Skip to content
Post Views: 2,884
ஏன் இப்படி வீட்டுக்குள்ள அத்துமீறி நுழைந்து கலாட்டா பண்றீங்க? வாய் பொறுக்காத தமயந்தி கேட்டு விட்டார்.
எதே கலாட்டாவா மனமேனா ? கோபம் சுர்ரென்று ஏறிவிட்டது வெங்கிக்கு.
மிரு எவரிட்டோ மாட்லாடுனாரோ தெலுஸ்கோண்டி (யாரிடம் பேசுகிறோம் என்று தெரிந்து பேசுங்க) கண்களில் சிவப்பேறிவிட்டது வெங்கட கிருஷ்ணாவிற்கு.
தயவு செய்து எங்களை விட்டுடுங்க? உங்களுக்கு ஆளு படை சேனை எல்லாம் இருக்குன்னு புரியுது. நாங்க சாதாரண குடும்பம். நீங்க அந்தஸ்துள்ள குடும்பமா தெரியறீங்க… உங்களோட சரிக்கு சரி போராட நாங்க உங்களுக்கு எதிரியில்லை… கை எடுத்து கும்பிட்டு கண்ணீருடன் நின்றார் தமயந்தி.
Advertisement
நாம மோசமானவங்க இல்லை… அவங்க பொண்ணை ராணி மாதிரி தாங்குவோம்னு சொல்லு ராம்.
நம்ம ஹரி எவ்வளவு நல்லவன் எங்கே தேடினாலும் இப்படி ஒரு மாப்பிள்ளை அவங்களுக்கு கிடைப்பானா?
அவன் அந்த பொண்ணு மேல உசுரா இருக்கான்னு தான் நாங்களே இறங்கி வந்திருக்கோம்னு அந்தம்மாக்கு சொல்லி புரிய வை…! தெலுங்கில் பொறிந்து தள்ளினார்.
Advertisement
தங்கள் அந்தஸ்திற்கு ஆயிரத்தில் ஒரு பங்குக்கு இணையில்லா பெண்ணை அவர்கள் ஏற்றுக் கொண்டது ஹரிக்காக.
Advertisement
நம் பிள்ளை விரும்பியது கிடைக்காமல் போய் விடக்கூடாது என்று தான் அவர்கள் இறங்கி வந்ததே…
ஒரு வேளை பவி கிடைக்கவில்லை என்றால் ஹரி மறுபடியும் அமெரிக்கா சென்று விடுவானோ,குடும்பத்தை விட்டு ஒரேடியாய் விலகி விடுவானோ என்ற பயம் சுப்ப கிருஷ்ணாவிற்கு வந்து விட்டது.
எக்காரணம் கொண்டும் மகனை இழக்க அவர் தயாராய் இல்லை.
Advertisement
அந்தஸ்து பேதம் அதிகம் பார்க்கும் அவர்கள் ஹரியின் காதலை மனப்பூர்வமாய் ஒப்புக் கொண்டும் தமயந்தி இவ்வளவு எதிர்ப்பது அவர்களுக்கு கோபத்தை கிளறிவிட்டது.
மா மேனகோடலு எக்கட? சிம்மமென கர்ஜித்தார் வெங்கி.
சின்நானா… ராம் அவரின் கரம் பற்றி அமைதிபடுத்த முயன்றான்.
ஹாலில் நடக்கும் பேச்சு வார்த்தை துல்லியமாய் கேட்டது பவித்ராவிற்கு.
அய்யோ யுவி… அவரோட சித்தப்பா ரொம்ப கோபக்கார மனுஷன்… என்ன நடக்கப் போகுதோ… அவளுக்கு மூச்சு முட்டி வியர்த்துக் கொட்டியது.
அக்கா நீ போய் பேசி சமாளிக்கா நான் மாமாக்கு மெசேஜ் போட்டிருக்கேன் அவர் வருவாரான்னு பார்க்கலாம்…
யுவி என்னை பார்த்தால் இன்னும் பிரச்னை வெடிக்கும்… அவங்க வீட்டுக்கு நான் போகும் போது என்னென்னவோ நடந்து போச்சு… முகம் வெளிறி போனாள்.
மாமா வீட்டுக்கு நீ போனியா? ஆச்சரியமாய் கேட்டான்.
ம்ம்ம்ம்… என்றாள் தயக்கத்துடன்.
பீதியுடன் பார்த்தான் யுவி.
“—————–“
பவித்ரா எங்கே? இந்த பெண் தான் வேண்டும் என்று நம் வீட்டு பிள்ளை தைரியமாய் கொண்டு வந்து நிறுத்தினானே…. இன்று நாம் வந்திருக்கிறோம் அந்த பெண் வெளியில் வந்து பேச வேண்டாமா? அவ்வளவு தைரியம் இல்லாத பெண்ணுக்கு காதல் எதற்கு?அணைகடந்த கோபம் வெங்கிக்கு.
இதோ பாருங்கம்மா நானூறு ஏக்கர் நிலம், ஹைதராபத்தில் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல், ஆந்திராவின் நம்பர் ஒன் மசாலாபொடி உற்பத்தி, செக்கு எண்ணெய் உற்பத்தி, ஆந்திராவிலே மிகப்பெரிய பால் பண்ணை இதெல்லாம் போக இப்போ சிறுதானியங்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி பண்ற வேலையை அடுத்த மாசம் தொடங்க போறோம்.
எங்க வீட்டுல பொண்ணு கொடுக்க உங்களுக்கு என்ன கஷ்டம்? சொத்து பட்டியலை எடுத்து விட்டார் வெங்கி ஆக்ரோஷமான குரலில்.
உங்க சொத்து பத்து உங்களோட…. நாங்க அப்படியே நாக்கை தொங்க போட்டு அலையுறோமா? என்பது போல அலட்டளின்றி நின்றார் தமயந்தி.
தமயந்தியின் அழுத்தம் வெங்கியை வெகுவாக எரிச்சல் படுத்தியது.
அனந்த்பூர் மாவட்டத்துல போலில் ஸ்டேஷன், கோர்ட் எல்லாமே நாங்க தான். பொறுமையா நான் பேசறேன்னு நீங்க ஈஸியா எடை போடாதீங்க… விளைவுகள் மோசமா இருக்கும். நந்தமூரி வம்சத்துல யாரும் குரல் தாழ்த்தி பேசி பழக்கம் இல்லை…. ஆத்திரம் அடங்காது மீசையை முறுக்கி தொடையில் தாளம் தட்டினார் வெங்கி.
அண்ணே என்னண்ணே இதெல்லாம்? தமயந்திக்கு பயம், நடுக்கம் அழுகை எல்லாம் சேர்ந்து வந்தது.
என்ன பேசி அவர்களை சரி கட்டுவது என்று புரியாமல் மனிதர் அல்லாடி நின்றார்.
எல்லாம் கை மீறி போய் கொண்டிருப்பதாக நம்பிய மணவாளன் சூழ்நிலையின் போக்கை புரிந்து கொண்டார். எப்படியும் பவி அவர்கள் வீட்டு மருமகள் தான். அவர்கள் விடப்போவாதில்ல , இனி ஆவது ஆகட்டும் பவித்ரா திருமணம் ஒரு முடிவுக்கு வரட்டும் என்ற திடத்துக்கு வந்து விட்டார். அவரால் வேறு என்ன செய்து விட முடியும்?
“—————“
என்ன பேச்சு சத்தம் பலமா இருக்கு என்று கேட்டை திறந்து கொண்டு வெளியில் வந்த ஜெயலட்சுமி வாசலில் நிற்கும் விலை உயர்ந்த காரை கண்டதும் மூக்கு வேர்த்து ஓரகத்தி வீட்டுக்குள் நுழைந்து விட்டார்.
அங்கே தமயந்தியும் மாணவாளனும் பேயடித்தார் போல் நிற்க அந்நிய நபர்கள் மூவர் அதிகாரத் தோரணையோடு அமர்ந்திருந்தனர். சுசிலாவும் யுவராஜும் பார்வையாளர்களாக பயம் தேங்கிய கண்களுடன் நின்றிருந்தனர். பவியும் காயுவும் மிஸ்ஸிங். அனைத்தையும் ஓரிரு நொடியில் உணர்ந்து கிரகித்து கொண்டார் அதிமேதாவி ஜெயலட்சுமி.
நீங்க உங்க முடிவை சொல்ல வேண்டாம் எங்களுக்கு அது அவசியமும் இல்லை… பவித்ரா தான் மா மேனகொடலு (எங்க மருமகள் )
யாருங்க நீங்க….? எங்க வீட்டுக்குள்ள வந்து எங்களையே மிரட்டறீங்க…? ஜெயலட்சுமி அதிகாரமாய் ஆரம்பித்தார்.
ஜெயா கொஞ்சம் அமைதியா இரு! அதட்டினார் மணவாளன்.
ஒன்னும் சரியா படல அண்ணே… இவங்க ஆளுங்களும் பேச்சும் சரி இல்லை சொல்லிட்டேன்…. நாம எதுக்கு பயப்படணும்?
ஹலோ யாரு சரியில்லை…. நாங்க யாரு தெரியுமா? கோபத்துடன் எழுந்து விட்டான் தேவ் சரண்.
நீ பெரிய இவனா? ஜெயலட்சுமி சவடால் பேச… இவ்வளவு நேரம் பொறுமையாய் பேசிக் கொண்டிருந்த வெங்கிக்கு வந்ததே கோபம்…
ஏய்….. நாற்காலியை உதைத்து தள்ளிவிட்டு எழுந்து அரிவாள் இல்லாத அய்யனார் போல் ரவுத்திரம் கொண்டு நின்றார்.
டேய் யாருடா நீங்களாம்? கட்டிளங்காளை சரவணன் உள்ளே நுழைந்து வெங்கியின் சட்டை காலரை பற்றி உலுக்கினான்.
தன் தாயிடம் எகிறும் அவர்களை அடக்கி விட துடிக்கும் வாலிப வேகம் அவனுக்கு.
எப்போதும் போதி மர புத்தனாய் இருக்கும் ராம் சரணுக்கு வெடித்து வந்தது கோபம்.
டேய் யாரோட சட்டையை பிடிக்குற….? அலேக்காக அவன் கழுத்தில் கை கொடுத்து தூக்கி விட்டான்.
அய்யோ வேண்டாம் விட்டுடுங்க ப்ளீஸ்…. ஓடிவந்து ராம்சரணிடம் கை கூப்பி மன்றாடினாள் பவித்ரா.
வதினா… ராம் சரணின் கரம் தன்னால் தளர்ந்தது.
சரோ நீ போ… நடுக்கத்துடன் கண்களை மூடி திறந்தாள்.
இதி எவரு? கடுமையாய் முறைத்தான் தேவ்.
என்னோட அண்ணா… பெரியப்பா மகன்.
ஓ…. என்றான் அசாதாரணமாய்.
யாரு பவி இவங்க…? மூக்கு விடைக்க புஜங்கள் இறுகி நின்றான்.
அவள் அமைதியாய் நிற்க…. இவளை பொண்ணு கேட்டு வந்திருக்காங்க… ஆந்திராகாரனுங்க போலிருக்கு. வேண்டாம்னு சொல்லிட்டோமே அப்புறமும் எதுக்கு தொல்லை பண்றானுங்க… மகன் கழுத்தை பிடித்து விட்ட கோபம் ஜெயலட்சுமிக்கு.
நிஜமாம்மா…? பல்லை கடித்தான் சரவணன்.
ம்ம்ம்ம்…. என்றார் கடுப்புடன்.
ஏன்டா உங்களுக்கு எவ்வளவு தெனாவட்டு இருந்தா எங்க ஊருக்கே வந்து எங்க வீட்டுக்குள்ள நுழைந்து என் வீட்டு பொண்ணை கேட்டு அதிகாரம் பண்ணுவீங்க? ராம்சரணின் கழுத்தை இவன் பற்றி தூக்க….
டேய் என் தம்பி கழுத்தை …. அடிவயிற்றில் இருந்து குரல் எழுப்பி அவன் பிடரியை பற்றி பின்புறமாய் தூக்கி வீசினான். ஆம் தூக்கி தான் வீசினான் ஹரிசரண்.
ஹரியை கண்ட உடனே அவ்விடத்தில் பேரமைதி.
என் பிள்ளை மேல கை வச்சவன் எவன்டா…? பரமசிவம் வந்து விட்டார்.
நான் தான்! அவர் எதிரில் நிமிர்ந்து நின்றான் ஹரி.
நீ என்ன பெரிய கொம்பனா? உனக்கு பொண்ணு கொடுக்கிற ஐடியா இல்லைன்னு சொல்லி அனுப்பின பின்னும் கலாட்டா பண்ற? ஹரியை அடிக்க கை ஓங்கினார்.
ஓங்கிய கரத்தை இறுக்கி பிடித்தவன் என் அம்மாயிக்கு உறவுங்கிறதுனால அமைதியா விடறேன்…. கண்களில் பொறி பறந்தது அவனுக்கு.
எங்களுக்கு இதெல்லாம் தேவையா? எம்புள்ள கழுத்தை பிடிக்கிறான் ஒருத்தன் என் புருஷன் கையை ஒடிக்கிறான் ஒருத்தன்…. நீங்க எல்லாரும் சுத்தி நின்னு வேடிக்கை பார்க்கிறீங்க?
எனக்கு என்னவோ அவன் மட்டும் விரும்பி வந்து பொண்ணு கேட்கறதா தோணல…! கத்திரிக்காய் முத்தினா கடைத் தெருவுக்கு வந்து தான் ஆகணும்….
பொண்ணு சம்மதம் இல்லாம எப்படி ஒருத்தன் இவ்வளவு துணிச்சலா குடும்பமா வந்து நிற்பான்? நமக்கு ஏன் பொல்லாப்பு…. சரோ நீ வா… நீ ஏன் நிற்குற? உனக்கும் தான் சொல்றேன்.. வா நம்ம வீட்டுக்கு போவோம் கணவனை முறைத்து ஜெயலட்சுமி காட்டு கத்தலாய் கத்தி தீர்த்தார்.
அவ்வளவு வெறுப்புடன் மகளை பார்த்தார் தமயந்தி.
எல்லாவற்றுக்கும் காரணம் இவள் தானே என்ற கோபம் அவரை வெகுவாய் தாக்கியது.
எனக்கு இந்த ஹரியை தான் பிடித்திருக்கிறது என்று இந்த பெண் வாயை திறந்து சொன்னால் தான் என்ன? கடும் அதிருப்தி வெங்கட கிருஷ்ணாவிற்கு.
இதெல்லாம் தேவையா? எதுக்கு இந்த புடலங்காய் காதல் என்பது போல் அவ்வளவு கடுப்புடன் பார்த்தார் ஹரியை.
சின்னயனா நீங்க ஏன் இங்கே வந்தீங்க? தேவ், ராம் நீங்க ஏண்டா இவரை கூட்டிட்டு… தலையில் கை வைத்துக்கொண்டான்.
அவர் எங்கே எங்க பேச்சை கேட்டார்… எடு வண்டியைன்னு படுத்தி எடுத்துட்டார் . உனக்கு எத்தனை கால் பண்ணி இருக்கோம் பார்…! தேவ் கடு கடுத்தான்.
உண்மை தான் முப்பதுக்கும் மேற்பட்ட தவறிய அழைப்பு பதிவாகி இருந்ததே…
ஹோட்டல் அறையில் நுழைந்த உடனே மொபைலை சைலன்ட் மோடில் வைத்துவிட்டு அயர்ந்து உறங்கி விட்டான். இரவெல்லாம் கண் விழித்து கார் ஓட்டி வந்த அலுப்பு அவனுக்கு.
மூன்று மணி நேரம் தன்னை மறந்து அயர்ந்து கண்ணயர்ந்தவன் இயற்கை உபாதையில் கண் விழித்து மொபைலை பார்த்தவன் யுவராஜ் போட்டிருந்த மெசேஜை பார்த்து விழுந்தடித்து ஓடி வந்துவிட்டான்.
வாங்க சின்னயனா கிளம்பலாம்…!
எது கிளம்பலாமா? இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சுக்கிட்டு போகலாம் உறுதிபடக் கூறினார்.
தேவ் கூட்டிட்டு கிளம்பு முகம் கடுத்தான்.
விளையாடறியா? நம்ம தகுதி தராதரத்துக்கு நம்ம எவ்வளவு இறங்கி வந்திருக்கோம் தெரியுமா?
இந்த அம்மாயிக்காக இவ்வளவு போராடறோம்… இந்த அம்மாயி வாயை திறக்கலையே… கொதித்து விட்டார் வெங்கி.
அவங்களுக்கு கொஞ்சம் டைம் கொடுப்போம்!
எது டைம் கொடுக்கணுமோ?
நந்ததமூரி வம்சத்துல பிறந்தவன் பேசற பேச்சா? நம்ம போய் ஒருத்தரிட்ட இறங்கி பேசுறதா?
சின்னயனா புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்!
வெங்கியின் மொபைல் அலறியது.
ஹலோ சிடுசிடுப்புடன் காதில் வைத்தார்.
டேய் வெங்கி போன விஷயம் என்னாச்சு? சுப்ப கிருஷ்ணா ஆர்வம் மேலிட கேட்டார்.
ஸ்பீக்கரை ஆன் செய்த வெங்கி அண்ணையா இங்கே சூழ்நிலை சரியில்லை என்றார்.
அய்யோ சின்னயனா என்ன பண்றீங்க? தலையில் அடித்துக் கொண்டான் ஹரி.
நடந்தது அனைத்தும் அவர் சொல்லி முடிக்க…
டேய் நான் வரேன்னு சொன்னேன் நீ தான் என் ஹெல்த் கண்டிஷனை காரணம் காட்டி வேண்டாம்னு சொன்ன…?
என் பிள்ளைக்கு பெண் கொடுக்க மறுப்பாங்களா? வெங்கி தூக்கிட்டு வாங்கடா நம்ம வீட்டு மருமகளை வெறி கொண்ட சிங்கம் கர்ஜித்தது.
அய்யோ போதும் இங்கே எந்த கூச்சலும் கலவரமும் வேண்டாம் தயவு செய்து எல்லாரும் போயிடுங்க! கண்ணீர் மல்க துவண்டு சரிந்து மண்டியிட்டாள் பவித்ரா.
நடக்கும் நிகழ்வுகளை கண்டு உள்ளம் நொந்த தமயந்தி நீ அவங்களோட போயிடு என்று மகளை பார்த்து கை காட்டினார்.
———–தொடரும் —-
error: Content is protected !!