ஒளி 4 :-
அன்பே இது நிஜம்தானா…!
என் வானில் புது விண்மீனா…!
யாரைக் கேட்டது இதயம் உன்னைத் தொடர்ந்து போக!
என்ன துணிச்சல் அதற்கு என்னை மறந்து போக!
இருந்தும் அவை இனிய வரிகளே…!
கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ!
ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ!
எப்போதும் போல காலையில் அடித்து பிடித்து வண்டி ஏறி அவர்கள் இடத்தில் செட்டிலாகி அமர்ந்தனர்.
அவர்கள் கம்பார்ட்மெண்டில் எங்கோ மூலையில் இந்த பாடல் ஓடிக் கொண்டிருக்க,
“யார்மா அது காலையிலேயே பீலிங்ஸ்ல இருக்கறது” என்று சத்தமாக கேட்டவாறே விஜி நோட்டமிட, ரதி மட்டும் ஒரு புருவ சுழிப்போடு இருந்தாள்.
“என்னாச்சு ரதி? ரொம்ப நேரமாக தோள்பட்டையை தேய்ச்சு விட்டுட்டு இருக்க? கீழே ஏதும் விழுந்திட்டியா?” ஜெய் கேட்க,
மற்றவரும் அவளை கேள்வியாக நோக்க,
“இல்லை ஜெய் ! இன்னைக்கு என்னமோ ஸ்டேஷன்ல நிறைய கூட்டம் போல, நான் ஓடி வரும் போது யாரையோ பயங்கரமாக இடிச்சுட்டேன்… அதான் வலிக்குது…”
“அச்சோ! பார்த்து வரமாட்டியா? இதுக்கு தான் கடைசி நேரத்துல ஓடி வராதானு சொல்றது … எங்க கேக்கற?” என்று கீர்த்தனா அவளைக் கடிய..
“இந்தா அவளுக்கு கொஞ்சம் தைலம் தேச்சு விடு ஜெயந்தி” என்று அவர்களுடன் வரும் மத்திய வயது பரிமளா சொன்னார்…அவரும் இவர்கள் நட்பின் கூட்டத்தில் ஒருவர் தான்…
இங்கு வயது வித்தியாசம் எல்லாம் இரண்டாம் பட்சமாகத் தான் இருக்கும்.. கிட்டத்தட்ட அந்த ஒரு பெண்கள் பெட்டியில் தினமும் நூறு பேர் வரை பயணம் செய்வர் … அதில் முக்கால்வாசி அரசு வேலையில் இருப்பவர்கள்…
தினமும் சென்று வருவதால் அப்படியே ஒரு கூட்டம் கூட்டமாக ஒரு கேங் பார்ம் ஆகி எந்நேரமும் பேச்சும் கிண்டலும் சிரிப்பும் என்று கலகலப்பாக இருக்கும்…
இப்போதும் ரதி கேங்கில் இருக்கும் அவர்களின் ஆன்ட்டி சொன்னதை ஜெயந்தி அப்படியே செய்ய ஆரம்பிக்கும் போதே ரதி அதை தடுத்து தானே தேய்த்துக் கொண்டாள்…
இது தான் அவளின் குணமே.. எவ்வளவு தான் நெருக்கமாக பழகினாலும் யாரிடமும் தன் ஆறுதலைத் தேட மாட்டாள்… யாரேனும் சோகமாக இருந்தால் அவர்களை தோள் சாய்த்து ஆறுதல் சொல்லுபவள் யாரிடமும் தோள் சாய்ந்தது இல்லை…
தன்னுடைய விஷயங்களை செய்தியாக மற்றவரிடம் பேசுவாளேத் தவிர உணர்வுபூர்வமாக யாரிடமும் பகிர மாட்டாள்…
நண்பர்களுடன் விளையாட்டு ,பேச்சு, சிரிப்பு மட்டும் தான் இருக்கும் இந்த கொஞ்சல் , கெஞ்சல் எல்லாம் தந்தையிடம் மட்டும் தான்…
என்னவோ அப்படியே பழகி விட்டாள்… அவள் குணமறிந்து தோழிகளும் பெரிதாக கண்டுகொள்ள மாட்டர். அவள் தைலம் தேய்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென விஜி சிரிக்க ஆரம்பித்தாள்..
“என்ன எருமை ? இப்ப எதுக்கு சிரிக்கிற?” என்று ரதி அவளிடம் கேட்க
அவளோ சிரிப்பைக் கை விடாமல் ,அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தாள்.
“சொல்லித்தொலை குரங்கே!!”
“இல்லை ! இடிச்ச உனக்கே தைலம் தேச்சு விடற அளவுக்கு சேதாரம்னா இடி வாங்கின ஆளுக்கு எவ்ளோ சேதாரம் ஆகி இருக்கும் …” சொல்லிவிட்டு மறுபடியும் அவள் சிரிக்க ,
மற்றவர்களுக்கும் சிரிப்பு வர , அவள் கடுகடுப்பைப் பார்த்து அமைதியாகினர்.
விஜியோ அக்கம் பக்கம் அவள் சிரிப்பின் காரணம் கேட்ட ஆட்களுக்கு விளக்கமளித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தாள்.
“அப்புறம் விஜி” என்று பின் சீட்டில் இருந்த ஒருத்தி கேட்க,
“எனக்கு என்னவோ இவ யாரோ நல்ல ஜிம் பாடியா இருக்க ஆளை இடிச்சு இருக்கானு நினைக்கிறேன், அதான் இவளுக்கு சேதாரம் ஆகிட்டு…” என்று சொல்லியவள் திடிரென யோசனையில் இறங்கினாள்.
“இன்னைக்கு உனக்கு கட்டம் சரி இல்ல விஜி” என்று கீர்த்தனா சிரித்தவாறே முணுமுணுக்க,
ஜெய், வேண்டுமென்றே அவள் வாயை கிளற அவள் யோசனையை கலைத்தாள். “என்னாச்சு விஜி? என்ன யோசிக்கற?”
“இல்ல ஜெய் ! நம்ப ட்ரைன்ல முக்கால்வாசி ரிட்டையர்மென்ட் லிஸ்ட்ல இருக்க அங்கிள்ஸ் தான் வராங்க? அதான் அந்த ஜிம் பார்ட்டி யாரா இருக்கும்னு யோசிச்சுட்டு இருக்கேன்…!” என்று சொல்லிக் கொண்டு ரதியிடம் திரும்பி ,
“நீ ஒன்னும் கவலைப்படாதே ரதி ! யாருனு அவனை கண்டுபிடிச்சு…”விஜி இழுக்க
“கண்டுபிடிச்சு….” ரதி பல்லை கடித்தவாறே கேட்க,
“அவருக்கு எந்த அளவுக்கு சேதாரம் ஆகி இருக்குனு பார்க்கணும்ல…” என்று சொல்லி சிரித்தவள்.
”நல்லவேளை இத்தனை நாள் உங்கூட தான் ஓடி வருவேன் இன்னைக்கு ஏதோ சீக்கிரம் வந்துட்டேன், நான் இல்லாமல் இப்படி ஒரு சம்பவம் நடந்து போச்சு இல்லைனா நானும் யார் கிட்ட இடி உதை வாங்கி இருப்பானோ…” என்று பேசிக் கொண்டிருந்தவளின் கையில் ரதி நறுக்கென்று கிள்ளி விட்டாள்.
“அவுச்… ஐயோ ! அம்மா ! போச்சு போச்சு ! இப்படி கிள்ளி கிள்ளியே என் சதையை எடுக்கறாளே… “என்று புலம்பினாள்.
“யாரை இடிச்சுட்டு வந்த? அவங்ககிட்ட அட்லீஸ்ட் சாரியாவது கேட்டியா?” என்று பரிமளம் கேட்க,
“தெரியல யாருனு கவனிக்கல, கூட்டமாக எல்லாரும் ஏறத்துக்கு ரெடியாக இருந்தாங்க… இடிச்சுட்டு ஓடி வரும் போது சொன்னேன் அவங்களுக்கு கேட்டுச்சா இல்லையானு தெரியல ஆன்ட்டி..”
“இனி இப்படி அவசரமாக ஓடி வராத … முன்னாடியே கிளம்பு… எப்படியும் ஓடி வந்தாலும் முன்னாடி நீ தான் ஏறி இடம் பிடிக்கற… அதே பொறுமையா வந்தால் நிதானமா ஏறுவல்ல ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காது…” என்று அவர் சொல்ல,
“ ம்ம்ம் சரி ஆன்ட்டி !”
அதை அவள் அன்று மாலையே கடைபிடிக்க போவதில்லை என்பதை பரிமளாவும் அறியவில்லை அவளும் அறியவில்லை .
அலுவகத்தில் இருந்து மாலை கிளம்பும் நேரம் விஜி ரதியை அழைத்தாள்.
“என்ன விஜி ?”
“ரதி ! எனக்கு லைட்டாக பசிக்குது … மதியம் சரியாக சாப்பிடலை.. நான் ட்ரைன் ஏற வந்துட்டேன்.. இங்க கடை ஏதும் இல்லை.. நீ சாப்பிட ஏதும் வாங்கிட்டு வரியா?”
“ஹே ! முன்னாடி சொல்லி இருந்தால் கொஞ்சம் முன்னாடியே கிளம்பி இருப்பேன்ல விஜி இந்நேரம் சொன்னால்… ஆமா ஸ்னாக்ஸ் ஆன்ட்டி வரலையா ?”
“இன்னைக்கு அவங்க வரல ரதி அதான் உனக்கு பண்ணேன்.. நீ வர இடத்துல தான் கடைங்க இருக்கும் அதான்…”
“சரி ! பார்க்கிறேன்… இங்க இருந்து பஸ் கிடைக்கணும்ல… ட்ரைன் பார்க் ஸ்டேஷன்ல இருந்து கிளம்பியதும் சொல்லு…”
“ம்ம்ம் ! லேட்டா ஆச்சுன்னா நீ வந்துடு ரதி நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்… “
“சரி! சரி !பஸ் வந்துடுச்சு வை! நான் ஸ்டேஷன் வந்துட்டு போன் பண்றேன்” என்று ரதி அவள் பதிலுக்கு காத்திராமல் வைத்து விட்டாள்.
இது எப்பொழுதும் நடக்கும் ஒன்று… ரதியின் நிறுத்தம் தாண்டி தான் மற்றவர்கள் செல்ல வேண்டும்.. அதனால் மாலையில் அவர்கள் ஏறிய பின் கிண்டி நிறுத்தத்தில் தான் அவள் ஏறுவாள். அதன்பின் வண்டி தாம்பரம் அடுத்து நேரே செங்கல்பட்டில் தான் நிற்கும்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேர பயணத்தில் பேச்சுகள் செல்லும் போது வயிற்றிற்கும் சிறிது செல்லும்… சில சமயம் கடையில் வாங்கியது சில சமயம் வீட்டில் இருந்து கொண்டு வருவதைப் பகிர்ந்து சாப்பிடுவர்.
விஜி பசி என்று சொன்னதால் ஸ்னாக்ஸ் வாங்கும் எண்ணம் விட்டு ஏதேனும் டிபன் வாங்கலாம் என்று ஸ்டேஷனுக்குள் வந்து அங்கு இருக்கும் கடையில் பார்சல் வாங்க நின்றவளை ட்ரைன் வருவதற்கான அறிவிப்பு கலைத்தது.
“ஐயோ ! இன்னும் ஐந்து நிமிஷத்துல வண்டி வந்துடும் !” என்று அவளுக்கு பதட்டமானது.
“சேட்டா ! சீக்கிரம் கொடுங்க… ட்ரைன் பிடிக்கணும்…” அது அவள் ரெகுலராக வாங்கும் இடம்..
“எப்பவும் உங்களுக்கு இப்படி கடைசி நேரத்துல வாங்கறது தானே பிடிக்கும்கா…” கடையில் பார்சல் கட்டும் பையன் கிண்டலடிக்க,
“டேய் ! கிண்டல் பண்ணாத.. ஐயோ ஸ்டெப்ஸ்ல அந்த கும்பல் தாண்டி நான் போய் இன்னைக்கு ட்ரைன் பிடிச்சா போல தான்…” என்று புலம்ப,
விஜி வேறு அழைத்து விட்டாள்… வண்டி உள்ளே வர போகிறது என்று…
“ஐயோ ! போச்சு ! “என்று ரதி பதட்டமாக ஓட ஆரம்பித்தாள்.
“போச்சு! இன்னைக்கு ட்ரெயின் விட போறோம்” என்று பதறியவாறே ஓடி வந்தாள்.
ஆனால் இவளின் பதட்டத்தை மற்றவர்கள் அறிவார்களா என்ன? , மிகவும் பொறுமையாக கையில் அலைபேசியைப் பார்த்தவாறு எல்லோரும் நடந்து செல்ல இவளுக்கு ஏக கடுப்பு…
“அத்தனை போனையும் தண்டவாளத்தில் வச்சு நசுக்கணும், இது போல கையில வைச்சுகிட்டு இருந்தா எவன் தான் போனை அடிச்சுட்டு போக மாட்டான்… ஏதோ இந்த நிமிஷத்திலேயே உலகமே மூழ்கிடப் போற போல எல்லாம் இதுல மூழ்கி போய் கிடக்கறாங்க” என்று எரிச்சலோடு நினைத்தவாறு ,
“எக்ஸ்கியூஸ் மீ !எக்ஸ்கியூஸ் மீ ! வழி விடுங்க!” என்று எல்லோரையும் நகர்த்தி அவள் ஓடி வருவதற்குள் ட்ரெயின் உள்ளே வந்து நின்றது.
இவள் கடைசி படியில் கால் வைக்கும் போது ட்ரெயின் நகர ஆரம்பித்தது. அங்கு நேரே இருக்கும் பெண்கள் பெட்டி நகர்ந்ததால் வேகமாக ரன்னிங்கிலேயே அடுத்த பெட்டியில் ஏற இவள் கால் வைக்கவும் உள்ளிருந்து யாரோ அவள் கையை பிடித்து இழுத்தனர்.
முடிவு தெரியாத வாழ்க்கையில்,
சேரும் இடம் தெரிந்த ஒரு நெடுந்தூரப் பயணம்,
நீயும் நானும் மட்டும்!
அப்படி உன்னைச் சேரத் தான் எனது இந்த ஓட்டமோ!