“அய்யோ…பட்டு உன் அம்மா டென்ஷன் ஆகிட்டா வா ஓடிடலாம்…” இன்று அகலிகையின் முதல் பிறந்த நாள். மாலை விழாவிற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிக்க…மகளை தயார் படுத்தும் பொறுப்பு கண்ணனுடையது. அவனோ வழக்கம் போல் தந்தை உலகில் மெய் மறந்து விளையாடி கொண்டிருக்க….. ஆரதிக்கு தான் உச்சி சுடாகியது. கஷ்டப்பட்டு இருவரையும் தயார் படுத்தி வெளியில் அழைத்து வர…. அங்கு குட்டி போட்ட பூனை போல் நடந்து கொண்டு இருந்தான் சித்தேஷ் கண்ணன்.
சித்தப்பாவை கண்டதும் அகலிகை கட்சி மாற… “வாடா… குட்டி ஏஞ்சல். அப்பா எவ்ளோ நேரம் வெயிட் பண்றது. உன் அப்பன் வேணும்’னே நம்மள பிரிக்கிறான். இனிமே இவன் பக்கம் கூட உன்ன அனுப்ப மாட்டேன். ” என மகளை கொஞ்சிக் கொண்டே…கண்ணனை வம்பிழுக்க,
அவனோ, “நீ யாருடா கோமாளி என் பொண்ண தர மாட்டேன்னு சொல்றது. இனிமே நீ என் பொண்ணு பக்கம் வராத. உன் கூட சேர்ந்து தான்….அவளுக்கு பேட் ஹாபிட்ஸ் நிறைய வருது.” என அவனும் தம்பிக்கு பதில் தர….. இருவருக்கும் நடுவில் அழகாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் அகலிகை.
மஹாலட்சுமி நாராயணன்,
சரஸ்வதி சண்முகம்,
ராசாத்தி சேகர்,
மணிகண்டன் , மகேஸ்வரி,
தினேஷ் ரதிதேவி,
சித்தேஷ் கண்ணன் வானதி,
ஆழிக் கண்ணன் ஆரதி…….. குடுபத்துடன் மேலும் பல குடும்ப உறவுகளும், நண்பர்களும் சேர்ந்திருக்க…..
அன்றைய நாளுக்கான தேவதை அகலிகை.. குட்டி இளவரசியாய் பெற்றோர்களுக்கு நடுவில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டே கேக்கை வெட்டினாள்.. தந்தையின் கைக்குள் தன் கையை மறைத்து கொண்டு. சிறு துண்டை எடுத்து மகளுக்கு ஊட்ட….. அகலிகையோ அதை தொட்டு தொட்டு பார்த்து தந்தையின் கன்னத்தில் தடவினாள்.
“வாலு…வாலு…” என மகளை புகழ்ந்த ஆரதிக்கு சிறு முறைப்பு பரிசாக கிடைத்தது மகளிடமிருந்து. “இப்ப பாரு என் பொண்ணு எப்டி எனக்கு ஊட்ட போறான்னு….” என்ற சித்துவிடம் தாவிய அகலிகை வாயில் இருக்கும் கேக்கை சித்தப்பாவின் முகம் முழுவதும் முத்தம் கொடுப்பது போல் புச……. சிரிப்பொலியில் வீடு நிறைந்து.
விழா நல்லபடியாக முடிய… அனைவரும் உணவருந்த அமர்ந்தனர். பேச்சுக்களுக்கு நடுவில்… கண்ணன் தன் தந்தைக்கு சைகை செய்ய அவரோ , ” மணிகண்டன் சார்…உங்க கிட்ட ஒரு விஷயம் பேசனும்..” என பொடி போட…. உணவை நிறுத்தியவர்… “சொல்லுங்க சார்…” என்றார்.
“உங்களுக்கே தெரியும் தினேஷ் ரதிதேவி காதலிக்கிற விஷயம். அவங்களும் நீங்க வர வரைக்கும் வெயிட் பண்ணிட்டாங்க . இனிமேலும் தள்ளிப்போட வேண்டாம். தினேஷுக்கு யாரும் இல்லன்னு நினைக்காதீங்க அவன் என்னோட மகன். ஏதோ ஒரு சூழ்நிலையில என்னோட மூத்த மகனுக்கு… ரதி தேவியை கல்யாணம் பண்ணி வைக்க முடியல. ரெண்டாவது பையன் தினேஷுக்கு… உங்க பொண்ண முறைப்படி கேட்குறோம். சம்மதம்’னா சொல்லுங்க அடுத்த நல்ல முகூர்த்தத்துல கல்யாணம் பண்ணிடலாம்.” என நல்ல காரியத்தை நடத்த பேச்சுக் கொடுக்க….இதை எதிர்பார்க்காத தினேஷ் திகைத்து விட்டான். இளைய மகன் சித்து இருக்க அந்த இடத்தில் அவனை வைத்துப் பேசியது நம்ப முடியவில்லை. கண்கள் கலங்க அவரையே பார்த்திருக்க,
“அப்பா.. திரும்பவும் பண்ண தப்பையே பண்ணாதீங்க. இங்க பாருங்க நீங்க கேட்டது பிடிக்காம தினேஷ் கண்ணுலாம் கலங்குது. அவனுக்கு ரதி தேவிய பிடிக்கல போல….” என்ற பேச்சில் இயல்புக்கு திரும்பிய தினேஷ், “ஐயோ மாமா இவன் பொய் சொல்றான் நம்பாதீங்க. உங்க பொண்ண நான் நிஜமா கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன். என் வாழ்க்கையில விளையாடுறதே இவனுக்கு வேலையா போச்சு. ” என்றதும் மீண்டும் அங்கு சிரிப்பலைகள்.
“என் பொண்ணு முன்னாடியே இது பத்தி பேசிட்டா சார். எனக்கு முழு சம்மதம் தான். உங்க பையன் தினேஷுக்கு… என் பொண்ண தர சம்மதம்.” என மணிகண்டன் மகளை பார்த்துக் கொண்டே கூற…..அவளோ வெட்கத்தோடு தலை குனிந்து கொண்டாள். மூத்தவர்கள் கல்யாண வேலையை பற்றி பேச உள்ளே சென்று விட்டனர்…அகலிகையோடு வானதியும் சென்றுவிட,
“உங்களுக்கெல்லாம் வாழ்வு தான். இங்க ஒருத்தன் கல்யாணம் பண்ணி பிள்ளையை பெத்துட்டான். இன்னொருத்தன் கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டான். நான் மட்டும் கல்யாணம் ஆகியும் சந்நியாச வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கேன். அதைப்பத்தி யாருக்காச்சும் கவலை இருக்கா. என்ன பத்தி கவலைப்பட யாரும் இல்ல. கல்யாணம் ஆகியும் கன்னி பையனாவே இருக்கன்ற கவலை இல்லாம… என்னை பெத்தவங்க உன் கல்யாணத்துக்கு நாள் குறிக்கிறாங்க இது ஞாயமா….தர்மமா……. கன்னி பையன் சாபம் உங்கள சும்மா விடாது. என்றவனை அங்கிருந்தவர்கள் கொலைவெறியில் முறைக்க ,
“உன்னை யாரு வீரவசனம் பேசி பொண்டாட்டியை மாமியார் வீட்ல விட சொன்னது. நல்லா அனுபவி ராஜா…” என ரதிதேவி கூற…… மீதம் இருந்தவர்கள் அவளுடன் சேர்ந்து சித்துவை கலாய்க்க ஆரம்பித்தனர்.
பேச்சுக்களுக்கு நடுவில் அங்கு வந்த வானதி… வெகு நேரம் சைகயில் சித்துவை அழைத்து கொண்டிருக்க அவனோ கவனிக்கவில்லை. பக்கத்தில் இருந்த தினேஷ் கண்டுகொள்ள….” டேய் உன் பொண்டாட்டி ரொம்ப நேரமா உன்ன கூப்டுட்டு இருக்கா. தூரமா நின்னு பேசிட்டு வா….. உனக்குலாம் கடைசி வரைக்கும் இது மட்டும் தான் நிரந்தரம்.” என்றவனை முறைத்த சித்து, “என்ன வானு….” கேட்க,
அவளோ அருகில் வரும் படி சைகை செய்தாள். அதை புரிந்துக் கொள்ளாத சித்து மீண்டும் என்னவென கேட்க…. தலையில் அடித்தவள் அங்கிருந்து நகர எண்ணி இரண்டடி எடுத்து வைக்க மயங்கி சரிந்தாள். அதில் பதறியடித்து சித்து ஓட மற்றவர்களும் பின்னாலேயே சென்றனர். மனைவியை தூக்கியவன் தன் அறைக்குள் படுக்க வைத்துவிட்டு மருத்துவரை அழைத்தான்.
“கங்கிராஜுலேசன் சித்தேஷ்… நீங்க அப்பா ஆக போறிங்க” என்றவர் மேலும் சில குறிப்புகளை எழுதி கொடுத்து “நாளைக்கு ஹாஸ்பிடல் வாங்க” என்று விட்டு கிளம்ப… குடும்பமே ஒரு நொடி திடுக்கிட்டது. பின் சித்தேஷின் தில்லுமுல்லு புரிய சிரித்துக்கொண்டே பெரியவர்கள் வானதியை சூழ்ந்து கொண்டனர்.
மற்ற நால்வரும்…. ” என்டா பிராடு….என்ன சொன்ன என்ன சொன்ன கன்னி பையனா…. இனி சொல்லுவ…சொல்லுவ…படிச்சி முடிக்கிற வர சும்மா இருக்க முடியாதா உன்னால…. இன்னொரு தடவ…அந்த கன்னி பையன்ற வார்த்தையை சொல்லுவியா…” என இதுவரை சித்தேஷ் கண்ணன் கொடுத்த அனைத்து பில்டப்புக்கும் சேர்த்து நன்கு கவனித்து விட்டனர்.
வீட்டில் அடுத்த சுபமுகூர்த்தமாக தினேஷ் ரதி தேவியின் திருமணம் நல்லபடியாக முடிய…. இருவரையும் தேன் நிலவுக்காக கேரளா அனுப்பி வைத்திருந்தான் கண்ணன்.
*************************************
“அகலி… எத்தனை தடவை சொல்றது தம்பி தூங்கும்போது எழுப்பாதன்னு.”
“நானும் எத்தனை தடவை சொல்றது ம்மா.. ஸ்கூல் விட்டு வர நேரம் தம்பிய தூங்க வைக்காதீங்கன்னு.” என ஆரதியின் மூத்த மகள் வாதம் புரிய,
“அப்படியே அப்பா மாதிரி ஏட்டிக்கு போட்டியா பேசு. எல்லாரும் உனக்கு ஓவரா செல்லம் கொடுத்து கெடுத்து வைச்சிருக்காங்க. இன்னைக்கு வரட்டும் உன் அப்பா….. இருக்கு.”
தாயின் சொல்லை வழக்கம்போல் தூசி தட்டிய அகலிகை… தம்பி இலக்கியனை அள்ளிக் கொண்டு… சித்துவின் தவப்புதல்வன் தவதரனுடன் விளையாடச் சென்று விட்டாள்.
பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பிம் அகலிகைக்கு முதல் வேலையே தூங்கிக்கொண்டிருக்கும் தம்பி இலக்கியனை எழுப்புவது தான். இலக்கியனுக்கு இரண்டு வயதாகிறது. அச்சு அசல் அப்படியே….. கண்ணனின் சாயல். குணம் மட்டும் ஆரதி போல்.
“என்ன ஆதி க்கா இன்னைக்கும் அகலி பஞ்சாயத்தா ” என்றவாறு வீட்டிற்குள் நுழைந்தால் வானதி. சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறாள். இளங்கலைப் படிப்பை முடிக்கவும் தவதரன் உதிர்க்கவும் சரியாக இருந்தது அவள் வாழ்வில். குழந்தைக்காக ஒரு வருடம் படிப்பை தள்ளி வைத்தவள்.. குழந்தை பிறந்ததும் அத்தையின் பொறுப்பில் விட்டுவிட்டு படிக்கச் சென்று விட்டாள்…வானதி. இந்த ஐந்து ஆண்டுகளில் அவளது கனவான ஆசிரியர் பணியும் நிறைவேறியது.
“என்ன வானதி பண்ண…. உன் புருஷனும் என் புருஷனும் சேர்ந்து அவளை இந்த மாதிரி மாத்திட்டாங்க. நான் சொல்ற எதையும் கேட்க மாட்டன்னு அடம் பிடிக்கிறா.”….. என மகளின் புகழைப் பாடிக் கொண்டிருக்க அந்த நேரம், “உன்ன விடவா அடம்பிடிக்கிறா ரதி… என் பொண்ணு ..” எனக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் ஆழிக் கண்ணன்.
“நான் என்ன அடம்பிடிச்சேன்…ஆழி. உன் பொண்ணு தான் ரொம்ப அடம் பிடிக்கிறா. எதுக்கு எடுத்தாலும் உன்னை மாதிரியே கோவம் வருது. நல்லா செல்லம் கொடுத்துக் கெடுத்துட்டு இப்போ என்னையே குறை சொல்றியா…” என மூக்கு விடைக்க கோபம் கொண்ட ஆரதி கேட்டுக் கொண்டே கண்ணன் அருகில் செல்ல ,
“என்ன அடம் பிடிச்சியா…. நேத்து ராத்திரி என் பொண்ணுக்கு போட்டியா என்னை கட்டிப்பிடிச்சி தூங்கனும்’னு அடம் பிடிச்சு தானே…. காலையில கூட என் பொண்ணுக்கு ஆசையா முத்தம் கொடுத்ததுக்கு அவளுக்கு தந்துட்டு தான் எனக்கு தருவியான்னு முறைச்சிட்டு நின்னியே… அதலாம் அடம்பிடிக்கிறது இல்லையாடி ரிப்பேரு….” என்றவனின் கைகள் மனைவியை சிறைப்பிடித்து இருந்தது ஆசையாக.
“மாமா நான் ஒருத்தி இங்க தான் இருக்கேன்…” என வானதி இருவருக்கும் ஞாபகப்படுத்த…
“இன்னும் எதுக்கு மா இங்க இருக்க. உன் புருஷன் குழந்தைங்க கூட வெளிய விளையாடிட்டு இருக்கான் பாரு. அவன் கூட போய் நீயும் விளையாடு. நான் உன் அக்கா கூட கொஞ்ச நேரம் பேசிட்டு வரேன்….” என்ற கண்ணன்… வானதி சென்று விட்டாளா என்பதை கூட கவனிக்காமல் தீவிரமாக ஆரதியுடன் காதல் புரிய… சிரித்துக்கொண்டே தன் கணவனிடம் சென்று விட்டாள் வானதி.
“என்ன வானு சிரிச்சிட்டே வர.. உள்ள என் அண்ணன் ஏதாச்சும் படம் ஓட்டுனானா.”
“அது எப்படி சித்து கரெக்டா சொல்றீங்க.”
“இன்னைக்கு நேத்தா பார்க்குறோம். தினமும் நடக்குறது தான. ” என்றான் சலிப்புடன்.
“உங்களுக்கு ஏங்க பொறாமை. அக்காவும் மாமாவும் அவ்வளவு அன்யோன்யமாக இருக்காங்க. உங்களுக்கு தான் மண்டையில களிமண் இல்லாம குழந்தைகள் கூட விளையாடிட்டு இருக்கீங்க.” என்ற மனைவியை விஷமமாக பார்த்த சித்து,
“அப்பா அம்மா அத்தை மாமா எல்லாரும் தினேஷ் பையன் தேவகன் பர்த்டே பார்ட்டியை முடிச்சுட்டு அப்படியே பத்து நாள் ட்ரிப் போறாங்க தெரியும் தான வானு. இன்னைக்கு நைட்டு தெரியும்…. களிமண்ணு பவர் என்னென்ன..” என சித்து சிரிக்க… அவனைப் பார்த்து விதி சிரித்தது.
நேரம் மாலை ஏழை நெருங்க …. மஹா லட்சுமி நாராயணன், சரஸ்வதி சண்முகம், ராசாத்தி சேகர், ஆழி கண்ணன் ஆரதி அவர்களின் மூத்த மகள் அகலிகை , இளைய மகன் இலக்கியன்…உடன் சித்தேஷ் கண்ணன் வானதி அவர்களின் மகன் தவதரன்… அடங்கிய மொத்த குடும்பமும் தினேஷ் ரதிதேவியின் மூத்த மகனான தேவகன் பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்திருந்தனர்.
ரதிதேவி… சென்னையில் உள்ள தந்தையின் தொழிலை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறாள். அத்தோடு ஏழாவது மாத …… மேடிட்ட வயிற்றோடு தினேஷுடன் சேர்ந்து தனியாக குழந்தைகள் காப்பகம் ஒன்று நடத்திவருகிறாள். ஒரே மகளைப் பிரிந்து இருக்க முடியாமல் மணிகண்டன் மகேஸ்வரி தம்பதியினர் மகளோடு வந்துவிட்டனர். மூன்று வயதான தேவகன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள் அனைவரும். கொண்டாடிய கையோடு மூத்த தம்பதிகள் பத்து நாட்கள் கோவில் சுற்றுலாக்கு சென்றுவிட… தினேஷ் ரதி தேவியிடம் சொல்லி விட்டு புறப்பட்டனர் ஆழிக்கண்ணன் குடும்பத்தினர்.
“ஏய் வானு ……. இன்னுமா பையன் தூங்கிறான்.” வெகுநேரம் மனைவிக்காக காத்திருந்த சித்து ஏமாற்றமான குரலோடு கேட்க,
அதில் சிரித்த வானதி தான், ” அவ்வளவுதாங்க தூங்கிட்டான்.” என்றதுதான் தாமதம் மனைவி அள்ளிக்கொண்டு கொஞ்ச கிளம்ப….. கதவு தட்டப்பட்டது.
தன்னை நொந்தவன் கதவை திறக்க…… அவனின் குட்டி ஏஞ்சல் அகலி தம்பியின் கை பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். அதுவரை இருந்த சிடுசிடுப்பு காணாமல் போனது சித்துவிடம். தன் குட்டி ஏஞ்சலை அள்ளியவன் மறு கையில் இலக்கியக்கியனையும் அள்ளிக் கொண்டான்.
“சொல்லுங்க குட்டி ஏஞ்சல்.. என்ன வேணும் இந்த நேரத்துல அப்பாவைத் தேடி வந்து இருக்கீங்க.” என கேட்கும் சித்தப்பாவின் கன்னத்தில் முத்தம் வைத்த அகலி,
“அது ஒன்னும் இல்ல ப்பா.. டெய்லி தாத்தா பாட்டி கூட தான் தூங்குவேன். இன்னைக்கு யாரும் வீட்டுல இல்லையா. அதனால ரொம்ப சோகமா உட்காந்திருந்தேன்… அப்பா வந்து என்னன்னு கேட்டாங்க…. நானும் சோகமா சொன்னேன்…. இதுக்காடா சோகமா இருக்க செல்லம் சித்து அப்பா உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்காரு. தம்பியைக் கூட்டிட்டு அங்க போங்கன்னு அனுப்பி வச்சிடாங்க.” தந்தையின் சதி செயலுக்கு உதவியது தெரியாமல் அப்பாவியாக கூற அதைக் கேட்டுக்கொண்டிருந்த வானதிக்கு தான் கட்டுக்கடங்காத சிரிப்பு.
“என்னடி சிரிப்பு… ஏஞ்சலை உள்ள கூட்டிட்டு போ . அவனை என்னன்னு கவனிச்சிட்டு வரேன்…”
கதவைத் தட்டுவது சித்தேஷ் என்பதை தெரிந்தும் திறக்காமலே இருந்தான் கண்ணன். அதில் மேலும் மேலும் கடுப்புற்ற சித்தேஷ்… போன் செய்ய உடனே அட்டென்ட் செய்தான் கண்ணன். “ஏன்டா உனக்கு இந்த நல்ல எண்ணம். நீ ரெண்டு பெத்து கடமையை முடிச்சிட்ட. எனக்குப் பின்னாடி கல்யாணம் பண்ணுனவன் இரண்டாவது பிள்ளைய பெத்துக்க போறான். நான் மட்டும் ஒன்னோட நிக்கணுமா. என் குட்டி ஏஞ்சலை ஏமாத்தியா அனுப்பி வைக்கிற…. இருக்குடா உனக்கு நாளைக்கு காலையில.” படபடவென பேசுவனின் வார்த்தையில் உள்ளுக்குள் குளிர்ந்த கண்ணன்,
“சித்தேஷ் கண்ணன் வாழ்க்கை ஒரு வட்டம்’னு இப்ப புரியுதா. இதே மாதிரி தான எனக்கும் என் பொண்டாட்டிக்கும் நடுவுல அதுவும் ஹனிமூன் டைம்ல நந்தி மாதிரி வந்து ரெண்டு நாள் சண்டை போட வைச்ச. அதுக்கு பழிவாங்க தான் இன்னைக்கு என்னோட இரண்டு வாரிசை அனுப்பி வைச்சிருக்கேன்….நல்லா என்ஜாய் பண்ணு டா தம்பி.” என்று விட்டு போனை வைக்க… முடிந்த மட்டும் கோபத்தை கதவில் காட்டி விட்டு சென்றான் சித்தேஷ் கண்ணன்.
“ப்ச்…ஆழி எதுக்கு இப்படி பண்ற. பாவம் பித்து. பசங்கள கூட்டிட்டு வா போ…” என்றவளை கட்டிக்கொண்டவன், “எது அவன் பாவமா…. விட்ட நம்மல பாவமா மாத்திடுவான். என்ன நேக்கா… தவதரனை ரிலீஸ் பண்ணா பார்த்தல்ல. அதெல்லாம் அவன் சமாளிச்சுடுவான் டி. என்னாலதான் உன்னையும் என் பொண்ணையும் ஒரே நேரத்துல சமாளிக்க முடியல. உங்களுக்கு நடுவுல இலக்கியன் வேற. இந்தப் பத்து நாளாவது நான் சந்தோஷமா இருந்துட்டு போறேன்…டி . அப்போ தான் அப்பா அம்மா வரதுக்குள்ள… பசங்களுக்கு துணையா இன்னொரு பொண்ண ரெடி பண்ண முடியும்.” என பேச ஆரம்பித்த பேச்சு இறுதியில் கிறக்கமாக முடிய….
” அதெல்லாம் முடியாது தள்ளி போ…டா எடுபிடி” என்றாள் ஆரதி.
அதெல்லாம் முடியாது என்பதுபோல் கண்ணன் மீண்டும் அணைக்க…
ஆரதியோ தள்ளிக் கொண்டே இருந்தாள். “ஓய் ரிப்பேரு… ரொம்ப பண்ணாத டி. “
“யாரு ரொம்ப பண்றா நீ தான். ஏற்கனவே ஒரு பொண்ணுக்கே… உன் ஆட்டம் ஓவரா இருக்கு. இதுல இன்னொரு பொண்ணு வேறயா. ஒழுங்கா அடுத்து பையன்னு சொல்லு அப்போதான் வருவ….” ஆரதியின் வார்த்தையில் சிரித்தவிட்ட கண்ணன்,
“அவ்ளோ தான டி பொண்டாட்டி . பையனே பெத்துக்கலாம். ஆனா ஒன்னு… அகலி மட்டுமில்ல இன்னும் எத்தனை பொண்ண பெத்து கொடுத்தாலும் நீ எனக்கு எப்பவுமே ஸ்பெஷல்தான். இப்பவும் நம்ப முடியல… குழந்தையா பார்த்த என் ரதியை கல்யாணம் பண்ணி ஒன்னுக்கு ரெண்டு குழந்தைங்க. இந்த அஞ்சு வருஷமா வாழ்க்கை எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா.” என்ற கண்ணனின் கைக்குள் அடங்கிய ஆரதி,
“ஆமா ஆழி… என்னாலையும் நம்ப முடியல தான். இதே மாதிரியே உன்னை நானும் என்னை நீயும் காதலிச்சிட்டே இருக்கணும். அகலி இலக்கியனுக்கு துணையா இன்னும் ஒரு பத்து குழந்தைங்களை பெத்துக்கனும்…”என்றவளை அள்ளியவன் மனைவியின் ஆசையை நிறைவேற்றும் வேலையில் இறங்க…..
அண்ணனுக்கு போட்டியாக அங்கு தம்பியும் காதலில் கவி பாடிக் கொண்டிருந்தான். மூன்று பிள்ளைகளையும் உறக்கத்தில் ஆழ்த்திவிட்டு.
காதல் என்ற பெயரால் சில காதல்கள் சிதைந்தாலும் இதுபோன்ற பல காதல்கள் தான் இன்றும் உயிர்ப்புடன் வாழ உதவுகின்றனர்.
நன்றி ?
எப்படியோ நானும் இரண்டாவது கதையை வெற்றிகரமாக எழுதி முடிச்சிட்டேன். கதை ஆரம்பிக்கும் போது என்ன நினைச்சனோ அதை சரியா பண்ணிட்டேன்னு நினைக்கிறேன். நானே நினைக்காத பல விஷயங்கள் இந்த கதைக்குள் நுழைந்து இருக்கு. அனிதா மரணம் உண்மை சம்பவம். பல மாதங்களுக்கு முன் கலைஞர் தொலைக்காட்சியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பார்த்தது. ஒரு பெண்ணின் கர்ப்பப் பையை தொடும் அளவிற்கு எத்தனை வஞ்சகம் இருக்கும் அந்த இரு ஆண்கள் மனதில். சில நாட்கள் தேவைப்பட்டது அதிலிருந்து வெளியில் வர. மரணம் மட்டுமே உண்மை சம்பவம் . அதை சுற்றி எழுதியது எல்லாமே என்னுடைய கற்பனை .சந்திரன் தண்டனை என் மனதில் பல நாளாய் தோன்றி கொண்டிருக்கும் எண்ணம்.
கதை ஆரம்பத்தில் இருந்து முடிவுவரை என்னை ஆதரித்த அத்தனை வாசகர்களுக்கும் நன்றி.