Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

29. ஷேஹா ஸகி - விழி கொல்லும் விஷமா நீ

விழி கொல்லும் விஷமா நீ EPI 01

விழி கொல்லும் விஷமா நீ..

EPISODE 01

 



Advertisement

 

“ச்சீ… உன்னை போய் காதலிச்சேனே! என்னை ஏமாத்திட்டல்ல, இன்னொருத்தன காதலிச்சுக்கிட்டே என்னை… உன்ன பார்த்தாலே அருவருப்பா இருக்கு. துரோகி!”

 

Advertisement

என்ற அவனின் வார்த்தைகளில் ஆத்திரமும் வலியும் அடங்கியிருந்தன.

Advertisement

 

ஏதோ நிழல் போல் அத்தனை விம்பங்களும் வந்துச் செல்ல, அந்த ஆழ்ந்த உறக்கத்திலும் அந்த வார்த்தைகளால் உண்டான வேதனையில் கண்ணீர் வடித்தாள் அவள்.

 

Advertisement

“நீஹா… எழுந்துருடீ! நீஹா…” என்ற குரல் தூரத்தே ஒலிக்க, பட்டென்று விழிகளைத் திறந்து இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சை விட்டாள் நிஹாரிகா.

 

அழகுக்கு ஒன்றும் குறையில்லை. நம் நாட்டிற்கே உரித்தான மாநிறமும் கலையான முகமும் இப்போது பதற்றமாக இருப்பதாலோ என்னவோ சற்று வாடிப் போயிருந்தது.

 

நெற்றியில் பூத்த வியர்வைத் துளிகளை துடைத்தவாறு எழுந்தமர்ந்தவள் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த தோழியைப் பார்த்து வராத புன்னகையை வரவழைத்து புன்னகைத்தாள்.

 

ஆனால், அவளெதிரே அமர்ந்திருந்தவள் அந்த புன்னகைக்கு பின்னாலிருக்கும் வலியை அறியாதவளா என்ன!

 

தன் தோழியின் கரத்தில் தன் கரத்தைப் பதித்து அழுத்தம் கொடுத்த ஆதிரா, ‘நான் இருக்கிறேன்’ என்பது போல விழிகளை மூடித் திறந்தாள்.

 

“மேட்ச் ஸ்டார்ட் ஆகிருச்சு” என்று அவள் சொன்னதுமே எங்கிருந்து வந்ததோ அத்தனை உற்சாகம், கட்டிலிலிருந்து தாவி குதித்த நிஹாரிகா ஓடிச் சென்று டீவியை உயிர்ப்பித்தாள்.

 

அவளுடைய விழிகள் அந்த திரை வழியே மைதானத்தில் அலைந்து திரியும் அந்த ஒருவனை மட்டுமே தேடி, பின் கிடைத்து விட்ட சந்தோஷத்தில் மின்னின.

 

ஆனால், தனக்காக ஒருத்தி உருகுகிறாள் என்பதைக் கூட அறியாது தனக்கான போதையில் மூழ்கியிருந்தான் அவன்.

 

“இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும்  இடையில விறுவிறுப்பா நடக்குற கிரிக்கெட் மேட்ச்ல இந்தியா டோஸ் வின் பண்ணியிருக்காங்க. ஆனா கேப்டன் பாலிங் சூஸ் பண்ணது அவங்களுக்கு சாதகமா இருக்குமா இல்லன்னா அவங்களுக்கே ஆப்பா அமைஞ்சிருமா?

 

இப்போதான் மேட்ச் சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு. ஓ காட் சிக்ஸ்! இந்தியா போட்ட பாலுக்கு ஆஸ்திரேலியா டீம் அசத்தலான ஷாட்!”

 

என்ற மூச்சு விடாமல் ஒலித்த அந்த கமென்ட்டரி மைதானத்தையே நிரப்ப, ஒரு கூட்டம் கரகோஷம் எழுப்பினாலும் இன்னொரு கூட்டமோ தலையில் துண்டை போட்டு அமர்ந்துவிட்டனர்.

 

போகப் போக விளையாட்டு தீவிரமாகி மக்களின் ஆர்வத்தோடு பிபியையும் சற்று எகிற வைக்க, இந்திய அணிக்கான துடுப்பாட்ட நேரமும் வந்தது.

 

ஒரு சிலபேர் தமது விளையாட்டை ஆடி முடித்ததும் இறுதி பத்து ஓவர்கள் மிஞ்சியிருக்க அணியை காப்பாற்றவென்று மைதானத்திற்குள் இறங்கினான் அந்த ஒருவன்.

 

“யாதவ்… யாதவ்…” என்ற அந்தப் பெயர் மக்களின் குரலாக ஒலித்து அவனை புல்லரிக்க வைக்க, ஹெல்மெட்டை சரிசெய்துக்கொண்டு க்ரீஸுக்குள் வந்து நின்றான் யாதவ் அர்ஜூனா.

 

தனக்கு நேரெதிரே ஓட்டத்திற்காக நின்றிருந்த தன் அணியை சேர்ந்தவனைப் பார்த்து பெருவிரலை உயர்த்திக் காட்டியவன் பாலர் பந்தைப் போட தயாரானதும் துடுப்பை தரையில் அடித்து ஆட்டத்திற்கு தயாரானான்.

 

முதல் பந்தே நான்கைத் தொட, அடுத்தடுத்து இரு கிரிக்கெட் வீரர்களும் மாறி மாறி ஆடிய ஆட்டத்தில் மைதானம் முழுவதும் கரகோஷம் எழுந்தது.

 

சரியாக ஒரே பந்தில் ஐந்து புள்ளிகளை அடைய வேண்டிய நிலையில் துடுப்பை தயார்நிலையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தான் யாதவ்.

 

சுற்றியிருந்த ரசிகர்களின் முகத்தில் பதற்றம் அப்பட்டமாகத் தெரிய, சீட்டின் நுனியில் அமர்ந்திருந்த அத்தனை பேர் மத்தியிலும் ஒரு பலத்த அமைதி நிலவியது.

 

அவுஸ்திரேலிய அணியை சேர்ந்த பந்தை எறிபவர் வேகமாக வந்து தனக்கே உரித்தான பாணியில் பந்தை அவனை நோக்கி எறிய, இதழை நாவால் ஈரமாக்கிக்கொண்டவன் சரியான சமயமாக அந்த பந்தை துடுப்பால் முழு வேகத்தோடு அடித்தான்.

 

பந்தும் உயரே பறக்க, அதை பார்த்துக்கொண்டே ஓடிய யாதவ்வின் கால்களோ சட்டென நிற்க, தலையில் கை வைத்துவிட்டனர் சுற்றியிருந்த ரசிகர்கள்.

 

ஹெலிகாப்டர் போல் பறந்த அந்த பந்து எதிரணியின் கைக்குள் சிக்கியிருக்க, அதைத் தூக்கிப் போட்டு கொண்டாட ஆரம்பித்தனர் அந்த அணியை சார்ந்தவர்கள்.

 

“அஞ்சே பாய்ன்ண்ட்ஸ்ல அவுஸ்திரேலிய வின்னிங் கப்ப தட்டிட்டு போயிட்டாங்க. இது இந்தியாவுக்கு பெரிய லாஸ்தான்”

 

என்ற கமெண்ட்டரி காதில் விழுந்ததுமே ஹெல்மெட்டை கழற்றி தரையில் அடித்த யாதவின் கோபம் கையிலிருந்த துடுப்பை தூக்கியெறியவும் தவறவில்லை.

 

“ஓ ஷீட்!” என்று அடங்காத ஆத்திரத்தில் காலை தரையில் உதைத்தவன் எதிரணி வீரர்களோடு கை குலுக்கக் கூட செல்லாது வீரர்களுக்கான தனிப்பட்ட அறையை நோக்கி வேகமாகச் சென்றான்.

 

அவனின் செய்கையை அங்கு சுற்றியிருந்த கேமராக்கள் வளைத்து வளைத்து படம்பிடித்துக்கொண்டன.

 

அடுத்தநாள் விளையாட்டுச் செய்திகளுக்கு தரமான சம்பவமாச்சே இது!

 

கோபமாக உள்ளே நுழைந்தவன் பாதுகாப்புக்காக அணிந்திருந்ததை தூக்கியெறிந்து விட்டு, அணிந்திருந்த இந்திய அணி ஜெர்சியையும் கழற்றியவாறு ஆளுயர கண்ணாடியின் முன் சென்று நின்றான்.

 

விளையாடியதில் அவனுடைய உடல் வியர்வையில் குளித்திருக்க, மூச்சு வாங்கியவாறு தன்னை கண்ணாடியில் பார்த்திருந்தவனுக்கு கோபம் எக்குத்தப்பாக எகிறியது.

 

விட்டால் அந்த கண்ணாடியும் அவனுடைய கோபத்தால் சில்லு சில்லாக தரையில் கிடந்திருக்கும்!

 

முன்கோபம் ஜாஸ்தி அவனுக்கு.

 

கை முஷ்டியை இறுக்கி கோபத்தை அடக்க முயற்சித்த யாதவ்வால் இந்த தோல்வியை மட்டும் ஏற்கவே முடியவில்லை.

 

வாழ்க்கையில் அனுபவித்த துரோகமும் வலியும் இந்த தோல்வியை சாதாரணமாகக் கடந்து போக அவனை விடவில்லை. மாறாக, அவனுக்குள் கோபத்தையும் ரணத்தையும் மேலும் மேலும் தூண்டிவிட்டது.

 

முழு கோபத்தோடு கண்ணாடியின் முன் நின்றிருந்தவனின் கவனத்தை திசை திருப்புவது போல், “தம்பி…” என்று பவ்வியமாக அழைத்தபடி வந்தார் ஜகன். அவனுடைய பீஏ.

 

கிரிக்கெட் மட்டுமில்லாமல் ஆட் மாடலிங் ஷூட்டிங்ஸ், சொந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் என நேரமே இல்லாமல் இருப்பவனின் நேரத்தை இத்தனை நாள் திட்டமிட்டவர் அவர்தான். அவனுடைய வலது இடது கை என்று கூட சொல்லலாம்.

 

“சொல்லுங்க..”  டவலால் வியர்வையைத் துடைத்தபடி சொன்னான் யாதவ்.

 

“அதான் தம்பி நான் முன்னாடியே சொல்லியிருந்தேனே, ரொம்ப நாளாவே என் பையன் அவன் கூடவே என்னை வந்து இருக்க சொல்லி கூப்பிட்டுட்டே இருக்கான். அதான் கொஞ்சநாள்ல கெளம்பலாம்னு இருக்கேன்” என்றார் அவர் திக்கித்திணறி.

 

அவனோ விழிகளை மட்டும் உயர்த்தி அவரை ஒரு பார்வைப் பார்க்க, நீண்ட நாட்களாக அவனோடு இருப்பவருக்கு அந்த பார்வைக்கான அர்த்தம் கூடவா புரியாது!

 

“அது தம்பி.. நீங்க யோசிக்காதீங்க. இந்த வேலைக்கு நல்ல ஒருத்தங்கள அசைன் பண்ணிட்டுதான் நான் விலகலாம்னு இருக்கேன். நீங்க வேணா இன்டர்வியூ பண்ணிக்கோங்க, உங்களுக்கு செடிஸ்ஃபைடுன்னா மட்டும்தான்”

 

என்று ஏதேதோ பேசி தான் சொல்ல வந்ததை சொல்லி முடித்தவர் அவனுடைய பதிலை ஆர்வமாகப் பார்க்க, வழக்கம் போல் அவனுடைய இறுகிய இதழ்களிலிருந்து எந்த பதிலும்  வரவில்லை.

 

இது ஜகனுக்கும் பழக்கப்பட்ட ஒன்றுதான். மீண்டும் ஜெர்சியை அணிந்துக்கொண்டு மைதானத்திற்குள் நுழைந்தான் யாதவ் அர்ஜூனா.

 

அவனுக்காகவே இத்தனை நேரம் காத்திருந்தது போல மீடியாகாரர்கள் அவனை நோக்கி ஓடி வர, கேமராக்களிலிருந்து வந்த வெளிச்சத்தில் கூசிய விழிகளை மூடித் திறந்தான் அவன்.

 

“மிஸ்டர் யாதவ், இந்த தோல்விய நீங்க எப்படி எடுத்துக்குறீங்க. உங்களாலதான் உங்க டீம் வெற்றிய தவற விட்டுட்டாங்கன்னு தெரியுதா?” என்ற நிருபரின் கேள்விக்கு அலட்சியமாக தோளைக் குலுக்கியவன், “விளையாட்டுன்னா வெற்றியும் தோல்வியும்தான். ஐ அக்செப்ட் போத். இந்த முறை கப் போனா என்ன, நெக்ஸ் டைம் வீ வில்” என்றான் அழுத்தமாக.

 

தோல்வியில் உண்டான கோபம் உள்ளுக்குள் உலைகளமாக கொதித்தாலும் கேமராவுக்கு முன்னால் போலி புன்னகையை சிந்த வேண்டிய நிலை அவனுக்கு.

 

அடுத்தடுத்த சில கேள்விகளுக்கு பதிலை சொல்லிவிட்டு வேகமாக நகரப் போனவனைத் தடுத்தது அந்த ஒரு கேள்வி.

 

“மிஸ்டர் யாதவ், நீங்களும் ஆக்ட்ரெஸ் மேக்னாவும் பிரிஞ்சிட்டதா சொல்றாங்க. அது உண்மையா பதில் சொல்லுங்க”

 

விளையாட்டு சம்பந்தப்பட்ட கேள்விகளைத் தாண்டி அந்த ஒரு நிருபர் அவனின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கேள்வி தொடுக்க, அவனுடைய முகமோ சட்டென இறுகியது.

 

ஆனால் அதுவும் சில கணங்கள்தான்.

 

உடனே முகபாவனை மாற்றி, “யெஸ், நாங்க பிரிஞ்சிட்டோம்” என்று மட்டும் சொன்னவன் அடுத்த கேள்விகளுக்கு இடம் கொடுக்காமல் தன் அணியினரோடு இணைந்துக்கொண்டான்.

 

ஆனால், லட்டு போல் கிடைத்த செய்தியை சாதாரணமாக விட்டுவிடுவார்களா என்ன!

 

அடுத்தநாள் பத்திரிகைகளிலும் சோஷியல் மீடியாவிலும் ஏகப்பட்ட கட்டுக்கதைகளோடு இந்த செய்தி காட்டுத் தீயாய் பரவியது.

 

“இந்த காலத்து லவ்னாலே இப்படிதான். அதுவும் இவங்க மாதிரி ஆளுங்கள சொல்லவே தேவையில்ல. அவங்க நம்மள மாதிரி நார்மல் பீபள் இல்ல மக்களே”

 

“அது அவங்களோட பர்சனல், நமக்கு ஜட்ஜ் பண்றதுக்கு எந்த உரிமையும் இல்ல”

 

“எனக்கு அப்போவே தெரியும். யாதவ் கிரிக்கெட் மாதிரியே காதலையும் விளையாட்டா எடுத்திருப்பாரு. அவர்மேலதான் தப்பு”

 

ஆளுக்காள் தத்தமது கருத்துக்களை சொல்ல அந்த யூடியூய் காணொளியை பார்த்துக்கொண்டிருந்த நிஹாரிகாவின் மனமோ உணர்ச்சிக் குவியலில் சிக்கித் தவித்தது.

 

ஒரு பக்கம் சிறு ஆனந்தத்தில் அவளிதழ்கள் புன்னகைத்தாலும் இன்னொரு பக்கம் ‘என்னை மறந்திருப்பானோ?’ என்ற சந்தேகம் ஏக்கமாக அவளுக்குள் உருவெடுத்தது.

 

சரியாக அந்ந ஒரு வாகனத்தின் ஹார்ன் சத்தம் செவியில் விழ, கடுப்பில் விழிகளை மூடித் திறந்தாள் நிஹாரிகா.

 

எழுந்து ஜன்னலுக்கருகே சென்றவள் வெளியே எட்டிப் பார்க்க, அவள் யூகித்தது சரியே!

 

அவளை எதிர்பார்த்தது காத்திருப்பது போல் சற்று தூரமாக தள்ளி நின்றிருந்தது அந்த அடர்நீல நிற கார்.

 

‘வழக்கமாக நடப்பதுதானே’ என்பது போல விழிகளை சலிப்பாக உருட்டியவள், தளர்ந்த நடையாக சென்று சோஃபாவில் தொப்பென்று அமர்ந்துக்கொண்டாள்.

 

அவளின் பார்வை சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தில் பதியவும் கதவைத் திறந்துக்கொண்டு ஆதிரா உள்ளே வரவும் நேரம் சரியாக இருந்தது.

 

“ஊஃப்ப்…” என்று பெருமூச்சோடு தொப்பென்று சோஃபாவில் விழுந்தவள், “ஒரே ப்ரெஷரா இருக்கு நீஹா, இந்த வேலையே சுத்தமா பிடிக்கல. மாடலிங்க்ல ஏதாவது பண்ணணும்னு தோனிக்கிட்டே இருக்கு. பட் வாய்ப்புதான் கிடைக்க மாட்டேங்குது” என்று விழிகளை மூடிக்கொண்டே சோர்வான குரலில் சொல்ல, அவளுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் மற்றவள்.

 

“எனக்கு ஏதாச்சும் வேலை கிடைச்சதா ஆதி, உன் கம்பனில பேசி பார்த்தீயா?”

 

விழிகளில் ஆர்வத்தோடு அவள் கேட்டதும் சிறு சங்கடத்தோடு தோழியைப் பார்த்தாள் ஆதிரா.

 

“அது.. அது வந்து நீஹா.. நீ வேலை பார்த்த கம்பனியோட மேனேஜர் உன் ப்ரொஃபைலுக்கு ப்ளாக் மார்க் கொடுத்திருக்கான். அதனால என் கம்பனில வேலை கொடுக்குறதுக்கு…”

 

அதற்குமேல் சொல்ல முடியாமல் நிறுத்தியவள், திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாக பையிலிருந்த அலைப்பேசியை வேகமாக எடுத்தாள்.

 

“ஓ ஷீட்! நான் மறந்தே போயிட்டேன் பாரு, உனக்கு ஒரு வேலை இருக்குடீ நீஹா. நான் நம்பர் கொடுக்குறேன். நீ அவர கான்டேக் பண்ணி பேசு. உன்ன பத்தி எல்லாமே சொல்லிட்டேன், சோ நோ ப்ராப்ளம்” என்று படபடவென பேசிக்கொண்டே போனவள் அந்த ஒரு அலைப்பேசி எண்ணை உடனே தோழிக்கு அனுப்பி வைத்தாள்.

 

“உன்னோட ஸ்டடீஸ்க்கான வர்க்கான்னு எனக்கு தெரியல, உனக்கு பிடிச்சிருந்தா ஜாய்ன் பண்ணிக்கோ! உனக்கு பிடிச்சா மட்டும்”

 

ஆதிராவின் இறுதி வார்த்தைகள் சற்று அழுத்தமாகவே வந்தன.

 

“ம்ம்…”

 

அந்த வார்த்தை கூட பெண்ணவளிடமிருந்து சுரத்தே இல்லாமல் வெளிவர, தோழியின் ஈர விழிகளை கூர்ந்துப் பார்த்தாள் மற்றவள்.

 

“இன்னும் எத்தனை நாளைக்கு நடந்ததையே நினைச்சுட்டு இருக்க போற நீஹா? யூ ஹேவ் டூ மூவ் ஆன். சொல்லப்போனா அவனுக்கு உன்ன நியாபகம் கூட இருக்காது. ஆனா நீதான்…”

 

அவளின் அழுகை கோபத்தை தூண்டவும் பொரிய ஆரம்பித்த ஆதிராவின் வார்த்தைகள் மீண்டும் அவளுடைய விழிகள் கலங்கியதைப் பார்த்ததும் சட்டென நின்றது.

 

“நெஜமாவே அவன் என்னை மறந்திருப்பான்ல ஆதி, நம்ம லைஃப்ல நடக்குற பேட் மெமரீஸ்ஸ மறக்கதான் கடவுள் மறதின்னு ஒன்ன கொடுத்ததா சொல்வாங்க. நானும் அவன் வாழ்க்கையோட ஒரு கசப்பான சம்பவம்தானே, அப்போ என்னையும்…”

 

அழுகையில் அவளுடைய தொண்டை அடைத்தது. தோழியில் கையிலிருந்த தண்ணீரை வாங்கி மடமடவென குடித்து அழுகையை அடக்கிக்கொண்டாள் பேதையவள்.

 

ஆதிராவுக்கு அவளின் வேதனை புரியாமல் இல்லை. ஆனால், எப்படி தேற்றுவதென்றுதான் தெரியவில்லை.

 

அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக தோழியை தேற்ற முயற்சிக்கிறாள். இருந்தும் பயனில்லை.

 

அவள் மனதின் காயத்திற்கான மருந்து அந்த கிரிக்கெட் வீரனிடத்தில் இருக்க, வேறு யார்தான் அவளை தேற்றுவார்?

**********

மறக்காம கதைய வாசிச்சு உங்க கருத்த சொல்லுங்க மக்களே… 🙌

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!