“ம்ம் ..வீட்ல சொல்லிருப்பாங்களே…என்ன முடிவு சொன்னீங்கன்னு தெரிஞ்சிக்கலாம்னு தான் கூப்பிட்டேன். உங்க முடிவு சொல்லிட்டீங்களா ?”, கொஞ்சம் தயங்கியவாறே கேட்டான் விக்ரம்.
“அப்பா யோசிச்சு நாளைக்கு சொல்ல சொன்னார். முடிவு நீ சொல்றதுதான். கட்டாயப்படுத்தமாட்டோம்னு அப்பாவும் அண்ணனும் சொன்னாங்க.”, மெல்லிய குரலில் பதில் வந்தது.
“ உங்களுக்கு என்ன தோணுது வேதா? “
“இல்ல, படிச்சிட்டு இருந்தேன். திடீர்னு கூப்பிட்டு இப்படி சொல்றாங்க…ஒண்ணும் புரியாம உட்கார்ந்திருக்கேன்.”, என்று உண்மையை சொன்னாள்.
“நீங்க என்ன யோசிச்சிருக்கீங்க ?”, என்று விக்ரமைக் கேட்டாள். குரல் இம்முறை சற்று திடமாக வந்தது.
“நம்ம நாளைக்கு மீட் பண்ணலாமா? எனக்கு உங்க கூட கொஞ்சம் நேர்ல பேசணும். அதுவரைக்கும் எதுவும் முடிவு பண்ணாதீங்க“,என்று அவளுக்கு பதில் சொல்லாமல் இவன் கேள்வி கேட்டு வாய்தா வாங்கினான்.
மறுநாள் பின் மதியம், வேதாவுடன் ஐபாக்கோவில் ஐஸ் கிரீமுடன் அமர்ந்திருந்தான். திட்டமிடவில்லை, அப்படி அமைந்துவிட்டது.
“வீட்ல அப்பறம் எதாச்சம் சொன்னாங்களா ?”, என்று விக்ரம் ஆரம்பித்தான்.
“அம்மாதான் கொஞ்சம் பொலம்பினாங்க. அண்ணா, அடக்கிட்டாங்க. நான் உங்களை பார்க்கவரேன்னு சொல்லலை வீட்ல. ” என்றாள்.
“நானும் சொல்லலை. எங்க வீட்லயும் அம்மா பொலம்பிட்டுதான் இருக்காங்க.”, என்று புன்னகைத்தான் விக்ரம்.
உள்ளுக்குள் ஒரு உதறல். சரியாக அவன் எண்ணங்களைச் சொல்ல வேண்டுமே என்று. ஆழ்ந்த மூச்செடுத்து,
“ வேதா, எனக்கு உங்களைப் பிடிச்சிருந்தது. அண்ணிகிட்ட, ஜாதகம் பொருந்தணும்னு வேண்டிக்க சொல்லிருந்தேன். நானும் கோவிலுக்கு அண்ணைக்கு காலைல போய் வேண்டிருந்தேன். ஆனா, இவ்ளோ சீக்கிரம் இப்படி பலிக்கும்னு தெரியலை.”, அவளைப் பார்த்து ஒரு விரக்தி சிரிப்பொன்றை சிந்தினான்.
வேதா, கண்கள் விரிய, அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
“அவசரப்பட்டு வேண்டாம்னு சொல்லிட போரீங்கன்னுதான் நான் நேர்ல பேசணும்னு கூப்பிட்டேன் வேதா. எனக்கு புரியுது. திடீர்னு கல்யாணம் , குழந்தைன்னு சொன்னா, அதிர்ச்சியாதான் இருக்கும். எனக்காவது ஜாதகம் பார்க்கப்போறதுக்கு முன்னாடியே சொன்னாங்க. உங்க படிப்பு முடிஞ்சி, அப்பறம் கல்யாணம்னு சொன்னாங்க. நான் சரி பாருங்கன்னு சொல்லிருந்தேன். உங்களுக்கு அதுவும் சொல்லலை. எனக்கே உங்க கிட்ட கேக்கறது சுய நலமா தெரியுது…”, என்று நிறுத்தி அவள் முகம் பார்த்தான். ஒன்றும் யூகிக்க முடியவில்லை.
“இவங்க போட்ற கண்டிஷன் எல்லாம் விடுங்க. ஒரு வேளை படிப்பு முடிஞ்சி கல்யாணம்னு சொல்லிருந்தா, என்னை கல்யாணம் பண்ண சம்மதிச்சிருப்பீங்களா ?”, என்று மனம் தடதடக்கக் கேட்டான்.
வேதவிற்குமே நெஞ்சுக்குள் ஒரு படபடப்பு. இது கிட்டதட்ட ஒரு லவ் ப்ரொபோசல் மாதிரிதான் தோன்றியது. அவளுக்கும் ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்தது, நேற்று யோசித்தபோது புலப்பட்டது. ஆனாலும் எல்லாம் உடனே உடனே என்பதை ஜீரணிக்க முடியவில்லை.
“கல்யாணம் பண்ணிக்கோன்னு மட்டும் கேட்டிருந்தாங்கன்னா கூட, சரின்னு சொல்லிருப்பேங்க. என் படிப்பு என்னாகும், இவங்க சொல்ற மாதிரி ஒருவேளை குழந்தை வந்துச்சுன்னா, எனக்கு படிச்சிட்டே குழந்தை வளர்க்கமுடியுமா ? இதெல்லாம் யோசிக்கும்போதுதான் பயமா இருக்கு.”
“அண்ணா யூனிவெர்சிடி, M.Sc அப்ளைட் மாத்ஸ் (Applied Mathematics ) சும்மா கிடைச்சிடலை. B.Sc ல காலேஜ் டாப்பர் நான். எனக்கு கேம் தியரில (Game Theory ) இன்னும் படிக்கணும். கம்ப்யூட்டர் பிசின்ஸ் மாடல்சுக்கு, அது வெச்சு, அல்காரிதம் எழுதணும், அந்த மாதிரி வேலைல சேரணும்னு நிறைய கனவோட இருக்கேன். அம்மா, எவ்ளோ தூரம் என்னை விடுவாங்கன்னு தெரியலை. இந்த டிகிரி படிச்சிட்டு , ஒரு வேலை தேடிக்கிட்டதும் கல்யாணம்னு சொல்லிருந்தாங்க அப்போ. இப்போ உடனே பண்ணிக்கோ, குழந்தை பிறந்தா, நான் பார்த்துக்கறேன், நீ படிச்சி முடிக்கிற வரைங்கறாங்க. நீங்களும், சிங்கப்பூர் போறதா சொல்றாங்க. அம்மாவே பார்த்துகிட்டாலும், பொறுப்பு என்னுதுதானே ? நீங்களும் இல்லைனா, நாந்தானே எல்லாம் பார்க்கணும் ? “ மடை திறந்து அவள் கவலைகளைக் கொட்டிவிட்டாள்.
எல்லாமே நியாயமான கேள்விகள். விக்ரம் இல்லை நான் இங்கேயே இருக்கேன் என்று சொல்லவும் முடியாது. அவன் அம்மா கரித்துக் கொட்டிவிடுவார். வேலையில் சேர ஒத்துக்கொண்டு, கையெழுத்துப் போட்டும் கொடுத்தாகிவிட்டது. குழந்தை உன் பொறுப்பு இல்லை என்றும் சொல்லமுடியாது. கனவை விட்டுவிடு என்றும் சொல்லமுடியாது. வழக்கம்போல் வாழ்க்கை ஆப்படித்துவிட்டது எனக்கு என்று நினைத்தான். முகமே வாடிவிட்டது. பார்த்துக்கொண்டிருந்த வேதாவிற்கோ மனது பிசைந்தது.
“நீங்க சொல்றது எல்லாமே நியாயம்தான். சூழ்நிலை எனக்கு எதிரா இருக்கு. எனக்குமே இந்த குழந்தை மாட்டர் நம்ப முடியலை. பேசாம ஒரு டாக்டரை கேப்போமா? டெஸ்ட் எடுத்து எல்லாம் சரியா இருந்தா, ரெண்டு வருஷம் கழிச்சும் நமக்கு குழந்தை பிறக்கணும் இல்லை ?”,விக்ரம் ஒரு நப்பாசையில் கேட்டான்.
“எந்த டாக்டரைக் கேக்கறது ? எனக்கு யாரையும் தெரியாதே ?” என்றாள் வேதா. எதாவது ஒரு முயற்சி எடுப்போமே என்றிருந்தது அவளுக்கும்.
“ அண்ணி குழந்தை பிறக்கறதுக்கு காட்டின கைனக் எனக்குத் தெரியும். அண்ணிக்கும் பிரண்ட்தான். சித்துவும் அவங்ககிட்டதான் பிறந்தான். எங்கிட்ட நம்பர் இருக்கு, இருங்க நான் போன் பண்ணி பார்க்கமுடியுமான்னு கேக்கறேன் என்று எழுந்து போனான்.
சற்று நேரத்தில் பரபரப்பாக திரும்பியவன். “வாங்க, இன்னும் அரை மணி நேரத்தில் வந்தால், அவங்க வீட்லயே நம்மகிட்ட பேசிட்டு, அப்பறம் க்ளினிக் போவாங்க. இங்க வெஸ்ட் தாம்பரத்துலதான் வீடு. பைக்ல என் கூட வருவீங்களா ?” என்று கேட்டான் விக்ரம்.
சம்மதமாய் தலை அசைத்தவள், பைக் அருகில் சென்றதும், துப்பட்டாவை, தலைக்கு முக்காடிட்டாள். யார் கண்ணிலாவது பட்டுத் தொலைத்தால் என்னாவது என்று. அவன் பார்க்கவும், லேசாய் புன்னகைத்து, “ இப்படி போனவங்களைப்பார்த்து கேலி செய்து சிரிச்சிருக்கேன். எனக்கே அந்த நிலைமை வரும்னு தெரியலை. அவங்க விட்ட சாபமா இருக்கும். “ என்றாள்.
புன்னகைத்தபடி ஹெல்மெட்டை மாட்டியவன், “வீட்டாளுங்க தவிர , எந்த பொண்ணும் என் பைக் ஏறினதில்லைங்க. நீங்களும் என் வீட்டாளாகணும்னு நெனச்சிதான் கூட்டிட்டு போறேன்.”, என்றான். கேட்ட வேதாவிற்கு வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தது. வேண்டும் என்றும் , வேண்டாம் என்றும் அலைபாய்ந்து கொண்டிருந்தது அவள் மனது.
அவள் கல்லூரிப் பையை அவர்களுக்கு இடையில் வைத்து வேதா, இருபுறமும் கால் போட்டு அமர்ந்தாள். “வெவரம்தான்.”, என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டான் விக்ரம்.
அடுத்த இருபது நிமிடங்களில், டாக்டர் கீதா வினோத் முன் அமர்ந்திருந்தனர். விக்ரம் அவன் சந்தேகத்தையும், ஜோசியர் சொன்ன கண்டிஷனயும் சொல்லியிருந்தான்.
“நீங்களா ஒரு முடிவெடுக்காம, டாக்டரைக் கேக்கலாம்னு வந்தது சந்தோஷம் விக்ரம். பொதுவாவே, முதல் குழந்தை தள்ளிப்போட வேண்டாம்னுதான் சொல்லுவோம். உங்க விஷயத்தில, வேதா படிக்கறதுனால ஒரு காரணம் இருக்கு. பட், நீ சொன்ன மாதிரி, டெஸ்ட் எடுத்து பார்த்தா, இப்ப உங்களுக்கு குழந்தை உண்டாகறத்துக்கு உண்டான தகுதி இருக்கான்னு சொல்லமுடியும். ஆனா, அதுவே அடுத்து ரெண்டு வருஷமும் இருக்கும்னு உறுதியா சொல்லமுடியாது. “
“ஏன் டாக்டர் ?”, மனதோரம் இருந்த ஒரு நம்பிக்கை ஒளியும் மங்குவது போலத் தெரிந்தது விக்ரமுக்கு.
“லைப்ஸ்டைல் சேஞ்ச், ஸ்ட்ரெஸ், உணவு, நெறைய விஷயங்கள், உன் ஸ்பெர்ம் க்வுண்ட் கம்மியாக்கலாம். வேதாக்கு இதுவே ஓவுலேஷன்ல ப்ரெச்சனை வரலாம். அதனால், இப்போ சரியா இருக்கு, எப்பவும் இருக்கும்னு சொல்லமுடியாது. இருக்கலாம்னு தோராயமாத்தான் சொல்லலாம்.
“இப்போ, அந்த ஜோசியர் சொன்ன ஏழு வருஷ மாட்டருக்கு வருவோம். சில கேஸ்ல, இன்ன ப்ரெச்சனைன்னு கண்டுபிடிச்சி சரி செய்து, குழந்தை பிறக்கும். சிலது IVF மூலம் குழந்தை பிறக்க உதவி பண்ணுவோம். ஆன சில பேருக்கு எந்த பிரச்சனையும் இருக்காது, ஆனா குழந்தை உதிக்காது. IVF கூட ஃபெயில் ஆகிருக்கு. ஏன்னு காரணம் சொல்ல முடியாது. சிலர், பல வருஷம் கழிச்சி நம்பிக்கையே போனதுக்கப்பறம், திடீர்ன்னு கர்ப்பம் தரிச்சிருப்பாங்க. அவ்ளோ நாள் ஏன் இல்லை, இப்போ ஏன் வந்ததுனு கேட்டா, சில நேரம் மெடிகல் சையன்ஸ்ல பதில் இல்லை. இதுக்கெல்லாம் அவர் சொன்ன கட்டம்தான் காரணம்ன்னு ப்ரூஃப் கிடையாது. மேபீ, இருக்கலாம்தான். “ என்று முடித்தார் கீதா.
“உங்க ஏமாற்றம் எனக்கு புரியுது. எங்கிட்ட அட்வைஸ் கேட்டு வந்ததால சொல்றேன். உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா, ரெண்டு பேரும் சேர்ந்து எல்லாத்தையும் சமாளிக்கலாம்னு ஒருத்தருக்கு ஒருத்தர் நம்பிக்கையிருந்தா, கல்யாணம் பண்ணிக்கோங்க. சிங்கப்பூர் ரொம்ப தூரம் இல்லை. போன், ஸ்கைப், வீடியோ கால்னு நிறைய இருக்கு. இது உங்க முடிவுதான். ஆனா ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவா இருக்கணும். சரியா ?”, என்று புன்னகைத்தார்.
“விக்ரம், அப்படி கல்யாணம் பண்ணா, கண்ட வெப்சைட்டைப் பார்த்து ட்ரை பண்ணாம, நல்ல ஆரோக்யமான தாம்பத்யத்திற்குன்னு இருக்க புக்ஸ் படிச்சி ட்ரை பண்ணுங்க. இதுவும் கௌன்ஸ்லிங் வரவங்ககிட்ட நான் சொல்றதுதான்.”, என்று கூறி புன்னகையுடன் விடைகொடுத்தார்.
மையமாக தலையசைத்தவன், “ம்க்கும், அடியேங்கறதுக்கு பொண்டாட்டி இல்லையாம், இதுல நான் புள்ளைக்கு பேர் தேடபோறேனா ?”, என்று நொந்த வாறே வெளியேறினான்.
வேதா, குனிந்த தலை நிமிராமல் வேக நடையில் அவனுக்கு முன் வாசலை அடைந்திருந்தாள். ‘சே பாவம், அவளுக்குதான் தர்ம சங்கடமா இருக்கும். இந்த டாக்டர் வாய வெச்சிட்டு சும்மா இருந்திருக்கலாம்’, என்று மனதிற்குள் திட்டினான். அதைக் கண்டுகொண்டதாய் காட்டிக்கொள்ளாமல்,
“ வேதா, கல்யாணம் பண்ணிட்டு, குழந்தைய தள்ளிப் போடுவோமா, யாருக்கும் தெரியாம ?அப்பறம் பார்த்துக்குவோம். “, ஒரு வேகத்தில் கேட்டுவிட்டான்.
இப்போது, வேதா முகத்தில் கவலை அப்பட்டமாகவே தெரிந்தது. “ என் மாமா பொண்ணுக்கு மூணு வருஷமா குழந்தை இல்லைன்னு என்னல்லாம் பேசினாங்க, எத்தனை கோவில், விரதம். வெறுத்துபோய், அவங்க வீட்டுக்காரர் பெங்களூருக்கு வேலை மாத்திட்டு அவளை கூட்டிட்டு போய்ட்டார். அப்பறம் ஒரு ஆறு மாசம் கழிச்சு குழந்தை உண்டானாங்க. என்னால அவ்ளோ ப்ரெஷர் தாங்க முடியாது. எங்கம்மாவே போதும் பிடுங்கி தின்னுடுவாங்க. நம்ம தள்ளி போடாம குழந்தை வரலைன்னா, தைரியமா அவங்களை எதிர்ப்பேன். அதுவே நாமா தள்ளிபோட்டா எனக்கு பொய் சொல்ல வராது. தினமும் டார்சர் பண்ணுவாங்க. நீங்களும் இருக்கமாட்டீங்க…. “ குரல் தேய்ந்துகொண்டே போனது.
இப்போது, முற்றிலுமாய் நொந்துவிட்டான். இதயம் ஒரு நொடி நின்று துடித்தது. திறந்திருந்த கடைசீ ஜன்னலும் ஓங்கி அறைந்து மூடியது போலிருந்தது. அவளுக்கு பிடிக்காமல்தான் சாக்கு சொல்கிறாள் என்றும் நினைக்கமுடியவில்லை. அப்படியென்றால் இங்கே வந்திருக்கவேண்டியதே இல்லை. அவள் முகமும் கசங்கியிருந்தது. பயமும் கலவரமுமாகத்தான் இருந்தாள்.
“என்னதான் செய்யறது அப்போ ? வேண்டாம்னு சொல்லப்போறியா ?” தன்னையறியாமல் ஒருமை வந்திருந்தது விக்ரமிடம். ஏக்கம், ஏமாற்றம், இயலாமை என்று உணர்வுகளின் தாக்கத்தில் சிக்கியிருந்தான். மூளை மழுங்கியது போலிருந்தது. அவளின் பதிலை கேட்டக்கூட முடியாதது போல, நெஞ்சும், காதும் அடைத்தது.
என்னவோ சொல்கிறாள், அவனுக்குத்தான் கிரகிக்க முடியவில்லை.