிந்த, மற்றொரு கை கொண்டு முகத்தை மூடினாள்.
“கன்னம் சிவந்து வெக்கத்துல அழகா இருக்க, ஏன் முகத்தை மறைக்கிற ?”
“ஷ்…சும்மா இருங்க, இப்படியெல்லாம் எனக்கு வெக்கம் வரும்ன்னே தெரியாது.”, அவள் கைகளை அவனிடமிருந்து உருவி, ஜுசை கையில் எடுத்துக் குடித்து தன்னை சமன் செய்தாள்.”
அவள் முயர்ச்சிகளை ஆர்வமாய், ஆசையாய் பார்த்திருந்தான் ராஜேந்திரன். இதெல்லாம் புது அனுபவம். தன்னால்கூட ஒரு பெண்ணை வெக்கப்பட வைக்கமுடிகிறதே என்று ஆச்சரியம் வேறு.
மெல்ல பக்கத்தில் வைத்திருந்த கிஃப்ட் பாகை எடுத்துக் கொடுத்தான். “இந்த நாளை ஞாபகம் வெச்சிக்க ஒரு சின்ன பரிசு.”
கண்களில் ஆச்சர்யம் மின்ன, “தாங்க்ஸ்.” என்று வாங்கிப் பார்த்தவள், மேலும் ஆச்சர்யம் அடைந்தாள். “எனக்கு வாட்ச் பிடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும் ?”
மென்னகையோடே அவளைப் பார்த்திருந்தவன், “எனக்குத் தெரிஞ்சே நீ நாலஞ்சு வாட்ச் கட்டிருக்க. ஒரு யூகம்தான்.”
ரோஸ் கோல்ட் டயல்,ரோஸ் கோல்ட் மெட்டல் வாருடன், மெல்லிதாக இருந்தது அந்த டைட்டன் வாட்ச்.” ரொம்ப அழகா இருக்கு. ஆனா, இது விலை ஜாஸ்தியாச்சே ?”, புருவம் சுருக்கினாள்.
“நான் வாங்குற விலையிலதான் இருந்தது. கல்யாணத்துக்கு அப்பறம் பட்ஜட் போடலாம். இப்ப கைல கட்டி காட்டு.”
அவனை மூக்கைச் சுருக்கி அழகு காட்டியவள், அவன் விருப்பபடியே கட்டிக் காண்பித்தாள்.
“எனக்கு தெரியாது, வராதுன்னு சொல்லி கலக்கிட்டீங்க ? அவன் உள்ளங்கையில் விரல்களால் கிள்ளி தன் உதட்டில் வைத்து முத்தமிட்டாள்.
சாதரணச் செய்கைதான், ஆனால் ஒரு நிமிடம் திணறிவிட்டான் ராஜேந்திரன். உள்ளங்கையிலிருந்து விறு விறுவென்று மின்சாரம் பாய்ந்ததுபோல் இருந்தது ஒரு நொட
“என்னாச்சு ? முகம் சிவந்திருக்கு ?”
கண்களை மூடித் தன்னை ஒரு நிமிடம் சமன் செய்தவன், அவளைப் பார்த்து பின் பார்வையை திசை திருப்ப, ஏதோ புரிந்தவள், “சாரி, அது சந்தோஷத்துல…”
கண்டுகொண்டாளே என்று வெட்கப்படுவது அவன் முறையாற்று. தலை கோதி,மேசையில் முட்டி வைத்து கை நெற்றியைத் தாங்கிப் பிடிக்க, லேசாய் சிரித்தவாறே, “இல்ல, எதிர்ப்பார்க்காம கிடைச்ச முதல் பரிசு இல்லையா, கொஞ்சம் தடுமாறிட்டேன்.”
“நீங்களும்தான் வெக்கபடும்போது அழகா இருக்கீங்க.”, மையாலாய் வந்தது மஞ்சரியின் குரல்.
“நல்ல வேளை தூண் மறைவுல உட்கார்ந்திருக்கோம். எதிர் பக்கம் காலியா இருக்கு, இல்லாட்டி எல்லார் கண்ணுக்கும் ஃப்ரீ ஷோவா இருந்திருப்போம்.”, சுற்றம் உண்ர்ந்து விறைப்பானான் ராஜேந்திரன்.
“வா லன்ச் சாப்பிடலாம். நாழியாச்சு.”, அவளை அழைத்துக்கொண்டு வாங்கச் சென்றான். இனிமையாகக் கழிந்தது முதல் சந்திப்பு. தினமும் இரவு பேசிக்கொண்டார்கள்.
விக்ரம் சிங்கப்பூர் செல்ல விசா வந்துவிட்டது. மே 1 அவன் கிளம்ப டிக்கெட் வந்தது.
ஒரு மாதம்தான் இருக்கிறது என்ற நிதர்சனம் உரைத்ததும், இருவருமே தடுமாறினர். முயன்று கலகலப்பாகக் காட்டிக்கொண்டான். அவளும், அதையே செய்தாள். அவனுக்கு வேண்டிய பர்ச்சேஸ் செய்வதும், படிப்பதும், வெறுமனே ஒருவர் அணைப்பிலே ஒருவர் என்று படுத்திருப்பதுமாக நாட்கள் நகர்ந்தது. வேதா படிப்பதற்கான விடுமுறையில் இருந்தாள். விக்ரமும் இரு வாரம் முன்பே வேலையிலிருந்து நின்றுவிட்டான். முடிந்த வரை, அவள் படிக்கும்போது நண்பர்கள், உறவினர்களை சென்று பார்த்து வருவது என்று அவன் வேலைகளை முடித்துக்கொண்டான்.
மேல் வீடும் முழுதுமாக முடிந்து வாடகைக்கும் விட்டான். ராகவனையே வாடகையை வாங்கிக்கொள்ளச் சொல்லிவிட்டான். மறுக்க விடவில்லை.
‘தேனூ, உன் அக்கவுண்ட்ல அம்பதாயிரம் போட்டிருக்கேன். யார் கையும் நீ எதிர் பார்க்கவேண்டாம். உனக்கு வேணுங்கறத வாங்கிக்கோ. எங்க பிடிக்குதோ இருந்துக்கோ. தினமும் வீடியோ கால்ல பார்த்துக்கலாம் சரியா ?”
இப்படியாக பேசி, அவள் அலுங்காமல் காதல் செய்து, கொஞ்சி, மிஞ்சி இரவுகளை இனிமையாக்கிக் கொண்டனர். பின்னாளில் அவள் அவனை காய்ந்து தீய்க்கும் போதும், இந்த நாட்கள்தான் அவனை கலங்காமல் காத்து நிற்கப்போகிறது.
ராகவன், மாலினி, வேதாவின் தந்தை, அண்ணண் ராஜெந்திரன் என்று அனைவரிடமும் வேதாவைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, பத்தாதென்று டாக்டர் கீதாவையும் சென்று பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுக் கிளம்பினான்
ஒரு பரீட்சையைத் தவிர, விக்ரம் கிளம்புவதற்குள் மற்றவை முடிந்திருந்தது. அவனை அனுப்பிவிட்டு அன்று இரவெல்லாம் அழுகையில் கரைந்தாலும்,மறு நாள் தேறிக்கொண்டாள்.
விக்ரம் சிங்கப்பூர் சென்று, ஒரு வழியாய் அவனுக்கு ஒதுக்கப்பட்ட அபார்ட்மெண்ட்டை அடைந்தபோது மதியம் மூன்றை தாண்டியிருந்தது. அவனை அழைத்து வந்த புது அலுவலக நண்பர் பத்ரி விடை பெறவும், வேதாவை முதலில் அவள் அறைக்கு செல்ல சொல்லி மெசேஜ் அனுப்பிவிட்டு, அவள் பார்த்ததும், வாட்சப்பில் விடியோ காலில் அழைத்தான். அவன் வீடு முழுவதுமே வை ஃபை வசதி இருந்தது.
சென்னையில் மதியம் பன்னிரண்டரை என்பதால், வேதா படித்துக்கொண்டிருந்தாள். மே 1 விடுமுறை என்பதால், காலையில் மாலினிக்கு உதவிவிட்டு, அப்பொழுதுதான் படிக்க ஆரம்பித்திருந்தாள். இரண்டாம் மாதம் முடியும் தருவாயில் பெரிதாக மசக்கை எதுவும் அவளுக்கு இல்லை. விக்ரமின் போன் என்றதும் ஆசையாக எடுத்தாள்.
“வீரு, வீட்டுக்கு வந்துட்டியா ? எப்படியிருக்கு வீடு ?”
“மூணாறுல, லைட் எல்லாம் நிறுத்திட்டு, வாசனை காண்டில் லைட் வெளிச்சத்தில, பாத்டப் முழுசும் தண்ணியும் சோப் நுரையுமா, ரோஜா இதழ் மிதக்க, நடுவுல, தலை மட்டும் வெளிய தெரிய நீ இருக்க, அள்ளி முடிஞ்ச முடியும், பளபளக்கற உதடும், தங்கமா ஜொலிக்கற ஒரு தோளும் கையும் மட்டும் தெரிய, ‘வா’ன்னு கூப்பிட்ட உன் கண்ணும் அந்த இரண்டு விரலும் இன்னும் என் கண்ணுக்குள்ள நிக்குதே. “, கிறக்கமாய், கவிதையாய் வர்ணித்தான்.
இப்படியாக, தினமும் அவளிடமும், வாரத்தில் இரண்டு மூன்று முறை அவன் தாயிடமும் பேசி, புது வேலை, புது ஊர் என பழகிக்கொண்டிருந்தான். வேதாவைப் பற்றி மாலினியிடமும், வேலையைப் பற்றி ராகவனிடமும் பேசினான்.
மே மாதம் லீவில், வேதா அவள் அம்மா வீட்டிலும் , இங்கேயும் மாறி மாறி இருந்துகொண்டாள். பகலில் அனியாயத்திற்கு அப்படி ஒரு தூக்கம் வந்தது. மற்றபடி ஒன்றும் இல்லை. செக்கப்பிலும், முடிந்தவரை உடல் கேட்கும் ஓய்வை கொடுக்கச் சொல்லவும், அவளுமே தோன்றிய போது தூங்கி ஏழுந்தாள். முடிந்தவரை மாமியார் சொல்வதற்கு ஏற்றபடி நடக்கவும், பர்வதவுமும் பேரக்குழந்தை வரப்போவதால் அன்பாகவே இருந்தார்.
மே இறுதியில், மாலையில் மசக்கை ஆரம்பித்தது. இரவு ஏழு மணிக்கு ஆரம்பித்தால், பத்து பத்தரை வரை குமட்டல் வாந்தி என்று படுத்த ஆரம்பித்து அந்த அயர்ச்சியிலேயே அவள் உறங்கும் வரை நீடித்தது.
மாலினியோடு டாக்டரிடம் சென்று கேட்டபோது, சிலருக்கு ஈவ்னிங் சிக்னஸ் வரும். நீ அந்த ரகம். அதுவும் நல்லதுக்குதான். காலையில் காலேஜ் போவது சிரமமில்லாமல் இருக்கும் என்று கூறிவிட்டார்.
இதெல்லாமுமே விக்ரமிடம் தனசரி சொல்லிவிடுவாள், ஆனாலும் சமாளிக்க முடிந்ததால் , அவனைப் படுத்தவில்லை. இன்முகமாகவே பேசினாள். மசக்கையின் உக்கிரம் கூடியது. இப்போது வார நாட்கள் அம்மா வீட்டிலும், சனிக்கிழமைகளில் மட்டும் மாமியார் வீட்டிலுமாக இருந்தாள். கல்லூரியில், ஒரு நெருங்கிய தோழி வாணியிடம் மட்டுமே தாயாகவிருப்பதைச் சொல்லியிருந்தாள். மற்றவர்களுக்குத் தெரியாது.
மசக்கையின் உக்கிரம் கூடவும், பகல் தூக்கம் கல்லூரியிலும் வேதாவைப் படுத்தியது. ஒரு நாள், லெக்சரர் பேசுவது கிணற்றுக்குள் இருந்து பேசுவதுபோல் கேட்டது. எத்தனை முறைதான் கொட்டாவியை மறைக்கமுடியும், கண்ணைத்தேய்க்க முடியும் ? ஓரு பேராசிரியர் கோபிக்கவே செய்துவிட்டார். “நான் பாடம் எடுக்கறது தாலாட்டு மாதிரி இருக்கா உங்களுக்கு. அவ்ளோ தூக்கம் இருந்தா எதுக்கு கிளாஸ் வரணும். போய் வீடல தூங்குமா, மத்தவங்களாவது படிக்கட்டும் “, என்று உறும, மிகுந்த அவமானமாகப் போய்விட்டது வேதாவிற்கு. கண்கள் கலங்க,மன்னிப்பு கேட்டு பாடத்தில் கவனமானாள்.
மூன்று மணியளவில் வீடு வந்தவள், புத்தகத்தை வீசிவிட்டு படுக்க, இப்போது தூக்கமில்லை. எப்போதும் போல விக்ரம் பேசியபோது, அழுதுகொண்டே நடந்ததெல்லாம் கூறினாள். விக்ரமிற்கும் மிகுந்த வருத்தமாகிப்போனது. ப்ரெச்சனை மேலும் வெடிக்கப்போவது தெரியாமலேயே, அவனால் ஆன தேறுதலைச் சொல்லி வைத்தான்.