கள்வன் – 18
“இனியா வரலையா டா?” வீட்டுக்கு வந்தவளை வரவேற்பதற்கு முன்பாகவே வராதவளின் நலம் விசாரித்தார் சிவகாமி.
“வரல அத்தை.” சுருக்கமாய் பதில் கூறிவிட்டு உள்ளே நுழைந்தாள் யுக்தா.
“அது என்ன தினமும் நான் கிளம்பிய பின்னே வரீங்க… என்கூடவே வந்து இருக்கலாம்…” என்று முன்தினம் போலவே குறைபட்டுக் கொண்டே அவளை வரவேற்று கூடத்தில் அமரவைத்த இன்பன், அவள் அருகிலேயே உட்கார்ந்துக் கொண்டான்.
“இன்னும் ரெண்டு மாசத்துல உங்க கூட தானே தினமும் வரப்போறேன்.” சற்று இளகிய குரலில் சிணுங்கினாள் மங்கை.
“நீ கூட தேறிட்ட பாரேன்… எங்க இனியாவை காணும்?”
“நேற்று தான் அவ இங்க வருவதை பற்றி அப்படிப்படினு சொல்லிட்டு இன்னைக்கு ஏன் வரலன்னு கேக்குறீங்க?”
“நான் எப்போ இனியா இங்க வருவதை பற்றி குறைச்சொன்னேன்… இங்கே வேலை செய்ய வேணாம்னு தான் சொன்னேன். ஆனால் இப்போதான் நம்ம நலம்விரும்பி ஆகிட்டாளே அதான் கேட்டேன்…”
“நலம்விரும்பியா? நடக்கட்டும் நடக்கட்டும்…” என்று கேலி பேசிய போது தான் கவனித்தாள் இதயனும் அங்கு சேரில் அமர்ந்து வாசலையே பார்த்துக் கொண்டிருப்பதை… அவள் பார்வை செல்லும் திசை மற்றும் எழப்போகும் கேள்வி அறிந்து இன்பனே துவங்கினான், “எல்லாம் இனியாவின் மாயம். காலையில் உன் பிரென்ட் போட்ட போடுல டான்னு கிளம்பி இங்க உட்கார வைக்க சொல்லிட்டான்… இனியாவைத் தான் தேடுறான்…”
“என்ன புரியல?”
“நறுக்குன்னு ஒரு நாலு நல்ல வார்த்தை பேசுனாங்க…” என்றவன் நிறுத்தி யுக்தா புறம் குனிந்து மெல்லிய குரலில், “அண்ணன் கிளீன் போல்ட்.”
“என்ன?” கும்மிருட்டில் திடீரென்று தென்பட்ட உருவம் போன்றதொரு அதிர்ச்சி யுக்தாவிற்கு. ஏற்கனவே இனியா வழியறியாமல் சென்று கொண்டிருக்க இது என்ன புதிதாக…
“ஷாக்கை குறை ஷாக்கை குறை… நம்ம இன்னும் எவ்வளவோ பார்க்க வேண்டியதிருக்கு இதற்கே இப்படியா?” கிசுகிசுப்பாய் இன்பன் குரல் காதில் ஒலிக்க இதயனை இப்போது உற்று கவனித்தாள்.
முன்னர் பார்த்தபோது இருந்த சஞ்சலங்கள் மறைந்து முகத்தில் ஒரு தெளிவு தெரிய, ஒரு வித ஆர்வத்தோடும், தவிப்போடும் அவன் விழிகள் வாயிலையே நோக்கிக் கொண்டிருந்தது.
“எப்படி? எனக்கு ஒன்னுமே புரியல…” என்று குழப்பம் மறையாது யுக்தா கேட்க, அவளை எழுப்பி வெளியே மாடிப்படிக்கு அழைத்துச் சென்றவன் அங்கேயே அமர்ந்து காலையில் நடந்தவற்றை தெரியப்படுத்தினான். தொடர்ந்து, “இனியா சொல்லிட்டு போனதிற்கு பின் அவன் அமைதியாக தான் இருந்தான்… இன்னைக்கு முழுதும் யோசித்து இருப்பான் போலிருக்கு நான் மாலை வந்ததுமே எப்போதும் போல ரிலாக்ஸ் ஆனவுடன் அறை வாயிலையே பார்த்துட்டு இருந்தான். என்னடா என்னைக்கும் இல்லாமல் ஏதோ ஒரு ஆர்வத்தோடு ஹாலையே வெறிச்சிட்டு இருக்கானே இங்க வரணுமானு கேட்டேன்… முகத்தை பார்க்கணுமே நான் கேட்டதும் அவ்வளவு பிரகாசம். துரை உடனே இங்கே வரணும்னு தலையை ஆட்டி, கண்ணை சிமிட்டி அப்படி இப்படின்னு இங்க என்னை தூக்கிட்டு வரசொல்லி உட்கார்ந்துகிட்டான். இவ்வளவு நாள் நாங்க எங்க கூப்பிட்டாலும் முறுக்கிக்கிட்டு இருப்பவன் இன்று தானா ஆவலோடு வாசலை பார்த்துட்டு உட்கார்ந்திருக்கான்.
எல்லாம் சொல்ல வேண்டியவர்கள் சொல்லவும் தான் துரை அடுத்த ஸ்டெப் எடுக்குறாரு…” என்று இன்பன் சொல்லி முடிக்க,
யுக்தாவிற்கு ஒருபுறம் தவிப்பும், மறுபுறம் மகிழ்ச்சியுமாய் கலந்துகட்டி குழப்ப, இனியாவின் எதிர்காலம் எண்ணி கவலை பிறந்தது. இதயன் நன்றாக இருந்திருந்தாலோ அல்லது வேறொருவர் மீது இனியா விருப்பப்பட்டிருந்தாலோ அதை யுக்தா பெரிதாய் எடுத்திருக்க மாட்டாள். இதயனின் உடல்நிலையை கருத்தில் எடுக்கும் போது இந்த விருப்பம் அவ்வளவு உவப்பாய், உயிர்ப்பாய் தெரியவில்லை. இந்த உறவு எந்த அளவுக்கு நடைமுறையில் சாத்தியம், எந்தளவுக்கு வெல்லும் என்றும் புரியவில்லை. இல்லையா இவர்கள் நினைப்பது போல் அல்லாமல் இருவருமே வேறொரு மனநிலையில் பழகலாம் என்று கூட சில நேரம் தோன்றியது. அதை கேட்கவும் செய்தாள்.
“இதை எப்படி எடுத்துக்குறதுனே எனக்கு புரியல. இனியாவுக்கு அத்தான் மேல் ஒரு சாஃப்ட் கார்னர் இருக்குனு தெரியும் பட்… அத்தானுக்கும் அவளை பிடிச்சிருக்குமோ? இல்லை ரெண்டு பேரும் நட்புணர்வோடு இருக்குறது நமக்கு தான் வேற மாதிரி தெரியுதா எனக்கு எதுவுமே புரியல…”
“ம்ம்… எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு யுக்தா. இனியாவோட நடவடிக்கை, இதயன் மேல காட்டுற அக்கறை எல்லாம் அதிகப்படியா தெரிஞ்சாலும், அது ஒருவித பரிதாபத்தில் வரக்கூடியதா கூட இருக்கலாம். இதயனுக்கு அந்த விபத்திற்கு பிறகு எங்களை தாண்டி கிடைக்கிற பாசம் இனியாவுடையது. அதனால் அவனும் இனியா மேல் ஒருவித பிடிப்புடன் இருக்கலாம். அதை மீறி எதுவும் இருக்கா இல்லையானு அவங்க தான் சொல்லணும்…”
இனியாவோ, இதயனோ பேசாமல் இதற்கு மேல் தங்களால் எந்த முடிவிற்கும் வரமுடியாது என்ற நிதர்சனம் புரிந்துவிட இந்த பேச்சை தற்காலிகமாக நிறுத்தி வைத்தாலும், மனதின் ஓரத்தில் இனியாவின் வாழ்க்கை பற்றிய நெருடல் இருந்தது யுக்தாவிற்கு.
“காலம் தான் பதில்… அதை விடுங்கள் நான் இங்கு வந்தது ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேச…”
என்ன என்பது போல் அவன் பார்க்க, தயங்கியபடி, “நம்ம வீட்டுக்கு பெயிண்ட் செய்ய போறீங்களாமே… யாரிடம் கான்டராக்ட் விடப்போறீங்களோ அவர்களிடம் அட்வான்ஸ் கொடுத்துடலாம்.” என்று ஒரு வழியாய் சொல்லி முடித்தாள். பொருளாய் வாங்கிக் கொடுப்பதை விட பணம் தருகிறேன் என்று சொல்வது சங்கடத்தை கொடுத்தது. பின்னே எதற்கெடுத்தாலும் நிச்சயம் தான் ஆகியிருக்கு திருமணம் முடியவில்லை என்று சொல்பவன் ஆயிற்றே…
அவனோ விளங்கா பார்வையுடன், “புரியல?”
“பணம் கொடுத்துடலாம்னு சொன்னேன்.”
“அதை நான் பார்த்துக்கிறேன்.” என்று அவன் அதை முடிக்க,
“இல்லை நான் தரேன்.” என்று வேகமாய் குறுக்கிட்டாள் யுக்தா.
“ஏன்? என்னால முடியாதுனு நினைக்கிறீயா?”
“அப்படி இல்லை… நான் முதலிலேயே உங்களுக்கு எல்லா விதத்திலும் துணையாய் இருப்பேன்னு சொல்லி இருக்கேன். நீங்க அத்தானோட செலவை பாருங்க நான் வீட்டுக்கு செய்ய வேண்டியதை செய்றேன். என் சம்பளம் எல்லாம் செலவு பண்ணாம அப்படியே தான் இருக்கு…”
“கல்யாணம் முடிஞ்சதும் எது வேண்டுமென்றாலும் செய் இப்போ வேணாம்.” என்று அவன் சிலநாட்களாக எது கேட்டாலும் பாடும் அதே சங்கதியை பாடி மறுக்க,
“எதற்கெடுத்தாலும் என்ன இப்படி சொல்றீங்க? என்ன கல்யாணத்திற்கு முன்னரே என்னை கழட்டிவிடப் போறீங்களா?” என்று யுக்தா பதிலுக்கு சீற, வார்த்தை யுத்தம் ஒன்று துவங்கியது.
அவளின் சீற்றம் இப்போது அவனையும் ஒட்டிக்கொண்டது, “என்னை பார்த்தால் விட்டுட்டு போறவன் மாதிரி இருக்கா? பல்லெல்லாம் பேத்துருவேன் யுக்தா…”
“அதுக்கு தான் உங்களை காதலிச்சேன் பாருங்க… எல்லாத்தையும் இனியாவே செய்கிறாளே நம்ம வீட்டுக்கு என்று நாம் ஏதாவது செய்ய முன்வந்தால் இப்படி பேசுறீங்க…”
அவள் பேச்சுக்களால் உண்டான கோபம் அவன் மூளையை மழுங்கடிக்க, “அப்போ அதெல்லாம் நீ செய்யல அப்படித்தானே?” என்று இடக்காய் அவளை மடக்கினான்.
படியிலிருந்து எழுந்தவள் பல்லை கடித்து, “ஆமாம் செய்யல… எனக்கு தோணல… செய்யல. இப்போ செய்யணும்னு தோணுது என்னை செய்ய விடுங்க…”
“இனியா செஞ்சான்னு போட்டிக்கு ஒன்னும் நீ செய்ய வேண்டாம்.” தவறான திசையில் சரியாக யோசித்தது இன்பனின் மூளை.
கோபம் என்ற பாரம் தலையில் ஏறிக்கொண்டால் சாத்விகமும் தாமசமாகிவிடும். தான் சொன்னதை ஏற்க மறுக்கும்போது அல்லது தான் சொன்னதுதான் சரியென்று நிரூபிக்க முயலும்போது ஏற்படும் சினம் எப்படியும் வார்த்தைகளை கோர்த்து எதிராளியை தாக்கும்படி செய்துவிடும்.
“புதுசு புதுசா அர்த்தம் கண்டுபிடிக்காதீங்க…”
“நான் ஒன்னும் அர்த்தம் கண்டுபிடிக்கல… இருக்குறத தான் சொல்றேன்.” என்றவனும் எழுந்து கொள்ள, யுக்தா விடுவிடுவென உள்ளே சென்று பையை எடுத்துக்கொண்டு சிவகாமியுடன் சொல்லிக்கொண்டு வெளியேறிவிட்டாள். அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை, சொல்லிவிட்டும் செல்லவில்லை. அவ்வளவு கோபம். நல்லது செய்ய நினைத்து கெட்ட பெயர் எதற்கு வாங்க வேண்டும் என்ற எண்ணம் அவளை சரியே ஊக்கியது. அவனும் செல்லும் அவளையே வெறித்தான். தன்னை உதாசீனம் செய்துவிட்டு செல்பவள் மேல் இன்னுமே கோபம் நிரம்பியிருக்க, ஏன் காரணமின்றி திடீரென்று அப்படியொரு வேகமும், வறட்டு கோபமும் வந்தது என்று யோசிக்கும் நிலையில் இல்லை அவன்.
காதலுக்கு பின்னான முதல் ஊடல்…
◆◆◆
மாலை நேர சூரியன் தன் பணிகளை முடித்துக்கொண்டு மெல்ல மறையத் துவங்கி, மதியின் ஒளி பரவும் நேரம் மொட்டைமாடியில் நின்று அதை ரசித்துக் கொண்டே தன் மனப் பிணக்குகளை ஆராய்ந்துக் கொண்டிருந்தாள் இனியா. மனம் ஒரு நிலையில் இல்லாமல் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஓரிரு வாரமாகவே ஒரே விஷயத்தில் உழன்று கொண்டிருந்த மனது இடைவேளை எடுத்து அதற்கான காரணத்தை தேடி அலைந்தது.
உறவுச் சங்கலிக்குள் மாட்டிக்கொள்ள விருப்பமினினும் நாம் வாழும் சமுதாயத்தில் எல்லாருக்கும் உறவொன்றை ஏற்படுத்தி தான் இதுவரை பழகி வருகிறோம். அப்படிப்பட்ட சூழலில் தன் பெற்றோருக்காவது அந்த உறவுக்கான பெயரை அவள் வரையறுத்து தான் ஆகவேண்டும். நட்பு என்று அவளுக்கு அவளே போலி பூசி அனைத்தையும் செய்தாலும் அந்தக் காரணம் யுக்தாவின் கேள்வியில் ஆட்டம் கண்டது. நட்பு உண்மையாக இருப்பின் யுக்தாவின் கேள்வியில் மனம் சலனப்பட்டிருக்க கூடாதே!? என்று பல திக்குகளுக்கு மனம் செல்ல, இந்த குழப்பத்தாலும் இதயனுக்கு யோசிக்க நேரம் கொடுப்போம் என்ற நோக்கிலும் தான் அவள் இன்று அங்கு செல்லாமல் நேரே வீடு வந்துவிட்டாள். ஆனாலும் குழப்பம் தீர்ந்த பாடில்லை.
அவளின் இந்த தனிமையை, குழப்பத்தை தடுப்பதற்கே அங்கு வந்து சேர்ந்தான் இனியன், “என்ன இன்னைக்கு அங்க போகல?”
அந்த அமைதியில் அவன் குரல் சட்டென்று ஒலிக்க திகைத்து பின் நிதானித்து திரும்பாமலேயே, “எங்க?” என்று கேட்டாள்.
அவள் அருகே வந்த அவனும், “உன் பிராஜக்ட்க்கு…”
“இன்னைக்கு வேலை குறைவா இருந்தது ரெஸ்ட் எடுக்கலாம்னு சீக்கிரம் வந்துட்டேன்.” என்றாள் எங்கோ கண்பதித்து.
“காலையிலேயே வேலை இருக்குனு போனியே இப்போ சீக்கிரம் வந்துட்டியேன்னு கேட்டேன்…” என்றான் அவனும் பேச்சை வளர்க்கும் விதத்தில்.
ஆனால் அவனின் கேள்வியோ அவளின் குற்றவுணர்ச்சியை தூண்டியது, பெற்றோருக்கு தெரியாமல் அப்படியென்ன இதயனுக்கு உதவ மனம் வேண்டுகிறது? இதுவரை இதுபோல் நடந்தது இல்லையே… ஆயினும் கீதா அன்று ஒருநாள் இதயன் பற்றி கூறியதை கேட்டு தானே மறைக்க முன்வந்தது. இப்படிப்பட்ட உணர்வுகள் அவளை ஒருவழியாக்க, இனியனின் அடுத்தடுத்த கேள்விகளில் கடுப்புற்று, “நீ இப்போதெல்லாம் நிறைய கேள்வி கேக்குற இனியன். வாயைக் குறை…” என்ற அதே கணம் மாடிக்கட்டையில் வைத்திருந்த அவள் அலைபேசி அதிர்ந்தது.
எட்டிப்பார்த்த இனியன் யுக்தாவின் பெயர் மிளிர்வதை பார்த்து, “உன் அல்லக்கைக்கு தான் நிச்சயம் ஆயிடுச்சே அவர் கூட கடல போடாம உனக்கு போன் வருது…”
அவனின் கேலியில் இறுக்கத்தை விடுத்து, “டேய்… யுக்தாகிட்ட சொன்னேன் வை உன்னை தொலைச்சிடுவா…”
“சொல்லு சொல்லு… அந்தப் பாசப் பயிரை எப்படி சரிகட்டணும்னு எனக்குத் தெரியும்.” என்று அலட்டலின்றி மொழிந்தவன் அங்கிருந்து நகர்ந்துவிட இனியாவும் அலைபேசியை உயிர்ப்பித்தாள்.
“சொல்லுடி…”
“என்னத்த சொல்ல? நீ சொன்னேன் தாண்டி பெயிண்ட் பண்ண அவருக்கு பணம் கொடுக்குறேனு போனேன்… ரொம்ப ஓவரா பேசுறாரு…” அவனிடம் சண்டை போட்டுவிட்டு வந்த கடுப்பில் இனியாவிடம் மனக்குமுறலை கொட்ட,
“அதுக்கு நான் என்னடி செய்ய… உங்க ரெண்டு பேர் சண்டையை நீங்களே பாத்துக்கோங்க… நான் ஒரு முக்கியமான யோசனையில் இருக்கேன்…” என்று இணைப்பை துண்டித்தாள் இனியா.
அந்தப் பக்கம் யுக்தா இன்னும் கடுப்பாகி அலைபேசியை சைலென்டில் போட்டுவிட்டு தன் வேலையை கவனிக்க சென்றுவிட்டாள்.
இங்கோ இனியாவின் அலைபேசி மீண்டும் அலறியது. யுக்தாவாகத் தான் இருக்கும் என்றெண்ணி யாரென்று பார்க்காது காதில் வைத்தவள், “என்னை தொந்தரவு பண்ணாத என்று தானே சொன்னேன். சும்மா திரும்ப திரும்ப கூப்பிடாத…” என்றுவிட்டு வைக்கப்போனவள் ஆண் குரல் கேட்டு நிதானத்திற்கு வந்தாள்.
“ஹலோ யாரு?”
“நான் அஜய் பேசுறேன்…”
“எந்த அஜய்?” என்று கேட்டதும் மறுபுறம் சிறு அமைதி.
“அஜய்ரத்னம். ஏ.ஆர் ஹாஸ்பிடல்…” என்றதும் நாக்கை கடித்துக்கொண்டவள், “சாரி…. சாரி… சாரி சார்… நான் உங்களை எதிர்பார்க்கல…”
“இட்ஸ் ஓகே இனியா. எப்படி இருக்க?” பெருந்தன்மையாய் அவன் பேச,
“நல்லாயிருக்கேன் டாக்டர்… நீங்க?”
“நானும் தான்… உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் அதான் கால் பண்ணேன்…”
“சொல்லுங்க சார்…”
“இந்த வார இறுதியில் போதை ஒழிப்பு தினம் வருது… அதன் பொருட்டு நாளை மறுதினம் மாலை ஒரு சின்ன மீட் கிராண்ட் பிளாசாவில் நடக்குது… நீ கண்டிப்பா வரணும்.” என்று அவன் அழைக்க அவளை ஏன் கூப்பிடுகிறான், அவள் அலைபேசி எண் எப்படி கிடைத்தது என்றெல்லாம் அவள் யோசிக்கவில்லை மாறாக அவளுக்கு சாதகமாக ஒரு துரும்பு கிடைக்கவும் உடனே போக சம்மதித்து விட்டாள்.
“வில் வெய்ட் ஃபார் யூ… டேக் கேர்…” என்று அவன் வைத்துவிட இனியாவின் முகம் சற்று தெளிவடைந்தது.
*^*^*