Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

யாதுமாகி ♥️25

யாதுமாகி #25

 இயல்பான அவன் கோபத்தை பார்த்து இருந்தாலும், அவனது ருத்ராவதாரம் கண்டு நடுங்கி போனாள்.

அழுகவே பிடிக்காதவள், அதிகம் அழுது பழக்கம் இல்லாதவள் மணநாள் அன்றே மாலை மலையாய் கண்ணீர் உகுத்தாள்.

 ஏனோ வாழ்க்கையே வெறுத்துப் போனது. இந்த நொடி அவளுக்கு எதுவும் முக்கியம் என்று தோன்றவில்லை.



Advertisement

 சிட்டுக்குருவியாய் சிறகடித்தவளின் சிறகுகள் பிய்த்து எறியப்படுவதாய் உணர்ந்தாள்.

ஒருபோதும் குரல் உயர்த்தியோ கோபம் கொண்டோ பெற்றவர்கள் பேசியதில்லை. ஆசைப்பட்டு கேட்ட எதையுமே வாங்கிக் கொடுக்க அவர்கள் மறுத்ததில்லை.

 அவள் பிறந்த வீட்டில் நேற்று வரை குலதெய்வமாய் கொண்டாடினார்கள்.இன்று அவள் புகுந்த வீட்டில் ஐந்தறிவினதும் கீழாக பார்க்கப்படுவதை ஜீரணிக்க இயலாமல் கைத்தவறிய கண்ணாடி பாத்திரம் போல் நொறுங்கி நின்றாள்.

Advertisement

பிரம்மைக் கொண்டு நிற்பவளைக் கண்டு உள்ளம் உடைந்து போனான் அவள் கண்ணாளன்.

Advertisement

 எத்தனை குறும்பும்,நகைப்புமாய் துள்ளி திரிந்தவள்…ஒரு நாளே தாக்கு பிடிக்க முடியாமல் இப்படி நூல் இருந்த பட்டம் போல் அலைகழித்து தள்ளாடி நிற்கிறாளே…. தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.

 அப்பா என்று ஓடிப்போய் அவர் தோளில் தலை சாய்த்து வாய் விட்டு அழ வேண்டும் போல் இருந்தது அவளுக்கு.

எல்லா மகள்களையும் போல் அவளும் தாயை விட தந்தைக்கு மிகுந்த செல்லம். வேதா சற்று கண்டிப்போடு இருந்தாலும், மகள் என்றால் உருகி விடுவார் வெங்கடாசலம்.

Advertisement

 தான் தவமாய் தவமிருந்து பெற்ற செல்ல மகளின் வாழ்க்கை விஷ்ணு வீட்டில் மகிழ்ச்சியாக இருக்காது என்று எண்ணியே வெங்கடாசலம் இத்திருமணத்தை எதிர்த்தார்.

 அப்பா மறுத்ததன் காரணத்தை ஒரே நாளில் புரிந்து கொண்டு உள்ளுக்குள் ஓலமிட்டாள் .

 வாழ்நாள் முழுமைக்கும் எண்ணி எண்ணி பொக்கிஷமாய் பொத்தி ரசிக்க வேண்டிய முதல் நாள் இப்படி கண்ணீரும் கம்பளையும் ஆய் போகிறதே…வேதனை கொண்டவன் ஜன்னலோரம் ஒண்டி நின்று கண்ணீர் உகுக்கும் தன் உள்ளங்கவர் காதல் மனைவியை கண்டு கடைக்கண் கசிந்தவன், மெல்ல நடந்து சென்று அவள் தோள் பற்றி தன் உயிர் கூட்டிற்குள் அணைத்து பொத்திக் கொண்டான்.

 கோபமாய் சிலிப்பிக் கொண்டவள் திமிரி எதிர்ப்பை காட்ட முயல… முடிந்தால் தானே அந்த அசுரனை விலக்க…

 நிற்காது சுரக்கும் விழி நீரோடு நிமிர்ந்து அவன் முகம் நோக்க…வழிந்தோடும் அவள் விழி நீருக்கு அணைக்கட்டும் விதமாக மென்மையாய் முத்தமிட்டான் அவள் விழி நீரின் தடத்தில்.

 அவள் பார்த்து பிரம்மித்த அவள் கதாநாயகன் உயிர் உருக்கும் காதலை கு mழைத்து சிறு பார்வை கண் சுருக்கி பார்த்தான்.

தொய்ந்து அவன் தோளில் சாயந்தாள்.

தனக்காக ஜென்மம் கொண்ட தன் செல்ல மனையாளை கைகளில் ஏந்தி கட்டிலில் படுக்க வைத்தான்.

 சாரிடி செல்லம் என்று அவள் கரம் பற்றி தன் மார்பில் வைத்துக் கொண்டான்.

நீ எனக்காக தானே என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டே…. உனக்காக நான் இருக்கேன். எப்போதும் இருப்பேன்!

 யார் பேச்சையும் மனசில் ஏத்திக்காதே சரியா? உனக்கு புதுசா சொல்ல எதுவும் இல்லை, உனக்கே எல்லாம் தெரியும்!அவள் கரம் கோர்த்து அழுந்த பற்றி ஆறுதல் படுத்தினான்.

 அவள் வாயை திறப்பேனா என்று கண்மூடி, முகம் இறுகி அவன் அணைப்பில் கிடந்தாள்.

நேத்ரா,ப்ளீஸ் பேசும்மா…அவள் கன்னம் பற்றி குலுக்கினான்.

ம்ஹூம்…அவள் தரப்பில் இருந்து மௌனம் தொடரவே… நேத்ரா இந்த நாள் பற்றி எனக்கு நிறைய கனவுகள் இருக்கு! சொல்லிக் கொண்டிருந்தவன் அழுந்த அவள் மெல்லிதழில் தன் வன்னிதழை பதித்தான்.

 அவள் வீரா வேசமாய் விலக முற்பட,அவன் மேலும் இதழை இறுக்கி அவள் நகர இயலாதவாறு தன்னோடு சேர்த்து வளைத்து பிடித்துக் கொண்டான்.

 அவன் ஆக்ரோஷ அணைப்பில் உள்ளுக்குள் கரைபுரளும் காதலை அதட்டி ஓரங்கட்டி வீம்புக்காய் கோபத்தை தொடர்ந்தாள்.

சிரித்தபடி எழுந்தவன் அவள் இதழில் ஒரு இன்ஸ்டன்ட் முத்தம் பதித்து குறுகுறுவென பார்க்க… அவள் முக சிவப்பை மறைக்கப் படாத பாடுபட்டாள்.

 நேத்ரா என்னை பாருடி! அவள் சிற்றிடையின் சிறு மடிப்பில் விரல் நுனி கொண்டு மென்மையாய் தீண்டினான்.

அவன் தீண்ட, அவளும் மோகம் தூண்ட…அவள் சிலிர்த்து நகர… அள்ளி மடிமீது தூக்கி அமர்த்திக் கொண்டான்.

 நேத்ரா இங்கே பாருன்னு சொன்னேன்!நீ பார்க்கலைன்னா என்னென்னவோ பண்ணுவேன்.கிசு கிசுப்பாய் அவள் காதில் ஓதிக்கொண்டே கழுத்தின் பின்பகுதியை வருட…அவன் விரல் ஊர்ந்து ஏற்படுத்திய கிளர்ச்சியில் அவள் பெண்மை சிலிர்த்து வெட்கம் வெடித்து வெளிப்பட லஜ்ஜையுடன் அவன் முகம் நோக்கினாள்.

உனக்கு இப்போ ஓடிப்போய் உங்க அப்பா தோளில் சாய்ந்து அழனும் போலிருக்கும். உங்க அம்மா மடியில் படுக்கணும் போலிருக்கும்.

நீ அழவேண்டுமா? சிரிக்கணுமா?ஆறுதல் தேடணுமா?நான் இருக்கேன்.

இனி உனக்கு அம்மா, அப்பா ஃபிரண்ட்,லவ்வர்,ஹஸ்பண்ட் எல்லாமே நான் தான்.

 இத்தனை பிரச்சனைக்கு மத்தியிலும் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதே என் மீது நீ கொண்ட காதல் ஜெயிக்கணும்னு தான்!

நீயும் நானும் வாழ நாம ரெண்டு பேரும் அனுசரித்து வாழ்ந்தால் போதும். மற்றவங்க பேச்சை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

 உனக்கும் எனக்கும் இடையில் எதுவுமே வரக்கூடாது. பேசிக்கொண்டே அவள் முகம் நிமிர்த்தி முத்தம் ஒன்றை பதித்தான் அவள் பட்டு கன்னத்தில்.

 அவளோ காதல் ஒழுகும் பார்வையால் விழியகட்டி அவனை பார்க்க…நேத்து என்னடி இப்படி பார்க்குற? அவனுக்கு வெட்கத்தில் ஒரு மாதிரி கூசியது.

அவள் இன்னும் ஆழமாய் உறிஞ்சும் பார்வை பார்க்க…என்னடி இது லுக்கு? வெட்கப்பட்டு அவள் கண்களை பொத்தினான்.

 நான் பார்ப்பேன் என் உரிமை என்பது போல் அவள் இன்னும் இன்னும் ஆழமாய் பார்க்க…

 இது வேலைக்கு ஆகாது என்றவன் அவளை இழுத்துக் கொண்டே தலையணையில் சாய்ந்தான்.

என்னை விடுங்க… வேண்டுமென்றே சிணுங்கினாள்.

என்னது விடறதா? அவளை கேலியாய் பார்த்தான்.

 கொஞ்ச நாளைக்கு இதெல்லாம் வேண்டாம்! அவள் தலை கவிழ்ந்து முணுமுணுத்தாள்.

எது கொஞ்ச நாளா?நோ சான்ஸ்..ஆல்ரெடி லேட்! முப்பது ஆகுது எனக்கு.முக சுழிப்புடன் வார்த்தைகளை துப்பினான்.

 அதுக்கு…அவள் இன்னும் கொணட்டினாள்

அதுக்கு நீ உன் வயசுக்கு ஈக்குவலா ஒருத்தனை பார்த்திருக்கணும்! என் பிரெண்ட்ஸ் எல்லாம் அப்பா ஆகிவிட்டாங்க.அவன் பாவம் போல் பேசினான்.

அதுக்கு நீங்க ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணி இருக்கணும்!

அதுக்கு நீ ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடியே வந்து லவ்வை சொல்லி இருக்கணும். குறும்பாய் கண் சிமிட்டி அவள் வளைகரம் வளைத்து தன்னோடு சேர்த்து போர்வைக்குள் புதைந்தான்.

 வேண்டாம் வேண்டாம் என்று சிலுத்துக் கொண்டவள் அவனுள் மெல்ல மெல்ல கலந்து கரைந்து போனாள்.

“——————–”

 அதிகாலை பறவைகளில் சத்தம், தோட்டத்து மரங்களில் இருந்து கிரீச்சிட…அயர்ந்து கிடந்தவள் எழ முயல…அவன் விடுவதாய் இல்லை.

 இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமே… அழகாய் சிணுங்கினான்.

 நீங்க தூங்குங்க!நான் குளிச்சிட்டு வரேன் என்று அவனை விளக்கினாள்.

அவள் விலக்க, அவன் இறுக்கி அணைக்க…ச் சீ விடுங்க ஐந்தரை ஆகுது என்றாள்.

நீயெல்லாம் லவ் மேரேஜ்னு சொல்லிடாதே…கேட்கிறவங்க கேவலமா பார்ப்பாங்க.அவள் இதழை இம்சித்து அவளை மீண்டும் போர்வைக்குள் இழுத்துக்கொண்டான்.

ஐயோ உங்களால தான்… இப்போ டைம் பாருங்க 7:55 ஆச்சு.தலையில் அடித்துக் கொண்டவள் அவசரமாய் ஓடிப்போய் ஒரு காக்கா குளியல் குளித்து நைட்டியுடன் வெளியில் வந்தவள் கபோர்டு திறந்து பலாசோவும் டீ சர்ட்டும் கையில் எடுக்க…முறைப்புடன் தலையில் அடித்துக் கொண்டான் விஷ்ணு.

 ஏய் இரு இரு…என்னடி பண்ற? அவளை செல்லமாய் முறைத்தான்.

என்ன பண்றேன்? புரியாமல் கேட்டாள்.

 ஏய் புடவை கட்டிட்டு போடி! அவள் தலையில் செல்லமாய் தட்டினான்.

 புடவையா? வீட்டிலா? அவள் முகம் விழுந்துவிட்டது.

 நம்ம ரூமில் எந்த டிரஸ் வேணும்னாலும் போட்டுக்கோ போடாம கூட …அவன் இதழ் கடித்து கண் சிமிட்ட…

ச்சீ போங்க…காதை திருகினாள்.

நேத்ரா கீழ போறதுனா புடவை கட்டிட்டு போ, இல்லைனா சுடிதார் போட்டுட்டு போ.

 அவளால் எதுவும் பேச முடியவில்லை.எப்போதும் வீட்டில் அவள் உடை த்ரீ போர்த் பேண்ட்டும், டீசர்ட்டும் தான். வெளியில் போவதென்றால் ஜீன்ஸ்,குர்தா.

முகம் வாடி சிறுத்துப் போனவன் எளிமையான ஆகாய நீல வண்ணம் கொண்ட ஷிபான் புடவை உடுத்தி அவசரமாய் கீழே வந்தாள்..

 மகாராணிக்கு சீக்கிரமே விடிஞ்சிடுச்சு போலிருக்கே…?அவள் கடைசி படியில் கால் வைக்கும் முன்னே வந்து விழுந்தது ஜோதியின் ஏகடிய வார்த்தைகள்.

எதுவும் பேசாது மாடிப்படியின் கைப்பிடியை பற்றிக் கொண்டு நின்றாள்.

நல்லா சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்காங்க! மீண்டும் அவர் வார்த்தை என்னும் சாட்டையை சொடுக்க…

 மங்களம் நேத்ராக்கு காபி கொண்டு வா!என்று பேச்சை திசை திருப்பினார் வேணு.

 நேத்ரா நீ போய் விளக்கேத்தி சாமி கும்பிட்டு வா தங்கம் என்றார் அன்னம்.

ஜோதி அறிவோட பேசுறியா? கொஞ்சமாவது இங்கிதம் இருக்கா? நேத்து கல்யாணம் ஆன பொண்ணுகிட்ட இப்படி சிடுசிடுகிற…இப்போ அவ காலங்காத்தால எழுந்து வந்து என்ன பண்ண போறா? சின்னஞ்சிறுசுக கொஞ்ச நாளைக்கு அப்படி இப்படித்தான் இருக்கும்.மருமகளிடம் கண்டிப்பாய் பேசிக்கொண்டிருந்தார் அன்னம்.

அதில் எல்லாம் உங்க பேரன் பொண்டாட்டி விபரம் தான். ஒரே ராத்திரியில் மந்திரம் போட்டு அவனை மடக்கி பிடிச்சிடுவா! என்ற ஜோதியின் அருவெறுப்பான பேச்சு பூஜை அறையை விட்டு வெளியே வந்த நேத்ராவின் காதில் தெள்ளத் தெளிவாக கேட்க…உடல் கூசி கண்களில் நீர்முட்ட சிலையாக நின்றாள்.

ஜோதியை வெட்டி கொன்றுவிடும் கோபம் அவளுக்கு. ஆயினும் அமைதியாய் நின்றாள்.

ஜோதி வாயை மூடு சொல்லிட்டேன். அன்னம் பெருங்குரலில் அதட்ட… மாடியில் இருந்து இறங்கி வந்த விஷ்ணுவை கண்டவுடன் மாமியாரும் மருமகளும் அமைதியாக நின்றனர்.

பூஜை அறை வாயிலில் நின்ற நேத்ராவை கண்டவன் அவளையே பார்த்தபடி நின்றான்.

அவள் நிற்கும் நிலை கண்டு யூகித்துக் கொண்டான். தன் தாய் மாமியார் புத்தியை காட்டி இருக்க கூடும் என்று.

 நேத்ரா ஏம்மா அங்கேயே நின்னுட்ட? வா சாப்பிடலாம் என்றார் அன்னம்.

எதுவும் பேசாது மௌனமாக நின்ற நேத்ராவின் கரம் பற்றி அழைத்து வந்தான் விஷ்ணு.

 மகனின் செய்கையில் ஜோதிக்கு பற்றி கொண்டு எரிந்தது.

இட்லி, சாம்பார், வடை,கேசரி என்று மங்களம் புது மணமக்களுக்கு மணக்க மணக்க உணவு பரிமாற…இட்லியை பிட்டு சாம்பாரில் தோய்த்த நேத்ராவை பார்த்து,உனக்கு சமைக்க தெரியுமா? என்றார் ஜோதி.

 கொஞ்சம்,கொஞ்சம் தெரியும் என்றாள் உள்ளடங்கிய குரலில்.

 என்னது கொஞ்சம் கொஞ்சம் தெரியுமா? தலையெழுத்து… உன்னை போய் தேடிப்பிடித்து கட்டிக்கிட்டு வந்திருக்கான் அவனை சொல்லணும். சத்தமாகவே முணு முணுக்க… விஷ்ணு கோபமாய் தாயை முறைதான்.

 சூழ்நிலை உணர்ந்த அன்னம் அது படிச்சுக்கிட்டு இருந்த புள்ள அதுக்கு எங்க சமையல் கத்துக்க நேரம் இருந்திருக்கும்? நம்ம வினி கூட கல்யாணம் பண்ணிக்கிட்டு போய் தான் சமையல் கத்துக்கிட்டா… இதெல்லாம் ஒரு பிரச்சனையா? என்று சூழ்நிலையை இலகுவாக்க முயன்றார்.

 நேத்ராவிற்கு பரிந்து கொண்டு வரும் மாமியார் மீது கட்டுக்கடங்காத கோபம் கரை புரண்டது ஜோதிக்கு. அதை காட்டிக் கொள்ள முடியாமல் அவசரமாய் சாப்பிட்டார்.

நேத்ராவிற்கு தொண்டைக் குழியில் நின்ற கேசரி இனிக்கவில்லை. இரண்டு இட்லி ஒரு வடை அரை மணி நேரமாய் சாப்பிட்டாள்.

“——————”

நேத்ரா ஏன் ஒழுங்கா சாப்பிடல? அவளை தன் தோள் மீது சாய்த்துக் கொண்டு கை வளையல்களை விரலால் தள்ளி விளையாடிக் கொண்டே பேசினான் விஷ்ணு.

 அவள் எழ முற்பட…அவள் கரம் பற்றி மடியில் சாய்த்துக் கொண்டவன், நேத்ரா சாப்பிடும் போது மிளகாய் கறிவேப்பிலை எல்லாம் ஒரு ஓரமாய் ஒதுக்கி வச்சியே…அதே மாதிரி சில பேச்சை ஒதுக்கிடனும். அதுக்கு எல்லாம் இம்பார்ட்டன்ஸ் கொடுத்தா டிப்ரஷன் தான் அதிகமாகும்.

எங்க அம்மா பேசினது தப்புதான். நான் அவங்களை சத்தம் போட்டிருந்தா நீ தலையணை மந்திரம் போட்டுட்ட உன் பேச்சைக் கேட்டு ஆடறேன்னு குறை சொல்லுவாங்க.

 இதெல்லாம் உடனே மாறாது. ஆனா கொஞ்சம் கொஞ்சமா மாறும்!சிக்கலான வாழ்க்கை முறை இது. எனக்காக கொஞ்ச காலம் பொறுத்துக்கோ! சுமூகமா ஏதாவது செய்வோம்.

அவன் பேசிக்கொண்டிருக்க போன் அழைத்தது. நேத்ரா உங்க அப்பா மறு வீடு அழைக்க வந்திருக்காராம் கிளம்பு போகலாம்!என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

“——————”

 நான்கு வகை பொரியல், கூட்டு, குழம்பு, வடை பாயசம் என்று அருமையான விருந்து படைத்து அசத்தினார் வேதம்.

முகம் வாடிக்கிடந்த மகளைக் கண்டவர் அவளையே கூர்ந்து நோக்க…என்னம்மா அப்படி பார்க்கிற? சிரமப்பட்டு இதழ் விரித்தாள் நேத்ரா.

அங்கே பரவாயில்லையாடா? மகள் தலை கோதினார்

 துளிர்த்த கண்ணீரை உள்ளுக்குள்ளே இழுத்து அடக்கிக் கொண்டவள் ஒன்னும் பிரச்சினை இல்லைமா… நல்லா இருக்கேன் என்றாள்.

இது அவளே தேடிக்கொண்ட வாழ்க்கை அவளால் எப்படி புகுந்த வீட்டை பற்றி குற்றப்பத்திரிகை வாசிக்க முடியும்?

மாலை நேரம் மாப்பிள்ளைக்கு சூடாக கேரட் அல்வா, கார பூந்தியுடன் பூஸ்ட் கலந்து கொண்டு வந்தார் வேதம்.

சூடான அல்வாவை காலி பண்ணியவன்… அத்தை நாங்க ஒரு ஆறு மணி போல கிளம்பனும் என்றான்.

 என்ன இது இன்னைக்கேவா? வேதம் வருத்தமாய் பார்க்க…

நாளைக்கு வெள்ளிக்கிழமை குலதெய்வம் கோயிலில் நேத்ரா பொங்கல் வைக்கணுமாம் பாட்டி சொன்னாங்க.அடுத்த முறை வரும்போது தங்குற மாதிரி வரறோம் என்றான்.

 இதுவரை கொஞ்சம் புன்னகை பூசி இருந்த நேத்ராவின் முகம் வெளிறி போனது.

வேதம் மகளுடன் அனுப்ப வேண்டிய பலகாரங்களை பார்வையிட சென்று விட்டார்.

என்ன நேத்ரா ஒரு மாதிரி இருக்க? அக்கறையாய் வினவியவன் அவள் மடிமீது உரிமையாய் சாய்ந்தான்.

நா…நா.,கொஞ்சநாள் இங்கே இருந்துட்டு வரேனே என்றாள் கண்ணீரை அடக்கியபடி.

என்ன கொஞ்ச நாளா? நமக்கு நேத்து தான்டி கல்யாணம் ஆச்சு! தீயாய் முறைத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!