ஒளி 5 :-
யார் என்று அறியாமல்!
பேர்கூட தெரியாமல்!
இவனோடு ஒரு சொந்தம் உறவானதேன்!
ஏனென்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல்!
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே!
பாதை முடிந்த பிறகும்!
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே!
யாரோ கையைப் பிடித்து உள்ளே இழுத்து விடவும் ஆசுவாசமடைந்தாள்.
“ஷ்ப்பா! இன்னைக்கு டாஸ்க் ஓவர். என்னா ஒரு ரன்னிங் சேஸிங் ரதி பேபி…இந்த திறமையெல்லாம் நல்லா யூஸ் பண்ணி இருந்திருந்தால் நீ எங்கயோ இருந்திருப்ப…உன்கிரகம் இந்த திருமால்பூர் ட்ரைன்ல சர்க்ஸ் பண்ண வேண்டியதா போச்சு!” என்று மனதோடு புலம்பியவள்,
“ஏதோ ஒரு நல்ல உள்ளம் நம்பளை காப்பாத்துச்சே, அந்த உள்ளத்துக்கு நன்றி சொல்லுவோம்” என்று நிமிர்ந்தவள் தன் எதிரே உக்கிரப் பார்வையோடு இருப்பவனைப் பார்த்து குழம்பினாள்.
“ஏன் இவரு இப்படி முறைக்கறாரு?” என்று உள்ளே நகராமல் யோசித்தவள் இன்னும் ஏறும் இடத்திலேயே இருக்கும் கம்பியை பிடித்தவாறு உள்பக்கமாக திரும்பி நின்றிருந்தாள்.
ஒரு கை உள்ளே கம்பியை பிடித்திருக்க இன்னொரு கையை வெளியே கதவருகே இருக்கும் கைப்பிடியை பிடித்திருப்பாள் போல, உள்ளே இருந்து பார்க்கும் போது ஒன்றும் தெரியவில்லை..
“எதிரில் இருப்பவன் உன்னை ஏதோ திட்ட போறான் பேபி அதனால் நீ முந்திக்கோ.. ரெடி ஸ்டார்ட்!!!” என எதிரில் இருப்பவன் ஆரம்பிக்கும் முன்,
“உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா பாஸ்? இப்படி தான் வழியிலே நிற்ப்பீங்களா? உங்களால் தான் நான் சரியாக ஏற முடியாமல் கஷ்டப்பட்டேன். இந்நேரம் கீழே விழுந்திருந்தால் என் நிலைமை என்ன ஆகியிருக்கும் “ என்று போலி அதிர்ச்சி காட்டியவளை கைகளைக் கொண்டு வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
“கரெக்ட் தான்! பல்டி அடின்னு சொல்லி விட்ருக்கணும்.. ஏதோ பாவம்னு கையை கொடுத்து உள்ளே இழுத்தது தப்பாக போச்சு…” என்று கேலியோடு சொன்னவனைப் பார்த்து அசடு வழிந்து சிரித்தாள்.
“ஹி ஹி ! நீங்க தான் என்னை காப்பாத்துனீங்களா? ரொம்ப நன்றி பாஸ்…”
“ஓய்! உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா? பொறுமை இல்லையா? எப்ப பாரு இப்படி ஓடி வந்து தான் ஏறுவியா? முன்ன பின்ன பார்க்காம கண்மூடித்தனமாக ஓட வேண்டியது… உனக்கு ஏதாவது ஆச்சுன்னா வீட்டில இருக்கவங்களைப் பத்தி யோசிக்க மாட்டியா?” என்று பொரிந்து தள்ளினான்.
வலது கையால் கம்பியை பிடித்துக் கொண்டு தலையை அதில் சாய்த்து குனித்திருந்தவாறே குரல் கரகரக்க “சாரி !” என்றாள்.
அவள் குரலில் சற்று தணிந்தவன் “இப்ப பண்ணதுக்கு சாரி கேட்டுட்ட காலையில இடிச்சதுக்கு யார் கேட்பா?” என்று சொன்னதும் சரேலென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அப்ப காலையிலே இடிச்சது இவனையா ? அச்சோ சாரி ! இவரையா? என்று அவனை ஆராய்ந்தவளின் இடது கை காற்றின் வேகத்தில் இழுப்பது போல் தோன்ற தடுமாற ஆரம்பித்தவள்.
“ஐயோ ! பிடிங்க பாஸ் ! பிடிங்க !”
அவனோ திடிரென அவள் கத்தவும் பதறியவன் “என்னாச்சு? என்னாச்சு ?” என்று கேட்டான்.
“ஐயோ ! என் கையை பிடிங்க பாஸ் ! பிடிங்க !”
அவனோ பதறியவாறு கை எதிலும் மாட்டிவிட்டதோ? என்று அவள் இடது கையை பலம் கொண்டு உள்ளிழுத்தான், ஏனெனில் ரயில் போகும் வேகத்திற்கு வெளியே இருந்து உள்ளே இழுப்பது சிரமாக இருந்தது. அவள் கையில் இருந்ததைப் பார்த்ததும் அதிர்ந்தவன் கோபம் தலைக்கேறியது.
வலது கையில் ஹாண்ட் பேக்கும் லஞ்ச் பேக்கும் தோளில் மாட்டியவாறு கம்பியை பிடித்திருந்தவளின் இடது கையில் முழுக்க முழுக்க உணவு பொட்டலங்கள்…
ரயிலின் வேகத்தில் உணவு பொட்டலங்கள் தடுமாற அதன் கணத்தில் தான் அவள் கை இழுப்பட்டதை அறிந்தவன் மேலும் சினமுற்றான். உணவு வீணாக கூடாது தான், ஆனால் இப்படி உயிரோடு விளையாடணுமா? கொஞ்சம் பேலன்ஸ் தவறியிருந்தாலும் கீழே விழுந்து நினைக்கவே பதறியது.
“முட்டாள் தனம் செய்யறதையே மொத்தமாக குத்தைகைக்கு எடுத்திருக்கியா? என்னை கேட்டியே உனக்கு முதல்ல அறிவிருக்கா? கை இழுக்குதுனு தெரிஞ்சதும் பார்ஸலை விட வேண்டியதானே? உன்கிட்ட பேசறதே வேஸ்ட்… ச்சே !” என்று கோபத்தில் கத்தியவனுக்கே மூச்சு வாங்கியது. சிறிதும் அவள் செயலை மன்னிக்க முடியவில்லை.
இத்தனை நாள் தெரியாத விளையாட்டுத்தனம் இன்று அவளுக்கே பயம் காட்டியது உண்மை.. அவன் திட்டுவது ஏதும் காதில் விழவில்லை ஒரு நிமிடம் விழுந்திருந்தால் வீட்டில் எவ்வளவு கஷ்டம் ஐயோ !அப்பா ! என்று யோசனையில் இருந்து தெளிந்தவள் அவனிடம் மறுபடியும் மன்னிப்பு கேட்க நிமிர்ந்தவள் அருகில் அவன் இல்லை. இவளின் எதிரில் இறுக்கமாக நின்றிருந்தான்.
“சாரி ! சாரி ! இனிமேல் இப்படி பண்ணமாட்டேன்.. வேணும்னு ஏதும் பண்ணலை சாரி ! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் !”
இவள் கத்தலில் அந்த பெட்டியே இவர்களை தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அதை முதலில் கவனித்தவன் அவளிடம் இருந்து விலகி நின்றான். அவள் கேட்கும் சாரிக்கும் நன்றிக்கும் எந்த பதிலும் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டான்.
தாம்பரம் நிறுத்தம் வந்ததும் எல்லோரும் இறங்க முன்னே வர ஆரம்பிக்க இவள் ஓரமாக ஒட்டி நின்றாள்…அது ஜெனரல் பெட்டி, அதிகம் ஆண்கள் தான் இருப்பர்.
அந்த நிறுத்தத்தில் அவள் பெட்டிக்கு செல்ல முடியாது உடனே வண்டி கிளம்பி விடும். அதிலும் இவள் கடைசி பெண்கள் பெட்டி , செங்கல்பட்டில் மாறிக் கொள்ளலாம் என்று எல்லோரும் இறங்கியதும் இருந்த களைப்பில் அப்படியே ஏறும் வழியிலே ஓரமாக உட்கார்ந்து விட்டாள்.
அங்கு ஒரு சிலர் ஏற ஆரம்பித்தனர், கூடவே இவ்வளவு நேரம் நின்றிருந்தவர்கள் அமர்ந்தனர். இவள் ஓரமாக அமர்ந்திருந்ததால் இவள் மேல் படாதவாறு ஒரு சிலர் அமர்ந்தனர். அவனோ எதிரில் நின்ற இடத்திலே இருந்து இதெல்லாம் கவனித்தவன் அமைதியாக இருந்தான்.
நேரம் போக போக வண்டியின் வேகத்தில் அவர்களின் பேச்சு சுவாரஸ்யத்தில் இவளருகே நகர்ந்தனர். இவளோ காலை மடக்கியவாறு நகர்ந்து அமர்ந்தாள்.
இன்னும் கொஞ்சம் நகர்ந்தாலும் கீழே விழ வேண்டியது தான்… எதிரில் இருப்பவனை பரிதாபமாகப் பார்த்தாள் அவனோ இவளைக் கண்டுக் கொள்ளவே இல்லை…
அவனை முறைத்தவாறு மற்றவர்களிடம் நகர்ந்து அமர சொன்னாள். அவர்களும் நகர்ந்தனர். ஆனால் மறுபடியும் அதே நிலை. அவளால் எழுந்தும் நிற்க முடியாது எல்லோரும் உட்கார்ந்து இருக்கும் போது இந்த இடத்திலே நின்றால் காற்றில் டிரஸ் வேறு பறக்கும் அதனால் தன் நிலையை நொந்தவாறு அமர்ந்திருந்தாள்.
சிறிது நேரத்தில் தன் அருகே யாரோ நிற்பது போல தோன்ற நிமிர்ந்து பார்த்தால் அவன் தான் நின்றிருந்தான். உட்கார்ந்தவர்களிடம் பேச்சு கொடுத்தபடியே இவளருகே மேலே படாதவாறு அவளை காப்பது போல் நின்றவனைப் பார்த்து நிம்மதியடைந்தாள்.
என்னவோ அவன் பேச்சில் , நடந்துக் கொண்ட விதத்தில் அவன் மேலே மரியாதை தோன்றியது. அவள் மேலே படுகிறதோ என்று திரும்பி பார்த்தவனைப் பார்த்து அவள் புன்னகைக்க அவனோ முகம் திருப்பிக் கொண்டான்.
“போயேன் ! ரொம்ப தான் பண்றான் பேபி… “என்று அவளுக்குள் முணுமுணுக்க ,
செங்கல்பட்டு வந்ததும் இறங்கி அவனை முறைத்து விட்டு தன் பெட்டியை நோக்கி ஓடினாள்.
அங்கு போனவளை ஆள் ஆளுக்கு கேள்வி கேட்க, அவளோ முதல் வேலையாக விஜியிடம் உணவைக் கொடுத்தாள். விஜியோ வாயெல்லாம் பல்லாக வாங்கிக் கொண்டாள்.
எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டதும் விஜி மட்டும் “இட்லி கொஞ்சம் சூடா இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும், நீ இன்னும் கொஞ்சம் முன்னாடி வந்து நம்ப பெட்டியிலே ஏறி இருக்கலாம்ல” என்று அவள் சொன்னதும் ரதி நேராக சென்று விஜியின் முதுகிலே ஒன்று வைத்தாள்.
“நானே என்ன நிலைமையில் ட்ரைனை பிடிச்சேன்.. இவளை… “என ரதி சொல்ல,
“இதுக்கு பேர் தான் சோறு போட்டு அடிக்கிறதா? அப்படி ஒன்னும் எனக்கு சாப்பிட வேணாம்” என்று விஜி சொல்லியவாறே வடையை உள்ளே தள்ள மற்றவர்கள் அதை பார்த்து சிரித்தனர். ரதிக்கும் சிரிப்பு வர வேண்டுமென்றே முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டாள்.
“ஹே ரதி ! நீ கோவப்படற அளவுக்கு என்னாச்சு ?” என்று ஜெய் கேட்க,
அவள் நடந்ததை சொன்னதும் விஜி தான் அவளை கடிந்தாள். “அறிவிருக்கா உனக்கு நான் தான் லேட்டானா வந்துடுன்னு சொன்னேன்ல, எதாவது ஆகியிருந்தால்…”
ரதி இடையிட்டாள்,
“ஹே! அதெல்லாம் எனக்கு ஒன்னும் இல்லை … நீ சொன்ன ஜிம் பாடி தான் ஹெல்ப் பண்ணாங்க…” என்றவள் காலையில் இடித்த நபர் தான் என்று சொன்னதும் விஜி மற்றது மறந்தாள்.
“வாவ் ! அப்படியா ! யாரவங்க ? இப்ப இறங்கும் போது காட்டு…” என்று அவளிடம் கேட்க ,
“போடி போய் ஆகுற வேலையை பாரு …”
“விடு நானே கண்டுபிடிச்சுகிறேன்… ஆமா ! அவங்க பெயர் என்ன?” என்று விஜி கேட்க,
“அடியேய்! நான் அங்க என்ன நலவிசாரிப்புக்கா போனேன் … அதெல்லாம் எனக்கு தெரியாது …”
“அடிப்பாவி ! அங்க ஒருத்தர் கூடவா அவர் பெயர் சொல்லி கூப்பிடல?”
“இல்லடி எருமை ! அதெல்லாம் நான் கவனிக்கலை…”
“உனக்கு திறமை பத்தல விடு, நான் பார்த்துகிறேன்… அவர் பெயர் என்னவாக இருக்கும்” என்று விஜி மற்றவரிடம் ஆலோசனையில் இறங்க,
ரதியோ “ஆமா !அவர் பெரிய மகாராஜா! இவள் கேட்டதும் எல்லோருக்கும் அவரை தெரிஞ்சு அவர் பெயரை சொல்றதுக்கு…” என்று மனதோடு முணுமுணுத்தாலும் “அப்படி என்ன பெயராக இருக்கும்” என்று அவள் மனதோரத்திலும் அந்த கேள்வி எழுந்தது.
அவர்கள் இடம் வருவதையும் அறியாமல் யோசனையிலேயே இருந்தவளை கீர்த்தனா தான் அவளை உலுக்கி தெளிய வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்.
என் முதல் சந்திப்பிலே என்னைக் காப்பாற்றியக் கரம்…
காலம் முழுமைக்கும் நான் கைகோர்க்க என்பதை…
அன்று உணரவில்லை இன்று உணர்கிறேன் !