“நியூஸ் பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன். மைக்கேல் எந்தப் பிரச்சினையும் பண்ண மாட்டேன்னு பணம் வாங்கிட்டு போயிட்டான். ஆனா ராபர்ட் இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்லிடுவான்னு அவனை பத்தி விசாரிச்சிட்டு இருந்தேன். இறந்ததை கேள்விப்பட்டதும் இதுல வேற ஏதோ சிக்கல் இருக்கிறத புரிஞ்சுகிட்டேன். தொடர்ந்து நியூஸ் பார்த்து மத்த விஷயங்களை இப்ப வரைக்கும் தெரிஞ்சுகிட்டு வரேன்.”
“இதுல ரதிதேவி சம்மந்தப்பட்டு இருக்காங்களா?”
சிறிது நேரம் அமைதியாக இருந்தவரை தட்டிய தினேஷ், கண்ணன் கேட்ட கேள்வியை மீண்டும் கேட்க, “இல்ல இதுல என்னோட மகள் சம்பந்தப்பட்ட ல. உங்களப் பத்தி சொன்னதும்.. விசாரிக்க ஆரம்பிச்சேன். ஏற்கனவே ராபர்ட் கேஸ்ல உங்களைப்பற்றி தெரிஞ்சாலும் என் பொண்ணு சொல்ற ஆள் நீங்கன்னு விசாரிக்கும் போதுதான் தெரிஞ்சுக்கிட்டேன். உங்களை வந்து பார்த்து பேசினா… பின்னாடி இந்த பழக்கத்தால ஏதாச்சும் நல்லது நடக்கும்னு வந்தேன். வந்த இடத்துல என் பொண்ணுக்கு உங்கள பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன். ஒருவேளை நீங்க என்னோட மருமகனா ஆகிட்டா எந்த பிரச்சினை வந்தாலும் என்னை காப்பாத்திடுவிங்கன்னு நம்பி தான் என் பொண்ண விட்டுட்டு போனேன். திரும்ப இங்க வரும்போது கல்யாண பேச்சை உங்க வீட்ல இருக்கவங்களே எடுத்தாங்க. நானும் நெனைச்சது நடந்திருச்சுன்னு சந்தோஷப்பட்டேன். அப்போ தான் உங்க காதல் விஷயம் தெரிஞ்சது. என் பொண்ணு உங்கள விரும்பினது எனக்கும் தெரியும். ஆனா திடீர்னு மாத்தி பேசவும் என்னால அப்போ ஒன்னும் பண்ண முடியல. ஒரு பக்கம் அப்பாவா நிறைய வருத்தம். என் பொண்ணு ஆசைப்பட்ட வாழ்க்கைய தர முடியலைன்னு. இன்னொரு பக்கம் உங்ககிட்ட பழக்கம் ஏற்பட்டதால எனக்கு உதவி செய்வீங்கன்னு சின்ன நம்பிக்கை. இதுல பாதி ஒரு அப்பாவாவும் மீதி சுயநலமாவும் இதெல்லாம் செஞ்சிட்டேன். இதுல என் மனைவிக்கும், மகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.” என்றவர் கண்ணனிடம் திரும்பி, “நீங்க என்ன இத்தனை நாளா பார்த்துட்டு இருக்கீங்க. கொஞ்சமாச்சும் என்னை பத்தி தெரிஞ்சு இருக்கும்’னு நினைக்கிறேன். எப்படியாவது என் மகளுக்காக இதிலிருந்து என்னை காப்பாத்துங்க சார். நான் இல்லன்னா என்னோட மகளும் மனைவியும் அனாதை ஆகிடுவாங்க. “
“உங்க குடும்பத்தை பத்தி யோசிச்ச நீங்க.. மத்தவங்க குடும்பத்தை பத்தி யோசிச்சி இருக்கலாம். ஒரு இடத்தை வாங்கும் போது அதை தீர விசாரிக்கனும். ஏரிக்கு சொந்தமான இடத்துல கட்டிடம் கட்டுனா பின்னாடி உங்களுக்கும் அது ஆபத்தா முடிந்து இருக்கும். அப்பவே புரிஞ்சிக்கிட்டு விலகி இருந்திருத்தா இத்தனை பிரச்சினையும் நடந்திருக்காது. இது எல்லாத்துக்கும் ஆரம்பப்பள்ளி நீங்கதான். ஜட்ஜை மிரட்டுற அளவுக்கு எங்கிருந்து தைரியம் வந்துச்சு. அதுவும் செய்யிறதை செஞ்சிட்டு காப்பாற்ற சொல்லி காவல்துறை கிட்ட கேட்கிறீங்க. நாங்க உங்களுக்கு எப்படி உதவி செய்ய முடியும். ஒருவேளை உங்க பொண்ண நான் கல்யாணம் பண்ணி இருந்தாலும்… உங்களுக்கு நிச்சயமாக உதவி செஞ்சிருக்க மாட்டேன். என்னோட வேலைக்கு எப்பவுமே நான் நேர்மையானவன். அதனால தான் வீட்ல உங்களை விசாரிக்காம ஒரு போலீஸ்காரனா இங்க கூட்டிட்டு வந்திருக்கேன். சட்டப்படி என்ன பண்ணணுமோ அதை நாங்க பண்ணறோம். தெரிஞ்சி பண்ணாலும் தெரியாம பண்ணாலும் நீங்க பண்ண வேலையால மூணு உயிர் போய் இருக்கு. “என்ற கண்ணன் ராபர்ட் இழந்த காரணத்தையும் கூற, தான் செய்த சிறு பிழையின் பெரும் விரியத்தை உணர்ந்துகொண்டார். இதில் தனக்கு கண்ணன் உதவி செய்ய மாட்டான் என்பதை அறிந்தவர் உள்ளுக்குள் தன் மகளை நினைத்து வருந்த ஆரம்பித்தார். அவரின் வருத்தம் புரிந்தாலும் இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதை அறிந்து கண்ணனும் தன் வேலையை கவனிக்க சென்று விட்டான்.
அடுத்ததாக மைக்கேலிடம் சென்றவன்… அன்று கேட்ட அத்தனை கேள்விகளையும் மீண்டும் கேட்க, புரியாது முழிக்கு ஆரம்பித்த மைக்கேல், “சார் அதான் அன்னைக்கே எல்லாத்தையும் சொல்லிட்டனே சார்.” என்றவனின் கையில் அடித்த தனிப்படை அதிகாரிகள்,
“நாங்க எத்தனை தடவை கேட்டாலும் பதில் சொல்லணும். அதுவும் முதல்ல எப்படி சொன்னியோ அப்படியே.”
வேணுமென்று செய்வதாக மைக்கேலுக்கு தெரிந்தாலும் மிகக் கவனமாக அன்று கூறிய அதே வார்த்தையை மீண்டும் கூற ஆரம்பித்தான். இதுவே மூன்று நாட்களுக்கு மேலாக தொடர.. ஒரு கட்டத்தில் சலிப்பாக உணர ஆரம்பித்து விட்டான். இதை தான் எதிர்பார்த்து கேள்வி கேட்ட அதிகாரிகளின் மனநிலை மகிழ்ச்சி கொள்ள , நான்காம் நாளிலிருந்து உணவு உண்டு முடித்த மூன்று வேளையும் அதே கேள்வி கேட்கப்பட்டது. அதில் மேலும் மேலும் நொந்த மைக்கில் மனநிலை சீரில்லாமல் மயங்கி சரிந்தான். இதை முன்னமே கணித்த கண்ணன் மருத்துவரை அழைத்து முதல் உதவி செய்யச் சொல்லி ஒரு நாள் மட்டும் தனது விசாரணையை ஒத்திவைத்தான்.
நாட்கள் நகர மணிகண்டன் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீதான விசாரணையை நடத்திய நீதிபதி , குற்றவாளியே தன் தவறை ஒப்புக் கொண்டதால் விசாரணையை தள்ளி வைத்து மேலும் 5 நாள் காவலில் எடுக்க உத்தரவிட்டது.
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை வீடு வராமல் இருக்க… காவல் நிலையத்திற்கு சென்ற ரதி தேவிக்கு தந்தையின் வாக்குமூலங்கள் பெரும் அதிர்வாக இருந்தது. தனக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் தந்தையை மட்டும் அறிந்தவள் தந்தையின் தாழ்ந்த பார்வையில் அனைத்தையும் புரிந்து கொண்டு இனி நடப்பதற்கு ஒன்றுமில்லை என எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தாள். பின் தன் தாய்க்கு தகவல் சொல்ல அவரும் சென்னை வந்துவிட்டார். இதைப்பற்றி கண்ணனிடம் உதவ கேட்க அவன் முடிவாக மறுத்துவிட்டான். வீட்டில் உள்ளவர்களிடமிடம் உதவ கோரிக்கை வைக்க, “இதுல நாங்க பண்ண எதுவும் இல்லை. கண்ணன் கிட்ட இத பத்தி எங்களால பேச முடியாது. உங்க புருஷன் இடத்தில யாரா இருந்தாலும் இப்படிதான் பண்ணி இருப்பான். இது சம்பந்தம் இல்லாம வேற என்ன கேட்டாலும் உங்களுக்கு உதவ நாங்க தயாரா இருக்கோம். ரதி தேவிக்கு எப்பவுமே எங்க ஆதரவு இருக்கும். ” என்று அப்பேச்சை முடித்துக் கொண்டனர்.
ரதி தேவிக்கு அங்கு இருப்பவர்களை பற்றி கொஞ்சம் தெரிந்து இருந்ததால் … தன் தாயை அடக்கிவிட்டு தந்தைக்காக ஜாமீன் ஏற்பாடு செய்ய முடிவெடுத்தாள்.இதில் ஜட்ஜ் சம்பந்தப்பட்டிருப்பதால்… ஜாமீன் மறுக்கப்பட்டது மணிகண்டனுக்கு.
“தேவி.. உனக்கு எந்த சமாதானம் சொன்னாலும் இப்போ புரியாது. உன்னோட பாசம் புரியுது. ஆனா உன் அப்பாக்கு இதுல குறைந்தபட்சம் சில வருஷமாது தண்டனை கிடைக்கும். அவரால தான் இவ்வளவு நடந்திருக்கு. கேஸ் ஒரு பக்கம் நடந்து கிட்டு இருக்கட்டும். அப்பாவோட பிசினஸை எடுத்து நடத்து. இன்னும் நீ சின்ன பொண்ணு இல்ல. நிதர்சனத்தை புரிஞ்சுகிட்டு அம்மாக்கு துணையாய் இரு. பிசினஸ் சம்பந்தமா மாமா உனக்கு தேவையான உதவியை பண்ணுவாரு. இதுல நேரடியா எங்களால எந்த உதவியும் பண்ண முடியாது. உனக்கான எல்லா சப்போர்ட்டும் எங்க கிட்ட இருந்து கிடைக்கும்.” என ஆரதி பொறுமையாக ரதி தேவிக்கு எடுத்துரைக்க, தந்தையை விட தாயின் நலன் முக்கியம் என்பதை அறிந்தவர் அங்கு இருந்து பெங்களூருக்கு செல்ல முடிவெடுத்து அதற்கான வேலையில் இறங்க ஆரம்பித்தாள்.
வீட்டில் நடக்கும் சம்பவங்களை வெறும் பார்வையாளராக பார்த்துக்கொண்டிருந்த ராசாத்தி, ஆரதியிடம்.. ” ஆதி அனிதா விஷயம் என்ன ஆச்சு.” என வார்த்தையில் தயக்கத்தை கூட்டி கேட்க,
அவருக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் ஆரதி தடுமாற ஆரம்பித்தாள்.
அவளுக்கு உதவுவதற்காக அந்த நேரம் பார்த்து வந்து சேர்ந்தான் சித்து.
“ஆன்ட்டி அனிதா சம்பந்தமான முக்கால்வாசி விசாரணை முடிந்தது. இன்னும் கொஞ்சம் தான் இருக்கு. இவ்வளவு நாள் பொறுத்து இருந்துட்டிங்க இன்னும் கொஞ்ச நாள் மட்டும் எங்களுக்காக பொறுமையா இருங்க. உங்களுக்கான பதில் கண்டிப்பாக கிடைக்கும்.”
“பொறுமையா இருந்துட்டேன் நிறைய நாள்..தம்பி. முன்னாடி இருந்ததை விட இப்போ நிறைய நம்பிக்கை இருக்கு. என்னோட பொண்ணு கண்டிப்பா கிடைப்பான்னு. இவ்வளவு கண்டுபிடித்த நீங்க எப்படியாது என் பொண்ண உயிரோட கண்டு பிடிச்சி என்கிட்ட சேர்த்திடுங்கள் . இது ஒன்னு மட்டும் போதும் எனக்கு.”
ராசாத்தி பேசி முடிக்கும் நொடி வானதி அங்கு வந்து சேர, உயிரோடு என்ற வார்த்தை அவளை உயிரில்லாமல் அலையச் செய்தது. அனிதா இன்னும் உயிருடன் வருவாள் என்று நம்பிக் கொண்டிருக்கும் தாய்க்கு என்ன சமாதானம் சொல்லப் போகிறோம் என்ற பயம் எழ ஆரம்பித்தது ஆரதி சித்துவிற்க்கு.
“அம்மா அக்கா நிச்சயமா கிடைப்பா. அது என்ன முடிவா இருந்தாலும் நம்ம ஏத்துக்கணும். எது நடந்தாலும் அது கடவுளுடைய செயல்.” அனிதாவின் இறப்பை மனதில் வைத்துக் கூற,
“என்னடி இப்படி சொல்ற. அப்போ என் பொண்ணுக்கு என்னமோ ஆகிடுச்சா? என் பொண்ணு எனக்கு உயிரோட கிடைக்க மாட்டாளா? நீ எதையாவது என்கிட்ட மறைக்கிறியா வானதி.”எனும் போது அவருக்கு தலை சுற்ற தாங்கிப் பிடித்தனர் மூவரும்.
“இல்லம்மா நான் அப்படி சொல்லல. ஒரு வேளை நம்ம நினைக்கிறது நடக்காம இருந்தா… அதான் முன்னாடியே தைரியமா இருந்துக்கலாம்’னு சொல்ற.”
“இல்ல என் பொண்ணு உயிரோட தான் இருப்பா. நிச்சயமா என்கிட்ட வந்து சேர்வா. ஆதி என் கிட்ட உங்க பொண்ண கொண்டுவந்து சேர்க்குறன்னு சொல்லி இருக்க. சொன்னபடி என் பொண்ண என்கிட்ட கொடுப்ப தானே ஆதி.”என்றவர் மேலும் மூச்சுவிட சிரமப்பட்டு சுவாசத்தை உள்ளே இழுக்க போராட, அதில் மூவரும் பதறி ராசாத்தியை நிதானத்துக்கு கொண்டுவர முயற்சித்தனர்.