மஹாலட்சுமியின் உடல்நிலை தேற.. மருத்துவர் சொன்னது போல் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். தாயை தன் முழு பொறுப்பில் வைத்துக் கொண்ட கண்ணன் அவருக்கு தேவையானதை அவனே செய்து முடித்தான். இதற்கிடையில் வானதியிடம் பேச சென்ற சித்துவை விசாரிக்க, “ஒன்னும் இல்ல கண்ணா.. கொஞ்ச நாள்ல சரியாகிடும்.” என்பதோடு முடித்துக் கொண்டாள்.
இன்னும் மைக்கேலிடம் விசாரணையை தொடங்காமல் இருக்க மெல்ல தன் தாயிடம் சென்றவன் பேச்சை ஆரம்பித்தான்.”அம்மா நல்லா ரெஸ்ட் எடுங்க. இன்னைக்கு சித்துவும், ஆரதியும் உங்க கூடவே இருப்பாங்க. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சுட்டு வந்துடுறேன்.”
“சாப்பிட்டுட்டு போ கண்ணா..” தாயின் வார்த்தையில் யோசித்தவன்… தானே சமையல் அறைக்கு சென்று உணவை எடுத்து வந்து தாய்க்கு ஊட்ட ஆரம்பித்தான். கண்ணனின் செயலில் மஹாலட்சுமி உள்ளுக்குள் குளிர்ந்து இருக்க வெளியில்,
“கண்ணா உன்ன சாப்பிட சொன்னேன். நான் அப்புறமா சாப்பிடுறேன்….”
“பரவால்லைம்மா… எனக்கு இப்ப பசி இல்ல. என் அம்மா நல்லா இருக்காங்க என்ற எண்ணமே மனசு நிறைவா இருக்கு. நீங்க முதல்ல சாப்பிடுங்க. இனி ஒவ்வொரு வேளையும் ஒவ்வொருத்தர் ஊட்டிவிட போறாங்க உங்களுக்கு. இதுதான் நீங்க பண்ணதுக்கான பனிஷ்மென்ட். ஆரதி, சித்து வீட்டுல இல்லன்னா… வானதி தேவி இரண்டு பேரும் இந்த வேலையை செய்வாங்க.” கண்ணனின் வார்த்தைக்கு பொய்யாக முறைத்தாலும் உள்ளுக்குள் நிறைவாகவே இருந்தது மஹாலக்ஷ்மிக்கு.
காவல்துறையின் சிறப்பு கவனிப்பில் உள் காயங்களுடன் முடியாமல் இருந்த மைக்கேலுக்கு உணவு கட்டாயமாக்கி கொடுக்கப்பட்டது. கொடுக்கும் முன் அதில் விஷம் கலந்திருப்பதாக பயமுறுத்த, வேண்டாம் என்று மறுத்தவனை வலுக்கட்டாயமாக உண்ண வைத்தனர்.உறங்கச் செல்பவனை திருச்சியிலிருந்து சென்னைக்கு கொண்டு வந்ததை போல வேறு இடத்திற்கு மாற்றி.. கொன்று விடுவதாக உறங்க விடாமல் இம்சை செய்தனர். இன்னும் விசாரணையே தொடங்காமல் இருக்க மனதில் பெரிய அளவு பயம் கவ்வியிருந்தது. ஆரம்பிக்கும் முன்னரே இப்படி என்றால் ஆரம்பித்தால்????
எதையும் அதிரடியாக செய்யாமல் அமைதியாக செய்வதே கண்ணனின் வழக்கம். இன்றும் பிடிபட்டவனை விருந்தாளி போல் உபசரித்து தன் வேலையை முடிக்க காத்திருந்தான். அதற்கான நேரம் வந்து விட விசாரணையை துவங்க ஆரம்பித்தது.
முதல் கேள்வியே மைக்கேலை ஆட்டம் காணச் செய்தது.
” கொல்கத்தாவுல இருந்து யார் இந்த வேலையை செய்ய சொன்னது?”
“யாரையும் எனக்கு தெரியாது. தப்பான ஆளை கூட்டிட்டு வந்து விசாரணை பண்ணிட்டு இருக்கீங்க.” என்றதும் கண்ணனின் விரல் தடம் அழுந்த பதிந்தது… மைக்கேலின் கன்னத்தில்.
“விசாரணைக்கு கூட்டிட்டு வந்து அடிக்கிறீங்க. இதை கோர்ட்ல சொல்லுவேன்.”
அமைதியாக எழுந்து நின்ற கண்ணன்.., “உன்னை யாரு விசாரணைக்கு கூட்டிட்டு வந்தா?”
” நீதான் ராபர்ட்டை கொன்னன்னு நல்ல தெரிஞ்சு போச்சு. இனிமே நீ எந்த வாக்குமூலமும் தரவேணாம். கோர்ட் கேஸ் னு அலைந்து நேரம் வீணாகும். இன்னைக்கு விசாரணைக்கு கூட்டிட்டு போன நீதிபதி கூட எங்க ஆள் தான். அவர் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன். இப்போ உன்ன விசாரணைக்கு கூட்டிட்டு போறமாதிரி அந்த இடத்துக்கு கூட்டிட்டு போயிட்டு என்கவுண்டர் பண்ண போறோம்.”
“சார்.. இதெல்லாம் அபாண்டம்.” என்ற மைக்கேலின் பேச்சைக் காதில் வாங்காத கண்ணன்.. தனிப் படை அதிகாரிகளிடம் திரும்பி, “சார்.. இவனை பிடிச்சதை எல்லா மீடியாக்களுக்கும் இன்பார்ம் பண்ணுங்க. வாக்குமூலம் கொடுத்துட்டான். எப்படி கொன்னான்னு செயல்முறை விளக்கமா நடித்துக் காட்ட போறான்… அதுக்காக கொலை நடந்த இடத்துக்கு கூட்டிட்டு போக போறதா அறிக்கை கொடுங்க. இவனுக்கு வேற நல்ல டிரஸ் மாத்தி போட்டோ எடுத்துக்கோங்க. பக்கத்துல நீங்க எல்லாரும் நிக்கணும். மதியம் இவன் சாப்பிடும் போது எடுத்த வீடியோ இருக்கு தான. நாளைக்கு நம்ம கொன்னதா யார் சொன்னாலும்.. இன்னிக்கு முழுக்க இவனுக்கு நடந்த ராஜ விருந்த காட்டுங்க. நீதிபதி முன்னாடி ஆஜர் படுத்தின ஆதாரத்தையும் எடுத்து வச்சுக்கோங்க. இன்னையோட இவன் தலைவலி நமக்கு விட்டது.”
கண்ணன் பேசப் பேச… உண்மை என நினைத்து பதறிய மைக்கேல் , ” சார் நான் எதுவுமே பண்ணல. விட்டுடுங்க சார். “
“உண்மைதான் மைக்கேல் நீ எதுவுமே பண்ணல. நாங்க தான் பண்ணப் போறோம்.”
அதன் பின் அங்கிருந்த அதிகாரிகளிடம் கெஞ்சியவனை கண்டுகொள்ளாத கண்ணன் இரவு வேளை நெருங்க அங்கிருந்து மைக்கேலை அழைத்துக் கொண்டு புறப்பட்டான். அடையாறு ஆறு அவனுக்கு பழக்கப்பட்ட இடம் தான். அவனுடைய பெரும்பாலுமான தவறுகள் இங்கே தான் நடக்க பெற்றிருக்கிறது. பிறந்தது வளர்ந்தது பூர்விகம் எல்லாமே சென்னைதான். சிறு சிறு திருட்டு தொழில்களில் ஈடுபட்டு வந்தவன் நாளடைவில் நண்பர்கள் வட்டத்தால் கொலை, கொள்ளையில் ஈடுபட ஆரம்பித்தான். இரவு நேரங்களில் வரும் இருசக்கர வாகனங்களை மறித்து பணம் வாங்குவதும் … தர மறுத்தால் ஒளிந்திருக்கும் நண்பர்களின் உதவியோடு தீர்த்து கட்டிவிட்டு கையில் கிடைத்ததை பங்கு போட்டுக் கொள்வான். நான்கு சக்கர வாகனங்களை குறிவைத்து விபத்துக்குள்ளாகி… அடிபட்டவர்களிடம் இருப்பதை எடுத்து செல்வான். அப்படிப்பட்டவனுக்கு இந்த இடம் முதல் முதலாக மரண பயத்தை அளித்தது.
எச்சில் நனைத்து தொண்டையை ஈரமாக்கியவன், “சார் சார்.. ப்ளீஸ் சார் என்னை ஒன்னும் பண்ணிடாதீங்க. நடந்த எல்லாத்தையும் சொல்லி நான் அப்ரூவலா மாறிடுறேன் சார். எனக்கு குடும்பம் இருக்கு சார்…. நான் பண்ணது தப்பு தான் சார் விட்றுங்க ப்ளீஸ் சார்….” என்பதோடு நிற்காமல் கண்ணனின் காலில் விழுந்து கெஞ்ச, அதை தட்டி விட்டவன்,
“செத்துப்போனவனுக்கும் குடும்பம் னு ஒன்னு இருக்கே மைக்கேல் . ராபர்ட் பையனுக்கு ஏழு வயசு. அவனுக்கு என்ன பதில் சொல்லப் போற.” கண்ணனின் பேச்சில் கெஞ்சலை நிறுத்தி விட்டு அமைதியாக பார்க்க,
“உன்னால சொல்ல முடியாது… அதான் நாங்களே இப்போ பதில் சொல்ல போறோம். நீ செத்துடு மைக்கேல்…” துப்பாக்கி அவனை நோக்கி காட்ட, மீண்டும் கெஞ்ச ஆரம்பித்தான்.
“சரி இங்க இருந்து நீ உயிரோட போகலாம். ஆனா எனக்கு ஒரு கொலையை பத்தி இல்ல ரெண்டு கொலையை பத்தி தெரியணும்.”
“சார்…”
“அனிதாவை கொன்னது நீதானே.”
இதை சற்றும் எதிர்ப்பார்க்காத மைக்கேல்… அதிர்ந்த முகத்தோடு தரையில் அமர்ந்து பதட்டமாக பார்க்க,
“அதையும் சேர்த்து சொல்லிட்டா எங்கிருந்து நீ உயிரோட போகலாம். இல்லன்னா உன்னோட உடம்பு மட்டும்தான் போகும்.” துப்பாக்கியை அவனை நோக்கி காட்ட,
“சத்தியமா எனக்கு நீங்க சொல்றது யாருனே தெரியல சார். நான் ஒரே ஒரு கொலை தான் பண்ண. அது ராபர்ட் தான். வேற யாரையும் நான் பண்ணல. என்னோட பொண்டாட்டி மேல சத்தியமா சார். ராபர்ட் கூட வேணும்’னு கொல்லல…. எனக்கு தரதா சொன்ன பணத்தை தரல. அந்த வாக்குவாதத்துல தான் கொன்னுட்டேன். நம்புங்க சார் … நடந்த எல்லாத்தையும் சொல்லிடுற……”
அங்கிருந்த அதிகாரிகளுக்கு கண்ணை காட்ட.. மைக்கேலை எழுப்பி தண்ணீர் குடிக்க வைத்து சகஜ நிலைக்கு கொண்டு வந்தனர். பின் பேச ஆரம்பித்தான் மைக்கேல்.
ராபர்ட் எனக்கு ஒரு நண்பன் மூலமா பழக்கம். ஆரம்பத்துல சகஜமா தான் பேசிட்டு இருந்தோம். நானும் அவனும் ஒரே மாதிரி திருட்டு தொழில் தான் செஞ்சுட்டு இருந்தோம். அடிக்கடி அதுல கொலையும் நடந்து இருக்கு. எங்க ரெண்டு பேர் மேலயும் சில கொலை வழக்குகளும் இருக்கு. ராபர்ட் மனைவிக்கும் எனக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் அவங்க வீடு காலி பண்ணிட்டு போய்ட்டாங்க. கொஞ்ச நாள் பேசாம தான் இருந்தோம். அப்போதான் எனக்கு ஒரு நண்பன் மூலமா… ஜட்ஜ் சார ஒரு கேஸ்ல நான் சொல்ற ஆளுக்கு சாதகமா பதில் சொல்ல வைக்கணும்’னு வேலையை கொடுத்தாங்க. நானும் என் நண்பனும் செய்யுறதா இருந்துச்சு. அதுக்குள்ள அவன் வேற கேஸ்ல அரெஸ்ட் ஆகிட்டான். பணத்தையும் கைநீட்டி வாங்கிட்டோம். என்ன பண்றதுன்னு தெரியாம ராபர்ட்டுக்கு கால் பண்ணி விஷயத்தை சொன்னேன். அவனும் என் கூட வராதா ஒத்துகிட்டேன். எங்களுக்கு சாதகமான ஒரு நாளா பார்த்து ரெண்டு பேரும் ஜட்ஜ் வீட்டுக்கு போனோம். பெரிய இடமா இருக்கறதால மாட்டிக்க கூடாதுன்னு ராபர்ட்டை மட்டும் அனுப்பி வைச்சேன் சார். கொஞ்ச நேரத்துல வெளிய வந்துவனுக்கு சட்டை முழுக்க ரத்தம். என்ன ஏதுன்னு விசாரிக்கும் போதுதான்.. வீட்ல யாரும் இல்ல ஜட்ஜும் அவங்க பொண்டாட்டியும் மட்டும் தான் இருந்தாங்க. அவங்க போட்டிருந்த நகையே பல லட்சம் ரூபாய் சேரும்’னு தோணுச்சு மைக்கேல் அண்ணா. அதான் நகைக்கு ஆசைப்பட்டு அந்த அம்மாவை கழுத்தை நெருக்கி கொலை பண்ணிட்டேன். தூங்கிட்டு இருந்த ஜட்ஜை கத்தியால குத்திட்டேன்னு ரொம்ப சாதாரணமா சொன்னான் சார். அது மட்டும் இல்ல அவன் கொண்டு வந்த பேக் முழுக்க நகை இருந்துச்சு. கூடவே பணமும். அதைப் பார்த்ததும் எனக்கும் ஆசை வந்துருச்சு. இது எப்படியா இருந்தாலும் உங்களுக்கு தெரிய வரும் னு பிளான் பண்ணி… காசு நகை எல்லாத்தையும் ராபர்ட் கிட்ட கொடுத்து கொஞ்ச நாளைக்கு தலைமறைவா இருக்க சொன்னேன். அவனும் நான் சொன்ன மாதிரி மதுரைக்குப் போய்ட்டு போனை சுவிட்ச் ஆப் பண்ணிட்டான். அங்க இருந்து ஊரு ஊரா கொஞ்சநாள் சுத்திக்கிட்டு இருந்தான். நீங்களும் அவனை ஒரு பக்கம் தேடிக்கிட்டு இருந்தீங்க. நீங்க கண்டுபிடிக்கிறது குள்ள… அந்த நகையை பணமா மாற்றி ரெண்டு பேரும் பிரிச்சுகிட்டு ஆளுக்கு ஒரு பக்கமாக போய்டலாம்’னு முடிவு பண்ணோம். அதனாலதான் அவனோட புது நம்பர்க்கு கால் பண்ணேன். முதல்ல அந்த பணத்தையும் நகையையும் பாதியா தரேன்னு சொன்ன ராபர்ட்… போகப்போக நான் தானே கொலை பண்ண முழுசா எனக்கு தான் வரணும்னு சண்டை போட ஆரம்பிச்சுட்டான். வரப்போற பணத்தை நம்பி நான் நிறைய பிளான் பண்ணிட்டேன் சார். அதனால அதை விட எனக்கும் மனசு இல்லை. ஒருநாள் அவனுக்கு போன் பண்ணி… உன் பொண்டாட்டி உயிரோட இருக்கணும்’னு ஆசை இருந்தா உடனே எல்லாத்தையும் எடுத்துகிட்டு வந்து என்னை பாரு ன்னு சொன்னேன். அவனும் வரதா சொன்னான். பழைய போனை மதுரையில் இருக்க அவனோட ஃப்ரெண்ட்ஸ் கிட்ட குடுத்துட்டு புது போன், காசு, பணம் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு சென்னை வந்தான்.
இதுக்கு நடுவுல தான் எனக்கு ஒரு யோசனை வந்துச்சு. போலீசை பொறுத்தவரைக்கும் ஜட்ஜை கொலை பண்ணது ராபர்ட் தான். வீட்டிலிருக்க அத்தனை ஆதாரங்களும் அவனுக்கு எதிரா தான் இருந்துச்சு. போதாததுக்கு தலைமறைவா வேற இருந்தான். ராபர்ட் டை கொன்னுட்டா முழுசா அந்த நகையும் பணமும் எனக்கே வந்துடும். நீங்களும் ராபர்ட்டை தேடி கிடைக்க முடியாம கேஸை கிடப்பில் போட்டுவிங்க. இதுல நான் சம்பந்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இருக்காது. காசு பணத்தோட சுதந்திரமா வாழலாம்’னு நினைச்சேன்.
பொண்டாட்டி கிட்ட கூட சொல்லாம ராபர்ட் சென்னைக்கு வந்தான். நானும் அவனுக்கு அன்னைக்கு நெறைய சரக்க சாப்பிட வச்சு மெல்ல பேச்சை ஆரம்பிச்சேன். முதல்ல முடியாது னு பிடிவாதம் பிடிச்சவன் எங்கிட்டயே சண்டைக்கு வர ஆரம்பிச்சிட்டான். பேசிப் பார்த்து பலன் இல்ல. ரெண்டு பேருக்கும் நடுவுல சண்டை வந்துடுச்சு. ஏற்கனவே ரொம்ப குடிச்சிட்டு இருந்ததால ராபர்ட்டால என் அடிய தாங்காம மூடியாம மயக்கம் போட்டு விழுந்துட்டான். அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவனை நான் தான் அடித்துக் கொன்னேன் சார். இத நீங்க கண்டுபிடிக்கக் கூடாதுனு உடம்ப கூவம் ஆற்றுல தூக்கி போட்டேன். இந்த ஒரு கொலை தான் சார் நான் பண்ணேன். வேற எதுவும் பண்ணல.”
“அந்தக் காசு பணத்தை என்ன பண்ண?”
“கொலை பண்ணி ஆத்துல வீசுனதும் அதை எடுத்துக்கிட்டு நகைய மட்டும் என் வீட்டில் வைச்சிட்டு பணத்தை செலவுக்கு எடுத்துக்கிட்டேன் சார்.”
“இந்த வீட்டில டா வச்ச?”
“போருர்ல இருக்க என்னோட வீட்லதான் சார்.”
“இது உன் மனைவிக்கு தெரியுமா?”
“தெரியாது சார் என்னோட பீரோல வெச்சி பூட்டிட்டேன். சாவி எங்கிட்டதான் இருக்கு.”
“சரி எதுக்காக ராபர்ட் மாதிரி அவரோட மனைவி கிட்ட பேசின?”
“அது வந்து சார்.. என்று இழுத்தவனை கண்ணன் ஒரு அறை விட,
கன்னத்தில் கை வைத்து கொண்டே, “எனக்கு முதல்ல இருந்தே ராபர்ட் மனைவி மேல ஒரு கண்ணு சார். அவ கிட்ட பேசணும் னு முயற்சி பண்ணேன். கடைசி வரைக்கும் என்கிட்ட சிக்கல. அதுவுமில்லாம அன்னைக்கு சண்டையில ரொம்ப கேவலமா பேசிட்டா. ராபர்ட் மாதிரி அவ கிட்ட பேசி என்னோட ஆசையை தீர்த்துக்கனும்’னு நினைச்சி ராபர்ட் போனை எடுத்துக்கிட்டு பேச ஆரம்பிச்சேன். ஏற்கனவே அந்த புது நம்பர்ல இருந்து அஞ்சலை கிட்ட பேசி இருந்ததால அவளுக்கும் சந்தேகம் வரல. அந்த புது நம்பரும் யாருக்கும் தெரியாது. அப்படியே நீங்க கண்டுபிடித்தாலும்… ராபர்ட் னு தான் நினைப்பிங்க. அஞ்சலை மேரிய பேசிப்பேசியே என்னோட வழிக்கி கொண்டு வந்துடலாம். நான் ராபர்ட் இல்லன்னு தெரிஞ்சாலும் ஒன்னும் பண்ண முடியாதுன்னு பிளான் பண்ணி பேச ஆரம்பிச்சேன் சார். சின்ன வயசுல இருந்தே எனக்கு குரல் மாற்றிப் பேசுறது நல்லா வரும்.”
“அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரைக்கும் பொம்பளை மேல பார்வை வச்சவன் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை. அதுக்கு நீயும் ஒரு சிறந்த சாட்சி. உன்னோட ஆரம்பகால சறுக்கலே அஞ்சலை மேரிதான். அங்க இருந்துதான் உனக்கான கெட்ட காலம் ஆரம்பிச்சிது. உன் வயசு என்ன அந்த பொண்ணோட வயசு என்ன?. பொண்ணாவோ இல்ல தங்கச்சியாவோ பார்க்கவேண்டிய பொண்ண உன் ஆசைக்காக பயன்படுத்தி இருக்க. இதுக்கே உன்மேல தனியா ஒரு கேஸ் போடலாம்.”