தப்பி ஓடியவனை பிடிப்பதற்கு பதிலாக….. அமைதியாக அமர்ந்திருந்த கண்ணனைக் கண்ட அதிகாரிகள் குழம்பி அவனிடமே பதிலை எதிர்பார்த்து நிற்க,
கண்ணனோ, “சார்.. எல்லாரும் சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. ஈவ்னிங் ஆறு மணிக்கு மேல ஒரு சின்ன மீட்டிங். “என்றுவிட்டு அவனும் ஓய்வெடுக்கச் செல்ல,
அங்கு இருப்பவர்களுக்கு தான்.. அதிரடிப்படை அமைதிப் படையான காரணம் புரியவில்லை.
………..
வெளியில் அனைவரிடமும் சிரித்து பேசிய முகம் தன் அறைக்கு வந்ததும்… ஏக்கத்தை பிரதிபலிக்க செய்வதறியாது மெத்தையில் விழுந்தவள் எண்ணத்தில் வழக்கம்போல் கண்ணனே. அத்தையின் கவனிப்பில் மனம் மாறி இருந்தாலும்.. முகம் பார்த்து பேசாத குற்றவுணர்வு தலை தூக்க, தாயின் கண்டிப்பு வார்த்தைகளும்…, தந்தையின் கண்ணில் தெரிந்த குற்ற பார்வையும், மாமாவின் வருத்தம் நிறைந்த தலை வருடலும் சொல்லாமல் சொல்லியது.. வார்த்தையில் அவள் எய்திய விஷ அம்பின் வீரியத்தை.
ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் காட்டும்… எதிர்ப்பு அவள் மனதில் சிறு நிம்மதியை கொடுத்தாலும்,
தனக்கானவனின் பிரிவு தான் ஆரதி என்னும் உயிரை அணு அணுவாய் சிதைக்க தொடங்கியிருந்தது. நினைவு தெரிந்த நாளிலிருந்து தனிமையை உணராதவள் இப்போது அதனுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
இத்தனை நாட்களாய் கண்ணுக்குத் தெரியாத எதிரியை நோக்கி ஓடியவன்.. இன்று தான் அவனது உலகம் இயங்க தொடங்கியது போல் உணர்ந்த கண்ணனின் நினைவலைகள் வீட்டிலிருந்து கிளம்பிய நிமிடங்கள் வர….
தாயின் மன நிலமையும், தாரமாக நினைப்பவளின் தவிப்பும் ஒன்று சேர்ந்து அவன் மனதை தாக்க ஆரம்பித்தது. அதேநேரம் ஆரதியின் வார்த்தைகள்… அவனின் தன்மானத்தை சீண்டி இருக்க தானாகவே சென்று பேச மனம் வரவில்லை. கைபேசியில் அவள் அனுப்பிய குறுந்தகவல்களை பார்த்தவனின் மனம் அவள் புறம் சாய வீம்பாக அதையும் அடக்கி வைத்தான்.
தனிமையில் இருப்பவனுக்கு அவளருகில் உறங்கிய நினைவு வர…… நெஞ்சமெல்லாம் தென்றலின் தீண்டல்.
இருவரும் இருவர் நினைவில் தவித்திருக்க… இருவரையும் ஒருசேர நினைத்திருந்தால் ரதிதேவி. ஆரதியின் வருகை சுதந்திரமாய் பறந்த பறவையை பிடித்து வைத்த கூண்டாக மாறி இருக்க… சுதந்திரமாய் பறக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்ய அவள் மூளை யோசிக்க ஆரம்பித்தது. அதன் யோசனையால் கண்ணனுக்கு அழைக்க,
அவள் அழைப்பை கண்டதும் தான் ரதிதேவியின் நினைவே கண்ணனுக்கு எழுந்தது. ‘இந்தப் பொண்ணு எதுக்கு இப்போ நமக்கு கால் பண்ணுது. கடைசியா ஊருக்கு கிளம்புறேன்னு சொல்லிச்சு. அத்தோடு நானும் மறந்துட்டேன்…’ என மனதில் யோசித்தவனின் கைகள் தானாய் அந்த அழைப்பை ஏற்க,
“ஹலோ சார்!!. எப்படி இருக்கீங்க. எப்போ வருவீங்க. உங்கள ரொம்ப மிஸ் பண்ற….. சாப்பிட்டீங்களா? என்ன சாப்பிட்டீங்க? ” அவனைப் பேச விடாது பேச,
” போதும்.. போதும். கேள்வி கேட்டு பதில் வர வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.”
“சாரி சார் உங்ககிட்ட பேசுன ஆர்வத்துல எதையோ உளறிட்ட…”
“பரவால்ல ரதிதேவி. சொல்லுங்க. என்ன விஷயம் ஊருக்குப் போயிட்டீங்களா?”
“சார் நான் இன்னும் ஊருக்கு போகல. அன்னைக்கு போறதா தான் இருந்துச்சு. ஆனா ஆன்ட்டி தான் இங்க ஒரு ரெண்டு வாரம் தங்கிட்டு போகச் சொன்னாங்க.”
“ஓஹோ.!! சாரி.! ரதிதேவி எனக்கு தெரியாது. மூணு நாளா நான் யார்கிட்டயும் பேசல.”
“தெரியும் சார் நானும் இங்க தான் இருக்க. ஆனால் ஆன்ட்டி தான் ரொம்ப வருத்தப்பட்டுட்டு இருக்காங்க தெரியுமா. நீங்களும் இல்ல.. அவங்க ரெண்டு பேரும் எங்கேயோ சொல்லாம கிளம்பி போய்ட்டாங்க. ஆன்ட்டி தான் நீங்க மூணு பேரும் இல்லாம அழுதுட்டே இருந்தாங்க. நீங்க சீக்கிரமா வாங்க சார்…” என்றவளை நிறுத்திய கண்ணன்,
“யாரு ரெண்டு பேரு சொல்லாம போனாங்க” அவசரமாக கேள்வி எழுப்ப,
“அதான் சார் உங்க தம்பியும், ஆரதியும். வீட்ல சாப்பிடவே இல்லை. ஆன்ட்டி சமைச்சு வச்சிட்டு வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க தெரியுமா. அவங்க இரண்டு பேரும் கிளம்பி போனது கூட ஆன்ட்டிக்கு தெரியாது. வாட்ச்மேன் அங்கிள் சொல்லி தான் தெரியும். ரெண்டு நாளா அவங்களும் ஒரு போன் கூட பண்ணல.” என மேலும் பேச ஆரம்பிக்க அழைப்பு துண்டிக்கப்பட்டது சட்டென.
முழுதாக அவளிடம் கேட்காமல் இப்பொழுது ஆரதி வீட்டில் இல்லை என்பதை மட்டும் மனதில் பதிய வைத்தவன்…, தன் தன்மானத்தையும் மறந்து அழைத்தான் தம்பிக்கு.
கண்ணனைப் பற்றி தான் சித்துவும் நினைத்துக் கொண்டிருந்தான். அண்ணனான தோழனை அடித்ததற்கு இன்னமும் வருந்திக் கொண்டிருக்கும் சித்துவிற்க்கு கண்ணனின் அழைப்பு … திடீரென வர திகிலாகவே இருந்தது. ஒரு நிமிடம் நடுங்கிய கைகளை கட்டுப்படுத்திக்கொண்டு அழைப்பை ஏற்றவன்…,
“சாரி ண்ணா..” உன் சாரி முக்கியமில்லை என்பதைப் போல் உச்சுக் கொட்டி அலட்சியப்படுத்தியவன்,
“ஆதி எங்க?”
கேட்ட சித்திவிற்கு தான் ஒரு நிமிடம் எதுவும் புரியவில்லை. பின் வெட்டியாய் இருக்கும் மூளை வேகமாக உயிர் பெற கள்ளச் சிரிப்புடன்,
“என் கூட தான் இருக்கா”
“யாரைக் கேட்டு அவளை வெளியே கூட்டிட்டு போன. ரெண்டு நாளாகியும் இன்னும் எதுக்குடா வீட்டுக்கு போகல. உடனே அவள கூட்டிட்டு வீட்டுக்கு மட்டும் நீ போகல…. அப்புறம் மனுஷனா இருக்க மாட்ட. “
“நீ மனுஷனா இருந்தா எனக்கு என்ன இல்லன்னா எனக்கு என்ன . ஆமா இப்ப நீ மனுஷனா இருக்கியா இல்லையா. நான் மனுஷன் கிட்ட தான் பேசுறனா…” சித்துவின் வார்த்தையில்… ரதியின் ஆழி மறைந்திருக்க,
“அவள வீட்டுக்கு கூட்டிட்டு போ’ன்னு சொன்ன.”
“முடியாது”
“அவ விஷயத்துல என்கிட்ட விளையாடாத சித்தேஷ். எனக்கும் ஆதிக்கும் நடுவுல நீ வராத. அப்புறம் நான் உனக்கு அண்ணனா இருக்க மாட்ட. “
“இதெல்லாம் சொல்ல நீ யாரு. அவ கிட்ட உனக்கு எந்த உரிமையும் இல்லை.”
“எனக்கு உரிமை இல்லை’னு சொல்ல நீ யாரு டா.”
“ஆஹான்!!!!! என் ஏஞ்சலை கல்யாணம் பண்ணிக்க போறவன்.அதுக்காக தான் வந்திருக்கோம்”
“சித்துதுதுதூதூதூதூதூதூதூதூதூதூதூ…………..”என்றவனின் கர்ஜனையில் பக்கத்து அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அதிகாரிகள் பதறியடித்து ஓடி வர…..,
அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல்… “ஹிஸ் மை கேர்ள். மை ஏஞ்சல் … மை எவ்ரிதிங்….மை லவ்…. மை ட்ரீம். என்னோட ரதி. எனக்கு மட்டும் ரதி.
அவ எனக்கு சொந்தமானவ…… எனக்கு மட்டும். இன்னொரு தடவை உன் வாயிலிருந்து இந்த வார்த்தை வந்துச்சு என் துப்பாக்கிக்கு உன் நாக்கு பலியாகிடும். புரிஞ்சுதா சித்துதுதுதூதூதூ…. ஹிஸ் மை கேர்ள்…மை கேர்ள் ஒன்லி … மை கேர்ள் ஒன்லி. யூ அண்டர்ஸ்டாண்ட் ஸ்டுப்பிட்… ஸ்டுப்பிட். “என்றவனின் கைகள் நடுங்க, பற்கள் ஒன்றுடன் ஒன்று… மோதிக் கொண்டு தாடை எழும்புகளை வெளிக்காட்ட… அங்கிருக்கும் அதிகாரிகளே அரண்டு விட்டனர்.
இதை துளியும் எதிர்பார்க்காத சித்து… படபடக்கும் இதயதம் கையோடு அறுந்து விழுவது போல் உணர்ந்தவன் நொடியும் தாமதிக்காமல்…, “அண்ணா நாங்க வீட்டில் இருக்கோம்.” என்ற சித்துவின் வார்த்தை கண்ணனின் காதில் விழாமல் ஏதேதோ உளற… அவன் செவியில் சென்றடையும் வரை மீண்டும் மீண்டும் கூறத் தொடங்கினான் சித்து.
சென்றடைந்த நொடி மெத்தையில் அதிர்வோடு அமர… கண்ணனின் உயிர் அவனிடமே வந்தது. தன்னுடைய ரதி தனக்கு மட்டுமே என்பது புரிந்தாலும் ஏனோ வார்த்தைக்கு கூட வேறாக விரும்பவில்லை கண்ணன். எப்பொழுதும் எந்த செயலையும் நிதானமாக செய்பவன் இந்த நொடி அவசரத்தின் உச்சாணியில் நின்றிருந்தான். அதில் இருந்து மீண்டு வரவே சில நொடிகள் தேவைப்பட்டது ரதியின் ஆழிக்கு . தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன்… மெல்ல அங்கிருக்கும் அதிகாரிகளிடம் திரும்பி, ” சாரி சார்… ஐ அம் ஆல் ரைட். தப்பா எடுத்துக்காதீங்க. தம்பி கூட சின்ன சண்டை. நீங்க போங்க சார்.”
என்று அனுப்பி வைக்க,
“அண்ணா சாரி…”
…….
“சாரி”
……
“டேய் !அதான் சாரி சொல்ற ல ரொம்ப பண்ணாத டா. இத்தனை நாளா பேசாம இருந்துட்டு… திடீர்னு கால் பண்ணி அவளை பத்தி கேக்குற. என் கிட்ட ஒரு வார்த்தை பேசுனியா. நான் உன்ன அடிச்ச. திருப்பி என்னை நீயும் அடிச்ச. அம்மா என்னை தான் அடிக்க வந்தாங்கன்னு உனக்கும் தெரியும். தெரிஞ்சுகிட்டு இத்தனை நாளா பேசாம இருந்துட்டல…. இதுக்காக நாங்க தான் உன் மேல கோவமா இருக்கனும். இங்க ஒருத்தி பைத்தியமா சுத்திக்கிட்டு இருக்கா. அதெல்லாம் தெரிஞ்சுக்காம போன்ல என்னமோ கத்துற. இத்தனை வருஷத்துல என்னைக்காவது நான் உன் கிட்ட பேசாம இருந்து இருக்கனா. எத்தனை சண்டை வந்திருக்கு. நீ என்னை எவ்ளோ அடிச்சி இருப்ப.. ஒவ்வொரு தடவையும் உனக்காக நான் விட்டு தரல… இந்த தடவை நீ விட்டுக்கொடுத்து போயிருக்கலாம் கண்ணா. ஆதி பத்தி பேசுனதால தான் நான் உன்கிட்ட பேசினேன். இல்ல நான் சாகுற வரைக்கும் உங்க கிட்ட பேசி இருக்க மாட்ட. உன் மேல அவ்வளவு கோபம் எனக்கு. யார்கிட்டயும் பேசாம எப்படிடா இருக்க முடியுது. நினைக்க நினைக்க கோவமா வருது கண்ணா.”
“ஆதி எங்க…”
மீண்டும் முதலிலிருந்து ஆரம்பித்த தன் அண்ணனை ‘பாவி படுபாவி… எவ்வளவு பாசமா பேசுற கொஞ்சமாச்சும் ஃபீல் பண்றானா பாரு. இவன் கிட்ட பேசின நேரம் ஒரு பொண்ணு கிட்ட பேசி இருந்தா இந்நேரம் விளையாடுறதுக்கு வீட்ல ஒரு புள்ள இருந்திருக்கும்.. மனசாட்சி இல்லாத மார்த்தாண்டமா இருக்கான். ச்சை.” வெளியில் சொல்லாமல் உள்ளுக்குள்ளே குமுற மட்டுமே முடிந்தது அவனால்.
இங்கிருந்து கண்ணன் சென்றதில் இருந்து… நடந்த அனைத்தையும் தெரிவித்தவன் ஆரதியைப் பற்றி சொல்ல வர.. ,
“அவளப் பத்தி என்கிட்ட பேசாத. அவ மேல நான் கொலை வெறியில் இருக்க. நான் பேசினத யார்கிட்டயும் சொல்லாத. சொன்னா சங்குதான்.” என்ற வார்த்தை தான் கடைசியாக சித்துவின் காதில் விழுந்தது அதன்பின் அணைக்கப்பட்ட வெறும் போனையே காதில் வைத்திருந்தவன்…,
‘என்னது நான் அவளைப் பத்தி பேசினா… நான் பைத்தியமா இவன் பைத்தியமா.’
என்ற கேள்விக்கு இவன்தான் பைத்தியம் என்பதுபோல் பதில் இல்லாமல் போனது.
போனை வைத்ததும் ரதிதேவியிடம் இருந்து தவறிய அழைப்புகள் குவிந்து இருப்பதை கண்டவன்… மீண்டும் அழைக்காமல், “வேலை இருக்கிறது நாளை பேசலாம்” என்ற குறுந்தகவலை மட்டும் அனுப்பி வைத்தான்.
இந்த குறுந்தகவல் தான் நாளை கண்ணனின் வீட்டில் தலைப்பு செய்தி என்பது தெரியாமல்.