அவன் உதாசீனங்கள், அலட்சியங்கள், கோபங்கள், ஏன் என புரியாமல் திணறி, குழம்பி, வருந்தி, கடைசியில் உண்மை தெரிந்து, மதுவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தில், எதையும் சொல்ல முடியாமல், தனக்குள் போராடி, அவளுக்கு கொடுத்த வாக்கு படி, கிளம்பி வந்தாள்..
‘இங்க பாரு..அங்க நீ யாரு?? உன் பூர்விகம், எதுவும் சொல்லக்கூடாது..
என் பேர்ல போற, அப்படியே திரும்பி வரணும்..அதுக்கப்புறம், அங்க எந்த பேச்சு வார்த்தையும் இருக்க கூடாது, போன் அது இதுன்னு..
அப்புறம், நான் கிளம்ப சொல்லுற நேரத்துக்கு கிளம்பி வரணும். எந்த காரணமும் சொல்லாம..
எனக்கு, இந்த ரெண்டு சத்தியமும் செஞ்சு கொடு, உன் அப்பா பேர்ல..’
இப்படி, வாக்கு கேட்டு வாங்கிக் கொண்டு சென்று விட்டாள் மது..
அவள் சுலபமாய் வாக்கு வாங்கி கொண்டாள்..அதை காப்பாற்ற, பல போராட்டங்களை சந்தித்து, யாரிடமும் கூற முடியாமல் தவித்து, அங்கிருந்து கிளம்பி வந்தாள் மதி..
ராஜாவின் குற்றச்சாட்டுக்கு பதில் கூற முடியவில்லை..
இதற்கிடையில், அடிக்கடி மதுவின் அலைபேசி அழைப்பு வேறு..அவள் சொதப்பி விட கூடாது என்று, அடிக்கடி தொடர்பு கொண்டு, சேகர் இவளிடம் பரிமாறும் தகவல்களை, மதியிடம் கூறுவாள்..இப்படி நடந்து கொள்.. அப்படி செய்யாதே, என்று கட்டளைகள் பிறகும்..பல நேரம் பொறுத்து போகும் மதி, சில நேரம் பொங்கி விடுவாள்..
அதை எல்லாம் கண்டு கொள்ளும் ரகம் இல்லை மது..அவளுக்கு தேவை நிறைவேறும் வரை, இவளை விடவில்லை..அப்படி ஒரு முறை, வெளிநாட்டுக்கு செல்ல போவதாய் கூற அழைக்கும் போது தான், ராஜாவிடம் மதியின் அலைபேசி இருந்து,
அவன் எடுத்து பேசி,அவள் கட் செய்து..
அவனுக்கு சந்தேக விதை விழுந்தது..அவளை பற்றி அறிந்து கொள்ள, துப்பறியும் நிறுவனத்தை தொடர்பு கொள்ள வைத்தது..
[the_ad id=”6605″]
அதன் பிறகு, அவளுக்கு அழைத்து கடிந்து கொண்டாள் மதி..
அதற்கு பிறகு வரும் மதுவின் அழைப்புகளில், கவனமாய் இருந்தாள்..
தான் யார் என்று ராஜாவிடம் கூறாமல், தன் காதலை ஏற்றுக் கொள்ள வைத்தாள்.
இனி எல்லாம் சுகமே என்று எண்ணும் வேளையில், பழனி மதுவின் புகைப்படத்தை காட்டி மிரட்ட ஆரம்பித்தான்..
பழனி மிரட்டும் போது, தந்தையின் மானத்தோடு சகோதரியின் மானத்தையும், யாருக்கும் பாதகம் இல்லாமல் காப்பாற்றும் கடமையில், அவனை சந்தித்து, இவளிடம் சோதனைக்கு இருக்கும் மருந்தை கொடுத்து, குடும்ப மானத்தை காத்தாள்..
கடைசியில், மது தனக்கும், இந்தியாவின் டாப் டென் பணக்காரர்களில் ஒருவரான அமித்லாலுக்கும், திருமணம் என்று அறிவித்து, வெளிநாட்டில் இருந்து திரும்ப போவதாகவும்,அவள் பிரச்சனைகள் சரி ஆகி விட்டதாகவும் தெரிவித்து, நீயும் பெங்களுர் திரும்பி விடு என்று கூறிய போது, தனக்கும் ராஜாவுக்குமான காதலை பற்றி கூறி, தங்கள் இருவரையும், உண்மையை சொல்லி சேர்த்து வைக்குமாறு, அவளிடம் கெஞ்சினாள்..
“வாட் காதலா.. உன் லெவல்க்கு, அந்த பட்டிக்காட்டு பண்ணையார் ஓகே தான்.. பட் நீயும், என்னை மாதிரியே இருக்கறதால, உன் அழகுக்கு, நீயும் ரிச் லைப் ஸ்டைல் ட்ரை பண்ணலாம்..”
“மது ப்ளீஸ். நீயே உண்மையை சொல்லிடு..என்னால, சத்தியத்தை மீற முடியாது..”
“இந்த காதல், கத்திரிக்காய் எல்லாம் சும்மா மதுமித்ரா..கொஞ்ச நாள் ஆனா, வேற பெட்டர் அஹ் கிடைச்சா, மாறிடும்..”
கண்களை இறுக்க மூடித் திறந்தவள்..
“நீயும், இப்போ காதலிச்சு தான் கல்யாணம் பண்ண போற மது..”
“வாட்..காதலா??”
சத்தமாய் சிரித்தவள்..
“டோன்ட் பி பஃன்னி மதுமித்ரா..ஹி இஸ் சோ ரிச்..சோ, ஐ செலெக்டட் ஹிம்..ஐ ம் கார்ஜியஸ்.சோ, ஹி செலெக்டட் மீ..தட்ஸ் ஆல்..”
“மது, கல்யாணம், பணம்,அழகு சம்மந்தப்பட்டதில்லை..நீ சொல்லுற மாதிரி..மனசு சம்மந்தப்பட்டது..”
“ஸ்டாப் யூவர் நான்சென்ஸ்.. இந்த ஆண்கள் எல்லாம் இப்படி தான், காதல், அது இதுன்னு சுத்துவானுங்க..ஒரு தடவை இடம் கொடுத்தோம்..கை கழுவிட்டு போய்டுவானுங்க..
என் பின்னாடி, எத்தனை பேர் சுத்தி இருக்கானுங்க தெரியுமா??எவ்ளோ சோசியல்ல இருந்தாலும், எல்லை தாண்ட விட மாட்டேன்..சோ ஒன்லி, தே ஹாவ் கிரஷ் ஆன் மீ..நீயும் உன், என்ன சொன்ன?? உன் லவர் நேம். அவனை தொட விடு.அப்புறம், உன்னை திரும்பியே பார்க்க மாட்டான்..”
“ஷட் அப் மது..திஸ் இஸ் தி லிமிட்..”
“ஓ..உனக்கு கோபம் வருதோ..நான் சொன்னதை செஞ்சு பாரு..அப்புறம், நான் சொன்ன மாதிரி கிளம்பி வா.. அதுக்கப்புறம், நீ இருக்கும் திசை பக்கம் கூட வர மாட்டான் உன் லவர்..”
“ஓகே..இதை ஒரு சேலன்ஜ்ஜாவே ஏத்துக்குறேன்..என் வரு, என்னை தேடி வருவார்..நான் எங்க இருந்தாலும்..”
“பார்ப்போம்.ஆல் தி பெஸ்ட்..என் கல்யாணத்துக்கு வந்து, நான் தான்
நீயுன்னு நெனச்சு பேசட்டும்..அப்போ இருக்கு உன் லவர்க்கு..”
“இதையும் நோட் பண்ணிக்கோ..உன் கிட்ட வந்து, ஒரு சின்ன விளக்கம் கூட கேட்க மாட்டார் என் வரு..
எங்க காதலை பத்தி, பேச கூட மாட்டார்..
அவருக்கு என்னை தெரியும்..எனக்கும் வேற பொண்ணுக்கும், வித்தியாசம் கண்டு பிடிக்க தெரியும்..”
“வாவ் !!வாட் ஏ கான்பிடென்ஸ்..ஆல் தி பெஸ்ட் டியர் சிஸ்டெர்..”
அவள் நக்கலில் கொதித்துப் போய், தொடர்பை துண்டித்து,
கோபமாய், கண்களில் நீரோடு, அலைபேசியை தூக்கி படுக்கையில் போட்டவள்..
சிறிது யோசனைக்கு பிறகு, ஒரு முடிவோடு, ராஜாவின் அறைக்கு சென்றாள்..
நினைவுகளின் தாக்கத்தோடு, உறங்க ஆரம்பித்தாள் மதி..
அவளை, தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டாள் மீனா..
திரும்பி பார்த்த ராஜா,ஒரு குஷனையும் போர்வையையும் கொடுத்தான்..
“குளிருது போல அவளுக்கு, குறுகி படுத்திருக்கா. இதை போர்த்தி விடு மா..”
புன்னகையுடன் அதை வாங்கி போர்த்தி விட்டவள்..தன் மடியில் குஷனை வைத்து, அதில் மதியின் தலையை தூக்கி வைத்தாள்..
சிறிது நேரத்தில், டீ குடிக்க ஒரு கடையின் முன் நிறுத்தினான் பாண்டி..
“எனக்கு வேண்டாம் டா.. நீ குடிச்சுட்டு வா..”
மீனாவை திரும்பி பார்த்தான்..
“நீயும் போய்ட்டு வா மா..”
“இல்ல ண்ணா..”
மடியில் துயில் கொண்டிருக்கும் மதியை பார்த்து, தயங்கிய படி கூறினாள்..
“அவளை நான் பார்த்துக்குறேன்..”
காரை விட்டு இறங்கிய ராஜா,இவள் புறம் வந்து, கதவை திறந்து விட்டான்..
மெதுவாய், மதியின் தலையை தூக்கி சீட்டில் வைத்து விட்டு இறங்கினாள்..
அவள் இறங்கியதும், காரில் ஏறிக் கொண்ட ராஜா,அவள் தலையை தூக்கி, தன் மடியில் கிடத்தி கொண்டான்..
பாண்டியும் மீனாவும் டீ குடிக்க சென்றார்கள்..
இருவருக்கும் டீ வாங்கிக் கொண்டு வந்து, ஒன்றை அவள் கையில் கொடுத்தான் பாண்டி..
டீ கடையில் காதல் பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தது..
டீயில் கவனமாய் இருந்தவளை, பாண்டியின் குரல் கலைத்தது..
“ஏங்க..”
“எதுக்கு ஏங்குறீங்க??”
“அதெல்லாம் நிறைய இருக்குங்க..அதெல்லாம் சொல்ல முடியுமா??ஒரு கன்னி பையன் மனசுக்குள்ள, ஆயிரம் கனவுகள் இருக்கும்..உங்களுக்கு அதெல்லாம் புரியாதுங்க.சொன்னா, அடிக்க வருவீங்க…”
“ஓஹோ..”
“என்னங்க, ஓஹோன்னு சொல்லுறீங்க..அதெல்லாம் புரியும், சொல்லுங்கன்னு கேட்கணும்..”
“நான் நெனைக்குறதை தான் கேட்க முடியும்..நீங்க நெனைக்குறதெல்லாம், நான் எப்படி கேட்க முடியும்..??”
“சூப்பர் அஹ் பேசுறீங்க..செம்ம காமெடி..”
“இது காமெடி அஹ்..??”
“சரி விடுங்க..நீங்க, காதலை பத்தி என்ன நெனைக்குறீங்க??”
“அது, வேலை வெட்டி இல்லாதவங்க செய்யுற வேலை..”
“என்னங்க, பொசுக்குன்னு இப்படி சொல்லிபுட்டீங்க.. உங்க பிரெண்ட் மதி கூட, காதல் திருமணம் தான்.. அவளுக்கும் வேலை இல்லியா??”
“அவ, காதலிச்சு பட்ட பாட்டை தான் பார்த்தேனே.. அதை பார்த்த பிறகும், எப்படி காதல் பத்தி நல்ல அபிப்பிராயம் வரும்??”
“சுத்தம்..”
“ஏதோ, உங்க பிரெண்ட் நல்லவரா இருக்க போய், அவ வாழ்கை சரி ஆகி இருக்கு..”
“நானும் நல்லவன் தாங்க..”
புருவம் சுருக்கி பார்த்தவள்..
“ஓஹோ..”
“இதுக்கு என்னங்க அர்த்தம்.??.”
“இல்ல, உங்க ஊர் பொண்ணுங்க எல்லாம் அப்படி தான் பேசிக்குவாங்களாமே..??நீங்க, ரொம்ப நல்லவருன்னு..”
கடைசி வாக்கியத்தை, வேண்டுமென்றே,
இழுத்து சொன்னாள்..
“என்ன??இப்படி யார் சொன்னா??”
“மித்து தான். அவளுக்கு இங்க வந்ததுல இருந்து என்ன வேலை?? உங்க பெருமை, அவ புருஷன் பெருமை, அவ அத்தை பெருமை, அகல்யா பெருமை, இதெல்லாம் பேசுறது தான் வேலை..
அதுலயும், உங்க பெருமை பேசுனா, அவளுக்கு கண்ணு கூட சிரிக்கும்..நீங்க அடிவாங்காத பொண்ணுங்க, ஏரியாலேயே இல்லியாமே..
சல்லடை போட்டு தேடுனா கூட கிடைக்காதாம்..”
‘மது..நான் உனக்கு என்ன பாவம் பண்ணேன்..??இப்படி, வச்சு செஞ்சுருக்கியே மா..’
“மதுவுக்கு எப்போவுமே விளையாட்டு தான்.. சரி, காதலை விடுங்க..கல்யாணத்தை பத்தி என்ன நெனைக்குறீங்க..??”
“யார் கல்யாணத்தை பத்தி??”
“பொதுவா, கல்யாணம், அப்படிங்குறதை பத்தி..”
“அதை பத்தி, நான் ஏன் நினைக்கணும்.. ??என்னை பெத்தவங்க நினைக்க வேண்டியது அது..”
“ஓ..அப்போ, வீட்டுல பார்க்கும் மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்குவிங்க..??”
“எனக்கு பிடிச்சுருந்தா??”
‘எந்த பக்கம் போனாலும் கேட் போடுறாளே..’
முகம் தொங்கி போக, அவளிடம் உள்ள கிளாசை வாங்கி கொண்டு, டீ கடை நோக்கி சென்றான்..
அவன் போவதை பார்த்து புன்முறுவல் புத்த மீனா,
‘வாடி மாப்பு..அவ்ளோ ஈசியா மீனா உனக்கு கிடைப்பனா..??எல்லார் கிட்டயும் கடலை வறுக்குற மாதிரி நினைச்சியா..??
கொஞ்சம் கஷ்டப்படு, அப்போ தான், என் அருமை தெரியும்..
உனக்கு நான், ஜஸ்ட் லைக் தட் அஹ்..இல்ல, உயிர் மூச்சு மாதிரி முக்கியமான்னு, எனக்கு தெரிஞ்சா தான், உன்னை கன்சிடெர் பண்ணுவேன்..அதுவரை, வெயிட்டிங் லிஸ்ட்ல இரு..’
காரில்..
ராஜாவின் கால்களை இறுக்கி கட்டிக் கொண்ட மதி, தூக்கத்திலேயே..
“வரு..”
அவளை குனிந்து பார்த்த ராஜா,உதட்டில் நகை துலங்க,
அவள் உச்சியில் முத்தமிட்டான்..
சில நொடியில் விழித்தவள், நிமிர்ந்து அவனை பார்த்தாள்..
“மீனா, டீ குடிக்க போய் இருக்கா”
எழுந்து அமர்ந்தவள்..அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்..
“தூங்கலியா??”
“இல்ல..”
“ஏன்??”
“உங்க பையன், புஃட் பால் விளையாட ஆரம்பிச்சுட்டான்..இனி தூங்க முடியாது..அவனா, அம்மா பாவம்ன்னு விடுற வரை..”
அவள் பேச்சில் புன்னகை தோன்றியது..
“பசிக்கிதா??ஏதாவது சாப்பிடுறியா??”
அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போது, பாண்டியும் மீனாவும் வந்தார்கள்..மீனா கையில் பால் இருந்தது..
பாண்டி இவனுக்கு, டீ வாங்கி வந்தான்..
பாலை இவளிடம் கொடுத்தாள் அவள்..
இருவரும் குடித்து முடித்ததும்,
“நான் ஓட்டுறேன் டா..”
“இல்ல மாப்பு..நானே ஓட்டுறேன்..”
முன் இருக்கைக்கு மாறப் போனான்..
“வரு, இங்கேயே உட்காருங்க..”
அவள் கெஞ்சலில்,
“ஆமாம் ண்ணா.. இங்க உட்காருங்க..நான் முன்ன போறேன்..”
பாண்டியின் முகம், தவுசன்ட் வால்ட் பல்பு போட்டது போல பளபளத்தது..
உற்சாகத்துடன், வண்டி வேகம் எடுத்தது..
ராஜாவின் மடியில் படுத்த மதி, குழந்தையின் அசைவில், சரியாய் தூங்க முடியாமல், அடிக்கடி முகம் சுருக்கினாள்.. அதை உணர்ந்த ராஜா, அவள் வயிற்றில், மெதுவாய் வருட ஆரம்பித்தான்..
அவன் பிள்ளை அவனை அறிந்து கொண்டதோ என்னவோ, அதன் பிறகு, அமைதியாய், அன்னையை உறங்க விட்டது..
அவர்கள் பயணம், எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்தது..
ராஜாவின் வீட்டில்..
உள்ளே நுழைந்த அகல்யா,அன்னையை தேடினாள்..
சமையல் அறையில் இருந்து வெளியே வந்த மரகதம், இவளை ஆச்சர்யமாய் பார்த்து,
“என்னடி, இப்போ தான் போன..மறுபடியும் வந்துருக்க..”
“சும்மா தான் ம்மா..”
“சும்மா வர ஆள் இல்லையே நீ.. சொல்லு, என்ன விஷயம்..??”
“நம்ம, மது அண்ணி இருக்குல்ல??”
“ஆமா, அவளுக்கென்ன..??”
“அவகளை பத்தி என்ன நெனைக்குற??”
“என்னடி, புதுசா கேள்வி கேட்குற..??அவளை பத்தி நினைக்க, என்ன இருக்கு..??”
“அவுக குணம் பத்தி ம்மா..”
“என்னமோ ஆகி போச்சு உனக்கு??”
“சொல்லு ம்மா..”
“நல்ல பிள்ளை..தங்கமான பிள்ளை..”
“அவுக, உனக்கு மருமகளா வந்தா, எப்படி இருக்கும்??”
“கோட்டி புடுச்சு போச்சு டி உனக்கு..அவளுக்கு தான், கல்யாணம் ஆகிடுச்சே..”
“ச்சு.. ஒருவேளை கல்யாணம் ஆகாம, உன் மருமகளா வந்தா??”
“நல்லா தான் இருந்திருக்கும்..அதுக்கு தான் வாய்ப்பில்லையே..”
“வாய்ப்பு இருக்கு ம்மா..”
“மறுபடியும் உளற ஆரம்பிச்சுட்டியா??”
“அதில்ல ம்மா.. இங்க வந்தது, உன் அண்ணன் மக இல்ல..”
“புறவு வேற யாரு??அவ பாட்டியா??”
“ச்சு.. பேச விடு ம்மா.. குறுக்க குறுக்க பேசாம..அவுக, வேற ஒரு பொண்ணு..”
“ஏண்டி, அதெப்படி டி?? வேற பொண்ணா இருக்கும்..நான் தான் போட்டோ பார்த்தேனே..புறவு, என்ற அண்ணன் கூட பேசுச்சே, பார்த்துக்கிட்டே பேசுற போனுல..”
“அதான் ம்மா.. அவுக, உன் அண்ணன் மவ மாதிரியே இருக்க, வேற பொண்ணு..”
அவளை சந்தேகமாய் பார்த்தார்..
“என்னடி?? எம் ஜி ஆர் படம் மாதிரி, டபுள் ஆக்ட் அஹ்..??”
“ஆமா ம்மா.. வேற பொண்ணு தான்.. அந்த பொண்ணை தான், அண்ணன் விரும்பி..”
அதற்கு மேல் சொல்ல முடியாமல், தயங்கி நிறுத்தினாள்.
“விரும்பி??”
“கல்யாணம் பண்ணிகிச்சாம்??”
“இதை, யாரு சொன்னா உன் கிட்ட??”
“பாண்டி மாமா..”
“அவன் ஒரு கூறுகெட்டவன்..அவன் சொல்லுறதை நம்பிகிட்டு, இங்க வந்து பேசுற..”
“இல்ல ம்மா, நிசம் தான்..”
“உன்ற அண்ணன் கிட்ட, கல்யாணம் பண்ணிக்க சொல்லி ரெண்டு வருசமா கெஞ்சுறேன்..அதுக்கே மசியல அவன்..இப்போ, அவனே பண்ணிக்கிட்டானா..??போடி, வேற வேலை இருந்தா பாரு..”
“நான் சொல்லுறதை நம்பு ம்மா..”
“சரி, அந்த பிள்ளையை விரும்புனா, என் கிட்ட சொல்ல வேண்டியது தானே..நான் என்ன, கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்னா சொல்லுறேன்..புறவு ஏன், அவனே பண்ணிக்கிட்டான்..??”
“அ.. அது தெரியல ம்மா.. இப்போ அண்ணி..அண்ணி..”
“அண்ணி??”
“முழுகாம இருக்காம்..”
“அப்படியே அறைஞ்சுடுவேன்..யார் பிள்ளையை பத்தி, என்ன பேசுற??என்ற மவன, அப்படி வளர்க்கலை நான்..எந்த பெண்ணையும், நிமிர்ந்து பார்க்க மாட்டான் என்ற மவன்..”
“இப்போவும், அண்ணன் அப்படி தான் ம்மா, ஆனா இவிக, அண்ணன் பொண்டாட்டி..”
எச்சில் விழுங்கிய படி கூறினாள்..
“இதையும், அந்த பாண்டி தான் சொன்னானா??”
“ஆமா ம்மா..”
கண்கள் சிவக்க அமர்ந்திருந்தார் மரகதம்..
“அண்ணனும் மாமாவும், அண்ணியை கூட்டிட்டு நாளைக்கு வராங்களாம்..”
அவரிடம் பதில் இல்லை..
“அம்மா..”
அவர் தோள் தொட்டு அசைத்தாள்..
அவளை அனல் பார்வை பார்த்தவர்,வேகமாய் எழுந்து, அவர் அறைக்கு சென்றார்..
என்ன செய்வது என்று தெரியாமல், விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் அகல்யா..