Skip to content
Post Views: 937
அத்தியாயம் – 8
அந்த இடத்தின் அமைதியைத் துரத்தும் வண்ணம் , ஆதித்யன் , “ அத்தை எங்க இருக்காங்கன்னு எனக்கு தெரியும் ” என்றான் .
ஸ்ரீநிவாசனும் சிவகாமியும் , அவனை அதிர்ச்சியோடு பார்க்க ஸ்ரீதர் , அவனிடம் வேகமாக வந்து , “ ஆதி , சொல்லுப்பா … என் தங்கச்சி எங்க இருக்குறா ? எப்படி இருக்குறா ?” என்று உலுக்கினார் .
Advertisement
ஆதித்யன் எதுவும் பேசாமல் , தன் திறன் பேசியைத் திறந்து அவரிடம் காண்பித்தான் . அதைப் பார்த்ததும் அவர் கண்களில் நீர் பெருகியது . உடனே அதை , தனது பெற்றோரிடம் சென்று காட்டினார் . அதில் நந்தினியின் பிறந்த நாளன்று கண்ணன் மற்றும் துர்காவோடு சேர்ந்து எடுத்த நிழற்படம் இருந்தது.
அவர்களுக்கு முதலில் அதிர்ச்சி ஏற்பட்டு , பின் அது மகிழ்ச்சியாக மாறியது . அந்த நிழற்படத்தைத் தான் ஆதித்யன் முந்தைய நாள் இரவு ஆரியனிடம் கேட்டுப் பெற்றிருந்தான் .
அவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் பொழுதே சித்ராவும் அவர்களுடன் இணைந்து கொண்டார் . கணவனின் இத்தனை வருடத்துத் தன்னிரக்கம் அகன்ற மகிழ்ச்சி அவருக்கு .
Advertisement
நிலைமையை மாற்றச் சிவகாமி தான் , “ ஆமா , ஆதி . உனக்கு எப்படித் தெரிய வந்துச்சுனு நீ சொல்லவே இல்லையே ? ” என்று கேட்டார் .
Advertisement
ஆதித்யனும் தான் , முதல் நாள் நந்தினியைச் சந்தித்தது , பின் அவள் அத்தையைப் போல் இருந்தது கண்டு சந்தேகித்தது , அதனை உறுதி செய்து உண்மையை அறிய சென்னை வந்தது , என அவளிடம் இருக்கும் மர்மத்தை பற்றி மட்டும் கூறாமல் , மற்ற அனைத்தையும் கூறினான் .
அதனை அனைவரும் ஆச்சரியத்தோடு கேட்க , சிவகாமியோ , “ பார்த்தியா என் பேத்திய ? இந்த சின்ன வயசுல எவ்ளோ அறிவாளியா இருக்கான்னு . அப்படியே அவங்க அம்மாவ உரிச்சு வைத்த மாதிரி இருக்கா . ஆனா , இவ்வளவு வருஷம் எப்படி இந்த விஷயத்தை நம்மகிட்ட மறைக்கணும்னு அவளுக்கு தோணுச்சு ? ” என்று மகிழ்ச்சியுடன் ஆரம்பித்து வேதனையுடன் முடித்தார் .
“ நடந்து முடிஞ்சத நினைச்சு கவலைப்படாதே சிவா ! எது நடக்கணும்னு இருக்கோ , அது நன்றாக நடக்கும்னு கீதையில் படிச்சதில்லையா ? அது மாதிரி தான் இதுவும் . ஆனா , இப்போ நம்ம பொண்ணோட நம்ம பேத்தியும் சேர்ந்து கிடைச்சருக்கானு சந்தோஷப்படு ” என்று மனைவியைத் தேற்றினார் ஸ்ரீநிவாசன் .
Advertisement
நிழற்படத்தைப் பார்த்து கொண்டிருந்த சிவகாமி , “ எல்லோரும் கிளம்ப ஆரம்பிங்க ! என் பொண்ணு எங்க இருக்கான்னு தெரிஞ்சும் என்னால பொறுக்க முடியாது ” என்றார் .
“ பாட்டி இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்னு எதையும் செய்ய முடியாது . நாம எப்படி திடீர்னு அவங்க முன்னாடி போய் நிக்கிறது ? இது எனக்கு சரியா படல . அதனால , ஆரி கிட்ட இன்னும் கொஞ்சம் விவரம் கேட்டுட்டு , அதுக்கப்புறம் அவங்கள பொறுமையாக பாக்கலாம் ” என்றான் ஆதித்யன் .
“ போடா , நீ என்ன வேணும்னாலும் செய்துக்கோ . ஆனால் , நான் இன்னைக்கு என் பேத்திய பாத்தே ஆகணும் ” என்றார் சிவகாமி .
ஸ்ரீநிவாசனும் ஸ்ரீதரும் எதுவும் கூறவில்லை என்றாலும் அவர்களின் முகமும் சிவகாமி கூறியதையே பிரதிபலித்தது .
“ ஆமா, ஆதி . நாம கிளம்பலாம் . நீ எதையும் சொல்லாம இருந்தாலாச்சும் , அமைதியா இருக்கலாம் . ஆனா , இப்போ .. கண்டிப்பா பாட்டிய தடுத்து நிப்பாட்ட முடியாது ” என்றார் சித்ரா .
சிறிது நேரம் யோசித்த ஆதித்யன் , தனக்கு வேறு வழி இல்லாததை உணர்ந்து , “ சரி எல்லோரும் ரெடி ஆகுங்க . நான் ஃப்ளைட்ல டிக்கெட் எப்ப இருக்குன்னு செக் பண்றேன் ” என்றான் .
கிளம்பி விடலாம் என்று உரைத்தது தான் தாமதம், அனைவரும் விரைவாகக் கிளம்ப ஆரம்பித்தனர் . ஆதித்யன் ஆரியனை அழைத்து அனைத்து விஷயத்தையும் கூறினான் .
ஆரியனுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை . நந்தினிக்கு இப்படி ஓர் உறவு முறை இருப்பது அவனுக்கு இப்பொழுது தான் தெரிகிறது . ஆதித்யன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க , அன்று மாலை தானும் அவர்களோடு வருவதாகக் கூறினான் ஆரியன் .
******
இடம் : பெங்களூர்
அந்தக் காடு மிகவும் நெருக்கமாக மரங்களைக் கொண்டு காட்சி அளித்தது . அனைத்து மரங்களும் உயர்ந்து நின்று , தங்கள் கைகளை ஒன்றோடு ஒன்று கோர்த்துக் கொண்டு தரையில் சூரிய ஒளியே படாத அளவுக்குச் சூரியனின் கிரணங்களைத் தடுத்தன . ஆனாலும் , அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு உயிரினங்கள் வாழத் தொடங்கின .
அந்தக் காட்டில் அப்பொழுது ஓர் உருவம் யாருக்கும் தெரியாமல் நுழைந்து , தன் கையில் இருந்த டார்ச்சு மூலம் ஒளியைப் பரப்பியது . பின்னர் அந்த இடத்துக்குப் பலமுறை இதற்கு முன்னர் வந்தது போல வேகமாக நடக்கத் தொடங்கியது .
வேக வேகமாக அது ஒரு பாதையைத் தொடர்ந்து செல்ல , அதன் கையில் இருந்து வந்த வெளிச்சத்தால் அங்கு இருந்த மிருகங்கள் ஓடி ஒளிந்தன . இதை எல்லாம் கண்டு கொள்ளாத அந்த உருவம் , தன் இலக்கை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தது . இப்படியே சில நிமிடங்கள் கழிய அந்த உருவம் தன்னிடம் இருந்த ஒரு கருவியை எடுத்து , அதில் ஒரு பொத்தானை அமுக்கியது .
உடனே , அந்தக் காட்டின் இருளை கிழித்து எறிந்தவாறு , ஓர் ஒளிக்கீற்று தோன்றியது . அந்த உருவம் , அந்த ஒளிக்கீற்றை நோக்கி நடந்து , அந்த இடத்தை வந்தடைந்ததும் , அங்கு இருந்த ஒரு பெட்டியைத் திறந்து , அதற்குள் இருந்த ஒரு கருவியில் தன் கைரேகையைப் பதித்தது .
உடனே , அந்த இடம் சிறிது அதிர்வுகளை வெளியிட்டது .
அதுவரை , சம தளமாக இருந்த தரையில் இருந்து ஒரு இரும்புப் பெட்டி மேலே வந்தது . அந்தப் பெட்டி சரியாக ஒரே ஒரு நபரை மட்டும் அடைத்துக் கொள்ளும் அளவு இருந்தது . அந்த உருவம் அந்தப் பெட்டியில் நுழைந்து , அந்தப் பெட்டியின் உள்ளே ஒரு பொத்தானை அமுக்கியவுடன் , கடவுச்சொல் கேட்டது .
அவ்வுருவம் தன்னிடம் இருந்தக் கருவியை அதில் சொருகவும் , அந்தப் பெட்டி கீழே இறங்க ஆரம்பித்தது . கீழே செல்வதற்குள் அந்த உருவத்தின் ரெட்டினாவையும் (Retinal Scan) சோதித்து , “International Organisation for Alien Research உங்களை வரவேற்கிறது ” என்றது கணினி குரல் .
அதன் பிறகு அந்தப் பெட்டியில் உள்ள அதிநவீன கேமராக்கள் இவரை அங்குலம் அங்குலமாகச் சோதித்து , “ வெல்கம் மிஸ்டர் . ஆல்ஃபா INB07 ” என்று உறுதி அளித்தது .
அந்தப் பெட்டி அடித்தளத்திற்கு வந்தவுடன் அதன் கதவு திறந்து கொள்ள , உள்ளே ஒரு நவீன லேபரட்டரி ( Laboratory ) போன்ற அமைப்பு இருந்தது . அந்த அடர்ந்த காட்டிற்கு அடியில் , இப்படி ஒரு ஸ்தாபனம் இருக்கும் என்று யாராலும் கனவிலும் கூட நினைத்து பார்க்க முடியாது .
ஆல்ஃபா உள்ளே நுழைந்ததும் , அங்கே வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் வணக்கங்களைப் பறிமாறிக் கொண்டனர் . அங்கே இருந்த ஒவ்வொருவரும் ஒரு விஞ்ஞானியைப் போல காட்சி அளித்தனர் . ஆங்காங்கே பாதுகாப்பு ஆயுதங்களுடனும் ஷாக் கன்களுடனும் (Shock Gun) வலம் வந்துக் கொண்டிருந்தனர்.
ஆல்ஃபா தலையை அசைத்ததும் அனைவரும் அமர்ந்து தங்கள் வேலையைத் தொடர்ந்தனர் . ஆல்ஃபா ஒவ்வொரு பிரிவாகப் பார்வையிட்டுக் கொண்டே செல்ல இறுதியில் ஓர் அறை வந்தது . அந்த அறையின் டிஜிட்டல் பூட்டில் தனக்கு அளித்த கடவுச்சொல்லைக் கொடுத்ததும் , கதவுகள் திறந்தன . உள்ளே சென்று அவர் அமர்ந்த பின்னர் , மற்றொரு நபர் உள்ளே நுழைய அனுமதி கேட்க யாரென்று பார்த்துவிட்டு உள்ளே வரச் சொன்னார் .
( அவர்களது ஆங்கில உரையாடல்கள் இங்கு தமிழில் )
“ குட் ஆப்டர்நூன் , மிஸ்டர் . ஆல்ஃபா ! உங்களுக்காக இன்று பல செய்திகள் காத்துக் கொண்டிருக்கின்றன ” என்றார் அந்த நபர் .
“ குட் ஆப்டர்நூன் , மிஸ்டர் . பீட்டா கடந்த வாரத்து கண்டுபிடிப்புகளின் சுருக்கத்தை ( Summary ) கூறுங்கள் ” என்றார் .
“ நமது அதிநவீன செயற்கைக் கோள்களைச் சென்ற மாதம் விண்ணில் செலுத்தி இருந்தோம் . அவை சூரியக் குடும்பத்தில் உள்ள பல கிரகங்களை ஆய்வு செய்து வருகின்றன . அப்படி ஒரு செயற்கைக் கோளில் இருந்து நமக்கு கிடைத்த படம் தான் இது ” என்று ஒரு படத்தைக் காண்பித்தார் பீட்டா . அதனைக் கண்ட ஆல்ஃபா குதூகலமானார் .
“ ஹுர்ரே ! நாம் இத்தனை ஆண்டுகள் காத்திருந்ததன் பலன் நம்மைத் தேடி வருகிறது . இந்த முறை நமக்குக் கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது ” என்று கூறிக்கொண்டே அந்தப் படத்தைப் பார்த்தார் ஆல்ஃபா . அந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான விண்வெளி வாகனம் தெரிந்தது .
“ ஆனால் அதைவிட இன்னும் முக்கியமான விஷயங்கள் உள்ளன . நாம் வைத்திருக்கும் X பொருளில் இருந்து வரும் அலைவரிசையும் இந்த வாகனத்தில் இருந்து வரும் அலைவரிசையும் ஒத்துப்போகின்றன ” என்று சாதாரணமாக ஒரு பெரிய குண்டை தூக்கிப் போட்டார் பீட்டா .
அதைக் கேட்டவுடன் தனது இருக்கையில் இருந்து ஆச்சரிய மிகுதியில் எழுந்துவிட்டார் ஆல்ஃபா .
“ என்ன சொல்கிறீர்கள் பீட்டா ? இது உண்மையா ? ” என்று அதிர்ச்சியில் இருந்து மீளாமல் கேட்டார் ஆல்ஃபா .
“ ஆமாம் , இதை நாங்கள் பலமுறை சோதித்து பார்த்துவிட்டோம் . அதுமட்டுமில்லாமல் , இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் ஒரு பிரச்சனை உள்ளது . அந்த வாகனத்தின் வழியை ஆய்வு செய்ததில் , மேலும் ஒரு அதிர்ச்சியான விஷயம் தெரிந்தது . அது நம்முடைய பூமியை நோக்கித் தான் விரைவாக வந்து கொண்டிருக்கிறது . குறைந்தபட்சம் இன்னும் 36 மணி நேரத்தில் அந்த விமானம் இங்கு வந்துவிடும் ” என்றார் பீட்டா .
சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்த ஆல்ஃபா , தனக்கு முன்னே வைக்கப்பட்டிருந்த தண்ணீரைக் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார் .
பிறகு, தனது இருக்கையில் சாய்ந்து அமர்ந்து பிரச்சினையை ஆய்வு செய்தவர் , “ இதைப் பற்றி நமது மற்ற நாடுகளில் உள்ள ஆல்ஃபாக்களுடன் நாம் தொடர்பு கொள்ளவேண்டும் . அதற்கு முன்னால் இந்த விஷயத்தைப் பற்றி முழுதாக ஒரு ரிப்போர்ட் தயார் செய்யுங்கள் . பின்னர் , மற்றவர்களுக்குத் தகவல் கூறி இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் , அனைவரையும் வீடியோ கான்பரன்சு – க்கு வரச் சொல்லுங்கள் . முக்கியமாக Code Red – ஐ கொடுக்க மறந்து விடாதீர்கள் . கமான் ஃபாஸ்ட் ” என்று கட்டளைகளை அடுக்கி முடித்தார் ஆல்ஃபா .
அவர் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த பீட்டா , உடனே அந்த வேலைகளைப் பிரித்துக் கொடுத்து விட்டு, ஆல்ஃபாவுடன் ரிப்போர்ட் தயாரிக்கத் தொடங்கினார் .
******
இடம் : இன்டர்ஸ்டெல்லர்
சூரியனை நடுமையமாக வைத்துக் கொண்டு எட்டு கிரக மங்கைகளும் தங்கள் பாதையில் நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தனர் . அவர்களைச் சுற்றி இருந்த எரிகற்களும் தூசிகளும் அந்தக் கிரக மங்கைகளுக்கு அணிகலன்கள் போல அவர்களைச் சூழ்ந்திருந்தன . இவற்றை எல்லாம் உடைத்தெறிந்து கொண்டு அந்த வாகனம் சென்று கொண்டிருந்தது .
ஒவ்வொரு கிரகமாகத் தாண்டிக் கொண்டிருப்பதைக் கண்காணித்துக் கொண்டிருந்தார் , அந்த விண்கலத்தின் தலைவர் .
அப்போது ஒரு காவலாளி வந்து , “ தலைவரே ! நமது விண்கலத்தை சில கருவிகள் நோட்டமிட்டுக் கொண்டே இருக்கின்றன . அவற்றை அழித்து விடலாமா ? தங்கள் உத்தரவுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் ” என்றான் .
அதற்கு விண்கல தளபதியோ , “ நான் முன்னர் கூறியது போல அவர்கள் அறிவியலில் சிறிது வளர்ந்து உள்ளனர் . அவ்வளவு தான் , நாம் இப்பொழுது இவற்றை அழித்து கொண்டிருந்தால் நமது சக்தியும் நேரமும் வீணாகும் . நமது சக்திகளை விரயம் ஆக்கினால் நம்மால் நமது கிரகத்துக்குத் திரும்ப இயலாது . எனவே , நாம் விரைந்து நமது காரியத்தை முடிக்கவேண்டும் . இவர்களால் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது ” என்றார் .
ஏனோ ஆனைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழியை மறந்து விட்டார் போலும் அந்த தளபதி .
“ தளபதி , மற்றொரு முக்கியமான விஷயம் . நமது பாதுகாப்பு கருவி நம்மை நோக்கி இன்னொரு கயா கிரக விண்கலம் வருவதாக கூறுகிறது . அதை ஆராய்ந்து பார்த்ததில் , அது தலைமை மந்திரி பொசய்டனுடையது என்று தெரிய வந்தது ” என்றான் காவலாளி .
“ பேரரசர் ப்ரொமேத்தியஸ் அவருக்கு வேறு ஏதாவது பணியைக் கொடுத்திருப்பார் . அது நமக்குத் தொடர்பு இல்லாத வேலை . எதற்கும் நமது ஆயுதங்களைத் தயார் படுத்தி வையுங்கள் . பூமி கிரக வாசிகளுக்குத் தாக்குதல் மிகவும் பிடித்தமானதாக இருந்தால் , நாம் அவர்களுக்குப் பிடித்த பரிசு கொடுக்க வேண்டும் அல்லவா ” என்றார் கலபதி .
***** *
கிரகம் : பூமி
இடம் : பெங்களூர்
காலையில் சிவகாமியின் ஆர்வத்தால் , ஆதித்யன் அந்நேரத்திற்கு உடனடியாக ஃப்ளைட் கிடைக்குமா என்று பார்த்து இல்லை என்றவுடன் , மதியத்திற்கு இருந்த ஃப்ளைட்டில் செல்லலாம் என்று முடிவெடுத்தான் .
அனைவரும் எல்லா ஏற்பாடுகளையும் முடித்துவிட்டு ஃப்ளைட்டில் பயணிக்க , சூரியன் தன் கட்டுக்குள் அடங்கும் நேரத்திற்குள் பெங்களூரை அடைந்திருந்தனர் . பின் அங்கு, ஆரியன் அவர்களுக்காக காத்திருக்க அவனது வண்டியில் அனைவரும் ஏறிக்கொண்டனர் .
முன்னர் சென்னையில் ஒன்றாக படிக்கும்போது வீட்டிற்கு ஆரியன் அடிக்கடி வந்ததால் , அனைவருக்கும் அவனை தெரிந்திருந்தது .
“ வாப்பா , ஆரியா . நல்லா இருக்கியா ? வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா ? ” என்று கேட்டார் சித்ரா .
“ எல்லாரும் நல்லா இருக்காங்க , ஆன்ட்டி ” என்று கூறியவன் , வேறு ஏதோ கேட்பதற்குள், அங்கிருந்த பெரியவர்களின் முகத்தைப் பார்த்தவன் , அவர்களது எதிர்பார்ப்பைப் பொய்க்காமல் , “ எல்லாரும் வீட்டுல தான் இருக்காங்க , பாட்டி ” என்றான் ஆரியன் .
பிறகு ஆதி அவனிடம், வண்டியை வேகமாக ஓட்டுமாறு கண்ணசைக்க, ஆரியனும் அவ்வாறே செய்தான். இப்படியே, நந்தினியின் வீடு வரும்வரை அவர்களிடையே கடும் அமைதியே நிலவியது.
இவ்வளவு தூரம் வந்த பிறகு தான் , அவர்களுக்கு அந்த தயக்கமே வந்தது . மகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்தவர்களுக்கு , இப்பொழுது அவர்களது குற்ற உணர்ச்சி அவர்களைச் செல்லவிடாமல் தடுத்தது .
இப்படியே நின்று கொண்டிருந்தால் எதுவும் நடக்காது என்று உணர்ந்த ஆதித்யன் , அவர்களை நந்தினியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றான் . உள்ளே சென்று ஆரியன் அழைப்பு மணியை அழுத்தி விட்டு நகர்ந்து கொண்டதும் ஸ்ரீநிவாசனும் சிவகாமியும் முன்னால் வந்து நின்றனர் .
அழைப்பு மணியை அழுத்திவிட்டு அவர்கள் காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு ஒவ்வொரு யுகமாகக் கழிந்தது . அந்த நிசப்தத்தை உடைத்தவாறு , துர்கா கதவைத் திறந்தார் .
திறந்தவுடன் அவருக்கு இந்த உலகமே தட்டாமாலை சுற்றியது . தான் காண்பது உண்மை என்பது கண்களுக்குத் தெரிந்தாலும் , அதைச் சிந்தை உணரவில்லை .
இதெல்லாம் ஒரு நொடியில் நடந்து விட , ஸ்ரீநிவாசன் , “ ஜெயாமா …” என்று அழைத்தார் . இந்த வார்த்தையைக் கேட்டு எத்தனை வருடங்கள் ஆகி விட்டன . ஆனால் எப்பொழுதும் மாறாமல் இருப்பது அந்தக் குரலில் இருக்கும் பாசம் மட்டுமே.
“ ஜெயா …” என்று சிவகாமி அழைக்கவும் , நிகழ்காலத்திற்குத் திரும்பிய ஜெயஸ்ரீயின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது .
“ அம்மா …” என்ற கத்தித் தனது தாயைக் கட்டியணைத்துக் கொண்டார் .
இந்த அணைப்பிற்காக அவள் ஏங்கிய காலங்கள் நினைவு வர , அவரது அழுகை பெருகியது . இப்பொழுது தந்தையும் உடன் சேர்ந்து தட்டிக்கொடுக்க , அப்பொழுது தான் அனைவரையும் வெளியே நிற்க வைத்து விட்டோம் என்பது புரிந்து , அவசரமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு , “ உள்ள வாங்கப்பா … வாங்கம்மா …” என்றார் துர்கா .
அவர்கள் உள்ளே நுழைந்த பின் தான் , பின்னால் தள்ளி நின்றிருந்த அண்ணனையும் அண்ணியையும் கண்டார் துர்கா .
தனது சகோதரனைக் கண்டதும் , அவருக்குப் பேச நா எழவில்லை . அவனோடு கழித்த ஒவ்வொரு இனிமையான நாட்களும் அவரது மனதைக் குத்திக் கிழித்தன . ஆனால் , நடந்ததை யாராலும் மாற்ற முடியாதே . வழக்கம்போல் விதி தான் இங்கேயும் பலிகடாவாக மாறியது .
துர்கா தனது குரலை வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்டு , “ உள்ள வாண்ணா … வாங்கண்ணி …” என்று அழைத்தார் .
அவர்களோடு உள்ளே வந்த ஆதித்யனைப் பார்த்ததும் அவருக்குப் புரிந்துவிட்டது . உடனே அவர் தன் சகோதரனைப் பார்க்க , அவர் கண்கள் அவரைக் கேட்காமலே , “ ஆம் ” என்று பதிலளித்தன .
துர்கா கண்களில் பரிவுடன் , “ வாப்பா …” என்றார், குரல் தழுதழுக்க . பின் ஆரியனும் பின்னே வந்து சேர்ந்து கொண்டான் .
இதெல்லாம் இரண்டு மூன்று நிமிடங்களில் நடந்து முடிந்துவிட , அழைப்பு மணி சத்தம் கேட்டு கதவைத் திறக்கப் போன துர்கா , இன்னும் வராததைக் கண்டு தங்கள் அறையில் இருந்து வெளியே வந்தார் கண்ணன் .
பின் அங்கு இருந்தவர்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர் தன்னை விரைவிலேயே மாற்றிக் கொண்டு , “ வாங்க மாமா … வாங்கத்த … ” என்று அனைவரையும் உபசரித்தார் .
பெற்றோரை சோபாவில் அமர வைத்துவிட்டு , துர்கா தரையில் அமர்ந்து அவர்களது மடியில் தலை வைத்துக் கொண்டாள் . சிறிது நேரம் எதுவும் பேசாமல் , அவர்கள் தங்கள் மகளைத் தட்டிக்கொடுத்த படி அமர்ந்திருந்தனர் .
இதற்கிடையே பேச்சுக் குரல் கேட்டு கீழே வந்த நந்தினி அங்கிருந்தவர்களைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தாள் .
நேரே பெரியவர்களிடம் வந்து , “ தாத்தா … பாட்டி … வாட் எ ப்ளெசன்ட் சர்ப்ரைஸ் ! ” என்று கட்டிக் கொண்டாள் . அவள் மாடியில் இருந்து இறங்கும்போது பாசத்துடன் பார்த்தவர்கள் , அவள் தங்களை அடையாளம் கண்டு கொண்டதில் இருவரும் திக்குமுக்காடிப் போயினர் .
முதலில் அவளுக்கு முத்த மழை பொழிந்த சிவகாமி , “ உனக்கு எங்கள பத்தி தெரிஞ்சும் நீ கூட ஏம்மா எங்கள பாக்க வரல ? ” என்று எத்தனை சந்தோசத்தை இழந்துள்ளோம் என்று ஆற்றாமையில் கேட்டார் .
“ அம்மா என்கிட்ட எல்லாத்தையும் சொல்லி இருக்காங்க பாட்டி . எங்கே நான் உங்கள பார்க்க வந்தா, நீங்க கோவிச்சுக்குவிங்களோனுதான் , பாட்டி பார்க்க வரல ” என்று அவரை சமாதானப்படுத்தினாள் நந்தினி .
ஆனால் சிவகாமியோ , “ இந்த கிழவி போன ஜென்மத்தில் ஏதோ பாவம் பண்ணியிருக்கிறேன் போலம்மா ” என்று தன் முந்தானையில் கண்களை துடைத்துக் கொண்டார் .
ஸ்ரீநிவாசன் , “ சிவா இப்பதான் எல்லாம் ஒண்ணாகிட்டோமே , அழாதே ” என்றவுடன் தனது அழுகையைக் கட்டுப்படுத்தினார் சிவகாமி .
பின்னர் நந்தினி தன் தாய்மாமனிடம் சென்று , “ மாமா … அத்தை … நல்லா இருக்கீங்களா ? ” என்று கேட்டாள் .
இதுவரை அவளைச் சிறுவயதில் பார்த்த தனது தங்கையைப் பார்ப்பது போலவே பார்த்து அகமகிழ்ந்திருந்தவர் ,“ நல்லா இருக்கிறோம்… மா ” என்று கூற , சித்ரா அவளது தலையைப் பரிவுடன் தடவிக் கொடுத்தார் .
என்னதான் தன் குழந்தை இல்லை எனினும் , கணவனின் சுகதுக்கங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டவர் ஆயிற்றே .
அதுவரை தன்னை கவனிக்க மாட்டாளோ என்று காத்திருந்த , ஆதித்யனைக் கண்டதும் அவள் முகம் யோசனை குறியைக் காட்டியது . அதுவும் அவனுக்கு அருகில் ஆரியனைக் கண்டதும் பெரிதும் குழம்பிப் போனாள் .
அதற்குள் துர்கா இடையிட்டு , “ ஆதி உன்னோட மாமா பையன் , நந்துமா ” என்றவுடன் நந்தினி அதிர்ந்தாள் .
“ இது உங்களுக்கு முன்னாடியே தெரியுமா ? ” என்பது போல ஆதித்யனைப் பார்க்க , அவன் , “ ஆமாம் ” என்று தலையசைத்தான் .
அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த ஆரியனைக் கண்டதும் , “ டேய் பம்பர கட்ட மண்டையா , உன்னைய பார்த்துக்கிறேன்டா . எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரியா உக்காந்திருக்க , மேல வருவீல உன்னைய வச்சு செயேறேன் டா ” என்று அவள் கூறியது , அவள் பார்வையிலே விளங்கினாலும் , அதைத் தட்டி விட்டு ,
“ வர வர இந்த கொசு தொல்ல தாங்க முடியலடா ” என்று அவளைப் பார்த்து மெதுவாக முணுமுணுத்தான் அவன் .
பின்னர் துர்கா தன் அம்மாவிடம் , “ அம்மா அன்னைக்கு என்ன நடந்துச்சுனா … ” என்று தொடங்கியவரை இடைமறித்து ,
“ பழைய விஷயங்கள மறந்துறு ஜெயாமா . இப்போ நீ சொல்றத கேட்டா, அதனாலதான் உன்னை ஏத்துக்கிட்ட மாதிரி இருக்கும் . ஆனால் உன் மேல் எங்களுக்கு நம்பிக்கை இருக்குதும்மா . காலம் கடந்த ஞானோதயம் தான் . ஆனாலும் , வந்துடுச்சுமா, அது போதும் ” என்றார் சிவகாமி .
தன் தாய் தன் மீது வைத்த நம்பிக்கையைக் கண்டு , அவர் கண் கலங்கியது . இருப்பினும் , அதனைச் சமாளித்துக்கொண்டு அனைவரும் களைப்பாய் இருப்பதை உணர்ந்து , அனைவருக்கும் பழரசம் எடுத்து வரச் சென்றார் .
அதற்குள்ளாக, கண்ணனும் அனைவருடனும் சகஜமாக உரையாட ஆரம்பித்திருந்தார் . சித்ராவும் சிவகாமியும் துர்கா உடன் சேர்ந்து கொள்ள , இளைஞர்கள் மூவரும் தனித்து விடப்பட்டனர் .
“ ஆதி , நந்தினியோட ட்ராயிங்ஸ பாக்குறியா டா ? சும்மா டாவின்சியே தோத்து போயிடுவாரு !” என்று நந்தினியை ஆரியன் வம்பிழுக்க , அவள் ஆரியனை முறைக்க,
ஆதி , “ எனக்கு அதையெல்லாம் காட்ட மாட்டியா , நந்தினி ?” என்று கேட்டவுடன் தன்னை இப்படி ஒரு இக்கட்டான நிலையில் மாட்டிவிட்ட ஆரியனை முறைத்துக் கொண்டே ,
“ அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல , ஆதி வாங்க மாடிக்குப் போகலாம் ” என்றவுடன் அனைவரும் அவளது அறைக்குச் சென்றனர் .
இப்பொழுது ஆதித்யனின் திறன் பேசியில் ஒரு நோட்டிபிகேஷன் வர , அதை எடுத்து பார்த்தான் . அதில் ‘ Code Red’ என்று மிளிர்ந்தது .
*******
குறிப்பிட்ட நேரத்தில் ஆல்ஃபாக்களின் மீட்டிங் தொடங்கியது . ஒவ்வொரு ஆல்ஃபாக்களும் தங்களது கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்துகொள்ள , அவை அனைத்தும் ஏறக்குறைய ஒன்றாகவே இருந்தன .
(அவர்களது ஆங்கில உரையாடல்கள் இங்கு தமிழில் )
இவை அனைத்தையும் அதுவரை வேடிக்கை பார்த்த அந்த அமைப்பின் தலைவர் , “ குட் ஈவினிங் ஆல்ஃபாஸ் அண்ட் பீட்டாஸ் ! நம் அமைப்பு ஆரம்பித்து பல வருடங்களாக எந்த நாட்டையும் சாராமல் செயல்பட்டு வருகிறது . அதனால்தான் இங்கு இருக்கும் அனைவரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவராக இருப்பினும் , அதை எல்லாவற்றையும் விடுத்து ஆராய்ச்சியாளர்கள் என்ற போர்வையில் வாழ்கின்றோம் . கடந்த ஆண்டு நமக்குப் பழமையான X பொருள் கிடைத்தது . அதை ஆய்வு செய்ததில் நமக்கு மேலும் இதுவரை புரியாத பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது. பின்னர் , அவற்றில் இருந்து எப்படி எல்லையில்லா சக்தியைப் பெறுவது என்பது பற்றி சோதனைகள் நடத்தி வருகிறோம் . ஆனால் , இப்பொழுது திடீரென்று நாம் ஒரு பெரிய பிரச்சனையைச் சந்திக்க உள்ளோம் . வருகின்ற வேற்று கிரகத்தவர்கள் நம்மைத் தாக்குவதற்காக வருகின்றனரா ? இல்லை நட்பு பாராட்ட வருகின்றனரா ? என்று நமக்கு தெரியாது . இப்பொழுது இந்தப் பிரச்சனையை எப்படிச் சமாளிக்கலாம் ? என்று உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள் ” என்றார் .
“ ஒருவேளை நம்முடைய ஆராய்ச்சியைக் கண்டறிந்து , அவர்கள் நம்மை அழிப்பதற்காக வரலாம் . ஆனால் , இவை அனைத்தும் வெறும் யூகங்கள் மட்டுமே . வெறும் சந்தேகத்தை மட்டும் வைத்து நம்மால் எந்த முடிவுக்கும் வர முடியாது . இதுவரை நமது செயல்பாட்டில் எந்த நாட்டினரும் தலையிட்டதில்லை . ஆனால் , இப்பொழுதும் நாம் என்ன செய்தாலும் , அது இந்த உலகத்தையே பாதிக்கும் ” என்றார் ஓர் ஆல்ஃபா .
“ அதற்காக நாம் எதையும் செய்யாமல் இருக்க முடியுமா ? நாம் இப்பொழுதே ஏதாவது ஒரு முடிவை விரைவாக எடுக்க வேண்டும் . என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் எந்த காரணத்திற்காக வேண்டுமானாலும் வந்து கொள்ளட்டும் . நாம் X ஆயுதங்களைத் தயார் நிலையில் வைத்துக்கொள்வோம் . அவர்கள் என்ன செய்கிறார்களோ அதற்கு ஏற்றார்போல் நாமும் செய்வோம் ” என்றார் மற்றொரு ஆல்ஃபா .
அவர் கூறிய விஷயத்தை அங்கு இருப்பவர்கள் அனைவரும் சிந்திக்கத் தொடங்கினர் .
இவ்வாறு அங்கு இருந்தவர்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களைக் கூற , இறுதி முடிவு தலைவரிடம் விடப்பட்டது .
இரண்டு நிமிடங்கள் கழித்து , “ நாம் தனிப்பட்டுச் செயல்பட்டாலும் , நமக்கு பல்வேறு நாடுகள் நிதிகள் அளிக்கின்றன . அதனால் , இந்த விஷயத்தை அவர்களிடம் , அதாவது அந்தந்த நாட்டின் தலைவர்களிடம் கூறிவிடலாம் . ஆனால் , அவர்கள் எக்காரணம் கொண்டும் அணுகுண்டுகளைப் பயன்படுத்தவோ தாக்கவோ கூடாது என்றும் செய்தி அனுப்பிவிடலாம் .
நம்மிடம் உள்ள X ஆயுதங்களை தயார்ப்படுத்துங்கள் . ஆல்ஃபா INB07, உங்களுடைய ஆய்வகத்தில் தானே, ஆயுதங்களை உருவாக்கி, பின்னர் பாதுகாப்பு காரணமாக, ஒரு சயின்டிஸ்ட் அதை அழித்துவிட்டதாகவும் கூறினீர்கள். இப்போது அதன் நமக்கு நிறைய இருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால், அந்த ஆயுதங்களின் blueprint-ஐ சீக்கிரமாக மற்ற மையங்களுக்கு அனுப்புங்கள்.
ஒரு சின்ன தவறு கூட நடந்துவிடக்கூடாது . இந்த உலகத்தின் எதிர்காலமே இப்பொழுது நம் கையில் தான் உள்ளது . அனைத்து நாடுகளிலும் உள்ள ஸ்பேஸ் ஏஜென்ஸியில் ( ISRO , NASA , ESA ) உள்ள நமது ஆட்களுக்கு உடனடியாக இந்த ரிப்போர்ட்டுகளை அனுப்பி அவர்களிடம் வேலையைத் தொடங்க சொல்லுங்கள் ” என்று கூறியவுடன் , அனைவரும் தத்தமது வேலைகளைப் பார்க்கச் சென்றனர் .
***** *
ஆதித்யன் அந்தச் செய்தியைக் கண்டதும் பரபரப்பு அடைந்தான் . மிகவும் அவசரமான ஆபத்தான செய்தியாக இல்லாவிட்டால் ஒழிய இந்தக் கோட் வேர்டை பயன்படுத்தமாட்டார்கள் .
“ அப்படியென்றால் …” என்று யோசிக்கக் கூட நேரமில்லாமல் , தன்னிடமிருந்த பர்சனல் திறன் பேசியை எடுத்துப் பார்த்தான் . அதில் சில கோப்புகள் வந்து இருந்தன . அவற்றை வேக வேகமாகத் திறந்த பொழுது , பின்னால் யாரோ தொட்டது போல் இருந்தது . பின்னால் திரும்பிப் பார்க்க , நந்தினி கையில் ஜீஸுடன் நின்றிருந்தாள் .
“ தேங்க்ஸ் நந்தினி ” என்று கூறியவன் திறன் பேசியில் வந்த செய்திகளை விரைவாகப் பார்த்தான் . ஆதித்யனின் பரபரப்பை நந்தினியும் ஆரியனும் புரியாமல் பார்த்திருந்தனர் .
ஆதித்யனின் பார்வை எதேர்ச்சையாக நந்தினியின் ஓவியங்களில் பட , அவன் தலையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது . ஆதித்யனின் கையில் இருந்த டம்ளர் நழுவி விழ , ஆரியன் அவனிடம் வந்து , “ ஆதி ! ஏதாச்சும் பிரச்சினையாடா ?” என்று கேட்டான் .
அவன் ஒன்றும் கூறாமல் இருக்கவே அவனின் பார்வை போகும் திசையறிந்து , “ ஆமாம் டா நந்தினி வரைஞ்சது தான் ” என்றான் ஆரியன் .
ஆதித்யன் பரபரப்பாக , திறன் பேசியைப் பார்த்தான் . அதில் , அந்த விண்கலத்தை எதிர்பார்க்கும் நேரம் “ இன்னும் முப்பது மணி நேரங்கள் ” என்று காட்டியது .
error: Content is protected !!