மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்பே தேவிகா எழும்பிவிட, நல்ல தூங்கி கொண்டிருக்கும் தன் கணவனை சைட் அடித்தாள். பின் அவளை அறியாமலே அவன் மேலே பதித்த பார்வையை எடுக்க முடியாமல் தவிக்க, அவனும் தூக்கத்தில் புரண்டு படுக்க, சூரியா முளித்துவிட்டதாக எண்ணி தன் பார்வையை எடுக்கலானாள்.
அன்று காலை சமயலறை சென்று சௌந்தர்யாவுக்கு உதவினாள். ஆதிராவும் ஒருவழியாக பள்ளிக்கு கிளம்பிவிட்டாள்.
“அக்கா, ஸ்டோர் ரூம்ல நிறைய வரைந்த ஓவியங்கள் இருந்தது அதன் கீழே சூரியாவின் பெயர் எழுதபட்டிருந்தது. அது அனைத்தும் அவுங்க வரைந்ததா?” என்று வினவினாள்.
“ஆமா தேவி. சூரியாவுக்கு ஓவியம் வரையிறதுல ரொம்ப ஆர்வம் உண்டு. இப்போது மூணு வருடமா அவன் வரையிறது இல்லை அதனால் அப்படியே தூசி படிந்து கிடக்குது,” என்றாள் சௌந்தர்யா.
“ரொம்ப அழகா வரைந்திருக்காங்க, அக்கா” என்று கையில் ஒரு ஓவிய அட்டையை பார்த்தபடியே கூறினாள்.
சற்று நேர உரையாடலுக்கு பின் அனைவருக்கும் டீ எடுத்து சென்று கொடுத்தாள், சூரியா உட்பட. அதன்பிறகு மதிய சமயலுக்கான வேலையை ஆரம்பித்தனர்.
சூரியா நல்ல தூங்காதவனாய் சோம்பல் முறித்தவாறு வெளியே வந்தான். அவனை யாரும் பார்க்காதபடி ஓரமாக அழைத்துச் சென்றாள் கௌரி.
“சூரியா, நான் சொன்ன நீ கோபப்படக்கூடாது. உன் திருமணம் முடிந்ததும் நம்ம குலசாமி கோவிலுக்கு பொங்கல் வைக்கனும்னு வேண்டிருந்தேன். நீ பட்டணத்திற்கு போகும் முன்னால வைக்கணும் அதான் நீ சம்மதித்தால் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை ரொம்ப நல்ல நாளு குருக்கள்ட்ட சொல்லி வச்சிடலாம்,” என்றாள் கௌரி தயங்கியவாறே.
“எல்லாம் உங்கள் விருப்பப்படி தானே நடக்குது இது மட்டும் ஏன் என்கிட்ட கேட்டுட்டு?” என்றான் சூரியா சட்டென்று.
“ஏன்பா சூரியா இப்படி சொல்லுற? நாங்கள் எல்லாமே உன் விருப்பத்துக்கு தானே விட்டோம். கடைசியில அந்த பொண்ணு வேண்டாம்னு சொன்னதுக்கு நாங்க என்ன பண்ணுவோம். நீ என்னனா, அவளயே நினைச்சிட்டு உன் வாழ்க்கையை நீ கெடுக்குறத பாத்துட்டு பெத்த வயிறு சும்மா எப்படிப்பா இருக்கும்? அதுனால தானே உடம்புக்கு முடியாத காலத்திலும் உன் அப்பா உனக்கு பொண்ணு பார்த்தாரு இதுல எங்கள் தப்பு என்னயிருக்கிறது” என்றாள் கண்ணீர் மல்க.
சூரியா மௌனத்தை பதிலாக கொடுத்தான்.
அவள் மீண்டும் தொடர, “உன் பாசத்திற்கு எந்தவித தகுதியும் இல்லாத அவளை நினைத்துக் கொண்டு உன்னை நம்பி வந்தவளின் வாழ்க்கையை கெடுத்து விடாதே இதில் தான் உன் வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்,” என்றாள் சிந்தியகண்ணீரை துடைத்தவாறு.
தன் தாயை பார்த்தபடி சூர்யா கூறியதாவது, “அம்மா, எனக்கு எல்லாம் புரிந்தாலும் என் மனதால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திருமணம் வரை சென்ற காதலை அவ்வளவு எளிதாக என்னால் தூக்கி போட முடியவில்லை. அவளுடைய காதல் போலியானதாக இருக்கலாம் ஆனால் என்னுடைய காதல் நிஜமானது அவளது நினைவுகளை என்னால் மறக்க முடியவில்லை. நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து விட்டேன் என்னை ஏமாற்றி சென்றவளை நினைக்க கூடாது என்று இருப்பினும் அதை மீறிய சிந்தனைகள் என்னை ஆட்கொள்கிறது,”
“சரிப்பா இதிலிருந்து நிச்சயமாக நீ விரைவில் விடுப்பெற்று விடுவாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதுவரை நீ தேவிகாவை துன்புறுத்தாதே என் மகனே. அவளிடம் ஏதாவது குறை கண்டாயா? ரொம்ப நல்ல பொண்ணுப்பா. நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணு. நீங்கள் இரண்டு பேரும் சந்தோஷமாக இருப்பதை நாங்கள் பார்க்கணும்,” கூறினாள்.
“ம்ம்ம்ம்,” என்றான். அங்கே கௌதம் வர, சூரியா அங்கிருந்து சென்றான்.
பின், குடும்ப உறுப்பினர்களிடம் வெள்ளிக்கிழமை குலசாமி கோவிலுக்கு செல்வது பற்றி கூறினாள். அதற்கான ஏற்பாடுகளை சிதம்பரத்திடம் கேட்டு கௌதம் ஒன்றொன்றாக செய்தான்.
அந்த நாளும் வந்தது,
காலை ஏழு மணிக்கெல்லாம் எல்லாரும் கோவிலுக்கு செல்ல கிளம்பிவிட்டனர். பெண்கள் மூவரும் மஞ்சள் நிற ஆடையை அணிந்திருந்தனர். ஆதிராவும் மஞ்சள் நிற உடுப்பு அணிந்திருந்தாள். ஆண்களோ வேஷ்டி சட்டை அணிந்திருந்தனர். அனைவரும் சொகுசு காரில் ஏறினார்கள். சூரியா தான் காரை ஓட்டினான். அவன் பக்கத்திலிருந்த இருக்கையில் தேவி அமர்ந்திருந்தாள். ஆதிரா, தேவியின் மடியில் உட்கார்ந்து கொண்டாள். நடு இருக்கையில் கௌரியும் சிதம்பரமும் அமர்ந்திருந்தனர். அவர்களின் பின்னே கௌதமும் சௌந்தர்யாவும் அமர்ந்திருந்தனர்.
இந்த பயணம் தேவிகாவுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது ஏனென்றால் அவள் திருமணம் முடிந்த முதல் பயணம் தன் கணவனோடும் அவர் குடும்பத்தோடும் செல்வது.
சூரியாவை தவிர மற்ற அனைவரும் பேசி சிரித்தப்படியே இருந்தனர். காரிலுள்ள டேப்பை ஆன் செய்தான், சூரியா. அவனுக்கு பிடித்த பாடலை தேர்வு செய்தான்.
“என்னை கொல்லாதே!
தள்ளி போகாதே! கண்மணி!
சொன்ன இச்சொல்லில் இல்லை உண்மைகள்,” என பாட..
“டேய், சூரியா பாட்டை மாத்துடா. வர வர உன் காதல் தொல்லை தாங்க முடியல,” என்று சொன்னவன் பட்டென்று தன் நாக்கை கடித்துக்கொண்டு தேவிகா இருப்பதை சுதாரித்து கொண்டபின் வசமாக சம்மாளித்தான், “சூரியா, தேவி பக்கத்தில் இருக்கும் போது ஏன் தள்ளிபோகதேனு பாட்டு. அந்த ரிமோட்டை எடுத்து கொடு ஆதிரா பாப்பா,” என்றான் கௌதம். அவளும் உடனே எடுத்துகொடுத்துவிட்டாள்.
“சின்ன சின்ன கண்ணசைவில்
உன் அடிமை ஆகவா.
செல்ல செல்ல முத்தங்களில்
உன் உயிரை வாங்கவா.
லாளி லாளி
நானும் தூளி தூளி.
மெல்ல மெல்ல என்னுயிரில்
உன்னுயிரும் ஆசையுதே.
துள்ள துள்ள என்னிதயம்
நம்முயிருள் நிறையுதே.
லாளி லாளி
நீ என் தூளி தூளி.
உன்னை அள்ளி ஏந்தியே
ஒரு யுகம் போகவா.
தலைமுதல் கால்வரை
பணிவிடை பார்க்கவா.
காலை அணைப்பின் வாசமும்
காதில் கிருங்கும் சுவாசமும்
சாகும் போதும் தீர்ந்திடாது வா உயிரே.
காதில் உடைக்கும் படமும்
மார்பில் கிடக்கும் நேரமும்
வாளும் வரைக்கும் தேய்ந்திடாது வா உயிரே,” என்ற அழகான படலை அனைவரும் ரசித்துக்கொண்டே சென்றனர்.
“ம்ம்ம்ம் இது எல்லாம் ஒரு பாட்டா.. அப்பா! ரௌடி பேபி பாட்டு வைங்க,” என்று கத்தினாள்.
“இவளுக்கு எப்பவும் இந்த ரௌடி பேபி தான்,” என்று முணுமுணுத்தாள் சௌந்தர்யா.
“பிள்ளைங்களா! நாம இப்போது கோவிக்கு போறமா அல்லது சுற்றுலா போறமா? கோவில் அருகாமையில் வந்தாச்சு பாட்டை ஆப் செய்ங்க,” என்றார் சிதம்பரம். கௌதமும் அணைத்துவிட்டான்.
அந்த கோவிலில் அம்மன் கிழக்கு நோக்கி வீற்றிருந்தாள். மிகவும் சக்தி வாய்ந்த அம்மன், ஊர் மக்களை காக்கும் தெய்வமாக ஊர் எல்லையில் அமைந்திருந்தது. கோவில் அருகாமையில் ஒரு பெரிய தெப்பை குளம் ஒன்று காணப்பட்டது. வெள்ளிக்கிழமை என்பதால் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. சிதம்பரம் குடும்பத்தார் கோவில் அருகாமையில் போய் இறங்கினார்கள். கோவிலை சுற்றி உள்ள அரசமரங்கள் இவர்களின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது போல வளமான குளிர்ந்த காற்றை ஒரு சேர வீசி அவர்களின் தேகம் வருட செய்தது. பின், அனைவரும் ஒருவர் பின் ஒருவராக நின்று தெப்பை குளத்தில் கால் நனைக்க ஆரம்பித்தனர். முதலில் நனைத்த கௌரி, “எல்லோரும் பார்த்து கால்களை நனையுங்கள். பாசி படிந்து கிடக்குது, வழுக்கி விழுந்துவிடாதிங்க! ஆதிராவை இடுப்பில் தூக்கி வைத்துக் கொள்ளுங்கள்,” என்றவள் பின் நோக்காமல் கோவிலைப் பார்த்து நகர்ந்தாள்.
அவள் பின்னே சௌந்தர்யா கால் நனைக்க அவளை தொடர்ந்து, ஆதிராவை தூக்கிக்கொண்டு கௌதமும் கால் நனைத்து சென்றனர். பின் சிதம்பரம் கால் நனைக்கும் போது நிலைதடுமாறி பாசி வழுக்கி சென்றது. அப்போது அவர் பின்னால் நின்ற தேவிகா சிதம்பரத்தின் கையை பிடித்து இழுக்கும் போது அவளின் காலும் சறுக்கியது சட்டென்று இருவரையும் கரையில் நின்று பிடித்தான், சூரியா. அவர்கள் இருவரையும் அவனால் ஈடுகட்டி பிடிக்க முடியவில்லை.
“தேவிகா! நீ மேல வந்துரு. நான் அப்பாவ பிடிக்கிறேன்,” என்றான் சூரியா. அவன் கூறியபடியே தேவிகா மேலவர, சூரியா தன் தகப்பனாரை கீழே விழாதபடி தாங்கிகொண்டான்.
“என்னப்பா நீங்க, பார்த்து இறங்க மாட்டீர்களா? கீழே விழுந்திருந்தால் என்ன ஆயிருக்கும்?” என்று கரிசனையோடே தன் தந்தையை படியில் ஏற்றி விட்டான்.
தேவிகாவும் சூர்யாவின் கைகளை பயத்தில் கோர்த்தவள் இன்னும் எடுத்தபாடில்லை. தேவிகாவுக்கு ஏனோ மகிழ்ச்சி குத்தாட்டம் போட ஆரம்பித்தது. அவனும் அதை கண்டு கொள்ளாதவனாய், அவளின் கையை பிடித்து கொண்டு, கால்களை இருவரும் சேர்ந்தே நினைத்தனர். கால் நனைத்து பின் இருவரும் மேலே வந்து கோவிலில் நுழைந்தனர். பின்னர் சாமிக்கு பொங்கலிட்டு படையல் வைத்தபின் அங்கு வந்திருந்த மக்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.
சௌந்தர்யா, கௌதமிடம் சூரியாவை பார்த்து கண்காட்டி, “உங்க தம்பிய பாருங்கள். புதுசா கல்யாணம் முடிந்தவன் போலவா இருக்கான். நாம தான் ஏதாவது செய்து சூரியாவுக்கும் தேவிகாவுக்கும் இடையே நெருக்கத்தை உண்டுபண்ணணும்,”
சூரியாவை பார்த்தவன் “ம்ம்ம்ம். நீ சொல்றது சரி தான் இல்லான இவன் வாழ்க்கை முழுவதும் அந்த வீணாபோனவள நினைத்தே காலத்தை கடத்திடுவான். இப்போ பாரு,” என்றான் கௌதம்.
“எல்லாரும் ஒன்னா வாங்க நம்ம குடும்பத்தோட ஒரு போட்டோ எடுப்போன்,” என்றான் கௌதம். ஒருவழியாக எல்லாரும் சேரந்து போட்டோ எடுத்தனர்.
“சூரியா, தேவி இரண்டு பேரும் மட்டும் நில்லுங்கள்” என்றான் கௌதம்.
சூரியா முறைக்க, “இல்லடா சூரியா, திருமணம் முடிந்து முதல் முதலா வந்த இடம் அதை பிறகு பார்க்க பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும் டா,” என்றான். அவனுக்கு உறுதுணையாக சௌந்தர்யா இருக்கவே சூரியாவால் அண்ணணின் பேச்சை தட்ட இயலவில்லை.
ஒரு போட்டோ எடுத்தான், “சூரியா, தேவியின் அருகே கொஞ்சம் தள்ளி வா,” என்றான் கௌதம்.
“தேவி தோள்ல ஒரு கை வச்சிக்கோ, சூரியா. அப்போது தான் சூப்பரா இருக்கும்,” என்றாள் சௌந்தர்யா.
‘இந்த கௌதமுக்கும், அண்ணிக்கும் என்ன ஆச்சு? வேணும்னே தான் அண்ணன் இப்படி பண்றான்’ என்று யூகித்துக்கொண்டான்.
“சூரியாவுக்கு ஒரு வேளை வெக்கம் போல தேவி நீ சூரியாவை பிடித்துக்கொ!,” என்றாள் கௌந்தர்யா விளையாட்டாக. தேவியும் அவள் கூறிய அடுத்த மாத்திரமே சூரியாவின் கைகளை கோர்த்தாள். சூரியாவும் வேறு வழியின்றி இரு போட்டோ எடுக்க அனுமதித்தான். தேவிகாவிற்கு அளவு கடந்த மகிழ்ச்சி அது அவள் முகத்திலேயே பிரதிபலித்தது. பின்னர் அனைவரும் அம்மனின் அருள் ஆசி பெற்று மகிழ்ச்சியோடு வீடு திரும்பினர்.
நாட்களும் உருண்டோடியது,
தேவிகா, சூரியா குடும்பத்தோடு சகஜமாக பழக ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில், சூர்யா வரைந்த ஓவியங்களை தூசு துடைத்து பின் அதை ஒவ்வொரு அறையின் அமைப்புக்கு ஏற்றாற்போல் மாட்டி வைத்து, அவளும் அழகு பார்த்து வீட்டில் உள்ளவர்களையும் ரசிக்க செய்தாள். அவளது அறையிலும் இரண்டு ஓடும் குதிரைகளின் அழகிய ஓவியத்தையும் பொருத்தினாள். நாளை சென்னை கிளம்பும் நிலையில் அவளது துணி மணிகளை இரண்டு பைகளில் அடுக்கிவைத்தாள் அதுகூடவே அவளுக்கு மிகவும் பிடித்த இரண்டு ஓவியங்களை வைத்திருந்தாள்.. சூர்யாவிடம் எந்த ஒரு பெரிய மாற்றமும் தென்படவில்லை. அவன் அனைத்தையும் கண்டும் காணாதது போல இருந்தான். ஒருவேளை அவன் மனதை தேவிகா ஆட்கொள்ள ஆரம்பித்துவிட்டாளோ என்னவோ?
அன்று பதினொன்று மணி அளவில், தேவிகாவின் பெற்றோர், மற்றும் அண்ணன் எதிர்பாராத வருகை தர, மகிழ்ச்சி கடலில் குதித்தாள். அனைவரும் அவளை கட்டி தழுவி நலம் விசாரித்தனர். சூரியாவின் குடும்பத்தினர் அவர்களை வரவேற்று நன்கு உபசரித்தனர்..சூரியாவும் அவர்களிடம் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை. தேவிகாவின் வீட்டிலிருந்து முறுக்கு, பலகாரம் என அனைத்து வகை பண்டங்களும் கொண்டு வந்தனர்.
தேவிகாவின் தந்தையும் சூரியாவின் தந்தையும் நெருங்கிய நண்பர்கள், “என் பையனுக்கு உள்ளூர்ல ஒரு பொண்ண பார்த்திருந்த செய்தி உன்கிட்ட முன்னயே சொன்னேன்ல சிது(சிதம்பரம்). தேவிகாவுக்கு கல்யாணம் முடிஞ்ச அப்புறம் பையனுக்கு பார்த்தா போதும் சொல்லி கொஞ்சம் தள்ளி வைத்து இருந்தேன் இனி அதை ரொம்ப நாளு இழுக்க வேண்டாம்னு மனசுல பட்டது. அந்த பொண்ணு வீட்டிலேயும் சம்மதம் அதனால இந்த மாதம் கடைசியில, பொண்ணுக்கு பூ வைத்து உறுதி பண்ணிரலாம்னு இருக்கேன். நீ என்ன நினைக்கிறாய்?”
“ஓ அப்படியா சிவா (சிவநேசன்) நல்ல விஷயங்களை தள்ளிப்போடாதே. சட்டுபுட்டுன்னு முடித்து விடுவது தான் நல்லது,” என்றார் சிதம்பரம்.
“ஆமா, நீ சொல்றது சரி தான்,” என்றார் சிவநேசன். அப்படியே அவர்களின் பேச்சு தொடர்ந்தது. பின் அனைவரும் மதிய உணவு உண்டனர். தேவிகாவை நல்ல இடத்தில் தான் கரை சேர்த்திருக்கிறோம் என்ற மகிழ்ச்சியில் மாலை வீடு திரும்பினர்.
அன்றிரவு தேவிகாவிற்கு தூக்கமே வரவில்லை. அவள் அனைவரையும் விட்டு பிரிந்து பட்டணத்திற்கு போவதனால் அவளுக்கு மன உளைச்சலாக இருந்தது. பக்கத்தில் சூர்யாவோ நல்லா தூங்கிகொண்டிருந்தான். பட்டணத்திற்கு சென்ற பிறகு சூரியா மற்றும் தேவிகாவின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்று பார்க்கலாம்.
மறுநாள் காலை சூர்யாவும், தேவிகாவும் அவசர அவசரமாக கிளம்பி கொண்டிருந்தனர். ஆதிரா தேவிகாவோடு குறுகிய காலகட்டத்திலேயே மிகவும் நெருக்கமாகி விட்டதால் தேவிகாவை பிரிய மனமின்றி அழுதுகொண்டே இருந்தாள். தேவிகாவிற்கு ஆதிரா அழுவதை பார்த்து கண்ணீர் துளிகள் பொங்கியது. சிதம்பரம் மற்றும் கௌரியின் முகமும் வாடிபோய் கிடந்தது.
அதை கவனித்த சௌந்தர்யாவும் ஆதிராவிடம், “சித்தி, இங்கே பக்கத்துல தானே போறாங்க இன்னும் ஒரு பதினைந்து நாளில் நம்ம சித்தியை பார்க்க போகலாம் சரியா,” என்று ஆதிராவை சமாதானப் படுத்தியது போல் தேவிகாவையும் சமாதானப் படுத்தினாள்.
“ம்ம்ம்ம்….” என்றாள் ஆதிரா. தேவிகா ஆதிராவை தன் இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு அன்பு முத்தம் பதித்தாள். சூரியா வியப்போடு தேவிகாவையும் ஆதிராவையும் பார்த்தான். கிளம்பும் முன்னர் தன்னுடைய அன்னையாக பாவிக்கும் கௌரியையும், அக்கா சௌந்தர்யாவையும் கட்டிக் தழுவிகொண்டாள். பின்னர், இருவரும் குடும்பத்தினரோடு பிரியா விடைபெற்று பட்டணம் கிளம்பினர்.
கௌதம் இருவரையும் பேருந்து நிலையம் கொண்டு வந்து விட்டான். பேருந்தும் கிளம்பும் நிலையில் நின்றதால் இருவரும் பேருந்தில் ஏறி பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்தனர். கௌதம் கையசைத்து வழியனுப்பினான்.
தேவிகாவின் கண்களில் மளமளவென கண்ணீர் பெருக்கெடுத்தது அதை சூரியாவிடம் காட்டிக்கொள்ளாதவாறு அவ்வப்போது துடைத்தவாறு இருந்தாள். அவள் நினைப்பதுபோல் சூரியா ஒன்றும் கவனிக்காமல் இல்லை. இருவருக்கிடையையும் மௌனமே குடிக்கொண்டது. பேருந்தும் வேகமாக பாய்ந்தது. போருந்தில் போடப்பட்டிருந்த மெல்லிய மெல்லிசை இதயங்களை வருட, நேற்றிரவு ஒழுங்காக தூங்காத தேவிகா இருக்கையில் தலைசாய்த்து தன்னை அறியாமல் தூங்கினாள். பின், சற்று நேரத்தில் தன் தலையை சூரியாவின் தோள்பட்டையில் சாய்த்து நிம்மதியான தூக்கத்தை தழுவினாள். சூரியாவோ, நல்ல அசந்து தூங்கி கொண்டிருப்பவளை எழுப்பவும் மனம் வராது என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தான். அவனது மனதையும் தேவிகா கொஞ்சம் கொஞ்சம் ஆக்கிரமிப்பு பண்ணியிருக்க கூடும் இல்லையென்றால் நம்ம ஹீரோ சார் இப்போது சும்மா இருப்பாரா? சூரியா தேவிகா மீதுள்ள காதலை எப்போது உணர்வான்? தன் முதல் காதல் ஏமாற்றத்தை எப்போது தகர்த்தெறிவான்?