“குழந்தையை … என்ன பேசற விக்ரம் ?”, மாலினியால் கலைக்க என்று வார்த்தைக்குக் கூட சொல்ல முடியவில்லை.
“ படிப்புக்காக குழந்தை வந்தப்பறம் வேணாம்னுவியா ? என்ன முட்டாளா நீ ? ஒரு வருஷம் ப்ரேக் எடுத்துட்டு படிச்சிக்கலாம் விக்ரம், அதுக்காக நீ இவ்வளவு பெரிய முடிவு எடுப்பியா ?”
“இல்ல அண்ணி. நான் யோசிச்சிதான் சொல்றேன். கல்யாணம் பண்ணிக்க நாந்தான் கேட்டேன். நான் அவ கூட இருந்திருக்கணும். இங்க வந்து உட்கார்ந்துகிட்டு, நீ பார்த்துக்கோன்னு நட்டாத்துல விட்டுட்டேன். அப்ப எனக்கு என்ன உரிமை இருக்கு அவகிட்ட நீ படிப்ப விட்டுட்டு என் குழந்தைய பெத்துகுடுன்னு ஆர்டர் போட ? “
“இது தெரிஞ்சா, அத்தை, அவங்க அம்மா எல்லாம் என்ன சொல்லுவாங்க ? “
“அவங்களுக்காக பார்த்துதான் இப்ப இவ்வளவு அவஸ்தை. எவனோ நாலு கட்டத்தை பார்த்து நட்சத்திரம் , கோளு, கோளாறுன்னு எதையோ சொல்லிட்டு போயிட்டான். இவங்க அதை பிடிச்சிட்டு தொங்கவேதான, உடனே கல்யாணம், குழந்தைன்னு சிக்கலாச்சு. இப்ப முழிக்கறது நானும் அவளும்தானே ?”, உஷ்ணமாய் வந்தது விக்ரமின் குரல்.
“அவ போன் ஆஃப் பண்ணிட்டா அண்ணி, நீங்க அவ வீட்டுக்கே போய் கொஞ்சம் பேசுங்க. அவளுக்கு முடியலைன்னா, கலைச்சிட டாக்டர் கீதா கிட்ட ஏற்பாடு பண்ணிடுங்க. யாருக்கும் தெரியவேண்டாம். தானாவே கலைஞ்சதா சொல்லிக்கலாம். உங்க பிரண்ட்தான, அம்மா எதாவது கேட்டா சமாளிக்க சொல்லுங்க. வேதாகிட்ட அவ என்ன முடிவு எடுத்தாலும் நான் அவளை ஃபுல் சப்போர்ட் பண்றேன்னு சொல்லுங்க. படிச்சிட்டு இங்க வந்துட்டா, அவளை யாரும் எதுவும் சொல்லாம நான் பார்த்துக்கறேன்னு சொல்லுங்க. இன்னொரு குழந்தை வந்தப்பறம் சென்னைக்கு வந்துக்கலாம். அவ அண்ணன் ஊர்ல இல்லை, இல்லாட்டா நானே அவன் போன் மூலம் பேசிருப்பேன். குழந்தை வந்தா பார்த்துகலாம்னு இருந்தேனே ஒழிய , எப்படின்னு யோசிக்கலை அண்ணி. இவ்ளோ அவஸ்தை இருக்கும்னு தெரியலை.”
“கடவுளே… இருடா, நான் பேசி பாக்கறேன். அதுக்குள்ள நீ இவ்ளோ யோசிக்காதே. சாப்டியா ?”
“அண்ணீ…”
“போ. போய் வயத்துக்கு எதாவது போடு. இப்ப நானும் உன் அண்ணனும் அவளை போய் பார்த்துட்டு வரோம். வந்து உனக்கு கால் பண்ணறேன்.
போனை அணைத்தவள், உள்ளிருந்தே ராகவனுக்கு மெசேஜ் தட்டினாள்.’ எதாச்சம் அத்தைகிட்ட கதை சொல்லிட்டு, என்னை அரை மணி நேரம் வெளிய கூட்டிட்டு போக ஏற்பாடு பண்ணுங்க. அர்ஜண்ட்’, என்று அனுப்பினாள்.
அடுத்த இரண்டு நிமிடங்களில், ராகவன் மாலினியை அழைத்து, “என்னோட கொஞ்சம் வா மெடிக்கல் வரை. வயறு ஒரு மாதிரி இருக்கு. எதுக்கும் மாத்திரை வாங்கி வெச்சுக்குவோம். நீயே பேசி வாங்கிடு.”
“கடை இன்னேரம் மூடிருப்பானேடா ?”
“ அதான்மா, மெயின் ரோடு போகணும். ஒரு அரை மணி நேரம் பார்த்துக்கோங்க. நாங்க போய்ட்டு வந்துடறோம்.
உடை மாற்றி இருவரும் கிளம்பியிருந்தனர். வண்டி எடுத்தபின், “எங்க போகட்டும் மயிலு ?”. ஏன் எதற்கு என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை ராகவன்.
அவள் சொன்னதும், புருவம் எழும்பினாலும், ஒன்றும் சொல்லாமல் வண்டியை செலுத்தினான்.
இந்த நேரத்தில் அவர்களை எதிர்பார்த்திருக்காத வேதாவின் பெற்றோர், கேள்வியுடனே அவர்களை வரவேற்க, “ஒண்ணும்மில்லை, வேதா மசக்கை எப்படி இருக்குன்னு பார்க்கத்தான் வந்தேன். அவ எதுவும் சொல்றதில்லை. எங்க உள்ள இருக்காளா ?” என்றாள் மாலினி.
கேட்ட பெற்றோருக்கு மகிழ்ச்சி. எனக்கென்ன என்றில்லாமல், இவ்வளவு அக்கறையோடு வந்திருக்கிறார்களே என்று.
“உள்ளதான் இருக்கா, ஒரு பாடு உமட்டல் ஆச்சு. லெமன் பிழிஞ்சு கொடுத்தேன் இப்பதான். நீ போய் பாருமா. நான் உங்களுக்கு பால் காய்ச்சிக் கொண்டாறேன்.” , என்று கோமதி நகர்ந்தார். ராகவன் , சௌந்தர்ராஜனுடன் பேச, மாலினி வேதா ரூம் சென்று, கதவை சாற்றினாள்.
சட்டென்று விழிகள் திறந்தன. “அக்கா ?”, வேகமாக எழுந்து அமர்ந்தாள். தலை சுற்றுவதுபோலிருக்க, தலையைப் பிடித்தாள்.
ஓரே எட்டில் அவளை அடைந்து, “மெதுவா வேதா…”, என்றபடியே ஒரு கை பிடித்து, கட்டிலில் அமர்ந்தாள்.
“என்ன வேதா ? என்ன பிரெச்சனை காலேஜ்ல ?”
கசப்பான புன்னகையுடன். “உங்ககிட்ட சொன்னாரா ? என்ன பிரெச்சனைனாலும் நாந்தானே ஃபேஸ் பண்ணனும் அக்கா. யார் என்ன செய்யமுடியும்?”
“என்ன, க்ளாஸ் டைம்ல தூக்கம் வருது, கவனிக்கமுடியலை. நாளைக்கு அசைன்மெண்ட் குடுக்கணும், ஆனா புரியலை, எப்படி படிக்கபோறன்னு கவலை , அதான உன் பிரெச்சனை ?”
“ம்ம்.. இந்த வருஷம் போச்சு…”
[the_ad id=”6605″]
“நிறுத்து… போனா ? குடியா முழுகிடும் ? இப்ப விட்டா திரும்ப உன்னால படிக்க முடியாதா ? உனக்கு அவ்ளோகூட உன்மேல நம்பிக்கை இல்லயா ? இல்ல உன் புருஷன் உன்ன படிக்கவெக்க மாட்டான்னு நெனக்கறியா ?”
“ அ.. அக்கா, அதில்லை…”
“சும்மா இரு வேதா, இன்னும் சின்ன பொண்ணு இல்லை நீ. பிரெச்சனைனா அதை எப்படி சரியாக்கறதுன்னு யோசிக்கணும். உன்னால முடியலைன்னா, மத்தவங்ககிட்ட உதவி கேக்கணும். ரெண்டும் பண்ணாம, அவங்கிட்ட போய் உன் எரிச்சல எல்லாம் கொட்டிருக்க. அந்த புள்ள, நான் கூட இல்லாம அவள புள்ள பெத்துகுடுன்னு சொல்றதுக்கு உரிமையில்லை, அவளுக்கு முடியாட்டி, யாருக்கும் தெரியாம கூட்டிட்டு போய் கலைச்சிடுங்க அண்ணிங்கறான்.”, குரல் மெதுவாக இருந்தாலும் சீற்றம் குறையாமல் வந்தது.
“ஐயோ…இ…இல்.. இல்லக்கா…வேண்டாம். அப்படியெல்லாம் நான் நெனக்கவேயில்லை…”, கண்கள் நீர் கசிய, மாலினி கையைப் பிடித்துக்கொண்டு கதறினாள் வேதா.
“ஷ்… அழாதே… அவன் தனியா இருக்கான். நீ இப்படி அவங்கிட்ட சொல்லவும் அவனுக்கு விபரீதமா யோசனை போகுது. உன்னை அவந்தான் கன்வின்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணதா ரொம்ப குற்ற உணர்ச்சியில இருக்கான். நீ போனையும் ஆஃப் பண்ணிட்ட. என்னதான் பண்ணுவான் அவனும்?”
“நாளைக்கு லீவ் போடு. அடுத்து சனி, ஞாயிறு வருது. அதுக்குள்ள உன் அஸ்சைன்மெண்ட் முடிக்கலாம். உதவிக்கு வாணிய கூப்டுக்கோ. நாளைக்கு சாயந்திரம் நாலு மணிக்கா வீட்டுக்கு வா. அத்தை கோவிலுக்கு கிளம்பி போகவும், நான் பெர்மிஷ்ன் போட்டு சீக்கிரம் வரேன். நீ எப்படி படிப்ப கன்டின்யு பண்ணலாம்னு பேசலாம். இல்லை, மசக்கைய மட்டுபடுத்த எதாச்சம் மாத்திரை கேக்கலாம் கீதாவ. கத்துவா, நான் சமாளிச்சிக்கறேன். இப்ப விக்ரம்கிட்ட பேசு.”, என்றுவிட்டு வெளியே வந்தாள்.
விக்ரம் போன் அடிக்கவும், உடனே எடுத்தான். ‘அண்ணீ….’
‘நான் வேதா பேசறேன்…”, சின்னக் குரலாய் வந்தது.
“ஓ…நான் நம்பர் பார்க்கலை. அண்ணி வந்தாங்களா ?”, முயன்று சாதாரணக் குரலில் பேசினான்.
“ நான்… ரொம்ப ரொம்ப சாரி வீரு… என்ன மன்னிச்சிடு…”, கேட்டதும் ஐய்யோ குழந்தை கலைக்கப் போறாளா என்று கலங்கிவிட்டான்.
“அக்கா சொன்னாங்க நீ சொன்னதை…லூசாடா நீ, எப்படி அந்த மாதிரி யோசிச்ச ? நீ சம்மதிச்சுதானடி கல்யாணம் பண்ண, குழந்தை வரும்னு தெரிஞ்சுதான என்னோட இருந்தன்னு என்னை திட்டாம, உன்னால இப்பவும் எப்படி எனக்காக யோசிக்க முடிஞ்சுது வீரு? இவ்ளோ லவ்வுக்கெல்லாம் நான் வொர்த் இல்லைடா. ரொம்ப சுய நலமா இருந்துட்டேன்.”, கசங்கிய குரலில் பேசினாள் வேதா.
“தேனூ, நீ என்ன முடிவெடுத்தாலும் நான் உங்கூட நிப்பேண்டா…கஷ்டமா இருக்கும் ஆனா உன்ன தப்பா நெனக்கமாட்டேன்.”
“இப்பதான் சொன்னேன். இவ்ளோ பார்க்காத எனக்காகன்னு. இது நம்ம குழந்தை. அதை என் வசதிக்காக நீ வேண்டாம்னு சொன்னாலும் நான் சொல்லமாட்டேன். படிப்ப வேணாலும் விடுவேன். உன் பிள்ளை எனக்கு வேணும்.”, அதிகாரமாய் வந்தது குரல்
“இப்படி ஒரு ஆஃபரே நீ குடுத்திருக்கக்கூடாது. நீ எதுக்கு கில்டியா ஃபீல் பண்ற ? நாந்தான் கோவத்துல சொன்னாலும், உனக்கு தெரியாதா நான் இஷ்ட்டபட்டுதான உன்ன கல்யாணம் பண்ணேன் ? இத்தனை மாசத்துல நான் அதை உனக்கு புரியவெக்கலையா ? இங்க பார் விக்ரம். இண்ணைக்கு எங்கம்மா புத்தி கொஞ்சம் எனக்கு வந்துடுச்சு.ஆனா அப்படி வரும்போது நீ தட்டி வெக்கணும் என்னை. நீ பாட்டுக்கு எங்கப்பா மாதிரி , ‘எனக்கு புடிக்கலை ஆனா உங்கிட்ட என்னால சண்டபோடமுடியாதுன்னு’ விட்டுட கூடாது. எங்கம்மா மாதிரி நான் சொல்றதுதான் சரின்னு இல்லாம, நீ எனக்காக யோசிச்சதுதான் உங்கிட்ட முதல்ல பிடிச்சது. அதுக்காக இவ்ளோ எல்லாம் யோசிக்காத, நான் தப்பு பண்ணா சொல்லு, மாலினியக்கா இப்ப என்ன எப்படி வேப்பிலை அடிச்சாங்க தெரியுமா ? இருந்த தலைசுத்தல் கூட காணாம போயிடிச்சு.”
“சரி. நீயே பெர்மிஷன் குடுத்துட்ட. இனி நான் பார்த்துக்கறேன். கொஞ்ச நேரம் கலங்கடிசிட்டயேடி என்னை…இனி என்ன சண்டை போட்டாலும் போன ஸ்விட்ச் ஆஃப் பண்ணாத…”, இலகுவாய் ஆரம்பித்து அழுத்தமாய் வந்தது அவன் குரல்.
“சாரி வீரு. வெரி சாரி. அண்ணன் இல்லாத இந்த மூணு நாளா, அம்மா வேற படிப்பவிடு, அப்பறம் பார்க்கலாம், உன்னால முடியலதானேன்னு ஒரே டார்ச்சர். காலேஜ் ப்ரொஃபசர் டென்ஷன் எல்லாம் சேர்ந்து உன்மேல விடிஞ்சது. உனக்கு லேட் ஆச்சில்ல ? சாப்டியா? போய் தூங்கு. நாளைக்கு லீவ் போட போரேன். அந்த அசைன்மெண்ட் முடிக்க. சாயந்திரம் அக்கா வர சொன்னாங்க. எப்படி மசக்கைய சமாளிக்கன்னு பேச, டாக்டர் கிட்ட வேணா மாத்திரை கேக்கலாம்னாங்க. நீ காலைல பண்ணு. இப்ப நிம்மதியா போய் தூங்கு. இனி எதுவும் கலாட்டா பண்ணமாட்டேன்.”
“ கேப் விட்டு பேசுடி. நீயே பேசற. என்ன எங்க பேச விடற ? சாப்பிட்டேன். நீ சரியாகிட்டல்ல. இனி தூங்கிடுவேன். நாளைக்கு என் லன்ச் டைம்ல போன் பண்றேன் உங்கம்மா என்ன சொன்னாலும் காதுல வாங்காத சரியா ? அண்ணிகிட்ட பேசு. ஐடியா தருவாங்க. நீயே சமாளிக்க ட்ரை பண்ணாத. சீக்கிரம் வந்து அத்தைய மானேஜ் பண்ண உங்கண்ணாக்கு சொல்லு.
“ம்ம் …குட் நைட்.”
“அவ்ளொதானா…நான் எவ்ளோ சோகமா இருந்தேன். “
போன் மூலம் முத்தங்கள் பறந்து வர, கொஞ்சி முடித்தே போனை வைத்தார்கள்.
மறு நாள், விக்ரமின் சாப்பாட்டு நேரம் ராகவன் அழைத்திருந்தான்.
“ஹலோ, அண்ணா ? “
“எப்படியிருக்க விக்ரம் ?”
“நல்லாருக்கேண்ணா ? என்ன இந்த நேரத்துல கூப்டிருக்கீங்க ?”
“எல்லாம் நேத்து நீ அடிச்ச கூத்துனாலதான். ஏண்டா இப்படியெல்லாம் யோசிக்கற ?”
“சாரிண்ணா, அவ முடியலைன்னு அழுததும்..”, குரல் இரங்கி வந்தது விக்ரமிடமிருந்து.
“இத பார் விக்ரம். இந்த நேரத்துல வேதாவுக்கு ஹார்மோன் எல்லாம் தாறுமாறா ஏறி இறங்கும். எப்ப சீறுவாங்க, எப்ப அழுவாங்கன்னு சொல்லவே முடியாது. உங்கண்ணி, அவங்க அம்மாகிட்ட, நம்ம அம்மாகிட்ட காட்ட முடியாத எரிச்சலை எல்லாம் அப்போ எங்கிட்டதான் காட்டுவா. நாமதான் பொறுத்துப் போகணும். கோவத்துல அடிச்சாலும் வாங்கிக்க வேண்டியதுதான். ஆறுதல் சொன்னாலும் திட்டுவாங்க, சரின்னு சொல்லாம இருந்தாலும் , உனக்கு அக்கறையே இல்லைன்னு அதுக்கும் திட்டுவாங்க. முடியாததுனால வர எரிச்சல். அதுக்கு நாம வடிகாலா இருந்தாலே போறும். இதுக்கெல்லாம் நீ வருத்தப் படாதே என்ன ?”
[the_ad id=”6605″]
“ம்ம்…சரிண்ணா. நான் கூட இருந்திருந்தா, இப்படி தோணியிருக்காது. இவ்ளோ தூரம் தள்ளியிருக்கவும்தான்…இனிமே பார்த்து நடந்துக்கறேண்ணா. அவகிட்டயும் சொல்லிருக்கேன். எந்த சண்டைன்னாலும் போன் சுவிட்ச் ஆஃப் பண்ணக் கூடாதுன்னு.”
“சரிடா… விடு. நாங்க எல்லாம் இருக்கோம், அவளை பத்திரமா பார்த்துக்குவோம். அங்க நீதான் உன்னை பார்த்துக்கணும். நீ நல்லா இருக்கேன்னாதான் இங்க அவ சந்தோஷமா இருப்பா. “
தான் பார்த்துக்கொள்வதாய் வாக்களித்து விடை பெற்றான் விக்ரம். அண்ணன் காட்டிய அக்கறையில் அவர்பால் பாசம் பொங்கியது. அதே அண்ணனிடம் சண்டையிட்டு பேசாமல் இருக்கப்போகிறோம் என்று தெரியாமல், சந்தோஷமாய் சாப்பிடப் போனான் விக்ரம்.