அதிகாலையில் துயில் கலைந்த ஆரதி நடைப்பயிற்சிக்கு கிளம்பி கீழே வர.., தோட்டத்தில் ரதிதேவி மட்டும் தனியாக அமர்ந்து இருப்பதை கண்டாள். அவரிடம் பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருப்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்தவள் நடைப் பயிற்சியைத் தவிர்த்து ,
“என்னம்மா இங்க என்ன பண்ணிட்டு இருக்க. குளிர்ல உக்காந்து இருக்க.”
திடீரென தனக்கு பின்னால் குரல் கேட்க.. அரைநொடி தடுமாற்றத்தில் எழுந்து நின்றவள் அது ஆரதி என்று தெரிந்து அமைதியாக பூமியை பார்த்தாள்.
“தேவி ஒரு ரெண்டு மூணு நாளா நமக்குள்ள கண்ணாம்பூச்சி ஆட்டம் ஓடிக்கிட்டு இருக்கு. அத இன்னைக்கு முடிச்சிடலாமா. “
அப்போதும் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க, பெருமூச்சோடு புல்வெளியில் அமர்ந்தவள், அவள் கையை பற்றியும் அமர வைத்தாள்.
“என்ன பிரச்சனை வந்துச்சு. எனக்கு பிரச்சனை நீ இல்ல. அத்தையும் கண்ணனும் தான். நேரடியாவே கேட்கிறேன் கண்ணன் உன்கிட்ட என்ன பேசினான். எப்போ பேசினான்.”
ஆரதியின் கேள்வியில் அவள் முகத்தை பார்த்த ரதிதேவி, “அது எப்படி உங்களுக்கு தெரியும். சார் சொன்னாங்களா!”
“இத சொல்லி தெரிஞ்சுக்கணும்னு அவசியமில்லை. அன்னைக்கு நீயும் சித்துவும் உட்கார்ந்து பேசும்போது கொஞ்சம் டவுட் வந்துச்சு. அதை உன்னோட அமைதி தான் கிளியர் பண்ணுச்சி. இத என்னால கண்ணன் கிட்டயே கேட்க முடியும். ஆனால் எனக்கு அதுல விருப்பமில்லை. ஏதோ ஒரு வகையில இதுல நீ பாதிக்கப்பட்டிருக்க. அதான் உனக்கான தீர்வா என்னோட பதில் இருக்கணும்’னு ஆசைப்படுறேன். சொல்லு ..”
“அன்னைக்கு கொல்கத்தாவில் இருந்து உங்களை பார்க்க யாருக்கும் தெரியாம வந்து இருந்தாங்களே அப்போதான் என்னையும் மீட் பண்ணாங்க.” என்றதோடு அன்றைய நாளை விவரிக்கத் தொடங்கினாள்.
சித்து கண்ணனிடம் அனைத்தையும் தெரிவித்திருக்க கொல்கத்தாவிற்கு சென்று வந்து ரதிதேவியின் பிரச்சினையை முடிக்கலாம் என நினைத்தான் கண்ணன். அந்த எண்ணத்திற்கு மாறாக ரதிதேவி மஹாலட்சுமியை அழைத்து வந்து ஆரதி சித்துவை மாட்டிவிடுவதை கண்டவன் இன்று இதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணினான். அதன்படி சித்துவிடம் தன் எண்ணத்தை தெரிவிக்க, ஆரதியிடம் ஊருக்கு கிளம்புவதாக சொல்லியவன்.. சித்துவிற்கு கண்ணை காட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு நேராக சென்றது பெசன்ட் நகரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு தான்.
சித்துவும் ரதிதேவியிடம் சென்று ஏதேதோ காரணத்தைச் சொல்ல, “வர முடியாது” என்றவளை வலுக்கட்டாயமாக யாருக்கும் தெரியாமல் அழைத்து சென்றான். அதுவரை ஆர்ப்பாட்டம் செய்தவள் கண்ணனைக் கண்டதும் கண்கள் விரிய , “ஐயோ!! சார்! நீங்க எப்போ வந்தீங்க. வீட்டுக்கு வராம இங்கே என்ன பண்றீங்க. “
“அத பத்தி பேச தான் இங்க வந்திருக்கிறது தேவி நீ உட்காரு .” என்றவன் மூவருக்கும் தேவையானதை ஆர்டர் செய்துவிட்டு தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் ரதிதேவியிடம் திரும்பி, “உனக்கு எதுக்கு ஆதிய பிடிக்கல. வீட்டுல நடந்ததை சித்து சொன்னான். எதுக்காக இப்படி எல்லாம் பண்ற. “
“ஆமா சார் அவங்களை எனக்கு பிடிக்கல. உங்கள அன்னைக்கு ஆன்ட்டி அடிச்சதுக்கு அவங்க தானே காரணம். உங்ககிட்ட ஒரு ஸாரி கூட கேட்கல. எதுவுமே நடக்காத மாதிரி சித்து கூட ஜாலியா ஊருக்கு போயிட்டு வர்றாங்க. இப்ப கூட நீங்க வீட்டுக்கு வராம இருக்கிறதுக்கு அவங்க தானே காரணம்.”
அவளின் பேச்சில் இருவரும் சிரிக்க, புரியாது முழித்த ரதிதேவி, “எதுக்காக சார் சிரிக்கிறீங்க.”
“நீ எதுக்காக என்ன தேடி இவ்வளவு தூரம் வந்ததுன்னு தெரியல. நீங்க வீட்டுக்கு வந்த அன்னைக்கு சொன்னதுதான்.. இவ்வளவு தூரம் தேடி வந்திருக்க உங்க அன்பை நான் ரொம்ப மதிக்கிறேன். அதைவிட அதிகமா என்னோட ரதிய நான் காதலிக்கிறேன். அணைக்கு ஆஸ்பிடல்ல நீ பேரை சொன்னதும் சிரிச்சதுக்கு காரணம்.. அது என்னோட ரதி பேரா இருக்குறதால தான். உனக்கு என் மேல ஒரு அட்ராக்ஷன் இருக்குன்னு புரியுது. என்னை அடிச்சதும் ஆட்டோமேட்டிக்கா ஆரதி மேல கோவமா மாறி இருக்கு. அதுக்காக உனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இருக்கு சரியா.”
அழுகையோடு தலை அசைப்பவளை பார்க்க அண்ணன் தம்பி இருவருக்கும் வருத்தமாக இருந்தாலும் இதில் மூவரின் வாழ்க்கை சம்பந்தப்பட்டிருப்பதால் அமைதியாக பார்த்திருந்தனர். சிறிது நேரத்திலேயே தன்னைத் தேற்றிக் கொண்டவள் , “நான் எந்த தப்பான எண்ணத்துலையும் இதெல்லாம் பண்ணல சார். உங்களைப் பொறுத்த வரைக்கும் அடிபட்டு அன்னைக்கு தான் நீங்க என்ன முதல்ல பார்த்தீங்க. ஆனா, நான் உங்கள ரெண்டாவது தடவையா அங்க பார்த்தேன். அடிபடுறதுக்கு மூணு நாளைக்கு முன்னாடி ஒரு காம்ப்ளக்ஸ் மால்ல . உங்களைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ரொம்ப நேரமா உங்களை ஃபாலோ பண்ணிட்டு இருந்தேன். நீங்க கிளம்பினதும் எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு தெரியாம வீட்டுக்கு போயிட்டேன். திரும்பவும் அன்னைக்கு ரோட்ல அதுவும் போலீஸ் டிரஸ் பார்த்ததும்.. என்னையறியாமல் தான் அந்த ஆக்சிடென்ட் நடந்தது. திடீர்னு நீங்க வந்து என்ன காப்பாற்றுனதும் ஹாஸ்பிடல்ல சேர்த்ததும் படத்துல ஹீரோ வர மாதிரியே இருந்துச்சு. அப்பவே உங்கள பாக்கணும்னு முடிவு பண்ணி அப்பா கிட்ட ரொம்ப அடம் பிடிச்சேன்.
வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு. என்னை ரொம்ப ரொம்ப ரொம்பச் செல்லமா வளத்தாங்க. என்ன கேட்டாலும் அப்பா முடியாதுன்னு சொன்னதே இல்லை. அப்படியே வளர்ந்த எனக்கு.. உங்ககிட்ட வரது பெரிய விஷயமா இல்லை. ஒரு வாரத்திலேயே அப்பா உங்களை கண்டு பிடிச்சு சென்னைக்கும் கூட்டிட்டு வந்தாங்க. ஆன்ட்டி, உங்களை, உங்க வீடு எல்லாமே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. அதுமட்டுமில்ல வீட்டுல தனியாவே இருந்த எனக்கு இவ்வளவு சொந்தத்தை பார்க்கும்போது இங்கேயே இருக்கணும்’னு ஆசை வந்துருச்சு. ஊருக்குக் கிளம்பும்போது அப்பா கிட்ட ரொம்ப சண்டை போட்டு , அடம் பிடிச்சி கேட்டும் ஒத்துக்கல. இங்க இருந்தா உங்களுக்கு என்னை பிடிக்க வாய்ப்பு இருக்குன்னு நினைச்சு தான் அப்பாகிட்ட, இங்க இருந்து கூட்டிட்டு போனா சொல்லாம கொள்ளாம எங்கேயாவது போயிடுவான்னு பயமுறுத்தி தங்க சம்மதம் வாங்குனேன். அவ்வளவு கஷ்டப்பட்டு சம்மதம் வாங்கி…ஆரதி பண்ண வேலையால தான் நீங்க வீட்டை விட்டு போயிட்டீங்கன்னு நினைச்சி அவங்க மேல கோபத்தை வளர்த்து இந்த மாதிரி பண்ணேன். சாரி சார்.”
“இதுல நீ சாரி சொல்ல ஒண்ணுமே இல்ல. உன்ன பார்த்தா தப்பான பொண்ணா தெரியல. அதனாலதான் வீட்டுல தங்கனுன்னு வந்த போதும் ஒண்ணும் சொல்லல. அம்மாக்கு பெண் குழந்தைங்க ரொம்ப பிடிக்கும். அதனாலே அவங்க ரொம்ப பாசமா இருப்பாங்க. உன்னை மட்டும் இல்ல யார் வீட்டுக்கு வந்தாலும் அத்தையும் சரி அம்மாவும் சரி இதே அன்பை தான் கட்டுவாங்க.”
“சாரி சார். நான் ஆரதி கிட்டயும் சாரி கேட்கிறேன்.”
“யார்கிட்டயும் கேட்க வேணாம். உனக்கு இது புரிந்தாலே போதும். அதுக்காக தான் இந்த மீட்டிங். இனிமே ஆரதி மேல எந்த கோவமும் உனக்கு இருக்காது ல ” எனக் கேட்ட சித்துவிற்கு “இல்லை” என்று தலையசைத்தாள் ரதிதேவி.
அவளிடம் பேசி புரியவைத்த கண்ணன் இனிமேல் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.
“உன்னோட சைட் எந்த தப்பும் இல்லை. எங்க வீட்டில இருக்கிறவங்களுக்கே எங்க நடவடிக்கை புரியல. உனக்கு எங்க இருந்து புரியும். கண்ணனுக்காக இவ்வளவு தூரம் வந்த உன்னுடைய அன்பு நல்லா புரியுது. நமக்கு பிடிச்சவங்கள யாராவது கஷ்டப்படுத்தினா என்ன ஏதுன்னு யோசிக்காம நம்மளும் அவங்க மேல கோபத்தை வளர்ப்போம். அந்த மாதிரிதான் கண்ணன் விஷயத்துல நீயும் நடந்து கிட்ட. நீ பண்ணது எனக்கு பிடிக்காம இருந்தது உண்மைதான். ஆனா உன்கிட்ட எந்த வன்மத்தையும் நான் பார்க்கல. ஒருத்தர பாக்குறதும், அவங்க கூட வாழ்க்கை முழுக்க இருக்கணும்’னு நினைக்கிறதும் இந்த கால கட்டத்துல ரொம்ப சகஜம். அவசரத்துல என்ன பண்ணி இருந்தாலும் உண்மை தெரிந்ததும் அத புரிஞ்சுகிட்டு ஒதுங்கி நிற்கிற பாரு இந்த குணமே சொல்லும் நீ எப்படின்னு. எனக்கு உன் மேல எந்த கோபமும் இல்லை. இந்த விஷயத்துல நீ கொஞ்சம் கஷ்டப் பட்டிருக்க உண்மைதான். ஆனால் சீக்கிரமா சரியாகும். இங்க எவ்வளவு நாள் இருக்கனுமோ இரு. வானதி மாதிரி தான் நீயும் எனக்கு. உன் மனசுல எந்த சங்கடமும் வேணாம். இந்த மாதிரி தூங்காம யோசிச்சிட்டு இருக்காத. சரியா.”
” அது மட்டும் இல்ல. அன்னைக்கு வீட்டில இருக்குறவங்க என் அம்மா அப்பா கிட்ட பேசனும்னு பேசிட்டு இருந்தது அரைகுறையா காதுல விழுந்தது. உடனே நான் தான் காரணம் கேக்காதீங்க . கிளம்பி வாங்கன்னு இங்க வர வச்சேன். நான் மட்டும் சொல்லாம இருந்திருந்தால் .. அப்பா அம்மா இங்க வந்திருக்க மாட்டாங்க. ஆண்டியும் பேசி இருக்க மாட்டாங்க. என்னால தான் எல்லாமே.”
“நீ சொல்லாம இருந்திருந்தாலும் இது நடந்து இருக்கும். இதுக்கு நீ மட்டும் காரணமில்லை.”
“என் மேல உங்களுக்கு எந்த கோபமும் இல்லை யே.”
“கண்டிப்பா இல்ல.”
” தேங்க்ஸ் ஆரதி.” என்றவளை தூங்க அனுப்பி வைத்து ஆரதி ,
“டேய் பித்து ரொம்ப நேரமா ஒட்டுக் கேட்டது போதும் வெளியே வா.”
ரதிதேவி இடம் பேச ஆரம்பித்ததும் நடை பயிற்சிக்காக கீழே வந்த சித்து கவனித்து அவர்களின் அருகில் வந்து நிற்க…. பேச்சு மும்முரமாக இருப்பதால் தொந்தரவு செய்யாமல் அங்கேயே நின்று கொண்டான்.
“அடிப்பாவி நான் எங்க ஒட்டு கேட்டேன். சீரியஸா பேசிட்டு இருக்கீங்க நடுவுல வர வேண்டாம்’னு ஒதுங்கி நிற்கிறேன். இது ஒட்டு கேட்கிறதா..”
“இல்லனா மட்டும் நீ ஓட்டு கேக்க மாட்ட பாரு பிராடு. பொம்பள பிள்ளைங்க என்ன வேணா பேசுவோம். நீ எதுக்கு இங்க நிக்கிற வாக்கிங் போக வேண்டியது தான.”
“ரதி தேவி பொண்ணு தான். சரி.. நீ எப்ப பொண்ணா மாறுன சொல்லவே இல்ல.”
ஆரதியின் முறைப்பில் கைகளால் வாயைப் பொத்தியபடி மன்னிப்பு கேட்க, “அது. அந்த பயம் இருக்கணும்.” என சிரிக்க ஆரம்பித்தாள்.
“சரி ஆதி உனக்கு இவ மேல கொஞ்சம் கூட கோபம் இல்லையா.”
” கண்ணனோட ரதியா சில கோவம் இருக்கு. ஆனா ஒரு பொண்ணா அவள என்னால எந்த தப்பும் சொல்ல முடியல. தெரிஞ்சி எந்த தப்பும் பண்ணலையே.. ஆசைப்பட்ட ஒருத்தர கஷ்டப்படுத்துன என் மேல கோபப்பட்டது நியாயம்தானே. உண்மை தெரிந்ததும் அவ பண்ணத்துக்காக.. மனசுக்குள்ள ஆயிரம் தடவை தண்டனை கொடுத்து இருப்பாள். இதுல நான் எங்க தர. சின்ன பொண்ணு தான சித்து..
என்ன இருந்தாலும் இன்னைக்கு அவ கட்டப்படுறதுற்கு ஒரு வகையில நம்மளும் காரணம். அதை சரி பண்ண வேண்டிய கடமை நமக்கு இருக்கு.”