துரித கதியில் கல்யாண வேலைகள் நடக்க ஆரம்பித்தன. இரவு நேரங்களில் தினமும் அழைத்து பேச ஆரம்பித்திருந்தான் ராஜேந்திரன். ஒன்றும் ரெண்டுமாய் கடந்த நாங்கு மாதங்களில் நடந்தவற்றை அவளிடமிருந்து வாங்கியிருந்தான். அவள் அம்மாவின் குத்தல் பேச்சுகள், பிறந்த நாளில் இவன் பேசுவான் என்று எதிர்பார்த்து ஏமாந்தது, இரவுகளில் போனை வைத்துக்கொண்டு அழுதது, அவள் மீதே வெறுப்பு கொண்டது என்று பொறுமையாய் வெளிக்கொணர்ந்தான்.
எவ்வளவுதான் இவன் இலகுவாகப் பேசினாலும்,மஞ்சரியிடம் முன்பிருந்த கலகலப்பும் குறும்புத்தனமும் தலைதூக்கவில்லை. வேதாவின் வளைகாப்பிற்கு கத்தரி வண்ண சட்டை போட்டால்தான் ஆயிற்று என்று ஒரு மணி நேரம் மல்லுக் கட்டியவள் எங்கே ? இப்போது வேண்டுமென்றே இவன் மறுத்துப் பேசினாலும் உடனே வளைந்து கொடுக்கும் இந்த மஞ்சரி எங்கே ?
பட்டாம் பூச்சியாய் சுற்றிக்கொண்டிருந்தவளை, அநியாயமாய் சிறையில் அடைத்துவிட்டு, இப்போது திறந்துவிட்டேன் பறந்துகொள் என்றாலும் பறக்க பயந்து அருகிலேயே தவ்விக்கொண்டிருப்பதைப் பார்த்து மனம் கனத்துப் போனது ராஜேந்திரனுக்கு.
வேதா கூட இவனிடம் போனில் குறைபட்டுக்கொண்டாள். மஞ்சரி தன்னிடம் பட்டும் படாமலும்தான் பேசினாள். முன்போல கலகலப்பாய் இல்லை என்று. ராஜேந்திரந்தான் சமாதானப்படுத்த வேண்டியதாகிற்று.
எந்த சிக்கலுமில்லாமல், பெண் வீடு சென்று ஒப்புத்தாம்பூலம் மாற்றியாகிற்று. அப்போதும் பதுமையாய் வந்தாள், நின்றாள், சென்றாள். மறு நாள், “என்னவளுக்கு…என்னை ஏற்றுக்கொண்டதற்கு…” என்று எழுதி, அவள் அலுவலகத்திற்கு ஒரு ரோஜாப் பூங்கொத்து அனுப்பினான்
மதியம் உணவு நேரம் ஆரம்பிக்கும் முன் கிடைக்குமாறு செய்திருந்தான். அவள் கைகளுக்குச் சென்ற பத்து நிமிடங்களில், முகம் முழுக்க புன்னகையை ஏந்தி கைகளில் பூங்கொத்தினை ஏந்தி, போட்டோ வந்தது மஞ்சரியிடமிருந்து. அவன் அதை பார்த்துக்கொண்டிருக்கும்போதே அழைப்பும் வந்தது.
“ஹலோ…”
“ஹலோ…நாந்தான். என்ன திடீர்னு பூவெல்லாம் அனுப்பி அசத்தறீங்க ? ஆபிஸ்ல எல்லாரும் கிண்டல் பண்ணறாங்க…”, வெட்கமும் உவகையுமாக வந்தது மஞ்சரியின் குரல்.
“ம்ம்… நேத்து உன்னைப் பார்க்கும்போது என்னவோ குறையற மாதிரி தெரிஞ்சுது. நைட் கண்டுபிடிச்சேன். அதான் அனுப்பினேன்.”, அவன் எதிர்பார்த்தபடியே, பூடகமாய் பேசியது அவளுக்கு புரியவில்லை.
“என்ன குறைஞ்சுது ? என்ன புரிஞ்சுது ?”
“ம்ம்ம்… கல்யாணமாகப்போற பொண்ணுக்கு இருக்குற சந்தோசஷம், வெக்கம், கனவு எதுவுமே நேத்து உன் முகத்துல எனக்குத் தெரியலையா…அதுக்குத்தான் அனுப்பினேன். இப்ப நீ அனுப்பின போட்டோல ரெண்டு ஐட்டம் வந்துடுச்சு. மிச்சமிருக்க கனவையும் வர வெக்கறேன்.”, குறும்பாய் பதிலளித்தான் ராஜேந்திரன்.
“ராஜன்…”, கொஞ்சம் சிணுங்கினாளா ? மனம் நிறைந்தது அவனுக்கு.
“ம்ம்.. சொல்லு.”
“அது…நேத்து கொஞ்சம் டென்ஷன். எல்லாம் நல்லா நடக்கணுமேன்னு. எல்லாரும் இருக்கும்போது உங்களைப் பார்த்தா, பேசினா எதுவும் சொல்லுவாங்களோன்னு ஒரு பயம். அதான் பார்க்கலை. நீங்க தப்பா நெனக்காதீங்க. “
“தப்பா நினைக்கறவனா உனக்கு பொக்கே அனுப்புவான் ? உன் டென்ஷன் போகறதுக்குத்தான் அனுப்பினேன். இந்த நேரம், எல்லாரும் பண்ற கிண்டல் கேலியெல்லாம் என்ஜாய் பண்ணு.”
“வீட்டுக்கு எடுத்துட்டு போனா அம்மா என்ன சொல்லுவாங்களோ ?”
“தைரியமா எடுத்துகிட்டுபோய் உன் ரூம்ல வை. சந்தோஷப் படுவாங்க. அப்படியில்லைனா, எனக்கு போன் பண்ணு, நான் பேசிக்கறேன் அவங்க கிட்ட.”
“ம்ம்…சரி.”
“நைட் வீடியோ கால் பண்ணுவேன். உன் ரூம்ல நாந்தான் இல்லை, நான் அனுப்புன பூவாச்சம் இருக்கணும்.”, கட்டளையிட்டான்.
“ஹ்ம்ம்… பூ ரூம்ல இருக்கும். உங்க போட்டோ படுக்கையில இருக்கும் போறுமா ?”, கொஞ்சமாய் பழைய மஞ்சரி எட்டிப் பார்த்தாள்.
“ம்ம்… குடுத்து வெச்ச போட்டோ. போ…போய் சாப்பிடு.”, சிறு பெருமூச்சுடன் கூற,
மெல்லச் சிரித்தவள், “வைக்கிறேன். நீங்களும் போய் சாப்பிடுங்க. “, என்று விடை கொடுத்தாள்.
சில நாட்கள் கழித்து, ஒரு சனிக்கிழமை காலை, மஞ்சரி அலுவலகம் சென்றிருப்பது தெரிந்து, அவள் வீட்டிற்கு பேச வருவதாய் கைலாசத்திற்கு போன் செய்துவிட்டுச் சென்றான் ராஜேந்திரன்.
“வாங்க மாப்பிள்ளை .”, என்று வரவேற்றார் கைலாசம். தண்ணீர் கொடுத்த காஞ்சனா,
“காப்பி, டீ, எது போட்டட்டுங்க மாப்பிள்ளை ?”, என்றார்.
என்னவோ என்று அவன் முகம் பார்த்தவர்களை, “ மஞ்சரியை எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்க சம்மதிச்சாலும், உங்களுக்கு முழு திருப்தியில்லைன்னு நெனைக்கிறேன். உங்களுக்கு என்ன கவலைன்னு சொல்லுங்க ?”, என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
சங்கடமாய் ஒரு நொடி நெளிந்தாலும், கைலாசம் ராஜேந்திரனைப் பார்த்து, “உங்களுக்கு என் பொண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுக்கறதுல எங்களுக்கு பரிபூர்ண சந்தோஷம்தான் மாப்பிள்ளை. ஆனா கல்யாண உறவு உங்களோட மட்டும் இல்லை. உங்க குடும்பத்தோடவும் தான். உங்க குடும்பத்தோட நிம்மதி, உங்களோட நிம்மதி எல்லாமே மஞ்சரி உங்க அம்மாவோடவும் தங்கையோடவும் சுமூகமா இருக்கறதுலதான் இருக்கு.”, அவர் சுற்றி வருவது எதைப் பற்றி என்பது புரியாமலா ராஜேந்திரன் இங்கு வந்து அமர்ந்திருக்கின்றான்.
“நீங்க சொல்ல வரது எனக்கு புரியுது மாமா. உங்க கவலை வேதாவையோ, எங்க அப்பாவையோ பத்தியில்லை. அன்னைக்கு எங்க வீட்ல வெச்சு எங்கம்மா பத்தி நீங்க சொன்னதுதான் இன்னுமும் உங்களை உறுத்துது. அதுதானே ?”, மறுபடியும் உடைத்துக் கேட்டான் ராஜேந்திரன்.
ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்ட கைலாசம், ராஜேந்திரனை நிமிர்ந்து பார்த்து, “ ஆமாம். இன்னைக்கு என் பொண்ணு கஷ்டத்தைப் பார்த்து, அவ வேர யாரைக் கல்யாணம் பண்ணாலும் சந்தோஷமா இருக்கமாட்டான்னுதான் கல்யாணத்துக்கு சம்மதிச்சோம். ஆனா, இதுக்கப்பறம் அவளோட வாழ்க்கை நெனச்சு பயமாத்தான் இருக்கு. உங்க மேல நம்பிக்கை இருக்கு, ஆனாலும் திரும்ப அந்த ஜோசியர் ஏடாகூடமா எதையாச்சம் சொல்லி, அதுனால எதுவும் ப்ரெச்சனையாகுமோன்னு உறுத்தல் இருக்கு. “, நிறுத்தி ராஜேந்திரன் முகம் பார்த்தார். அதில் ஒன்றும் தெரியவில்லை.
“முழுசா சொல்லி முடிங்க மாமா.”, என்று மட்டும் பதிலளித்தான்.
“வெறும் ஜோசிய நம்பிக்கை மட்டும் இருந்தா கூட, பார்த்துக்கலாம்னு ஒரு தைரியத்தில இருப்பேன் மாப்பிள்ளை. இங்க அந்த ஒரு மனுஷர் சொல்றதுதான்னு இரும்புபிடியா இருக்காங்க உங்கம்மா. வேதாவோட கல்யாணமும் அவர் சொன்னதாலதான் அவசரமா நடந்ததுன்னு கேட்ட போது, இன்னுமே பயம்தான். பொண்ணுக்கே அவர் சொல்றதுதான்னா, மஞ்சரிக்கும் அதேதான். அதுதான் கவலையா இருக்கு.”
“நீங்க கவலைபடுறது நியாயம்தான் மாமா. ஆனா, ஒரு விஷயம் நீங்க யோசிக்கணும். சுந்தரமூர்த்தி ஜோசியர் அமெரிக்கா போகாம இங்கயே இருந்திருந்தா, இது இவ்வளவு பெருசா போயிருக்காது. உடனேயே சரி செஞ்சிருப்பேன். இப்பவும், நான் படற கஷ்டம் பார்க்கமுடியாம, அம்மாதான் அவரோட அமெரிக்கா நம்பர் வாங்கிக்குடுத்தாங்க.. திரும்ப அவர்கிட்ட ஜாதகத்தை எடுத்துகிட்டு போக மாட்டாங்கன்னு சொல்லமுடியாது. ஆனா, என் மஞ்சரிய நான் எப்பவும் விட்டுக்குடுக்க மாட்டேன். உங்க பெண்ணா இருக்கும்போதே அவளை விடலை, அவளுக்கும் அது தெரியும். அப்படியிருக்க என் மனைவியான அப்பறம் எப்படி விடுவேன் ? “, அவன் கேட்கவுமே, கவலை நீங்கியவராய்,
“நீங்க எப்ப ‘என் மஞ்சரி’ன்னு சொன்னீங்களோ, அப்பவே எனக்கு கவலை விட்டுது மாப்பிள்ளை. நான் முழு மனசோடவே என் பொண்ணை உங்களுக்கு கட்டிக்கொடுக்கிறேன்.”, என்றார் கைலாசம் முகம் மலர்ந்தவராய்.
“உங்களுக்கு எதுவும் கேக்கணுமா அத்தை ?”, என்று காஞ்சனா புறம் பார்த்தான்.
“அவ சந்தோஷமா இருந்தா, அதுவே போறும் மாப்பிள்ளை.”, என்றார் காஞ்சனா.
“அவ சுண்டு விரல்ல என்னை சுத்தி வெச்சிருக்கா அத்தை. நீங்க கவலையேபட வேண்டாம். மஞ்சரி எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.”, என்று புன்னகையுடன் கூற, காஞ்சனா முகம் முழுதும் மகிழ்ச்சி. இதைவிட என்ன வேண்டும் ஒரு தாய்க்கு.
“மாமா, வேதாவுக்குமே, அவ விக்ரமை பிடிச்சிருக்குன்னு சொன்னப்பறம்தான் கல்யாண ஏற்பாடு செஞ்சதே. அவ பிடிக்கலைன்னு சொல்லியிருந்தா, கண்டிப்பா நடத்த விட்டிருக்கமாட்டேன். ” , என்று கைலாசத்துக்கும் விளக்கமளித்தான்.
இரண்டு வாரங்கள் கழித்து ஒரு ஞாயிறு காலை முகூர்த்தப் பட்டு எடுக்க முடிவு செய்திருந்தார்கள். ராஜேன்திரன் குடும்பமும் அவன் மாமா கணேசனும் அவர் மனைவியும் கடைக்கு வந்துவிட்டனர். பின்னாலேயே மஞ்சரியும் அவள் தந்தையும் மட்டும் வந்தனர்.
“அது.. காஞ்சனாக்கு கொஞ்சம் லேடீஸ் ப்ரெச்சனை. ஆனா முடிவு செய்துட்டு தள்ளிப் போட வேண்டாம், உனக்கு பிடிச்சதை எடும்மான்னு அனுப்பிவெச்சா. “, கைலாசம் பொதுவாய்க் கூறினார்.
“வாம்மா, என்று கோமதி அழைத்துக்கொண்டு பட்டுப் புடவை பக்கம் போக, ராஜேந்திரனுக்கு போன் வரவும், வெளியில் சென்று பேசப் போனான். ஏதோ லோடு சென்றதில் குளறுபடி. அடுத்தடுத்து போன் பேசி, சரி செய்து, உள்ளே வர அரை மணியாகிவிட்டது. ஆண்கள் மூவரும் ஒரு புறம் பேசிக்க்கொண்டிருக்க, அவர்களிடம் சென்றவன், “சாரி லோடு அனுப்பினதுல சின்ன கன்ஃபுஷன் . நீங்க போய் வேட்டி எடுக்க வேண்டியதுதானேப்பா ? “, என்றான் பொதுவாய்.
“சரிப்பா, நீ அம்மா என்ன பண்றாங்கன்னு பார்த்துட்டு வா. நாங்க மேல போய் பார்த்து வைக்கிறோம்.”, என்று மற்றவர்களை அழைத்துக்கொண்டு கிளம்பினார் சௌந்தர்ராஜன்.
அவன் அருகே வரவும், கோமதி எலுமிச்சை நிறத்தில், பெரிய சரிகை போட்டு சிகப்பு பார்டர் வைத்த புடவையை மஞ்சரியின் மீது வைத்து, “நல்ல எடுப்பா தெரியுது, உனக்கு பிடிச்சிருக்கா ? “, என்று கேட்க,
பிடித்திருப்பதாய் தலையாட்டினாள் மஞ்சரி. கண்ணாடியில் திரும்பிக்கூட பார்க்கவில்லை. சுறு சுறுவென எரிச்சல் ஏறியது ராஜேந்திரனுக்கு. இதை அறியாத கோமதி, அவனிடமும் காட்ட, அதை தூக்கிப் போட்டவன், “அம்மனுக்கா சேலை எடுக்கறீங்க ? இல்லை கல்யாணம் திருப்பதியிலையா ? ஏன் மாமி, உங்க பொண்ணு மாலதி கல்யாணத்துக்கு இப்படித்தான் புடவை எடுத்தீங்களா ?”
“இல்லை ராஜா, கோமதிதான்…”, என்று இழுக்கவும், முயன்று கட்டுப்படுத்தி, “மா.. நீங்க உங்க ரெண்டு பேருக்கும் எடுங்க இங்க. கல்யாணப் பொண்ணுக்கு மேல் மாடில தனியா கலெக்ஷன் இருக்காம். நாங்க அங்க போறோம். எடுத்துட்டு உங்களுக்கு காட்டறோம். எங்கூட வா மஞ்சரி”, என்று மேலே பேச இடம் கொடாமல் முன்னே சென்றான். மஞ்சரி அப்போதும் கோமதியை பார்க்க,
“போம்மா, இல்லாட்டி உன்னையும் திட்டுவான்.”, என்று அனுப்பினார்.
மாடிபடியருகே அவளுக்காக நின்றவன், “ மஞ்சரி, எதுக்கு அந்த புடவைக்குப்போய் தலையாட்டின ?”
“இல்லை…எனக்கு பிடிக்கலைன்னு சொல்லி அவங்க கோச்சிகிட்டா என்ன பண்றதுன்னு…”, அவள் இழுக்க…
கடை என்றும் பாராமல் அவள் கன்னம் பற்றியவன், “என்னைப் பார். நம்ம கல்யாணம் ஒரு வருஷமா நீ கண்ட கனவு. அது நீ நெனச்சபடி உனக்கு அமைச்சி குடுக்கணும்னு ஆசைப் படறேன். அதுக்கு உன்னோட ஹெல்ப்பும் வேணும் எனக்கு. “
அவள் அவனையே பார்க்கவும், “ நீ நம்ம கல்யாணத்துக்கான ஒவ்வொரு விஷயத்தையும் எஞ்ஜாய் பண்ணி செய்யணும். செய்வியா ? யார் என்ன சொல்லுவாங்கன்னு பயப்படாம, நீ என்னல்லாம் ஆசைப்பட்டியோ, அதெல்லாம் சந்தோஷமா செய்யணும். சும்மா கடனேன்னு இருக்காதே. (Alprazolam) பின்னாடி நெனச்சி பார்த்து, மிஸ் பண்ணிட்டோமேன்னு வருந்தக்கூடாது, சரியா ?”
கண்கள் கலங்க அவள் சரி என்று தலையாட்டவும், கன்னத்தைவிட்டு கையைப் பிடித்தவன், படியேறினான்.
முகூர்த்தப்பட்டு செக்ஷனுக்கு வந்தவன், அங்கிருந்தவரிடம் மஞ்சரியைக் காட்டி, இவங்களுக்கு கல்யாணம், இந்த மாதிரி புடவைங்க காட்டுங்க, என்று அவன் போனைக் காட்டினான்.
“உக்காருங்க..”, என்று உபசரித்தவர், “ சார் என்ன விலையில காட்டட்டும் ?”,என்று கேட்டார்.
அதுவரையிலுமே அமைதியாய் அவனை பார்த்திருந்தாள் மஞ்சரி. ஒரு வேளை வேதா எதுவும் மாடல் அனுப்பியிருப்பாள் என்று நினைத்தாள்.
பெரியவர், ஒரு பெண்ணை அழைத்து, “லோட்டஸ் பிங்க்ல தங்க சரிகை போட்ட மாதிரி புடவைங்களை கொண்டு வாம்மா.” என்று அனுப்பவும், சட்டென்று நிமிர்ந்து ராஜேந்திரனைப் பார்த்தாள்.
ஒன்றுமே சொல்லாமல் அவன் போனை அவளுக்குக் காட்டினான், கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்கு முன் அவனுக்கு வாட்சப்பில், ‘நம்ம கல்யாணத்துக்கு இது மாதிரி சேலைதான் வாங்கித்தரணும்.’, என்று அனுப்பியிருந்தாள். கலங்கிய கண்களை ஒருவாறு சமாளித்து, அவனைப் பார்க்கவும்,
“எதுவும் மறக்கலை. எல்லாம் உன் இஷ்டப்படி நடக்கும். சந்தோஷமா நீ ஆசைப்பட்டபடியே எடு. “, சிரித்தான்.
சேலைகளை பெரியவர் பிரித்துக்காட்டவும், இம்முறை ஆசையாய், ஆர்வமாய்ப் பார்த்தாள். மற்ற நிறங்களையும் ஒரு பார்வை பார்த்தவள், மீண்டும் லோட்டஸ் பிங்கில் தங்கச் சரிகையில் மயில்கள் வரிசைகட்டி நிற்க, உடலில் அன்னங்களும் தாமரைப் பூக்கள் சரிகையும் சிதறியிருக்க, முந்தானையில் ராமர் சீதை கல்யாணகோலத்தில் இருப்பது போன்று நெய்திருந்த சேலைக்கே வந்து நின்றாள்.
“இல்லை விலை ரொம்ப இருக்கு… எதுக்கு ஒரே புடவைக்கு இவ்வளவு குடுக்கணும்…”
“ஷ்… கல்யாணத்துக்கு எடுக்கற பட்டு. ஒவ்வொரு கல்யாண நாளுக்கும் எனக்கு கட்டி காட்டணும். நிறைய வருஷம் தாங்கணும். அதனால இந்த காசு குடுக்கலாம் தப்பில்லை.”, கண்ணடிக்கவும்,
அதிர்ந்து, அவசரமாய் சுற்றம் பார்க்க, இவர்கள் பேசி முடிவெடுக்கட்டும் என்று அங்க பெரியவர் தள்ளிச்சென்று ஏதோ அடுக்கிக் கொண்டிருந்தார்.
“ஷ்… சரி. இதுவே எடுத்துக்கறேன். கலாட்டா பண்ணாதீங்க.”, அவசரமாய் ஒப்புக்கொடுத்தாள்.
புடவையைத் தனியே வைக்கச் சொன்னவன், அவன் தந்தையை அழைத்து, எல்லோரையும் அவர்களிடத்திற்கு வர சொன்னான்.
எல்லோரும் நன்றாக இருப்பதாய் சொல்ல, கோமதி, “லைட் கலரா இருக்கே, சரிகை எடுப்பா தெரியலையே..”, என்று ஆரம்பித்தார்.
“இல்லைமா, பகல் நேரத்துக்கு இது நல்லா இருக்கும். இப்ப இதுதான் நல்ல மூவிங்கல இருக்கு. பொண்ணு நிறத்துக்கு அழகா எடுத்துக் கொடுக்கும்.”, என்று கடைக்காரப் பெரியவர் அவருக்குரிய பாங்கில் சொல்லவும்,
“மா… எனக்கு பிடிச்சிருக்கு. இதுவே எடுக்கலாம்.”, என்று முடித்தவன், பில்லிங் அனுப்பிடுங்க என்றான்.
ஒரு வழியாய் எல்லாவற்றுக்கும் பணம் செலுத்தி, ஹோட்டலில் உணவை முடித்து, மஞ்சரியையும் அவள் தந்தையையும் அனுப்பி வைத்தான். மலர்ந்திருந்த அவள் முகமே அவனுக்கு திருப்தியைக் கொடுத்தது.