மைக்கேல் சொன்ன தகவல் படி கொல்கத்தா போலீசிற்கு தகவல் தர அவர்கள் மணிகண்டனை விசாரணைக்கு அழைக்க வீட்டிற்கு சென்று இருந்தனர். அங்கு மணிகண்டன் இல்லாமல் போக, விசாரணையில் தன் மகளை பார்க்க சென்னைக்கு வந்து கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே தகவல் சொல்லப்பட்டது கண்ணன் குழுவிற்கு. தங்களை மேலும் அலைய வைக்காமல் தானாகவே வந்து சிக்கும் மணிகண்டனை எண்ணி சிரிப்புதான் கண்ணனுக்கு. அவரின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தான் தன் வீட்டில். இதை பற்றி ஆரதி இடம் கூட சொல்லாமல் இருந்தான் கண்ணன்.
வேலை வேலை என ஓடிக் கொண்டிருக்கும் தன் மகன் வீட்டில் இருப்பதைக் கண்ட நாராயணன்,
“கண்ணா என்ன அதிசயமா இருக்கு வீட்ல இருக்க.”
“சும்மாதான் ப்பா. இன்னிக்கு வீட்ல தான் வேலை.”
காலை உணவை முடித்த கண்ணன் மணிகண்டனின் வரவுக்காக காத்து இருக்க, அவரும் அதிக நேரம் காக்க வைக்காமல் வீட்டினுள் நுழைந்தார். இவரை வரவைத்தது ரதிதேவி தான். இனிமேலும் கண்ணனின் வீட்டில் இருப்பது சரியாக வராது என்பதை உணர்ந்தவள் தன் தந்தைக்கு தகவல் கொடுத்து அழைத்து செல்லும்படி கூறி இருந்தாள். இத்தனை நாள் மகளைப் பாதுகாப்பாக பார்த்த குடும்பத்திற்கு நன்றி சொல்லிவிட்டு அழைத்துக் கொண்டு செல்ல முடிவெடுத்திருந்தார் அவரும். மணிகண்டனின் வரவை அறிந்து அன்புடன் நலம் விசாரித்த கண்ணன் ரதி தேவியிடம் விபரம் சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்று விட்டான்.
“வாங்க மணிகண்டன் சார். ரொம்ப நாளாச்சு இந்த பக்கம் வந்து. மகேஸ்வரி எப்படி இருக்காங்க?”
“கொஞ்சம் வேலை இருந்துச்சு சார். மகி நல்லா இருக்கா.” பதில் சொல்லியவருக்கு அன்புடன் உணவு பரிமாறினார் மகாலட்சுமி.
“ரதிதேவி இங்க வந்து ரொம்ப நாள் ஆகிடுச்சு. அவளுக்கு மேற்கொண்டு படிக்க ஆசையா இருக்கிறதா சொல்லி இருந்தா. அதனாலதான் பெங்களூர்ல பெரிய காலேஜ்ல சீட்டு வாங்கி இருக்கேன் சார். உங்க கிட்ட எல்லாம் சொல்லிட்டு ரதி தேவியோ கூட்டிட்டு போகலாம்னு வந்தேன்.” நேரங்கள் கடக்க தன்னுடைய வரவின் காரணத்தை உறைக்க ஆரம்பித்தார் மணிகண்டன்.
“படிப்பு விஷயமா இருக்கு… எப்படி தடுக்க முடியும். ரதிதேவி இங்க இருந்ததுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். நல்ல பொண்ணு. அடிக்கடி இங்க அனுப்பி வைங்க.”என்று சரஸ்வதி உரைக்க,
“கண்டிப்பா. இத்தனை நாள் என் பொண்ண நல்லபடியா பார்த்துக்கு ரொம்ப நன்றி. யார்’னு தெரியாத ஒரு பொண்ணு வந்ததும் எந்த கேள்வியும் கேட்காம வீட்டுக்குள்ள அனுமதி கொடுத்து தங்கவச்சிருக்கீங்க . உங்கள மாதிரி எத்தனை பேர் இருப்பாங்க ன்னு தெரியல. ரொம்ப நன்றி.”
“எதுக்கு சார் நன்றி எல்லாம். ரதிதேவியும் எங்க பொண்ணு தான். முன்னாடியே அவ படிக்க ஆசைப் படுறத சொல்லி இருந்தா இங்கேயே நல்ல காலேஜ்ல சேர்த்து இருப்போம். “
” இல்ல அங்கிள்.. அம்மா அப்பா பாவம். நான் இல்லாம இத்தனை நாள் இருந்ததே பெரிய விஷயம். இனிமேலும் அவங்களை தனியா விட முடியாது. நான் அடிக்கடி இங்க வந்துட்டு போவேன். அதன் சாருக்கு கல்யாண ஏற்பாடு முடிவாகி இருக்கே… கண்டிப்பா வந்து ஒருவாரம் தங்கிவிட்டு போறேன்.”
“ஒருவராம் இல்லை. எவ்ளோ நாள் தங்குனாலும் எங்களுக்கு ஓகே தான். எப்ப கிளம்பனும் மா.?”
“ஈவ்னிங் ஆறு மணிக்கு பிளைட் இருக்கு சார். இங்க இருந்து ஒரு நாலு மணிக்கு கிளம்பினா கரெக்ட்டா இருக்கும்.”
இங்கிருந்து கிளம்பும் வரை ஓய்வெடுக்க மணிகண்டனை அறைக்கு அனுப்பி வைக்க, ரதிதேவி இதை ஆரதிக்கு தெரியப்படுத்தி இருந்தாள். கிளம்புவதற்குள் வருவதாக ஆரதியும் கூறிவிட இத்தனை நாள் இந்த வீட்டில் நடந்த அழகான தருணங்களை அசை போட்டவாறு இருக்கும் நிமிடங்களை அனுபவித்து கொண்டிருந்தாள் ரதிதேவி.
தன் அறைக்கு சென்ற கண்ணன் தனிப்படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க, இன்னும் அரை மணி நேரத்தில் வருவதாக கூற, அவர்களுக்காக தயாராகி காத்துக் கொண்டிருந்தான்.
அனிதாவின் கேஸில் மைக்கேல் சந்தேகத்தின் பேரில் இருப்பதால் இப்பொழுது கண்ணனுடன் சேர்ந்து தினேஷும் விசாரிக்க இணைந்திருந்தான். அதன் பொருட்டு தனிப்படை அதிகாரிகளுடன் வந்த தினேஷ் வீட்டிற்குள் நுழைய,
அவர்களைப் பார்த்த மஹாலட்சுமி கண்ணனைக் காண வந்திருப்பதாக எண்ணி விசாரிக்க, “சாரி மேடம் நாங்க சார பாக்க வரல. இந்த வீட்ல இருக்க மணிகண்டன் கிட்ட விசாரணை இருக்கு… அதுக்காக கூட்டிட்டு போகலாம்னு வந்திருக்கோம்.”
அப்போதுதான் அங்கு வந்த ரதிதேவி அதிர்ச்சியாகி, “என் அப்பாவை எதுக்காக கூட்டிட்டு போகணும்? இருங்க நான் சார கூப்பிடுறேன்.”
“எங்களை இங்க வரச் சொன்னதே அவர்தான். ராபர்ட் கொலை விசாரணை சம்பந்தமா உங்க அப்பாகிட்ட விசாரணை நடத்தனும்.”
கண்ணன் தான் வர சொல்லி இருக்கிறான் என்பதை அறிந்த ரதி தேவி கோபமாக அவன் அறை நோக்கி செல்ல அவளுக்கு வேலை வைக்காமல் அவனே வந்தான்.
“சார் எதுக்காக அப்பாவை விசாரிக்கணும்?”
“உங்க அப்பா ஒரு கொலை கேஸில் சம்பந்தப் பட்டிருக்காரு. அதுக்காக தான் இந்த விசாரணை.”
“என் அப்பா எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டாரு. இத்தனை நாள் பார்த்துன உங்களுக்கு தெரியாதா சார்.”
“இதுல பேச ஒன்னும் இல்ல மேடம். எங்க விசாரணைக்கு ஒத்துழைங்க. உங்க அப்பாவ வர சொல்லுங்க.” என்ற தினேஷிற்கு,
“நான்தான் சொல்றேன்ல சார். என் அப்பா எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டாரு. விசாரணைக்காக எங்கேயும் வரமாட்டாரு. போங்க இங்க இருந்து.” என கத்தி பேச அதைக்கேட்டு வீட்டிலிருந்த அனைவரும் வந்து விட்டனர் மணிகண்டன் உட்பட.
அவளுக்கு பதில் சொல்ல வந்த தினேஷை தடுத்த கண்ணன், “இங்க பாரு தேவி.. ஆதாரமில்லாம நாங்க எதுவும் பண்ணல. இப்போ விசாரணைக்காக தான் கூட்டிட்டு போறோம். உன்னோட அப்பா தப்பு செய்யலன்னா விட்ருவோம்.”
“அதுக்கு எதுக்காக கூட்டிட்டு போகணும். இங்கேயே நீங்க என்ன விசாரிக்கனுமோ அதை விசாரிங்க சார்.”
“அது முடியாது. இது என்னோட வீடு. இங்க என் அம்மா அப்பாக்கு மகனா மட்டும் தான் என்னால இருக்க முடியும். செய்யுற வேலைக்கு எதிரா எந்த வேலையும் பார்க்க முடியாது. உன்னோட அப்பா னு இல்ல என்னோட அப்பாவாவே இருந்தாலும் நான் இதை தான் பண்ணுவேன்.”
பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்க அதிகாரிகளை கண்ட மணிகண்டன் முதலில் புரியாமல் பார்த்திருக்க, ரதிதேவியின் வாக்குவாதத்தில் புரிந்துகொண்டார் இது தனக்கான செயல் என்று. உடலில் உள்ள நரம்புகள் அனைத்தும் பயத்தில் புடைத்து நிற்க வேகமாக, “இருங்க சார் நான் என்னோட வழக்கறிஞர் கிட்ட பேசிட்டு வரேன்.” என பேச சென்றவரை தடுத்த தினேஷ், “உங்கள விசாரணைக்காக தான் கூட்டிட்டு போறோம். தப்பு பண்ணாம எதற்காக இவ்வளவு அவசரப் படுறீங்க. விசாரணைக்கு வாங்க…. எதுவா இருந்தாலும் இதோ இங்க நிக்குற உங்க பொண்ணு பார்த்துப்பாங்க.” என்பதோடு நில்லாமல் மணிகண்டனை தன் வளையத்திற்குள் எடுத்து தனிப்படை அதிகாரிகளுடன் அங்கிருந்து நகர, தன் தந்தைக்கு சைகை செய்தவன் அங்கிருந்து புறப்பட்டான்.
மைக்கேலை கைது செய்ததை அறிந்த அவனது குடும்பம் சென்னைக்கு வந்து இருக்க, விவரம் ஏதும் தெரியாமல் … பழைய வீடு இருக்கும் ஏரியாவில் தனக்கு தெரிந்த ஆட்கள் மூலம் மைக்கேலை காணச் சென்றனர். மைக்கேலை விசாரணை காவலுக்கு எடுத்திருப்பதால்.. அங்கிருந்த அதிகாரிகள் பார்க்க மறுத்து விட, “என்னோட புருஷன் எந்த தப்பும் பண்ணல. வேணும்’னே அவர அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கீங்க. இப்பவே என்னோட புருஷனை நான் பாக்கணும். ” என ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்க அந்த நேரம் மணிகண்டன் உடன் வந்திருந்தான் கண்ணன்.
“இங்க பாருங்க… தப்பு பண்ணவங்க சொந்தக்காரங்க எல்லாருமே இதே வார்த்தையை சொன்னா நாங்க என்னதான் பண்றது. யாரையும் தேவை இல்லாம அரெஸ்ட் பண்றது எங்க வேலை இல்லை. உங்க சைடு என்ன பண்ண முடியுமோ அதை பண்ணுங்க. நாங்க எங்க வேலையை தான் செஞ்சுட்டு இருக்கோம். அமைதியா இங்க இருந்து போங்க. இன்னும் ஒரு வாரத்துக்கு உங்க புருஷனை பார்க்க முடியாது.”
“மைக்கேலின் இரண்டாவது மகன் , “சார் அப்பாவை ஒரே ஒரு தடவை பார்த்துட்டு போறோம் சார். இதுக்கு மட்டும் பர்மிஷன் கொடுங்க. அம்மா நேத்துல இருந்து அழுதுகிட்டே இருக்காங்க சார்.”
“இப்போதைக்கு யாரையும் பார்க்க அனுமதிக்க முடியாது. பலநாள் தேடப்பட்ட குற்றவாளி உன் அப்பா. இன்னும் நாங்க விசாரணையை தொடங்க ல. எதுவா இருந்தாலும் ஒரு வாரத்துக்கு அப்புறம் தான்.” என்றவன் அங்கிருந்து நகர்ந்து விட,
தன் தாயை அழைத்துக்கொண்டு அப்பாவிற்காக வழக்கறிஞரை சந்திக்கச் சென்றான் மைக்கேலின் மகன்.
மணிகண்டனிடம் விசாரணை தொடங்க, “சார் நான் வேணும்னு எதுவும் பிளான் பண்ணி பண்ணல. சென்னையில எனக்கு பிசினஸ் காக ஒரு இடம் தேவைப்பட்டது. அதுக்காக புரோக்கர் மூலமா ஒரு இடமும் வாங்கியிருந்தேன். அதுல கட்டடம் கட்ட ஆரம்பிச்சு கொஞ்ச நாள்ல சமூக ஆர்வலர் ஒருவர் இந்த இடம் ஏரிக்கு சொந்தமான இடம்னு சொல்லி கேஸ் போட்டு இருந்தாரு. எனக்கு சத்தியமா அந்த இடத்தை பற்றி ஒன்னும் தெரியாது. சென்னையில பிசினஸ் ஆரம்பிக்கணும்னு ஆர்வத்துல எதைப்பற்றியும் யோசிக்காம நல்ல இடம் கிடைத்ததும் வாங்கிட்டேன். இப்போ அதுல பாதி கட்டிடமும் கட்ட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் இந்த மாதிரி ஒரு பிராப்ளம் வந்தது எனக்கு தலை வலியா இருந்தது. கேஸ் போட்டவர் கிட்ட பலமுறை பேசி பார்த்துட்டேன். ஒன்னும் நடக்கல. என்னோட நண்பன் கொடுத்த ஐடியாவால அவரை மிரட்டவும் செஞ்சேன். அதையும் ஒரு ஆதாரமா கொடுத்து வழக்கை அவருக்கு சாதகமாக மேலும் மாத்திட்டாரு. அப்போ எனக்கு இருந்த ஒரே வழி தீர்ப்பு சொல்ற நீதிபதி தான். இதைப் பற்றி எனக்கு தெரிஞ்ச நண்பர்கள் வட்டத்துல பேசும்போது இந்த மாதிரி எங்களுக்கும் நடந்திருக்கு.. நாங்கதான் நீதிபதி கிட்ட பேசி தீர்ப்ப மாத்தி இருக்கோம்’னு சொன்னாங்க. அதனாலதான் நானும் ஜட்ஸ் கிட்ட பேசி பார்க்கலாம்னு போனேன். அவர் என்னமோ நான் பெரிய கொலை பண்ண ரேஞ்ச்சுக்கு… எங்கிட்ட பேசி தப்பிக்கலான்னு வந்துட்டியான்னு கேட்டு சண்டை போட்டாரு. அதுமட்டுமில்ல ஜட்ஜு கிட்ட சமரசம் பேச வந்ததை சொல்லி இதுக்கு ஒரு கேஸ் போட போறதா சொன்னாரு. ரொம்ப இக்கட்டான சூழ்நிலை. இடத்துக்காக போட்ட கேஸ் கூட பரவால்ல. ஜட்ஜ் சொன்ன கேஸ் வந்தா என்னோட பிஸினஸுக்கு பெரிய ஆபத்து வந்துடும். அதனாலதான் சென்னையில எனக்கு தெரிந்த ஆட்கள் மூலம் மைக்கேல் பத்தி தெரிஞ்சுக்கிட்டு இந்த விஷயத்தை அவன் கிட்ட செய்ய சொன்னேன். சத்தியமா மிரட்டி பார்க்க மட்டும் தான் சொன்னேன். கொலை பண்ண சொல்லல. மைக்கேல் தான் அந்த ராபர்ட் கூட சேர்ந்து இந்த மாதிரி பண்ணிட்டான். விஷயம் தெரிஞ்சு நான் ரொம்ப பயந்துட்டேன் சார். போலீசுக்கு தெரிஞ்சா இந்த கேஸ்ல என்னையும் உள்ள வச்சிருவாங்க னு பயந்து மைக்கேல் கிட்ட, நீ என்ன பணம் கேட்டாலும் தரேன் என்னோட பேரை மட்டும் சொல்லிடாத ன்னு சொன்னேன். அவனும் பணத்துக்காக என்ன நடந்தாலும் என்னோட பேரை சொல்ல மாட்டேன்னு சொன்னான். அதுக்கப்புறம் அவன் கிட்ட இருந்து நிறைய டார்ச்சர். அப்போ அப்போ பணம் கேட்டு தொல்லை பண்ணினான். எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டேன். என்கிட்ட பணத்தையும் வாங்கிக்கிட்டு இந்த மாதிரி மாட்டி விடுவான்னு நினைக்கல சார். சத்தியமா நான் கொலை பண்ண சொல்லல.” அவர்களுக்கு எந்த வேலையும் வைக்காமல் தானே சொல்லி முடித்திருந்தார்.
இதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்த கண்ணன்,”சரி அந்த வீடு எப்படி வாங்கி கொடுத்தீங்க.”
“திடீர்னு ஒருநாள் கால் பண்ணி அவசரமா எனக்கு ஒரு வீடு வேணும்’னு கேட்டான். என்னால முடியாதுன்னு சொன்னதுக்கு, கொலை பண்ண சொன்னது நீதான்னும், ராபர்ட் இப்போ உன்கிட்ட தான் இருக்கா ன்னு சொல்லி போலீஸ் கிட்ட சொல்லப் போறதா மிரட்டினான். எனக்கு வேற வழி இல்லாததால… சென்னையில தெரிந்த ஆட்கள் மூலமா அந்த வீட்ட ரெண்டு நாள்ல வாங்கி கொடுத்தேன். அப்புறம் ஒருநாள் கால் பண்ணி மொத்தமா 10 லட்ச ரூபா வேணும்’னு கேட்டான். இனிமே உங்க கிட்ட எந்த காசும் கேட்க மாட்டேன்னு சொன்னதால நானும் வீடு வாங்கி கொடுத்த ஆட்கள் மூலமா அந்த பணத்தையும் கொடுத்தேன். அவ்வளவுதான் சார் அதுக்கு அப்புறம் அவன் எனக்கு கால் பண்ணவே இல்ல. “
“இங்க இராபர்ட் இறந்ததை பத்தி உங்களுக்கு எப்படி தெரியும்?”