சரஸ்வதி, போனில் சண்முகத்திடம் ஆரதி கண்ணன் இருவரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததை கூற அவரோ மகிழ்ச்சியில் அதற்கான ஏற்பாட்டை தொடங்கியிருந்தார். இதைப்பற்றி நாராயணனிடம் பேசி நிச்சயதார்த்தத்திற்கு தேதி குறிக்க சொல்ல, அவரோ அடுத்த வாரத்தில் ஒரு நாளைச் சொல்லி அதை வீட்டில் இருக்கும் தன் துணையிடம் தெரிவித்து உத்தரவும் பெற்றிருந்தனர் இருவரும். நிச்சய தேதி குறிக்கப்பட்ட உடன் சண்முகம் சென்னைக்கு கிளம்பி வர, இதைப் பற்றி சம்பந்தப்பட்ட ஆரதி கண்ணனுக்கு தெரிவிக்கப்பட்டது. மகிழ்ச்சியான தருணம் மன உறுத்தலோடு நடந்துகொண்டிருக்க கையறுநிலை இருவருக்கும்.
இதில் வானதியை விட மிகவும் கவலைப்பட்டது ஆரதி தான். அனிதாவின் உடல் இன்னும் வாங்க படாமல் இருக்க, அதை ராசாத்தியிடம் கூட தெரிவிக்காமல் இருக்கும் குற்ற உணர்வு வதைக்க ஆரம்பித்திருந்தது. மேலும் வீட்டில் துக்க செய்தி மறைமுகமாக நிகழ்ந்து கொண்டிருக்க அதற்குமேல் தன்னுடைய கல்யாண வாழ்க்கை நடைபெறுவது சுத்தமாக ஜீரணிக்க முடியவில்லை. இதைப்பற்றி கண்ணனிடம் பேச அவனோ, “என்னால மட்டும் என்ன பண்ண முடியும் ரதி. ஒரு பக்கம் அம்மா, குடும்பம். இன்னொரு பக்கம் செய்யுற வேலை. ரெண்டையும் சரிசமமா பார்க்க வேண்டிய கட்டாயத்துல இருக்கோம். இதுல நம்மோட விருப்பத்தையும் தாண்டி கடமை அதிகமா இருக்கு. நிச்சயதார்த்தம் தான நடக்கட்டும். கல்யாணம் நடக்கிறது குள்ள அனிதா கேஸை முடிக்கனும்.”
“மைக்கேல் என்ன சொல்றான்.”
“தினமும் அவன்கிட்ட ஒரே விசாரணை தான் போய்க்கிட்டு இருக்கு. எத்தனை கேள்வி கேட்டாலும் அனிதா பற்றி வரும் போது முடிவா உறுதியா யாருன்னே தெரியாதுன்னு சொல்றான். அவனோட இருக்க நண்பர்கள் அத்தனை பேரையும் இப்போ கஸ்டடியில எடுத்து விசாரிக்க ஆரம்பிச்சி இருக்கேன். சொல்லி வச்ச மாதிரி அனிதாவை பற்றி ஒரு வார்த்தை கூட வரமாட்டேங்குது. எவ்வளவு அடிச்சாலும் ஒருத்தருக்கும் தெரியல. மணிகண்டன் சார் கிட்ட கூட விசாரிச்சிட்டேன். இதுல சுத்தமா அவருக்கு சம்பந்தமே இல்லை.”
“எனக்கும் என்ன பண்றதுன்னே தெரியல ஆழி. சந்திரன் பாதி போட்டோ கையில இருக்கு. அவன் நண்பர்கள் கஸ்டடியில இருக்காங்க. அனிதா கொலை செய்யப்பட்டதற்கான நிறைய ஆதாரம் கையில இருக்கும். ஆனா இன்னமும் அதை செஞ்சவன் மட்டும் சிக்காம இருக்கான்.”
நீதிமன்றம் கொடுத்த நாட்களுக்கு கஸ்டடி எடுத்து இருந்த கண்ணன் அந்த தேதி முடிவடைய மைக்கேலை கோர்ட்டில் ஆஜர் படுத்தினான். மேலும் அனிதா சம்பந்தமான விசாரணைகள் இருக்க இன்னும் 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. வெளியில் அழைத்து வரப்பட்ட மைக்கேலை அவன் மனைவியும் பிள்ளைகளும் பரிதவிப்புடன் பார்க்க , இந்த முறை மறுப்பு தெரிவிக்காமல் சம்மதம் தெரிவித்தான் கண்ணன். சிறிது நேரம் எதையோ மைக்கேல் தன் இளைய மகனிடம் கூற, அவனும் அதற்கு சரி என தலையசைத்து அங்கிருந்து புறப்பட்டான். இதை யார் கவனித்தார்களோ இல்லையோ அங்கு நின்றிருந்த சித்தேஷ் கவனித்து விட்டான்.
தொடர்ந்து அவனை கண்காணித்து சென்றான் சித்து . ஒரு வீட்டுக்குள் நுழைந்த மைக்கேலின் இளைய மகன்… எதையோ கையில் எடுத்துக் கொண்டு புறப்பட அவனை வழிமறித்தான் சித்து.
“என்ன இது….?”
“யார் நீங்க எதுக்காக கேக்குறீங்க?”
“கேட்டதுக்கு பதில் சொல்லு. இல்லனா போலீஸ் வந்து விசாரிப்பாங்க பரவால்லையா?”
இதுவரை தந்தை செய்யும் செயல்கள் கூட அறியாமல் இருந்த மகனுக்கு, சித்துவின் வார்த்தை பயத்தை தர, “இல்ல சார். இதுல பணம் இருக்கு. போலீஸ்காரங்க ஏற்கனவே வீட்டுல இருந்த நகை பணம் எல்லாத்தையும் எடுத்துட்டு போய்ட்டாங்க. அப்பா புதுசா வாங்கின வீட்டைக் கூட திருப்பி வாங்கிக் கொடுத்தவங்க கிட்டயே சேத்துட்டாங்க. மிச்சம் இருக்கிறது இந்தப் பணம் மட்டும் தான். இதை எடுத்துட்டு போய்ட்டு பாதுகாப்பா வைக்க சொன்னாரு … என்னோட பேங்க் ல. அப்பா வர வரைக்கும் இந்த காச வச்சு அம்மாவை பார்த்துக்க சொன்னாரு சார். வேற எதுவும் சொல்லல…”
எதையோ ஆர்வமாக தேடிவந்த சித்துவிற்கு இது ஏமாற்றமாக அமைய , மைக்கேலின் மகன் எவ்வளவு கெஞ்சியும் அசராது கையில் இருக்கும் அந்தப் பணத்தையும் வாங்கி கண்ணனிடம் சேர்த்து விட்டு புறப்பட்டான் தன் வீட்டிற்க்கு.
தொடர்ந்து மைக்கேலிடம் விசாரணை நடந்து கொண்டிருக்க, இடைப்பட்ட நாளில் மணிகண்டன் கோர்ட்டில் நிறுத்தப்பட்டார். அன்றைய தினம் தந்தையை காண ரதிதேவியும் கூடவே மகேஸ்வரியும் வந்திருந்தனர். கோர்ட்டில், குற்றவாளியே தன் தரப்பு குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவரை குற்றவாளி என தீர்ப்பு கூறியது. மேலும் கொலை மிரட்டல், கொலை நடக்க காரணம், தொடர்ந்து மறைத்தல், நில அபகரிப்பு போன்ற நான்கு பிரிவுகளில் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது நீதிமன்றம். இடம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் அதை சமூக ஆர்வலர் பக்கம் தீர்ப்பாக மாற்றியது. மேலும் மணிகண்டனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், கூடவே 10 லட்சம் ரூபாய் அபராதமும் கட்ட உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவு மகளுக்கும் மனைவிக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. எனினும் தன் தந்தையே ஒப்புக்கொண்டதால் செய்த தவறுக்கான தண்டனையை அவரும், செய்யாமல் இருவரும் மணிகண்டனுக்காக ஏற்கத் தொடங்கி இருந்தனர்.
ரதி தேவியை கோர்ட்டிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் கண்ணன். “வா தேவி எப்படி இருக்க. விஷயம் கேள்விப்பட்டேன். இது அழுகிற நேரமில்லை. தைரியமா இருக்கணும். நாலு வருஷம் சீக்கிரமே முடிஞ்சிடும். அதுக்குள்ள உன் அப்பாக்கு நீ எவ்ளோ சப்போர்ட் பண்ண முடியுமோ அதை பண்ணு.” ஆரதி.
அதைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட ரதிதேவி அங்கிருந்து கிளம்ப எந்திரிக்க,
மஹாலட்சுமி, “தேவி இன்னும் ரெண்டு நாள்ல கண்ணனுக்கும் ஆரதிக்கும் நிச்சயதார்த்தம். அதை முடிச்சுட்டு ஊருக்கு கிளம்பளாமே.” மகேஸ்வரிக்கு இதில் துளியும் விருப்பமில்லை. என்ன இருந்தாலும் தன் கணவனுக்கு உதவாத குடும்பத்தின் மீது சிறு கோபம் அவருக்கு. அதை வெளிக்காட்டாமல் தடுத்திருந்தால் ரதிதேவி. மஹாலட்சுமியின் வார்த்தைக்கு மறுப்பு தெரிவிக்க விரும்பாமல் நிச்சயதார்த்தம் முடிந்ததும் கிளம்பலாம் என்று இரு நாட்கள் தங்க முடிவெடுத்தாள்.
மைக்கேலிடம் ராபர்ட் கொலை வழக்கை விசாரித்தால் பதில் வரும். ஆனால் அனிதாவை பற்றி கேட்கும்பொழுது ஒரே பதில் தான் தனக்கு தெரியாது என்று. ஒரு கட்டத்தில் அவனிடம் பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்த கண்ணன், சந்திரனின் பாதியளவு உள்ள புகைப்படத்தை அனைத்து காவல் நிலையத்திற்கு அனுப்பி இருந்தான். அதில் இதுவரை எந்த குற்ற வழக்குகளிலும் சம்பந்தமில்லாத பெயரும் ஓரளவு கொண்ட புகைப்படமும் உறுதிப்படுத்தி இருக்க, இதில் இன்னமும் சிறு சிக்கல் இருப்பதாகவே தோன்றியது கண்ணனுக்கு.
**************************
மைக்கேல் மனைவி தொடர்ந்து தன் கணவனை காப்பாற்ற வழி தேடிக் கொண்டிருக்க அது அவருக்கு கிடைத்த பாடில்லை. சோர்ந்து உடல்நலக்குறைவால் ஆளான தாயை பார்க்க பெரிய மகன் வந்து இருக்க, “உனக்கு இப்பவாது வரணும்னு தோனிச்சே . கொஞ்சமாச்சும் அப்பா மேல பாசம் இருக்கா. உன்னோட மனசு இவ்ளோ கல்லா மாறிடுச்சே.”
“ஆமா உன் புருஷன் பண்ண வேலைக்கு நாங்க சப்போர்ட் வேற பண்ணனும். இந்த மாதிரி வேலைய விட்டுடுங்கன்னு எத்தனை தடவை சொல்றது. கேட்காம போனதுக்கு தான் இப்போ ஜெயில்ல இருக்காரு. அவருக்கு சப்போர்ட் பண்ணி என்னையும் ஜெயில்ல போய் உட்கார சொல்றியா?”
“என்ன இருந்தாலும் அவரு உன்னோட அப்பா. இந்த அம்மாக்காக எப்படியாவது அவரை வெளியே கொண்டுவா. இனிமே அவரை எந்த தப்பும் பண்ணாம நான் பார்த்துக்கிறேன்.” என மூத்த மகனின் காலை பிடித்து கெஞ்ச ஆரம்பித்தார்.
தாயின் வார்த்தையில் மனம் இறங்கியவன், “அழாத ம்மா. அவருக்காக இல்ல உனக்காக நல்லதா ஒரு வக்கீலை பார்க்கிறேன். எப்படியாவது ஜாமீன்ல வெளியே வர வைக்கிறேன்.” என்றவன் அதற்கான வேலையிலும் இறங்கி இருந்தான். தன் நண்பர்களின் உதவியோடு சென்னையில் உள்ள சிறந்த வழக்கறிஞர்கள் பெயர் தெரிந்து கொண்டான். மேலும் நண்பனின் தந்தை ஒருவர் கொடுத்த சிபாரிசின் பேரில் சித்தேஷ் கண்ணன் என்ற வழக்கறிஞரை தேர்வு செய்தான். சித்தேஷ் அரசு வழக்கறிஞராக தன் தந்தையின் வழக்கை ஏற்கனவே நடத்திக் கொண்டிருக்கிறான் என்பது தெரியாமல். அவரிடமிருந்து சித்துவின் அலுவலக முகவரியைக் கேட்டவன் நாளை சந்திக்க வருவதற்கு சித்துவின் ஜூனியரிடம் உத்தரவைக் கேட்டு இருந்தான்.
அந்த ஜூனியரோ நேராக சித்துவிடம் சென்று, “சார் ரொம்ப முக்கியமான விஷயமா. உங்கள அவசரமா பாக்கணும்னு ஒரு கேஸ் வந்திருக்கு. “
“நாளைக்கு முடியாது. அண்ணாக்கும் ஆதிக்கும் நிச்சயதார்த்தம். நாளைக்கு எனக்கு வேலை நிறைய இருக்கு. மறுநாள் பார்க்க வர சொல்லு.” என்றவன் தன் ஜூனியரை அனுப்பி வைக்க, என்ன நினைத்தானோ செல்லும் ஜூனியரை தடுத்து,
“ரொம்ப அவசரமா இருக்கப் போகுது. எதுக்கும் நாளைக்கு வீட்டுக்கு வந்து பார்க்கச் சொல்லுங்க. நிச்சயதார்த்தம் முடிந்ததும் நானே பேசுறேன்.” இந்த தகவலை ஜூனியர் மைக்கேலின் மகனிடம் தெரிவிக்க… அவனும் மறுநாளுக்காக தயாராக இருந்தான்.
வெகுநேரம் பனியில் அமர்ந்திருக்கும் ஆரதியை கண்ட சித்து அருகில் சென்று, “ஆதி பிசாசு என்ன பண்ற. பனியில ரொம்ப நேரம் உட்காராத. நிச்சயதார்த்த பொண்ணுக்கு உடம்பு முடியாம போய்டும் .”
“அத நாங்க பாத்துக்குறோம். நீ போயிட்டு நடக்க வேண்டிய வேலைய பாரு.”
“இரு இன்னும் கொஞ்ச நாள்ல எனக்கு அண்ணியா வரும் போது… மச்சினன் கொடுமை என்னன்னு காட்டுற.”
அவளின் பேச்சில் சிரித்துவிட்ட ஆரதி, “ஓஹோ பித்துக்கு அந்த நினைப்பு வர இருக்கோ. என் புருஷன் போலீஸ் தெரியும்தானே. அடிச்சி உள்ள தூக்கி வச்சிடுவான்.”
“ஆமாமா பெரிய போலீஸ். இப்பவே உனக்கு கூஜா தூக்குறான். கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்குப் போறதே டவுட் தான். இதுல எங்க என்னை அடிச்சு உள்ள வைக்கிறது. நாங்கதான் அடிச்சு வேலைக்கு போன்னு துரத்திவிடனும்.”
காதலன்…..ஒரு பேச்சுக்கு கணவனாக மாறும் வார்த்தையே தித்திப்பை உள்ளுக்குள் உருவாக்கி இருக்க அதை சிரிப்பில் காட்ட ஆரம்பித்தாள் ஆரதி. இவர்களின் உரையாடலுக்கு சொந்தக்காரரான கண்ணன் அங்கு வர, “இதோ வந்துட்டாரு பாரு…. நிச்சயதார்த்த பையன். சும்மாவே இவரு ஆட்டம் அடங்காது. நாளையிலிருந்து சொல்லவா வேணும். ஒரே குஜால் தான் இரண்டு பேருக்கும்.”
“நீ பண்ற வேலைக்கு இதுவும் பேசுவேன்.. இன்னமும் பேசுவேன். நாளைக்கு உன்னோட அக்கப்போரை பாக்கணும்னு என் விதி.”
“உன்னை யார் இருக்க சொன்னா எங்கயாவது
கிளம்பி போ…” என்ற ஆரதியின் வார்த்தையில்,
“சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண் தானோ…
வேப்பிலை கருவேப்பிலை அது யாரோ நான் தானோ..
என் வீட்டு கன்னுக்குட்டி என்னோட மல்லுக்கட்டி என் மார்பில் முட்டுதடி..
ஆதி என் ஆதி…
அடங்காத காளை ஒண்ணு அடிமாடா போனதடி ஆதி என் ஆதி…”
என ஏக நடிப்பில் சித்து நடித்துக் கொண்டிருக்க, அதற்கு பலனாய் கண்ணனின் அடி விழுந்தது முதுகில்.
“ஓரமா போய் கத்து. ரொம்ப நாளாச்சு என் ரதி கூட பேசி. யாராது வர்றாங்களான்னு பாரு நாங்க பேசி முடிச்சிட்டு சொல்றோம்.”
கண்ணனின் வார்த்தையில் கடுப்பாகிய சித்து, ” இந்த வேலையெல்லாம் வேற யாரையாது பார்க்க சொல்லு.. எடுபிடி.”
கண்ணனை எடுபிடி என்று அழைத்த சித்துவை அடிக்க ஆரதி தூரத்த, இதுதான் சமயம் என்று அவர்களுக்கு தனிமையை அளித்து விட்டு ஓடிவிட்டான் சித்து.
ஓட சென்றவளின் கைபிடித்து தன் அருகில் அமர வைத்தவன் அவளின் தோளில் கை போட்டு, “சாரி ரதி… உன்கிட்ட சரியா பேசுறதில்லை. வேலை வேலைன்னு அது பின்னாடியே போயிட்டேன். உன்னை நிறைய கஷ்டப்படுத்துறனா.”
வயிற்றோடு இறுக்கி அணைத்து தோளில் சாய்ந்தவள், “நானும் தான உன் கிட்ட பேசல. என்னன்னு தெரியல ஆழி… மனசு முழுக்க ஒரே சங்கடமா இருக்கு. காதலிச்சு அது கைகூடுற நேரம் எவ்வளவு சுகமான தருணம். அது என்னமோ எனக்கு கிடைக்கலைன்னு தோணுது. வேலைய விடு நம்ம ரெண்டு பேருக்குள்ளே பேச்சுவார்த்தை குறைந்து ரொம்ப நாள் ஆகுது. அதுவே பெரிய பாரம் என் மனசுக்கு. கொஞ்ச நாளா நடக்கற எதுவும் சரியில்லை ஆழி. நாளைக்கு கூட நிச்சயதார்த்தம் நல்லபடியா நடக்குமான்னு சந்தேகமா இருக்கு.”
ஆரபியின் வார்த்தையில்.., தோளில் சாய்ந்து இருப்பவளின் தலைமீது தலை சாய்த்த கண்ணன், “லூசு.. நாளைக்கு நம்ம நிச்சயதார்த்தம் கண்டிப்பா நடக்கும். இதுல உனக்கு என்ன டி டவுட். இத்தனை பிரச்சினைக்கு நடுவுல நடக்கப்போறதை நினைச்சி சந்தோஷம் தான படனும். நீ வருத்தப்படுற.”
“வருத்தம் இல்லை ஆழி. பயம்…. ஒரு பக்கம் குற்ற உணர்ச்சி. ஒரு பொண்ணு இறந்ததை அவங்க அம்மாகிட்ட இருந்து மறைச்சு, யாரு செஞ்சதுன்னு கண்டு பிடிக்காம சுயநலமா என்னோட வாழ்க்கை பார்க்குறதா தோணுது.”
“கரெக்ட் தான் ரதி. ராசாத்தி ஆன்ட்டி வெளியே இருந்தா கூட பரவால்ல. ஒரே வீட்டுல தினம் தினம் அவங்க முகத்தை பார்க்கிறதே குற்ற உணர்ச்சி தான். இதுல நாளைக்கு அவங்கள வச்சு கிட்டு நிச்சயத்தை பண்றது எனக்கும் உறுத்தல் தான். ஆனா இத தள்ளிப் போடவும் முடியாது. நம்ம குடும்பமே இந்த நாளுக்காகத்தான் காத்துட்டு இருக்காங்க. அவங்க சந்தோஷமும் முக்கியம் தான. நாளைக்கு நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடக்கட்டும். கல்யாணத்த அம்மா கிட்ட பேசி தள்ளிப்போடலாம். அவங்களுக்கும் ஒரு நம்பிக்கை வரும். அனிதா விஷயம் முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிக்கலாம்.”
“ஹ்ம்ம் ஆழி…”
“என்ன ஹ்ம்ம்.. வேணும்’னா நாளைக்கு நிச்சயதார்த்தம் நடக்க விடாம நிறுத்திடவா.”
வார்த்தை முடியும் முன்னரே…” வேணா ஆழி…” என்றவளை சிரிப்புடன் அணைத்தான் கண்ணன்.
“ஆழி நாளைக்கு நமக்கு நிச்சயதார்த்தம்.”
“ஹ்ம்ம்…”
“நிச்சயம் ஆனாலே பாதி கணவன் மனைவியா..
“
“அப்படியா!” தெரிந்தும் வியப்பாக கண்ணன் கேட்க,
“நடிக்காதடா பிராடு. நாளைக்கு நடக்கப் போறதை நெனச்சாலே ஒரு மாதிரி எக்சைட்மென்ட்டா இருக்கு ஆழி.”
“எனக்கும் ரதி. எத்தனை பிரச்சினை சுத்தி இருந்தாலும்… நிச்சயதார்த்தம் நாள் நெருங்கினதும் ஒரு மாதிரி சில்லுன்னு இருக்கு. எத்தனை பேருக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைக்கும். காதலிச்சு அதை சொல்லாமலே புரிஞ்சி… அத தெரிஞ்சுக்கிட்டு வீட்ல இருக்கவங்க கட்டாயப்படுத்தி நிச்சயம் பண்ற பாக்கியம்.”
“ஹ்ம்ம்..ஆமா ஆழி. நம்மள விட நம்ம கல்யாணத்துல எத்தனை பேர் ஆர்வமா இருக்காங்க…. நெனச்சாலே கனவு மாதிரி இருக்கு.”
“கனவு இல்ல பொண்டாட்டி….. நிஜம்.”
பொண்டாட்டி என்ற அழைப்பு சாய்ந்திருந்தவளின் மனதை மேலும் அவன் புறம் சாய்க்க, வெகு நாட்கள் கழித்து காதல் கூட்டில் சுகமாக தழுவ ஆரம்பித்தனர் இருவரும்.