வீட்டிற்குள் பெண் காவலர்கள் நுழைந்ததும் அஞ்சலி மேரிக்கு பயம் தொற்றிக் கொள்ள, விசாரணைக்கு வர மறுத்து ஆர்ப்பாட்டம் செய்தார். இதற்கிடையில் அக்கம்பக்கத்தினர் கூடிவிட… அவர்களிடமும் முறையிட்டு துணைக்கு ஆள் சேர்த்துக் கொண்டிருந்தார்.
அங்கு வந்த கண்ணன், “மேடம் விசாரணைக்கு ஒத்துழைச்சா மரியாதையா வண்டில ஏத்துங்க. இல்லையா அடிச்சு வண்டியில ஏத்துங்க. சப்போர்ட்டுக்கு யாரு வந்தாலும் அவங்களையும் பிடிச்சிட்டு வாங்க. இருக்க கேசு மொத்தத்தையும் அவங்க மேல போட்டு சிறப்பா கவனிக்கலாம்.”
“என்ன சார் ஆம்பள இல்லாத வீட்டுக்கு வந்து பிரச்சனை பண்றீங்களா. என் புருஷன் எப்படி செத்தாருன்னு கூட தெரியல. அதை கண்டுபிடிக்க முடியாம என் கிட்ட வந்து பிரச்சனை பண்றீங்க. நான் எங்கேயும் வரமாட்டேன். கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போனா… ஸ்டேஷன் வாசல்லையே தீக்குளித்து செத்துருவேன்.”
“நீ என்ன தீக்குளிக்குறது. இரு நானே உன்ன தீக்குளிக்க வைக்கிறேன்.”சொன்னது சாட்சாத் நம்ம ஆரதி தான். மருத்துவமனையிலேயே இருக்கிறேன் என்றவளை சமாதானப்படுத்தி தன்னுடன் அழைத்து வந்திருந்தான் கண்ணன்.
அன்று மருத்துவமனையில் தன்னிடம் பேட்டி எடுத்த பெண் என்பதை அறிந்து அஞ்சல மேரி, “என்ன மேடம். அன்னைக்கு எங்கிட்ட வந்து கேள்வி மேல கேள்வி கேட்டு பேட்டி எடுத்தீங்க. போலீஸ்காரங்க என்ன சொன்னாங்கன்னு துருவித் துருவி கேள்வி கேட்டீங்க. இன்னைக்கு இவர் கூடவே வந்து நின்னுட்டு எனக்கு எதிரா பேசுறீங்க. எல்லாரும் பேசி வச்சுட்டு பண்றீங்களா? இத நான் சும்மா விடமாட்டேன்.”
“சரி சும்மா விடாத. உன்னோட வீரதீர செயல்களை என்னன்னு காட்டு நானும் பார்க்கிறேன்.”என்ற ஆரதி அவரை பெண் காவலர்களின் உதவியோடு அங்கிருந்து அழைத்துச் செல்ல முயல ,
ரோட்டில் அமர்ந்து சத்தம் இட ஆரம்பித்தார் அஞ்சலை மேரி. அங்கிருந்தவர்கள் இதை படம் பிடிக்க ஆரம்பிக்க ,
கண்ணன் தான், “இங்க பாருங்க இதுதான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங். உங்கள விசாரணைக்கு அழைச்சிட்டு போக எல்லா ஆதாரமும் எங்க கையில இருக்கு. இன்னும் கேட்டா உங்க கணவனைக் கொன்றதே நீங்களா இருக்கும்’னு சந்தேகம் இருக்கு. ஒழுங்கா விசாரணைக்கு ஒத்துழைப்பு தாங்க. இல்ல’னா வலுக்கட்டாயமா நடத்த வேண்டியிருக்கும்.” வீடியோக்கள் எடுத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களிடம் திரும்பியவன், “நீங்க எடுக்கிற வீடியோவால எங்க விசாரணைக்கு ஏதாச்சும் தடங்கல் வந்தால் உங்களையும் அரெஸ்ட் பண்ண வேண்டி வரும். எங்க அனுமதி இல்லாம இங்க நடந்தது ஏதாவது சோஷியல் மீடியாக்கு போச்சுன்னா….. வாழ்க்கை முழுக்க வழக்குல சிக்கி தவிக்க வேண்டி வரும். நாளைக்கு இவங்க தான் குற்றவாளி னு தெரிஞ்சா இவர்களுக்கு சாதகமாக வேலை பார்த்த உங்க மேலயும் சட்ட நடவடிக்கை பாயும். ஞாபகம் வச்சுக்கிட்டு பண்ணுங்க.” கண்ணனின் பேச்சால் அவர்களின் செயல் குறைந்திருக்க, ஆரதியிடம் கண்ணை காட்டியவன் முன்னே நடந்து சென்றான்.
ஆரதியும் பெண் காவலர்கள் உதவியோடு அஞ்சலயை தூக்கிக் கொண்டு செல்ல, அந்த இடமே அலை அடித்து ஓய்ந்தது.
*******************************************
சித்து உடன் அங்கிருந்து புறப்பட்ட வானதி வழிநெடுக மௌனத்தைக் கடைப்பிடித்து இருக்க, நில்லாமல் அருவி மட்டும் கண்ணில் கொட்டிக் கொண்டிருந்தது. அவளை சமாதானப்படுத்தும் வழி தெரியாது… அமைதியாக வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்தான் சித்து.
“சித்து.. அது என்னோட அக்காவா இருக்கும்’னு உங்களுக்கு எப்படி சந்தேகம் வந்துச்சு.”
வானதியின் கேள்வியில் வாகனத்தை நெடுஞ்சாலையின் ஓரத்தில் கவனமாக நிறுத்தியவன், என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாகவே பார்த்திருந்தான். அவனின் மௌனமே இதில் வேறு எதுவோ இருக்கிறது என்பதை உணர்ந்த வானதி மீண்டும்,
“தயவு செஞ்சு உண்மையை சொல்லுங்க சித்து. உங்களுக்கு அக்கா பத்தின உண்மை கண்டிப்பா தெரிஞ்சிருக்கு. அன்னைக்கு ஆரதி அக்கா கூட ஒரு டைரியை எடுத்துட்டு போனாங்க. அத பத்தி கேட்டதுக்கு அப்புறமா சொல்றேன் னு சொல்லி சமாளிச்சிட்டாங்க. அதுலதான் என்னமோ இருக்கு. உண்மையை சொல்லுங்க ப்ளீஸ்.”
இதற்கு மேல் இவளிடம் மறைப்பது தவறு என்பதை உணர்ந்து சித்துவும் இதுவரை அனிதா சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் சொல்லி முடித்தான். அதுவரை மௌனமாக அழுது கொண்டிருந்தவள்… பெரும் சத்தத்தோடு முகத்தை மூடி அழ ,
சித்தி விற்கு தான் அவளின் அழுகை மிகவும் வலிக்க செய்தது. அழுகையோடு, “அக்காவுக்கு பின்னாடி இந்த மாதிரி ஒரு விஷயம் இருக்கும்’னு எதிர்பார்க்கல. எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்கா. பிறந்ததிலிருந்து நானும் சரி அக்காவும் சரி எந்த சந்தோசத்தையும் பெருசா பார்த்தது இல்ல சித்து. ஒவ்வொரு தடவையும் மத்தவங்கள பார்த்து நிறைய ஏங்கி இருக்கோம். அக்காக்கு படிக்கணும்னு ரொம்ப ஆசை. அவளால முடியாம போச்சு. அதனால தான் ரொம்ப கஷ்டப்பட்டு என்ன படிக்க வைச்சா. அந்த அளவுக்கு குடும்பத்துக்காக யோசிச்சவ எப்படி இந்த மாதிரி ஒரு வேலையை பண்ண முடிஞ்சிது. அவளுக்கு நிறைய ஆசை இருந்துது. நிறைய சம்பாதிக்கணும். மத்தவங்க மாதிரி இல்லனாலும் இப்ப வாழ்ந்துட்டு இருக்க வாழ்க்கையை விட்டு வெளியே வரணும்னு பேசிக்கிட்டே இருப்பா சித்து. அப்போ என் அக்கா உயிரோடு இல்லையா? அங்க பிணமா இருக்கிறது என் அக்காவா? இதை எப்படி அம்மாகிட்ட சொல்லுவேன். அவங்களால எப்படி தாங்க முடியும். என் அக்கா நிஜமாகவே உயிரோட இல்லையா? இல்லையா…? அங்க இருக்குறது என்னோட அக்காவா? இல்லை! இல்லை ! அங்கே இருக்கிறது நிச்சயமா என்னோட அக்காவா இருக்காது…இருக்க கூடாது….அக்கா கிடைக்கவே இல்லனாலும் கூட பரவாயில்லை. எங்கேயாவது ஒரு இடத்துல என் அக்கா உயிரோட இருக்கணும். அது என் அக்கா இல்ல தான சித்து… சொல்லுங்க அக்கா இல்ல தான..”வானதியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சித்துவின் நெஞ்சிலும் ஊசியாய் துளைக்க, மீண்டும் மீண்டும் முகத்தில் அடித்துக் கொண்டு அழும் அவளை சமாதானப்படுத்த முடியாமல் தன்னோடு அணைத்து இருந்தான் சித்து.
நொடிகள், நிமிடங்கள், நேரங்கள் என கடிகார முட்களும் நகர்ந்து கொண்டிருக்க வானதியின் அழுகை மட்டும் நிற்காமல் தொடர்ந்து கொண்டிருந்தது. சட்டையையும் தாண்டி உப்பு நீர் சித்துவின் நெஞ்சில் பாரமாக இறங்க, இதற்கு மேல் விட்டால் ஆகாது என்பதை உணர்ந்தவன்,
மெல்ல தன்னிடமிருந்து அவளை பிரித்தவன், “இங்க பாரு அழாத. அது கண்டிப்பா உன் அக்கா இல்லை. சும்மா ஒரு சந்தேகம். அதுக்காக தான் உன்ன கூட்டிட்டு போனோம். நீ வேணா பாரு ரிசல்டும் நான் சொன்ன மாதிரி தான் வரும். இதுக்காகவா இப்படி விடாம அழுதுட்டு இருக்க. இல்லாத ஒன்னுக்காக அழக்கூடாது. நம்ம வந்து ரொம்ப நேரம் ஆச்சு. வீட்ல அம்மா தேடிக்கிட்டு இருப்பாங்க வானு.” என்றவன் அவளின் கண்ணீரை துடைத்து, தண்ணீரை நீட்ட மறுக்காமல் வாங்கிக்கொண்டாள் வானதி.
“உன் அம்மா கிட்ட இதை பத்தி எதுவும் பேசாத. முதல்ல ரிசல்ட் வரட்டும்.சரியா வானு.”
“ஹ்ம்ம்..”
அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டிற்கு சென்ற சித்து, மஹாலட்சுமியிடம் பார்த்துக்க சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு கண்ணன் இருக்குமிடம் சென்றான்.
வாகனத்தில் ஏற்றும் வரை அடம் பிடித்துக் கொண்டிருந்த அஞ்சலை மேரியின் நடவடிக்கை வண்டியில் ஏறியதும் அமைதியாக மாறியது. இதை கவனித்துக் கொண்டே வந்த ஆரதி, “எவ்ளோ அமைதியா இருக்கனுமோ அவ்ளோ அமைதியா இருந்துக்கோங்க. விசாரணையை ஆரம்பிச்சதும் ஒன்னு விடாம சொல்றீங்க. இல்ல’னா நாங்க சொல்ல வைப்போம்.”
ஆரதியின் பேச்சு அவருக்கு திகிலை கொடுத்தாலும் அமைதியாகவே வந்து கொண்டிருந்தார்… தன் கணவனை எந்த நிலையிலும் காட்டிக் கொடுக்கக் கூடாது என்ற கொள்கையோடு.
விசாரணை அறையில் அஞ்சலை மேரி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தனியாகவே அமர்ந்திருக்க, அந்த அமைதியான தனிமையே அவருக்கு மேலும் பயத்தை கொடுத்திருந்தது. ஒரு மணி நேரம் அவரை தனிமையில் விட்ட தனிப்படை அதிகாரிகள் உள்ளே வந்து தன் விசாரணையை துவங்கியிருக்க, அத்தனைக்கும் அவர் மறுப்பு தெரிவித்து கொண்டு இருந்தார். இதில் ஆரதியின் தலையீடு இருக்கக்கூடாது என்பதால் கண்ணன் அவளை வெளியிலே இருக்க வைத்திருந்தான். மைக்கேலின் பெயரை சொல்லாமல்… விசாரணைகள் நடைபெற்று கொண்டிருந்தது. தொடர்ந்து 4 மணி நேரத்திற்கும் மேலாக பெண் காவலர்களும் அஞ்சலை மேரியிடம் விசாரணை நடத்த , எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. பொறுத்து பார்த்து கொண்டிருந்த கண்ணன்,
“ஆறுமுகத்தை கூட்டிட்டு வாங்க…”
அஞ்சலி மேரிக்கு அந்தப் பெயர் யாரென்று தெரியாததால் குழப்பமாக வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தார். அங்கிருந்து அன்று மருத்துவமனையில் சந்தித்த நபர் வர அப்பட்டமான அதிர்ச்சியில் அமர்ந்திருந்தார் அஞ்சலை.
“இப்போ சொல்லுங்க. அன்னைக்கு ஹாஸ்பிடல்ல என்ன நடந்துச்சு?”
“எத்தனை தடவை கேட்டாலும் ஒரே பதில் தான் சார். எனக்கு எதுவும் தெரியாது. நான் எதுவும் பண்ணல.”இதற்கு மேல் பொறுமை இல்லாமல் பெண் காவலர்களிடம் விட்டுவிட்டான் கண்ணன்.
சில நொடிகளிலே வெளியில் வந்த அதிகாரி, “சார் எல்லாத்தையும் சொல்றன்னு சொல்றா உள்ள வாங்க சார்.”
“என்னோட புருஷன் பேரு ராபர்ட். எனக்கு ஒரே ஒரு மகன் மட்டும் தான். என்னோட புருஷன் அடிக்கடி திருட்டு தொழில், கொலை னு செஞ்சிட்டு இருப்பாரு. நாங்க முன்னாடி இருந்த ஏரியாவுல இருக்கும்போது இந்த மாதிரி வேலை நிறைய செய்ய ஆரம்பிச்சாரு. பழக்க வழக்கமும் ஒன்னும் சரியில்ல. நிறைய நிறைய புது புது நண்பர்கள் வீட்டுக்கு வர ஆரம்பிச்சாங்க. அதுல ஒருத்தனோட நடவடிக்கை எனக்கு சுத்தமா பிடிக்கல. அதனாலேயே என் புருஷன் கூட நிறைய சண்டை போடுவேன். என்னோட தொல்லை தாங்க முடியாம… அங்கிருந்து காலி பண்ணி வேற வீட்டுக்கு கூட்டிட்டு போனாரு. அதுக்குள்ள என்ன தப்பு பண்ணாரு ன்னு தெரியல. திடீர்னு வந்து அந்த வீட்டையும் காலி பண்ணச் சொல்லி… அவசர அவசரமா வேற வீட்டுக்கு கூட்டிட்டு போனாரு. என்ன ஏதுன்னு விசாரிச்சேன். அப்போ தான், அவருக்கு பெங்களூர்ல இருக்க ஏதோ ஒரு பிசினஸ் மேன் நிறைய பணம் கொடுத்து, ஜட்ஜை மிரட்ட சொல்லி வேலை கொடுத்து இருக்காங்க. அவரும் மிரட்டறதுக்காக வீட்டுக்கு போய் இருக்காரு… அங்க ஜட்ஜ் மனைவி போட்டிருக்க நகையை பார்த்து, அதுக்கு ஆசைப்பட்டு ரெண்டு பேரையும் கொலை பண்ணிட்டு வீட்டில் இருந்த பணம் நகை எல்லாத்தையும் எடுத்துட்டு வந்ததா சொன்னாரு சார்.
கொலை நடந்து மூன்று நாள் ஆகுது. இன்னும் என்னை போலீஸ் கண்டு பிடிக்கல. ஆனா இன்னும் ரெண்டு மூணு நாள்ல நிச்சயமா கண்டு பிடிச்சுடுவாங்க. அதுக்காக தான் உங்கள இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது. இன்னும் ஒரு ஆறு மாசத்துக்கு நான் தலைமறைவாக இருந்தாகனும். அதுவரைக்கும் நீயும் நம்ம பையனும் பத்திரமா இருங்க. இப்ப யூஸ் பண்ணிட்டு இருக்க போன் நம்பருக்கு கால் பண்ணாத. ஸ்விட்ச் ஆஃப் ல தான் இருக்கும் இனிமே.புது நம்பர் வாங்கி இருக்கேன். அந்த நம்பர்ல இருந்து அடிக்கடி உனக்கு போன் பண்றேன்.”என்று தன்னிடம் ராபர்ட் கூறியதை அப்படியே கண்ணனிடம் கூற,
“ஹ்ம்ம்.. என்ன பேசுவான் உன் புருஷன். ஹாஸ்பிடல்ல என்ன நடந்துச்சு?”
“கிளம்பிப் போய் நாலு மாசத்துக்கு எந்த போனும் இல்ல. நான் நியூஸ் பார்த்துதான் இன்னுமும் என் புருஷனை தேடிக்கிட்டு இருக்கிறத தெரிஞ்சுகிட்டேன். அப்புறமா புது நம்பர்ல இருந்து எங்கிட்ட பேசினாரு சார். அப்பப்ப போன் பண்ணி நாங்க என்ன பண்றோம்னு விசாரிச்சுட்டு வைச்சிருவாரு.” என்றவர் ஹாஸ்பிடலில் நடந்ததையும் சேர்த்து கூற,
“கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆகுது.”
“எட்டு வருஷம் ஆகுது சார்.”
“இந்த எட்டு வருஷத்துல உன்கிட்ட ராபர்ட் பேசினதுக்கும், தலைமறைவானதுக்கு அப்புறம் ராபர்ட் பேசுனதுக்கும் வித்தியாசம் தெரிஞ்சுதா?”
கண்ணனின் கேள்வி எதற்கு என்று புரியாவிட்டாலும்… “ஆரம்பத்தில் பேசும் போது எந்த சந்தேகமும் வரல சார். ஆனா என் புருஷன் இறந்துட்டாருன்னு சொல்றதுக்கு கொஞ்ச வாரத்துக்கு முன்னாடி அவர் பேசினதுல வித்தியாசம் தெரிஞ்சது.”
“என்ன தெரிஞ்சுது.”
“அது… வந்து சார்…
“சொல்லு மா…”
“என் பையன பத்தி எதுவுமே கேட்க மாட்டாரு. என்ன பத்தியும் என்னோட அழக பத்தியும் அதிகமா பேசுவாரு. இன்னும் கொஞ்ச நாள்ல சென்னைக்கு வந்துடுவேன்… அப்போ நீ என்ன பண்ணுவன்னு கேட்பாரு சார்.”
இத்தனை வருஷம் உன் புருஷன் கூட குடும்பம் நடத்தி இருக்க. புருஷன் குரலுக்கும் மத்தவன் குரலுக்குமா உனக்கு வித்தியாசம் தெரியலை. குரல் ஒரே மாதிரி இருந்தாலும் பேச்சு வழக்கு மாறும் தான. அதைக் கூட உன்னால கண்டுபிடிக்க முடியாதா. இத்தனை நாள் நீ உன் புருஷன் கிட்ட பேசிட்டு இல்லை. உன் புருஷனை கொலை பண்ண கொலைகாரன் கிட்ட.”
அதிர்ச்சியில் முகம் முழுவதும் கல்லாக மாறி இருக்க… அருகில் நின்றிருந்த ஆறுமுகத்திடம் அனைத்தையும் சொல்ல சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
ஆறுமுகத்தின் வார்த்தையைக் கேட்ட அஞ்சலை மேரி புழுவாக துடிக்க ஆரம்பித்திருந்தார். இத்தனை நாள் தன் கணவனைக் கொன்ற கொலைக்காரனிடம் அதுவும் கணவன் என்ற உரிமையோடு பேசி இருக்கும் நிலையை எண்ணி உடல் கூசியது. இறந்தது தன் கணவன் என்று தெரியாமல் கடமைக்கென்று அனைத்தையும் செய்த தன் கைகளை வெட்டி எறியும் அளவிற்கு கோபம் வந்தது. கணவன் இறந்தது கூடத் தெரியாமல் இத்தனை நாட்கள் வாழ்ந்து கொண்டிருந்த வாழ்வே வெறுத்துப் போனது. விசாரணைக்கு வந்திருக்கிறோம் என்பதையும் மறந்து கத்தி கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்ய துவங்கி இருந்தார் அஞ்சலை மேரி.
அழுது ஆர்ப்பாட்டம் செய்த அஞ்சலை மேரி தெம்பின்றி தரையில் அமர்ந்து, ஆறுமுகத்திடம், “யார் அவன்? எதுக்காக என்ன வச்சி இதெல்லாம் பண்ணான். என் புருஷன் உடம்பையே யாரோ மாதிரி வாங்க வைச்சிட்டானே பாவி.”அழுது பிதற்றிக் கொண்டிருக்கும் அஞ்சலையின் வார்த்தை அந்தரத்தில் நின்றது மைக்கேல் என்ற பெயரைக் கேட்டதும்.
வெளியில் வந்த கண்ணன் அங்கிருந்த போலீஸ்காரர்களிடம், ” அந்த பெங்களூர் ஆள் யாருன்னு கண்டு பிடிங்க. மதுரையில பிடிப்பட்ட இரண்டு பேர் கிட்டையும் இத பத்தி கேளுங்க. அப்புறம் தேடிட்டு இருக்க மைக்கேல் பழைய ஃபோன் நம்பர் வாங்கி சர்ச் பண்ண சொல்லுங்க. மைக்கேல் ஃபேமிலி கண்டிப்பா வீடு மாறும் போது வண்டிக்கு பேசி இருப்பாங்க. அத பத்தி விசாரிங்க. அடுக்கடுக்காக கட்டளையை பிறப்பித்த கண்ணன் ஆரதியிடம் செல்ல , அங்கு சித்துவும் இருந்தான்.
“கண்ணா ஏதாச்சும் தகவல் வந்துச்சா?” சித்துவிடம் உள்ளே நடந்ததை தெரிவிக்க,
“ரொம்ப சாமர்த்தியமா காய் நகர்த்தி இருக்கான் மைக்கேல். அந்த லேடி கிட்ட இன்னும் விசாரிச்சு பாரு கண்ணா. நிச்சயமா மைக்கேலை தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கு. ஏன்னா கிட்ட இருந்து பார்த்தவனால மட்டும்தான் இந்த மாதிரி சாமர்த்தியமா பேச முடியும்.”
தம்பியின் வார்த்தையில் ‘ஆம்’ என்பது போல் தலை அசைத்த கண்ணன், “கண்டிப்பா இவங்களுக்கு தெரிஞ்சிருக்கும் சித்து. அதுக்காக தான் ஆறுமுகத்தை எல்லாத்தையும் சொல்ல சொல்லி இருக்கேன். இப்போ அதிர்ச்சியில அவங்களால எதையும் பேச முடியாது. கொஞ்ச நேரம் கழிச்சி கேட்கனும்.”
“என்ன இருந்தாலும் புருஷனா நினைச்சு வேற ஒருத்தன் கூட பேசினது அதிர்ச்சியா தான இருக்கும். ஆழி.”
மூவரின் பேச்சுக்கும் தடை விதித்தது அங்கு இருப்பவரின் “சார்” என்ற வார்த்தையில்.
தலையை திருப்பி பார்த்த கண்ணனுக்கு, “அந்த லேடி உங்க கிட்ட பேசணும் னு சொல்றாங்க சார்.”