கதிர் ஆங்காங்கே அலைந்து வேலை செய்து கொண்டிருந்தாலும் அடிக்கடி அவன் கண்கள் தேன்மொழியை தீண்டி சிவக்க வைத்து விட்டு சென்றது.
பின் மணமக்கள் சடங்குகள் நடந்து முடிந்ததும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள்.
பின் மணமக்கள் காலை உணவருந்த சென்று விட்டார்கள். செல்வா அருகில் வந்த வேணி அவன் கையில் கிஃப்டைக் கொடுத்து விட்டு “நான் கிளம்புறேன் செல்வா. வீட்ல தங்கச்சி தனியா இருப்பா. அம்மா அப்பா வேலைக்கு கிளம்பிருவாங்க. அதான்”, என்றாள்.
“சாப்பிடாம போறன்னு கஷ்டமா இருக்கு. ஆனா உன் தங்கச்சி வள்ளிக்காக உன்னை விடுறேன். அப்புறம் அண்ணன் அண்ணிக்கிட்ட நீயே கிஃப்டைக் கொடுத்துரு”, என்று சொல்லி அவளை தினேஷ் அறைக்கு அழைத்து சென்று தினேஷிடம் அவளை அறிமுகப் படுத்தினான்.
“நான் சொல்லிருக்கேன்ல அண்ணா வேணி”, என்று செல்வா சொன்னதும் “வா மா தங்கச்சி, உன்னைப் பத்தி நிறைய சொல்லிருக்கான்”,என்றான் தினேஷ்.
அப்போது அங்கு வந்த தேன்மொழி மற்றும் கதிரையும் அறிமுகப் படுத்தி கீதாவையும் அழைத்து அனைவரையும் அறிமுகப் படுத்தினான்.
கிளம்புறேன் என்று சொன்ன நீலவேணியை அனைவரும் கடிந்து கொள்ள செல்வா அவள் நிலையை அவர்களுக்கு உணர்த்த “நீயே போய் அவளை பஸ் ஏத்தி விட்டுட்டு வா”, என்று சொல்லி சென்றான் கதிர்.
மொத்த குடும்பமும் நீலவேணியிடம் பேசுவதையும் செல்வா அவர்களுக்கு நீலவேணியை சந்தோஷமாக அறிமுகப் படுத்துவதையும் ஒரு ஓரத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த சௌமிக்கு அழுகையாக வந்தது.
[the_ad id=”6605″]
எதிலும் தான் தான் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணும் சௌமி கொஞ்சம் திருந்தி இருக்கிறாள் என்றால் அது செல்வாவால் தான்.
இப்போது சற்று பொறாமை குணம் தலை தூக்கி அவள் முகத்தை பொலிவிழக்க செய்தது.
“ஒரு வேளை செல்வாவுக்கு நான் கெட்ட பொண்ணுன்னு என்னை பிடிக்காம நீலவேணியை பிடிச்சிருச்சோ?”, என்று எண்ணியவளுக்கு மனது வெகுவாக வலித்தது. அந்த வலியே அவளுக்கு செல்வாவை எவ்வளவு பிடிக்கும் என்று உணர்த்தியது.
பழைய சௌமியாக இருந்திருந்தால் இந்நேரம் எனக்கு பிடித்தவனிடம் நீ பேசிட்டு இருக்கியா என்று சொல்லி நீலவேணியை ஒரு வழி ஆக்கி இருப்பாள்.
ஆனால் எப்போது செல்வாவுக்கு பிடித்த பெண்ணாக இருக்க வேண்டும் என்று தன்னை மாற்றிக் கொண்டாளோ அப்போதே அவளிடம் இருந்த தான் என்ற மமதை அவளை விட்டு சென்றிருந்தது.
கண்களில் சிறு வலியுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்த சௌமியைக் கண்ட செல்வா துணுக்குற்றான். “இவ என்ன இவ்வளவு சோகமா என்னை பாத்துட்டு இருக்கா? இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்தா? ஒரு வேளை தனியா இருக்குறதுனால இப்படி இருக்காளோ?”, என்று எண்ணிக் கொண்டவன் நீலவேணியை அழைத்துக் கொண்டு அவள் அருகில் வந்தான்.
“சௌமி நான் வீட்டுக்கு கிளம்புறேன்”, என்றாள் நீலவேணி.
சரி என்று தலை அசைத்தாள் சௌமி. அவளையே பார்த்துக் கொண்டிருந்த செல்வா அவள் மனதில் இருப்பது புரியாமல் “நான் வேணியை பஸ் ஏத்தி விட்டுட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு கிளம்பினான்.
இருவரும் போவதைப் பார்த்து அழுகை வரப் பார்க்க சூழ்நிலை கருதி அடக்கிக் கொண்டாள். திரும்பி அவளிடம் வந்த செல்வா “உன்னை தனியா விட்டுட்டு போறேன் பாரு. என் கூட வா”, என்று அவளை அழைத்து சென்று கீதா மற்றும் தேன்மொழியிடம் சென்று அவளை அறிமுகப் படுத்தி “இவளை உங்க கூடவே வச்சிக்கோங்க”, என்று சொல்லி விட்டு சென்றான்.
தேன்மொழியும் கீதாவும் “எங்க செல்வா கிளாஸ்ல எப்படி இருப்பான்? ஏதாவது சேட்டை பண்ணுவானா?”, என்று அவனைப் பற்றி அவளிடம் சகஜமாக உரையாட சௌமியும் அவர்களை அக்கா என்று அழைத்து அவனைப் பற்றியும் கிளாசில் நடந்த சம்பவங்கள் பற்றியும் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அனைவரும் காலை உணவு முடித்ததும் ராதா மற்றும் கீதாவுக்கு அலங்காரம் ஆரம்பித்தது. “சௌமி நீ கீதாவுக்கு அலங்காரம் செஞ்சி விடு. நான் பக்கத்து ரூம்ல ராதா அண்ணிக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமான்னு கேட்டுட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்றாள்.
பக்கத்து அறைக்குள் நுழைத்த தேன்மொழி “அண்ணி”,என்று அழைத்தாள்.
“ஏய் தேனு, வா உள்ள வா”,என்று புன்னகையுடன் அழைத்தாள் ராதா.
“உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமானு கேக்க வந்தேன்”, என்று தேன்மொழி சொன்னதும் ராதா ஏதோ சொல்ல வர “என் பொண்ணுக்கு மேக்கப் போட பத்தாயிரம் கொடுத்து ஆளைக் கூட்டிட்டு வந்துருக்கேன். உன் உதவி ஒண்ணும் தேவை இல்லை”, என்று முகத்தில் அடித்தது போல சொன்னாள் ராதாவின் அம்மா மரகதம்.
“அம்மா”,என்று ராதா அரட்டல் போட அவளை முறைத்து விட்டு அந்த பக்கம் நகர்ந்தாள் மரகதம்.
“தப்பா எடுத்துக்காத தேனு. அம்மா பேசினதுக்கு….”
“விடுங்க அண்ணி. அத்தை தானே? திட்டு வாங்குறது எல்லாம் எனக்கு பழக்கம். சரி சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. உங்க அலங்காரம் எல்லாம் நல்லா தான் இருக்கு. முகத்தில் மட்டும் கண்டதை பூசி பெயிண்ட் அடிச்ச மாதிரி ஆக்கி வச்சிருக்காங்க. அதை மட்டும் மாத்திக்கோங்க. நான் கீதா ரெடி ஆகிட்டாளான்னு பாக்குறேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் தேன்மொழி.
“கீதா எதுக்கு ரெடி ஆகணும்?”, என்று குழப்பத்துடன் நினைத்துக் கொண்டாள் ராதா.
[the_ad id=”6605″]
பக்கத்து அறையிலோ தேன்மொழி, கீதா, சௌமி என்று மூவரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். கீதா கிளம்பி விட்டாளா என்று பார்க்க வந்த வேணியும் சகுந்தலாவும் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர்.
தேன்மொழி அவர்களுக்கு சௌமியை அறிமுகப் படுத்த சௌமி அவர்களிடம் புன்னகை முகமாக பேசிக் கொண்டிருந்தாள்.
இங்கு ஐந்து பெண்கள் பேசிக் கொண்டிருக்கும் போது சௌமியை தேடி உள்ளே வந்தான் செல்வா.
அங்கே தன்னுடைய அம்மா மற்றும் அத்தை இருப்பதைப் பார்த்து “அம்மா, அத்தை இது சௌமி. இவ என் கிளாஸ்ல தான்…”, என்று அறிமுகப் படுத்த வந்தான்.
“நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். எங்களுக்கே தெரியும். இன்னைக்கு ஒரு பஞ்சாயத்து இருக்கு குஞ்சு”, என்று வேணி சொன்னதும் அவன் பே என்று விழிக்க அவனைப் பார்த்து சிரித்து விட்டு வேணியும் சகுந்தலாவும் அங்கிருந்து சென்றனர்.
“ஆமா ஆமா பெரிய பஞ்சாயத்து இருக்கு. ஆமா உனக்கு இங்க என்ன வேலை? கிளம்பு கிளம்பு, காத்து வரட்டும்”. என்று அவனை விரட்டினாள் தேன்மொழி.
“இல்லை சௌமியை சாப்பிட கூப்பிட… சே சே இல்லை இல்லை என் அண்ணிங்க ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களானு கேக்க தான் வந்தேன்”, என்று இழுத்தான் செல்வா.
“டேய் கொழுந்தனாரே, உங்க அக்கறை போதும். நீ எதுக்கு வந்தேன்னு தெரியும். இன்னைக்கு முழுக்க சௌமி எங்க பொறுப்பு. நாங்க பாத்துக்குறோம். நீ கிளம்பு”, என்று கீதாவும் சொன்னதும் சௌமியை பாவமாக பார்த்தவாறே அங்கிருந்து சென்றான்.
அவன் போன பக்கமே சௌமி பார்த்துக் கொண்டிருக்க “அக்கா இங்க நான் பொண்ணா, இல்லை வேற யாருமான்னு தெரியலை. ஒரே தேடலா இருக்கு”, என்று சௌமியைக் கிண்டல் அடித்தாள் கீதா.
“ஓ அது தான், நம்ம செல்வா காத்து நம்ம ரூம் பக்கமே அடிக்குதா? அவனோட புயல் நம்ம கூட இருக்கே”, என்று தேன்மொழி சொன்னதும் “அக்கா என்னைய இப்படி கிண்டல் பண்ணாதீங்க?”,என்று அழகாக வெட்கப் பட்டாள் சௌமி.
அவளுடைய வெட்கமே செல்வாவுக்கும் அவளுக்கும் இருக்கும் உறவை அவர்களுக்கு பறைசாற்றியது. அவள் கெஞ்சியதை எல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு அவளை கிண்டல் செய்தே அழ வைத்தனர்.
இது வரைக்கும் யாருடனும் இவ்வளவு கலகலப்பாக பழகாத சௌமி கீதா மற்றும் தேன்மொழியிடம் உரிமையாக உரையாடினாள்.
[the_ad id=”6605″]
ராதா அலங்காரம் முடிந்ததும் “அழகா இருக்க கண்ணு”, என்று அவளை நெட்டி முறித்தாள் மரகதம்.
அப்போது உள்ளே வந்த மரகதத்தின் தங்கை கல்யாணி “அக்கா அக்கா”, என்று பரபரப்பாக அழைத்தாள்.
“என்ன டி? என்ன ஆச்சு?”, என்று கேட்டாள் மரகதம்.
“கல்யாண மேடைல ரிசப்சனுக்கு அலங்காரம் பண்ணிட்டு இருக்காங்க”
“ஆமா அதுக்கு என்ன?”
“அக்கா, ரெண்டு செட் சோபாஸ் போட்டுருக்காங்க. அதுவும் தனி தனியா?”
“என்ன டி சொல்ற? புரியலை”
“எனக்கும் புரியலைக்கா. ரெண்டு ஜோடிக்கு கல்யாணம் நடந்தா எப்படி அங்க நிப்பாங்களோ அதுக்கு ஏத்த மாதிரி போட்டுருக்காங்க”, என்று சொன்னதும் குழப்பமானாள் மரகதம். ராதாவுக்கும் குழப்பமாக இருந்தது.
காதல் தீயை நீர் அணைக்குமா?….