வெலவெலத்துப் போய் ஓடி வந்தவள் அவசர அவசரமாகத் தன் வீட்டுக்குள் நுழைந்து வாசல் கதவைத் தாழிட்டுக் கொண்டு அப்படியே கதவில் சாய்ந்து நின்றாள்!
“ஒரு வேளை நா சொன்னது அவனுக்கு கேட்டிருக்குமோ.. நல்ல வேளை நா அவன லூசுன்னு சொன்னதுக்கு அவன் என்னை எதும் சொல்லல..” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்!
ஓடி வந்ததில் மூச்சு வாங்கியது! வேக வேகமாக மூச்செடுத்து விட்டு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.
சில நிமிடங்கள் கதவில் சாய்ந்தபடியே நின்றிருந்து மூச்சு சீரானதும் சமையலறைக்குச் சென்று தண்ணீர் எடுத்துப் பருகினாள்.
“சரியான ஆளா இருப்பான் போலயே.. எப்டி மெரட்டறான்.. கயலக்கா வீட்ல அவன் இருப்பான்னு நா நெனச்சு கூட பாக்கல.. அவன் எப்டி இங்க வந்தான்.. இவன் முகிலண்ணாவுக்கு சொந்தமாயிருப்பானோ.. ஆனா கரெக்ட்டாதான் கேட்டான்ல.. அண்ணனும் அக்காவுமா கட்டிக்குவாங்க.. நானும் யோசிக்காமலயே முகிலண்ணா.. கயலக்கான்னே கூப்பிட்டுகிட்டிருந்திருக்கேன்..” என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்.
“எப்டி நெட்டக் கொக்கு மாதிரி இருக்கான்.. ஒரு வேளை வண்டிய கீழ போட்டத முகிலண்ணா கிட்ட சொல்லியிருப்பானோ.. ஒரு வேளை சொல்லியிருந்தா.. இனிமே வண்டி குடுக்க மாட்டாங்க.. சரி போ! அதுவே ஒரு டப்பா வண்டி! அவங்க அத குடுக்கறதுக்கு குடுக்காமலேயே இருக்கலாம்..” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் தன்னை மிரட்டியவனை நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டாள்.
“அவனைதான் நா லூசுன்னு சொன்னேன்னு முகிலண்ணாவுக்கு தெரிஞ்சா.. அதெப்டி தெரியும்.. ஒரு பொண்ணு தன்னை லூசுன்னு சொல்றான்னு எந்த ஆம்பளையாவது வெளிய சொல்லிக்குவானா.. நா சொன்னது அவன் காதில விழும் போது அவன் மூஞ்சி எப்டியிருந்திருக்கும்.. இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி மாறியிருக்கும்ல.. ஹா.. ஹா.. ஹா.. அத பாக்க முடியாம போய்டிச்சே டீ.. பரவால்ல.. ஆனா அவன் மூஞ்சி அப்ப எப்டி போய்ருக்கும் நெனச்சி பாக்கறதே காமெடியாதான் இருக்குடீ.. ஹா.. ஹா.. ஹா..” என்று நினைத்து நினைத்து சிரித்தபடியே தன் வேலைகளை கவனிக்கலானாள்.
அனைவரும் ஒன்றாக அமர்ந்து அரட்டையடித்தபடி சாப்பிட்டு முடித்ததும் முகில் உறங்கச் சென்றுவிட, குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு மடிக்கணிணியில் வேலையை ஆரம்பித்திருந்த தன் அண்ணனிடம் வந்தாள் கயல்விழி!
“என்ன தமிழ்? இந்த பக்கம் வேலைன்ன? எப்ப போகணும்?” என்று கேட்டாள் கொட்டாவி விட்டபடி!
“எங்க டீம் மெம்பர்ஸ் ரெண்டு மூணு பேர் இன்னும் வர வேண்டியிருக்கு! அவங்க ரீச் ஆனதும் மெசேஜ் வரும் கயல்! எப்டியும் ஈவ்னிங் 4 மணிக்கு மேல ஆகும்னு சொல்லிருக்காங்க! அப்றம்தான் கிளம்பணும்! ஒண்ணும் பிரச்சனையில்ல! நீ ரெஸ்ட் எடு!” என்று தங்கையை அனுப்பி வைத்தான்!
“சரி ஓகே! ஏதாவது வேணும்னா எழுப்பு! நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்!” என்று சொல்லிவிட்டு உறங்கச் சென்று விட்டாள் கயல்! தமிழ் தன் மடிக்கணிணியில் மூழ்கிப் போனாலும் நடுநடுவே எதிர் வீட்டுப் பெண்ணின் நினைவு வந்து வந்து சென்றது!
[the_ad id=”6605″]
டேய்! தங்கச்சி சொன்னது மாதிரி அவ மாற்றான் தோட்டத்து மல்லிகைப் பூ! அவளப் பத்தி நெனக்கறது வேஸ்ட்டு! தப்பும் கூட! ஒழுங்கா வேலையப் பாரு! உனக்குன்னு பொறந்த ஒரு ஈர்க்குச்சி எங்கியாவது காஃபி ஷாப்ல உக்காந்து ஆறிப் போன காபிய வெச்சிகிட்டு ஃப்ரஞ்ச் ஃப்ரைய மொக்கிகிட்டே ஆப்பிள் ஐ-போனை காட்டி சீன் போட்டுகிட்டு ஃப்ரண்ட்ஸோட மொக்க போட்டுகிட்டு இருப்பா.. கூடிய சீக்கிரம் வந்து உன்ன சந்திப்பா.. அது வரை பொறு மனமே.. என்று தனக்குத் தானே கூறிக் கொண்டான்!
ஹூம்.. என்ன இருந்தாலும் இந்த உள்ளூர் வெங்காயத்துக்கு ஈடு இணை எந்த ஃப்ரஞ்ச் ஃப்ரையும் ஆகாதே.. என்றும் நினைத்துக் கொண்டான்! வேணாம்டா தமிழ்! தப்பு! தப்புன்னா தப்புதான்! செய்யக் கூடாது! என்று தன் மனதுக்குக் கடிவாளம் போட்டுக் கொண்டபடி தன் வேலையைத் தொடரலனான்!
எவர் வாழ்விலும் பெரிதாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் ஒரு மாதம் ஓடிப் போனது!
ஒரு நாள் மாலை கயல்விழி தன் குழந்தையுடன் தன் குடியிருப்பின் நடைவழியில் (காரிடாரில்) மற்றொரு பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் பேசியபடி நின்றிருக்க,
“அண்ணீ.. கயல்விழி அண்ணீ..” என்று விளித்தபடி நிரஞ்சனாவும் அங்கு வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டாள்! ஆமாம்! அன்று இவளிடம், தமிழ் கயலை அண்ணியென்று விளிக்கச் சொல்லி கட்டளையிட்டதை எந்த மறுப்புமின்றி செய்யத் தொடங்கியிருந்தாள் நிரஞ்சனா! (பாவம்! அதுல என்ன உள்குத்து இருக்குன்னு இந்த பச்ச புள்ளைக்கு தெரியல.. சரி! அத விடுங்க.. ??????)
இவர்கள் நிற்பதைப் பார்த்து அந்த தளத்து மற்ற பெண்களும் வந்து இவர்களுடன் இணைந்து கொண்டனர்!
அவர்கள் டீவி சீரியல் முதல் குழந்தை உணவு, மாமியாரின் உடல் நிலை, மருத்துவமனை வாசம், மரச்செக்கு எண்ணை, புடவை விளம்பரம் என்று எதையெல்லாமோ பற்றிப் பேசிவிட்டு கடைசியாக புடவைக்குச் சரியான ரவிக்கை பற்றி பேச்சு வர, சமீபத்தில் தைக்கக் கொடுத்த ரவிக்கையைச் சரியாகத் தைக்காமல் துணியைப் பாழ்படுத்தி விட்டதாகச் சொல்லி அங்கலாய்த்தாள் கயல்விழி!
“அந்த புடவை அவ்ளோ அழகா இருக்கு; சரி டிசைனர் ப்ளவுஸ் தெச்சா நல்லா இருக்குமேன்னு அந்த கடையில குடுத்தேன்.. பாவி நல்லா தெய்ப்போம் மேடம்ன்னு சொல்லி சொல்லி துணிய நாசம் பண்ணிட்டான்! மனசே ஆற மாட்டிது..” என்றாள் கயல்விழி!
“எது.. அந்த ரோட்டு முனையில இருக்கற பெரிய டைலர் கடையா?” ஒருத்தி கேட்டாள்!
“ஆமாக்கா! பெரிசா மாடல் படம்லாம் வெச்சி விளம்பரம் குடுத்திருக்கானேன்னு போனேன்க்கா…”
“எல்லாம் ஃப்ராடு கயல்! இன்டர்நெட்லேர்ந்து படத்தை எடுத்து விளம்பரம் பண்ணிடறாங்க.. நம்மதான் கவனமா இருக்கணும்.. தைக்க தெரியாதவங்கதான் பெரிய விளம்பரம் குடுக்கறாங்க.. வீட்டுக்குள்ள ஓட்டை மிஷின் வெச்சி தைக்கற ஒரு இருமல் பேஷன்ட்கிட்ட பயங்கரமா திறமை இருக்கும்! ஆனா அவங்களப் பத்தி அதிகமா வெளிய தெரியாது! அப்டியே தெரிஞ்சாலும்… நாம அவங்கள நம்பி குடுக்க மாட்டோம்.. நான் சொல்றது கசப்பா இருந்தாலும் அதான் உண்மை!” என்றாள் வருத்தம் தோய்ந்த குரலில்!
இப்படியே சில நிமிடங்கள் பேசியிருந்துவிட்டு எல்லாரும் கலைந்து சென்றனர்!
மறுநாள் காலை நிரஞ்சனா கயல்விழியைத் தேடி வந்தாள். அப்போது கயல்விழி நேற்று கூறிய அந்த ரவிக்கையை எடுத்து வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்!
“இதான் அந்த ப்ளவுசா அண்ணி?”
“ஆமா ரஞ்சி!”
அதைத் தன் கையில் எடுத்துப் பார்த்த நிரஞ்சனா,
ஓ.. ஜாயிண்ட்ல துணி நூல் பிரிஞ்சிருச்சா.. என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
“ஆனா அளவு சரியா இருக்கா அண்ணி?!” கயல்விழியிடம் வினவினாள்.
“அளவெல்லாம் சரியா இருக்குமா! ஆனா இப்டி நூல் பிரிஞ்சி போய் அசிங்கமா ஆயிருச்சு.. இனிமே இத எப்டி போடறது.. தூக்கி குப்பையிலதான் கடாசணும்..” என்று அங்கலாய்த்தாள்.
“இருங்கண்ணி! இப்ப வரேன்!” என்றபடியே அந்த ரவிக்கையை எடுத்துக் கொண்டு தன் வீட்டுக்கு ஓடினாள்.
“ஏய்.. ரஞ்சி.. என்ன பண்ணப் போற..” என்று கயல்விழி சத்தமாகக் கேட்டது நிரஞ்சனாவை சென்று சேரவில்லை! அதற்குப் பதில் அவளைப் பார்க்க வந்து கொண்டிருந்த தமிழிடம் வந்து சேர்ந்தது.
“வா தமிழ்! ஒண்ணுல்ல.. என் புது ப்ளவுஸ் ஒண்ணு.. டைலர் சரியா தெய்க்கல.. டைலர்கிட்ட சரி பண்ணி தர சொல்லி கேட்டுட்டு வந்து.. சோபா மேல வெச்சிருந்தேன்.. எதிர் வீட்டு பொண்ணு, அத எடுத்துட்டு அவசரமா போனா.. அவளதான் கூப்பிட்டேன்..” என்று நீளமாய் சொல்லிக் கொண்டே காபி கலந்து எடுத்து வந்து அண்ணனிடம் கொடுத்தாள்.
ஓ.. எதிர் வீட்டு மல்லிகையா.. சரி.. சரி.. என்று நினைத்தபடியே காபியை வாங்கிப் பருகினான்.
கயல்விழி தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு சிணுங்கிய முத்தழகியைத் தூக்கிக் கொண்டு வர அவளை தமிழ் வாங்கிக் கொண்டான்.
[the_ad id=”6605″]
“அழகம்மா.. தூங்கி எழுந்துட்டீங்களா.. மாமாகிட்ட வாங்க..” என்று தூக்கிக் கொஞ்சத் தொடங்க, குழந்தை கிளுக்கிச் சிரித்தது!
கயல்விழியும் தமிழும் முத்தழகியுடன் விளையாடியபடி பேசிக் கொண்டிருந்தனர்.
“முகில் எங்க? தூங்கறானா?”
“இல்ல தமிழ்! இப்பல்லாம் டே டூட்டிதான்! சாயங்காலம் வருவாரு..”
“ஓ.. சரி.. சரி..”
“நீ என்ன இந்த பக்கம் வேலையா?”
“ம்..ஆமா.. ஹே.. கயல்! சொல்ல மறந்துட்டேன் பாரு.. ஒரு ஜாப் ஆஃபர் வந்திருக்கு! ட்ரை பண்றியா?” என்று பேச்சினூடே கேட்டான்.
“நானா? எப்டிடா? குழந்தைய வெச்சுகிட்டு.. முகில் என்ன சொல்வார்னு தெரியலயே..”
“முகில் எதுவும் சொல்ல மாட்டான்! உன்னால முடியும்! நீ சரின்னு சொல்லு!”
“இப்ப வேணாண்டா.. குழந்தை கொஞ்சம் வளரட்டும். அவ ஸ்கூல் போக ஆரம்பிச்சப்றம் பாத்துக்கலாம்!” என்றாள் கயல்.
“ஏண்டீ.. படிச்ச படிப்பு வீணாப் போகுதுல்ல..”
“இல்ல தமிழ்! இவள விட எனக்கு என் கரீர் பெரிசில்ல.. நா கட்டாயம் வேலைக்கு போவேன்! ஆனா அதுக்காக இவளோட பொறுப்ப தட்டி கழிக்க மாட்டேன்!” என்றாள் தெளிவாக!
“ம்.. சரி! உன் வாழ்க்கை! உனக்கு எது சரின்னு படுதோ அத செய்! ஆனா இந்த ஆஃபர் போய்டும்!”
“போனா போகட்டும்! இத விட இன்னும் பெட்டரான என் மனசுக்கு பிடிச்ச மாதிரி வேலை கண்டிப்பா கிடைக்கும்!” என்றாள் நம்பிக்கையுடன்.
“எப்டிடீ.. அப்டியே அம்மா மாதிரியே பேசற?” என்று வியந்தான் தமிழ்!
“அம்மாவோட பொண்ணுன்னா அம்மா மாதிரிதானே பேசணும்..” என்று கூறி சிரித்தாள் கயல்.
அண்ணனும் தங்கையும் இப்படியே ஏதேதோ பேசிக் கொண்டே குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்க, ஒரு மணி நேரம் கழிந்தது.
“அண்ணி.. கயலண்ணீ..” ஏலம் விட்டபடி வந்த நிரஞ்சனா தமிழைப் பார்த்துவிட்டு பிரேக் போட்ட வாகனம் போல சட்டென்று நின்றாள்.
இந்த நெட்டக் கொக்கு எப்ப வந்திச்சு.. என்று நினைத்துக் கொண்டாள்.
ஆனால் தமிழ் அவளைக் கண்டு கொள்ளவில்லை! (ஹூம்.. அப்டி கண்டுக்காம இருக்காராம்.. நாங்க நம்பிட்டோம்.. ?????????)
“என்ன ரஞ்சி.. அங்கியே நின்னுட்ட.. வா..” என்று அழைத்தாள் கயல்.
தான் இங்கே இருந்தால் அந்தப் பெண் எதாவது தவறாக நினைத்துக் கொண்டுவிடப் போகிறாள் என்று நினைத்து, தங்கை மகளைத் தூக்கிக் கொண்டு எழுந்து உள்ளே போய்விட்டான்!
“இல்லண்ணி.. இந்த ப்ளவுஸ் பாருங்க.. அந்த பிரிஞ்சி போனது தெரியாம டிசைன் செய்திருக்கேன்.. உங்களுக்கு பிடிக்குதா?” என்று கூறிக் கொண்டே பாழாகிப் போனதாய் சொன்ன கயலின் ரவிக்கையை அதன் குற்றம் குறைகளை மறைப்பது போல கண்ணாடிக் கற்கள் ஒட்டி பட்டு நூல் மற்றும் ஜர்தோசி கொண்டு அழகாக வேலைப்பாடு செய்து எடுத்து வந்திருந்தாள்.
பார்ப்பதற்கே மிக மிக அழகாக இருந்தது அந்த ரவிக்கை!
“ஹேய்.. வாவ்.. என் ப்ளவுசா இது? எப்டி.. இவ்ளோ அழகா மாத்திட்ட.. சூப்பரா இருக்கு ரஞ்சி.. ஆமா.. உனக்கு தெய்க்கத் தெரியுமா?” என்று கயல்விழி கேட்க,
“தெய்க்கல்லாம் தெரியாது அண்ணி! அம்மா சூப்பரா தெய்ப்பாங்க.. நா அத பாத்து கொஞ்சம் கொஞ்சம் ஒட்டு போட கத்துக்கிட்டேன்!” என்று பதிலிருத்தாள் நிரஞ்சனா!
“ஹே.. தெய்க்க தெரியாதுன்னு சொல்லிட்டு.. இப்டி சூப்பர் வேலை பண்ணிருக்க.. உண்மைய சொல்லு.. நீ ஃபேஷன் டிசைனிங்க்தானே படிச்சிருக்க?” என்று கயல்விழி கேட்டாள்.
“நல்லா கேட்டீங்க போங்க.. நானாவது ஃபேஷன் டிசைனிங்காவது.. பத்தாங்க்ளாஸ் பாஸ் பண்ணி முடிக்கவே பத்து முறை குட்டி கர்ணம் போட்டேனாம்.. நா எங்கேந்து ஃபேஷன் டிசைனிங்க் படிக்கறது..” என்று கூறி வாய் விட்டு சிரித்தாள்!
“நானூ.. நல்லா தெச்சிருக்கேன்… சும்மா காமெடி பண்ணாதீங்கண்ணி! அம்மா மட்டும் இத கேட்டிருந்தாங்கன்னா.. விழுந்து விழுந்து சிரிச்சிருப்பாங்க..” என்றாள் நிரஞ்சனா!
“ஏன் இப்டி சொல்ற? நல்லாதானே தெச்சிருக்க..” என்று கேட்டாள் கயல்விழி.
“நல்லா தெச்சிருக்கேனா.. நீங்க வேற.. எங்கம்மா எனக்கு தையல் சொல்லி குடுக்க ட்ரை பண்ணி ட்ரை பண்ணி நொந்து நூடுல்ஸ் ஆயிட்டாங்க.. கடைசியில உனக்கெல்லாம் தையல் வரவே வராதுன்னு தண்ணி தெளிச்சி வுட்டாங்கண்ணி…” என்று சிரித்துக் கொண்டே கூறினாள் நிரஞ்சனா!
[the_ad id=”6605″]
உள்ளறைக்குப் போனாலும் நிரஞ்சனாவின் பேச்சு தமிழின் காதுகளில் தெளிவாகவே விழுந்தது! கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தவனுக்கு திருவிளையாடல் படத்தில் சிவாஜி சார், “பாட்டும் நானே..” என்று பாடி, ஹேமநாத பாகவதரின் ஆணவத்தை அடக்கிய காட்சி கண் முன்னே வந்து போனது!
என்ன இவ.. இவ்ளோ பெரிய வித்தை தெரிஞ்சி வெச்சிகிட்டு சரியா தையல் வராதுன்னு தண்ணி தெளிச்சி விட்டாங்கன்னு கூலா சொல்றா என்று நினைத்துக் கொண்டான்!
என்ன இவ.. இவ்ளோ சூப்பரா தைச்சிட்டு தைக்க தெரியாதுன்னு சிம்பிளா சொல்றா? என்று கயல்விழியாலும் நினைக்காமல் இருக்க முடியவில்லை!
“ஆமா அண்ணி.. ஸ்கூல்ல சேர்த்து படிக்க வெச்சாங்க.. படிப்பு வரல.. தையல் சொல்லி குடுத்தாங்க.. தையலும் வரல.. ஏதோ கொஞ்சம் சுமாரா சமையல் செய்வேன்.. அரை குறையா வீட்டு வேலை செய்வேன்.. அதனால வீட்ல வெச்சிகிட்டா இனிமே சரி வாராதுன்னு அவசர அவசரமா ஒரு மாப்ளைய பாத்து.. ஏனோ தானோன்னு ஒரு கல்யாணத்த பண்ணி அனுப்பிட்டாங்க..” என்றாள் சிரித்தபடி. அவள் சிரித்துக் கொண்டே கூறினாலும் அதன் பின்னே வருத்தமோ ஏக்கமோ ஏதோ ஒன்று இருப்பதாகத் தோன்றியது தமிழுக்கு!
கயல்விழியும் வேறு அறைக்குச் சென்று போட்டுப் பார்த்துவிட்டு மிக மிக சரியாக இருப்பதாகச் சொல்ல,
“சரி அண்ணி! நா வரேன்!” என்று நிரஞ்சனா நகர,
“ஹே.. ரஞ்சி.. இதுக்கு எவ்ளோ தரணும்..” என்று கயல்விழி கேட்டாள்.
“ஹைய.. நா என்ன.. இத காசுக்கா செஞ்சேன்.. சும்மா ஃப்ரண்ட்லியா செஞ்சேன் அண்ணி.. வரேன்..” என்று சாதாரணமாய்க் கூறி விட்டு ஓடியே போனாள்.
“என்ன இவ.. சப்ப ப்ளவுச சூப்பர் ப்ளவுசா மாத்தி குடுத்துட்டா.. ஆனா காசு எதும் வேணாங்கறாளே.. இதை மட்டும் அந்த டைலர் செஞ்சிருந்தான்னா சுளையா மூவாயிரத்தி ஐநூறு ரூவா புடிங்கியிருப்பான்..” என்றாள் கயல்விழி.
தமிழுக்குமே ஆச்சர்யமாக இருந்தது. இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா என்று!?
அன்று முழுதும் தங்கை வீட்டில் இருந்தவன் தங்கையின் கணவன் வந்ததும் அவனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான்!
அவன் கிளம்பி வீட்டு வாசலுக்கு வர, கயல்விழியும் முகிலனும் குழந்தையுடன் அவனை வழியனுப்ப அவர்கள் வீட்டு வாசலுக்கு வந்தனர்!
அதே நேரம் நிரஞ்சனாவின் கணவனும் வேலைக்குச் செல்வதற்காக கிளம்பினான். நிரஞ்சனாவிடம் தலையசைத்துவிட்டு வழிநடையில் நடந்து மின்தூக்கி அருகே வந்து நின்றான்.
தமிழும் விடைபெற்றுக் கொண்டு வழிநடையில் நடந்து மின்தூக்கி அருகே வந்தான். நிரஞ்சனாவின் கணவன் இவனைப் பார்க்காமல் தலையைத் திருப்பிக் கொண்டான்! தமிழால் அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லை!
நா என்னடா பண்ணேன்.. என்னமோ அப்டி திரும்பிக்கற.. என்று நினைத்துக் கொண்டான்!
[the_ad id=”6605″]
மின்தூக்கி வந்து அதன் இரும்புக் கதவு திறக்கவும் நிரஞ்சனாவின் கணவனும் தமிழும் ஒன்றாக அதில் புகுந்து கொண்டனர்! நிரஞ்சனாவின் கணவனுக்கு ஏதோ அழைப்பு வந்தது! அவன் தன் கைபேசியை எடுக்க, அப்போது அவனுடைய கால்சட்டைப் பையிலிருந்து அடையாள அட்டை போல ஏதோ ஒன்று தமிழின் காலடியில் விழுந்தது.
தமிழ் அதை குனிந்து எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு அவன் முகத்தைப் பார்த்தான்!
இவனா.. இவனா அவ புருஷன்? ஆனா.. இவன எங்கியோ.. பார்த்த மாதிரி இருக்கே.. என்று நினைத்துக் குழம்பிப்போனான்!
அதற்குள் மின் தூக்கி தரை தளம் வந்து நிற்க, அதைத் திறந்து கொண்டு அவன் வெளியேறிவிட்டான்!
தமிழ் கயலுக்கு அழைத்தான்.
“என்ன தமிழ்? லிஃப்ட் நின்னுடுச்சா.. எதையாவது விட்டுட்டியா..” என்று பதறிப் போனவளாய்க் கேட்க,
“ஹே.. அதெல்லாம் எதுமில்ல.. வந்து.. உங்க வீட்டுக்கு எதிர் வீட்லேர்ந்து ஒரு ஆள் இப்ப கிளம்பினானே.. அவன்தான் அந்த பொண்ணோட புருஷனா?” என்று வேகமாகக் கேட்டான்!
“யாரு.. யராக் கேக்கற நீ..” என்றாள் அவள் புரியாமல்.
“ஏய்! ஒழுங்கா கவனிடீ.. உங்க வீட்டுக்கு எதிர் வீட்லேர்ந்து இப்ப ஒரு ஆள் கிளம்பினான்ல.. நான் கிளம்பும் போது.. லிஃப்ட்ல கூட ரெண்டு பேரும்தானே வந்தோம்.. அவன்தான் உன்னோட ப்ளவுச சரி பண்ணின பொண்ணோட புருஷனா!” என்று தெளிவாகக் கேட்டான்!
“ஓ.. அந்தாளா.. ஆமா.. அவந்தான் ரஞ்சியோட புருஷன்! ஏன் கேக்கற..” என்று கயல் பதிலுக்குக் கேள்வி கேட்டாள்.
“ம்.. இல்ல.. அவ இருக்கற அழகுக்கு.. இவன் இப்டி சொங்கி மாதிரி இருக்கானேன்னு கேட்டேன்..” என்றான் முணுமுணுப்பாக!
“ஒண்ணுல்ல கயல். சரி வெச்சிடறேன்!” என்று அழைப்பை துண்டித்தான்!
“என்னாச்சு.. என்ன கேட்டான் உங்கண்ணன்?” என்று கயலிடம் கேட்டான் முகிலன்.
“ம்.. ஒண்ணுல்ல முகில்..” என்று அவள் தன் வேலையைப் பார்க்கப் போனாள்.
தன் அண்ணன் எதிர் வீட்டு பெண்ணின் கணவனைப் பற்றி கேட்டான் என்று சொன்னால் இன்று முழுதும் தன்னிடம் அவனைப்பற்றி நக்கலடித்துக் கொண்டிருப்பானே என்று நினைத்துதான் அவள் தன் கணவனிடம் அதைப்பற்றி எதையும் சொல்லாமல் நகர்ந்துவிட்டாள்!
இவனா.. இவனா அவ புருஷன்? இவன எங்கியோ பாத்த மாதிரி இருக்கு? இவன் முகமே சரியில்ல.. எதோ தப்பு பண்ற மாதிரி.. யாருக்கோ பயந்த மாதிரி இருக்கு.. சம்திங் ராங்!?!? என்று நினைத்தபடியே, தன் வேலையைக் கவனிக்கச் சென்றான்.