Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

பாகம்-9

“முதல் தடவை ஒரு விபத்துல பார்த்த உன்னை காப்பாத்துனது, டிரஸ் எல்லாம் வாங்கி கொடுத்ததெல்லாம் சரிதான்‌. ஆனா ரெண்டாவது தடவை திடீர்னு பஸ்ல பாத்தா உனக்காக எதுக்காக இவ்ளோ பெரிய விஷயத்தை ஏற்பாடு பண்ணனும் காலேஜ்ல. இதெல்லாம் சாதாரணமா பண்ற மாதிரி விசயமா? நீ சொல்லு”, என்று ஜானவி கேட்கவும் இவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

இருந்தும் சற்று நம்பிக்கையுடன், “ஒருவேளை நீ சொன்ன மாதிரி காலேஜ்ல கேம்ப் நடத்தின விஷயம் நல்ல காரியத்துக்காக செஞ்சிருக்கலாம்ல. அவங்க அண்ணனுக்கும் அந்த மைண்ட் செட் இருந்திக்கும், குரு சொன்னவுடனே அவங்க அண்ணன் செஞ்சுருப்பாங்களா இருக்கும்.

அப்புறம் கடை விசயம், அவர் உண்மையாவே சொன்ன மாதிரி ஏதாவது அவங்ககிட்ட இருக்க பணத்தை வைச்சு கடை வாங்கி வாடகைக்கு இந்த மாதிரி கொடுத்தா ஏதாவது வருமானம் வரும்னு யோசிச்சிருக்கலாம். நான் சொல்லவும் அந்த கடையையே வாங்கி இருக்கலாம் இல்ல?” என்றாள் வேலினி.



Advertisement

“இப்படி எல்லாம் பண்ணி இருக்கலாம் தான்? ஒருவேளை அப்படி இல்லாம இருந்தா என்ன பண்ணுவ?” என்று அவள் மீண்டும் கேள்வி எழுப்ப,

“நான் நல்லா தான் இருந்தேன் டி . இப்படி கேள்வி கேட்டு என்னை குழப்புற நீ. 20 வயசு தாண்டி ஆகுது எனக்கு. செகண்ட் இயர் காலேஜ் தான் படிக்கிறேன். நான் இன்னும் நிறைய பாக்கணும், நிறைய படிக்கணும், நிறைய அம்மா அப்பாக்கு நிறைய விஷயம் பண்ணனும்னு நினைக்கிறேன். நீ என்னை ஏன் இப்படி குழப்புற? என்று அழுது விடுபவள் போல் கேள்வி எழுப்ப ஜானவிக்கு சிரிப்பே வந்துவிட்டது.

இருந்தும் அவள் அருகில் அமைதியாக அமர்ந்து, “நான் இந்த விஷயத்தை சொல்றது உன்னை குழப்பதற்காக கிடையாது. ஒருத்தர் நீ சொன்ன விசயங்கள் எல்லாம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம செய்யும் போது, அவருடைய எண்ணம் என்னன்னு உனக்கு தெரிஞ்சிருக்கணும்.

Advertisement

இதுல நீ யோசிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கு. ஒருவேளை, உண்மையிலேயே அவர் மனசுல ஏதாவது… இருந்து…. உனக்கு அது புரியாமல் போய்… பின்னால அவரை கஷ்டப்படுத்துற மாதிரி ஆய்ட கூடாது. அதனால உனக்கும் வருத்தம், அவருக்கு வருத்தம். பின்னாடி இப்படி எந்த தப்பான விஷயமும் நடந்திடக்கூடாதின் தான் இப்பவே நான் உன்கிட்ட தெளிவு படுத்தனும்னு நினைக்கிறேன்.

Advertisement

நிச்சயமா அவர் பார்வையில உனக்கான அக்கறையும் பாசமும் நிறைய இருக்கு. ஆனா அதெல்லாம் எதுனாலன்னு நீதான் அவர்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கணும். சரியா?”, என்று கேட்க, “சரி” என்று கடுப்பாக கூறி அவளை முறைத்து நின்றாள் வேலினி.

அதன் பின் வகுப்புகளுக்கு நேரம் ஆகி விட இருவரும் அவரவர் வகுப்பறையை நோக்கி சென்று விட்டனர். அன்று எப்போதும் போல் கல்லூரி விட்டு திரும்பும் வழியில் பேருந்தில் அவனை மீண்டும் சந்தித்தாள்.

இப்போது அவனுடன் சகஜமாக பார்க்கவோ பேசவோ அவளுக்கு ஒரு மாதிரி சங்கடமாக இருந்தது. மனதில் ஒருவித சந்தேகமும் குழப்பமும் இருக்கும்போது, நம் முன் இருப்பவரிடம் இயல்பாக பேசுவது இயலாத காரியம் ஆயிற்றே. அவள் பாவனைகளை கண்டு, குருவே தானாக, “என்னாச்சு? ஏதாவது என்கிட்ட பேசணுமா?” என்று கேட்க,

Advertisement

“ஆமா, ஆனா தனியா பேசணும்” என்று பேருந்தில் இருந்த கூட்டத்தைக் கண்டு அவள் கூற, “சரி பேசலாம். நெக்ஸ்ட் ஸ்டாப்ல ஒரு ரெஸ்டாரன்ட் இருக்கும். அங்க போய் பேசலாமா?” என்று கேட்டான் அவன்.

“இல்லை இன்னைக்கு ஜானவியும் வரல நான் மட்டும் தனியா அங்க வர்றது எல்லாம் ஒரு மாதிரி இருக்கும்” என்று அவள் கூறவும்,

அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது, இருந்தும் சிரிப்பை உள்ளேயே மறைத்துக் கொண்டு, அவளிடம், “சரி ஒன்னும் பிரச்சனை இல்ல. நீ அடுத்த பஸ்க்கு மாறதுக்கு முன்னாடி அந்த ஸ்டாப்ல இறங்குவ இல்ல. அங்க என் பிரண்டோட கடை இருக்குனு சொன்னேனே.

இந்த நேரம் அங்க அவனோட அப்பா அம்மா ரெண்டு பேருமே இருப்பாங்க. அங்க நின்னு பேசலாம். ஓகேவா?” என்று கேட்க “அங்கேயும் கூட்டம் இருக்கும் இல்ல?” என்று இவள் மீண்டும் கேள்வி எழுப்பினாள்.

“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் கிடையாது. இந்த நேரம் அங்க பெருசா கூட்டம் இருக்காது. டோன்ட் வொரி. வா போலாம்”,என்றதும் சரி என்றாள். சரியாக அவன் சொன்ன இடத்தில் இறங்கி அந்த துணிக்கடைக்குள் நுழைந்தனர். அவன் நுழைந்ததுமே, அவன் நண்பனான கண்ணனின் பெற்றவர்கள் அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

அவர்களின் நலம் விசாரிப்பு முடிந்த பின்னே வேலினியை திரும்பி பார்த்தனர் அந்த தம்பதியினர். அவர்களுக்கு அவளை நன்றாக அடையாளம் தெரிந்தது. கடைக்குள் நின்று தானே அவள் அன்று உடைகளை மாற்றினாள்.

அவளை கண்டதும், “அட நீயாடா!! வா வா எப்படி இருக்க? நல்லா இருக்கியா? அன்னை காயம் எல்லாம் பற்றிருந்துச்சே? சரியாயிடுச்சா?” என்று அடுக்கடுக்காக அந்த பெண்மணி கேட்ட கேள்விகளுக்கு இவளும், “நான் நல்லாதான் இருக்கேன் ஆன்ட்டி. காயம் எல்லாம் எப்பவோ ஆறிடுச்சு. அது நடந்து இப்ப மூணு மாசம் ஆக போகுதில்ல” என்று அவள் அவருக்கு பதில் கூறினாள்‌.

இப்போது குரு, “ஆன்ட்டி கூட நான் கொஞ்சம் தனியா பேசணும்”, என்று கூறிட, உடனே அந்த ஆண், “இந்தா ஆபிஸ் ரூம் இருக்கில்ல அங்க போய் பேசு”, என்றார். இருவரும் உள்ளே சென்றனர், கதவை எல்லாம் அடைக்கவில்லை. திறந்து வைத்துவிட்டே உள்ளே சென்று குரு அமர்ந்தான்.

பெரிதாக வெளியில் இருப்பவர்களுக்கு அவர்கள் பேசுவது கேட்காது. மற்றபடி உள்ளே நடக்கும் அனைத்தும் வெளியே இருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். வேலினிக்கு ஆச்சரியமாக இருந்தது,
“என்ன ஒரு பொண்ணும் ஒரு பையனும் தனியா பேசணும்னு சொல்றாங்க, இந்த ஆன்ட்டி அங்கிள் உடனே சரின்னு சொல்லி உள்ள அனுப்பிட்டாங்க?”, என்று அவள் நேரடியாகவே அவனிடம் கேட்க,

அவன், “நம்பிக்கைதான்”, என்று கூற,

“நம்ம மேல அவ்ளோ நம்பிக்கையா”,

“உன் மேல இல்ல. என் மேல” என்று கிண்டலாக அவன் கூறவும், “ஆமா ஆமா, உங்க மேல ரொம்ப நம்பிக்கை தான்”, என்று அவள் சலிப்பாக கூறினாள்.

“ஏன் ? உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா” என்று இலகுமான பாவனை மாறி தீவிரமான குரலில் அவன் கேட்க இவளுக்கு அந்த நிமிடம் ஒரு மாதிரியாகத் தான் இருந்தது.

இதற்கே இப்படி என்றால், இன்னும் அவரிடம் கேட்க நிறைய இருக்கிறது. அமைதியாக அமர்ந்து விட்டால், சரி வராது என்று சற்று தைரியத்தை வளர்த்துக்கொண்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவள் பேச நினைத்ததை பேச தயாராகி விட்டாள் என்பது அவனுக்கு புரிய, அவனும் அவளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான்.

“நீங்க ஏன் எனக்கு இதெல்லாம் செய்றீங்க குரு?” “எதெல்லாம் செய்றேன்”, “அதான் நான் கேட்டேங்றதுக்காக, ஏற்பாடு பண்ண அந்த கேம்ப். அப்புறம் இப்ப எனக்காக அந்த கடை இதெல்லாம் தான்”.
“நான் எப்போ இதெல்லாம் உனக்காக செஞ்சேன்?.

“அப்போ….நீங்க இதெல்லாம் எனக்கு செய்யனும்னு செய்யல தான, இதேதான் நானும் ஜானு கிட்ட சொன்னேன். அந்த பைத்தியம்தான் எனக்கு குழப்பி விட்டுடுச்சு. நீங்க நெஜமாவே உங்களோட தேவைக்காக தானே இதெல்லாம் செஞ்சீங்க.

கேம்ப், நல்ல விஷயம் அதை செஞ்சா என்னன்னு தோனி இருக்கும் அதனால செஞ்சிருக்கீங்க. ரெண்டாவது விஷயம் உங்களுக்கு உண்மையாவே கடை வாங்கணும்னு ஆல்ரெடி ஐடியா இருந்திருக்கும். நான் பேசினதை வச்சு அந்த கடைய வாங்கினீங்க? அப்படித்தானே? என்று அவள் ஆர்வமாக கேட்கவும்,

இவன் நமட்டு சிரிப்புடன், “நீ சொன்னது கொஞ்சம் உண்மைதான்” என்றான்.

“அது என்ன கொஞ்சம் உண்மை? பாதி உண்மை? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க குரு. ப்ளீஸ்…”, என்று அவள் கெஞ்சாத குறையாக அவனிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“உனக்கு என்ன வயசு ஆகுது?” சம்பந்தமில்லாமல் ஒரு கேள்வி வந்து விழுந்தது, அவள் முறைப்பாக “20” என்றாள்.

“20 வயசுல காலேஜ் போய் ஒழுங்கா படிச்சமா, நல்ல வேலைய வாங்கி அம்மா அப்பாவ உக்கார வச்சு சாப்பாடு போட்டமான்னு இல்லாம 20 வயசுல உனக்கு என்ன, தேவையில்லாத நினைப்பு எல்லாம் மனசுல வருது”

“ஹலோ, நான் ஒன்னும் தேவையில்லாம நினைப்பெல்லாம் மனசுல வச்சு கேட்கல. ஜஸ்ட் உங்களோட இன்டென்ஷன் என்னங்கிறதுக்காக தான் கேட்டேன். அதோட முக்கியமா உங்க பேரு குருங்குறது தவிர, வேற எதுவுமே உங்கள பத்தி தெரியாது.

ஆனாலும் பாருங்க நீங்க கூப்பிட்டீங்கன்னு ஒரு துணிக்கடையில் வந்து உட்கார்ந்து உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன். நான் இதை கேட்க கூடாதா? உடனே நீங்க இந்த மாதிரி எல்லாம் பேசுவீங்களா?

“சரி சரி.. உனக்கு மனசுல வேற எதுவும் இல்ல தான். நான் ஏன் இதெல்லாம் பண்றேன்னு உனக்கு தெரியனும் அப்படி தான?”

“ஆமா” என்று முறைப்பாக பார்த்துக் கொண்டே அவள் கூறிட, “சரி சொல்றேன்” என்று கூறி அவளை பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.

உனக்கு ஃபயர் ஆக்ஸிடன்ட் நடந்த அன்னைக்கு, நான் என்னைக்கும் இல்லாம ரொம்ப வேகமா கிளம்பி ஆபீஸ் போயிட்டு இருந்தேன். சொல்ல போனா வாட்ச்மேன் கூட வந்து கதவ தொறந்து இருக்க மாட்டான், நான் அந்த சமயத்துல நான் கிளம்பி ஆபீஸ் போயிட்டு இருந்தேன்.

அப்போ பஸ் ஜன்னல் சீட்ல உட்கார்ந்து வெளியே வேடிக்கை பார்த்துட்டு இருந்த போ, நீ பஸ் ஸ்டாப்ல நின்னுட்டு இருந்த. நான் இருந்த பஸ்ஸிலேயே முன்னாடி ஏறி உக்காந்த. உன்ன பாத்ததும் எனக்கூ ஒரு மாதிரி ரொம்ப டிஸ்டர்பா இருந்துச்சு.

ஏதோ தப்பா இருக்க மாதிரி ஒரு உணர்வு அது என்னனு எனக்கு அப்ப தெரியல. நான் என்னோட ஸ்டாப்ல இறங்கும்போது நீயும் சேர்ந்து உன் பிரண்ட்ஸோட இறங்கின. ஆனா எனக்கு ஒரு மாதிரி டிஸ்டர்பா இருந்ததால, அதுக்கு மேல உன்னை பார்க்க கூடாதுன்னு நினைச்சுட்டு அங்கிருந்து நான் ஆபீஸ் போற பாதையில நடந்து போயிட்டு இருந்தேன்.

ஆனா மனசு கேக்கல திரும்பி வந்து பார்த்தா, நீ நெருப்புல மாட்டிக்கிட்டேன்னு உன் பேரை சொல்லி உன் பிரிஎண்ட்ஸ் எல்லாம் கத்திக்கிட்டு இருக்காங்க. என்னடா ஆச்சோன்னு சொல்லிட்டு நானும் வேகமாக வந்து உன்னை காப்பாத்தலான்னு பாத்தேன்.

ஆனா கரெக்டா நீயே வெளியே வந்துட்ட குழந்தையோட. அந்த நிமிஷம் உடம்புல நெருப்பு அங்கங்க எரிஞ்சிட்டு இருந்துச்சு. அதை பார்த்ததும் ரொம்ப பயமாகிடிச்சு. நீ காப்பதின குழந்தைய முதல நான் கைல வாங்கிட்டு வேகமா உன் நெருப்பெல்லாம் அணைச்சு முடிச்சதும் தான், மனசு ஒரு மாதிரி நிம்மதியா இருந்துச்சு. அவ்வளவு நேரம் டிஸ்டர்பா இருந்த உணர்வெல்லாம் காணாம போயிடுச்சு.

என்னமோ நீ கொஞ்சம் சோகமா இருந்தாலும் ஏதோ ஒன்னு டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்கு. இதுக்கு பின்னாடி வேற ஏதாவது காரணம் இருக்கலாம். ஆனா… உனக்கு தோன்ற மாதிரி எந்த எண்ணமும் இப்போதைக்கு என் மனசுல இல்ல. அதனால நீ என்ன நினைச்சு கவலைப்படாம தைரியமா இரு.

“அப்புறம் என்ன பத்தி சொல்லனும்னா, அன்னைக்கு நான் சொன்ன மாதிரியே அந்த கம்பெனில தான் நான் வேலை பார்க்கிறேன். என் அம்மா பவானி அப்பா கிடையாது.

சின்ன வயசா இருக்கும்போதே இறந்து போயிட்டாரு. அவருக்கு பெரிய பிசினஸ் பண்ணனும்னு ஆசை. ஆனா பிசினஸ்ல சரியா பண்ண முடில, நிறைய லாஸ் ஆயிடுச்சு. அதனால தற்கொலை பண்ணிக்கிட்டாரு. அம்மா அப்பாக்கு நான் ஒரே பையன். இப்போ அம்மாக்கு நான், எனக்கு அவங்க இப்படித்தான் எங்க லைஃப் போயிட்டு இருக்கு.

அப்புறம் அன்னைக்கு பார்த்தது என் அண்ணன். அவன் என்னோட பெரியப்பாவோட பையன். எங்க அப்பாக்கு ஒரே ஒரு அண்ணன் மட்டும்தான். அப்பாக்கும் பெரியப்பா மாதிரி, நிறைய சொத்து இருந்துச்சு. அந்த பிசினஸ் லாஸில தான் எல்லாமே போயிடுச்சு.

ஆனா பெரியப்பாவும் சரி, அண்ணனும் சரி எனக்காக எதையும் செய்ய தயாராதான் இருப்பாங்க. அவ்ளோ பாசம் என் மேல வச்சிருக்காங்க. ஆனா என்னமோ என் அம்மாவோட வளர்ப்பு அவங்க கிட்ட இருந்து எதையும் வாங்க விட்டதில்லை. முதல் தடவையா நீ கேட்டியே அந்த நல்ல விஷயத்தை செய்யறதுக்காக மட்டும்தான், அண்ணன் கிட்ட போய் நான் நின்னது.

சின்ன வயசுல இருந்து அம்மா நிறைய வேலை பார்ப்பாங்க. அம்மாவோட உழைப்புல சேர்த்து வைச்ச பணம் தான். அந்த கடைக்கு கொடுத்த பணம். நீ சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கு அந்த ஐடியாவே வந்துச்சு. உன்ன மாதிரி நான் சின்ன வயசுல ரொம்ப யோசிச்சது இல்ல.

அம்மாக்கு ஹெல்ப் பண்ணுவேனே தவிர அவங்களுக்கும் நிறைய ஆசை இருக்கும். அவங்களுக்குன்னு அவங்க விரும்பிறதை செய்யனும்னு எனக்கு தோணவில்லை. அவங்களை நல்லா பாத்துக்கனும்னு மட்டும் தான் எப்பவும் நினைச்சிருக்கேன்.

ஃபர்ஸ்ட் ஒரு இந்த மாதிரி யோசிக்கிற ஒரு பொண்ண பாக்குறேன். எனக்கு உன்னோட இந்த உணர்வுகள், இந்த எண்ணங்கள், எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால உன் கூட எப்பவும் இருக்கணும்னு நினைக்கிறேன், ஒரு பிரண்டா. பிரண்டா இருக்கலாமா? என்று குரு கேட்க,

அவன் அவ்வளவு நேரம் கூறுவதை விதவிதமான பாவங்களுடன் பார்த்தும் கேட்டும் கொண்டிருந்தவள், அவன் கடைசியாக, “பிரண்டாக இருக்கலாமா?” என்று புன்னகையுடன் கேட்டதும், “அதே புன்னகையை உதட்டில் சுமந்தவாறு அவன் முன் கை நீட்டி இருந்தாள் வேலினி.

இவனும் கைகளைக் பிடித்துக் குலுக்கி விடுவித்தான். வேலினி அவனிடம், “நிச்சயமா எப்பவும் உங்க பிரண்டா, நான் இருப்பேன் குரு”, என்று கூறினாள்.

“சரி” என்றவன் , பின்னர், “ஓகே கிளம்பலாம் ரொம்ப டைம் ஆகுது. அம்மா அப்பா உன்னை தேடுவாங்களே” என்று அவன் எழுந்து கொள்ள, அவன் முன்னே நடக்க இவள் பின்னே நடந்தாள். இவள் இரண்டு அடி எடுத்து வைத்துவிட்டு சட்டென்று நின்று விட, இவன் என்ன என்று திரும்பிப் பார்த்தான்.
“உங்க போன் நம்பர் என்கிட்ட இல்ல தருவீங்களா?” என்று கேட்க,

அவனிடம் சிரிப்பே பதிலாக வந்ததது.

வருவாள்…

மகாஆனந்த்…✨

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!