“பணத்தை எடுத்துக்கிட்டு எங்க போறதுன்னு தெரியாம பாதிவழியில் நிற்கும் போதுதான் ஒரு லாரி வந்துச்சு. அதை வழிமறித்து கொல்கத்தாவுக்கு வந்துட்டேன். வரும்போது வெங்கடாச்சலம் கூட நல்ல பழக்கம் ஏற்பட்டுடுச்சி சார். அவனும் காசுக்காக அலையிறது தெரிஞ்சுகிட்டு… காசு கொடுத்து அவன் வீட்டிலேயே தங்கினேன். ராபர்ட் னு நினைச்சி என்ன தேடுறது தெரிஞ்சதும்.. அங்கு இருந்து தப்பிக்க பார்த்தேன். அதான் கடைசியா அவன் கிட்ட சொல்லிட்டு வெளியே வந்துட்டேன். கொல்கத்தா போலீசும் ராபர்ட்டை வெளிய அங்கங்க கண்காணிக்கிறத தெரிஞ்சுகிட்டு… எப்படியா இருந்தாலும் போன் சிக்னல் வச்சி நீங்க வெங்கடாசலத்தை பிடிச்சி விசாரிக்கும்போது நான் இங்க இருந்த தகவல் தெரிய வரும். தப்பிச்சு போனதும் தெரியவரும். அவன் சொன்ன தகவல் படி மேல் வீட்டுல தேட மாட்டீங்க னு நம்பி திரும்ப அங்கேயே வந்துட்டேன். நான் நினைச்ச மாதிரி எல்லாமே நடந்துச்சு. திடீர்னு அந்த ஹவுஸ் ஓனர் வந்ததை நானே எதிர்பார்க்கலை. என்னோட உண்மையான முகத்தை முதன் முதல்ல பார்த்தது அவர்தான். அங்க இருந்து தப்பிச்சு அதேமாதிரி லாரி உதவியோட திருச்சிக்கு வந்துட்டேன்.”
“என்ன தெளிவா பிளான் பண்ணி இருக்கடா… படிக்காத முட்டாள் உனக்கு இவ்ளோ அறிவா? இத நல்ல வழியில பயன்படுத்தி இருந்தா எவ்வளவு நல்லா இருந்திருப்ப வாழ்க்கையில!. ஒரு கொலை பண்ணிட்டு சுதந்திரமாக வாழலாம்’னு நினைச்சா போலீஸ் சும்மா விடுவாங்களா டா? யாரையோ தேடி கடைசியில நீ வந்து மாட்டிக்கிட்ட. அவன் ரெண்டு கொலை பண்ணிட்டு உன் கிட்ட வந்தா… நீ அவனையே கொலை பண்ணிட்டு ஊரு ஊரா சுத்தி இருக்க. சரி சொல்லு அந்த வீட்டை எப்படி வாங்குன உனக்கு அவ்வளவு காசு எங்கிருந்து வந்துச்சு?”
“ராபர்ட் தலைமறைவா இருக்கும் போது காசு தேவைப்பட்டுச்சு. எனக்கு இந்த வேலை கொடுத்த அந்த ஆள் கிட்ட கொலை நடந்ததை பற்றி சொல்லி எனக்கு பணம் தர கேட்டு மிரட்டினன் சார். அவர் முதல்ல மறுத்துட்டாரு. உங்க பேரைச் சொல்லி மாட்டி விட்டுடுவேன் னு பயமுறுத்த ஆரம்பித்தேன். அப்போதுதான் பணம் கொடுக்க ஆரம்பிச்சாரு. கொஞ்ச நாள் கழிச்சி எனக்கு ஒரு வீடு வாங்கி தாங்கன்னு கேட்டேன். அப்பவும் முடியாதுன்னு சொல்லிட்டாரு. திரும்பவும் மிரட்டி அவசர அவசரமா அந்த வீட்டை என் பெயருக்கு வாங்க வச்சேன். ராபர்ட் கிட்ட பேசி சென்னைக்கு வர வைக்கிற வரைக்கும் எதுவுமே நடக்காத மாதிரி.. நானும் என் குடும்பமும் சந்தோஷமா அந்த வீட்டில வாழ்ந்துட்டு இருந்தோம். ராபர்ட் இறந்ததுக்கு அப்புறம் என் மனைவிகிட்ட கொஞ்ச நாள் என்ன தேடாதனு சொல்லிட்டு வந்துட்டேன் சார்.”
” யாரு அந்த ஆள்?”
“கொல்கத்தாவுல பெரிய பிசினஸ்மேன். பேரு மணிகண்டன்.”
கண்ணனின் முகத்தில் எந்த உணர்வும் வெளிப்படவில்லை. அருகிலிருந்த அதிகாரிகளிடம், “இவன் சொன்னா ஆள் யார் என்னன்னு பார்த்து விசாரிச்சு இங்க கூட்டிட்டு வர பிளான் பண்ணுங்க சார். அடுத்த விசாரணை அவர் கிட்ட தான். அந்த மணிகண்டன் இவங்க கிட்ட பேசின எல்லா ஆதாரத்தையும் கலெக்ட் பண்ணுங்க. காசு எந்த வழியில வந்து இருக்குன்னு பார்த்து அதையும் கலெக்ட் பண்ணுங்க.”
அதன்பின் அங்கிருந்து கஸ்டடிக்கு கொண்டு செல்லப்பட்டான் மைக்கேல்.
அன்றைய பொழுது இந்த விசாரணையோடு நிறைவுபெற கண்ணன் தன் இல்லம் நோக்கி சென்றான். மஹாலட்சுமியை கண்டவன் அவர் மடியில் படுத்துக்கொள்ள, “என்ன கண்ணா வேலை ரொம்ப அதிகமா?”
“வேலை எப்பவுமே அதிகம் தான் ம்மா. அதைவிட மனுசங்கள நினைச்சாத்தான் ரொம்ப கவலையா இருக்கு. யாரை நம்புறது என்ன ஏதுன்னு ஒன்னும் புரியல.”
“புரியல மா கண்ணா “
“ஒன்னும் இல்லம்மா.. இப்ப எடுத்து இருக்க கேஸ்ல திடீர் திடீர்னு திருப்பம் வருது. ஒரு வழியில போறதுக்குள்ள ஆயிரம் பாதை உருவாகுது. எங்க போய் எங்க முடிக்கணும்னு ஒன்னும் புரியல. “
“கண்ணா வேலையை வேலையா பாரு. அதுல நேர்மை மட்டும் தான் இருக்கணும். எதிர்ல இருக்கிற ஆள் யாரா இருந்தாலும் பரவால்ல. உனக்கான வேலையை செஞ்சிட்டு போய்கிட்டே இரு. காலம் அவங்களுக்கான தண்டனையை நிச்சயமா தரும்.”
“ஹ்ம்ம் மா. சாப்பிட்டீங்களா?”
“நீ கொடுத்த வேலையை உன் வருங்கால பொண்டாட்டி சிறப்பா பண்ணிட்டா. இன்னும் கொஞ்ச நாள்ல பேரப் பிள்ளைகளுக்கு சாப்பாடு ஊட்ட போறேன். இப்போ உக்காந்துகிட்டு எனக்கு ஊட்டிக் கிட்டு இருக்கீங்க. யாராச்சும் பார்த்தா சிரிப்பாங்க.”
“யாரு சிரிக்கப் போறா மஹா. எனக்கு தான் உனக்கு ஊட்டி விட வாய்ப்பு கிடைக்கல. என் மகனும் மருமகளும் அதை பண்ணட்டுமே விடு.” அறைக்குள் உறங்க வந்த நாராயணன் கூற,
“அப்பா உங்களுக்கு தான் முதல் வாய்ப்பு. நாளைக்கு காலையில டிபன் நீங்க தான் ஊட்டி விடனும் உங்க மனைவிக்கு.”
“ஆமா இந்த காலத்துல உட்கார்ந்து ஊட்டி விடுங்க. பிள்ளையை வைச்சிக் கிட்டு என்ன பேச்சு.”
“அத்தை… அப்போ நாங்க இல்லாதப்ப பேசினா ஓகேவா?”
கண்ணனின் வருகையை அறிந்து ஆரதி அங்கு வந்து இருக்க அவளின் வாலும் பின்னாடியே வந்தது. அதாங்க நம்ம சித்தேஷ்.
“வந்தாச்சா நீங்களும். தனித்தனியா இருந்தாலே உங்கள சமாளிக்க முடியாது. இதுல மொத்தமா இருந்தா நான் இன்னைக்கு தூங்குன மாதிரி தான்.”
“அம்மா என்ன நீங்க ரொம்ப பீல் பண்ற மாதிரி இருக்கு. பேசாம நாங்க மூணு பேரும் வெளியே போறோம். நீங்க தேவி கூட கதை பேசிட்டு இருங்க. வா ஆதி போலாம் ..” என்று அவள் கையை பிடித்து இழுக்க,
அதைத் தட்டிவிட்டு நாராயணன், “திரும்பவும் ஆரம்பிக்காத சித்து. நீங்க எல்லாம் இல்லாதப்போ தேவிதான் எங்க ரெண்டு பேருக்கும் துணையா இருந்தா. இப்பவும் அந்த பொண்ண வீட்டுல வைச்சிருக்க காரணமும் அதுதான். நாங்க தனிமையில இருந்தப்போ துணையாய் இருந்த பொண்ணுக்கு இப்போ நாங்க துணையா இருக்க வேண்டிய கடமை. என்னதான் வெளிய கண்ணனை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் இல்லை னு சொன்னாலும் மனசுக்குள்ள அவ வருத்தப்படுறது எங்களுக்கும் தெரியும். நம்மளால யாரும் கஷ்டப்பட வேணாம் சித்து. கொஞ்ச நாள் நம்ம கூட பழக்கட்டும். நல்ல பொண்ணு புரிஞ்சுக்கிட்டு சீக்கிரமா மாறிவிடுவா. “
“ஆமா மாமா. முன்ன இருந்ததை விட இப்போ தேவி நல்லா இருக்கா. இங்க நடந்தத ரொம்ப பக்குவமா புரிஞ்சுகிட்டா. இனிமே தேவி எதுக்காகவும் பீல் பண்ண மாட்டான்னு நினைக்கிறேன். ஆரம்பத்துல எனக்கும் ஒத்து வரல. அவ கிட்ட பேசினதும் எல்லாமே சரி ஆகிடுச்சு.”
மருமகளின் பேச்சுக்கு தலையசைத்தவர், “இப்போ தாண்டா நம்ம வீடு நிறைஞ்சு இருக்கு. புதுசா ரெண்டு குடும்பமே வீட்டுக்குள்ள வந்து இருக்கு. நிறைய சொந்தம் கிடைச்ச மாதிரி இருக்கு. உங்க கல்யாணத்தை முடிச்சதும் ..சித்து கல்யாணம். வானதியை நல்லா படிக்க வச்சு அவளுக்கும் ஒரு கல்யாணம் பண்ணனும். சின்ன வயசுல இருந்தே அந்த பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கு பாவம். அப்புறம் தேவி கல்யாணம் நடக்கும் போது நம்ம தான் முன்னாடி இருந்து எல்லாமே செய்யணும். அந்தப் பிள்ளைக்கு நம்ம செய்யிற பதிலா இருந்துட்டு போகட்டும். ” என்ற நாராயணன் பேச்சுக்கு அங்கிருந்தவர்களும் சம்மதம் தெரிவிக்க அந்த அறை பல நாள் கழித்து சிறு சிட்டுக்குருவி கூடு போல் சுகமாக துயில் கொள்ள ஆரம்பித்தது.
இனிவரும் காலங்களில் ரதிதேவியும், வானதியும் பல சிரமங்களை தாண்ட போகிறார்கள் என்பது தெரியாமல்.