Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னுள்ளே ஏனடி நுழைந்தாய்?

என்னுள்ளே💞11

அத்தியாயம் _11

அவன் பற்றிய தோள் இரண்டும் கன்றி போகும் அளவிற்கு வலித்தது .

நீண்ட முத்தத்தின் அழுத்தம் அவன் காதலின் அளவை சொல்லி விட முனைந்தது .

ஒரு பரிபூரண தன்மையை அவன் மூளையும் , மனமும் ஒரு சேர உணர்ந்தது .



Advertisement

சோர்ந்து குழம்பி கிடந்த அவன் மனம் சமன்பட்டதும் . அவள்  இதழை விடுவித்து ….அவள்  கன்னத்தில் முத்தமிட்டான் .

அன்று அறைந்து தன்னை தற்காத்து கொண்டவள் இன்று ஆட்டம் கண்டு போனாள் .

உனக்கு என்னை பிடிக்கும் என்று எனக்கு தெரியும் ஸ்வாதி .

Advertisement

இல்லைனு பொய் சொல்லி என்னை ஏமாற்றி உன்னை ஏமாற்றிக்காதே ஸ்வாதி .

Advertisement

அவன் அணைப்பில் இருந்து விலகிவிட மூளை எச்சரித்தும் …அவனை விலக்காமல் தொய்ந்து சரிந்தாள் .

விழிநீர் வழியே அவள் கரைந்து கொண்டிருப்பது அவனுக்கு புரியாமல் இல்லை .

என்னை விட்டு போகும் தைரியம் உனக்கு இருக்கா ? அவள் முகம் பற்றி நிமிர்த்தினான் .

Advertisement

அவனை பார்க்க இயலாது கண்களை மூடினாள் .மூடிய விழியினின்று நீர் வழிந்தோடியது .

ஸ்வாதி ….மூனு வருஷமா உன்னை பார்த்துட்டு தான் இருக்கேன் . உன் ஒவ்வொரு அசைவிலும் எனக்குள் நங்கூரமிட்டு நின்று விட்டாய் .

மூனு  வருடமாய் என்னுள் நானே போராடி ஓய்ந்து போயிட்டேன் .

உன் கண்ணில் இருக்கும் ஏதோ  ஒன்று என்னை கவர்ந்து இழுத்துக் கொண்டே  இருக்கிறது.

உன் கண்ணில் இருக்கும் வலியா ? எந்த உணர்வுகளையும் பிரதிபலிக்காத உன் உறுதியா ? உன் வேலையில் நீ காட்டும் ஆழ்ந்த ஈடுபாடா …எனக்கு தெரியல .

நீ சின்னப் பெண் என்று விலக தான் நினைக்கிறேன் . முடியலடி … சாத்தியமா என்னால முடியல ..

அவன் பிடியில் இருந்து தன்னை விடுவித்து கொண்டவள் ….ஸார் உங்க தங்கை கணவர் பார்த்திருக்கும் பெண்ணை ஓகே சொல்லுங்க .

நோ …எனக்கு ஸ்வாதி தான் வேணும் . அவன் உறுதிபட சொன்னான் .

பிடிவாதம் பிடிக்காதீங்க ….
அம்மாக்கு சந்தோஷத்தை கொடுங்க .

அவள் வெளியேற ….ஸ்வாதி எனக்கு வாழ்க்கை துணையா ஒருத்தி வர முடியும் என்றால் அது நீ மட்டும்தான்டி .

உன்னை விலக நினைக்க.. நினைக்க தான் உன் எண்ணம் என்னுள்  வியாபித்து கொண்டே போகிறது .

இதற்கு மேலும் போராடும் வல்லமை எனக்கில்லை. சீக்கிரம் என்கிட்ட வந்துடு!

தளர்ந்து கட்டிலில் அமர்ந்து விட்டான் .

உடம்பை பார்த்துக்கோங்க ! மனசை அமைதியா வச்சிக்கோங்க .

அமைதியாக வெளியேறி ஹாலில் அமர்ந்தவள் ….
கிச்சனை நோக்கி குரல் கொடுத்தாள் .

அம்மா நான் கிளம்பறேன் !

ஸ்வாதி லன்ச் ரெடியாகுது . சாப்பிட்டு போகலாம் .

இல்லைம்மா …இன்னொரு முறை வரும்போது கண்டிப்பா சாப்பிடறேன் .

ஸ்வாதி விடைபெற்று கிளம்பிவிட ….கல்யாணி கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தார் .

ஹாஸ்டலுக்கு வந்து ஒரு பாட்டில் தண்ணீரை அப்படியே வாயில் சரித்தாள் .

தண்ணீர் வயிறை நிறைத்தாலும் …மனம் வெறுமையாய் இருந்தது .

கண்ணோடு கண் உரச …
காதலில் கரைந்து நின்ற பிரபாவின் தோற்றம் …அவள் விழி திரையில் இருந்து அகல்வதாய் இல்லை .

சுருண்டு கட்டிலில் படுத்தவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை .

படுத்தால் மூச்சு முட்டுகிறது என்று எழுந்து அமர்ந்தாள் .

தனக்கென்ன தகுதி இருக்கிறது …பிரபாவின் காதலைப்  பெற …? அவள் உள்ளம் ஊமையாய் அழுதது .

பிரபாவிற்கு நாட்டில் வேறு பெண்ணே கிடைக்கவில்லையா ? தன்னை எண்ணி கூசிப் போனாள் .

மன புழுக்கம்  தாளாது ஜன்னல் ஓரம் நின்று சாலையை வெறித்துக் கொண்டிருந்தாள் .

அடுத்து என்ன என்பது அவளுக்கு பயத்தை கொடுத்தது .

சொந்த ஊருக்கு போகவும் அவள் விரும்பவில்லை .

சென்னையை விட்டு பிழைப்பு தேடி எங்கே செல்வது …? அதீத பயத்திலும் சிந்தையிலும்  ஜன்னலின் திரைச் சீலையை முறுக்கி கொண்டிருந்தாள் .

மொபைல் அழைத்தது …சுரத்தே இல்லாமல் எடுத்து பார்த்தாள் .

பாலாஜியின் அழைப்பு தான் ….ஆன் பண்ணி காதில் வைத்தாள் .

” ஸ்வாதி நான் உன்னோடு கொஞ்சம் பேசணும் ! “

” சொல்லுங்க ஸார் ! “

” நேரில் பேசணும் ….ஈவ்னிங் கிளம்பி இரும்மா வெளியில் போய் பேசுவோம் “

ஸார் …வெளியில் போயா …? அவள் தயங்கினாள் .

நீ என்னோட தங்கை தான் …உனக்கு எந்த பயமும்  வேண்டாம் .

அது இல்லை …ஏன் வெளியில் ? அவள் மிடறு விழுங்கினாள் .

பேசுவோம் ….நேரில் பார்த்து பேசுவோம் . 4.30 க்கு ஹாஸ்டலுக்கு வரேன் .

என்னவா இருக்கும் ? பிரபா ஸார் ஏதாவது சொல்லி இருப்பாரா ? நகம் கடித்துக் கொண்டிருந்தாள் .

“———“

பாலா எம்புள்ள இதுவரை  எதுக்கும் ஆசைப்பட்டதில்லை .

மூனு வருஷமா அந்த ஸ்வாதி  பொண்ணை விரும்பி இருக்கான் .

அவன் ஆசைபட்ட பொண்ணை அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவோம் பாலா .

நான் அந்த பொண்ணு காலில் விழுந்து எம்புள்ளையை ஏத்துக்க சொல்லி கேட்கிறேன் …..கல்யாணி கண்ணீர் வழிய …விம்மினார் .

அம்மா ….நான் ஸ்வாதியை நேரில் பார்த்து பேசறேன் . அந்த பொண்ணுக்கும் நம்ம பிரபா மேல விருப்பம் இருக்கும்மா .

பாலா ….என் புள்ள சந்தோஷமா வாழறதை நான் கண் குளிர பார்க்கணும் ! எனக்கு வேறு எதுவும் வேண்டாம் .

கண்டிப்பாம்மா ….சீக்கிரம் நடக்கும் . கவலை படாதீங்க கல்யாணிக்கு தேறுதல் சொன்னான் .

ஸ்வாதியை லன்ச் சாப்பிட்டு தான் போகவேண்டும் என்று சொல்ல வந்த கல்யாணி ….
ஸ்வாதியிடம் பிரபா பேசிய அனைத்தையும் கேட்டு விட்டார் .

அவளை உயிராய் நினைத்து உருகும் மகனை எண்ணி ரத்தக் கண்ணீர் வடித்தார் .

உடனே பாலாஜிக்கு மொபைலில் அழைத்து அனைத்தும்  சொல்லி விட்டார் .

“——–“

மாலை சொன்ன நேரத்தில் வந்து நின்றான் பாலாஜி .
தயாராய் இருந்த ஸ்வாதியை அழைத்து கொண்டு கிளம்பினான் .

கார் நின்றது பெசன்ட் நகர் பீச் .

அலைகளின் ஆர்பரிப்பை  அமைதியாய் வேடிக்கை பார்த்து கொண்டு நின்றான் பாலாஜி .

ஸார் என்னவோ பேசணும்னு ..?

ம்ம்ம்ம் …பேசணும் ஸ்வாதி . அவனுக்கு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை .

என்கிட்ட என்ன ஸார் தயக்கம் ?

சொல்றேன் …சொல்றேன் …!

” பிரபா ஸார் பத்தியா ? “

” ம்ம்ம் …எக்ஸாக்ட்லி ..! “

அந்த லெக்சரர் பொண்ணு விஷயத்தை நான் சொல்லிட்டேன் ஸார் .

அவனுக்கு அந்த லெக்சரர் வேண்டாமாம் . இந்த ஸ்வாதி தான் வேணுமாம் .

ஸார் …அவள் ஷாக் அடித்தாற்போல் பதறினாள் .

உங்களுக்குள்ள என்ன பிரச்னை என்று எனக்கு தெரியாது . என்னவா இருக்கும் என்று அனுமானம் எனக்கு இருக்கு .

ஸார் இது பற்றி விளக்கமா பேசவோ அனுமானிக்கவோ  என்ன இருக்கு ?

ஒரு நண்பனா அவருக்கு நல்லதை செய்யுங்க ! அவள் கிளம்ப எத்தனித்தாள் .

ஸ்வாதி ஒரு நிமிஷம் …அவன் டீன் ஏஜ் பாய் இல்லை . அவனுக்கு நான் சொல்லி புரிய வைக்க எதுவும் இல்லை .

அவன் ஜாலி டைப் இல்லை . எதையும் ஃபிராங்கா பேசவும்  மாட்டான் .

அது தான் அவருக்காக ஆஜர் ஆக நீங்க இருக்கீங்களே …?
அவள் கேலியாய் சிரித்தாள் .

ஸ்வாதி …அவனுக்கு ஆறுதல் சொல்லி யாரும் அவனை தேற்றி விட முடியாது .

அப்படியா ? அவள் இதழ்விரியா புன்னகை பூத்தாள் .

அவர் பர்சனாலிட்டி , வசதி வாய்ப்பு பார்த்து நல்ல பொண்ணு கிடைக்கும் .

நீ நல்ல பொண்ணு இல்லையா ?

ம்ம்ம்ம் …கரெக்ட் என்றாள் .

ஸ்வாதி அவருக்கு மேட்ச் இல்லைனு சொல்லிடுங்க .

அவள் நான்கடி நடக்க தொடங்கினாள் .

ஸ்வாதி ஒரு நிமிஷம் ….!
உனக்கு ஏதோ ஒரு கசப்பான கடந்த காலம் இருக்குன்னு புரியுது .

அதே போல் ஒரு இரக்கமற்ற கடந்த காலம் அவனுக்கும் உண்டு .

ஸ்வாதி அமைதியாய் நின்று அவனை கூர்ந்து நோக்கினாள் .

ஆமா ஸ்வாதி . பிரபா ஒரு டிவோர்ஸி .

ஸார் ….ஸ்வாதி அதிர்வுடன் நிமிர்ந்தாள் .

யெஸ் …அவனுக்கு டிவோர்ஸ் ஆகி சிக்ஸ் இயர்ஸ் ஆகுது .

விரிந்த விழி மூடாமல் பாலாவை நோக்கினாள் .

பரந்து விரிந்த கடலை நோக்கியபடி வலிகள் நிறைந்த கதையை பேச ஆரம்பித்தான் பாலாஜி .

வரதராஜன், கல்யாணி தம்பதிகளின் மூத்த மகன் பிரபானந்தன் .

வரதன் அங்கிள்  வடபழனி ஏரியாவில் சின்னதா  ஹோட்டல் நடத்திட்டு இருந்தார் .

நானும் பிரபாவும் பதினாறு வருஷமா க்ளோஸ் பிரண்ட்ஸ் .

எம்.காம் முடிச்சிட்டு நானும் பிரபாவும் தீவிரமா வேலை தேடிட்டு இருந்தோம் .

நிறைய காம்பிடேட்டிவ் எக்ஸாம்ஸ் ட்ரை பண்ணிட்டு இருந்தோம் .

லக்ஷ்மி விலாஸ் பேங்கில் தேனாம்பேட்டை பிராஞ்சில் அவன் வேலைக்கு சேர்ந்தான் .

நான் பெங்களூரில் ஜாப் கிடைத்து போயிட்டேன் .

வருடம் இப்படியே போய் கொண்டிருக்க …வரதன் அங்கிளோட பிரண்ட் சதாசிவம் தன் பெண் பத்மஜாவை பிரபாவிற்கு கொடுக்க விரும்பினார் .

(சின்ன பிளாஷ்பேக் போயிட்டு வந்துருவோம் …ஓகே வா )

வரதா என் பொண்ணு பத்மாக்கு வரன் பார்க்கணும் .

நல்ல விஷயம் தானே சதா ?

ஏன் வரதா உன் வீட்டு மருமகளா என் பொண்ணை ஏத்துக்க மாட்டியா ?

இல்லை சதா நீ PW டிபார்ட்மெண்டில் பெரிய போஸ்டிங்கில் இருக்கிறவன் நான் சாதாரணமா ஹோட்டல் நடத்திட்டு இருக்கேன் . நாம எப்படி சம்மந்தம் பண்ணிக்கிறது ?

என்ன வரதா இப்படி சொல்லிட்ட? யாரோ ஒருத்தனுக்கு என் பொண்ணை கொடுத்துட்டு புலம்பறதை விட உன் பையனுக்கு கொடுத்தா நான் நிம்மதியா இருப்பேன் .

எந்த கெட்ட பழக்கமும் இல்லாத உன் பையன் என் வீட்டு மாப்பிள்ளையாக நான்  கொடுத்து வைத்திருக்கணும் .

எதுக்கும் உன் பொண்ணு கூட கலந்து பேசிட்டு சொல்லு சதா .

நீயும் உன் வீட்டில் பேசு வரதா .. இது என் பொண்ணு போட்டோ . என் பொண்ணு BE படிச்சிருக்கா .

பிரபா… சதா மாமா அவர் பொண்ணு பத்மஜாவிற்கு உன்னை  மாப்பிள்ளையாக்கிக்க ஆசை படறார் .

அப்பா …ஸ்ரீ குட்டிக்கு கல்யாணம் முடிச்சிட்டு எனக்கு பார்க்கலாமே ?

அண்ணா …நான் PG பண்ணனும் .என்னை வச்சி நீங்க எஸ்கேப் ஆக முடியாது ….ஸ்ரீமதி சிரித்தாள் .
அவள் B.Sc மைக்ரோ பயாலஜி பைனல் இயரில் இருந்தாள் .

பொண்ணு லட்சணமா இருக்கா ….கல்யாணி மகிழ்ந்து போனார் .

பத்மஜாவின் போட்டோ பார்த்த பிரபா மயங்கி போனான் .

என்னப்பா சொல்ற ? சதாக்கு நான் என்ன பதில் சொல்லட்டும் ?

உங்க இஷ்டம்பா …கன்னம் செம்மையுற வெட்கி …
அறைக்குள் நுழைந்து கொண்டான் .

“———“

பத்மா இந்த போட்டோ பாரு !
நம்ம வரதன் பையன் LVB யில் அசிஸ்டென்ட் மேனேஜரா இருக்கான் .

எனக்கு இப்போ மேரேஜ் வேண்டாம் . அவள் மன்றாடினாள்.

நீ எதை மனசில் வைத்து பேசறேன்னு எனக்கு தெரியும் .
நீ நினைக்கிறது நடக்காது !

உன் அப்பா உனக்கு நல்லதை தான் செய்வேன் …அவர் உள்ளே போய் விட்டார் .

என்ன பேசுவது என்று தெரியாமல் கையை பிசைந்தார் கஸ்தூரி .

அவருக்கு கணவரின் கௌரவமும் தெரியும் , மகளின் பிடிவாதமும் தெரியும் .

கோபமாய் காலால் உதைத்து கதவை அறைந்து சாத்தி விட்டு கட்டிலில் விழுந்தவள் மொபைலை எடுத்து மிதுனுக்கு அழைத்தாள் .

சொல்லுடா ஸ்வீட்டி ….மிதுன் காதலாகி கசிந்துருகினான் .

தந்தை மாப்பிள்ளை பார்த்திருக்கும் விஷயத்தை சொன்னாள் .

மிதுன் அவளுடன் என்ஜீனியரிங் படித்தவன் . இந்தி சினிமா கதாநாயகன் போல் அழகு …கிளாஸ் ஒர்க் , பிளைவுட் தயாரித்து  வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர் பக்தவசலத்தின் சீமாந்திர புத்திரன் அவன் . கோடிகளில் புரளும் குடும்பம் .

வெவ்வேறு சாதி ….ஆயினும் காதலில் விழுந்தனர் .

இவர்கள் காதல் சங்கதி சதாசிவத்திற்கு தெரிய வந்தது .

அவர் ஜாதி , குலம் கோத்திரம் பார்ப்பவர் . மகளுக்கு பொறுமையாய் எடுத்து சொன்னார் .

அவள் மிதுன் மயக்கத்தில் இருந்தாள் .

மிதுன் மேற்படிப்பிற்கு லண்டன் சென்று விட்டான் .

கலங்கி அழுத பத்மஜாவை அணைத்து ஆறுதல் படுத்தினான் . படித்து முடித்து வந்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று வாக்குறுதி அளித்தான் .

அவன் இரண்டாண்டு படிப்பு முடிந்து வருவதற்குள் பத்மாவிற்கு திருமணம் செய்து வைத்து விட தீவிரமாக இறங்கி விட்டார் சதாசிவம் .

ஸ்வீட்டி …நீ உன் அப்பாட்ட பேசி புரிய வை !  எங்காவது வேலைக்கு போ … நான் வர வரைக்கும் எப்படியாவது சமாளி !

இல்லை மிதுன் …என் டாடி பத்தி உனக்கு தெரியல . அவர் ரொம்ப கௌரவம் பார்க்கிறவர் .

பார்த்துக்கலாம் விடு …நம்மை மீறி எதுவும் நடக்காது அவன் ஆறுதல் சொன்னான் .

பத்மஜாவுடன் கனவில் டூயட் பாடி சுவிட்சர்லாந்தில் ஆடி களைத்தான் பிரபா .

கஸ்தூரி நாளைக்கு வரதன் குடும்பத்தோடு  பெண் பார்க்க வரான் .

உன் பொண்ணுக்கு சொல்லி வை ! ஏடாகூடமா ஏதாவது செய்ய நினைச்சா இந்த சதாசிவத்தின் இன்னொரு முகத்தை உன் பொண்ணு பார்க்க வேண்டி வரும் .

பிரபா காதில் ரகசியம் ஒதினாள் ஸ்ரீமதி . வாவ்! அண்ணா அண்ணி செம்ம அழகு !

மெல்ல தலை உயர்த்தி பார்த்த பிரபா …மெய் மறந்து போனான் .

காஃபி கொடுத்து விட்டு வணக்கம் சொன்ன பத்மஜாவை உள்ளே அழைத்து செல்லும்படி கண்ணை காட்டினார் சதா .

எங்களுக்கு பெண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு . நீங்க என்ன சொல்றீங்களோ அது தான் ? வரதன் சொல்லிவிட்டார் .

எங்களுக்கு பரிபூரண சம்மதம் வரதா …சதா அகமும் முகமும் மலர்ந்தார் .

ஜோதிடரை அழைத்து நிச்சயத்திற்கும் , முகூர்தத்திற்கும் நாள் குறித்து விட்டார்கள் .

தன்னால் ஆனவரை முரண்டு பிடித்து பார்த்தாள் பத்மஜா . மிதுனிடம் அழுதாள் .

இப்போதைய சூழ்நிலையில் நான் இந்தியா வர வாய்ப்பே இல்லை . பைனல் செமஸ்டர் டைம் இது . லீவ் கிடைக்காது .
ஏதாவது செய்து மேரேஜை நிறுத்த பாரு …அவன் வைத்து விட்டான் .

லக்ஷ்மி விலாஸ் பேங்க் தொலைபேசி எண்ணை மிதுனுக்கு அனுப்பி வைத்தாள் பத்மஜா .

ஹலோ சொல்லுங்க ….நான் பிரபானந்தன் .

நீங்க மேரேஜ் பண்ணிக்க போற பொண்ணோட லவ்வர் நான் .

“வாட் …? “

“யெஸ் ….நாங்க நாலு வருஷமா லவ் பண்றோம் ! “

“அப்படியா ? உங்க பேர் என்ன?”

அது ஏன் உனக்கு ? இந்த கல்யாணம் நடக்க கூடாது .

ஹலோ …இந்த மாதிரி அனானிமஸ் காலிற்கெல்லாம் ரெஸ்பான்ஸ் பண்ணிட்டு இருக்க முடியாது .

தந்தையிடம் சொன்னான் பிரபா

பிரபா ….சதா அப்படி எல்லாம் பெண்ணை வளர்த்திருக்க மாட்டான் . இதை எப்படி அவனிடம் கேட்பது ?

யாரோ வேண்டும் என்றே செய்யும் சதி இது மகனுக்கு தைரியம் சொன்னார் வரதராஜன் .

நிச்சயதார்த்தம் முடிந்தது. அடுத்த  பதினைந்தாவது நாள் முகூர்த்தம் .

வீட்டு காவலில் சிறை பிடிக்க பட்டிருந்தாள் பத்மஜா .

சதா மகளிடம்  ஒற்றை வரியில் சொன்னது இது தான் .

உலகத்தில் உள்ள எல்லா பெற்றவர்களும் சொல்லும் அதே டயலாக் தான் எனக்கு வேற வழி இல்லை .

இந்த கல்யாணம் நடக்கலைன்னா நானும் உங்கம்மாவும் உயிரை விட்டுடுவோம் . விஷத்தை எடுத்து காட்டினார் .

நாங்க செத்த பிறகு நீ எவன் கூட போனா எங்களுக்கென்ன ?

மிதுன் இன்னும் ஆறுமாதம் பொறுத்து கொள்ள சொன்னான் .

உண்மையில் என் மீது காதல் இருந்தால் நீ இவ்வளவு அலட்சியமாக இருப்பாயா என்று கதறினாள் .

இந்த வயசில் படிப்பு முக்கியம் ஸ்வீட்டி . More than fifty  lakhs செலவு செய்து லண்டனில் படிக்க வைக்கிறாங்க .  அதை வீணாக்கிட முடியாது .

கண்டிப்பா உன்னை மேரேஜ் பண்ணிக்கிறேன் இது சத்தியம் என்றான் .

கை மீறி எல்லாம் போய் விட்டது .ஒரு சிறு சந்தர்ப்பம் கூட பத்மஜாவிற்கு கிடைக்கவில்லை . விதி அவளுக்கு எதிராகவே இருந்தது .

திருமணம் ஆனால்  என்ன? இன்னும் ஆறு மாதம் தாக்கு பிடித்தால் போதும் . மிதுன் வந்து விடுவான் . தன்னை வந்து மீட்டு செல்வான் . திடமாய் நம்பினாள் .

கோலாகலமாய் திருமண வைபவம் நடந்தேறியது . பொம்மையாய் அனைத்து சடங்குகளையும் செய்தாள் . மறந்தும் பிரபாவை அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை .

திருமணம் ஆகி விட்டது ….இனி மகள் மனம் மாறிவிடுவாள் என்று நம்பினார் சதாசிவம் .

“——–“

பால் சொம்புடன் அறைக்குள் வந்து தயங்கி நின்றவளின் கரம் பற்றினான் பிரபா .

கையை விடு …ஆங்காரமாய் ஓங்கி ஒலித்து எதிரொலித்தது அவள் குரல் .

கனவுகள் சில்லு சில்லாய் நொறுங்கி …ஸ்தம்பித்து நின்றான் பிரபா .

—–தொடரும் —–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!