சடங்குகள் அனைத்தும் முடிந்து… இரவு வேளை நெருங்கியிருக்க மணமக்களுக்கான முதலிரவு அறை தயாராக ஆரம்பித்தது.
” வயசு பசங்கள பண்ண விடுற வேலையா இது.. சீச்சீ..! இந்த வீட்டுல இருக்குறவங்களுக்கு கொஞ்சம் கூட நம்ம மேல அக்கறையே இல்லை. என் மனசு கெட்டுப் போய்டாது. என்ன பண்றது கூட பொறந்தவனுக்காக இன்னும் என்னென்னலாம் பண்ண வேண்டியது இருக்கோ…..” தன் பாட்டுக்கு புலம்பிக் கொண்டிருக்கும் சித்துவை தலையில் அடித்த தினேஷ்..,
“அவங்களா உன்ன பண்ண சொன்னாங்க. நீயே அடம்பிடிச்சு இதெல்லாம் பண்றேன்னு சொல்லிட்டு. இங்க வந்து நல்ல பிள்ளை மாதிரியா பேசற… ஃப்யூச்சர் ல நமக்கு இதே மாதிரி பண்ணுவாங்கன்னு தான பண்ண வந்த… வாய மூடிக்கிட்டு வந்த வேலையை முடி . லேட் ஆச்சுன்னா புது மாப்பிள்ளை டென்ஷனாகிடுவாரு.”
“ஆமா தினு….”
“ப்ச்!!! தினு என் ஆளு எனக்கு வச்ச பேரு. அதை எதுக்கு நீ சொல்ற..” தினேஷ் கோவமாக கேட்க,
“ஆமா இப்ப அது ரொம்ப முக்கியம். எப்படா உள்ள விடு வாங்கன்னு ஒருத்தன் வாசலையே பார்த்துட்டு இருப்பான். நம்ம மட்டும் சரியான நேரத்துக்கு முடிக்கல அந்த மைக்கேல் மாதிரி நம்மளையும் என்கவுண்டர் பண்ணிடுவான். உன் காதல் கதையை பத்தி பேசாம மூடிகிட்டு வேலைய பாருடா…”
“என்னது டா வா..! நான் உன்னை விட பெரியவன். அதுவும் இல்லாம ஒரு போலீஸ்காரனை பார்த்து டா சொல்ற.” என்றவன் கையில் உள்ள பழத்தை சித்துவின் மீது தூக்கி எறிய அதை சரியாக கேட்ச் பிடித்தவன்,”ஓ அப்படியா… ஒருநாள் தேவி கிட்ட சொல்லாத ன்னு ஒரு ரகசியம் சொன்ன இல்ல… அத இப்பவே சொல்லிட்டு வரேன் இரு..”
சித்துவின் பேச்சில் விளங்காத தினேஷ்,”நான் என்னடா சொன்ன. அதுவும் என் தேவி கிட்ட சொல்லாத’ன்ற அளவுக்கு…” என்றவன் யோசனையில் தீவிரமாக மூழ்க ஆரம்பித்தான்.
அவனின் தீவிரமான முகத்தை பார்த்த சித்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே, “அதாண்டா அன்னைக்கு… ரதிதேவி ய சும்மா டைம் பாசுக்கு தான் சைட் அடிச்சேன். அவளே வந்து மாட்டிக்கிட்டா. சும்மா ஒரு நாலு டயலாக்தான் பேசின அதுக்கே மடங்கிட்டா. கொஞ்சம் கூட அறிவே இல்ல. கொஞ்ச நாள் அப்படியே பழகிட்டு ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கலாம்… அப்படி இப்படி ன்னு சொன்னியே… அதை தான் தேவி கிட்ட சொல்லிட்டு வர போறேன்.” என்ற சித்து எதார்த்தமாக வாசலை பார்ப்பது போல் பார்த்து விட்டு,”ஐயோ! தேவி நீ எப்ப வந்த? .. அச்சச்சோ எல்லாத்தையும் சொல்லிட்டனா….சாரி தினேஷ் சார்.” என்றவன் நல்ல பிள்ளையாக கட்டிலை அலங்கரிக்கும் வேளையில் ஈடுபட்டிருக்க, அங்கு தினேஷ் தான் தன் காதலியிடம் மாட்டிக் கொண்டான்.
“திவி மா.. இவன் வேணும்னே பொய் சொல்றான். நம்பாத டா செல்லம்…. உன்னைப்போய் அப்படியெல்லாம் சொல்லுவேனா. உண்மையா தாண்டா உன்னை லவ் பண்றேன்….திவி மா திவி………திவி நில்லு மா. திவி குட்டி…….திவி……….” தினேஷின் வார்த்தையில் மயங்காத ரதிதேவி முறைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட…., “அடப்பாவி உனக்கு என்னடா துரோகம் பண்ண. சத்தியமா சொல்றேன் சாபம் தர… கல்யாணம் ஆனாலும் உனக்கெல்லாம் முதல் ராத்திரி நடக்கவே நடக்காது.”
“ஆஹான்! அப்படியா! இரு திரும்ப தேவி வரட்டும்… அன்னைக்கு ஒரு நாள் ஷாப்பிங் கூட்டிட்டு போய்ட்டு உன்ன ஒரு வேலைக்கார மாதிரி அலையவிட்டான்னு சொன்னல அதையும் சொல்கிற…..”
“இன்னும் என்னென்ன சொல்லி இருக்காரு மொத்தமா சொல்லிடுங்க சித்து. அப்போ அப்போ என்னால கேட்டுட்டு இருக்க முடியாது.”அறையை விட்டு சென்றவள்… மனம் இறங்கி தினேஷை காண வர ……திரும்பவும் கேட்ட சித்துவின் வார்த்தையில் கொதி நிலைக்கு சென்று விட்டாள்.
அங்கு நின்று கொண்டிருந்த தினேஷிற்கு தான் நெஞ்சு வலியே வந்துவிட்டது. இதற்கு மேல் விட்டால் திருமணமாகாமல் தங்களுக்குள் விவாகரத்து வந்துவிடும் என்பதை அறிந்த தினேஷ் சித்துவின் காலில் விழுந்து ,” விட்டுடுடா…ராசா. நீ என்ன டா இல்ல எவ்வளவு கேவலமா வேணா கூட பேசு. இனிமே ஒரு வார்த்தை கேட்க மாட்டேன். தயவு செஞ்சு என் குடும்பத்துல கும்மி அடிச்சிடாத டா..” என்றவன் ரதிதேவியை சமாதானப்படுத்த முயற்சிக்க, அவளோ சிலிப்பிக் கொண்டு சென்றுவிட்டாள். செல்பவளின் பின்னால் தினேஷும் ஓட …. சிரிப்புடன் தன் அண்ணனின் அறையை அலங்கரிக்க தொடங்கினான் சித்தேஷ் கண்ணன்.
ஆரதி தன் அறையில் சிறு அலங்காரத்துடன் ரெடியாகி இருக்க… அங்கு வந்த மஹாலட்சுமி… மருமகளின் அழகில் நெட்டி முறித்து, “ரொம்ப அழகா இருக்க ஆதி. இப்ப கூட நடந்தது எல்லாமே கனவு மாதிரி இருக்கு. நான் ஆசைப்பட்ட மாதிரி நீ என்னோட மருமகள். அதும் வீட்டுக்கு மூத்த மருமகள். ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டா…ஆதி. இனிமே கண்ணன் முழுக்க முழுக்க உன்னோட பொறுப்பு. உங்க வாழ்க்கைக்குள்ள தலையிட எனக்கு எந்த உரிமையும் இல்லை. இருந்தாலும் சொல்ற…. வேலை எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு குடும்பமும் முக்கியம். சில விஷயங்களுக்கு வளைந்து கொடுத்து போனா வாழ்க்கையில கஷ்டம் குறைவா இருக்கும். என் மகனுக்காக இத சொல்லல உனக்காகவும் தான். இனிமே என்ன நடந்தாலும் அது யாருக்கா இருந்தாலும் ரெண்டு பேருக்கும் பொதுவானதா இருக்கணும்…” சொல்லவேண்டியதை சொல்லி முடித்ததும்…முத்தமிட்டு தன் மருமகளை பார்க்க, “புரியுது அத்தை. இது கனவெல்லாம் இல்லை நிஜம்தான். இனிமேலும் உங்க ஆசை ஒவ்வொன்னா நிஜமாகும். “என்றவளும் மஹாலட்சுமியை அணைத்துக் கொள்ள, சிரித்தவாறே கண்ணனின் அறைக்கு அனுப்பி வைத்தார் ஆசையாக.
என்றுமில்லாத அளவிற்கு படபடப்பும் ஆசையும் ஒருசேர ஆரதியின் உடலில் பாய தொடங்க…. தயக்கத்தோடு உள்ளே நுழைந்தாள். இன்னதென்று புரியாத மாற்றங்கள் மனதில் உருவாக பழக்கப்பட்ட அறையே புதிதாக தெரிந்தது புது பெண்ணிற்கு. வெகு நேரம் கடந்தும் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்க தன்னவன் வருகை கிடைக்காது பாவையின் தலை தானாக நிமிர…. அப்பொழுதுதான் குளியல் அறையில் இருந்து வெளியில் வந்திருந்தான் கண்ணன்.
அதுவரை இருந்த மோன நிலை மாறி குழப்ப நிலைக்கு சென்ற ஆரதி,”ஆழி எங்க கிளம்பிட்ட…..” என்றாள் கண்ணன் அணிந்திருக்கும் உடையை கண்டு.
“ஓய்! பொண்டாட்டி வந்துட்டியா. எதுக்கு அங்க நிற்கிற உட்காரு. ஒரு சின்ன வேலை இருக்கு முடிச்சிட்டு ஒரு மணிநேரத்துல வந்துடுறேன்.”கண்ணனின் வார்த்தையில் பேந்த பேந்த முழித்தவள்,”இன்னைக்கு கூட உனக்கு எவன்’டா வேலை குடுத்தது.” கடுப்பாக கேட்க, அதில் சிரித்து விட்டவன் தன் ரதி அருகில் நெருங்க …. விட்ட படபடப்பு தொற்றிக்கொண்டது பெண் மனதில். தானாக மீண்டும் தலை தொங்க…அதை நிமிர்த்திய கண்ணன்,
“பொண்டாட்டி…. ரொம்ப கடுப்புல இருக்க போல. உன்ன விட எனக்கு ரொம்ப இருக்கு. என்ன பண்ண நம்ம வேலை அப்டி. உன்ன பார்க்குறதுக்கு முன்னாடியே போய்டனும்’னு தான் நினைச்சேன். வீட்ல உள்ளவங்களுக்காக தான் நீ வர வரைக்கும் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இந்த மாதிரி உன்னை எவ்ளோ.. நெருக்கத்துல உரிமையா பார்த்துட்டு போக மனசு வராது டி..” என்றவன் கைகளை உயர்த்தி…. மனைவியின் அதரங்களை வருட ஆரம்பிக்க … தடங்கலாக வந்தது கைப்பேசி . அதில் இருவரும் தெளிந்து விட….. “சீக்கிரம் முடிச்சுட்டு வா ஆழி. நான் வெயிட் பண்ணிட்டு இருப்பேன்.” என்றவளுக்கு தன் அதரத்தால் நீண்ட நேரம் பதில் சொல்லியவன் அங்கிருந்து கிளம்ப .. அலங்கரிக்கப்பட்ட அறையே துணையாக இருந்தது அந்த இரவில் ஆரதிக்கு.
இரவு மூன்று மணி போல் கண்ணன் வீட்டிற்க்கு வர…
தந்தையும் மாமனாரும்… தலையில் கையை வைத்தவாறு சோபாவில் அமர்ந்திருக்க, மஹாலட்சுமி உணவு மேஜை மீது தலை வைத்து படுத்து இருந்தார். சரஸ்வதி… மாடிப்படியில் தலை கவிழ்ந்து… அமர்ந்திருக்க, ரதி தேவி, வானதி இருவரும் ராசாத்தி மடியில் பாதி உறக்கத்தில் படுத்திருந்தனர். சேகர் மடியில் பாவமாக தினேஷ் படித்திருக்க…. ஒன்றும் புரியாத முக பாவனையுடன் உள்ளே வந்தான் கண்ணன்.
அனைவரும் ஒவ்வொரு கோலத்தில் அமர்ந்து இருக்க தன் கண்ணான கண்மணியும், கருத்து பேசும் தம்பியும் இல்லாமல் போக.. அவர்களைத் தேடியவன்…தம்பி சித்துவை கண்டு கொண்டு அருகில் செல்ல, சோபாவிற்கு பின்புறம் தலையில் முக்காடு போட்டப்படி கலைந்த தலையோடு …. கால் சட்டை மட்டும் அணிந்துக் கொண்டு , கண்ணில் சிவப்பு ஏறி… அந்தோ பரிதாபமாக அமர்ந்திருக்க கண்ணனுக்கே சிரிப்பு வந்து விட்டது. அவனிடம் பேசினால் இன்று தன் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை உணர்ந்த கண்ணன் ஆரத்தியை தேட, அம்மணியோ.. அர்த்தராத்திரியில் அனைவருக்கும் காஃபி போட்டுக் கொண்டிருந்தார். கண்ணனின் வருகையை அறிந்துக் கொண்ட ஆரதி எதுவும் பேசாமல் அங்கு இருப்பவருக்கு ஆர்வமாக காபி கொடுக்க ஆரம்பித்தாள்.
அதுவே சொல்லாமல் சொல்லியது இங்கிருக்கும் அனைத்திற்கும் காரணம்…தாலி கட்டியவள் என்று.
யாரை கேட்கலாம் என யோசித்த கண்ணன்…,
தினேஷிடம் செல்ல…அவனோ கண்ணன் கேட்கும் முன் ரதி தேவியை கை காட்ட…கால்கள் ரதி தேவியிடம் சென்றது . “தேவி என்ன ஆச்சு… எதுக்காக தூங்காம இந்த நேரத்துல உட்கார்ந்துட்டு இருக்கீங்க.” என வரும் சிரிப்பை அடக்கிக்கொண்டு கண்ணன் கேட்க, அதில்… தன்னை நொந்தவள்.. வானதியை கை காட்ட…அவள் புறம் திருப்பிய கண்ணனுக்கு… கை சரஸ்வதியை காட்ட… அத்தையிடம் சென்றவன், “அத்தை…” என்றுதான் அழைத்தான் … சட்டென எழுந்தவர் கை எடுத்து கும்பிட்டு…
“நாளைக்கே நாங்க ஊருக்கு போறோம்… சாமிங்களா. ” என்றவர் சித்துவை கை காட்ட ,விரிந்த புன்னகையோடு தம்பியிடம் செல்லாமல் தூரமாக நின்று….. “தம்பி… ” என்றழைக்க…”உன் கிட்ட சண்டை போட இந்த பாவப்பட்ட உடம்புல தெம்பு இல்லை. தயவு செஞ்சு போயிடு… போகும்போது அதோ அங்க நிற்கிறாளே உன் அருமை பொண்டாட்டி அவளையும் கூட்டிட்டு போயிடு. நான் இன்னும் கொஞ்ச நாள் உயிரோடு வாழனும். ” என்றவன் அமர்ந்த நிலையில் உறங்க ஆரம்பித்தான்.
அதில் ஆரதிக்கே சிரிப்பு வந்து சத்தமாக சிரித்து விட, வெறி கொண்ட வேங்கையான சித்து… அரைகுறை ஆடையோடு ஆவேசமாக எழுந்தவன்,”சிரிப்ப டி நல்ல சிரிப்ப. சிவனேனு தூங்கிக்கிட்டு இருந்த என்னை எழுப்பி விட்டதும் இல்லாம சிரிக்க வேற செய்யுறியா நீ.” என்றவன் அடிக்க செல்ல அதை தடுத்த கண்ணன், “டேய்.. என் பொண்டாட்டிய டி சொல்றதே தப்பு இதுல அடிக்க வரப் போறியா..” அடிக்க தொடங்கினான்.
மஹாலட்சுமி தான், “இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. விடுடா என் பையனை. அவன் எத்தனையோ தடவை உங்க ரெண்டு பேரைப் பத்தி சொல்லி இருக்கான். அப்போலாம் என் பையனை நம்பாம விட்டதால தான் இன்னைக்கு தூங்காம குடும்பமே இப்படி உட்கார்ந்து இருக்கோம். ஒரு மணி நேரத்துல வரேன்னு சொல்லிட்டு போனா வந்து தொலைய வேண்டியது தான. நீ வராததுக்கு எங்க எல்லாரையும் கூப்பிட்டு தூங்க விடாம செஞ்சுட்டா உன் பொண்டாட்டி. கொஞ்சம் கண்ணை மூடினாலும்…. நீங்க தான கல்யாணம் பண்ணி வச்சிங்க. உங்க பையன் வந்ததும் எனக்கான நியாயத்தை வாங்கி கொடுங்க.. அது வரைக்கும் தூங்க கூடாதுன்னு சட்டம் பேசுறா. அதுகூட பரவாயில்லை… என் புருஷன் தெரியாம கொஞ்ச நேரம் தூங்க போயிட்டாரு… உடனே பேரப்பிள்ளைகளை பெத்து தர மாட்டேன்னு பிளாக்மெயில் பண்றா. அங்க பாரு அந்த பிள்ளை என்ன பாவம் பண்ணுச்சி . எங்கேயோ இருந்த பிள்ளைக்கு போனை போட்டு.. இங்க வர வைச்சிட்டா உன் அருமை பொண்டாட்டி. எப்படி அரைகுறை தூக்கத்துல பாவமா இருக்குன்னு பாரு… என்றவர் தினேஷை கை காட்ட… அவனோ ‘எப்படா தூங்க விடுவீங்க’ என்ற ரீதியில் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு மணி நேரத்தில் வருவதாக சொன்னவன்…..வராமல் போக பொறுத்திருந்து ஆரதி பொங்கி எழ… நேராக சித்துவின் அறைக்குள் சென்றவள் தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி விட்டாள் அவன் மூலமாக அனைவரையும் எழுப்பி பஞ்சாயத்தையும் கூட்டி இருந்தாள்.
நடந்ததை அறிந்து கொண்ட கண்ணன்… சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து அங்கிருப்பவர்களின் முறைப்பை வாங்கிக்கொண்டான்.
“என்ன கண்ணா சிரிக்கிற… இப்படி எல்லாரையும் தூங்க விடாம பண்றதுக்கு இந்நேரம் நீ சண்டை போட்டு இருக்கனும். சின்ன பிள்ளைங்க மாதிரி மாத்தி மாத்தி விளையாடுறீங்க.” என மருமகனை தன் மகளிடம் சண்டை போடுமாறு சண்முகம் பேசிக் கொண்டிருக்க,
அந்த நேரம் இடைப் புகுந்து சித்து, “இவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சதே தப்பு. எப்படியோ போங்கன்னு விட்டு இருக்கணும். என் பேச்சைக் கேட்காம கல்யாணம் பண்ணி வச்சீங்க இல்ல தூங்காம சாவுங்க எல்லாரும்.”
“மாமா என்ன இப்படி சொல்லிட்டீங்க… இப்ப பாருங்க உங்க மருமகன் எப்படி உங்க மக கிட்ட சண்டை போடுறான்னு . இன்னையோட உங்க மக எப்படி அடக்க ஒடுக்கமா ஆகுறான்னு மட்டும் பாருங்க. யாருன்னு நினைச்சீங்க என்னை…. கண்ணன்…. ஆழிக்கண்ணன். டெபுடி கமிஷனர் ஆழிக்கண்ணன். “என வீரமாக வசனம் பேச அவ்வார்த்தையை நம்பி அனைவரும் அவனையே பார்த்து இருக்க ( சித்து மட்டும் நம்பாத முக பாவத்துடன் பார்த்திருந்தான்) மீசையை முறுக்கி கொண்டு வேகமாக சென்றவன்…ஆரதியை டக்கென தூக்கிக் கொண்டு வெளியில் ஓட ஆரம்பித்தான்.
அதுவரை அரைகுறை தூக்கத்தில் இருந்தவர்கள் பதறி அடித்துக் கொண்டு அவன் பின்னே ஓட காரில் பறந்து விட்டனர் இருவரும்.
‘நினைச்சேன்டா… அப்பவே. ‘ என ஓடுபவர்களை கண்டும் காணாமலும் உக்கார்ந்தவாறு உறங்க தொடங்கிய
சித்துவின் அலைபேசி சில நொடிகளில் அலர… முற்றும் துறந்த ஞானி சித்தேஷ் கண்ணன்…”உங்க அருமை மகன் தான் பண்ணுவான் பாருங்க.” சொன்னது போலவே கண்ணனாக இருக்க…அதை எடுத்து லவுட் ஸ்பீக்கரில் மாற்றினான்.
“டேய்! வர பத்து நாளைக்கு மேல ஆகும். நான் சொல்ற அட்ரஸ்க்கு… ரதியோட டிரஸ், ஃபோன், மத்த திங்ஸ் எல்லாத்தையும் அனுப்பிவிடு.”என்றவன் பதிலைக் கூட உள்வாங்காமல் வைத்துவிட்டான்.
அதைக் கேட்ட அனைவருக்கும் ஒரு புறம் அவர்களை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தாலும்… மறுபுறம் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக உறங்கச் சென்றனர். வீட்டிற்குச் செல்வதாகச் சொன்ன தினேஷை கட்டாயப்படுத்தி தன் அறைக்கு அழைத்து சென்ற சித்து, “இங்க பாரு நான் தூங்குனதும் நீ தனியா ரொமான்ஸ் பண்ண போயிடாத. அத்தோட சங்கு தான் உன் காதலுக்கு.” என்றவன் மனைவிபோல் தினேஷை கட்டிக் கொண்டு உறங்க, ‘ஐயோ என்னடா குடும்பம்…இது’ மனதிற்குள் நொந்து கொண்டான்.
“எதுக்கு டி இப்படி பண்ண. பாவம் வயசானவங்க ராத்திரி முழுக்க தூங்காம…. இருக்கிறது நல்லவா இருக்கு. போன இடத்துல கொஞ்சம் வேலை அதிகமாகிடிச்சு. போயிட்டு வரதுக்குள்ள ஒரு கலவரத்தை பண்ணி வச்சிருக்க…..”என்றவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாக அமர்ந்திருந்தாள் ஆரதி.
அதில் காரை ஓரமாக நிறுத்திய கண்ணன்,” ரதி…” என்றழைத்து தோள் மீது கை வைக்க.. அதை தட்டி விட்டவள் அவனை பார்க்காமல் திரும்பிக் கொண்டாள்.
மீண்டும் மீண்டும் அழைக்க…. ஆரதி அதே நிலையில் இருந்தாள். மனையாளின் அமைதி அவனுள் வருத்தத்தை விதைக்க மௌனமாக இருந்துக் கொண்டான் . அழைத்து கொண்டிருந்தவனின் குரல் சிறிது நேரம் கேட்காமல் இருக்க…”நம்ம என்ன பத்து கல்யாணமா பண்ணிட்டோம். இதெல்லாம் லைஃப்ல ஒரு டைம் வரது ஆழி. இனி எத்தனை நாள் இருந்தாலும் இந்த நாள் போல வராது. இந்த மொமெண்ட்டை அனுபவிக்க முடியாம சொதப்பிட்டியே ஆழி. எவ்வளவு நேரம் அலங்கரிச்ச பொம்மை மாதிரி உட்கார்ந்து இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமா கோபம் வர ஆரம்பிச்சது. அப்படியே இருந்தா நீ வந்ததும் உன்கிட்ட காட்டிடுவன்னு பயம். அதான் வீட்டுல எல்லாரையும் எழுப்பி விட்டு …. கலாட்டா பண்ண. ” என மனதில் உள்ளதை திரும்பாமலே சொல்லிக்கொண்டிருந்தாள்.
“நானும் வேணும்’னு பண்ணல ரதி. போலீஸ்காரன் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும். உன்ன ஏமாத்தனும்’னு நினைக்கல. நினைக்கவும் மாட்டேன். உன்னை விட அதிக வருத்தம் எனக்கு தான். இந்த நாளை திருப்பிக் கொடுக்க முடியாது.. உண்மைதான். ஆனா இந்த நாளை விட சிறப்பான ஒரு நாளை என்னால் தரமுடியும்.” என்ற கண்ணன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் காரை இயக்க……
இதுவரை இருந்த ஏமாற்றம் நீங்கி தன்னையே கடிந்துக் கொண்டவள்….. “சாரி..” என்று விட்டு தோள் மீது சாய அவளைப்போலவே தட்டிவிட்டான் கண்ணன். அவளும் கண்ணனைப் போல் மீண்டும் மீண்டும் அழைப்பதற்கு பதில் தோல் சாய.. தட்டிவிட்டுக் கொண்டே இருந்தான். அதில் அழுத்துக் கொண்டவள் , “டேய் எடுபிடி ரொம்ப பண்ணாத.” என்ற ஆரதியை கொலைவெறியில் முறைக்க… ஆரம்பித்தான் கண்ணன்.
இப்போதைக்கு இவன் கோபம் போகாது என்பதை நன்கறிந்த ஆரதி, “ஏங்க…. புருஷரே…. என்னங்க கோவம் உங்களுக்கு பொண்டாட்டி மேல. இங்க திரும்பி என்னை பாருங்க ….. ” முகத்தை திருப்ப முயல அதில் கோபம் மறைந்து சிரிப்பு வந்தாலும் கண்டும் காணாமலும் காரை ஓட்டிக் கொண்டிருந்தான் கண்ணன்.
“மாமா… ” என்ற…..ஸ்ருதியோடு அழைக்க, இதை எதிர் பார்த்திராதவன் காரை சடாரென இழுத்து நிறுத்தினான்.
“மாமா……. என்ன ஆச்சி… மாமா..” எதுவும் அறியாத குழந்தை போல் கேட்க,
“என்ன டி இது…. புதுசா இருக்கு.” வார்த்தையில் அப்படி ஒரு புரிப்பு கண்ணனுக்கு.
“ஆஹான்! எங்க ஊருல புருஷன அப்டி தான் கூப்பிடுவாங்க மாமா… … அது மட்டும் இல்ல…மாமா …என் புருஷனுக்கு கூட நான் அப்டி கூப்பிடனும்’னு ரொம்ப ஆசை மாமா. சின்ன பிள்ளையா இருக்கும் போது கூப்பிடு கூப்பிடுன்னு கெஞ்சி இருக்கான் மாமா…. எனக்கும் மாமா னு சொல்லனும்’னு ஆசை தான் மாமா. வீட்ல உள்ளவங்க தப்பா நினைப்பாங்கன்னு சொல்லல மாமா. எப்படா கல்யாணம் ஆகும் மாமா…மாமா னு கூப்டனும்னு எதிர் பார்த்துட்டு இருந்த மாமா. அதான் மாமா இப்ப சொல்ற. மாமா……” அதுவே கடைசி மாமாவாக இருந்தது .
உதடும் உதடும்…உள்ளம் வழி பேசிக் கொள்ள…காரினுள் ம்ம் என்ற சத்தம் மட்டுமே மிச்சம்.