‘அச்சோ.. நான் என்ன பண்ணுவேன்.? என் பேரன் அப்படிபட்டவன் கிடையாதே..” என மாதவி புலம்ப..
‘ச்சு.. இதென்ன உன் வீடா.? வாய மூடு..” என சிறு பிள்ளையை அதட்டுவது போல் அதட்டி.. ‘அந்த நாயோட எல்லா விசயமும் உன் பேரனுக்கு தெரிஞ்சிருக்கு.. இன்னைக்கு காலைல கூட அரைமணி நேரம்வரை உன் பேரனோட பேசியிருக்கான்..
இப்படி பையனோட சவகாசம் வச்சிருக்கவன்தான் ஒன்னுந்தெரியாதவனா.? சும்மா இங்கயிருந்து கத்தி சீன் போட்டுட்டு இருந்த.. இருக்கிற காண்டுல என்ன செய்வன்னே தெரியாது..” என மிரட்டி.. ‘யோவ் இவங்களை அனுப்புயா..” என மற்றொரு காவலாளிக்கு பணித்து அதீத கோபத்தோடு உள்ளே சென்றார் இன்ஸ்பெக்டர்.
அந்த மாது பையன் சரியில்ல.. அவனோடு சேர்க்கை வச்சிக்காத என பலமுறை மாதவி கண்டித்திருக்கிறாள்.. பேரன் கேட்டால்தானே.? நான் என்ன சின்ன பையனா.? எல்லாம் எனக்கு தெரியும் என மாதவியை அடக்குவான் அரவிந்தன்.
ஆனால் தற்போது காவல் துறையினர் மாதவனை விசாரிக்கும் முறையிலும்.. அந்த பொண்ணுக்கு மெடிக்கல் ரிப்போர்ட் வரட்டும் அப்புறம் இருக்கு என மிரட்டும் தோரணையும் கண்டு.. அவள் கண்விழித்தால் நான் அவளை மிரட்டியதையும் சொல்லிவிடுவாளோ என வெகுவாய் பயந்துபோனான் அரவிந்தன்.
இன்ஸ்பெக்டர் அரவிந்தனிடம் வர.. ‘சார்.. அந்தளவுக்கு நான் கெட்டவன் இல்லசார்..” என அரவிந்தன் கெஞ்ச..
‘அந்த பொண்ணை கார்னர் பண்ணும் முன்ன உனக்குதான் கடைசியா போன் செய்திருக்கான்.. ஒரு பொண்ணு வாழ்க்கைய ப்ளான் போட்டு கெடுக்கிறவன் உனக்கெதுக்குடா கால் செய்தான்..? இரண்டு பேரும் அரைமணி நேரம் வரைக்கும் பேசியிருக்கிங்க.. என இன்ஸ்பெக்டர் அரவிந்தனை கோபமாய் பார்க்கவும் மாதவனை போல் நம்மளையும் அடிப்பாரோ என நினைத்தவனிற்கு உடல் தானாய் நடுங்கியது.
மாதவியை வீட்டிற்கு அனுப்பும் பணியினை செய்ய வெளியே வந்த காவலாளி.. ‘இங்க பாருங்க.. மாதவன் மொபைல்ல நிறைய பொண்ணுங்களோட ஆபாச வீடியோ இருக்கு.. அவனோட சவகாசம் வச்சிருக்க உங்க பேரனுக்கும் இதுல சம்மதம் இருக்கா இல்லையான்னு முழுசா தெரியிற வரைக்கும் இன்ஸ்பெக்டர் உங்க பேரனை விடமாட்டார்..
வீட்டிற்கு வந்ததும்.. ‘பேரனை போலீஸ் பிடிச்சி வச்சிருக்குன்னு கொஞ்சமாச்சம் பதறுதா.?” என ராமசாமியின் அமைதிகண்டு மாதவி கத்திக்கொண்டிருந்தார்.
காலையிலிருந்து இந்த களேபரம் நடந்து கொண்டிருக்கிறது.. ஆனால் ராமசாமி எதிலும் கலந்து கொள்ளவில்லை. மனைவியின் கத்தலுக்கும் அமைதியாகவே இருக்கவும்.. ‘அவர் எதுக்கு பேசப்போறார்.? அதான் அவங்க பேரன் செத்ததுலயிருந்து ரெண்டு வருசமா மௌன விரதமிருக்காரே.. என் மகன் எப்படி போனா அவருக்கென்ன.?” என அங்கலாய்த்தாள் ராமசாமியின் மகள் கவிதா.
காஞ்சனாவின் ஐந்தாவது வயதில்தான் ராமசமியின் முதல் மனைவி இறந்தது. மகனிற்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என ராமசாமியின் அம்மாதான் மாதவியை மகனிற்கு கட்டிவைத்தார். இன்னும் கொஞ்ச வருடங்களில் மகள் பெரிய பெண்ணானால் நல்லது கெட்டது எடுத்துரைக்க ஒரு பெண்துணை வேண்டுமென காஞ்சனாவிற்காகத்தான் என நினைத்து மாதவியை திருமணம் செய்ய சம்மதித்தார் ராமசாமி.
ஆனால் திருமணம் முடிந்த மூன்றாவது மாதமே மாதவி கர்பமானார். தன்னால் சமைக்கவோ மற்ற வேலைகளை செய்யவோ முடியாதென சொல்ல.. சமையிலிலிருந்து அனைத்து வேலையும் காஞ்சனாதான் செய்யவேண்டியிருந்தது.
ஆறு வயதேயான காஞ்சனா வயதிற்கு மிஞ்சின வேலைகளை செய்வதை பார்த்து மனமுடைந்த ராமசாமியின் அம்மா.. மகனிற்கு ஆண்வாரிசு வேண்டுமென நினைத்து பேத்தியின் வாழ்வை நரகமாக்கிவிட்டோமே என பிறகுதான் தன் தவறை உணர்ந்தார்.
குற்றவுணர்வில் உழன்றிருந்தவருக்கு அடுத்து வந்த இரண்டாம் மாதத்திலேயே மரணம் தழுவிக்கொள்ள.. தன்னை கண்டிக்க இருந்த ஒரு ஜீவனும் போன நிம்மதியில் மாதவியின் வாழ்க்கை அவர் இஷ்டத்தோடும்.. காஞ்சனாவிற்கு பெரும் கஷ்டத்தோடும் சென்றது.
பள்ளியிலிருந்தாலும் வீட்டிற்கு சென்றால் எத்தனை வேலையோயென மன உளைச்சலுக்கு ஆளான காஞ்சனாவால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போனது. சாப்பிடுவது முதல் தூங்கும் நேரம் வரை காஞ்சனாவின் அனைத்தும் மாதவி நினைத்தவாறு நடக்க நரக வேதனையாய் சென்றது காஞ்சனாவின் நாட்கள்.
வருடங்கள் செல்ல காஞ்னாவின் பதினாறாம் வயதில் நிறையபேர் பெண் கேட்டனர். காஞ்சனா சென்றுவிட்டாள் வேலைக்கு சிரமமென வரண்களை தள்ளிப்போட்டார் மாதவி. எந்த நகையும் வேணாம் பெண் கொடுத்தால் போதுமென ஆறுமுகம் பெண்கேட்டதும்.. எதோ பெரிய அக்கறைபோல் கணவரிடம் பேசி ஆறுமுகத்திற்கு பெண் கொடுக்க சம்மதம் வாங்கினார் மாதவி.
படிப்பறிவில்லாத மூட்டை தூக்கும் தொழிளாலிக்கு பெண் கொடுக்க ராமசாமிக்கு விருப்பம் இல்லையென்றாலும்.. இங்கிருந்து கஷ்டப்படுவதைக் காட்டிலும் திருமணம் செய்து கொடுப்பது மேலென்றும்.. திருமணத்திற்கு பிறகு மாதவிக்கு தெரியாமல் மகளிற்கு பணஉதவி செய்யலாம் என திட்டமிட்டும் காஞ்சனாவை ஆறுமுகத்திற்கு திருமணம் செய்து வைத்தார் ராமசாமி.
ஆனால் திருமணம் நடந்து மறுவீட்டின் அழைப்பிலேயே மாதவியின் குணம் தெரிந்த ஆறுமுகம்.. வீடு வந்ததும் மாதவியைப் பற்றி காஞ்சனாவிடம் விசாரிக்கவும், மாதவிப் பற்றி கண்ணீரோடு சொல்ல.. இனி எப்பவும் நீ அழவேக் கூடாது.. அந்த வீட்டு பக்கமே போக வேணாம்.. என மனைவிக்கு தைரியமளித்து சொன்னது போலவே உயிருள்ளவரை பார்த்துக் கொண்டார்.
கணவன் உயிர்காக்க வேண்டி நீண்ட வருடங்கழித்து முதல்முறையாய் பண உதவி தேடிவந்த மகளிடம் மாதவி நடந்து கொண்டதும்.. அதன்பின் சாவு வீட்டிலும் மாதவி பிணங்குவதுபோல் நாடகமாடி தன்னை அழைத்து வந்ததில் வீட்டிற்கு வந்ததும்.. ‘காஞ்சனா பணஉதவி கேட்டு வந்தபோதும் உதவி செய்யாமல்.. தற்போது சாவு வீட்டிலும் தன்மையா நடந்துக்காம கத்திட்டு வந்திருக்கியே.? நீயெல்லாம் மனுசியா.?” என ஆத்திரத்தோடு கேட்கவும்..
அத்தனை பேர் முன்ன உங்க பொண்ணு உங்கள அவமானப் படுத்துறா.. அப்படியென்ன அவசியமிருக்கு.? பெத்த அப்பான்னு கொஞ்சம் கூட இல்லாத மகளிற்கு எதுக்கு இத்தனை பார்க்கிறிங்க..? கவிதா இப்படி பேசிடுவாளா என பிடித்துக்கொண்டார் மாதவி.
திருமணமான புதிதில் காஞ்சனாவிற்காக தன் அன்னை பேசினாளே.. இளைய தாரமென இளப்பமா நடத்துறிங்களா என சண்டையிட்டு அன்னை வீடு சென்றிடுவேன் என மாதவி மிரட்ட.. முதல் மனைவியும் இறந்து இரண்டாம் மனைவியும் இப்படி சென்றால் அனைவரிடமும் கேவலமாகிடும் என மாதவியிடம் கோபத்தை காட்டாதிருந்த ராமசாமி.. இத்தனை வருடம் கழித்து பேசி மட்டும் என்னாகப்போகுது என வழக்கம்போல் அமைதியானார்.
ராமசாமிக்கும் மாதவிக்கும் பிறந்த ஒரே மகள் கவிதா. கவிதாவும் தனது பனிரெண்டாம் வகுப்பை முடித்ததும் பக்கத்து வீட்டு பைனை விரும்பி காதல் திருமணம் செய்துகொண்டாள்.
கவிதாவின் கணவன் எந்த வேலைக்கு போனாலும் நான்கைந்து மாதங்கள்தான்.. எதாவது ஒரு காரணத்தோடு நான்கைந்து மாதத்திற்கு வேலைக்கு போகமாட்டான். கவிதாவிற்கு மகன் மகளென இரட்டை குழந்தைகள் பிறந்தது. செலவுகள் அதிகரித்தாலும் கவிதாவின் கணவன்.. மாமியார் இருக்கும் தைரியத்தில் தற்போதும் நிரந்தர வேலையின்றிதான் இருக்கிறான்.
மருமகனிடம் மன்றாடி பேரப்பிள்ளைகளின் படிப்பை வீணாக்க மனமில்லாமல் இன்று வரை மாதவிதான் மகளிற்கு கொடுத்து உதவிக்கொண்டிருக்கிறார்.
பெரிய மருமகன் பேரன் இழப்பிற்கு பிறகு வீட்டு செலவிற்கென கொடுக்கும் பணத்தை பாதியளவு குறைத்துவிட்டார் ராமசாமி. அதற்கும் மாதவி சண்டையிட.. முன்புபோல் தற்போது வருமானம் இல்லையெனவும்.. உன் மருமகனை அவர் குடும்பத்தை பார்த்துக்க சொல் எனவும் கூறிட.. அனைவருக்கும் ராமசாமி ஆகாதவராகிப்போனார்.
தற்போது கவிதாவின் மகன் அரவிந்தன் ஜெயிலில் இருக்க.. அவனை விடுவிக்க வக்கில் கட்டணம்.. எப்படி கேசிலிருந்து விடுவிப்பது என கலங்கிக்கொண்டிருக்க தற்போதும் ராமசாமி அமைதியாகவே இருக்கவும்.. பணத்தை சும்மா வச்சிட்டிருந்தா நாளைக்கு நீ செத்த பின்ன உன் பொணத்தோடவா கட்டிவிடப் போறாங்க.? என தாளித்து கொண்டிருந்தார் மாதவி.
மாதவியின் பேச்சை பொறுக்க முடியாமல்.. ‘என் பெரிய பொண்ணுக்கு பிறந்த பிள்ளைங்களும் எனக்கு பேரன் பேத்திதான.? அவங்களுக்கு எதாவது செய்திருக்கேனா.? இல்ல செய்யத்தான் விட்டியா.? இப்போ உன் பேரன்னதும் துடிக்குதா.? அவன் நடத்தைக்கு இதெல்லாம் வரத்தான் செய்யும்..” என்றார் கோபமாக.
‘அப்போ அரவிந்தன் உன் பேரன் இல்லையா.? என் பேரன் மட்டும்தானா.?” என அதற்கும் எகிற.. ‘காஞ்சனா புள்ளைங்க எப்படி உன் பேரன் பேத்தி இல்லையோ.. அதே மாதிரிதான் கவிதா புள்ளைங்க என் பேரன் பேத்தி இல்ல..” என்றதுதான் கவிதா ஓ..வென அழ ஆரம்பித்தாள்.
மகளின் அழுகையில் மனமிறங்கிய ராமசாமி பேச்சை நிறுத்தினார். உடன்பிறப்பு ஜெயிலில் இருப்பதால் கனிகாவும் சோர்ந்திருந்தாள். அரவிந்தனும் கனிகாவும் தற்போதுதான் கல்லூரி இரண்டாம் வருடத்தில் இருக்கிறார்கள். பேரன் நடவடிக்கை சரியில்லையென ராமசாமி சொல்லும்போதெல்லாம்.. எல்லாத்தையும் தப்பாவே பார்க்காதிங்க என சலுகைக்கு வருவார். ஆனால் கனிகாவிற்கு தெரியும் அரவிந்தனின் நடவடிக்கை.
கல்லூரியில் பெண்களிடம் அரவிந்தனின் நடவடிக்கை சரியில்லையென அன்னையிடம் சொல்லியிருக்கிறாள் கனிகா. கவிதாவும் மகனிற்கு எடுத்துரைப்பாள்தான்.. ஆனால் யார் பேச்சையும் அரவிந்தன் கேட்டாள்தானே.? முதல்ல அப்பாவை ஒழுங்கா சம்பாதிக்க சொல்லு எனவும்.. உங்கம்மா மட்டும் ஒழுங்கா.? முதல் தாரத்து பொண்ணுக்கு என்ன செய்துட்டாங்க.? இங்க யாருக்கும் எனக்கு புத்தி சொல்லும் அருகதையில்லையென அவரவர்க்கு ஒரு பதில் கொடுப்பான் அரவிந்தன்.
ராமசாமியின் பதிலுக்கு வேறு விசயம் என்றால் வறுத்தெடுத்திடுவார் மாதவி. பேரன் விசயத்தில் தற்போது காரியம்தான் முக்கியம் என யோசிக்கலானார்.
அரவிந்தனை வெளியே கொண்டு வரும் முயற்சியில் மாதவியும் கவிதாவும் என்ன முயற்சித்தும் காரியம் ஆகவில்லை. இரண்டு நாள் கழித்து.. ‘உங்க ஃபிரண்டு மாரியப்பன்கிட்ட உதவி கேட்டு பார்க்கலாமில்ல.? அவங்க மகன் கணேசனுக்கு தொழில் ரீதியா நிறைய பேரைத் தெரியும்..” என கண்ணீர் விட்டார் மாதவி.
‘ஆறுமுகம் மூட்டை தூக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுறான்.. மகளுக்கு சொத்து கொடுக்கலைன்னாலும் பரதன் ஆதிரை ரெண்டு பேருக்கும் பணமாவது கொஞ்சம் கொடுன்னு மாரியப்பன் எவ்வளவோ சொன்னான்.. நான் செய்யாததால என்மேல உள்ள மதிப்பே போய்டுச்சி.. என் பேத்தி பெரிய பொண்ணானதுக்கும் ஒன்னும் செய்யலன்னு நீயெல்லாம் மனுசனாடா.? உன்னையெல்லாம் என் நண்பன்னு சொல்லிக்கவே வெக்கமாயிருக்கு.. இனி என்கிட்ட பேசற வேலை வச்சிக்காதன்னு கத்திட்டு போனவன்தான் கிட்டதட்ட ஏழெட்டு வருசம் பக்கம் ரெண்டு பேரும் பேசிக்கிறதேயில்ல..
இத்தனை வருசத்துக்கப்புறம் என்னன்னு போய் அவன்கிட்ட நிக்கிறது.? இந்த பேரப்புள்ளைக்கு மட்டும் இப்படி துடிக்கிறன்னு என்னை இன்னும்தான் கேவலமா நினைப்பான்..” என்றார் வருத்தமாக.
‘திட்டினா என்ன.? நம்ம பேரனுக்காக இந்த ஒருமுறை கேட்டு பாருங்க..” என மாதவி கெஞ்ச.. அப்பொழுதும் ராமசாமி அமைதியாக இருக்கவே.. அவரின் மொபைலிலிருந்து தானே அழைப்பு விடுத்தார் மாரியப்பனிற்கு.
‘இந்தாங்க ரிங்கு போகுது..” எனும்போதே.. ‘ஏய்.. யாரை கேட்டுடி ஃபோன் போட்ட.?” என ராமசாமி கத்த.. அந்த பக்கம் ‘ஹலோ..” என அழைப்பை ஏற்றார் மாரியப்பன்.