எப்படி பார்கிறான் என மனதினுள் குமைந்தவள்.. ‘நான்தான் எல்லாமும் சொல்லிட்டனே.. இன்னும் என்னங்க சார் கேட்கனும்..?” என்றாள் கோபத்தை உள்ளடக்கி.
ஹூம்.. என பெருமூச்சிழுத்து.. ‘உன்கிட்ட கேட்க ஒன்னுமில்ல.. சில விசயங்கள் சொல்லவேண்டியிருக்கு அதான் திரும்ப வந்தேன்.. அந்த பொண்ணு விசயத்துல அரவிந்தன் மேல தப்பு இல்லன்றதுக்காக அவன் சார்பா உன்கிட்ட பேசிப்பார்க்கலாம்னு வந்தேன்.. கேசை வாபஸ் வாங்க மாட்டன்னு நீ சொன்னதும் நான் பாட்டுக்கு அமைதியா கிளம்பினேன் தான..?
என்னைப் பத்தி எதுவும் தெரியாம நீ எப்படி என்னை தப்பா நினைக்கலாம்.? பார்க்கலாம்.? அது கூடாதுன்னு சொல்லிட்டு போகத்தான் வந்தேன்.. என்னை தப்பா நினைக்க கூடாது புரியுதா..?” என உரிமையோடு சொன்னவன்.. ‘அப்புறம்.. நான் போலீஸ் இல்ல.. இன்னும் நிறைய சொல்லனும்.. இப்போ நேரமில்ல.. கூடிய சீக்கிரம் திரும்ப வந்து என் மனசை சொல்றேன்..
ஐ மீன்.. நீ ஏன் என்னை தப்பா நினைக்க கூடாதுன்னு இன்னொரு நாளைக்கு வந்து டீடெய்லா சொல்றேன்..” என்று அவளின் பதிலுக்கு காத்திராமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டை நோக்கி பைக்கை கிளப்பினான்.
— —– —–
இரவு பத்து மணிபோல் வீட்டிற்கு வந்தவன்.. ‘தாத்தா நீங்க பயப்படற அளவுக்கு ஒன்னும் நடந்திடல..” என அரவிந்தனின் நிலையையும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப நிலையையும் சொன்னான்.
‘இப்படிபட்ட பேரனுக்காகத்தான் இத்தனை வருசத்துக்கு அப்புறம் என்கிட்ட பேசனும்னு சொன்னானா.? பெரிய பேரன் பேத்திக்குன்னு ஒத்த பைசா செலவு செய்ததில்ல.. பேரனை கூட விடு.. பேத்தி வயசுக்கு வந்தப்ப கூட ஒன்னும் செய்ய முடியலையேன்னு அப்போலாம் ஏற்படாத வருத்தம் இப்போ அந்த பையன் ஜெயிலுக்கு போனதும் வந்துடுச்சா.?” என ராமசாமி மீது இன்னும் கோபமானார் மாரியப்பன்.
தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை அசைவு கொடுக்கவும்.. அவர்களின் பேச்சை விடுத்து குழந்தையை பார்க்க.. லேசாய் கண்விழித்த குழந்தை மாரியப்பனை பார்த்ததும் புன்னகை சிந்தவே.. அதில் மயங்கியவராய் ‘தூங்கி முழிச்சாச்சா பட்டுமா..” என்றபடி குழந்தையை தூக்கினார்.
குழந்தை மாரியப்பனிடமிருந்து ரூபனிடம் தாவ.. அந்த நேரம் ரூபனிற்கு அழைப்பு வரவே.. ‘இருடா பட்டு அப்பா ஃபோன் பேசிட்டு வந்துடறேன்..” என அழைப்பை ஏற்றவன் பேசி முடித்து.. ‘ம்மா.. நாளைக்குதான் போலாம்னு இருந்தேன்.. நாளை மறுநாள் நடக்க இருந்த சூட்டிங் ஸ்பார்ட் லொகேசனை மாத்திட்டாங்களாம்.. நான் இப்பவே கிளம்பனும்..” என்றான்.
இரண்டு நாள் இருக்கிறேன் என வந்தவன் தற்போதே கிளம்புவது வருத்தம் என்றாலும் இப்படி பல நேரம் நடந்திருப்பதாலும் எத்தனை சொன்னாலும் கிளம்பாமல் இருக்கமாட்டான் என்பதாலும் ரூபனின் பேச்சை ஆமோத்து.. ‘சாப்பிட எடுத்து வரவா.?” என்றார்.
‘எடுத்து வைங்கம்மா ரெடியாகிட்டு வந்திடறேன்.. சாப்பிட்டதும் கிளம்ப வசதியாயிருக்கும்..” என தனதறை சென்று பத்து நிமிடத்தில் தயாராகி வர.. கனகா பரிமாற சாப்பிட்டுக்கொண்டே.. ‘ஆனா தாத்தா.. அதான் உங்க பிரண்டுக்கு பேரன் ஜெயில்ல இருக்கிறதால ரொம்ப கவலை அப்படில்லாம் இல்ல போல.. அவங்க பொண்டாட்டியும் மகளும்தான் அரவிந்தனுக்காக ரொம்ப வருந்தினாங்க..” என்றான்.
அதிரூபன்.. ‘எனக்கென்னவோ அப்படிதான் தோணுது தாத்தா.. என்கிட்ட கூட என்னை உங்களை அத்தை குடும்பத்தை விசாரிக்கிறதுலதான் ரொம்ப ஆர்வம் காட்டினார்..” என்றான்.
‘ரொம்ப நாள் கழிச்சி உன்ன பார்த்த சந்தோசத்துல விசாரிச்சிருப்பான்.. ஆனாலும் அப்போயிருந்தே உங்கப்பன் மேலயும் அத்த மேலயும் ரொம்ப பாசமாத்தான் இருப்பான்.” என்றார் பழைய நினைவுகளில்.
சாப்பிட்டு எழுந்தவன்.. ‘ம்.. முக்கியமான விசயம் தாத்தா.. அவங்க பேத்தியையேது எனக்கு கேட்டுடாதிங்க.. அதெல்லாம் செட்டே ஆகாது..” என்றான்.
‘நீ அங்க பார்த்த பொண்ணு அரவிந்தனோட பிறந்த பொண்ணா இருக்கும்.. நான் சொல்றது ராமசாமியோட மூத்த தாரத்து பொண்ணுடா.. காஞ்சனா பொண்ணு சின்ன வயசுலயே அவ்வளோ அழகா இருப்பா.. அவளை விட சிறந்த பொண்ணு எங்க தேடினாலும் கிடைக்காது.. நாங்க கேட்டாலும் அவங்கப்பன் உனக்கு பொண்ணு தரானா பாரு..” என்றார்.
ஓ.. இப்படியொரு குடும்பம் இருக்கா அவருக்கு.? என நினைத்தவன்.. ‘அது சரி.. எனக்கு பொண்ணு கொடுக்கலன்னா போயிட்டு போறான்.. எப்படிபட்ட அழகியாயிருந்தாலும் நீங்க கெஞ்சி பொண்ணு கேட்கனும்னு அவசியமில்ல..” என ரோசமாக சொல்லி.. குழந்தைக்கு முத்தம் கொடுத்து தானும் பெற்றுக் கொண்டவன்..
‘அம்மா இந்த முறை வர கொஞ்ச லேட்டாகும்னு ஆகும்னு நினைக்கிறேன்.. இரண்டு புதுப்படத்துக்கு டப்பிங்குக்கு கேட்டிருக்காங்க.. ஆனாலும் இடையில ஒரு நாள் கேப் கிடைச்சாலும் என் பட்டுவை பார்க்க வந்திடுவேன்..” என குழந்தையை கொஞ்சி.. அனைவரிடமும் சொல்லி கிளம்பினான்.
ஆதிரையைப் பற்றி தந்தையிடம் பேசலாம் என நினைத்தான்தான்.. தான் சொன்னால் உடனே பெண் பார்க்க கிளம்பிவிடுவார்கள்.. குழந்தையோடிருப்பனுக்கு பெண்ணில்லை என ஆதிரையின் அம்மா சொல்லிவிட்டால், அதன்பின் மிகுந்த சிரமமாககிடும்.. எப்படியாகினும் ஆதிரையை தன்னவளாக்கி கொள்ளவேண்டும்.. அதற்கு முதலில் ஆதிரையிடம் நம்ம பட்டுமாவைப் புரியவைத்து.. பிறகு நம் வீட்டினருக்கு சொல்லி பெண்கேட்கலாம் என நினைத்து ஆதிரையைப் பற்றி எதுவும் பேசாமல் சென்றிருந்தான்.
— —– —–
இரண்டு நாள் கழித்து ராமசாமி மாரியப்பனிற்கு அழைத்தார். பேரன் விசயமாகத்தான் பேசுவான் என நினைத்து அழைப்பை ஏற்றவர்.. ‘ஹலோ..” என்றார்.
நண்பன் அழுவது பிடிக்காமல்.. ‘எதுக்கு அழுவுற.? உன் பேரனைத்தான் விட்டுட்டாங்கயில்ல.?” என்றார்.
‘அவன் வந்துட்டான்.. நேத்தெல்லாம் கொஞ்சம் நெஞ்சுவலியா இருந்ததுடா.. சீக்கிரம் போய்டுவேன்னு நினைக்கிறேன்.. போறதுக்குள்ள எனக்கு உன்னை பார்க்கனும்.. என் மனசுல உள்ளதெல்லாம் கொட்டி உன்கிட்ட திட்டு வாங்கினாத்தான் இந்த கட்டை வேகும்..” என்றார் தழுதழுப்பாக.
அதான் பெரிய பொண்ணு உறவையே அத்துவிட்டுட்டாங்க அந்த மகராசி.. இதுல என்கிட்ட திட்டு வாங்க என்னயிருக்கு என நினைத்தாலும்.. ராமசாமியின் குரல் மனதை அழுத்த.. ‘சரி.. நான் இரண்டொரு நாள்ல வரப் பார்க்கிறேன்..” என்றார்.
ஆறுமுகம் காஞ்சனாவின் தற்போதைய நிலையறியவும்.. ராமசாமி குரலின் வேதனை நினைத்தும் இரண்டு நாள் வரை பொறுக்க முடியாமல் அடுத்த நாளே கணேசனை அழைத்துக்கொண்டு செங்கம் கிளம்பினார் மாரியப்பன்.
நாளை மாரியப்பன் வருகையை எதிர்பார்த்திருந்த ராமசாமிக்கு இன்றே மாரியப்பன் வந்து நிற்கவே மிகுந்த சந்தோசம் என்றாலும் முதலில் கண்ணீர்தான் வந்தது. ‘டேய்.. என்னடா இது.? சின்ன புள்ளையாட்டம் அழுதுட்டு..?” என அதட்டினார் மாரியப்பன்.
யாரா இருக்கும் என்ற யோசைனையோடு சமையலறையிலிருந்து மாதவி எட்டிப்பார்க்க.. மாரியப்பனை பார்த்ததும் பதட்டம் ஏறியது. நம்ம புருசன் மேல கோபமாத்தான இருந்தாங்க.? ரொம்ப வருசத்துக்கப்புறம் அரவிந்துக்கு உதவிகேட்டும் பேரனைத்தான அனுப்பி வச்சாங்க.? இப்போ என்ன பாசம் பொத்துக்கிட்டு வந்துடுச்சி.? சொத்து விசயத்துல எதாவது வில்லங்கம் பண்ண வந்திருப்பாங்களோ.? காரணம் இல்லாம அப்பனும் மகனும் ஒன்னா வரமாட்டாங்களே என பலத்த யோசனையோடு வெளியே வந்தவர்.. ‘வாங்கண்ணா..” என்றார் வரவழைத்த இயல்போடு.
‘மாதவி முன் மாரியப்பனிடம் பேச ராமசாமிக்கு பிடிக்காமல் போகவே சற்று நேரம் அமைதி காத்தார். ‘இப்படி அழறதை பார்க்கவாடா என்னை வரசொன்ன.?” என கடிந்தார் மாரியப்பன்.
ஓ.. இவங்கதான் வர சொல்லியிருக்காங்களா என்ற கடுப்போடு.. ‘தண்ணி குடிங்கண்ணா..” என சொம்பை நீட்டினார் மாதவி.
ராமசாமியின் முகம் வேதனையிலேயே இருக்க.. மனைவிக்கு தெரியாமல் எதோ சொல்ல நினைக்கிறான் எனப்புரிந்த மாரியப்பன்.. ‘ரொம்ப வருசம் கழிச்சி பார்க்கிறோம்.. என்கிட்ட எதோ தனியா சொல்ல நினைக்கிறான்.. அப்படி காத்தாட கோவில் மரத்தடியில உக்கார்ந்து பேசிட்டு வரோம்..” என்று எழுந்தார்.
மாதவி.. ‘எதுக்கு தடுமாறிட்டு கோவில் வரைக்கும் போகனும்.? நான் வேணா பொண்ணு வீட்டுக்கு போறேன்.. நீங்க இங்கையே பேசுங்க..” என்றார் அக்கறைபோல்.
என்ன பேசினோம் என இவர்கள் கிளம்பிய பின் மாதவி தன்னை துளைத்தெடுப்பாள் என்றும்.. எப்படியும் பின்னால் தெரிந்துதானே ஆகவேண்டும் என்றும்.. ‘யாரும் எங்கையும் போக வேணாம்.. நீ போய் டீ வை.. நான் மாரிகிட்ட பேசப்போறது உனக்கும் தெரியத்தான் வேணும்..” என்றார் ராமசாமி.
மனுசன் என்ன திட்டம் போட்டுருக்காங்கன்னு தெரியலையே.. என அங்கலாய்த்தபடி டீவை வைக்க போனார் மாதவி. வந்த காரியம் முக்கியம் என நினைத்த கணேசன்.. ‘ஆறுமுகம் காஞ்சனா நல்லாயிருக்காங்களா.? காஞ்சனா பையன் என்ன பண்றான்.? பொண்ணுக்கு கல்யாண வயசு வந்திருக்குமே.?” என்றார் ஆவலாக.
பொதிந்திருந்த ஆதங்கமெல்லாம் மொத்தமாய் பொங்க.. பெரிதாய் கதறி அழுதார் ராமசாமி. ராமசாமியின் அழுகையிலேயே ஆறுமுகத்திற்கும் இவர்களுக்கும் ஏதோ பெரிய பிரச்சனையென நினைத்த மாரியப்பன்.. ‘அழறதுனால என்னாகப் போகுது.? இப்படி அழற அளவுக்கு என்ன பிரச்சனை.?” என்றார் தேறுதலாகவும் ஆறுதலாகவும்.
‘டேய்..” என மாரியப்பன் அதிர.. ‘என்ன சொல்றிங்க.?” என கணேசன் எழுந்தே விட்டார்.
‘ரெண்டுபேரும் ஒரே நாள்ல போய் சேர்ந்துட்டாங்க மாரி..” என கண்ணீரோடே அன்றைய நிகழ்வை சொன்னார்.
மாரியப்பன்.. ‘பாவி.. பாவி.. ஒத்த வார்த்தை சொன்னியாடா.?” என்றார் கண்ணீரோடு.
‘காரியம் நடந்து ரெண்டு நாள் வரைக்கும் நான் எதையும் சொல்ற நிலையில இல்ல மாரி.. அடுத்து என்ன செய்யிறதுன்னு தெரியல.. இரண்டு நாளுக்கப்புறம் உனக்கு சொல்ல ஃபோன் செய்தேன்.. நீ பேசல..” என்றவர் கூடவே ஆறுமுகத்திற்காக மகள் பணம் கேட்டு வந்ததையும் அன்று மாதவி நடந்து கொண்டதால்; காஞ்சனா பேசியதையும் சொல்லி..
‘என் பேத்தி வேலைக்கு போய்தான் ஜீவனம் நடந்துட்டு இருக்கு.. எதோ புகுந்த வீட்டு ஆளுங்க நல்லவங்களா இருக்க போய் பணம் கொடுத்து உதவ முடியலன்னாலும் ரொம்ப அக்கறையா காஞ்சனாவையும் ஆதிம்மாவையும் பார்த்துக்கிறாங்க..” என்றார் இயலாமையோடு.
‘எந்த முகத்தை வச்சிட்டு காஞ்சனா முகத்துல முழிப்பேன்..” என வேதனையடைந்தார் மாரியப்பன்.
மாதவி டீ யோடு வர.. அவரின் முகத்தை பார்க்க பிடிக்காத கணேசன்.. ‘இவங்கள்லாம் மனித ஜென்மமே இல்ல.. போயும் போயும் இந்தம்மா பையனுக்காக என் பையனை இங்க அனுப்பினேன் பாரு.. என்னை சொல்லனும்..” என பொறிந்த கணேசன்..
‘இவர்கிட்ட பேச என்ன இருக்கு.? எழுந்திரிங்கப்பா கிளம்பலாம்..” என்றார் கோபமாக.
மாரியப்பன்.. ‘நான் கூட எதோ சொத்து பிரச்சனையாயிருக்கும்னு நினைச்சேன் கணேசா.. இப்படி உயிர் போற நேரத்துல கூட கல்லா இருந்திருப்பாங்கன்னு நினைக்கல.. இரண்டு உசிரு போய்டுச்சே..” என வேதனையடைந்து.. ‘காஞ்சனா வீட்டுக்கு போலாம் கணேசா.. இங்க பக்கத்துலதான..? பார்த்துட்டு போலாம்.. அந்தபுள்ள என்னை என்ன திட்டினாலும் பரவாயில்ல..” என்றார்.
‘சரிப்பா..” என கணேசன் எழவே.. ‘கணேசா.. அரவிந்தனுக்காக நீ அனுப்பிவச்ச வக்கில்கிட்ட சிலது சொல்லியிருக்கேன்.. நான் இல்லன்னாலும் கொஞ்சம் பார்த்துக்கோ..” என்றார் ராமசாமி.
‘நீங்கள்லாம் நல்லாத்தான் இருப்பிங்க.. உங்களுக்கு என்ன ஆகிடப்போகுது..?” என கடுகடுத்து தன் தந்தையை அழைத்துக்கொண்டு காஞ்சனா வீட்டிற்கு பயணப்பட்டார் கணேசன்.