மாலை அலுவலகம் முடிந்து ராஜகோபால் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.
பார்க்கிங் ஏரியா சுவர் மறைவில் நின்றிருந்த கோகுல், அவர் கார் அங்கிருந்து மறைந்ததும், காதில் மாட்டியிருந்த ‘நீலப்பல்’ (bluetooth) வழியே, “டார்கெட் கிளம்பிடுச்சு! அலார்ட்” என செய்தி சொன்னான்.
அவனை போலவே ‘நீலப்பல்’ அணிந்துக்கொண்டு தெய்வாவும் ஆதியும் பன்முனை இணைப்பில் தயாராய் இருந்தனர். இம்முறை இந்த திட்டம் துளியும் சொதப்பக்கூடாது என்பதில் அதிக தெளிவுடன் இருந்தனர் மூவரும்.
கோகுல் ராஜகோபாலை ஹெல்மெட் அணிந்துக்கொண்டு கவனமாய் இடைவெளிவிட்டு பின் தொடர்ந்தான்.
ராஜகோபால் வழமையாய் வீட்டிற்கு செல்லும் பாதையை விடுத்து வேறு பக்கமாய் செல்ல, “ப்ளான் சேஞ்ன்ட் ஆதி! டார்கெட் வேற பக்கம் போகுது” என தன்யா வீட்டிற்கு அருகே காத்திருந்த ஆதிக்கு எச்சரிக்கை கொடுத்தான்.
‘இவர் ஏன்டா வீட்டுக்கு வராம எங்கயோ போறாரு?’ என ஆதி காலை உதைத்துக்கொண்டு சிணுங்க, அவன் தலையில் கொட்டிய தெய்வா, “வண்டியை திருப்பு! அவர் எங்க போறாரோ அங்கேயே போவோம்” என அவனை துரிதப்படுத்தினார்.
கோகுல் ஒருபக்கம் ராஜகோபாலை தொடர, ஆதி தெய்வாவை அழைத்துக்கொண்டு கோகுல் சொல்லிய ஏரியா பக்கம் சென்றுக்கொண்டிருந்தான்.
ராஜகோபால் எங்கெங்கோ வளைத்து வளைத்து ஓட்டியவர், அலைபேசி அதிரவே சட்டென காரை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு, ஒரு அவசர அழைப்புக்கு நிதானமாய் பதிலளித்துக்கொண்டிருந்தார்.
கோகுலும் மறைவாய் நின்று மீண்டும் கார் கிளம்ப காத்திருக்க, அந்த நேரத்தில் ஆதியும் சரியாய் அவ்விடம் வந்து சேர்ந்தான்.
மீண்டும் கார் கிளம்ப, ஆதி காரை முந்திக்கொண்டு முன்னே சென்றான். கோகுல் பின்தொடர, அடுத்த சில நிமிடங்களில் ராஜகோபால் சாலையை கடந்து ‘யூடர்ன்’ போட காத்திருக்க, தெய்வா அவர் வருகைக்காக சாலையின் மறுப்புறம் காத்திருந்தார். ஆதியும் கோகுலும் வண்டியை நிறுத்திவிட்டு மறைந்திருந்தனர்.
யூடர்ன்’ போட்ட ராஜகோபால் நேரே செல்வார் என தெய்வா நினைக்க, காரோ அவர் நின்ற இடத்திற்கே வந்தது.
‘ஐயையோ, என்ன என்ப்பக்கம் வருது?’ என பதறிய தெய்வா, ‘முருகா, என்னை மட்டும் காப்பாத்துப்பா’ என மேல்நோக்கி ஆண்டவனை பார்த்து கும்பிட, கார் அவருக்கு ஓரடி இடைவெளியில் ‘ப்ரேக்’ போட்டு நின்றது.
கார் நின்றதும் அதை பார்த்துக்கொண்டிருந்த கோகுல் தன் தலையிலேயே அடித்துக்கொண்டான், ‘இதுவும் சொதப்புச்சுடா’ என்று!!!
ஆனால், தெய்வா சொதப்பவில்லை. நின்றுக்கொண்டிருந்த கார் மேல் தானே சென்று ‘தொம்’ என மோதி அவர் கீழே விழுந்து மயங்கிவிட்டதை போல நடிக்க, எல்லாம் அவர்கள் திட்டப்படி தான் நடந்தது. ஆனால் என்ன, டைமிங் தான் காலை வாரியது.
தெய்வா காரில் மோதி கீழே விழும்போது, ராஜகோபாலே காரை விட்டு வெளியே வந்து நின்றிருந்தார்.
சூப்பர் மார்கெட்க்கு செல்ல அதன் முன்னே காரை நிறுத்தியவர், காரின் முன்னே விழுந்து கிடக்கும் பெண்ணை கண்டு குழம்பினார்.
[the_ad id=”6605″]
இதே ஆணாய் இருந்திருந்தால், ‘குடிமகன் போல’ என்றெண்ணி கடந்து போயிருக்கலாம்! ஆனால், விழுந்திருப்பது பெண்ணாயிற்றே! ஒருவேளை ‘குடிமகளாய்’ இருந்தால் கூட அப்படியே விட்டுவிட்டு போக முடியாது அல்லவா!
தெய்வாவை நெருங்கி, “ஹலோ மேடம்” என அவர் அழைக்க, தெய்வா மூச்சுபிடிக்க படுத்திருந்தார்.
அதற்குள் சூப்பர்மார்க்கெட் காவலாளி அங்கே வர, அவரை அனுப்பியதே ஆதியும் கோகுலும் தான். ஒரு பெண்ணின் மீது காரி மோதிவிட்டதாக சொல்லியே அனுப்பி வைத்திருந்தனர். வந்தவர் என்ன? ஏது? என்றுக்கூட கேட்காது, “என்ன சார் இப்படி அடிச்சு போட்டுட்டீங்க?” என கேட்க, ராஜகோபால் திடுக்கிட்டு போனார்.
“யார் அடிச்சு போட்டாங்க? நின்னுட்டு இருந்த கார் மேல இவங்களே வந்து மோதி விழுந்துட்டாங்க! நான் ஒரு மனிதாபிமான அடிப்படையில என்னன்னு பார்த்துட்டு இருக்கேன்” என சொல்ல, இன்னும் நான்கைந்து பேர் கூடி என்னவென்று விசாரிக்க, வாட்ச்மேன் கிளிப்பிள்ளை போல, “கார்க்காரர் மோதிவிட்டதாகவே” கதை சொல்ல, நொந்துப்போன ராஜகோபால்,
“நானே இவங்களை ஆஸ்பிடல்ல சேர்த்து என்னனு பார்க்குறேன்” என சொல்ல, அவரை ‘நம்ப முடியாது’ என்று சிலர் சொல்லவே, அவரது விசிட்டிங் கார்டை காவலாளியிடம் கொடுத்துவிட்டு, அங்கிருந்தவர்கள் உதவியுடன் தெய்வாவை காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.
பாதி திட்டம் வென்றுவிட்டதில், ஆதியும் கோகுலும், உற்சாகமாய் ‘ஹை-பை’ அடித்துக்கொண்டனர்.
பின் சீட்டில் இருந்த தெய்வாவுக்கு மூக்கு நமைத்துக்கொண்டே இருந்தது. சொரியலாம் என்று நினைத்தால், ‘போடும் வேசத்திற்கு நியாயம் செய்ய வேண்டுமே!’ என்ற கட்டாயத்தில் அடக்கிக்கொண்டு மயக்கமாய் இருப்பதை போல நடித்துக்கொண்டிருந்தார்.
மருத்துவனை ஒன்றை அடைந்த ராஜகோபால், ஸ்டெச்சர் ஒன்றை வரவழைத்துவிட்டு பின்கதவை திறந்து பணியாளருக்கு தெய்வாவை காட்டினர்.
ஸ்டெச்சரில் தெய்வாவை கிடத்தியவர்கள், ‘என்ன நடந்தது?’ என சுருக்கமாய் ராஜகோபாலிடம் கேட்க, அரைக்கண் திறந்து பார்த்த தெய்வா, ராஜகோபால் கவனம் அவரிடம் இல்லை என தெரிந்ததும், பரபரவென மூக்கை சொரிந்துக்கொண்டார்.
அதைக்கண்ட நர்ஸ் விழிவிரித்து, “சார்…???” என ராஜகோபாலை அழைத்து மயங்கிக்கிடக்கும் தெய்வாவை காட்ட, “டூ சம் பர்ஸ்ட் எய்ட் இம்மீடியட்லி! அவங்க எதனால மயங்கி இருக்காங்கன்னே தெரியல, நீங்க என்னை நிக்க வச்சு இண்டர்வியூ எடுத்துட்டு இருக்கீங்க…” என சத்தம் போட அதற்க்கு மேல ஒருவரும் அங்கே தாமதிக்கவில்லை.
தெய்வாவின் உடலில் சிறு கீறல் கூட இல்லை. ரத்த அழுத்தமும் சீராக இருக்க, எதனால் மயக்கம் என்றே மருத்துவருக்கு விளங்கவில்லை.
‘என்ன சொல்றது?’ என அவர் யோசிக்க, மயக்கத்தில் இருந்த தெய்வா, “ரெண்டு நாளா சுகர் டேப்லெட் போடல” என சொல்லிவிட்டு மீண்டும் மயங்கிவிட,
‘இது என்னடா புதுவித மயக்கமா இருக்கு’ என அதிர்ந்துப்போனார் மருத்துவர். ஆனால் அப்போது கூட தெய்வாவை சந்தேகப்பட தோன்றவில்லை. அவர் தோற்றம் அப்படி மரியாதைக்குரியதாய் இருந்தது.
வெளியே காத்திருந்த ராஜகோபாலிடம் வந்தவர், “சுகர் டேப்லெட் எடுத்துக்காம இருந்துருக்காங்க, அதான் மயக்கம்! ஒருமணி நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்… அப்பறம் அழைச்சுட்டு போங்க” என்றுவிட்டு சென்றார் மருத்துவர்.
தெய்வாவை தனியறையில் வைத்திருக்க அங்கும் கண்ணை மூடிக்கொண்டே படுத்திருந்தார் தெய்வா.
[the_ad id=”6605″]
உள்ளே வந்த ராஜகோபால், அப்போது தான் தெய்வாவின் முகத்தை தெளிவாய் பார்த்தார்.
‘எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே?’ என்ற யோசனையில் அவர் இருக்க, “ண்ணா… ண்ணா…” என ஈனசுரத்தில் முனக ஆரம்பித்தார் தெய்வானை.
அவர் கண் விழிப்பது தெரிந்ததும், “அம்மாடி? கண்ணு திறக்க முடியுதா?” என பரிவாய் வினவினார் ராஜகோபால்.
வெகு சிரமப்பட்டு கண்ணை திறப்பவர் போல நடித்த தெய்வா, “நான் யா…ரு!? நான் எங்..கே இருக்கேன்?” என குழறலாய் கேட்க, “உங்களுக்கு ஒன்னும் இல்லை! பத்திரமா இருக்கீங்க” என பதில் சொன்னார் ராஜகோபால்.
அவரை பார்த்த தெய்வா, “நீங்க யாரு? எனக்கென்ன ஆச்சு?” என்று கேட்க, நடந்ததை சுருங்க சொல்ல, அவர் கரத்தை பற்றிக்கொண்ட தெய்வா, “ரொம்ப நன்றி அண்ணா! நீங்க இல்லன்னா என்ன ஆகிருக்கும்? என் உயிரையே காப்பாத்தி குடுத்துருக்கீங்க” என சொல்ல,
“இது சாதாரண மயக்கம் தான்ம்மா” என ராஜகோபால் சொன்னதெல்லாம் அங்கே தெய்வாவின் ‘பாசமலர்’ சாவித்திரி நடிப்பின் முன்னே எடுப்படவில்லை.
“என் கணவருக்கு தகவல் சொல்லனும் அண்ணா! உங்க போன் கொஞ்சம் தரீங்களா?” என வாங்கியவர் ஜெயதேவை அழைத்து விஷயம் சொல்ல, அவரோ, ‘தாம் தூம்’ என குதித்தார்.
‘நீ எப்டி சென்னைல?’ இந்த கேள்வியே அவர் மீண்டும் மீண்டும் கேட்க, பட்டென அழைப்பை துண்டித்து விட்டார் தெய்வா.
மனைவியை மனதால் கடிந்துக்கொண்டே மருத்துவமனை வந்தவர், தெய்வாவின் அறை எண்ணை தெரிந்துக்கொண்டு, பாதி சாற்றியிருந்த கதவை திறக்க, அங்கே ராஜகோபாலை அவர் சத்தியமாய் எதிர்ப்பார்க்கவில்லை.
ராஜகோபாலும் அதிர்ந்துப்போய் தான் இருந்தார். அறையின் ஒரு மூலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தடுப்பு போர்ட்டின் பின்னே ஒளிந்திருந்த ஆதியும் கோகுலும் இதைக்கண்டு விழி மூடாது அடுத்து நடக்கப்போவதை பார்த்திருக்க, ராஜகோபாலும் ஜெயதேவும் ‘பார்த்தது பார்த்தபடி அப்படியே நின்றனர்’.
கோகுல், “ஒரு மந்தையில் இருந்து பிரிந்த இரு ஆடுகள், சந்தித்தபொழுது… பேசமுடியவில்லை….யே” என நக்கலடிக்க, “வாயை மூடுடா கொரங்கு” என அதட்டினான் ஆதி.
தெய்வா, “என்னங்க அப்படியே நிக்குறீங்க? உள்ளே வாங்க” என அழைத்து, “இந்த அண்ணா தான் என் உயிரை காப்பாத்துனாங்க! இவர் மட்டும் சரியான நேரத்துக்கு என்னை ஹாஸ்பிடல் கொண்டு வரலன்னா உங்க மனைவி உங்களுக்கு இல்லாமலே போயிருப்பேன்” என்றார் கேவியபடி.
ராஜகோபால், “என்னம்மா நீ இப்படியெல்லாம் பேசுற? நான் செஞ்சது ஒரு சின்ன உதவி தான்” என்றிட,
[the_ad id=”6605″]
தெய்வா, “அப்படி சொல்றது உங்க பெரிய மனசை காட்டுது அண்ணா! ஒட்டு உறவா காலாகாலமா பழகினவங்களே, ஒரு நொடில உறவை உதறிட்டு போகும்போது, எந்த உறவும் இல்லாத எனக்கு நீங்க வாழ்க்கையையே மீட்டுக்கொடுத்துருக்கீங்க! இதுக்கு நான் காலத்துக்கும் உங்களுக்கு கடமைப்பட்டுருக்கேன் அண்ணா” என தழுதழுக்க, ராஜகோபால் உருகிப்போனார் என்றால், கோகுலுக்கு நெஞ்சே அடைத்தது.
“உங்கம்மா இதுக்கு முன்ன டிராமா கம்பெனில எதுவும் நடிச்சுட்டு இருந்தாங்களாடா! இப்படி பின்னுறாங்க” என சிலாகிக்க, ‘உஷ்…உஷ்” என்றான் ஆதி.
ஜெயதேவ், “உனக்கு ஒன்னும் இல்ல தானே?” என தெய்வாவை குசலம் கேட்க, “நமக்கு எவ்வளவு பெரிய உதவி செஞ்சுருக்கார் இந்த அண்ணா! அவருக்கு ஒரு நன்றி சொல்லனும்ன்னு கூட தோணலையா?” என உரிமையாய் கடிந்தார்.
ஜெயதேவும் ராஜகோபாலும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு அப்படியே நிற்க, “அண்ணா!” என ராஜகோபாலை அழைத்த தெய்வா, “எனக்குன்னு பிறந்த வீட்டு சொந்தம் எதுவும் இல்லை! யாரையும் உரிமையா ‘முறை’ சொல்லி நான் பேசுனதும் இல்லை! என்னவோ உங்களை என் ‘அண்ணனா’ ஏத்துக்கணும் போல தோணுது! நீங்க என்னை உங்க ‘தங்கச்சியா’ ஏத்துப்பீங்களா அண்ணா?” என கேட்க,
ராஜகோபால் உதடு கடித்து மௌனம் காத்தார். கண்கள் ஜெயதேவை சந்தித்து, ‘நீயே சொல்’ என்பது போல கேட்டது.
அவர்களை அப்படியே விடாமல், பேசிக்கொண்டே இருந்தார் தெய்வானை.
ஜெயதேவை பார்த்து, “என்னங்க நீங்க? என் அண்ணன் கிட்ட பேசக்கூட மாட்டேங்குறீங்க? என் உயிரையே காப்பாத்தி கொடுத்தவரை உங்க உறவா நீங்க ஏத்துக்க கூடாதா?” என கேட்க, ஆதி சுவாரஸ்யமாய் நகம் கடித்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தான்.
கோகுலோ, “நின்னுட்டு இருந்த கார் மேல போய் மோதி விழுந்துட்டு, என்னவோ நூத்தி அருவது கிலோமீட்டர் வேகத்துல வந்த தண்ணி லாரில மோதி உயிர் பொழச்ச மாறி பேச்சை பார்த்தியா? இருந்தாலும் உங்கம்மா ரொம்ப நடிக்குறாங்கடா” என்றான் மனம் கேளாது.
ராஜகோபாலிடம் பேச நாக்கு துடித்தாலும் இத்தனை வருட பிரிவு பெரும் தயக்கத்தை கொடுத்தது ஜெயதேவுக்கு. ராஜகோபாலுக்கும் அதே நிலையே!
“ம்ச்! நான் இவ்வளோ கேட்டும் என்னை உங்க தங்கச்சியா நீங்க ஏத்துக்கலைல அண்ணா?” என சோக கீதம் வாசித்த தெய்வா, “ஐயோ எனக்கு மயக்கமா வருதே!!!” என மடங்கி சரிய, “தங்கச்சிஈஈ….” என ஒரு குரலும், “தெய்வாஆஆ” என மறுகுரலும் ஒரு சேர ஒலித்து இருபுறம் இருந்து தெய்வாவை தாங்கிக்கொண்டது.
“நீ போய் டாக்டரை வர சொல்லு” முதன் முதலாய் தன் மௌனத்தை உடைத்தெறிந்தார் ராஜகோபால்.
‘பேசியது தன்னிடமா?’ என நொடி நேரம் ஜெயதேவ் அதிர்ந்து, திகைத்து, நிற்க, “போடா சீக்கிரம்” என கத்தினார் ராஜகோபால்.
“நீ என்…கிட்…ட?” அவர் பேசிவிட்டதை நம்ப முடியாது ஜெயதேவ் வார்த்தை தடுமாற, உணர்ச்சிவசப்பட்டு நிற்க, “என் தங்கச்சியை கட்டிக்க நீ சம்மதிக்கலன்னு உன்மேல கோவப்பட்டேன் தான்! ஆனா, நீ என் தங்கச்சிய தானே கட்டிருக்க!” என ராஜகோபால் சொல்ல, புரியாது நின்றவரிடம்,
“தெய்வா என்னோட தங்கச்சிடா!” என்றார் கண்கள் கலங்க…
“ராஜா….!!!” என ஜெயதேவ் கலங்க, “ஜெயா…!!!” என ராஜகோபால் தழுதழுக்க, பார்த்துக்கொண்டிருந்த கோகுல், “ஆ…. அபிராமி அபிராமி” என கிண்டலடிக்க, அரைக்கண்ணை திறந்து, ஆதி இருந்த புறம் பார்த்த தெய்வா, “சக்சஸ்” என கட்டைவிரல் உயர்த்தினார்.
ஆதி, “இந்த உலகத்துல சென்டிமென்ட்டை மிஞ்சின ‘வெப்பன்’ வேற எதுவும் இல்லை” என கே.ஜி.எஃப் எபெக்டில் சொல்லி சந்தோசமாய் சிரித்தான். (சத்தம் வராமல் தான்)
-கலாட்டா தொடரும்…