வேக வேகமாய் தொட்டில் விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. விழாவிற்கு இரண்டு நாட்கள் இருக்கையில், வேதாவின் ப்ரொபசர் அழைத்திருந்தார். எடுத்துப் பேசியவள் ஒரு கலவையான உணர்வுடன் அறைக்குள் வந்தாள்.
“என்ன வேதா ? குழந்தை பிறந்ததுக்கு வாழ்த்து சொல்ல கூப்பிட்டாரா ?”, என்று கேட்டான் விக்ரம்.
“ம்ம்.. அது, அப்பறம் என் ப்ரொஜக்ட் பத்தி….”, என்று இழுத்தாள்.
“அதுதான் நீ என்ன பண்ணப்போறன்னு முடிவு பண்ணிருக்கதானே ? என்ன தயக்கம் ?”
“அது என்னையும் சுதீப்பையும் சேர்ந்து ஒரே டீமா வொர்க் பண்ண சொல்றார்.”
“யாரு, உனக்கு போட்டியா படிப்பான்னு சொல்லுவியே, உனக்கு கூட நோட்ஸ் குடுத்தானே, அவனா ?”, அவள் ஆமோதிப்பாய் தலை ஆட்டியதும், “ சரி அதுக்கு என்ன ?”, என்றான். இவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்று புரியவில்லை விக்ரமுக்கு.
“ நாங்க இது டிகிரிக்காக பண்றதோட இல்லாம, இந்தியா லெவல்ல எங்க காலேஜ் சார்பா நடக்கற போட்டிக்கும் அனுப்பணும்னு சொல்றார். அதுல முதல் இரெண்டு இடத்துல வரது ஏசியா லெவ்ல நடக்குற காம்படிஷனுக்கும் போகும்.”
“இல்ல வீரு. இதுக்கு சரின்னு சொன்னா நிறைய நேரம், உழைப்பு எல்லாம் போடணும். பாப்பா இருக்கும்போது, அவ்ளோ தூரம் எனக்கு டைம் ஒதுக்க முடியுமா ? அதோட, நாளைக்கு காலேஜ்க்கு வர சொல்றார். பேபர்வொர்க் செய்யவும், ஒவுட்லைன் முடிவு செய்யவும் நேர வரதுதான் பெட்டர்ங்கறார். பாப்பாவை விட்டு எப்படி போக முடியும் ? அம்மாவும் விட மாட்டாங்க.”, மனதில் இருந்த குழப்பம் குரலிலும் முகத்திலும் தெரிந்தது.
“நாளைக்கு போறதை விடு. உனக்கு இது செய்யறதுல இஷ்டமா சொல்லு. “
“கண்டிப்பா. என் காலேஜ் சார்பா செய்ய என்னை செலக்ட் பண்ணிருக்காங்கன்னா என் மேல நம்பிக்கை வெச்சிதான. ஆனா இப்ப இருக்கற சூழ்னிலைல செய்ய முடியுமான்னு யோசிச்சி சொல்லுமா ? அப்பறம் பாதில விடக் கூடாதுன்னு சொல்றார் எங்க HOD. அதுதான் பயமா இருக்கு. போன வருஷ பாட்ச்ல, இதுல கலந்துக்கற அளவு நீங்க யாருமில்லைன்னு போட்டில சேரவே இல்லை. அப்படி பட்டவர், இப்ப கூப்பிட்டு என்னை கேக்கறதே பெருமைதான்.”
“அப்ப அந்த நம்பிக்கையை நீ காப்பாத்தணும்தான. கல்யாணம் குழந்தைன்னு இல்லைனா கண்டிப்பா கலந்துகிட்டு இருப்பதானே ? “, மீண்டும் கேட்டான் விக்ரம்.
“நிச்சயமா. ஆனா, பாப்பாதான் இப்ப முக்கியம். ஒரு மாசம் எங்கையும் போகமுடியாதே…அப்பறம் கூட, பவுடர் பாலை குடுக்கணுமா, எதாச்சம் சொல்லிட்டு ஒரு மூணு மாசம் இருக்க சொல்றாங்க அம்மா. இதுல நான் எப்படி சேர ?”
“எல்லாத்துக்கும் வழி பண்ணலாம். கார் எடுத்துக்க, உங்கம்மா பாப்பாவையும் காலேஜ் கூட்டிட்டு போ. அப்பப்ப பால் குடுத்துட்டு போ. ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கிக்கலாம். மிச்ச நேரம் அத்தை பார்த்துக்கட்டும்.”
“என்னப்பா சொல்றீங்க ? இதெல்லாம் நடக்கற காரியமா ?”
“நீ இதை கண்டிப்பா செய்யணும்னு நெனச்சா, எல்லாம் முடியும். ஒரு வேளை பவுடர் பால் குடுத்தா ஒண்ணும் குறைஞ்சிட மாட்டான் குட்டி. போறதுக்கு முன்னாடி உன் பாலை பாட்டில்ல எடுத்து வெச்சிட்டு போ. கார்ல போயிட்டு வா. காசை பார்க்காதே. அங்க லாப்ல (Lab) என்ன சாப்ட்வேர் இருக்கோ, அது உன் லாப்டாப்ல போடு. லைசன்ஸ் வெர்ஷன் வாங்கிக்க. எவ்வளவுன்னு சொல்லு நாமளே பே பண்ணிக்கலாம். படிக்கறதுக்குன்னு வாங்க ஆப்ஷன் இருக்கும். ப்ரொபசர்கிட்ட கேளு.”, விக்ரம் அடுக்கவும், மெல்ல வேதாவின் கண்களில் ஒரு ஒளி எட்டிப் பார்த்தது.
“அப்ப…நான் பண்ணவா ?”, அவனிடமே கேட்டாள்.
“செய். அதுக்கு என்ன வசதி வேணுமோ, நான் செஞ்சி குடுக்கறேன். எங்கம்மா, உங்கம்மா எல்லாரையும் வேலை வாங்கிக்கலாம். தப்பில்லை. “, தைரியம் அளித்தான்.
[the_ad id=”6605″]
“மொதல்ல நாளைக்கு போறதுக்கு விடறாங்களா பார்க்கலாம். போய் பேசி பெர்மிஷன் வாங்குங்க. அப்பறம் பேசுவோம்.”, இன்னும் சற்று அவ நம்பிக்கை இருக்க விக்ரமிற்கு பரீட்சை வைத்தாள். அவளை ஒரு பார்வை பார்த்தவன், வெளியே சென்றான்.
“அத்தை, மாமா, ஒரு நிமிஷம்.”, என்று அழைத்தான். இருவரும் ஹாலுக்கு வரவும், விஷயத்தை சுருக்கமாகச் சொன்னான்.
“நீங்கதானே சொன்னீங்க அவகிட்ட ? உனக்கென்ன, குழந்தைய பெத்து எங்கிட்ட குடுத்துட்டு நீ பாட்டுக்கு காலேஜ் போ, நான் வளர்த்துக்கறேன்னு ? இப்ப எப்படி மாத்தி பேசறீங்க ?”, கூர்மையாய்க் கேட்டான்.
அவன் உறுதி பார்த்து மிரண்ட கோமதி, “இல்லை மாப்பிள்ளை, இதெல்லாம் சொல்றதுதான், ஆனா குழந்தைக்கு இவ பால்தானே நல்லது ? அவளும் ரெஸ்ட் எடுக்கணும்.”, இழுத்தார்.
“நான் இல்லைன்னு சொல்லலை. அதே நேரம், மொத்தமா அவ கனவை கலைக்கறதுக்கு பதிலா அவளுக்கு கொஞ்சம் உதவி செஞ்சா போறும். மிச்சம் அவ சரி பண்ணிக்குவா. படிக்கற பொண்ணை கல்யாணம், குழந்தைன்னு ஜோசியர் சொன்னாரேன்னு நீங்கதானே இந்த நிலைமைக்கு இழுத்து விட்டீங்க ?”, கடினமாய் வந்தது விக்ரமின் குரல.
மகளைத் திரும்பி பார்த்தார் கோமதி.
“அவளை ஏன் பார்க்கறீங்க ? அவ வாழ்க்கையை நம்ம கையில குடுத்துட்டு இப்ப யாசகம் கேட்கற நிலைமையில நிக்கறா..”, முறைத்தான் விக்ரம்.
“உங்களுக்கு சரின்னா, எங்களுக்கும் சரிதான் மாப்பிள்ளை. எப்படி நாங்க உதவ முடியுமோ, எல்லாம் செய்யறோம். சம்மந்தியம்மாகிட்ட ஒரு வார்த்தை சம்மதம் வாங்கிடுங்க. என்ன இருந்தாலும் இது உங்க வீட்டு வாரிசு. அவங்க சரின்னாதான் எதுவும்.”, சௌந்தர்ராஜன் ஒப்புதல் அளித்தார்.
“ம்ம்… நான் அம்மாகிட்ட பேசறேன். அவங்களே உங்ககிட்ட பேசுவாங்க. நாளைக்கு பாப்பாவும் நானும் வேதா கூட காலேஜ் போறோம். நான் பார்த்துக்குவேன். அவ இடையில வந்து பால் குடுத்தா போறும். மிஞ்சிப் போனா நாலு, அஞ்சு மணி நேரம்தான் ஆகும்.”
“நீங்களா ?”, வாய் பிளந்தார் கோமதி.
“ நாளை மறு நாள் தொட்டிலை வெச்சிகிட்டு நீங்க எங்க போகமுடியும் ? அம்மாவும் சித்துவை பார்த்துக்கணும். அதான், நான் போறேன்.”
மதியம் வீட்டிற்கு வந்து பர்வதம்மாவிடம் பேசினான். கோமதியிடம் உபயோகித்த அதே ஆயுதம். ஏற்கனவே தன் மேல் வருத்தம் கொண்டிருக்கும் மகன், இதற்கு சரி என்றாலாவது சமாதானம் ஆவானா என்ற ஒரு ஆதங்கம். எல்லாமுமாக சேர்ந்து அவரையும் சம்மதிக்க வைத்தது.
மாலினியும், தான் வேண்டுமானால் விடுமுறை எடுத்து வருவதாய் சொல்லியும், தடுத்துவிட்டு, மறு நாள் வேதா குழந்தையுடன் கிளம்பிவிட்டான். கல்லூரியின் முதல்வர் கூட பாராட்டினார் வேதாவின் முனைப்பையும் விக்ரமின் ஆதரவையும்.
ஆண் ஆசிரியர்களின் ஓய்வறையில் குழந்தையுடன் விக்ரம் இருக்க, வேதா வரும்முன் பாட்டிலில் எடுத்து வைத்த தாய்ப்பாலை புகட்டி , குழந்தையை சுத்தம் செய்து என்று இரண்டு மணி நேரம், அழகாய் பார்த்துக்கொண்டான். அங்கிருந்த ஆசிரியர்களுக்கே ஆச்சர்யம்.
வேதா வந்து குழந்தையை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த ஆசிரியைகளின் அறைக்கு பால் புகட்ட எடுத்துச் சென்றாள். அதற்குள் சுதீப்பிடம் பேசி, புது லாப்டாப் எந்த கட்டமைப்புடன் வாங்கலாம், அதில் என்ன என்ன மென்பொருள் தேவைப்படும் என்றெல்லாம் பேசி, மறு நாள் காலை அவனுடன் சென்று வாங்குவதற்கான ஏற்பாட்டை செய்தான்.
கொஞ்ச நேரத்திற்கெல்லாம் திரும்ப வந்த வேதா, “ கொஞ்சம்தான் குடிச்சான். அதுக்குள்ள தூங்கிட்டான். நான் பாட்டில்ல எடுத்து வைக்கிறேன். நீங்க அழுதா குடுங்க என்று குழந்தையைக் கொடுத்துவிட்டு, வேறு பாட்டிலை எடுத்துக்கொண்டு போனாள்.
அவள் சென்றதும் , விக்ரம் அருகே வந்த சுதீப், “எப்படிண்ணா, இவ்வளவு சின்ன குழந்தையை பயமில்லாம பிடிக்கறீங்க ? என் அண்ணன் கிட்ட தட்ட ஆறு மாசம் அவன் குழந்தையை தூக்கவேயில்லை.”, என்று வியந்தான்.
[the_ad id=”6605″]
“என் அண்ணன் குழந்தைகளை பார்த்துகிட்ட அனுபவம் இப்ப உதவுது. நீயும் உன் அண்ணா குழந்தையை பார்த்துக்கோ, பின்னாடி யூஸ் ஆகும்.”, என்று சிரித்தான்.
“ஹா ஹா..அவங்க வளர்ந்துட்டாங்க. அனேகமா, உங்க குழந்தைகிட்டதான் நான் ப்ராக்டீஸ் செய்யணும். வேதா வீட்லதான் மீட்டிங்னு முடிவு பண்ணிருக்கோம். அப்பதான் வேதாக்கு ஈசி. எங்க டீம்ல வாணியும் இருக்கா. அவளுக்கும் வேதா வீடு கிட்ட. எல்லாரும் காலேஜ் வர டைம் வேஸ்ட். வாரத்துல ஒரு நாள் வந்துக்கலாம்னு ப்ளான். “, அவர்கள் முடிவு செய்தவற்றை பகிர்ந்து கொண்டான்.
“என் வாட்சப் எடுத்துக்கோ சுதீப். வேதா யோசிச்சாலும், நீ எனக்கு சொல்லு, என்ன தேவையோ , பண்ணிக்கலாம். “
“நாங்க வின் பண்றதுல அவ்வளவு இன்ட்ரெஸ்டா ?”
“இல்லை, எனக்கு போட்டியோட ரிசல்ட் முக்கியமில்லை. வேதா அவளோட முழு முயற்சியும் இதுக்கு குடுத்தாங்கிற திருப்தி இருக்கணும். அதுதான் எனக்கு முக்கியம்”, என்றான் விக்ரம் சீரியஸாக.
“வேதா ரொம்ப லக்கி. கண்டிப்பா உங்க எண்ணம் நிறைவேறும். எங்க காலேஜுக்கும் பெருமை சேர்ப்போம்ண்ணா. நீங்க பாருங்க.”,என்றான் நம்பிக்கையோடு.
ஒரு வழியாய் பேப்பர்வொர்க் எல்லாம் முடித்து, குழந்தைக்கு மறுபடி ஒருமுறை பால் புகட்டி , சுத்தம் செய்து இருவரும் காரில் திரும்ப மணி மதியம் இரண்டானது. இடையில் வீட்டிலிருந்து எடுத்து வந்த ஹார்லிக்ஸ், ஆசிரியர் கொடுத்த பிஸ்கட் காண்டீனில் குடித்த மாதுளை ஜூஸ் எல்லாமாக அவளை தெம்பாக வைத்தது. எல்லாவற்றையும்விட அவளது படிப்பிற்கான சூழலில் இருப்பதே அவளுக்கு ஒரு தனி பூரிப்பைக் கொடுத்தது. வாய் ஓயாமல் பேசிக்கொண்டு வந்தாள்.
“என்ன வாணியும் உங்க டீம்ல இருக்காளாம்? சுதீப் சொன்னான்.”, என்று விக்ரம் கேட்க,
“ஆமாம், அவளை மாதிரி டீடெய்ல் ரெகார்ட் யாராலையும் வெச்சிக்க முடியாது. எல்லா டாக்குமென்டேஷனும் பக்காவா ரெடி பண்ணுவா. எனக்கு அதெல்லாம் கொஞ்சம் பொறுமை கிடையாது. எனக்கும் சுதீப்புக்கும் உடனே உடனே ஐடியாவை ட்ரையல் பார்க்கணும், அவ அதுக்கெல்லாம் விடாம முறையா செய்ய வைப்பா. அதான் அவளையும் வர சொல்லி ப்ரொபசர் கிட்ட பேசினோம். “
முறைக்கும் வேதாவைக் கண்டு சிரித்தான். “சுதீப்பும் அவன் பிடிச்ச முயலுக்கு மூணு கால்னு நிப்பான். படிப்பு விஷயத்துல நீயும் அப்படித்தான். இது நல்லா படிக்கற பசங்களுக்கே இருக்க சுபாவம். அதனால கண்டிப்பா சண்டை களைகட்டும். அதை படிப்போட மட்டும் நிறுத்து. உனக்காக அவன் உங்க வீட்டுக்கு வர்றான். அதனால அவன் எப்பவும் சங்கடப்பட கூடாது. புரியுதா தேனூ ?”
“யெஸ் பாஸ். கவலைப்படாதீங்க. அதான் ரெண்டு பேர் கிட்டயும் உங்க வாட்சப் பரிமாறிக்கிட்டீங்களே ? அப்படி நான் எதாச்சம் பண்ணா, ரெண்டுல ஒரு ஸ்பை உங்களுக்கு போட்டு குடுத்துடும். அப்பறம் என்ன ?” , என்று அவனைப் பார்த்து ஒழுங்கு காட்டினாள்.
மறு நாள் காலை வேதா வீட்டிலேயே செய்யும் சில சடங்குகள் முடிந்ததும் கிளம்பியவன், மூன்று மணியளவில்தான் அவன் வீடு திரும்பினான். வார நாள் என்பதால் ,காயத்ரியும் அவள் கணவனும் மட்டும் வந்திருந்தனர். பர்வதம், மாலினி என்று எல்லாரிடமும் திட்டு கிடைத்தாலும், வேதாவின் லாப்டாப்பிற்காக என்று சொல்லிக்கொள்ளவில்லை. அக்கா மாமாவை வரவேற்று, பின் அவசரமாய் கிளம்பினான்.
ஒரு வழியாய் ஐந்து மணிக்கெல்லாம் விழா நடக்கும் ஹாலுக்கு வந்தனர் இரு வீட்டாரும். காயத்ரி, ரகுவுமே இப்போதுதான் குழந்தையைப் பார்க்கின்றனர். விக்ரம் அவன் மனைவியை வளைத்து வளைத்து போட்டோ எடுத்துத் தள்ளினான். அவன் வாங்கியிருந்த எம்ரால்ட், ரூபி வளையும், காதணிகளையும் அணிந்து கொண்டு பச்சை, சிகப்பு கலந்த பட்டுப் புடவையில் விக்ரமின் கண்ணைப் பறித்தாள். விக்ரமும், அந்த இளம் பச்சையில் காட்டன் சட்டையும், ஜீன்ஸும் அணிந்து, இளம் தந்தைக்குரிய பெருமையுடன் இருந்தான்.
மஞ்சரி வரவும், அவளே இருவரையும் ஓட்டிக்கொண்டு, குழந்தையோடு அவர்களையும் சேர்த்து போட்டோ எடுத்துக்கொண்டிருந்தாள். உடன் சிந்துவும், சித்துவும், காயத்ரியின் பிள்ளைகளும் சேர, இடமே கலகலப்பாய் இருந்தது. ராஜேந்திரந்தான் பாவம், மஞ்சரியை நோக்கிச் செல்லும் பார்வையை கட்டுப்படுத்த முடியாமலும், அதே நேரம் விழாவிற்கான ஆயத்தங்களையும் மேற்பார்வை பார்த்துக்கொண்டும் அல்லாடிக்கொண்டிருந்தான். ராகவன் வந்து சற்று பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும்தான் நிமிர முடிந்தது.
மாலினியும் காயத்ரியும், சீர் வரிசை தட்டுக்களை அடுக்குவதிலும், தொட்டில் அலங்காரத்திலும் பிசியாக, பர்வதமும் கோமதியும் என்ன முறை, என்ன வரிசையில் குழந்தையை வாழ்த்த உறவினர்களை அழைப்பது என்று பேசிக்கொண்டனர்.
விழா இனிதாக நடந்தது. குழந்தைக்கு விக்ரம், வேதாவின் முதல் எழுத்துக்கள் சேர்த்து விவேக் என்று பெயரிட்டனர். கோமதி சென்று ஜாதகம் எழுதினார். யார் செய்த புண்ணியமோ, ஜோசியரும் வ வரிசயில் பெயர் வைக்க சொல்லவும், எந்த சச்சரவுமின்றி பெயரை தேர்ந்தெடுத்தனர்.
காயத்ரி குழந்தைக்கு காப்பு தங்கத்தில் போட்டாள். மாலினியோ, வெள்ளியில் குழந்தைக்கான செட் ஒன்றை வாங்கி வைத்தாள் வரிசையில். வெள்ளிக் கிண்ணி, டம்பளர், பாலாடை,தட்டு மட்டுமல்லாது, குழந்தைக்கு விதவிதமாய் மையில் பொட்டு வைக்கும் அச்சு, கிலுகிலுப்பை, காலுக்கு தண்டை என்று பலதும் இருந்தது. சிந்துவின் அழகிய ஓவியத்துடன், சிந்து, சித்து என்று கையெழுத்திட்டு இருந்தது.
“உங்களுக்கு மட்டும் எப்படி அண்ணி வித்தியாசமா கிடைக்குது. பாருங்க என் காப்பை திரும்ப போடுவாங்களா தெரியாது. ஆனா, கண்டிப்பா நீங்க வாங்கினது எல்லாம் யூஸ் பண்ணுவாங்க. “, காயத்ரி கொஞ்சம் ஆற்றாமையோடுதான் கேட்டாள்.
அவளும்தான் என்ன செய்வாள். வந்த வயதான பெண்மணிகள் ஒன்று போல ‘வெள்ளியில் கிலுகிலுப்பைக் கூடவா வருது இப்போ? கொழுந்தன் பிள்ளைக்குன்னு தேடி பிடிச்சு செய்யற உன் மனசு யாருக்கு வரும். கடனேன்னு பவுனுல நானும் போட்டேன்னு போடாம, அக்கறையா செய்யற’, என்று மாத்தி மாத்தி சொல்லிச் சென்றார்கள்.
அவர்களுக்கு சிரிப்பையே பதிலாகத் தந்தவள், காயத்ரியிடம், “முன்னாடியாவது நாலு கடை ஏறி இறங்கித் தேடணும். இப்பதான் ஆன்லைன்ல எல்லாமே வருது. கொஞ்சம் மெனக்கெட்டு பொறுமையா நேரம் செலவழிச்சு தேடினா கிடைக்கும். பொட்டு வெக்கற அச்சு, ஆர்டர் கொடுத்து, ஒரு மாசம் கழிச்சுதான் கொடுத்தான். அவ வளைகாப்புக்கு முன்னாடியே ஆர்டர் குடுத்தேன். கடைசி நேரம் வாங்கணும்னா வித்தியாசமா கிடைக்காது.”, என்றாள்.
“நானும் வேலைக்கு போனப்பறம்தான் தெரியுது அண்ணி, எப்படி எல்லாத்தையும் சமாளிக்கறீங்க, நேரமே இல்லையே ? எனக்கு முடியவே இல்லை. இவரா போய்த்தான் ஆகணும்னு ஒத்தக் கால்ல நிக்கறார்.”, ரகு அருகில் இல்லாத நேரத்தில் மாலினியிடம் குறை பட்டுக்கொண்டாள்.
“லன்ச்ல என்ன பண்ற ? மத்தவங்க கிட்ட வெட்டி கதை பேசாம, உபயோகமா நாலு விஷயம் பண்ணலாம். உனக்கே இன்னும் கொஞ்ச நாள் போனா பழகும்.”, என்றவள் அதற்கு மேல் நிற்காமல், வந்தவர்களை கவனிக்கப் போனாள்.
அப்படிதான் அந்தக் காட்சி கண்ணில் பட்டது. ராஜேந்திரனும் மஞ்சரியும் வேதாவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தார்கள். இந்த முறையும் மஞ்சரியின் கரு நீல பார்டர், ராஜேந்திரனின் சட்டையோடு பொருந்தியிருந்தது. சற்று கவனித்தபோது மிக இயல்பாய் பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள் வேதாவுடன். நாமாக யோசிக்க வேண்டாம். பார்ப்போம் என்று நினைத்து சென்றாள் மாலினி.
சாப்பிட அழைத்துச் செல்வது போல மஞ்சரியுடன் சென்றான் ராஜேந்திரன். “ நீ பண்ற கலாட்டால கண்டிப்பா எல்லாருக்கும் தெரியப் போகுது மஞ்சரி. கொஞ்சம் சும்மாயிரு ப்ளீஸ்.”, என்று வழக்கம்போல கெஞ்சிக்கொண்டிருந்தான்.
“ நேத்துதானே சொன்னேன், டைல்ஸ் டீலர்ஷிப் எடுத்தது, கொஞ்சம் ஸ்டெடியாகற வரைக்கும் பொறுன்னு. நீயும் எப்படியும் உன் பெரியம்மா பொண்ணுக்கு முடியற வரை டைம் இருக்குன்னு சொன்னியே ? இப்ப இப்படி சொல்ற ?”, கொஞ்சம் அதிர்ச்சியுடன் கேட்டான்.
“அது கல்யாணத்துக்கு. நம்ம விஷயம் தெரியரதுல என்ன ப்ரெச்சனை ?”
[the_ad id=”6605″]
அவள் கையை தன் கைகளுக்குள் சிறை பிடித்தவன், “இல்லை மஞ்சரி. விஷயம் தெரிஞ்சா உடனே கல்யாணம் பண்ணனும். உறவுக்குள்ளே யார் வாய்க்கும் நாம் அவலா இருக்கக் கூடாது. அப்பறம் இந்த மாதிரி ஒரு விசேஷம்னா எல்லாரும் நம்மையே பார்ப்பாங்க. தேவையில்லாத பேச்சு, உங்க அப்பா அம்மாவுக்கு சங்கடம். அதனாலதான் சொல்றேன். ஒரு ஆறு மாசம் போறும். ரெடியாகிடுவேன்.”, சீரியசாய் அவளுக்கு விளக்கினான்.
குறும்புப் புன்னகையுடன் மெதுவாய் தன் கையை விடுவித்தவள், “இவ்ளோ நேரம் கையைப்பிடிச்சிகிட்டு எங்கிட்ட பேசினதை யாராச்சம் பார்த்திருக்கப் போறாங்க பாஸ். நீங்களே காட்டி குடுத்துடுவீங்க போலிருக்கே. போய் மத்தவங்களை கவனிங்க. என் கூடவே சுத்தறீங்க ?”, என்றாளே பார்க்கலாம்.
“உன்னை….”, என்றவன், தலையில் அடித்துக்கொண்டு சென்றான் சிரித்தபடியே. மஞ்சரியோ ஒரு மென்னகயுடன் அவன் செல்வதைப் பார்த்திருந்தாள். இதுவுமே மாலினியின் கண்களில் பட்டது.
பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது அவளிடமிருந்து. ‘ம்ம்…நாம ஒண்ணு ஆசைப்பட்டோம், இங்க வேற நடக்குதே. ‘, என்று நினைத்தவாறே பிள்ளைகளை கவனிக்கச் சென்றாள்.