இந்த உலகிலே மிகவும் வருந்தக்கூடிய விஷயம் என்னவென்றால், நாம் ஒரு சரியான பாதையில் சென்று கொண்டிருப்போம். ஆனால், அது திடீரென ஒரு வித்தியாசமான பாதையாக, புதுமையான வழியாக, யாருமே பயன்படுத்தாத மார்க்கமாக இருந்தால் சாதாரண பார்வையாளர்களுக்கு அது ஓர் அர்த்தமற்ற விஷயமாகவே தோன்றும்.
இதற்கான முதன்மை காரணம், நமது மனித மனது தான். நம்மில் பலர் ‘மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும்’ என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் யோசிப்போம். ஆனால், அதே மாற்றத்தை ஏற்கும் நிலை வரும்போது, அதை நாம் எந்த அளவு ஏற்றுக்கொள்வோம்?
இதற்கு ஒரு சிறந்த உதாரணம் கூற வேண்டும் என்றால், அது நிக்கோலா டெஸ்லா ( Nikola Tesla ) என்ற விஞ்ஞானியே. இவரது அறிவும் திறமையும் அபாரமாக இருந்தாலும், அவருக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவர் உயிரோடு இருக்கும்போது அவரது கருத்துக்கள் அனைத்தும் வேடிக்கையாகவே பட்டது. ஆச்சரியம் என்னவெனில் அவரது AC(Alternating current) சிந்தனை, அப்பொழுது ஏற்கப்படாவிடினும் இப்பொழுது அதையே நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
அவருக்கு அங்கீகாரம் கிடைக்காததற்கு முக்கிய காரணமாக கருதப்படுபவர் Thomas Alva Edison. டெஸ்லாவின் கண்டுபிடிப்பான AC, தன்னுடைய DC-யைக் காட்டிலும் சிறந்ததாக இருப்பினும், அதற்கு எதிராக பிரச்சாரம் செய்தார். இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த போட்டியை, அப்போதைய விஞ்ஞானிகள் ‘War of Currents’ என்றழைத்தனர்.
அவரது கடைசி காலத்தில் கம்பியில்லா மின்சார கடத்தல் என்பது வெறும் கனவாகவே இருந்தது. அவர் 1943 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். ஆனால் 1990-க்கு பின்னரே, அவரது சிந்தனைகள் பிரபலமடைந்தன.
இதிலிருந்து நாம் யோசிக்க வேண்டிய விஷயம், மாற்றம் ஏற்பட வேண்டுமா? அல்லது மாற்றத்தை ஏற்கும் மனம் வேண்டுமா?
******
இப்படி ஒரு சூழ்நிலையில் தான் நந்தினி இருந்தாள். அவளது ஐ.க்யு.( IQ) அதிகமாக இருந்தால், அவளால் மற்றவர்களுடன் சகஜமாகப் பழக முடியவில்லை. தனது பெற்றோரையும் தனது நண்பன் ஒருவனையும் தவிர அவளுக்கு இந்தக் கிரகமே (பூமியே) அந்நியமாகத் தோன்றியது.
ஆனால் ஏனோ அவளுக்கு அதைத் தன் பெற்றோரிடம் கூறி, அவர்களைக் கலவரப் படுத்த விருப்பமில்லை. அதனால், தன்னை சுற்றியே ஒரு வட்டம் போட்டுக்கொண்டு வாழத் தொடங்கினாள்.
நந்தினியின் இயந்திரத்தனமான வாழ்க்கையும் ஒரு ஆடவனால் உடைத்தெறியப்பட்டது. அவன் தான் ஆரியன். அவனைப் பார்க்கத்தான் நந்தினி அவன் வீட்டிற்கு வந்திருந்தாள்.
அவ்வீட்டில் பெண் பிள்ளை இல்லாத சுந்தரம் – ஜெயந்தி தம்பதியருக்கு அவள் தான் எப்போதும் செல்லக் கடைக்குட்டி.
“ஆன்ட்டி, இன்னிக்கு என்ன ஸ்பெஷல்? எங்க அந்த தடிமாடு?” என்று ஜெயந்தியிடம் கேட்டபடியே, சமையல் மேடையில் ஏறி அமர்ந்தாள் நந்தினி.
“வாம்மா நந்தினி, காலேஜ் முடிஞ்சிட்டா? என்ன நேரா இங்க வந்துட்ட? இன்னிக்கு ஃப்ரைட் ரைஸும் டொமேட்டோ சாஸும் தான். கொஞ்சம் வெயிட் பண்ணுமா. ஆரியன் இன்னும் வீட்டுக்கு வரல. நீ வேணும்னா அவன் ரூம்ல ஏதாச்சும் புக் படிக்கிறியா?” என்று கேட்டார், அவள் விருப்பம் அறிந்து.
நந்தினியும், “சரி ஆன்ட்டி” என்று கூறி விட்டு ஆரியனின் அறைக்குள் சென்றாள்.
ஆரியன் 26 வயது இளைஞன். பெங்களூரில் ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் சைக்யாட்ரி படித்து முடித்து விட்டு தற்போது ISRO-வில் ஒரு தற்காலிக பணிக்குத் தனது திறமை மூலம் தேர்ச்சி பெற்றிருக்கிறான்.
அவன் வார நாட்களில் அங்கிருக்கும் குவாட்டர்ஸில் தங்கி விட்டாலும், வார இறுதியில் சரியாகத் தன் பெற்றோரைப் பார்க்க வந்து விடுவான்.
நந்தினி, ஆரியன் அறையில் சுவருடன் ஒட்டியிருந்த அந்த புக் செல்ஃபை பார்த்தாள். ஆரியனும் நந்தினியைப் போல் ஒரு புத்தக பிரியன். அதிலிருந்து தனக்கு பிடித்த புத்தகமான டான் பிரவுன் எழுதிய ‘ ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ்’ என்ற புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினாள்.
என்னதான் அவள் பார்வை புத்தகத்தில் இருந்தாலும், அவளது நினைவுகள் ஆரியனை முதன் முதலாகச் சந்தித்த நாளை நோக்கிச் சென்றன.
அப்பொழுது நந்தினி பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். நந்தினி சிறு வயதில் கனவுகளைக் கண்டு பயந்தாலும், வளர்ந்த பின்னர் அதை பெரிதாக கண்டு கொள்ளாமல் அவற்றை ஒதுக்க கற்றக்கொண்டாள். ஆனால், தற்போது அவளின் சிந்தனை ஓட்டம் மிகவும் அதிகமாகி, மனதுக்குள் டிப்ரஷன் ஏற்பட ஆரம்பித்தது. ஒருநாள், அனைத்தும் எல்லை மீறி ஹிஸ்டீரியா வந்தது போலக் கத்த ஆரம்பித்து விட்டாள்.
ஏற்கனவே ஜெயந்தியும் துர்காவும் தோழிகளாக இருக்க, நந்தினியின் அலறல் சத்தம் கேட்டு ஜெயந்தியும் ஆரியனும் ஓடிவந்து பார்த்தனர். பின் அவளின் நிலையைப் புரிந்து கொண்டு, ஆரியன் உடனே தனது கல்லூரியில் பணியாற்றும் ஒரு திறமையான பேராசிரியரைத் தொடர்பு கொண்டு வரவழைத்தான். அவரும் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து உடனே அங்கு வந்து சேர்ந்தார்.
வந்தவர் முதலில் தன் அனுபவத்தின் மூலம் நந்தினிக்கு சில மருந்துகளைக் கொடுத்து அமைதிப்படுத்தினார். அவள் தெளிந்த பின்னர் தன்னை வந்து ஒரு நாள் சந்திக்குமாறு கூறிச் சென்றார்.
துர்கா, இத்தனை வருடங்களாக நன்றாக இருந்த பெண் மறுபடியும் உடல்நிலை சீர்குலைவு ஏற்பட்டு இப்படியாகவும் வாய்விட்டு அழுதாள்.
ஆரியனுக்கு ‘இதில் வேறு ஏதோ ஒன்று உள்ளது’ என்று சந்தேகமாக இருப்பினும், “ஆமாம் ஆன்ட்டி, அவளுக்கு ஸ்டடி ஸ்ட்ரெஸ்ஸாகக் கூட இருக்கலாம், கவலைப்படாதீங்க” என்றான்.
அவர்கள் எவ்வளவு சமாதானம் செய்தாலும், நந்தினியைப் பற்றிய முழு உண்மையையும் அறிந்த துர்காவிற்கு மனதில் பயம் சூழ்ந்துக் கொண்டது.
அவர்களிடம் சமாதானம் அடைந்தது போல காட்டிக் கொண்டாலும், கண்ணன் வந்ததும் அவனிடம் நந்தினியைப் பற்றிய தன் அச்சத்தைக் கூறினாள் துர்கா. கண்ணன் கவலை அடைந்தாலும் நேரே நந்தினியைப் பார்க்கச் சென்றான். அவள் அப்போது அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
“நாம இன்னொரு தடவை அந்தப் பேராசிரியர பார்த்துட்டு வரலாம், துர்கா. அப்புறம் இந்த பிரச்சனையைப் பத்தி யோசிச்சு முடிவு செய்யலாம்” என்ற கண்ணன், நந்தினி மயக்கம் தெளிந்து இயல்பான பின் அவளிடம் இயல்பாக பேசினானே ஒழிய வேறு எதைப் பற்றியும் கேட்டுக்கொள்ளவில்லை.
ஆனால் பேச்சோடு பேச்சாக துர்கா மட்டும் அவளுக்கு, “நந்துமா, இது தான் ஆரியன். இது அவங்க அம்மா ஜெயந்தி. இவங்க நமக்குப் பக்கத்து வீட்டுல தான் இருக்காங்க” என்று அறிமுகப்படுத்தி வைத்தார். நந்தினி தயங்கியவாறே அவர்களுடன் பேசத் தொடங்கினாள்.
கண்ணனின் துரிதத்தில் அந்த ஞாயிற்றுக்கிழமையே நந்தினி அந்தப் பேராசிரியரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது, அவளுக்கு அவர் யார் என்று தெரிவிக்கப்படாமல்.
அவரை ஒரு குடும்ப நண்பராக ரெஸ்டாரண்டில் அறிமுகப்படுத்தினார் கண்ணன். அவரும் பேச்சுவாக்கில் அங்கிருந்து மீன் தொட்டியைப் காண்பித்து, “நந்தினி, உனக்கு அந்த மீன்கள பாக்கும்போது என்ன தோணுது? பார்க்க ரொம்ப அழகா இருக்குல?” என்று நறுவிசாகக் கேட்க,
நந்தினியோ,” இல்லை, எனக்கு அது எப்படி தண்ணீல மிதக்குதுன்றது தான் பிடிச்சிருக்கு. அதுக்கு காரணம், அந்த மீனுக்கு எடை இருந்தாலும், அது தன்னோட ஃபின்ஸை வேகமாக அசைத்து காற்றை தேவைக்கேற்ப உள்ளிழுக்கும் வேகத்தையும் வெளியிடும் வேகத்தையும் மாற்றிக் கொள்வதால் தான். அதனால் தான் அந்த மீனால் நீந்த முடியுது.
இந்த ஐடியா வச்சு தான் Submarines-உம் வேலை செய்யுது. நமக்கு பார்க்கவும் அழகா தெரியுது. எனக்கு இப்போ என்ன தோணுதுனா, அந்த மீன் மாதிரி நம்மளாலும் நம்பளோட உடலமைப்ப மாத்த முடிஞ்சா, நம்பளாலயும் காத்துல பறக்க முடியும்ல !!” என்றாள்.
அவளின் இவ்விடையில் திகைத்துப் போன பேராசிரியர், அவளிடம் மேலும் சில கேள்விகள் கேட்க அவளும் சாதாரணமாகவே பதிலளித்துக் கொண்டிருந்தாள்.
மற்றவர்கள் மட்டும், அவள் பேசியதை வினோதமாகப் பார்த்தார்கள். சீக்கிரமே தன்னை சுதாரித்துக்கொண்ட பேராசிரியர், “சபாஷ் நந்தினி ! உனக்கு அபாரமான அறிவு இருக்கு. நீ வருங்காலத்துல பெரிய ஆளா வரதுக்கு என்னோட வாழ்த்துக்கள்” என்று இயல்பாக கூறினார்.
அவள் வெட்கப் புன்னகையோடு, “தாங்ஸ் அங்கிள்” என்றாள்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆரியன் தனது பேராசிரியரைச் சந்தித்தபோது, அவர் கூறிய விஷயம் அவன் தலையில் பெரும் இடியாய் வந்து இறங்கியது. அவனால் அதனை நம்பவே முடியவில்லை.
பட்டாம்பூச்சி போல சுற்றித்திரியும், அந்த சிறு மலருக்கா இப்படி ஒரு பிரச்சினை. அவன் நந்தினி ஒரு கிளியுடன் பேசுவதைக் கண்டு பலமுறை ஆச்சரியம் அடைந்துள்ளான். அதிலும் அப்போது அவள் முகம் காட்டும் பலவித பாவனைகளையும் பார்த்து வியந்துள்ளான்.
இப்போது அது ஞாபகம் வரவே, “கூடாது, அவளுக்கு இனிமே எந்தப் பிரச்சினையும் வர விடக் கூடாது” என்று அவளை அந்தப் பிரச்சினைகளிலிருந்து மீட்பதையே அன்றிலிருந்து தன் கடமையாக்கிக் கொண்டான் ஆரியன்.
அதன் முதல் கட்டமாக அவளுடன் ஒரு தோழனாகப் பழகி, அவள் தன் அறிவை வளர்த்துக் கொள்வதற்காக தனது புத்தகங்களைக் கொடுத்து, அவளது சிந்தனையை சிதறவிடாமல் ஒரு நேர் கோட்டில் பயணிக்கச் செய்தான். மேலும், அவளை நுழைவுத்தேர்வு எழுத ஊக்கமளித்து அதிலும் அவளை வெற்றி பெறச்செய்தான்.
அவன் காட்டும் பாசத்தை விட பன்மடங்கு அவன் மேல் அன்பு வைத்திருந்தாலும், அதை அவ்வளவு சீக்கிரத்தில் வெளிக்காட்டுபவள் அல்ல நந்தினி.
நந்தினி, தேர்வில் வெற்றி பெற்ற பின் IISc-இல் (INDIAN INSTITUTE OF SCIENCE) தனக்குப்பிடித்த இயற்பியல் பிரிவில் சேர்ந்தாள். அங்கேயே UG முடித்து தற்போது PG- யும் படித்துக் கொண்டிருக்கிறாள்.
இவையெல்லாம் ஆரியனின் அறையில் தற்போது கையில் புத்தகத்துடன் நின்று கொண்டிருந்த நந்தினிக்கு ஒரு தொடர்நாவல் போல் சிந்தையில் ஓடிக் கொண்டிருந்தது… ஆம்… அந்தச் சத்தம் கேட்கும் வரை….
கிரகம் : கயா
ஆயிற்று… இன்றுடன் இருபத்து மூன்று ஆண்டுகள் …
அதாவது, கயா கிரகத்தில் கொடூரர்களின் ஆதிக்கம் தொடங்கி இருபத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன என்று கூற வேண்டுமோ?
சற்று கூர்ந்து பார்த்தால், அந்தக் காட்டில், இரு கயா கிரக வாசிகள் பதுங்கி பதுங்கி செல்வது தெரிந்தது. சிறிது தூரம் கடந்த பின், இருவரும் தைரியமாக பேசத் தொடங்கினர்.
முதலாவது வீரன், ”இன்னும் ஓராண்டு தான் இருக்கிறது. அதற்குப் பிறகு, நாம் ப்ரொமேத்தியஸின் பிடியிலிருந்து தப்பித்து சுதந்திரமாக வாழலாம்” என்றான்.
இரண்டாவது வீரன், “எனக்கு செலினா மேலிருந்த நம்பிக்கையே போய்விட்டது. ஓராண்டு என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த முறையும் ப்ரொமேத்தியஸ் வெற்றிபெற்று விட்டால்? எனக்கு நினைக்கவே பயமாக இருக்கிறது” என்றான்.
“கவலைப்படாதே, இந்த முறை நாம் முழு பலத்துடன் போரிட்டால், நிச்சயம் வெற்றி பெறுவோம். நமது படைத்தலைவர் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா ?” என்று கேட்டான் முதலாம் வீரன்.
“அவர் மேல் இருக்கும் நம்பிக்கையில் தான், வெலாரிஸ் கோட்டையில் வேலை செய்துக் கொண்டே, உளவு வேலையையும் பார்க்கிறேன். ஆனால், இருபத்தி மூன்று ஆண்டுகளுகாக சோல் பாக்ஸ் மூடப்பட்டுள்ளது. படை பெரிதாக இருந்தாலும், நம் அனைவருக்கும் சக்தி தேவைப்படும் அல்லவா ?” என்றான் இரண்டாம் வீரன்.
“இந்த முறை அனைத்தும் நல்ல முறையில் முடிந்துவிட வேண்டும் என்று எண்ணுவோம். என்னதான் சென்ற முறை ப்ரொமேத்தியஸ் வெற்றி பெற்றாலும் அவனுக்கு சோல் பாக்ஸின் சாவி கிடைக்கவில்லையே. அதனால், இந்த முறை அவனாலும் முழு சக்தியுடன் போராட முடியாது. அந்த வகையில் செலினா செய்தது சரியே” என்றான் முதலாமவன்.
“என்னவோ போ, ஏதோ பொசய்டன் இருப்பதால் இந்த மட்டும் தப்பித்து விட்டோம்” என்று பதிலளித்தான் இரண்டாமவன்.
இடம் : வெலாரிஸ் கோட்டை
ப்ரொமேத்தியஸ் தனது சிற்றரசர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தான். இதில், எதிலும் கலந்து கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் பொசய்டன்.
“பேரரசே! நம்மிடம் உள்ள சக்திகள் எல்லாம் இன்னும் சில மாதங்களில் தீர்ந்துவிடும். அதிலும், நாம் எதிர்பார்க்கும் படி இந்த ஆண்டில் போர் ஏற்படுமானால், அதற்கு நமக்கு பெரிய அளவில் சக்திகள் தேவைப்படும். அதன் பிறகும் சோல் பாக்ஸின் சாவி நமக்குக் கிடைக்கவில்லை என்றால், அது நம் அனைவருக்கும் பெரிய பிரச்சனையாக மாறும்” என்றான் சிற்றரசர்களுள் ஒருவன்.
“நான் இங்கே உங்கள் அனைவரையும் உட்கார வைத்திருப்பது பிரச்சனையைக் கூறுவதற்கு மட்டுமல்ல, அதற்கான தீர்வை கூறவும் தான்” என்றான் ப்ரொமேத்தியஸ்.
அனைவரும் அமைதியாயிருக்க பொசய்டனைப் பார்த்தான் ப்ரொமேத்தியஸ். அவரும் தலை குனிந்து நிற்க, அவன் சிறிது நேரத்திற்குப் பின் தனது திட்டத்தைக் கூற ஆரம்பித்தான். அதைக்கேட்ட பொசய்டனே ஒரு நொடி ஸ்தம்பித்துப் போனார்.
ப்ரொமேத்தியஸ் இதுவரை பல தீய காரியங்கள் செய்து இருப்பினும், அதெல்லாம் இதனுடன் ஒப்பிடும்போது மிகச் சிறியதாகவே தெரிந்தது அவருக்கு.
சிற்றரசர்களோ ‘எப்படியும் ப்ரொமேத்தியஸ் இதைச் செய்யாமல் விடப்போவதில்லை, நாம் இல்லாவிட்டாலும் வேறு யாராவது அதைச் செய்யத்தான் போகிறார்கள்’ என்று எண்ணி ப்ரொமேத்தியஸ் கூறியதை செயல்படுத்தச் சென்றனர்.
*******
கிரகம்: பூமி
தனது காதருகில் கேட்ட சத்தத்தால், தனது சிந்தனை ஓட்டத்திலிருந்து தெளிந்தாள், நந்தினி. பின்னால் திரும்பிப் பார்த்தபோது, அங்கு ஆரியன் சிரித்தபடி நின்றிருந்தான்.
அவனைக் கண்டவுடன் பொய் கோபத்துடன் , “ஹலோ, மிஸ்டர்! கொஞ்சம் கூட மேனர்ஸே கிடையாதா? இது ஆரியன்னு ஒரு எருமையோட ரூம். அதுகிட்ட கேட்காம நீங்க எப்படி உள்ள வரலாம்?” என்று கேட்டாள் .
அதற்கு அவன், “நந்து, என்னாச்சு? எங்கேயாச்சும் கிரிக்கெட் விளையாடப் போறேன்னு போயி தலையில அடிப்பட்டுருச்சா? நான் தான்டி, ஆரியன்” என்றான்.
அவன் நெஞ்சில் குத்தி விட்டு, “அதெல்லாம் அடிக்கடி வந்து பார்த்தா தான் ஞாபகம் இருக்கும். அது சரி, சார் பெரிய இடத்துக்கெல்லாம் வேலைக்குப் போறீங்க, என்ன எல்லாம் ஞாபகம் இருக்குமா?” என்றாள்.
அவளைத் தாஜா செய்வதற்கென்றே, அவன் தான் வாங்கி வந்திருந்த ஸ்வீட் பாக்ஸை அவள் கையில் திணித்தான்.
அதை அவள் பார்த்த பின்னர், “இதை தானடா முன்னாடியே கொடுத்திருக்கணும்? பாரு இவ்வளவு டைம் வேஸ்ட்?” என்று சளித்துக் கொண்டு உண்ணத் தொடங்கினாள்.
“நல்லவேளை, இவ ஒரு உணவியா ( Foodie) இருக்குறதால, அம்மா இவ வந்துருக்கான்னு சொன்னதும் இதை வாங்கிட்டு வந்துட்டோம்” என்று நினைக்கும் பொழுது, எதிரில், ‘எரிமலை இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கப் போகிறது’ என்ற நிலையில் இருந்தாள் நந்தினி.
அவளைக் கண்டதும் தான், தான் மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து வாய்விட்டு பேசியதை அறிந்தான் ஆரியன். அவன் முகத்தில் தோன்றிய உணர்ச்சி கலவையைப் பார்த்து சிரித்துவிட்டாள் நந்தினி.
பின்னர், ஆரியன் “எப்படி இருக்க நந்து? காலேஜ் எல்லாம் எப்படி போகுது? என்ன திடீர்னு சொல்லாம கொள்ளாம வந்துருக்க? ஏதாவது பிரச்சனையா?” என்று அக்கறையாகக் கேட்டான்.
“எனக்கென்ன குறைச்சல்? யாருக்குமே புரியாத யாருமே ஒத்துக்காத தியரிய எல்லாம் நான் பாட்டுக்கு கிறுக்கித் தள்ளிட்டு இருக்கேன். இன்னும் ஒரு வருஷத்துல காலேஜும் முடிஞ்சுடும். அதுக்கப்புறம் வேற பிளான் வச்சிருக்கேன், பாப்போம். நீ போன வீக்கெண்ட் வீட்டுக்கு வரலேல? அதான் உன்ன பாக்க நானே வந்துட்டேன்” என்றாள் .
“இல்ல நந்து, பழைய பிரச்சனை எதுவும் மறுபடியும் வரலேல?” என்று தயங்கியபடியே கேட்டான் ஆரியன்.
“தடிமாடு, அதான் நீ என்ன யோகா கிளாஸ்ல சேர்த்து விட்டிருக்கல்ல? அப்புறம் என்ன? அதெல்லாம் கடைசியா வந்து நாலைந்து வருஷம் ஆகிடுச்சு” என்றாள் நந்தினி.
“சரி அதெல்லாம் இருக்கட்டும், ஏதாவது காரியம் இல்லாம நீ வரமாட்டியே என்னன்னு சொல்லு?” என்று சரியாக அவளை எடை போட்டான் ஆரியன்.
“இல்லடா ஏதோ ISRO-ல இருந்து யாரோ ஆதித்யனாம், அவர் எங்க காலேஜ் ஃபங்க்ஷனுக்கு சீஃப் கெஸ்ட்-ஆ வரப் போறாராம். அதான் அப்படியே அவரைப் பத்தி கேக்கலாம்னு வந்தேன்..” என்று மெதுவாக இழுத்தாள் நந்தினி.
“ஏய் அவர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? ரொம்ப டேலண்டெட் பெர்சன். IIST-ல படிச்சிட்டு நேரா இஸ்ரோ-ல சேர்ந்து இருக்கார். அவர் திறமைக்கு அவர் நாசா-ல முயற்சி செய்திருந்தாலும் கிடைச்சிருக்கும். ஆனா, அவர் இந்தியால தான் வேலை பார்க்கணும்னு ஒரு முடிவோட இருக்கார்” என்றான் ஆரியன்.
“வர்ணனைகள் எல்லாம் ரொம்ப அதிகமா இருக்கே. சரி அது இருக்கட்டும் . அன்னைக்கு ஒரு காம்பட்டீஷன் நடத்துறாங்க. செமினார் மாதிரி. அதான் கேட்டேன்” என்று தலையைச் சொரிந்தாள் நந்தினி.
அதில், “அப்போ நீயும் எங்க கூட சேர்ந்து தான் வேல பாக்கப் போறேன்னு சொல்லு” என்று சந்தோசத்தில் உலறி விட்டான் ஆரியன்.
“ஆரி, இப்ப நீ என்ன சொன்ன?” என்று நந்தினி கேட்டவுடன், “ஐயோ உலறிட்டோமே” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவன், வெளியே,
“இல்ல நந்து, நீ செமினார் எடுக்க போற, இதுல நீ உன் திறமையை நிரூபிச்சா ஒருவேளை உனக்கு ஸ்பான்ஸர்ஷிப் கிடைக்கலாம். நீயும் உன்னோட ப்ராஜக்ட்ஸுக்கு இப்படி ஒரு வாய்ப்ப தான தேடிக்கிட்டு இருக்க?” என்று சமாளித்து வைத்தான் ஆரியன்.
“ஓ அப்படி சொல்ல வரியா? அதெல்லாம், நான் கிறுக்கிக் கிறுக்கி வச்சிருக்கேன். பாப்போம், நீ சொல்ற மாதிரி நடக்கனும்னு தான் எனக்கும் ஆசை” என்றாள் நந்தினி.
“சரி, ஆன்ட்டி எனக்கு கீழ சாப்பாடு ரெடி பண்ணி வச்சுருப்பாங்க. நான் போய் சாப்டுட்டு வரேன். நீயும் ஃபிரஷ் ஆகிட்டு வா. சாப்டுட்டு அப்படியே மூமூவையும் பார்த்துட்டு வரலாம்” என்று கூறிவிட்டு சமையலறைக்குச் சென்றாள் நந்தினி.
இங்கு ஆரியனோ அப்பாடா தப்பித்தோம் என்ற மனநிலையில் இருந்தான்.
அவனும் ஆதித்யனும் சென்னையில் ஒன்றாகப் பள்ளியில் படித்த நண்பர்கள். ஆரியனின் தந்தைக்கு வேலை மாற்றல் வந்ததால், வேறு மாநிலத்திற்குப் போக வேண்டிய நிலை ஏற்பட்ட போது தான் ஆரியனின் குடும்பம் பெங்களூருக்குக் குடியேறியது. மீண்டும் இஸ்ரோ-வில் அவனைச் சந்தித்தபொழுது இருவருக்குமே அதிர்ச்சிதான். பிறகு, அவர்களது நட்பு இன்று வரையிலும் தொடர்ந்து வருகிறது.
ஒருநாள் ஆதித்யன் ஐஐஎஸ்சி-க்கு போகப் போவதாக சொல்லவும், நந்தினியைப் பற்றி ஆரியன் கூறியிருந்தான். அவளது திறமையையும் , அதனால் அவளுக்கு ஏற்பட்ட பாதிப்பையும், அவளது கனவுகளைப் பற்றியும் கூறியிருந்தான்.
அதைக்கேட்ட ஆதித்யன், “ஓகே, நீ சொல்ற மாதிரி அந்த பொண்ணுக்கு அவ்வளவு திறமை இருந்தா, என்னால முடிஞ்ச உதவிய நான் செய்றேன். ஆனால், அதுக்கு முன்னாடி அவளோட டேலன்ட்ட நான் டெஸ்ட் பண்ணனும்” என்றான்.
நந்தினி மேல் இருந்த நம்பிக்கையால் எப்படியும் நந்தினி சாதித்து விடுவாள் என்று நம்பினான் ஆரியன்.
கிரகம்: கயா
அந்த மயானம் பரந்து விரிந்த வானம் போல் எல்லை இல்லாமல் இருந்தது. ஆனால், அந்த வானத்திற்கும் இந்த இடத்திற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். வானவெளியில் எண்ணற்ற விண்மீன்கள் இருப்பது போல, இங்கு எண்ணற்ற விமானங்கள் இருந்தன. அந்த விமானத்தின் அருகில் கயா கிரக வாசிகள் சில பேர் வேகவேகமாக பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர்.
சிற்றரசர்களும் அங்கங்கு கட்டளையிட்டு வேலைகளைத் துரிதமாக்கிக் கொண்டிருந்தனர். இவை அனைத்தையும், தூரத்தில் இருந்த ஒரு சிறிய மலையிலிருந்து ப்ரொமேத்தியஸும் பொசய்டனும் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.
பொசய்டனுக்கு ப்ரொமேத்தியஸ் இட்ட ஆணையே இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. “சிற்றரசர்களே! நீங்கள் கூறியபடி நம்மிடம் உள்ள சக்திகளைக் கொண்டு இந்தப் போரினை வென்று விட முடியாது. அதனால், அனைவரும் விமானங்களைத் தயாராக்குங்கள். ஒவ்வொரு விமானத்திலும் நமது ஆட்கள் 100 பேர் இருக்க வேண்டும். அந்த விமானங்களை இந்த அண்ட சராசரத்தில் உள்ள ஒவ்வொரு கிரகத்திற்கும் அனுப்பப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு கிரகத்தில் இருந்தும் 500 உயிரினங்களைக் கடத்தி வாருங்கள். அவர்களை வைத்து நாம் எப்படி வெல்வது என்பதை நீங்கள் திரும்பி வருவதற்குள் நான் கண்டுபிடித்து வைக்கிறேன்” என்றான்.
ப்ரொமேத்தியஸ், பொசய்டன் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து அவரைத் திரும்பிப் பார்த்தான். அவன் பார்வையில் ஏளனமும் வெற்றி பெற்ற தலைக்கனமும் செறிந்திருந்தது.
“என்ன பொசய்டன் இந்த முறை நான் தோல்வியைத் தழுவுவேன் என்று மிகவும் எதிர்பார்த்தீரோ? நான் ப்ரொமேத்தியஸ், பொசய்டன். என்னை யாராலும் அழிக்க முடியாது, 22 ஆண்டுகளாக நீங்கள் அனைவரும் கொண்டாடிய உங்கள் தெய்வத்தையே நான் ஓடி ஒளியச் செய்திருக்கிறேன். இந்த முறை கன்வர்ஜென்ஸ் வரும்போது, எனக்குத்தான் வெற்றிகிட்டும். அதற்குப் பிறகு உங்களை நான் கவனித்துக் கொள்கிறேன்” என்றான் ப்ரொமேத்தியஸ்.
“நீங்கள் செய்வது மிகப் பெரிய தவறு, பேரரசே. இவ்வாறு செய்வது பல்வேறு பிரச்சனைகளை கயா கிரகத்திற்கு உண்டாக்கும். நம்மைப்போல் இல்லாவிடினும் சில கிரகங்கள் அறிவியலில் வளர்ந்துள்ளன. நாம் இப்படிச் செய்வது மற்ற கிரகங்களுக்கு நம்மை நாமே வெளிப்படுத்திக் கொள்வது போலாகும். அதுமட்டுமின்றி, இதனால் ஒவ்வொரு கிரகத்திலும் உள்ள உயிரின சமன்பாடு சீர்குலையும்” என்றான் பொசய்டன்.
“உன் அறிவுரை எனக்குத் தேவையில்லை, பொசய்டன். உனக்காக நான் வேறொரு பணியை ஏற்பாடு செய்திருக்கிறேன்” என்று கோபமாக சொன்னான் ப்ரொமேத்தியஸ்.
பொசய்டன் அவனைக் கேள்வியுடன் நோக்க, அவன் தன் கையில் இருந்த ஒரு பழைய பார்ச்மென்ட்-ஐ எடுத்து நீட்டினான். அதைப் பிரித்துப் பார்த்த பொசய்டனின் கண்கள் வியப்பால் விரிந்தன. அதில் இரு டிராகன்கள் இருப்பது போல முத்திரை இருந்தது. அதை தவிர வேற எந்தக் குறியீடுகளும் இல்லை.
ஏனெனில், பல நூற்றாண்டுகளுக்கு தொன்மமாகக் கருதப்படும் ‘ஈரின்’ கல்லை அடைவதற்கான பார்ச்மென்ட் அது.
அந்தக் கல் செலினா கயா கிரக வாசிகளின் நல்வாழ்விற்காக அளித்தது. ஆனால், எழுவர் வழி வந்தவர்கள் அந்தக் கல், தீயவர்கள் கையில் சிக்கக்கூடாது என்பதற்காக அதனை மறைத்து வைத்து அதற்கு பல்வேறு பாதுகாப்புகளை உருவாக்கினர் என்பது தொன்மம்.
அந்தக் கல், ஒரு உண்மையான, நல்ல எண்ணம் கொண்ட கயா கிரக வாசிக்கு உதவி தேவைப்படும் பொழுது கிடைக்கும் என்பது கயா கிரக மக்களின் நம்பிக்கை.
ஆனால், இப்பொழுது அதை தனது கண்ணால் பார்த்த பொசய்டன் வியப்பின் உச்சிக்கே சென்றார் என்று கூறினால், ஆச்சரியப் படுவதற்கில்லை.
“இனி, தாங்கள் புறப்படுவதற்குத் தயாராகலாம் பொசய்டன். அடுத்த முறை, நாம் சந்திக்கும் பொழுது, நீங்கள் ஈரின் கல்லுடன் வர வேண்டும் என்று கயா கிரகத்து பேரரசனான ப்ரொமேத்தியஸாகிய நான், உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்” என்றான்.
அவனது உத்தரவை மறுக்க இயலாத நிர்பந்தத்தில் இருந்த பொசய்டன் கோபத்துடன் அங்கிருந்து சென்றார்.