என் காதல் கனா
5
ஒரு மாதம் கழித்து,
சென்னை விமான நிலையம் அந்த நள்ளிரவு நேரத்திலும் பரபரப்புடன் காட்சியளித்தது. சுஜினி தன் தாய் லக்ஷ்மியுடன் வாடகைக் காரில் இருந்து இரண்டு பெரிய பெட்டிகளை டிராலியில் அடுக்கினாள். இரவு மூன்று மணி விமானத்திற்கு, இரவு பதினொரு மணிக்கே வீட்டில் இருந்து கிளம்பி வந்துவிட்டிருந்தனர்.
“இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சே வந்திருக்கலாம்மா…பாரு மணி பதினொன்னு தான் ஆகுது.” என்று தாயிடம் கூறினாள் சுஜினி. லக்ஷ்மிக்கு விமான நிலையத்திற்கு வருவது இதுவே முதல் முறை. ஜிவ்வென வேகமாக தரையிறங்கும் இயந்திரப் பறவையை அருகில் காணும் ஆவல் லக்ஷ்மிக்கு இருக்கவே செய்தது. இருந்தாலும் இதை மகளுடம் சொல்லாமல், “ராத்திரி ஒரு மணிக்கு எங்கிருந்து டாக்ஸி புடிக்கறது. அதுவும் மைலாப்பூர்ல இருந்து ரெண்டு பொம்மனாட்டிகள் மட்டும் தனியான்னா வரனும்?..இங்க உட்கார்ந்து போற வர்றவாளை வேடிக்கையாச்சும் பார்க்கலாம்..” என்று பொதுவாக சிரித்து மழுப்பினாள் லக்ஷ்மி.
சுஜினி பதில் சொல்லவில்லை. அம்மாவின் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கும் என சுஜினியால் ஓரளவு யூகிக்க முடிந்தது. முன் தினமே வீட்டில் மாமா, அத்தை, ஸ்ரீராம் என அனைவரிடம் சொல்லிக் கொண்டாள் தான். அத்தை மாமா காலில் விழுந்து ஆசியும் பெற்றுக் கொண்டாள். “நன்னா இரு…”என்று அதிகம் சப்தம் எழாமல் மாமாவின் வாயில் இருந்து முத்துகள் உதிர்ந்தன. அத்தை அதைக் கூட சொல்லவில்லை. சுஜினி இதெல்லாம் எதிர்பார்க்க மாட்டாள் தான். இருப்பினும் மனம் அன்று ஏங்கியது. தாயைப் பிரிந்து தனியே செல்லப் போகிறோம் என்ற கவலை ஒருபக்கம் அழுத்தியது. அம்மாவிற்கு ஆறுதலாக தானும் உடன் இருக்கப்போவதில்லையே என்ற கவலை எல்லாவற்றையும் விட விஷ்வரூபமாக மனதை ஆக்ரமித்தது.
“பத்தரமா இருந்துக்குவேல்ல அம்மா…. உடம்பை நல்லா பார்த்துக்கணும். வேளாவேளைக்கு சாப்பிடு. சரியா. ஃபோனை சார்ஜ் பண்ணி வச்சுக்க. நான் எப்பல்லாம் முடியுதோ அப்போலாம் கண்டிப்பா கூப்படறேன்…. உன்னை தனியா விட்டுட்டுப் போகறேன்னு நினைச்சாலே எனக்கு பகீர்ங்குதும்மா….நான் அமெரிக்கா போகாம, இங்கையே இருக்கட்டுமா”என்று கண்களில் நீர்மல்க தாயிடம் கூறினாள் சுஜினி.
“சீ அசடு….எதுக்கு கண்ணை கசக்கற… நீ நல்லா இருக்கணும்னு எல்லார்த்தையும் பகைச்சுண்டு நான் உன்னை அமெரிக்கா அனுப்பறேன்… ரெண்டு வருஷம் தான…அதுக்குள்ள இங்க என்ன ஆயிடப் போகுது? நீ நன்னா படி. பத்தரமா இரு. படிச்சு முடிச்சு ஒரு வேலை தேடிட்டு என்னையும் கூட கூட்டிட்டுப் போ..சரியா… போறப்போ அழுகாத சுஜி. அழுத முகத்தோட உன்னை பார்க்க நேக்கு பிடிக்காதுன்னு உனக்குத் தெரியும்ல…” என்று தாயைக் கட்டிக் கொண்டு அழுத சுஜினியை தேற்றினார் லக்ஷ்மி.
அன்றைய தினம் நள்ளிரவு வீட்டிலிருந்து விமான நிலையம் கிளம்பும் சமயம், மாமாவேணும் உடன் வருவாரோ என அன்னை எதிர்பார்த்தது சுஜினிக்குப் புரிந்தது. ஒன்பது மணிக்கு உணவை முடித்துக் கொண்டு, காலில் விழுந்த தங்கை மகளை ஆசீர்வாதம் செய்த பின், தங்களது அறைக்குள் சென்று முடங்கிக் கொண்ட ராமனாதனும், லலிதாவும் அதன் பின்னர் வெளியே வரவேயில்லை. தனது அண்ணாவின் குடும்பம் விமான நிலையம் வரை வழியனுப்ப வருவார்கள் என பெரிதும் எதிர்பார்த்த லக்ஷ்மிக்கு ஏமாற்றமாகவே இருந்தது.
இமிக்ரேஷன் ஆரம்பிக்க இன்னமும் நேரமிருந்தது. தாயும் மகளும் அங்கிருந்த உணவு விடுதி ஒன்றில் ஆளுக்கு ஒரு காபியை வாங்கிக் கொண்டு மெல்லமாக உரிஞ்சிக் கொண்டிருந்த போது தான் அருகில் லக்ஷ்மியின் வயதை ஒத்த பெண்மணி ஒருவர் தன் கணவரிடம் பேசிக் கொண்டிருந்தது எதார்த்தமாக லக்ஷ்மியின் காதில் விழுந்தது.
“எப்படிங்க இந்த நிலைமையில சதீஷை தனியா அனுப்பறது. எனக்கு மனசு சம்மதிக்கவேயில்லைங்க…” என்று அந்த பெண்மணி தன் கணவரிடம் கவலைப் பட்டுக் கொள்ள, அவரோ,”விடும்மா…. இந்த மாதிரி விஷயத்தில நாம ஓரளவு தான் தலையிடமுடியும். அதுவுமில்லாம கிஷோர் தான் பக்கத்தில இருக்கானே…அவன் போயி பார்த்துக்குவான்” என்று சமாதானப்படுத்தும் குரலில் பேசினார்.
அந்தப் பெண்மணியின் முகம் செழிப்பாகவேயில்லை. “என்ன நீங்க…பிலடெல்ஃபியாவும் சதீஷ் படிக்கப் போற ஆர்கன் யுனிவர்சிட்டியும் என்ன அடுத்த அடுத்த தெருவிலையா இருக்கு. கிஷோர் எப்படி அடிக்கடி போய் பார்த்துக்க முடியும்? நீங்க நமக்கும் சேர்ந்து டிக்கெட் போட்டிருக்கலாம்.”
“சுலோ, இப்போ தான சதீஷ் போறான். மொதல்ல அவனுக்கு காலேஜ் செட் ஆகட்டும். ஊர் பழகட்டும். அப்பறமா ஒரு மூனு நாலு மாசம் கழிச்சு நாம போலாம். சரியா?” என்றார் அந்த முதியவர் தன் மனைவியிடம்.
“அவன் மனசு சங்கடத்தோட போறது தாங்க எனக்கு கஷ்டமா இருக்கு”
“அதெல்லாம் சதீஷ் பார்த்துப்பான். தலைக்கு மேல வளர்ந்துட்டான், இன்னமும் சின்ன பையன்னே நினைச்சுகிட்டு இருக்க நீ. கூட, விவேக்கும் இருக்கான்ல, சமாளிச்சுக்குவாங்க….நீ தேவையில்லாம கவலைப்படாத”என்று அந்த முதியவர் கூறினார். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை அதுவரையில் அமைதியாக கேட்டுக் கொண்டு சுஜினியின் அருகில் நின்றிருந்த லக்ஷ்மி, காலி கோப்பையை குப்பைக் கூடையில் போடச் செல்லும் சாக்கில், அவர்கள் இருவரையும் நோக்கிச் சென்றார்.
ஆனால் காலி கோப்பையை தொட்டியில் போட்டதும் திரும்பிவிடுவார் என சுஜினி நினைத்துக் கொண்டிருக்க, லக்ஷ்மியோ, அந்த முதியவர்கள் இருவரிடமும் நின்று பேசத் துவங்கினார். சுஜினிக்கு தாயின் முகபாவனைகள் மட்டுமே தெளிவாகப் புரிந்தது, அவர்கள் இருவரும் தாயைப் பார்த்துக் கொண்டு நின்றமையால் என்ன பேசுகிறார்கள் எனத் தெரியாத சுஜினி ஆர்வமுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
சில நொடியில் மூவரும் சுஜினியைத் திரும்பிப் பார்க்க, லக்ஷ்மி “இங்க வா”என ஜாடை காட்டி சுஜினியை அருகே அழைத்தார். “இதான் என் பொண்ணு.பேர் சுஜினி” என்று லக்ஷ்மி கைகாட்டிய தம்பதியிடம் மெல்லமாக புன்னகைத்துச் சிரித்தாள் சுஜினி. “நீ போற யுனிவர்சிட்டில தான் இவங்க பையனும் படிக்கப் போறானாம்.”என அறிமுகம் செய்துவைத்தார். இதற்குள் அந்தப் பெண்மணி, பத்தடி தூரத்தில் நின்றிருந்த இரு ஆடவர்களை அருகில் அழைத்திருந்தார்.
மாநிறமாக களையாக கண்களில் கரிசனத்துடன் ஒருவன், “இவளிடமெல்லாம் பேச வேண்டுமா?”என முகம் நிறைய கர்வம் மின்ன கண்களில் அலட்சயத்துடன் மற்றொருவன் என இரு துருவங்களாக வந்து நின்ற இளைஞர்களைக் கண்டு வெற்றுப் புன்னகை சிந்தினாள் சுஜினி.
“இது என் பையன் சதீஷ்”என்று கர்வ முகத்தையும், “இது அவனோட ஃப்ரெண்டு விவேக்”என்று கரிசன கண்களையும் லக்ஷ்மியிடமும் சுஜினியிடமும் போதுவாக அறிமுகப்படுத்திவைத்தார் அந்தப் பெண்மணி. “சதீஷ்” என்ற பெயரைக் கேட்டதுமே சுஜினியின் மூளையின் ஓரத்தில் மெல்லமாக ஒரு மணி அடித்தது. “இவனை எங்கையோ பார்த்திருக்கேனே” என தோன்றவும் செய்தது. மனதில் தோன்றிய கேள்வியை கேட்கலாமா என எண்ணம்,அவனது கர்வமான முகத்தையும், அறிமுகம் செய்யும் போது, மரியாதைக்காகவேனும் கூட சிரிக்காத உதடுகளையும், அதைவிடவும் கண்களில் வெளிப்பட்ட கோபத்தையும் கண்டு கொண்ட சுஜினியால் தன் மனதின் கேள்வியை வார்த்தைகளாக வடிக்க முடியவில்லை.
சதீஷின் எண்ணங்கள் எதுவுமே நேரானதாக இல்லை. இந்த ஒருமாத காலத்திற்குள் சதீஷின் மனம் பெண் என்றாலே வெறுத்துப் போகும் அளவிற்கு மாற்றம் அடைந்திருந்தது. அன்னையின் அருகில் இதழ்பிரிக்காமல் சிரித்துக் கொண்டு நின்ற சுஜினியைக் காணக் காண காரணமே இல்லாமல் மனதில் எரிச்சல் மண்டியது. “ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாதிரி என்னா நடிப்புடா சாமி… இப்படி நடிச்சு தான சுபாவும் நம்ப வச்சு கழுத்தறுத்தா” என மனம் நினைத்ததை முகம் பிரதிபலிக்கவும் செய்தது. சுபாஷினியின் நினைவு வந்ததாலோ என்னவோ, கொஞ்சம் அவள் சாயலில் நின்றிருந்த சுஜினியின் மேல் அந்த கோபம் திரும்பியிருந்தது.
சதீஷின் கோபமுகத்தைக் கண்ட சுஜினி இன்னமும் அவள் அருகில் இருந்து நகர்ந்து தாயின் பக்கவாட்டிற்கு சென்றிருந்தாள். சுஜினியின் நெற்றி சுருக்கத்தை சதீஷ் கண்டுகொண்டானோ என்னவோ தெரியவில்லை, அருகில் நின்றிருந்த விவேக் நொடிக்கு நொடி மாற்றம் காண்பித்த அழகு முகத்தை கண்களின் வழியாக கிரகித்து, மனதிற்குள் படம் பிடித்துக் கொண்டிருந்தான். காரணமின்றி சதீஷிற்கு சுஜினியின் பால் வெறுப்பு தோன்றியதைப் போல் விவேக்கிற்கு காரண காரியங்கள் ஏதும் இன்றி சின்ன நேசம் பூத்திருந்தது.
சிறியவர்கள் ஒருவரை மற்றோருவர் எடை போட்டுக் கொண்டிருந்த இடைவெளியில் அருகில் இருந்த உணவகத்தில் பக்கமிருந்து “அண்ணா”என்று அழைத்துக் கொண்டே வெளிபட்ட சிறிய கும்பலைக் கண்டு விவேக் தானாக கழன்று அவர்களின் அருகில் சென்றிருந்தான். விவேக்கின் அன்னை, சின்னம்மா, தம்பி, தங்கைகள் என அனைவருமே விவேக்கை வழியனுப்ப விமான நிலையம் வந்திருந்தனர். அங்கிருந்த மக்களின் நவ நாகரீகத்தையும், தன் குடும்பத்தின் சாதாரண உடைகளையும் ஒப்பிட்டுப் பாராமல் விவேக்கால் இருக்கவே முடியவில்லை. ”எதுக்குமா வீண் செலவு…”என விவேக் தட்டிக் கழிக்க முயற்சித்துப் பார்த்தான். “குழந்தைக எல்லாம் ஆசை படுது விவேக்…என்னைக்காவது ஒரு நாள் தான செலவு செய்யறோம் “என்று திட்டமாகக் கூறிய அன்னையை எதிர்த்துப் பேசவும் வழிவகை தெரியவில்லை.
“அண்ணா எனக்கு நூடுல்ஸ் வேணும்” என்று ஒரு தங்கை சினுங்க, மற்றவள் “எனக்கு அந்த பார்பி பொம்மை வாங்கித் தர்றியாண்ணா” என அங்கிருந்த மிட்டாய்கடையில் விற்ற அழகு பொம்மையை கைகாட்ட, கடைசி தங்கை மீண்டும் பாத்ரூம் செல்ல வேண்டும் என மொழிய விவேக் தன் குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதில் கவனமானான். அன்னையையும் தன் குடும்பத்தாரின் கோரிக்கைகளையும் ஒன்றொன்றாக தீர்ந்து, அனைவரையும் “ப்ளைட் வியூயிங்க ப்ளாட்ஃபார்ம்” என்று அழைப்படும் விமானம் தரையிறங்கும் இடத்தினை அருகில் இருந்து காணும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்ட நடைமேடையில் டிக்கெட் எடுத்து ஒழுங்குபடுத்திவிட்டு வந்த போது “அப்பாடா” என்று பெருமூச்சு எழுந்தது.
இதற்குள் சுஜினியின் அன்னையும் சதீஷின் அன்னையும் நீண்ட காலம் பழகியவர்கள் போல் பேசிக் கொண்டிருக்க, சதீஷின் தந்தை சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். அவரது அருகில் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க சதீஷ் நின்றதைக் கண்ட விவேக், நண்பனின் அருகில் சென்று நின்று கொண்டான், “என்னடா, ஒருவழியா முடிஞ்சா….?” என விவேக்கைப் பார்த்து மொழிந்த சதீஷிடம் சிரிப்புடன் தலையசைத்தான்.
மேலும் சிறிது நேரத்தை இவ்வாறு கழித்த பின்னர், ஒருவழியாக, இவர்கள் செல்லவிருந்த துபாய் எமிரேட்ஸ் விமானத்திற்கான இமிகிரேஷன் கவுண்டர் திறக்கப்பட்டது. அம்மாவை இறுக்கமாக ஒரு முறை அணைத்து விடை பெற்ற போது, சுஜினிக்கு மனம் மிக மிக பாரமாக இருந்தது. மனதின் மீது பெரிய பாறாங்கல்லை வைத்து அழுத்தியது போல் வலித்தது. இன்னதென்று சொல்லமுடியாத சோகம் வந்து அப்பிக் கொண்டது.
லக்ஷ்மியின் முகமும் கண்களும் கவலை ரேகைகளை பரப்பிக் கொண்டிருந்தாலும், தன் மகளுடன் ஒரே கல்லூரியில் பயிலப் போகும் இருவர் வழித்துணையாக கிடைத்ததை எண்ணி, லக்ஷ்மிக்கு நிறைய ஆறுதலாக இருந்தது. மனதின் சிறிய மகிழ்க்சி வார்த்தைகளில் வெளிப்படவும் செய்தது.
அருகில் நின்றிருந்த சதீஷின் பெற்றோரிடம், “எனக்கு இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு…சுஜி தனியா இருப்பாளேன்னு நிறைய கவலை எனக்கு. இப்போ தெய்வாதீனமா உங்க பரிட்சயம் கிடைச்சிருக்கு….” என்று லக்ஷ்மி நிஜமான மகிழ்ச்சியில் மொழிய, “கவலை படாதீங்கம்மா, மூனு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருந்துக்குவாங்க….இல்லையாடா” என சதீஷின் அன்னை அருகில் நின்றிருந்த தன் மகனிடமும் விவேக்கிடம் பொதுவாக மொழிந்தார்.
“அவ்வளோ பெரிய யுனிவர்சிட்டியில யாருக்கும் யாரும் துணையில்ல…. நமக்கு நாமே தான் துணை. இவ்வளோ பயப்படறவங்க எதுக்கு பொண்ணை அமெரிக்கா அனுப்பனும். இங்கையே, கைக்குள்ளையே வச்சுக்க வேண்டியது தானே” என்று அலட்டலில்லாமல் தோளை குலுக்கிக் கொண்டு சதீஷ் மொழிய, அவன் கூறிய பதிலைக் கேட்டு அங்கு நின்றிருந்த அனைவரையுமே சங்கடப்பட்டனர். அதிலும் லக்ஷ்மியின் முகம் சட்டென சுருங்கிப் போயிற்று. அருகில் நின்றிருந்த சுஜினியின் கைகளை ஒரு தடவை இறுக்கப் பற்றிக் கொண்டார். லக்ஷ்மியின் கவலையை போக்கும் விதமாக சதீஷ் ஏதேணும் சொல்லுவான் என எதிர்பார்த்த சுலோச்சாவானல் மேற்கொண்டு எதுவும் பேச இயலவில்லை.
தன் சொற்கள் மற்றவரை காயப்படுத்தியதைக் கூட சதீஷ் உணரவில்லை. அவன் முகம் நிர்மலமாக இருந்தது.“கவுண்ட்டர் திறந்தாச்சு, போலாமா விவேக்” என்று விவேக்கிடம் மொழிந்த சதீஷ், தன் ஹேண்ட் லக்கேஜை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, “பை ப்பா, பை ம்மா…டேக் கேர்”என விடைபெற்று இமிக்ரேஷன் நோக்கி நடக்கத் துவங்கினான்.
விவேக்கிற்கு நண்பனின் செயல் வருத்தமேற்படுத்துவதாக இருப்பினும், சதீஷை கடிந்து கொள்வதைக் காட்டிலும், படபடப்புடன் நின்றிருந்த அந்தத் தாய்க்கு ஆறுதலாக சில வார்த்தைகள் சொல்வது அவசியம் என்றே தோன்றியது. “அவன் ஏதோ டென்ஷன்ல பேசறான்ம்மா, அதெல்லாம் நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க…ஒரே கேம்பஸ்ல தான இருக்கப்போறோம். அடிக்கடி பார்த்துக்குவோம்…”என்று தன் நண்பனை விட்டுக் கொடுக்காமல் மொழிந்தான் விவேக்.
லக்ஷ்மியின் கண்கள் கொஞ்சம் தெளிந்ததே அன்றி, முன்னர் இருந்த ஒளி காணாமல் போயிருந்தது. இதை விவேக் உணரத்தான் செய்தான். “இதப்பாருங்க, நானும் என் வைஃபும் இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு சதீஷைப் பார்க்கப் போவோம். அப்போ கண்டிப்பா உங்க மகளையும் பார்த்துட்டு தான் வருவோம். வீணா கவலைப்படாதீங்க”என்று சதீஷின் தந்தை பரந்தாமன் பேசிய பின்னர் லக்ஷ்மி கொஞ்சம் சமாதானமானார்.
இது போல் சட்டென உணர்ச்சிவசப்படும் பழக்கம் லக்ஷ்மியிடம் இருந்ததில்லை தான். எதையும் ஆராய்ந்து முடிவெடுக்கும் பாங்கு நிறையவே இருக்கும். இன்று தன் ஒரே ஆதரவான அன்பு மகளைப் பிரியும் ஏக்கம் மனதளவில் லஷ்மியை நெகிழச் செய்திருந்தது. சுஜினிக்கு தாய் வருந்துவதைக் காண சகிக்கவில்லை. அருகில் சதீஷின் பெற்றோர் நின்றதைக் கூட மறந்து, “அம்மா நான் பார்த்துக்கறேன்ம்மா…இவங்களை நம்பியா நான் அமெரிக்கா போறேன். விடும்மா…வீணா கவலைப்பாடாதம்மா.”என்று மொழிந்தவள், தாயை இறுக்க கட்டிக் கொண்டாள். சுஜினியின் கண்களும் கலங்கித் தான் இருந்தன. போகும் சமயம் அழுவானேன் என மனதை கட்டுப்படுத்திக் கொண்டு புன்னகைக்க முயன்றாள்.
(https://biergardenencinitas.com/)